HISTORY OF GOA 1961
“கோவா தெரியுமா மாலு?” என்று கேட்டான் பாலு. “எனக்குத் தெரிந்து நிறைய கோவா இருக்கிறது. அதில் ரொம்பப் பிடித்தது பால் கோவா. இன்றைக்குக்கூட ஞாநி மாமா ஆவினிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். கோவா என்கிற கொய்யாப்பழம் எனக்குப் பிடிக்காது. கோவா என்று நம் நாட்டில் ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கேதான் ஆண்டுதோறும் உலகத் திரைப்பட விழாவை இந்திய அரசு நடத்துகிறது. அண்ணாமலை மாமா தவறாமல் போகிறார். கோவாவில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் தரும் வழக்கம் இருகிறது என்று அவர் சொன்னார். நீ எந்தக் கோவாவைப் பற்றி கேட்கிறாய்?” என்றேன்.
“அப்பாடா, ஒரு வழியாக விஷயத்துக்கு வந்தாய். கடைசியாக சொன்னாயே அந்த கோவாவைத்தான் தெரியுமா என்று கேட்டேன்.” என்றான் பாலு.
“அந்த கோவாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் சில தொடர்புகளைச் சொல்லட்டுமா?” என்றார் மாமா. 1965இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது,
எம்.ஜி.ஆர். கோவாவில் படப்பிடிப்புக்குப் போய்விட்டாராம். இது அவர் கட்சிக்குள் பிரச்னையாக்கப்பட்டதாம். கோவாவை ஆண்ட போர்ச்சுகீசியர்கள்தான் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் லஸ் மாதா கோவில், சாந்தோம் சர்ச், சென்னையின் வட எல்லையாக இருக்கும் பழவேற்காட்டில் இருக்கும் கோட்டை எல்லாவற்றையும் கட்டியிருக்கிறார்கள்.
“போர்ச்சுகீசியர்களைப் பற்றித்தான் நான் பேசவந்தேன்” என்றான் பாலு. “இந்தியா முழுவதும் பிரிட்டிஷ்காரர்கள்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எல்லாம் கூட நம்மை அடிமையாக வைத்திருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.” என்றான் பாலு.
“போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு நூறு ஆண்டுகள் முன்பே வந்துவிட்டார்கள். எல்லோருமே முதலில் வணிகத்துக்காக வந்தவர்கள்தான். இங்கே ஏதாவது ஒரு மன்னருடன் வணிக ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்கள். பிறகு அவருடைய எதிரியிடமிருந்து பாதுகாப்புத் தருவதற்கு, ராணுவ உதவி தருகிறோம் என்பார்கள். அடுத்து அந்த மன்னரையே டம்மி ஆக்கிவிடுவார்கள். வரி வசூலிக்கும் உரிமையை மன்னரிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள். இப்படித்தான் நாடு முழுவதையும் குட்டிக் குட்டி மகாராஜாக்களிடமிருந்து பறித்துக் கொண்டார்கள்.” என்றார் மாமா.
போர்ச்சுகீசியர்கள் முதலில் வந்தது கேரளத்துக்குத்தானாம். வாஸ்கோட காமா தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு முதலில் வந்த வணிக ஆக்கிரமிப்பாளர். 1498ஆம் ஆண்டு மே 20ஆம் நாள் அவர் கோழிக்கோட்டுக்கு கப்பலில் வந்து சேர்ந்தார். இங்கிருந்து ஏராளமான மிளகும் சுவையூட்டிப் பொருட்களும் எடுத்துக்கொண்டு போய் ஐரோப்பாவில் பெரும் லாபம் சம்பாதித்தார். போர்ச்சுகல் அரசு அவரை அடுத்தடுத்து மூன்று முறை கேரளத்துக்கு அனுப்பியது.
ஒவ்வொரு முறையும் கடற்படையுடன் வந்து இங்குள்ள மன்னர்கள், வணிகர்களை மிரட்டியும் கெஞ்சியும் ஒப்பந்தம் போட்டு கேரளத்தின் கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், முதலிய பகுதிகளை எல்லாம் போர்ச்சுகல் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். வணிகத்தையும் படைபலத்தையும் பயன்படுத்தி, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளையெல்லாம் அடிமை நாடுகளாக்கலாம் என்று பிரிட்டிஷ், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு முதலில் வழி வகுத்துக் காட்டியவர் வாஸ்கோட காமாதானாம்.
“கோவா எப்படி போர்ச்சுகீசியர்கள் கைக்கு வந்தது?” என்று மாமாவைக் கேட்டேன்.
“கோவாவில் திம்மையா என்று ஒரு கடற்கொள்ளைக்காரன் இருந்தான். அவனிடம் ஒரு தனிப்படையே இருந்தது. அதை வைத்துக்கொண்டு, வெவ்வேறு ராஜாக்களுக்கு உதவுவது, வணிக ஒப்பந்தங்கள் செய்வது என்று இருந்து கொண்டிருந்த திம்மையா, பல முறை கடலில் போர்ச்சுகீசிய கடற்படையைச் சந்தித்திருக்கிறான். கோவா விஜயநகர மன்னர்கள் கையிலிருந்து பீஜப்பூர் சுல்தான்கள் கைக்கு மாறியிருந்தது. சுல்தான் அடில்ஷா பலவீனமாக இருப்பதால், கோவாவைத் தாக்கி எடுத்துக்கொள்ளலாம் என்று யோசனை சொன்னான். அப்படித் தாக்கி வசப்படுத்தும்போது, போர்ச்சுகீசியர்கள் விஜயநகர மன்னருடன் ஒப்பந்தம் செய்து கோவாவை எடுத்துக் கொண்டார்கள். இது நடந்தது 1510ஆம் ஆண்டில்!” என்றார் மாமா.
“1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் கிடைக்கும் வரை, அங்கே போர்ச்சுகீசியர்கள் ஆட்சிதானா?” என்று கேட்டான் பாலு.
“கோவாவுக்கு சுதந்திரம் ஆகஸ்ட் 15இல் வரவில்லை. அங்கே போர்ச்சுகீசியர்கள்தான் ஆட்சி செய்தார்கள். ஆனால், சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதிகளில் 1522லிருந்து 1697வரை ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகீசியர்களை, ஆங்கிலேயர்கள் முறியடித்து அந்தப் பகுதிகளைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். அங்கெல்லாம்தான் சுதந்திரம் ஆகஸ்ட் 15இல்” என்றார் மாமா.
“கோவாவுக்கு எப்போதுதான் சுதந்திரம் வந்தது?” என்றேன்.
“இந்தியாவில் நாமெல்லாம் சுதந்திரம் பெற்று 14 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 19, 1961இல் தான் வந்தது. கோவாவிலிருந்து போர்ச்சுகல் வெளியேறவேண்டும் என்று பல இயக்கங்கள் அங்கே அமைதியாக போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்திய அரசு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்து, கோவாவை விடுவிக்க முயற்சித்தது. அதெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் போர் நடத்தித்தான் கோவாவுக்கு சுதந்திரம் வாங்க முடிந்தது.” என்றார் மாமா.
“அங்கே அகிம்சைப் போராட்டம் பயன் அளிக்கவில்லையா?” என்றேன்.
“அகிம்சை எல்லாம் 1947க்கு முன்னால்தான். அதுவும் ஆங்கிலேயரிடம்தான் எடுபட்டது. கோவாவில் 3,300 பேர் கொண்ட போர்ச்சுகீசியப் படைக்கு எதிராக, நாம் 30 ஆயிரம் பேர் கொண்ட விமானப்படை, கடற்படை தரைப்படை எல்லாவற்றையும் அனுப்பித்தான் கோவாவை விடுதலை செய்தோம். இந்தியாவுடன் இணைத்தோம். அதையும் போர்ச்சுகல் அரசு 1974 வரை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகுதான் ஒப்புக்கொண்டது. அதுவரை நமக்கும் போர்ச்சுகல்லுக்கும் ராஜாங்க உறவே கிடையாது.” என்றார் மாமா.
ஆக, இந்தியாவில் ஆங்கிலேயர்களைவிட அதிக காலம் ஆட்சி நடத்தியவர்கள்தான் போர்ச்சுகல்தான். 450 ஆண்டுகள் இங்கே இருந்திருக்கிறார்கள்.
“பாண்டிச்சேரியிலும் இப்படித்தானா? பிரெஞ்சுக்காரர்களும் போக மறுத்தார்களா?” என்றான் பாலு. “கிட்டத்தட்ட இப்படித்தான். ஹைதராபாத் நிஜாமுடனும் இப்படித்தான். அந்தக் கதையை எல்லாம் இன்னொரு சமயம் சொல்கிறேன்.” என்றார் மாமா.
“ஏன் எங்கள் பாடப் புத்தகத்தில் இந்தச் சரித்திரம் எல்லாம் சொல்லவில்லை?” என்றேன்.
“சொல்லாமல் விட்டது தப்புதான். இப்போது பாடப் புத்தகங்களை புதிதாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறார்கள். அவர்களுக்கு கடிதம் எழுது.” என்றார் மாமா.
“வாலு, கடிதம் சொல்கிறேன். டைப் செய்.” என்றேன்.
வாலு டைப் செய்ய ஆரம்பித்தது.
உலகத்திலேயே மிக அதிகமான கோவா பழங்கள் (கொய்யா) உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். ஓராண்டில் ஒரு கோடியே எழுபது லட்சம்
டன் விளைகிறது.
வாஸ்கோட காமா கேரளத்துக்கு பலமுறை வந்து ஆதிக்கத்தை நிலைநாட்ட தன் முரட்டுத்தனத்தால் முயற்சித்தபோது, அவரைக் கொல்ல அங்கே சதி நடந்து முறியடிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு 'உருமி' என்ற மலையாளப் படத்தை ஒளிப்பதிவாளர் இயக்குநர் சந்தோஷ் சிவன் உருவாக்கியிருக்கிறார்.
HISTORY OF GOA
அபோன்சோ டி அல்புகெர்கே, கோவாவின் பிரபு ( Duke of Goa) காலம்1453 – 16 டிசம்பா் 1515 ஆகும். இவா் போர்ச்சுகீசியத்தின் அரசியலாளர் , பெரும்படைத்தலைவராகவும், "பெரும் வெற்றியாளராகவும்" விளங்கினார் ,[1][2][3]
போர்த்துகீசிய ஆசிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதன் மூலம் இஸ்லாமை எதிர்த்துப் போராடி, கிறித்துவத்தை பரப்புவதற்கும், மசாலா வர்த்தகத்தை பாதுகாப்பதற்கும் நோக்கம் ஆகியவற்றுக்காக அபோன்சோ முன்னோடியான போர்த்துகீசிய பெரும் திட்டத்தை முன்வைத்தார்.[4] அவருடைய சாதனைகள், தனது நாட்டின் மறுமலர்ச்சிக்காகப் பாரசீக வளைகுடாவைத் தாக்கச்சென்ற முதல் ஐரோப்பியர் அபோன்சோ ஆவார், அவர் முதல் பயணத்தில் செங்கடலில் ஐரோப்பிய கப்பற்படையை வழிநடத்தினார்.[5] இவரின் இராணுவ, நிர்வாகப் பணிகளால், போர்த்துகல் பேரரசை ஓராண்டில் கட்டியெழுப்பி பாதுகாக்காத்து , மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஓசியானியாவின் மசாலா பாதைகளை பாதுகாத்துதும் அவரது முதன்மையான சாதனையாக பொதுவாகக் கருதப்படுகிறது. [6] இவரே கோவாவில் போச்சுகீசிய ஆட்சியை நிறுவியவர் ஆவார்.
கோவாவின் வரலாறு
கோவா என்பது இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள ஒரு சிறிய மாநிலமாகும். இந்த மாநிலம் சிறியதாக இருந்தாலும் இந்திய வரலாற்றில் செல்வாக்கு வகித்துள்ளது. கோவா இந்தியாவின் முதன்மையான வணிக மையமாக இருந்துள்ளது, இதனால் இது முற்காலத்தில் அரச மரபினர், மாலுமிகள், வியாபாரிகள், வர்த்தகர்கள், துறவிகள், மிஷனரிகள் போன்றோரை ஈர்த்து வந்துள்ளது. கோவா அதன் வரலாறு முழுவதும் அதன் கலாச்சார மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து மாற்றம் பெற்று வந்துள்ளது.
புராணங்களில் கோவா
கோவா குறித்த முதல் இலக்கியக் குறிப்பாக மகாபாரதத்தில் பீஷ்ம பருவத்தில் கோமண்ட என குறிப்பிடப்படுகிறது இதன் பொருள் பசுக்களின் மண்டலம் என்பதாகும்.[1] தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆதாரம் இல்லாத போதிலும், இப்பிரதேசத்தை உருவாக்கியவர் என இந்து நூல்கள் பரசுராமரைக் குறிப்பிடுகின்றன (காண்க:கந்த புராணம்:சகயதிரிகந்தா). இவர் இந்த தேசத்தில் பத்து முனிவர்களுடன் குடியேறி தீ வளர்த்ததாக கூறப்படுகிறது. மற்றொரு புராணக்கதையில் தவம் செய்த, சப்தரிஷிகள் என்னும் ஏழு முனிவர்களுக்கு சிவன் ஆசிவழங்கினார்; இந்த முனிவர்கள் ஆசிபெற்ற இடம்தான் கோவாவில் உள்ள சப்தகோட்டீஸ்வர் என அழைக்கப்படுத் இடம் எனப்படுகிறது. மேலும் சிவன் பார்வதியுடன் ஏற்பட்ட ஒரு மனத்தாங்களுக்குப் பிறகு இங்கு தற்காலிகமாக குடி இருந்ததாக நம்பப்படுகிறது. மற்றொரு புராணத்தின்படி கிருஷ்ணர் மகத மன்னனான ஜரசந்தனை, கோவாவின் கோம்மன்சல் மலை மீது தோற்கடித்தார் என்று கூறப்படுகிறது. (பார்க்க: ஹரி வம்ஷ புராணம்) [2]
கிமு. 2200 இல் சுமேரியர் வருகை
கோவா குறித்த முதல் எழுதப்பட்ட குறிப்பு சுமேரிய ஆப்பெழுத்துக்களில் எழுதப்பட்டதாகும் இதில் கோவா குபியோ (Gubio) எனக் குறிப்பிடப்படுகிறது. இது கி.மு. 2200 ஐ ஒட்டிய காலகட்டமாகும் இக்காலகட்டத்தில் சுமேரியர்கள் கோவாவுடன் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தனர். பல சுமேரியர்கள் கோவா மற்றும் கொங்கன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினர். பின்னர் கி.மு.1775 காலகட்டத்தில் போனீசியர்கள் கோவாவில் பெருமளவில் குடியேறினார்கள். பல ஆப்பெழுத்துப் பலகைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன சுமேரியர்களால் உள்ளூர் சுங்க முறை மாற்றியமைக்கப்பட்டதாகவும், அவர்களின் பாணியில் கோவில் கட்டிடக்கலை, தேவதாசி முறை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது; மேலும் சுமேரியர்களின் மொழி, சாதி அமைப்பு போன்றவற்றின் தாக்கம் ஓரளவிற்கு நடைமுறையில் உள்ளன. கோவாவில், சுமேரியர்களின் செல்வாக்கை பொழுதுபோக்கு மற்றும் பிராந்திய விளையாட்டுகளில் காணலாம்.[3]
காவகரி அமைப்பும் தன்னாட்சியும்



கோவாவின் கிராம நிர்வாக அமைப்பில் காவகரி என்று அழைக்கப்பட்ட உள்ளூர் சிலவர் ஆட்சி சனநாயகமானது சுமேரிய மதவாத சனநாயகத்தின் தாக்கத்தால், உருவானது. இதன்படி விவசாய நிலங்கள் கூட்டாக கிராமவாசிகளின் குழுவுக்குச் சொந்தமானதாக இருந்தது, அவர்களுக்கு நிலத்தை குத்தகைக்கு ஏலத்தில் விட உரிமை பெற்றிருந்தனர், இதனால் கிடைக்கும் வாடகை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது, எஞ்சியவை காவகரி குழுவினரால் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது. சுமேரியர்கள் பார்வையில், கிராமத்தில் உள்ள நிலமானது கிராமத்தின் தெய்வத்துக்குச் சொந்தமானது, இதுவே காவகரி அமைப்பின் முதன்மை அம்சமாக இருந்தது. கிராமத்தின முதன்மை குலதெய்வ கோவிலே அனைத்து செயல்பாடுகளின் மையமாக இருந்தது. கிராமங்களில் அதன் நில விவரம், அதன் மேலாண்மை, சமூக, சமய, கலாச்சார தொடர்பு ஆகியவற்றோடு கிராமம் கிராமமாக நிலங்கள் திட்டவட்டமான எல்லைகள் கொண்டிருந்தன. இதனால் காவகரி அமைப்பானது கோவாவில் கோவாவா மாநிலம் தனக்கான அரசியல் சட்டத்தை அமைத்துக்கொண்ட காலம்வரை நீடித்து இருந்தது.[4] கோவா பிராந்தியத்தில் எந்த மன்னர் ஆட்சி இருந்தாலும் பிராந்தியத்தில் அதற்குமுன் இருந்த காவகரி சனனாயகமுறை மாறாமல் நிலைத்து இருந்தது.
பிற்காலப் புலப்பெயர்வுகள்
இரண்டாம் குடியேற்ற அலை கி.மு. 1700 மற்றும் 1400 க்கு இடையே இடையே சிறிது ஏற்பட்டது. இந்த இரண்டாவது குடியேறிகள் தென் இந்தியாவின் தக்காண பீடபூமியைச் சேர்ந்தவர்களாவர். இவ்வாறு பல கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், மதங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றின் கலப்புகள், துவக்கக்கால கோவாவின் சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின.[5]
போர்ச்சுக்கீசியர் ஆட்சியில்
Oda Nobunaga swivel breech loading gun
16 ஆம் நூற்றாண்டு தயாரிப்பான போர்ச்சுக்கல் கோவாலைச் சேர்ந்த துப்பாக்கி இது காலிபர்: 95எம்.எம், நீளம்: 2880எம்.எம். உடையது இது சப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
Goa Market Place 1583
1583 இல் கோவா சந்தை
வாஸ்கோ ட காமா ஒரு இளைஞராக போர்த்துகீசியக் கடற்படையில் சேர்ந்தார், அங்கு அவர் கடற்படை அறிவு, போர்த்திறம் ஆகியவற்றைக் கற்றார்.[6] ஒரு வருடம் கழித்து, 1497 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட்டுபிடித்து கேரளத்தின் கோழிக்கோட்டில், வந்து இறங்கினார், அதன்பிறகு அரபு வணிகர்களின் ஏகபோகத்தை உடைத்தார்.

1510 இல், போர்த்துகீசிய அட்மிரல் அபோன்சோ டி அல்புகெர்க்கே உள்ளூர் தலைவர் திம்மையாவின் உத்தரவின் பேரில் கோவாவைத் தாக்கினர். நகரத்தை இழந்த அதன் முன்னாள் ஆட்சியாளரான பிஜாப்பூர் முஸ்லீம் மன்னரான இஸ்மாயில் அடில் ஷா, சிலகாலத்துக்குப்பின் நவம்பர் 25 அன்று புதுப்பிக்கப்பட்ட படைபலத்துடன் திரும்பினார்.[7] ஒரு நாளுக்கு உள்ளாகவே, கோவாவை மீண்டும் போர்த்துகீசியக் கப்பற்படை கோவாவை இஸ்மாயில் அடில் ஷா மற்றும் அவரது ஒட்டோமான் கூட்டாளிகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றியது, போரின்போது, தப்பிக்க முயன்ற போது, என நகரில் 9,000 முஸ்லீம் பாதுகாவலர்கள் 6,000 பேர் இறந்தனர் என்று மதிப்பிடப்பட்டது, மீதமுள்ள படைகள் டிசம்பர் 10 ம் திகதி சரணடைந்தன.[8] துவக்கக்கால எதிர்ப்புகளால் அல்புகுவர்க் திகைப்பிற்கு ஆட்பட்டார் என்றாலும் பின்னர், இந்து சமய மக்களின் ஆதரவைப் பெற்றார்.

அண்டை சக்திகளால் கோவா அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளானபோதும்,.கோவா, போர்த்துகீசிய இந்தியாவின் மையமாக ஆனது. நாளடைவில் அண்டை அரசாட்சிகளுடன் இணக்கம் காண்பதில் வெற்றி கண்டது; குசராத் சுல்தான் மற்றும் கோழிக்கோடு நாடு ஆகியோருக்கு கூட்டணியாக இருக்கலாம் என்றும் உள்ளூரில் சலுகைகள் அளிப்பதாகவும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு தங்கள் ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டனர்.
"Plan de Goa", in Histoire générale des voyages,1750
1750 இல் கோவாவின் வரைபடம்
1947 இல் இந்தியா விடுதலைப் பெற்றது, ஆனால் தொடர்ந்த கோவா போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டின் கீழே இருந்துவந்தது. கோவாவை அதன் உடமைகளுடன் சேர்த்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு ஜவகர்லால் நேருவின் அரசு வலியுறுத்தியது. எனினும், போர்ச்சுகல் இதற்கு மறுத்துவிட்டது. மாறாக, பிரஞ்சு இந்தியாவை ( புதுச்சேரி) பிரஞ்சு நாடு அதன் உடமைகளுடன் ஒப்பீட்டளவில் இந்தியாவிடம் விரைவில் ஒப்படைத்தது.[9][10]
1954 இல் நிராயுதபாணியான இந்தியர்களால்[11] சிறிய நிலப்பகுதிகளான தாத்ரா மற்றும் நகர் அவேலி எடுத்துக்கொள்ளப்பட்டது.
1955 ஆம் ஆண்டு இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளும் சோஷலிஸ்ட்டுகளும் போர்ச்சுக்கல்லுக்கு எதிராக சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்யாகிரகிகள் கோவாவுக்குள் நுழைந்தபோது, அவர்களில் குறைந்தது 20 பேர் போர்த்துகீசிய ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.[12]
பின்னர் அதே ஆண்டில், சத்தியாக்கிரகிகள், டிரக்கால் கோட்டையைக் கைப்பற்றி இந்தியக் கொடியை ஏற்றினர். இதிலும் பல இறப்புகள் ஏற்பட்டன. 1 செப்டம்பர் 1955 அன்று, கோவாவில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது; தனது அரசாங்கத்தால் கோவாவை போர்த்துகீசியர்கள் வைத்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று நேரு அறிவித்தார். பின்னர் போர்த்துகீசியர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தும் முயற்சியாக, கோவா, தாமன், டையூ ஆகியவற்றை இந்தியா முற்றுகை இட்டது, இந்த முற்றுகையைக கடந்து பயணங்களை மேற்கோள்ள கோவாவுக்கு போர்ச்சுக்கல் தனது சொந்த வானூர்தி நிறவனத்தின் வானூர்திகளை வழங்கியது
இந்தியாவுடன் கோவா
1961 திசம்பர் 18 அன்று அன்று, இந்தியத் துருப்புகள் கோவாவின் எல்லையைக் கடந்து உள்ளே நுழைந்து, விஜய் நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த படை நடவடிக்கையில் முப்பத்தாறு மணி நேரத்துக்குமேல் நிலம், கடல், வான் தாக்குதல்களில் ஈடுபட்டனர்; இதனால் போர்த்துகீசியப் படைகள் நிபந்தனையின்றி திசம்பர் 19 அன்று சரணடைந்தன. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா இந்தியாவின் இந்தப் போர் நடவடிக்கையைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் கண்டனத் தீர்மானத்தை முன்மொழிந்தது, ஆனால் சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ அதிகாரத்தால் இம்முயற்சியைத் தடுத்தது. இந்தியா கோவாவைக் கைப்பற்றிய பிறகு கோவா பிரதேசம் ஐந்து மாதங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. அதன்பிறகு நடந்த வாக்கெடுப்பில் கோவா வாக்காளர்கள் தன்னாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர், இதைத் தொடர்ந்து கோவா இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியாக ஆனது. 1987 இல் மாநிலத் தகுதியை அடைந்தது.
கோவா தன் விடுதலை நாளாக ஒவ்வோராண்டும் திசம்பர் 19 ஐ மாநில அரசு விடுமுறையுடன் கொண்டாடிவருகிறது.