Showing posts with label chennai. Show all posts
Showing posts with label chennai. Show all posts

Tuesday, 29 March 2022

CHENNAI FILM INSTITUTE

 


CHENNAI   FILM INSTITUTE



தேவதாஸ் கனகாலா என்கிற தெலுங்கு நடிகர் புனா ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்தவர். இவரது வகுப்புத்தோழர்கள் தாம் சத்ருக்கன் சொன்ஹா, அமிதாப் மனைவி ஜெயபாதுரி போன்றோர்.

இவருக்கு சென்னையில் அதேப்போல ஒரு நடிப்புப்பயிற்சி கல்லூரியில் பயிற்சியாளர் வேலை கிடைத்தது. 73ல் தொடங்கப்பட்ட சௌத் இன்டியன் பிலிம் சேம்பர் இன்ஸ்ட்டிடியூட் Institute of SIFCC தொடங்கிய போது அதில் பெரிய இயக்குனர்கள் பங்கெடுத்தனர். இவரது மனைவி லக்ஷ்மி தான் பிரின்சிபல். முதல் பேட்ஜில் ரஜினிகாந்த், நடராஜ்..இரண்டாவது பேட்ஜில் 74ல் ராஜேந்திரபிரசாத், மூன்றாவது பேட்ஜ் பற்றி தெரியவில்லை. நான்காவது பேட்ஜ் 76ல் சுதாகர், பானுச்சந்தர், 77ல் ஐந்தாவது பேட்ஜில் சிரஞ்சீவி என எல்லோருக்கும் நடிப்புப்பயிற்சி கொடுத்தவர் இவரின் மனைவி லக்ஷ்மி. முதல் பேட்ஜ்க்கு தேவதாஸ் அதாவது 73, 74ல் மட்டும் பயிற்சி கொடுத்துவிட்டு 75ல் ராஜினாமா செய்து விட்டார். பொறுப்பு சேம்பர் மூடும் 78 வரை லக்ஷ்மி தேவதாஸே பயிற்சியாளர்.

புல்லையா, பாலச்சந்தர், எல்.வி.பிரசாத், கே.விஸ்வநாத், பாப்பு போன்றோரின் வகுப்புகள் மூலம் அதிலுள்ள மாணவர்களுக்கு நடிப்பு அவ்வப்போது டெஸ்ட் செய்யப்பட்டது. காலை முதல் மாலை வரை உள்ள வகுப்புகளில் நடிப்பு, யோகா, நீச்சல், குதிரையேற்றம், சண்டைப்பயிற்சி என எல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டன.



மாணவர்களுக்கு பலன் இருந்ததோ இல்லையோ பாலச்சந்தருக்கு இயக்குனராக மிகப்பெரிய பலன் இருந்தது. அரங்கேற்றம் வென்றதும் அவள் ஒரு தொடர்கதை எடுத்த போது நாடகங்கள் மூலமே புதுமுக நடிகர்கள் கிடைத்தார்கள். 'எர்ணாகுளம் ஜங்ஷன்' என்கிற படம் மூலம் துணை நடிகை சுஜாதாவை நாயகியாக்கினார். விஜயகுமார், சோமன், ஜெய்கணேஷ் எல்லோரும் நாடகங்களிலிருந்து வந்தார்கள்.

முதன்முதலில் சிவாஜிராவ் என்கிற நடிகரை செலக்ட் செய்த போது தான் கே.நட்ராஜ் என்கிற நடிகரும் கிடைத்தார். சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்தின் சில கிம்முக்குகளை வைத்து 'மூன்று முடிச்சு' எடுத்த போது ரஜினிக்கு கிடைத்த வரவேற்பு அதீதமாக இருந்தது. பின் அவர் புதுமுகங்கள் எடுக்க திரைப்பட கல்லூரி நோக்கி சென்றார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தை அந்துலேனிகதா என எடுத்த போது அவருக்கு கமல் செய்த கோபால் பாத்திரத்துக்கு திரைப்படக்கல்லூரி நோக்கியே சென்றார். அங்கு அவர் பிரசாத் பாபு, ஜி.வி.நாராயண ராவ், பிரதீப் சக்தி என மூன்று பேரை தேர்ந்தெடுத்தார். பிரசாத் பாபுவுக்கு சுஜாதா ரோலில் நடித்த ஜெயப்ரதாவின் காதலன் ரோல் தரப்பட்டது. இந்த பிரசாத் பாபு யார் என்றால் 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் கமலுக்கு அண்ணனாக மனோரமாவின் கணவராக வாய் பேசாதவராக வருவாரே அவர் தான். இவரது மகன் ஸ்ரீகர் 'இளவரசி' சீரியலில் நடித்தவர். மருமகள் அதே சீரியல் நடிகை சந்தோஷி.

பிரதீப் சக்திக்கு கண்டக்டர் ரோல் தரப்பட்டது. படத்தின் க்ளைமேக்ஸ் பிரதீப்சக்தி-ஜெயப்ரதா கான்வெர்சேஷனில் முடியும். பின் தமிழில் சரியான வாய்ப்பு இல்லாமல் நாடகங்களில் நடித்த பிரதீப் சக்தியை மணிரத்னம் நாயகன் மூலம் கமலோடு மோத விட்டு மிகப்பெரிய ஓப்பனிங் செய்து கொடுத்தார். பிரதீப் சக்தி பின் பல மொழி நடிகரானார். அமெரிக்காவில் ரெஸ்ட்டாரண்ட் தொடங்கி அங்கு போய் வாழ்ந்து மறைந்தார்

ஜி.வி.நாராயணராவ் ரஜினியின் பேட்ச் மேட். இவர் கமலின் கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலை தெலுங்கில் தாலி கட்டும் சுப வேளா எனப் பாடி நடித்தார். அது அவரை பெரிய இடத்துக்கு கொண்டு போனது. தமிழில் நூல்வேலி உள்பட மேலும் சில படங்களில் நடித்தார் நாராயணராவ். நிழல் நிஜமாகிறது படத்தின் தெலுங்குப்பதிப்பில் ஷோபாவுக்கு வாழ்வு கொடுக்கும் அனுமந்து ரோலில் நாராயணராவ் நடித்தார். கமல் ரோலில் ரஜினி நடித்தார். சிலக்கம்மா செப்பிந்தி என்கிற அப்படத்தின் ஷுட்டிங்கினிடையில் ரஜினியையும், நாராயணராவையும் ஒரு இளைஞர் வாய்ப்புக்காக வந்து சந்தித்தனர். அன்று நாராயணராவின் தகப்பனார் தயாரிப்பாளராகவும் இருந்தார். சிவசங்கர வரப்ரசாத் என்கிற அந்த இளைஞரிடம் திரைப்படக்கல்லூரியில் சேரச்சொல்லி அட்வைஸ் செய்தார் நாராயணராவ். வரப்ரசாத் இரண்டாம் ஆண்டு கோர்ஸ் முடிக்கும்முன்பாகவே பல படங்களில் ஒப்பந்தாமானார். பாலச்சந்தர் தன் அவர்கள் பட தெலுங்குப்பதிப்பான இதி கத காது படத்துக்கு ரஜினியில் ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். அவர் தான் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி திரைப்படக்கல்லூரியில் படித்த போது அன்று அவருடன் சுதாகர், ஹரிப்ரசாத் போன்ற இளைஞர்கள் படித்தனர். மூவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கி இருந்து படித்தனர். சுதாகருக்கு முதலில் கிழக்கே போகும் ரயில் மூலம் வாய்ப்பு வந்தது. அடுத்த ஐந்து வருடங்கள் தமிழில் நடித்தார் அவர். ஹரிப்ரசாத் தாசரி நாராயணராவின் மூலம் சிவரஞ்சனி என்கிற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவள் ஒரு மேனகை எனப்பாடி தமிழுக்கும் வந்தார் அவர்.

பாலச்சந்தர் ரஜினியை செலக்ட் செய்யும் காலத்தில் அவரோடு படித்த பெண் தான் ஹேமா சௌத்ரி. ஹேமா சௌத்ரியை தனது மன்மத லீலை படம் மூலம் அறிமுகப்படுத்தினார் கே.பி. இதே கல்லூரியில் தேவன், ஸ்ரீனிவாசன், பானுச்சந்தர் போன்றோர் படித்தனர். ஒரு படத்தில் நடித்துவிட்டு வாய்ப்பின்றி இருந்த பானுச்சந்தரை அழைத்து 81ல் வாய்ப்பு கொடுத்தார் கே.பி. படம் அடவாலு மீக்கு ஜோஹருலு. 

இதோடு தில்லுமுல்லு எடுக்கும் காலகட்டத்தில் சேம்பர் மொழிவாரியாக தனித்தனியாக பிரியவே கல்லூரி மூடப்பட்டது.  ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அடையாறு திரைப்படக்கல்லூரியை தொடங்கி இதிலிருந்த அலுவலர்கள் லக்ஷ்மி தேவதாஸ் உள்பட அங்கே பணி கொடுத்தார். தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமே இருந்த அந்த கல்லூரியில் தான் ரகுவரன், ராம்கி, சுஹாசினி, அருண்பாண்டியன், சுபலேகா சுதாகர் போன்றோர் படித்து வெளிவந்தனர். 

பாலச்சந்தர் அதன் பின் புதுமுகங்களை எடுக்க கல்லூரி நோக்கிப்போக தைரியப்படவும் இல்லை....

சேம்பர் ஆஃப் காமர்ஸ் கல்லூரியின் பியூட்டி என்னன்னா அடையாறு கல்லூரியில் படித்தவர்ககை விட சேம்பர் ஆஃப் கிமர்ஸ் பள்ளியில் படித்தவர்கள் இன்றும் நடித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது தான்...

#செல்வன் 

பி.கு: தேவதாஸ்-லக்ஷ்மி தம்பதியின் மகன் தான் சிறுத்தை படத்தில் மனைவியை வில்லன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அழும் போலீஸ்காரராக நடித்த தெலுங்கு நடிகர் ராஜீவ் கனகாலா...


Saturday, 3 April 2021

CHENNAI -CINEMA THEATRES -ONE VIEW

 


CHENNAI -CINEMA THEATRES -ONE VIEW



சென்னையில் காணாமல் போன முதல் மல்டி பிளக்ஸ் திரை அரங்கம் சபையர் - இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் காம்ப்ளக்ஸ்(2+ Screen Complex Theatre) தியேட்டர் சென்னை அண்னாசலையில் "சபையர்" என்ற பெயரில் இருந்தது.

ஜெமினி மேம்பாலம் அருகில் தான் சபையர் வளாகம் இருந்தது. அங்கு சபையர், ப்ளூ டைமண்ட் மற்றும் எமரால்ட் என்று மூன்று அரங்கங்கள் இருந்தன. அந்நாளில் இது ஒரு வித்தியாசமான திரை வளாகம். இங்கு பார்க்கிங் வசதியே வித்தியாசமானது (மல்டி லெவல் பார்க்கிங்) அன்று அது போல் சென்னையில் இருந்ததாக தெரியவில்லை. சபையர் 900 இருக்கைகள் கொண்டது, இங்குள்ள தரவரிசை பல வகையாக இருந்தது, 2:00, 2:90, 3:50, 4:50, 5:00 (இல்லை 6:00 என்று நினைவு). இதில் அதிக கட்டணம் இருக்கைகள் பாக்ஸ் என்று பெயர். இந்த பாக்ஸ் பிரத்யேகமாக இருவர் உட்கார்ந்து பார்க்கும் அறை போலிருக்கும். 6 பாக்ஸ் இருந்ததாக ஞாபகம், ஒவ்வொன்றுக்கும் தனியே கதவு உண்டு ஒரு சிறு அறை போலவே இருக்கும். ஜோடிகளுக்கு பொருத்தமான இடம் அந்த காலத்தில். சபையரில் இன்னுமொரு பிரத்யேக சிறப்பு, அங்கு வெளிவந்து ஓடிய படங்களை, வெளியிட்ட தேதிகளை, ஓடிய நாட்களை, வசூலித்த தொகையை நயா பைசா கணக்காக பட்டியலிட்டு கேண்டின் இருந்த இடத்துக்கு மேலாக பெயின்ட் செய்திருப்பார்கள். என்னை போன்றவர்கள் அங்கு நின்று பட்டியலை பார்த்த வண்ணம் இருப்போம். கேண்டினில் மற்றொரு அறிய விடயம்,



மற்றெங்குமில்லாது அங்கு Frankfurter எனப்படும் Hotdog விற்பார்கள். நான் அதை ஒரு அருங்காட்சியகப்பொருள் போன்று பார்ப்பேன் (சாப்பிட்டது கிடையாது). சபையரில் முதல் படம் Cleopatra (தவறாக இருக்காது) அது 50 வாரம் ஓடி சாதனை செய்தது. அது போல் அங்கு காலை காட்சியில் கமலின் தெலுங்கு படம் மரோசரித்ரா 595 நாட்கள் ஓடியது. தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு வித்தாக இருந்த படம், நம் மக்களுக்கு Kung Fu என்ற சொல்லை சாமானியர்களூம் உச்சரிக்க வைத்த படம் லியூ சியா உய் நடித்த 36th Chamber of Shaolin. இங்கு சாதனை ஓட்டம் படைத்து 45 வாரங்களுக்கு மேல் ஓடியது. . இதில் சபையர் என்ற மெயின் ஸ்கீரினின் எண்ணிக்கை 1200+. மற்ற இரண்டும் இதில் பாதி அளவு கூட இல்லாத சிறிய ஸ்கீரின்கள் தான். இந்த சபையர் தியேட்டர் மெயின் ஸ்கீரினில் அவ்வளவு எளிதாக ஒரு தமிழ் படத்தை ரெகுலர் 3, 4 தினசரி காட்சிகளில் திரையிடமாட்டார்கள். கமலஹாசனுக்கு பின்பு நடிக்க வந்தாலும் அவருக்கு முன்பே இந்த மெயின் ஸ்கீரினில் ரஜினியின் "தீ"(1981) படம் ரெகுலர் காட்சியில் வெளியானது..!
*தீ படத்தோடு அன்றைய தினம் வெளிவந்த கமலஹாசனின் 'மீண்டும் கோகிலா' படத்திற்க்கு சபையர் காம்ப்ளக்ஸின் சிறிய ஸ்கீரின் தான் கிடைத்தது. See Less ப்ளூ டைமண்ட் தியேட்டரில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படத்தில் சென்று அமரலாம் என்ற சிஸ்டம் இருந்தது. படம் முடிய பத்து நிமிடம் இருக்கும்போதுகூட போய் அமரலாம். அடுத்த காட்சி ஆரம்பிக்கும்போது அப்படியே தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற படங்கள் அதில் எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் காட்சியில் உள்ளே போய் இரவுக் காட்சி முடிந்து வெளியே வருபவர்களும் உண்டு. அது ஒரு வித்தியாசமான சிஸ்டம். எமரால்டு ஒரு சிறு அரங்கம்தான், இங்கு பிரபலமாக ஓடிய படம் கயாமத் சே கயாமத் தக் (40 வாரங்களுக்கு மேல் என்ற நினைவு) ஜூகி சாவ்லா இந்தியில் அறிமுகமான படம். அவர் ஏற்கனவே தமிழில் பருவராகத்தில் வந்து எங்கள் இதயங்களை ஆட்கொண்டவர என்பது கூடுதல் சிறப்பு. அவர் மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் கூட.
இங்கு மிகுந்த விசேடமான அரங்கம் ப்ளூ டைமண்ட். சிறிய அரங்கமென்றாலும் பல அறிய வகையான வித்தியாசங்கள் நிறைந்த திரையரங்கம். இங்கு ஒரேயொரு டிக்கெட் தரவரிசை தான் (எவ்வளவு என்பது நினைவில் இல்லை). காலையில் எங்குமில்லாதது போல் இங்கு தினசரி 9:00 மணிக்கு காட்சியை தொடங்குவார்கள். தொடர்காட்சிகளாக படத்தை திரையிடுவார்கள். அதாவது, 9:00 மணி ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்கினால் நாம் தொடர்ச்சியாக படத்தை இரவு காட்சி வரை பார்க்கலாம். இல்லை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே செல்லலாம். இது போல் வேறெங்கும் இந்தியாவில் இருந்ததாக தெரியவில்லை. நாங்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே. இங்கு நான் பார்த்த படம் Ice Castle என்ற வீணாய்ப்போன படம். இந்த வளாகத்தில் ஒரு ராஜஸ்தானி உணவகமும் இருந்தது வித்தியாசம் .அருண்பிரசாத் அவர்களுக்கு நன்றி .
62
18 Comments
11 Shares
Like
Comment
Share

Thursday, 5 November 2020

VICTORIA HALL HELPED IN CONSTRUCTION OF THEATRES

 


VICTORIA HALL HELPED IN 

CONSTRUCTION OF THEATRES

.சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் .......



டவுன் ஹால் என்று அழைக்கப்பட்டது மதராஸின் விக்டோரியா ஹால். சங்கரதாஸ் சுவாமிகளும் பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகம் நடத்திய ஹால் அது. ஜட்கா வண்டிகள், ரயிலில் வந்திறங்கி சிலுசிலு கடற்கரைக் காற்றை அனுபவித்தபடி அந்த ஹாலில் விடிய விடிய நாடகம் பார்ப்பது அன்றைய மதாராஸ்வாசிகளுக்கு ஆனந்த அனுபவமாக இருந்திருக்கிறது.

ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் ‘ஷேக்ஸ்பியர் வீக்’ என்ற நாடகத் திருவிழாவாக இங்கே நிகழ்த்தப்பட்ட வரலாறும் உண்டு. அரங்கம் நிரம்பி வழிய பாரதியும் விவேகானந்தரும் கோபால கிருஷ்ண கோகலேவும், வல்லபாய் படேலும் பேசிய பெருமைக்குரிய இடம் இது. இன்று பயன்பாடற்றுச் சிதைந்துகொண்டிருக்கும் வரலாறாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறது.

விக்டோரியா ஹாலின் பேசும் சித்திரம்


வெள்ளைக்காரர்களின் பால் ரூம் நடனத்துக்காக இந்தப் பொது அரங்கின் முதல் தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தனை பெருமைக்குரிய இந்த டவுன் ஹால், மதராஸின் முதல் திரையரங்கு என நாம் கொண்டாடும் ‘எலெக்ட்ரிக் தியேட்டர்’ உருவாக உந்துதலாக இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் சிகரம்போல் இந்த விக்டோரியா ஹால் மூலம்தான் தமிழக மக்களுக்கும் அன்றைய சென்னைவாசிகளுக்கும் மவுனத் திரைப்படங்கள் அறிமுகமாகின. நூற்றுக்கணக்கான மவுனத் திரைப்படங்கள் அந்நாட்களில் இங்கே திரையிடப்பட்டன. அப்படிப்பட்ட விக்டோரியா ஹாலில், பேசும்படம் பார்க்கும் உணர்வை, தாம் திரையிட்ட மவுனப் படங்களுக்கு வழங்கினார் ஒரு ஒளிப்படக்காரர். அவர்தான் ரகுபதி வெங்கய்யா நாயுடு என்கிற ஆர்.வெங்கய்யா.

ஆந்திர மாநிலம், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தவர் வெங்கய்யா. அவரது தந்தையான ரகுபதி பிரிட்டிஷ் ராணுவத்தின் சுபேதாராக இருந்தார். வெங்கய்யாவின் பெற்றோர் மச்சிலிப்பட்டினத்திலிருந்து குடிபெயர, தனது 18 வயதில் மதராஸ் மண்ணில் கால் வைக்கிறார் வெங்கய்யா. ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் ஆர்வம் மிகுந்திருந்த வெங்கய்யா, தனது இருபதாவது வயதில் அப்பா அளித்த நிதியுதவியுடன் சிறு ஆர்ட் கேலரி ஒன்றைத் தொடங்குகிறார். அதில் ஸ்டில் கேமராவுக்கான சிங்கிள் பிலிம்களை விற்க ஆரம்பித்தார். அதனால் பல ஒளிப்படக் கலைஞர்கள் அவரது வியாபாரத் தலத்துக்கு வந்து சென்றனர். அவர்கள் மூலம் ஒளிப்படக் கலை மீதான ஆர்வம் வெங்கய்யாவுக்குத் தோன்றியது. ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொண்டு திறமையான போட்டோகிராபராக மாறுகிறார்.

அடமானம்


ஒரு கட்டத்தில் தனது ஆர்ட் கேலரியை போட்டோ ஸ்டூடியோவாகவும் மாற்றிவிடும் அவர், சிறந்த போட்டோகிராபர் என்ற பெயரையும் சம்பாதிக்கிறார். அவரது ஸ்டூடியோ தொழில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் மவுனப் படங்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. அப்போது ‘க்ரோனோமெகாபோன்' (Chronomegaphone) என்ற ஒலியை வெளிப்படுத்தும் கருவியைப் பயன்படுத்தி மவுனப் படங்களைப் பேசும்படங்கள்போல் காட்டலாம் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதைப் படித்து ஆச்சரியப்பட்ட வெங்கய்யா, அதுபற்றித் தனது மனைவியிடம் பகிர்ந்துகொண்டார். அவரது மனைவியோ “நாம் ஏன் அந்த அந்தக் கருவியை வாங்கக் கூடாது?” என்று கேட்டிருக்கிறார்.

அதன் விலை 30 ஆயிரம் ரூபாய். எனினும் மனைவி தந்த உற்சாகத்தால் உந்தப்பட்ட வெங்கய்யா, தனது போட்டோ ஸ்டூடியோவை அடகுவைத்துக் கடன் வாங்கினார். உபகரணத்துக்கான மொத்தப் பணத்தையும் கட்டி, ஜான் டிக்கென்ஸன் நிறுவனத்தின் மூலம் (John Dickinson and Company) அந்த ஒலிக் கருவியைத் தருவித்தார்.

மவுனப் படமா? பேசும் படமா?

கருவி கைக்குக் கிடைத்ததும் அதை வைத்து அவர் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவில்லை. க்ரோனோமெகாபோன் ஒலிப்பதிவுத் தட்டுடன் இங்கிலாந்தில் அன்று புகழ்பெற்று விளங்கிய 12 துண்டுப் படங்களை வாங்கினார். ‘அன்டர் தி பனாமா’ (Under the Panama), ‘ஸ்விங் சாங்’ (Swing Song), ‘சீ சர்பென்ட்’ (Sea Serpent), ‘ஃபயர்மேன் சாங்’ (Fireman Song), ‘மெகாடோ’ (Micado) உள்ளிட்ட அந்தப் படங்களை விக்டோரியா ஹாலில் திரையிட்டார். திரைக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த க்ரோனோ மெகாபோனிலிருந்து திரையில் படம் தொடங்கும் அதே நேரத்துக்குத் துல்லியமான ஒத்திசைவுடன் (sink) ஒலிக்க விட்டார்.

பார்வையாளர்கள் இந்தப் புதிய அனுபவத்தால் சொக்கிப்போனார்கள். பேசும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை, பேசும்படங்கள் அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பார்வை யாளர்களுக்குக் கொடுத்தார் ஆர். வெங்கய்யா. தனது திரையிடல்கள் சாமானிய மக்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைத்தார். இதனால் தனது க்ரோனோமெகாபோனுடன் சாமானிய மக்களை நாடிச் சென்றார்.

எக்ஸ்பிளனேட் டென்ட்டும் கெயிட்டியும்

அன்று ஆங்கிலேயர்களுக்குக் கலாசி வேலைகளைச் செய்வதற்காகக் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களும் சென்னையின் பூர்வகுடிகளும் நிறைந்திருந்த எஸ்பிளனேடில் 1910-ல் டென்ட் சினிமா கொட்டகை ஒன்றை அமைத்து அதில் தனது க்ரோனோமெகாபோனுடன் கூடிய துண்டுப் படங்களைத் திரையிட்டார். பின்னர் டென்ட் சினிமாவுடன் தனது சொந்த ஊரான மச்சிலிப்பட்டினம், பெங்களூர், பம்பாய் ஆகிய நகரங்களுக்குப் பயணம் செய்தார்.

தனது பன்னிரெண்டு படங்களும் தேய்மானம் ஏற்பட்டு, திரையில் கோடுகள் அதிகரித்து விட்டதைக் கண்ட வெங்கய்யா, ‘பேர்ல் ஃபிஷர்’ (Pearl Fisher), சிகார் பாக்ஸ் (Cigar Box), ‘ராஜாஸ் கேஸ்கெட்’ (Raja's Casket), ‘பிளாக் பிரின்சஸ்’ (Black princes) ஆகிய புதிய துண்டுப் படங்களைத் தருவித்துக்கொண்டு இலங்கை, பர்மா உட்படப் பல நாடுகளுக்குச் சென்று திரையிட்டுப் பெரும்பொருள் ஈட்டினார்.

நான்கு ஆண்டுகள் இவ்வாறு டென்டு சினிமா பயணம் மேற்கொண்ட வெங்கய்யாவுக்குச் சென்னை திரும்பும் வழியில் உதித்த எண்ணம்தான் கெயிட்டி திரையரங்கம். அலைந்து திரிந்து மக்களை நோக்கித் திரைப்படங்களைக் கொண்டுசெல்வதைவிட அவர்களைத் திரைப்படம் நோக்கி இழுக்க மேலைநாடுகளைப் போல் நாமும் திரையரங்கம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 1912-ல் சிந்தாரிப்பேட்டையில் அன்று ‘கறுப்பர்கள் தெரு’ என்று அழைக்கப்பட்ட பிளாக்கர்ஸ் சாலையில் கெயிட்டி சினிமா ஹாலைத் தொடங்கினார்.

வரலாற்றில் இடம்

மவுனப்படக் காலம், க்ரோனோமெகாபோன் காலம், பேசும்படக் காலம், வண்ணத் திரைப்படக் காலம் என்று எல்லா காலத்திலும் புகழ்பெற்று விளங்கியது கெயிட்டி. 1939-ல் கே. சுப்ரமணியத்தின் ‘தியாக பூமி’ இங்கே வெளியானபோது பிரிட்டிஷ் அரசு அந்தப் படத்தைத் தடை செய்தது. அதையும் மீறி கெயிட்டி யில் திரையிடப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் போலீஸ் முதன்முதலில் தடியடி நடத்திக் கூட்டத் தைக் கலைத்தது இந்தத் திரையரங்கில்தான்.

இவ்வாறு வரலாற்றில் இடம்பிடித்த இந்தத் திரையரங்கம் 100 ஆண்டுகளைக் கொண்டாட விருந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு தனது கலைச் சேவையை நிறுத்திக்கொண்டது. இன்று கெயிட்டி இருந்த இடம் வணிக வளாகமாக மாறி நிற்கிறது. கெயிட்டி திரையரங்கைத் தொடங்கிய வெங்கய்யா, பின்னர் கிரவுன், குளோப் ஆகிய திரையரங்குகளையும் சென்னையில் நிறுவி 1929-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற திரையரங்க அதிபராக விளங்கி 1941-ல் மறைந்தார்.

தந்தை வழியில் மகன்

வெங்கய்யாவின் மகன்களில் ஒருவரான ஆர். பிரகாஷ், தனது தந்தையின் விருப்பத்தை ஏற்று லண்டனுக்கும் ஹாலிவுட்டுக்கும் சென்று சினிமா ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றைத் திரைப்படப் பள்ளிகளில் முறைப்படி கற்றுத் திரும்பினார். பின்னர் 'ஸ்டார் ஆஃப் ஈஸ்ட் பிலிம்ஸ்' என்ற ஸ்டூடியோவைத் தொடங்கி 'கஜேந்திர மோட்சம்', 'நந்தனார்', 'பீஷ்மர் பிரதிக்ஞை' ஆகிய மவுனப் படங்களை இயக்கித் தயாரித்துப் புகழ்பெற்றார். இவரிடம் உதவியாளர்களாக இருந்து சினிமா பாலபாடம் கற்றுக்கொண்டவர்கள்தான் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஆரம்ப கால இயக்குநர்கள் சி. புல்லையா, ஒய்.வி.ராவ் ஆகிய இருவரும்.


Thursday, 15 October 2020

CHENNAI TAMIL

 


CHENNAI TAMIL

.உனுக்கு இன்னா பிரச்சன நைனா?



சென்னைத் தமிழ் வண்ண மயமானது. பல மொழிகளால் வளமூட்டப்பட்டது.சென்னையின் வழக்கமான காட்சிகளில் ஒன்றுதான் அது. கடுமையான போக்குவரத்து நெருக்கடி. பெரிய வாகனங்கள் முன்புறமும் எதிரிலும் வழியை அடைத்துக்கொண்டு நிற்கின்றன. இடது புறம் சிறிய இடைவெளி உள்ளது. அதன் வழியே சென்றால் முன்னேறிவிடலாம். உங்கள் முன்னால் இருப்பவரிடம் அதை விளக்கிச் சொல்ல முயற்சி செய்கிறீர்கள். அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்: “லெப்ட்ல வாங்க்கினு போ சார்”.

மெட்ராஸ் பாஷை எனச் சொல்லப்படும் சென்னைத் தமிழ் என்னும் சென்னை வட்டார வழக்கின் சிறப்புகளில் ஒன்று இந்தக் கச்சிதம். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்’ என்ற புகழ்பெற்ற தொடர் ஒன்று இதை மேலும் தெளிவாக்கும். எதிராளியிடம், “உன் பேச்சை நான் மதிக்கவில்லை; உன்னோடு பேசுவதால் நேரம்தான் வீணாகிறது; நீ இங்கே நிற்பதுகூடத் தொந்தரவாக இருக்கிறது; நீ நகர்ந்தால் குறைந்தபட்சம் எனக்குக் காற்றாவது வரும்” என்றெல்லாம் சொல்ல சில சமயம் நாம் விரும்பக்கூடும். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்' என்ற தொடர் இத்தனையையும் சிக்கனமாகச் சொல்லிவிடுகிறது.


பீற்றிக்கொள்ளாதே, உணர்ச்சியை அதிகம் வெளியில் காட்டாதே, முழு உண்மையையும் வெளிப்படுத்திவிடாதே என்ற பொருள்களில் வழங்கிவரும் ‘அமுக்கி வாசி' என்னும் தொடர் இன்னொரு உதாரணம். இப்படி நிறையச் சொல்லலாம். தாராந்துட்டான், பூட்ட கேஸ், உடான்ஸு, மெர்சல், நாஸ்தி என சென்னைத் தமிழின் எந்தச் சொல் அல்லது தொடரை எடுத்துக்கொண்டாலும், சிக்கனம், உணர்ச்சியைக் கச்சிதமாக வெளிப்படுத்தும் பாங்கு, பிற மொழிகளைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை எனப் பல சிறப்பம்சங்களை உணரலாம்.


கஸ்மாலம் என்ற சென்னைத் தமிழ் வசைச் சொல்லின் வேர்ச் சொல், வடமொழியில் உள்ள ‘கஸ்மலம்'. இதன் பொருள் அழுக்கு. ஜபூர்/ஜபுரு என்ற சொல்லின் வேர்ச் சொல் ஜபுர் என்னும் உருதுச் சொல். பொருள் ஜால வித்தை. அதே பொருளின் அங்கத வடிவில் ஜபுரு காட்டாதே என்று சென்னைத் தமிழில் வழங்கிவருகிறது. சென்னைத் தமிழ் பிற மொழிகளை எப்படி நுட்பமாக உள்வாங்கியிருக்கிறது என்பதை இதுபோன்ற சொற் களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். பஜார், பேஜார், மஜா, கேடி, தௌலத், உல்ட்டா, உட்டாலக்கடி என உதாரணங்களை அடுக்கலாம்.


எதையாவது தொலைத்துவிட்டால் ‘தாராத்துட்டியா’ என்று சென்னைத் தமிழில் கேட்பார்கள். தன்னுடைய பொருளைத் தன்னுடையது அல்ல என்று முற்றாகத் துறந்து பிறருக்குத் தந்துவிடும் செயலே தாரை வார்த்தல். இந்தச் சொல்லின் பொருள் ஆழமாக உள்வாங்கப்பட்டுச் சற்றே அங்கதச் சுவையுடன் தாராத்துட்டியா எனத் தகவமைக்கப்பட்டிருக்கிறது.


பிற மொழிச் சொற்கள் சற்றே திரிந்த நிலையிலும் வித்தியாசமான பயன்பாட்டிலும் புழங்கிவருகின்றன. ‘அப்பீட்’ என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப் படுகிறது. கீழே சுற்றும் பம்பரத்தைச் சாட்டையால் சுண்டித் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிப்பதுதான் அப்பீட். இது ‘அப் ஹெட்’ என்ற சொல்லிலிருந்து மருவி வந்தது என்ற தகவல், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்னும் நாவலில் கூறப்படுகிறது. அம்பேல் என்னும் சொல் ஐ-ஆம்-ஆன்-பெயில் என்னும் தொடரின் மரூஉ என்றும் அந்த நாவல் சொல்கிறது. இவை இரண்டுமே மூலப்பொருளுக்கு நெருக்கமான பொருளிலேயே பயன்பட்டாலும், மாறுபட்ட சூழல்களில் வேறு பொருள்களையும் கொள்கின்றன. கிளம்புகிறேன் (நான் அப்பீட்டு) என்றும் ஆளை விடுங்கள் (அம்பேல்) என்றும் வழங்கப்படுகின்றன. ஒரு சொல் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு வடிவங்கள் எடுப்பது மொழியின் அழகு அன்றி வேறென்ன?

மொழி கூறும் வரலாறு

சென்னை மொழிக்கு வேறு எந்த வட்டார வழக்குக்கும் இல்லாத தனித்தன்மை - பல மொழிகள் கலந்த தன்மை - உள்ளது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஆந்திரப் பிரதேசத்தின் தாக்கத்தை நைனா, டப்பு, துட்டு போன்ற சொற்களிலும் (எனக்)கோசரம், (அதுக்)கோசரம் போன்ற வழக்குகளிலும் காணலாம். ஆங்கிலம், தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளின் கலப்பை ஆராய்ந்தால், பிற மொழி மக்களுடனான சென்னையின் தொடர்பையும் வரலாற்றுரீதியில் புரிந்து கொள்ளலாம்.


இந்த அளவுக்கு வண்ண மயமான, பல்வேறு மொழிகளால் வளமூட்டப்பட்ட இன்னொரு வழக்கை எந்த மொழியிலும் காண்பது அரிது. இத்தகைய வழக்கை மரியாதையுடன் ஆராய்வதற்குப் பதிலாக, இழிவுபடுத்தும் போக்கே பொதுவாக நிலவுகிறது. சென்னைத் தமிழின் கொச்சை வழக்கைக் கேட்ட மாத்திரத்தில் கூசிப்போகும் மேட்டுக்குடியினர் பலர் இருக்கிறார்கள். பலரும் இதைத் தமிழின் இழிவழக்காகக் கருதி விமர்சனமும் பரிகாசமும் செய்வதுண்டு. கூவம் பாஷை என்று சொல்லும் அளவுக்குச் சிலர் போய்விடுகிறார்கள். நாற்றமெடுக்கும் கூவத்தோடு இம்மொழி ஒப்பிடப்படுவது தற்செயலானது அல்ல. தமிழ்ப் பரப்பின் பொதுப்புத்தியின் பார்வை இது.


வட்டார வழக்குகள் ஒரு மொழியின் உயிர்ப்பை உணர்த்தும் அடையாளங்கள். மதுரைத் தமிழ், கொங்கு தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போல சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். எல்லா வட்டார வழக்குகளையும் போலவே பல்வேறு இயல்பான காரணிகளால் உருவாகி, தொடர்ந்த பயன்பாட்டினால் உருமாறிவரும் ஒரு வழக்கு அது.


களுத மட்டும் சரியா?


சென்னைத் தமிழை இழிவுபடுத்துபவர்கள் அதன் உச்சரிப்புத் திரிபுகளையும் (வலிச்சிக்குனு, இஸ்துகினு) கொச்சைகளையும் (துன்ட்டியா) சுட்டிக்காட்டுவார்கள். குறைகளும் திரிபுகளும் எல்லா வழக்குகளிலும் உள்ளன. வந்துகொண்டிருக்கிறேன் என்பதை வந்துட்ருக்கேன், வந்துக்கிருக்கேன், வந்துண்ட்ருக்கேன் என்றெல்லாம் சொல்வது வட்டார/சாதி வழக்காக அங்கீகாரம் பெறுகிறது. ஆனால், வந்துனுருக்கேன் என்றால் மட்டும் அது இழிவழக்காகக் கருதப்படுகிறது. கஷ்டம் என்பதை கஸ்டம் என்று சென்னைத் தமிழர் சொல்கிறார் என்றால் சிவாஜி என்பதை ஜிவாஜி என்று நெல்லைத் தமிழர்கள் சிலர் சொல்லத்தான் செய்கிறார்கள். கழுதையைக் கய்தே என்பது சென்னைத் தமிழ் வழக்கு. இதைக் களுத என்று சொல்லும் தமிழர்கள் தமிழகமெங்கும் இருக்கிறார்கள். ஆனால், சென்னைத் தமிழின் கொச்சை மட்டும் பரிகசிப்புக்கும் இழிவுக்கும் உள்ளாக்கப்படுகிறது.


வசைச் சொற்களை வைத்து சென்னைத் தமிழை இழிவாகப் பார்க்கும் போக்கும் உள்ளது. வசைச் சொற்கள் சென்னைத் தமிழின் தனிச் சொத்து அல்ல. எல்லா மொழிகளையும் போலவே தமிழிலும் வசைச் சொற்கள் நிறையவே உள்ளன. சென்னைத் தமிழைப் பேசுபவர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதால் சென்னைத் தமிழே வசைத் தமிழ் ஆகிவிடாது. கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும் பிற வட்டாரத்து மக்களின் வட்டார வழக்குகளுக்கும் இதே அளவுகோல் பின்பற்றப்படுவதில்லை என்பதைப் பார்க்கும்போது, சென்னைத் தமிழின் மீதுள்ள ஒவ்வாமைக்குப் பின் உள்ள மேட்டிமைத்தனத்தைப் புரிந்துகொள்ளலாம். சென்னைத் தமிழை ரசிக்கும் சிலரும் தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கோடுதான் அதை அணுகுகிறார்கள்.


வாழும் மொழிக்கான பல்வேறு இலக்கணங்களையும் தேவைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னைத் தமிழ் என்னும் வட்டார வழக்கை மொழி மீது அக்கறை உள்ள யாரும் புறக்கணிக்கவோ இழிவுபடுத்தவோ மாட்டார்கள். மொழியின் தன்மைகள் இடம், தொழில், சாதி வரலாறு ஆகிய காரணங்களால் மாறுவது மிக இயல்பானது. வெகுமக்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழிக் கூறுகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியவை. இதில் உயர்வு, தாழ்வு காண்பது மேட்டிமைவாதம். அந்த மேட்டிமைத்தனத்தைக் கைவிட்டு, சென்னைத் தமிழை முறையாக அணுகு வதற்கான பார்வையை வளர்த்துக்கொள்வதே மொழி யின் மீதுள்ள நம் அக்கறையை வெளிப்படுத்தும்.

Image may contain: text that says 'தமிழ்'

Friday, 14 August 2020

WHAT HAPPENED IN CHENNAI BEFORE /ON FIRST INDEPENDECE 1947 AUGUST 14


WHAT HAPPENED IN CHENNAI BEFORE /ON 
FIRST INDEPENDECE 1947 AUGUST 14

1947 ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சென்னையில் எப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் நடைபெற்றன?
ஆனந்த விகடன் உதவி ஆசிரியராக இருந்த கோபு (எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன்) 24 ஆகஸ்ட் 1947 இதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது.
அந்த வேளையில் தேனாம்பேட்டை ஆலயங்கள் எல்லாவற்றிலும் இருந்து நாகஸ்வரம் கம்பீரமாய் எழுந்தது. ஒவ்வொரு வீட்டிலும், ரேடியோ முழக்கம் செய்துகொண்டு இருந்தது. விடுதலை கீதம் வானைக் கிழித்துக் கொண்டு சென்றது. இந்திய சுதந்திர விழாவைப் பார்ப்பதற்காக, சூரியனும் அந்த நடுநிசி வேளையில் கண் விழித்துக்கொண்டு சென்னைக்கு விஜயம் செய்துவிட்டானோ என்று அதிசயிக்கும்படி, சென்னை மாநகரம் அப்போது ஜெகஜோதியாக விளங்கிக்கொண்டிருந்தது.
சிற்சில இடங்களில், ஜனங்கள் தங்கள் வீட்டு அலங்காரத்தையும், தெரு அலங்காரத்தையும், மேலும் மேலும் மெருகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டே ஜார்ஜ் டவுனுக்குச் சென்றேன். அங்கு ஜனங்கள், கூட்டம் கூட்டமாக சமுத்திரக் கரையை நோக்கிப் போய்க்கொண்டி ருந்தார்கள். அவர்களில் ஓர் ஆசாமியை நிறுத்தி, “எங்கே எல்லாரும் போகிறீர்கள்” என்று கேட்டேன். “கோட்டையைப் பிடிக்க” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே அந்த ஆசாமி போனார்.

“நாமுந்தான் அந்தக் கோட்டையைப் பிடிக்கலாமே!” என்று அவரைப் பின்தொடர்ந்தேன்.கோட்டை யில் இருந்து புறப்பட்டதும், நேராக வீடு திரும்ப எனக்கு மனம் வரவில்லை. சென்னையை இன்று அலசிப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டு, பீச் ரோடில் நடந்தேன்.
'இரவோடு இரவாக எத்தனை கொடிகள் முளைத் திருக்கின்றன!' என்று ஆச்சரியப்படும்படி சர்க்கார் மாளிகைகள், கட்டடங்கள் எல்லாவற்றிலும் கணக்கு வழக்கின்றி மூவர்ணக் கொடிகள் பறந்துகொண்டு இருந்தன.
சென்னையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பிரதான சின்னமாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்தபோதுதான், எனக்குக் கோட்டையைப் பிடிக்கும் மர்மம் புரிந்தது. ஜனங்கள் அந்த சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டையில் கொடியேற்றும் விழாவைக் கண்டு களிக்கத்தான் அப்படிக் கூட்டம் கூட்டமாகப் போய் இருக்கிறார்கள். கோட்டை எல்லையில் காலை வைக்கக்கூட அஞ்சிய சென்னை வாசிகள், இன்று கோட்டையைப் பிடித்துவிட்டார்கள். கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் ஜனத்திரள் சூழ்ந்திருந்தது.

இரவு முழுவதும் காத்துக்கிடந்த கூட்டத்தினர், சூரியோதயத்தின்போது கோட்டை கொடி மரத்தில் மூவர்ணக் கொடி ஜிலுஜிலு என்று பறப்பதைப் பார்த்து மனம் மகிழ்ந்தார்கள்; அவர்களிடையே ஒரு நீண்ட பெருமூச்சும் ஏற்பட்டது.
"கட்டடங்களையே பார்த்துக்கொண்டு போகிறீர்களே! நானும் இன்று மாறுதலோடு நிற்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று போட்டியிடுவதுபோல் பீச் ரோடில் தன்னந்தனியே நின்றுகொண்டு இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவச் சிலை என் கவன த்தைக் கவர்ந்தது. கிட்டத்தில் போய்ப் பார்த்தபோது, அந்த மன்னரின் கரங்களில் ஒன்று, இந்திய தேசிய மூவர்ணக் கொடியை அழகாகத் தாங்கிக் கொண்டு இருந்தது. இதைச் செய்தவரின் ரசிகத் தன்மையைப் பாராட்டிவிட்டு, கலாசாலைக் கட்டடங்களைப் பார்க்கச் சென்றேன்.
சென்னையில், திருவல்லிக்கேணியும் ஆயிரம்விளக்கும் தனி முக்கியத்துவம் பெற்றிருக்கும் இடங்கள். ஏனெனில், முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அதிகமாகக் கலந்து வாழும் இடங்கள் அவை, அங்கே சென்று முஸ்லிம் சிறுவர்கள், பெரியவர்கள் எல்லாரும் இந்திய மூவர்ணக் கொடியைச் சட்டைகளில் குத்திக்கொண்டு வெகுஉற்சாகமாகத் தெருவில் நடமாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும், எந்த விதமான இடையூறும் இன்றி சுதந்திர விழா சென்னையில் நடந்தேறிவிடும் என்ற தைரியம் எனக்கு ஏற்பட்டது.
அடுத்தபடியாக, மயிலாப்பூரை அடைந்தேன். வியாழக்கிழமை இரவிலேயே சுதந்திரம் பெரிய அதிர்ச்சியோடு மயிலாப்பூருக்கு விஜயம் செய்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். திடும்திடும் என்று அதிர்வேட்டுகள் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டு ஊரறிய அடிமை அரக்கனை விரட்டியதாகச் சொல்லிக் கொண்டார்கள். மயிலாப்பூர் பெரிய மனிதர்களின் பெரிய பங்களாக்களில், மூவர்ணக் கொடிகள் பெருந்தன்மையோடும், கம்பீரத்தோடும் பறந்து காட்சி அளித்தன.

கார்ப்பரேஷன் கட்டடத்தை நெருங்கிப் பார்த்தபோது, “பலே! அழகுக்கு அழகு செய்து இருக்கிறார்கள்!" என்று வியந்துகொண்டு, குழுமி இருந்த ஜனத்திரளோடு கலந்துகொண்டேன். அப்போது திடீரென்று எழுந்த கரகோஷம் காரணமாக அண்ணாந்து பார்த்தேன். பிரதமர் ஓமந்தூர் ரெட்டியார், பக்தி சிரத்தையோடு கொடியேற்றி வைத்தார். மேயர் குதூகலத்தோடு குதித்துப் பேசினார். இப்படி சர்க்கார் மாளிகைகளிலும், காரியாலயங்களிலும் தேசியக்கொடி பறந்ததுதான், மக்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியிருந்தது.
பிற்பகல் இரண்டு மணியில் இருந்தே கோட்டை மைதானம் திமிலோகப்பட்டது. சென்னை சர்க்காரின் பிரதிநிதியாக கவர்னர் ஸர் ஆர்ச்சிபால்ட் துரை, மன்றோ உருவச் சிலையின் முன்பு தேசியக்கொடியை ஏற்றிவைத்து வணங்கும் வைபவம் அது என்று அறிந்தேன்.
குறிப்பிட்ட நேரத்துக்கு கவர்னர் விஜயம் செய்து விட்டார். ஆனால், பிரதம மந்திரி ஓமந்தூர் ரெட்டியார் வந்து சேரவில்லை. கூட்டத்தினரும் கவர்னரும் சிறிதுநேரம் சுற்று முற்றும் கவலையோடு பார்த்துக்கொண்டு இருந்தபோது, "போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விட்டதால் கூட்டத்தை நெருக்கிக்கொண்டு உள்ளே வரத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே பிரதம மந்திரி பாய்ந்து வந்து, கவர்னர் துரையிடம் கை குலுக்கினார்.
குறிப்பிட்ட நேரத்தில் விழாவை நடத்தத் தவறிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்ப துபோல் கவர்னர் ஏற்றிவைத்த அந்தக் கொடி சற்று மக்கர் செய்துகொண்டுதான் மேலே சென்றது. பரபரப்பு அடங்குவதற்கு முன், அந்தக் கொடிக்கம்பத்தின் மேலே சென்று கம்பீரமாகப் பறந்து காட்சியளித்தது.
கோட்டை மைதானத்தில் இருந்து புறப்பட்டபோது, நன்றாக இருட்டிவிட்டது. நகரின் தீபாலங்காரத்தைப் பார்க்கச் செளகரியமாக இருந்தது. ஜெனரல் ஆஸ்பத் திரியில் கண்ணைப் பறிக்கும் விளக்குகளைப் போட்டு, அதைப் பிரமாண்டமானதொரு பொம்மைபோல் தோற்றம் அளிக்கும்படி செய்திருந்தார்கள். எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் ஒளிர்ந்தது. பக்கத்தில் ரிப்பன் கட்டடம், பஞ்சவர்ணங்களை வாரி வீசிக்கொண்டு இருந்தது. நான் மட்டும் சளைத்துவிட்டேனா என்று கேட்பதுபோல, தூரத்தில் எழும்பூர் ஸ்டேஷன் பிரகாசித்தது.
நன்றாக இருட்டிய பிறகுதான், கொண்டாட்டம் பிரமாதப்படத் தொடங்கியது. வாண வேடிக்கைகள், ஊர்வலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, ஜனங்கள் சற்று களைப்புத் தீர காற்று வாங்க பீச்சுக்குப் போனபோது, அங்கே அவர்களை வரவேற்கப் பலவித களியாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள், இரவைப் பரந்த மணற்பரப்பில் கழித்துவிட்டு மறுநாள் காலையில்தான் விடு திரும்பினார்கள்.
சுதந்திர விழாவில் மிக உற்சாகம் காட்டியவர்கள், ஸ்திரீகளும் குழந்தைகளும்தான் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்.
ஸ்திரீகள் தங்கள் ஜடையை மூவர்ண புஷ்பக் கொத்துகளினால் அலங்கரித்துக் கொண்டு இருந்த அழகையும், இடையில் மூவர்ண சேலை உடுத்தியிருந்த விமர்சையையும் பார்க்கக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் குதூகலத்துக்கு எல்லையே இல்லை. அவர்கள் சட்டைகளில் கணக்குவழக்கின்றி தேசியக் கொடிகளைக் குத்திக்கொண்டும், வாய் நிறைய மிட்டாய்களைத் திணித்துக்கொண்டும் தலைகால் தெரியாமல் ஓடும் மோட்டார் கார்களோடும் சைக்கிள்களோடும் போட்டியிட்டுக்கொண்டு போன காட்சி, இன்னும் என் கண் முன் தாண்டவம் ஆடுகிறது.
சென்னையில், சுதந்திர விஜய வைபவக் கொண்டாட்டத்தைப் பார்த்து அனுபவித்தவர்கள் ஒவ்வொருவரும், "எதிர்காலத்தில் வருஷா வருஷம் நடக்கப்போகும் இந்த சுதந்திர தின விழாவைப் பார்க்க எனக்கு இந்த இரு கண்கள் போதாது. இதைப் போல் ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள் என்று முடிவோடு விட்டுக்குத் திரும்பினேன்