Showing posts with label GEM. Show all posts
Showing posts with label GEM. Show all posts

Wednesday, 12 August 2020

ABUL FAZL ,ONE OF NINE MINISTER ( GEM) BORN 1551 JANUARY 14-1602 AUGUST 12



ABUL FAZL ,ONE OF NINE MINISTER ( GEM) BORN 1551 JANUARY 14-1602 AUGUST 12


.அபுல் ஃபசல் (Abu'l Fazl ibn Mubarak, பாரசீக மொழி: ابو الفضل, ஜனவரி 14, 1551 - ஆகஸ்ட் 12, 1602) பேரரசர் அக்பர் அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் ஒண்மணிகளுள் (நவரத்தினங்கள், Nine Jewels) ஒருவர். இவரின் தந்தையார் ‌ஷேக் முபாரக். இவரது சகோதரர் புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர் அபுல் ஃபைஸி.

1574 ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய நண்பராக தன் இறுதிநாள் வரை இருந்தார். இவர் அக்பரின் வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை, அக்கால இலக்கிய சமயத் தத்துவங்கள் குறித்து மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதினார். முதல் இரண்டு பாகங்கள் அக்பர் நாமா என்ற பெயரிலும் மூன்றாவது பாகம் அயினி அக்பரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

அக்பரின் மகன் சலீம் (ஜஹாங்கீர்) அரியணை ஏறுவதை ஃபசல் எதிர்த்ததாகத் தெரிகிறது. அத்தோடு இளவரசன் சலீமுக்கு அபுல் ஃபசலின் செல்வாக்கு கண்ணில் கிடந்த துரும்பாக உறுத்தியது. துரும்பை அகற்றத் திட்டமிட்ட சலீம் பீ(வீ)ர்சிங்க் என்பவனைக் கொண்டு 1602 ஆம் ஆண்டு இவர் அரசுமுறைப் பயணமாக ஆக்ரா நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது அவரது தலையைத் ‌துண்டிக்கச் செய்தான். வெட்டப்பட்ட அவரது தலை அலகாபாத்தில் இருந்த சலீமிடம் அனுப்பப்பட்டது[1][2][3].

அவருடைஅய முழுப் பெயர் அபு இல் பாசல் இபின் முபாரக். அவர் அக்பர் அரசவையின் நவரத்னங்களில் ஒருவர். அவருடைய சகோ தரர் பைஜி (Faizi), அக்பரின் ஆஸ்தானப் புலவர். அவர்கள் புஸ்தகங்களை பாரஸீக மொழியில் யாத்தனர்.

இத்துடன் நூற்றாண்டுக்கு முன்னர் அரும்பொருட் திரட்டு என்னும் புஸ்தகத்தில் மதுரை எம்.கோபாலய்யர் மொழிபெயர்த்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ!

அக்பர், மக்களை சந்தோஷப்படுத்துபவனே ராஜா என்னும் கொள்கை உடையவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர். ஈஸ்வரனுக்குத் திருப்தியுடைய காரியங்களையே செய்பவர்.

2.அகம்பாவமோ கோபமோ இல்லாதவர்; ஆனால் பேரறிவு உடையவர். அவரைப் பார்ப்பவர்கள் சூரியனுக்கு முன்னால் நாம் மின்மினிப்பூச்சி போல என்று நினைப்பர்.

3.இரவு தூங்குவதற்கு முன்னர், விநோதக் கதைகள் சொல்லச் சொல்வார். எந்த மதத்தையும் தூஷிக்க மாட்டார். கேலி கூட பேச மாட்டார்.

4.நான்கு நேரங்களில் ஆத்ம சோதனை செய்து கொள்ளுவார். சூரிய உதயத்துக்கு முன்னால், சூரியன் உச்சிக்கு வரும் வேளை, படுகடலில் சூரியன் பாயப்போகும் நேரம், நள்ளிரவு 12 மணி ஆகிய நேரங்களில் தான், செய்வது சரியா இல்லையா என்று சிந்திப்பார்.

5.அவர் பெரும்பாலும் மாம்ஸ போஜனத்தைத் தவிர்ப்பார்; பல மாதங்களுக்கு மாம்சத்தைப் பார்க்காமலும் இருப்பார். தீபங்களை இறைவனின் ஜோதி வடிவம் என்று கருதி வழிபடுவார்

6.பெரும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூசுவார்.

7.அவருக்கு சிற்றின்பத்திலும் ஸ்த்ரீலோலனத்திலும் விருப்பமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்.

8.நித்திரை செய்யும் காலம் வெகு அற்பம்; இராப்பகலாக ராஜ்ய காரியத்திலும் பகவத் தியானத்திலுமே காலம் கழிப்பார்

9.தத்துவ சாஸ்திர விற்பன்னர்களும் மகமதிய சூபி (sufi) மஹான்களும் தங்கு தடையின்றி உள்ளே நுழைவர். அவர்க ளை மரியாதையுடன் ஆஸனத்தில் அமர்த்தி விவாதிப்பார்.

10.பழைய சம்பிரதாயங்களை முரட்டுத்
தனமாக ப் பின்பற்றாமல் நூதனமாக மாற்றுவார்; இளைஞர்களும் அவற்றைப் பின்பற்றுவர். அதற்குத் தக புதிய சட்டங்களை இயற்றுவார்.

11.இராக்கலத்தில் இலாகா வாரியாக உத்தரவுகளைப் போடுவார். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கையில் சகல வாத்ய விற்பன்னர்களும் வந்து இன்னிசை விருந்து அளிப்பர். அதைக் கேட்டுவிட்டு சூர்யோதய காலத்தில் சன்மானம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்வார். அவருடன் கூர்னிஷ் தொ ழுகையில் ஈடுபட்டுவிட்டுப் போவர்

12.பின்னர் பத்தினிமார்களும், மங்கள விலாஸ காதலிகளும் வந்து தண்டம் சமர்ப்பிப்பார்கள். அன்போடு எல்லோருடைய நலத்தையும் விசாரிப்பார்.

13.ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்; காலைக் கடன்களை முடித்தவுடன் ‘ஜரோகா’வில் அமர்ந்து எல்லா திகாரிகள், துருப்புகளையும் சந்தித்து நலன் விசாரிப்பார்.

காலை ஒன்பது மணிக்கு ‘தவலத் கானா’வில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார். யாரும் சிபாரிசு இல்லாமல் நேரே சென்று மனுக் கொடுக்கலாம். உடனே படித்து குறை தீர்க்க உத்தரவிடுவார்.

15.சக்கரவர்த்தி கொலு கூட்டுவதானால் பேரிகை மூலம் அறிவிப்பர். அப்போது எல்லோரும் கூடுவர்; தோட்டி முதல் தொண்டைமான் வரை வந்தவுடன் அந்தஸ்துக்கு ஏற்ப வரிசையில் நிற்பர். தட்டார், கொல்லர், நெசவாளர் எல்லோரும் கூர்னீஷ் தொழுகைக்கு தயாராக இருப்பர். உயர் அதிகாரிகள் அறிக்கை சமப்பிப்பர்.

மல்யுத்தம், சிலம்பம் முதலியன நடக்கும்; கூர்னீஷ், தஸ்லீம் என்ற இரண்டு வகையில் மக்கள தொழுவர்.
தஸ்லீம் என்பது தன் பிதா முன்னிலையில் தான் தெரியாமல் செய்த வணக்கம் என்றும் அதைத் தன் பிதா பாராட்டியவுடன் அதுவும் வழக்கத்தில் வந்தது என்றும் அக்பர் கூறுவார்.


18.அக்பரின் தத்துவ நம்பிக்கையை அபுல் பாஸல் விவரிக்கிறார்
19.அக்பருக்கு சிறு வயது முதலே அற்புத சக்திகள் உண்டு என்றும் இது அனைவரும் அறியும்படி வெளிப்படும் என்றும் அபுல் பாஸல் கூறுகிறார்.

20.சிலருக்கு தத்துவ விசாரம் சொல்லி கை தூக்கி விடுவார். சிலருக்கு அவர் கொள்கைக்கு விரோதமாகப் பேசுவார். சிலருக்கு அவரவர் இஷடப்படி பாடம் சொல்லுவார்.
21.சக்ரவர்த்திக்கு பல சிஷ்யர்கள் உண்டு; ஒரு மண்டலம் சநயாசிகளுக்கு சுஷ்ருசை செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இவருடைய சந்நிதி விஷேஷத்தாலும், ஸ்பர்சத்தாலும், போதனா முறையாலும் உடனே ஞானம் பெறுவர். இவரை சந்திக்கும் நானாவித தொழிலாளர்களும் பரவித்தை ஞானத்துடன் திரும்புவர்.

22.பலரும் தெய்வத்துக்குப் பதிலாக இவருக்கு பிரார்த்தனையை சமர்ப்பிப்பர். அவர்கள் காணிக்கையாக வைத்திருந்த பொருள்களை இவர் முன் வந்து கொட்டுவர். மன்னர், ராஜ்யத்தைப் பார்க்கவும் வேட்டையாடவும் செல்லுகையில் அதுவரை மன்னருக்குக் காணிக்கையாக வைத்திருந்த காணிக்கைகளை, தொலை தூர கிராம மக்கள் அவரிடம் சமர்ப்பிப்பர்.

23.சக்ரவர்த்தி ஒரு மஹான்; அவர் சித்த புருஷர்; வியாதி உடையோர் இவரைப் பிராத்தித்து சுமகமடைவர்; பிள்ளைப்பேறு இல்லாதோர் அக்பரிடம் பிராத்தித்து மகப்பேறு அடைந்தனர். விரோதிகள் இவர் முன்னிலையில் வந்து பரஸ்பர மித்திரர் ஆயினர். யார் யார் என்ன வேண்டினரோ அவற்றையெல்லாம் அடைந்தனர்.

24 அவர் அற்புத சக்திகள் உடையவர். ஆகையால் மக்கள், ஜலத்தைக் கொண்டு வந்து மந்திரித்துத் தர வேண்டுவர். அவர் அந்த நீர்க்குடத்தை வாங்கி, சூரிய புடமிட்டு, மூன்று முறை வாயால் ஊதிக் கொடுப்பார். அகபர் மந்திரித்துக் கொடுத்த ஜலத்தால் பலனடந்தோர் பலர். ஆனால் ஞான த்ருஷ்டியால் பார்த்து யாருக்கு ஊதித் தர வேண்டுமோ அவருக்கு மட்டுமே அளிப்பார்.

ஒரு முறை ஒரு துறவி வந்து மஹாத்மாவே என் இதயத்தில் ஏதேனும் நல்ல பொருள் இருக்குமானால் அதை வெளிக் கொணர்ந்து எனக்கருள் புரிக என்று வேண்டினான். அகபரும் அப்படியே செய்தார். அவன் வாயில்படிக்குச் செல்லுகையிலேயே மூர்ச்சையாகி சமாதி ஆகி விட்டான்.

26 யாரேனும் உபதேசம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்? நானே கற்க வேண்டி உளதே என்பார். அதையும் மீறி அவன் போகாமல் காத்திருந்தால் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் அவனுக்கு உபதேசம் சொல்லி கடைத் தேற்றுவார்.

27.அக்பரின் அற்புத சக்திகளைக் கண்டவர்கள் அவரைத் தெய்வமாகக் கருதி வணங்கினர்.

இவரிடம் உபதேசம் பெற வருபவன் தலைப் பாகையைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என் அகம்பாவம் தீய குணங்களையெல்லாம் விட்டுவிட்டேன் எனக்கருள்க என்றவுடன் அவரே தலைப் பாகையை அவன் தலையில் வைத்து ஒரு தங்க காசைக் கையில் கொடுத்து உனக்காக பகவானைப் பிரார்த்தித்து விட்டேன் என்பார்.

29.அவர் வெகு வினயத்தோடு தத்துவ சாஸ்திரங்களைப் பெரிய ஞானிகளோடு விவாதிப்பார். அக்பருடைய அத்தனை தெய்வீக லீலைகளையும் எழுத இங்கு இடமில்லை. நான் மட்டும் உயிருடன் இருந்தால் அவைகளை தனி புஸ்தகமாகவே எழுதுவேன்.

30.பல ஒழுக்க விதிகளையும் அக்பர் போதித்தார்; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘பகவானே பெரியவர்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்ல வேண்டும் அதைக் கேட்பவன் ‘பகவானின் மஹிமையே மஹிமை’ என்று பதில் சொல்ல வேண்டும்; ஒவ்வொருவனும் பிறந்த நாளன்று விருந்து கொடுக்க வேண்டும்; சக்திக் கேற்ப பிச்சையிட வேண்டும்

ஒவ்வொருவரும் மாமிசம் புசிப்பதைக் கைவிட வேண்டும் அல்லது புனித தினங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் (இப்படித் தவிர்த்தால் எவரும் 45 நாட்களுக்கு மேல் மாமிசம் சாப்பிட முடியாது)

தானே கொன்ற எந்தப் பிராணியையும் யாரும் சாப்பிடக்கூடாது. வேடர்கள், கசாப்புக் கடைக்காரர்களுடன் யாரும் உண்ணனக் கூடாது.

கர்ப்ப ஸ்த்ரீக்கள், மலடிகள், பருவமடையாத கன்னிப் பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் பல ஒழுக்க விதிகளை அக்பர் பிரபலப் படுத்தினார்”.
இவ்வாறு அபுல் பாஸல், அயினி அக்பரியில் செப்புகிறார்.
.

Sunday, 20 May 2018

AROOR DAS ,DIALOGUE WRITER, GEM OF TAMIL CINEMA





AROOR DAS ,DIALOGUE WRITER,
GEM OF TAMIL CINEMA  


ஆரூர்தாஸ் போன்ற மாமனிதர்களோடு பழகும் பாக்கியம் - Ravi Prakash

என் மதிப்புக்குரிய வி.ஐ.பி. நண்பர்களில் ஒருவர் - திரைக்கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள். 500 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதி, கின்னஸ் ரிக்கார்டில் தன் பெயரைப் பதித்தவர். ஆனால் ஆச்சரியம்... நேரில் பழகும்போது அந்தப் பெருமிதம், கர்வம் எதுவும் இன்றி, மிக எளிமையாக, நமக்குச் சரிசமமாகப் பழகுபவர்.

கடந்த ஏழு ஆண்டுகளாகத்தான் எனக்கு இவரோடு அறிமுகம். முதல் முறை பார்த்தபோது, “என் பெயர் ஆரூர்தாஸ். பல திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியிருக்கிறேன். என் பெயரை நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஆரூர்தாஸ் என்கிற பெயரை எனக்கு ‘தெய்வ மகன்’ காலத்திலிருந்து பரிச்சயம். தீவிர சிவாஜி ரசிகராக இருப்பவர் யாரும் ஆரூர்தாஸ், பாலமுருகன் ஆகிய இரண்டு கதை வசனகர்த்தாக்களின் பெயர்களைக் கடந்து வந்திருக்கவே முடியாது. அப்படியிருக்க, எளிமையான கதர்ச் சட்டையும் ஒரு சாதாரண மில் வேட்டியுமாக என் எதிரே அமர்ந்திருப்பவர் அந்த ஆரூர்தாஸேதானா என்று என்னால் நம்பவே முடியவில்லை.

சிவாஜி கணேசன் பற்றித் தான் எழுதிய கட்டுரைகளை விகடன் பிரசுரத்தில் ஒரு புத்தகமாகப் போடுவதற்காக வேண்டி அவர் வந்திருந்தார். நேரே விகடன் பிரசுரத்தில் அவர் தொடர்பு கொண்டிருந்தால், அவரைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் எனக்குக் கிட்டாமலே போயிருக்கக்கூடும். யாரை அணுகுவது என்று தெரியாமல், ஆனந்த விகடன் என்று விசாரித்து வந்தவரை நான் சந்திக்கும்படிச் செய்தது இறைவனின் திருவுளம்தான்.

வந்தவர், புத்தகம் தொடர்பான விஷயங்களைத் தவிர, வேறு பல விஷயங்களை அந்த முதல் சந்திப்பிலேயே மனம் விட்டுப் பேசினார். சிவாஜிக்கும் அவருக்கும் உண்டான நட்பு, ‘பெற்றால்தான் பிள்ளையா’ என எம்.ஜி.ஆரின் பாணிக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான கதையை அவருக்காக உருவாக்கித் தந்த சூழல், நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகருடனான நட்பு என ஏகப்பட்ட விஷயங்களை அன்று அவர் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஆர்.எஸ். மனோகர் தந்ததாகச் சொல்லி சில ருத்திராட்சங்களை அவர் அன்று காண்பித்தார். ருத்திராட்சங்கள் இயற்கையில் விளையக்கூடியவை. அவற்றில் திரிசூலம், ஓம் ஆகிய வடிவங்கள் இருப்பதைக் காண்பித்தார். இன்னொரு ருத்திராட்சத்தில் சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு, பிறை நிலா ஆகிய வடிவங்களும் இருந்தன. காஞ்சிப் பெரியவர், மனோகருக்கு அன்புடன் அளித்த இந்த அதிசய, அபூர்வ ருத்திராட்சங்களை, மனோகர் தன் அன்புக்குரிய ஆரூர்தாஸுக்கு அளித்திருக்கிறார்.

மனோகர் பற்றி ஆரூர்தாஸ் அன்று சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் நெகிழ வைத்தது. தனக்கு ஒரு நாடகம் எழுதித் தரும்படி ஆரூர்தாஸைக் கேட்டுக் கொண்டே இருப்பாராம் மனோகர். ஆனால், அந்நாளில் ஆரூர்தாஸ் இருந்த மும்முரத்தில், மனோகரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனதாம். இம்மாதிரி நிலையில் ஆரூர்தாஸ் ஒரு புத்தகம் எழுதினார். (ஏழு வருடம் கழித்து எழுதுவதால், அந்தப் புத்தகத்தின் பெயர் மறந்துவிட்டது.) அதற்கு இயல், இசை, நாடகம் என மூவரிடம் அணிந்துரை கேட்க விரும்பிய ஆரூர்தாஸ் (இசைக்கு இளையராஜாவிடம் அணிந்துரை கேட்டார் என்று ஞாபகம். இயலுக்கு யார் என்று மறந்துவிட்டது.) நாடகத் துறைக்கு ஆர்.எஸ்.மனோகரிடம் அணிந்துரை கேட்டிருக்கிறார்.

அவரும் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட தேதியில் எழுதித் தருவதாகச் சொன்னாராம். ஆனால், அன்றைய தினம் தரவில்லை. ஆரூர்தாஸ் போன் செய்து கேட்க, இரண்டு நாளில் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இரண்டு நாள் கழித்தும் மனோகர் அணிந்துரை தரவில்லை. அவர் நாடகம் கேட்டுத் தான் எழுதித் தராமல் சாக்குப்போக்கு சொல்லித் தட்டிக் கழித்ததால், தம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறார்போலும் என்கிற எண்ணம் ஆரூர்தாஸுக்கு. எனவே, கொஞ்சம் கோபமாகவே ‘அணிந்துரை தரமுடியுமா, முடியாதா?’ என்பது போல் கேட்டிருக்கிறார்; ‘முடியாதென்றால் வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்கிறேன்’ என்கிற தொனியில். “காலையில் அணிந்துரை உங்கள் வீட்டில் இருக்கும்” என்றாராம் மனோகர்.

அதன்படியே, மறுநாள் காலையில், “அணிந்துரை ரெடி! வந்து வாங்கிப் போகலாம்” என்று மனோகரிடமிருந்து போன்கால். ஆரூர்தாஸே நேரடியாகப் போயிருக்கிறார், அணிந்துரையை வாங்கி வர. ஆனால், மனோகரின் வீடே ஒரு இறுக்கத்தில் இருந்ததைப் பார்த்திருக்கிறார். மனோகர் அணிந்துரையைக் கொடுத்து, அங்கேயே படித்துப் பார்த்து அபிப்ராயம் சொல்லும்படி ஆரூர்தாஸைக் கேட்டிருக்கிறார். அதைப் படிக்கப் படிக்க, ஆரூர்தாஸின் புத்தகத்தில் உள்ள அருமையான இடங்கள் அனைத்தையும் மறக்காமல் குறிப்பிட்டுச் சிலாகித்து எழுதி, மிக அற்புதமான ஒரு அணிந்துரையை எழுதியிருக்கிறார் மனோகர் என்பது புரிந்ததாம். ஆரூர்தாஸ் நெகிழ்ச்சியோடு மனோகரின் கையைப் பற்றி நன்றி சொல்ல, “ஆரூரா! உனக்கு என் மேல கோபம் இருக்கலாம், நான் லேட் பண்ணிட்டேன்னு. எனக்கு நாடகம் எழுதித் தராத கோபத்தை இதுல காண்பிச்சுட்டேன்னுகூட நீ நினைச்சிருக்கலாம். ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சுப்பா!” என்று கரகரத்த குரலில் சொல்லத் தொடங்கியிருக்கிறார் மனோகர்.

“சில நாட்களுக்கு முன்னே என் அன்புக்குரிய அக்கா இறந்துட்டாங்க. என்னைத் தாய் போல வளர்த்தவங்க அவங்க. அக்கா மறைவினால நான் மனசொடிஞ்சு கிடந்தேன். எதுலேயுமே எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லே. நீ போன் பண்ணிக் கேட்டபிறகுதான் ஞாபகம் வந்துது. அதான், இனிமேலும் தாமதிக்கக் கூடாதுன்னு நேத்து ராத்திரி உட்கார்ந்து மொத்த புஸ்தகத்தையும் படிச்சு முடிச்சுட்டு, கையோட அணிந்துரை எழுதி வெச்சுட்டேன்! லேட்டா கொடுத்ததுக்கு ரொம்ப ஸாரிப்பா!” என்றாராம் மனோகர்.

“அதை ஏன் கேக்கறீங்க ரவி, அவர் இப்படிச் சொன்னதும் நான் அப்படியே ஆடிப் போயிட்டேன். இந்த நல்ல மனுஷனையா கோவிச்சுக்கிட்டேன்னு என்னை நானே சபிச்சுக்கிட்டேன். மனோகர் மாதிரியான ஒரு மனிதாபிமான மனிதரைப் பார்க்கவே முடியாது!” என்று நெகிழ்ந்து சொன்னார் ஆரூர்தாஸ்.

அதற்குப் பிறகு, மனோகருக்காக ஆரூர்தாஸ் ஒரு நாடகம் எழுதித் தந்து, அதை மனோகர் குழுவினர் ரிகர்சல் எல்லாம் பார்த்து, கடைசியில் அதை மேடை ஏற்றுவதற்குள்ளாக மனோகர் மறைந்துவிட்டது ஒரு பெரிய சோகம்!

ஆரூர்தாஸ் அன்றைய முதல் சந்திப்புக்குப் பிறகு, பல முறை விகடன் அலுவலகம் வந்து என்னைச் சந்தித்திருக்கிறார். விகடனிலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரின் இரண்டாவது மகள் உஷா இறந்துபோனது ஒரு பெரிய சோகம். டீச்சராகப் பணியாற்றியவர் உஷா. ஆரூர்தாஸின் துக்கத்தில் பங்கு கொள்ள, அன்று அவரது தி.நகர் இல்லத்துக்கு நான் சென்றிருந்தேன். பின்னர், உஷாவின் ஆத்மா சாந்தியடைய சர்ச்சில் பைபிள் படித்து, பெயர்களை வாசிக்கும் நிகழ்ச்சிக்கும் சென்று கலந்துகொண்டேன். அன்னாரின் நினைவாக, குறிப்பிட்ட சில நெருங்கிய நண்பர்களுக்கு அன்றைய தினம் விருந்து அளித்தார் ஆரூர்தாஸ். அதிலும் கலந்து கொண்டேன்.

அடிக்கடி ஆரூர்தாஸ் என்னைக் குடும்பத்தோடு தம் வீட்டுக்கு விருந்துண்ண ஒரு நாள் வந்துபோகும்படி அழைப்பார். எனக்குத்தான் சூழ்நிலை வாய்க்கவில்லை.

சமீபத்தில் தி.நகர் வீட்டை விற்றுவிட்டு, வில்லிவாக்கம் நாதமுனி பகுதியில் புது பிளாட் வாங்கிக் குடியேறிவிட்டார். அங்கும் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கு முன், அவரது பேரன் வினோத் ஜேசுராஜுக்குத் திருமணம் என்று எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். “ரவிபிரகாஷ், அவசியம் என்னுடைய மகளையும் பேரப் புள்ளைங்களையும் அழைச்சுக்கிட்டு வந்துடுங்க!” என்றார் அன்பு ததும்பும் குரலில், என் மனைவியையும் என் குழந்தைகளையும் குறிப்பிட்டு. (ஆமாம், அவருக்கும் உஷா என்று ஒரு மகள் இருந்தார்தானே! என் மனைவி உஷாவும் அவருக்கு ஒரு மகள்தான்!)
அந்தத் திருமண வரவேற்பு வைபவம், சென்னை ஜீவா பூங்காவை ஒட்டியிருக்கும் மேம்பாலத்துக்குப் பக்கத்தில் உள்ள டி.சி.மேனர் ஹோட்டலில் நடந்தது. தரைக்குக் கீழே இரண்டாவது தளத்தில் நடந்த அந்த திருமண வரவேற்பில் முதல்வர் கலைஞர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகுமார், எஸ்.பி.முத்துராமன், ஏவி.எம்.சரவணன், நல்லி குப்புசாமி எனப் பலப்பல வி.ஐ.பி-க்கள் கலந்துகொண்டனர். அத்தனைப் பெரிய தலைகள் கலந்து கொண்ட விழாவில் எங்களையும் அன்போடு வரவேற்று உபசரித்ததோடு மட்டுமின்றி, மறுநாள் தொலைபேசியில் அழைத்து, குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டதற்கு எனக்கு நன்றியும் சொன்னார் திரு. ஆரூர்தாஸ்.

ஆரூர்தாஸ் போன்ற மாமனிதர்களோடு பழகும் பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நெஞ்சு நெகிழ நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

Ravi Prakash at Monday, May 31, 2010