Showing posts with label T.R.MAHALINGAM. Show all posts
Showing posts with label T.R.MAHALINGAM. Show all posts

Tuesday, 21 April 2020

T.R.MAHALINGAM , HIGH PITCH VOICE SINGER , LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21




T.R.MAHALINGAM , HIGH PITCH VOICE SINGER ,
LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21





நான் என்றுமே தொலைக்காட்சியின் யதார்த்த இசை நிகழ்ச்சிகளுக்கு (reality music shows) எதிரானவன். அதற்கான காரணங்களை முன்னரே எழுதியிருக்கிறேன். ஆனால் பல மொழிகளில் இந் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் என்னை அவற்றின் நடுவராக இருக்கச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை! அதற்குக் கொடுக்கப்படும் பணமும் உடனடியாகக் கிடைக்கும் புகழும் மிகவும் சபலமூட்டுபவைதான். ஆனால் நான் எப்போதும் திடமாகவே முடியாதென்று சொல்லிவிடுவேன். இந்தவகையான இசைப்போட்டி நிகழ்ச்சிகள் இசையுணர்வுக்குத் தீங்கானவை என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருக்கிறது என்றாலும் சில தருணங்களில் இந்நிகழ்ச்சிகளில் என்னை ஆச்சரியப்படுத்திய சில விஷயங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

முதல் ஆச்சரியம், ஒருமுறை இப்போட்டி ஒன்றில் வென்ற ஒரு 17 வயதுப் பாடகர் அவர் ஏ.எம். ராஜாவின் இசைக்கு அடிமை என்று சொன்னது. அதைப்பற்றி ஏ.எம்.ராஜா பற்றிய கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். இரண்டாவது ஆச்சரியம், சிறுவர் வரிசைப் போட்டியில் வெற்றிபெற்ற 13 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற பாடகன் அவனுக்குப் பிடித்தமான பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் என்று சொன்னது. ஒரு சிறுவனின் வாயிலிருந்து அதைக்கேட்பது மிக மிக ஆச்சரியம் அளித்தது. அந்தப் போட்டியின் முதல் சுற்றை நான் யூ டியூபில் (you tube) பார்த்தபோது அவன் மகாலிங்கத்தின் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ என்ற மரபிசை அடிப்படையிலான உச்சஸ்தாயிப் பாடலை எந்தவிதமான கருவியிசை உதவியும் இல்லாமல் மிகத்துல்லியமாகப் பாடினான்.

டி.ஆர்.மகாலிங்கத்தைப்பற்றி முதலில் நான் எங்களூரில் இருந்த வயதானவரான லூக்கோஸ் சேட்டனிடமிருந்துதான் கேள்விப்பட்டேன். ஒருமுறை நான் சமகாலத் திரையிசை பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “இப்போதுள்ள பையன்கள் பாடுவதெல்லாம் தண்ணீர்ப் பாட்டுகள். நீயெல்லாம் தியாகராஜ பாகவதரும் டி.ஆர்.மகாலிங்கமும் பாடிய அசலான கர்நாடக சங்கீதப் பாடல்களைக் கேட்க வேண்டும்.” அவர்களின் சிலபாடல்களை அவர் பலவீனமாக நகல்செய்து பாடியும் காட்டினார். டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் தன் கண்களாலேயே பார்த்தது உண்டு என்று சொல்லி சிறுவனான என்னை அவர் ஆச்சரியப்படுத்தினார்.

ஞான சௌந்தரி என்ற படத்தின் பொன்விழா கொண்டாட்டத்துக்காக அதன் கதாநாயகனான டி. ஆர்.மகாலிங்கம் கொச்சிக்கு வந்த போதுதான் லூக்கோஸ் சேட்டன் அவரைப் பார்த்தாராம். 1948ல் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு கிறித்தவ பக்திப்படம். மலையாளியான ஜோசஃப் தளியத் அதை இயக்கியிருந்தார். ஞான சௌந்தரியின் பாடல்கள் அக்காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் பெரும் புகழ்பெற்றிருந்தன.

டி.ஆர்.மகாலிங்கம் கொச்சி பத்மா ஹால் திரையரங்கில் கூடிய பல்லாயிரம் ரசிகர்கள் நடுவே பேசினார். அக்கால உச்ச நட்சத்திரமான டி.ஆர்.மகாலிங்கம் எப்படி அரங்கின் பால்கனியில் தோன்றி ரசிகர்களை நோக்கிக் கையசைத்தார் என்று லூக்கோஸ் சேட்டன் விளக்கினார். அழகனும் பாடகனுமாகிய தங்கள் கதாநாயகனை நேரில் கண்டதும் கூட்டமே போதை கொண்டது.

ஆனால் தொண்ணூறுகளில் சென்னைக்கு வந்தபின்னர்தான் நான் உண்மையில் டி.ஆர்.மகாலிங்கத்தைக் கேட்டு ரசிக்க முடிந்தது. எச்.எம்.வி நிறுவனம் தயாரித்த Legends-TR Mahalingam என்ற இசைத் தொகுப்புக்கு ஒரு விளம்பரப்படம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அவரது பெரும்பாலான பாடல்களை அப்போது நுட்பமாகக் கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பல பாடல்களின் காட்சி வடிவங்களையும் பார்க்க முடிந்தது. நடிகராக டி.ஆர்.மகாலிங்கம் என்னைக் கொஞ்சமும் கவரவில்லை. ஆனால் கர்நாடகச் செவ்வியல் ராகங்கள் முதல் எளிய மெல்லிசை மெட்டுகள் வரை, பலவகையில் அமைந்த அவரது பாடல்கள், அவரது அபாரமான பாடும் திறனை எடுத்துக்காட்டி என்னை பிரமிக்கச்செய்தன.

கடந்தகாலத்தில் தமிழ்த் திரையுலகம் கண்ட பாடக நடிகர்களில் எம்.கெ.தியாகராஜ பாகவதர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் 1950களுக்கு முந்தைய திரைப்பாடல்களை ஆய்வுசெய்யும் திரைஆய்வாளர்கள் பாடக நடிகர்களில் அனைத்துத் தளங்களிலும் பாடி, சிறப்பாக நடிக்கவும்செய்த நட்சத்திரம் பி.யு.சின்னப்பாதான் என்று சொல்கிறார்கள். டி.ஆர்.மகாலிங்கம் திரையுலகுக்கு நடிகராக வழிதவறி வந்த மிகச்சிறந்த பாடகர். தியாகராஜபாகவதர், சின்னப்பா போன்றவர்களால் நிறுவப்பட்ட கர்நாடக சங்கீத பாணியிலான திரையிசைப் பாடல் மரபை அவர் முன்னெடுத்தார்.

பின்னணிப்பாடல்களும் ஒலிப்பதிவு நுட்பங்களும் வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு நாடகம் அல்லது சினிமாவின் வெற்றி என்பது அதில் எத்தனை பாடல்கள் உள்ளன, கர்நாடக சங்கீதத்தில் அமைந்த அப்பாடல்களைப் பாடக நடிகர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதைச் சார்ந்தே இருந்தது. இந்திய மேடையிலும் திரையிலும் இசையே மையமாக இருந்த ஒரு காலம் அது. அன்று பாடகர்களே நட்சத்திரங்கள்.

தென்னிந்தியாவில் நாடக மேடையில் இருந்து பெரும் பாடக நடிகர்கள் உருவானார்கள். அவர்களில் முதல் உச்ச நட்சத்திரம் எஸ்.ஜி.கிட்டப்பாதான். அவர் ஒரு அபாரமான பாடகர். நல்ல நடிகரும் கூட என்கிறார்கள். கர்நாடக சங் கீதத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல அவரது நாடகங்களால் முடிந்தது. தேவாமிர்தவர்ஷிணி போன்ற அபூர்வமான ராகங்களை அவருக்கு முன்னர் எவரும் அந்த அளவு விரிவாகப் பாடவில்லை என்று சொல்கிறார்கள்.

அவரது குரலை நாடகங்களிலும் இசைத்தட்டுகளிலும் கேட்டு ரசித்த ரசிகர்கள் அவரது இழுத்துச்செல்லும் சில்லிட்ட குரலின் தீவிரத்தை மறப்பதேயில்லை. துரதிருஷ்டவசமாக எஸ்.ஜி.கிட்டப்பா 1933இல் தன் 28ஆவது வயதில், பேசும் சினிமா வருவதற்கு முன்னரே உயிர் துறந்தார். உச்சஸ்தாயியில் அதிரும் அவரது அபூர்வமான பாடுமுறையானது இசைக்கலைஞர்கள் நடுவே ஒரு தனிப் பாணியாகப் பெரிதும் செல்வாக்கு செலுத்தியது.

ஒலிப்பெருக்கிக் கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் பாடகர்கள் மிக உரக்கப் பாடி அனைவருக்கும் தங்கள் குரலைக் கேட்கும்படி செய்யவேண்டிய தேவை இருந்தது. ஆகவேதான் ஆரம்ப காலப் பாடகர்கள் உச்ச தொனியில் பாடுவதற்குத் தங்கள் குரலை, கடுமையான பயிர்ச்சிகள் மூலம் தயாரித்துக் கொண்டார்கள். மிகவும் பிற்பட்ட தொழில்நுட்பமும் ஏராளமான சிக்கல்களும் இருந்தாலும் அக்கால கட்டத்து பெரும் பாடகர்கள் அற்புதமான இசையை உருவாக்கினார்கள். இன்று நம்மிடம் தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமே உள்ளது. தூய கர்நாடக இசையில் தொடங்கி இன்றைய பாடலா, பேச்சா என்று அடையாளம் காண முடியாத உளறல்கள் வரையிலான நம் ஜனரஞ்சக இசையின் பரிணாமம் இசை ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்கிறது.

டி.ஆர்.மகாலிங்கத்துக்கு வருவோம். கிட்டப்பாவின் பாணியை டி.ஆர்.மகாலிங்கம் அளவுக்கு முன்னெடுத்துச்சென்றவர் எவரும் இல்லை. கிட்டப்பாவைப் போலவே டி.ஆர்.மகாலிங்கமும் அவரது பெரும்பாலான பாடல்களை அதி உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கிறார் என்றாலும் மிகத்தாழ்ந்த ஸ்தாயிகளில் பாடுவதிலும் அவருக்கு சிரமம் ஏதுமில்லை. ‘நானன்றி யார் வருவார்’, ‘கண்களின் வெண்ணிலவே’ போன்றவை அத்தகைய பாடல்கள். அவரது மகத்தான வெற்றிப்பாடலான ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ (மாலையிட்ட மங்கை) அதி உச்ச ஸ்தாயியில் தொடங்கி, மென்மையான இன்னிசை ஆலாபனையாகி, அதிலிருந்து துள்ளலான தாளத்தை நோக்கிச் செல்கிறது. டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல் உச்சக்கட்ட கம்பீரத்துடன் ஒலிக்கிறது.

அவரது குரல்வளம் பாடும் நுட்பம் போன்றவை அவரது மிகச்சிறந்த பாடல்களான ‘ஆடைகட்டி வந்த நிலவோ’ (அமுதவல்லி) போன்றவற்றில் வெளிப்படுகின்றன. அவரது சுருதி மிகமிகத் துல்லியமானது. சங்கதிகள் பற்பல எதிர்பாராத தன்மைகள் கொண்டவை. உதாரணமாக ‘காடுவிட்டு வந்த மயிலோ’ என்ற ஒரு வரியில் ஒரே ஒருமுறை மட்டுமே அவர் கையாளும் சங்கதியின் நுட்பம் அப்பாடலை நூறு முறை கேட்கச் செய்கிறது.


சீர்காழி கோவிந்தராஜன் டி.ஆர். மகாலிங்கத்தின் மிகச்சிறந்த ரசிகர் என்று சொல்லப்படுகிறது. மகாலிங்கத்தின் பாணியைப் பின்பற்றும் விதமாக அவர் தன்னுடைய குரலையும் பாடும் முறையையும் பயிற்சி செய்து உருவாக்கிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. உச்ச ஸ்தாயியில் பாடுவது என்ற அம்சத்தைத் தவிர்த்தால் இந்த விஷயம் உண்மையல்ல என்றுதான் எனக்குப்படுகிறது.

அகத்தியர் படத்தில் இரு பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் சீர்காழி கோவிந்த ராஜனுடன் இணைந்து பாடியிருக்கிறார். ‘நமச்சிவாயம் எனச் சொல்வோமே’, ‘இசையாய் தமிழாய் இருப்பவனே’ ஆகிய இப்பாடல்கள் இரு பாடகர்களையும் ஒப்பிடுவதற்குச் சிறந்த உதாரணங்களாக அமைபவை. டி.ஆர்.மகாலிங்கம் சற்றும் சிரமம் தெரியாமல், துல்லியமான சுருதியுடன், சரளமான சங்கதிகளுடன், உயிரோட்டமுள்ள உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் இந்தப் பாடல்கள் வழியாக மிதந்து செல்கிறார். ஆனால் சீர்காழி கோவிந்தராஜனின் பாடும்முறை வலிந்து செய்வதாக இருக்கிறது.


என்னால் சீர்காழி கோவிந்தராஜனின் குரலையோ, பாடும் முறையையோ ரசிக்க முடிந்ததே இல்லை. வெண்கலக் குரலோன் போன்ற பல துதிகள் அவர்மேல் உள்ளன என்றாலும் அவரது குரல் சற்றும் இசைத்தன்மைகொண்டது அல்ல. அவரது குரல் எந்த நடிகருக்கும் பொருந்தியதுமில்லை, கதைச் சந்தர்ப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப, பாடும்முறையை மாற்றியமைக்க அவரால் முடிந்ததுமில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன் போன்றவர்களுக்காக அவர் பாடியிருந்தாலும் அதிகமும் பொதுவான பின்குரலாகவே அமைந்தது அவரது பாட்டுகள்.

என்னுடைய ரசனையின்படி சீர்காழி கோவிந்த ராஜனின் குரல் இயல்பிலேயே சுருதி நடுங்கும் தன்மை கொண்டது. வீரக்கனல் படத்தில் வரும் ‘சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா?’ என்ற பாடலில் அவருடன் சேர்ந்துபாடும் சுசீலாவின் பாடும்முறையுடன் ஒப்பிட்டு இதை நாம் தெளிவாகவே உணரலாம். ‘சிரிக்கக் கூடாதா?’ போன்ற இடங்களில் அவரது சுருதி முற்றிலும் விலகுகிறது. பெரும்பாலான கீழிறங்கும் சுரங்கள் (landing notes) அவரிடம் அப்படித்தான் அமைகின்றன. பெரும்புகழ்பெற்ற ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ போன்ற பாடல்களில்கூட அவரது சுருதி முற்றிலும் விலகுவது நாம் உணரலாம். அவரது அதீதமான கமகங்கள் வலிந்துசெய்யப்படுவனவாகவும் கேட்பதற்கு நெருடலானவையாகவும் உள்ளன.

ஆனால் அகத்தியர் படத்தில் வரும் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘ஆண்டவன் தரிசனமே’ போன்ற பாடல்களைக் கேட்டால் தெரியும் அவர் ஒரு இசை அற்புதம் என்று. அவரது குரல் எப்போதும் பிசிறே இல்லாமல் நழுவிச்செல்கிறது. எந்த சுரத்திலும் சுருதிபிசகாமல் நினைத்த சங்கதிகளைப் பிறப்பிக்கிறது. ‘ஆசைகொண்டேன் அமுதமே’, ‘சங்கம் முழங்கிவரும்’ ‘இளைய கன்னியின் அழகிய வதனம்’, ‘எதிர்கொண்டு வரவேற்குதே’, ‘காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்’ ‘மதுரமான ருசி உள்ளதே’, ‘நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா’ ‘கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று’ போன்ற ஏராளமான பாடல்களில் டி.ஆர்.மகாலிங்கத்தின் இசையின் நுட்பங்களையும் அழகுகளையும் நாம் காணலாம்.

டி.ஆர்.மகாலிங்கம் அவரது முன்னோடியும் மானசீக குருவுமான கிட்டப்பாவைப்போலவே சிறுவனாக இருக்கும்போதே மேடைகளில் பாட ஆரம்பித்தார். விரைவிலேயே அவர் பெரும் புகழ்பெற்றார். அவருக்கு அவரது உச்ச ஸ்தாயிப்பாடல்களே புகழ்பெற்றுத்தந்தன. அக்காலத்தில் ஸ்பெஷல் நாடகங்கள் என்று அழைக்கப்பட்ட இந்நாடகங்களில் சிறப்புப் பாடகராக வந்து பாடுவது அவரது வழக்கம்.

தன் 14ஆவது வயதிலேயே டி.ஆர்.மகாலிங்கம் வெற்றிகரமான நாடக நடிகராகவும் பாடகராகவும் புகழ்பெற்று அப்புகழின் வழியாகத் திரையுலகுக்குள் நுழைந்தார். அது 1937ல் ஏ.வி.எம் எடுத்த நந்தகுமார் திரைப்படம். இளம் கண்ணனின் வேடத்தில் டி.ஆர்.மகாலிங்கம் அதில் நடித்தார். பாடல்கள் புகழ் பெற்றபோதும் படம் ஓடவில்லை. தொடர்ந்து டி.ஆர். மகாலிங்கம் 10 முக்கியமற்ற படங்களில் நடித்தார், எந்தப் படமும் அவருக்கு நல்ல இடத்தைப் பெற்றுத்தரவில்லை. மனம் தளர்ந்தபோதிலும் அவர் முயற்சியைத் தளரவிடவில்லை. அப்போதுதான் ஏ.வி.எம், அன்று சங்கரதாஸ் சுவாமிகள் எழுதி ஸ்பெஷல் நாடக மேடையில் பெரும்புகழ் பெற்றிருந்த ‘ஸ்ரீவள்ளி’யை சினிமாவாக எடுத்தார்கள். டி.ஆர்.மகாலிங்கம் அன்று ஒரு வெற்றிகரமான நடிகராக இல்லாத காரணத்தால் அவருக்கு மிகக்குறைவான ஊதியமே பேசப்பட்டது.

1945ல் வந்த ஸ்ரீவள்ளியில் டி.ஆர்.மகாலிங்கம் முருகனாக நடித்தார், அந்தப்படம் டி.ஆர்.மகாலிங்கத்தை ஒரு பெரிய நடிகராக நிலை நாட்டியது. அது ஏ.வி.எம் நிறுவனத்தின் பெரும் தொடக்கமாகவும் அமைந்தது. அதில்தான் டி.ஆர். மகாலிங்கம் இன்றும் பேசப்படும் ‘காயாத கானகத்தே நின்றுலாவும்’ என்ற உச்ச ஸ்தாயிப்பாடலை மிகச் சிறப்பாகப் பாடினார். ஏற்கனவே எஸ்.ஜி.கிட்டப்பாவால் ஸ்பெஷல் நாடக மேடைகளில் பாடப்பெற்று புகழ்பெற்றிருந்த அப்பாடலை கிட்டப்பாவின் ரசிகர்களே ஏற்றுக் கொள்ளும்படி துல்லியமாகப் பாடினார் டி.ஆர்.மகாலிங்கம். பல இடங்களில் பொன்விழா கண்ட ஸ்ரீவள்ளி டி.ஆர்.மகாலிங்கத்தை ஒரு உச்ச நட்சத்திரமாக ஆக்கியது.

1947ல் சுதந்திரம் கிடைத்ததுமே ஏ.வி.எம் அவர்களின் சமூகப் படமான நாம் இருவரை வெளியிட்டது. பாரதியாரின் தேசபக்திப் பாடல்கள்தான் அப்படத்தின் முக்கியமான கவர்ச்சியாக இருந்தன. ‘சோலை மலரொளியோ’, ‘வாழிய செந்தமிழ்’, ‘வெற்றி எட்டுத் திக்கும் கொட்ட’, ‘விட்டு விடுதலையாகி’ போன்ற பாரதியார் பாடல்களை அப்பழுக்கற்ற துல்லியத்துடன் பாடி அக்காலகட்டத்தையே கவர்ந்தார் டி.ஆர்.மகாலிங்கம். மதுரையில் திரையரங்கிற்கு டி.ஆர்.மகாலிங்கம் வந்தபோது ரசிகர்கள் அவரைத் தூக்கிவைத்துக்கொண்டு நடனமாடினார்கள். சுதந்திரம் கிடைத்த களிப்பும் பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளும் அந்தப் படத்தின் வெற்றியில் பெரும் பங்குவகித்த போதிலும்கூட டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலுக்கும் அதில் பெரும் பங்குண்டு.

1948ல் ஏ.வி.எம் வெளியிட்ட ‘வேதாள உலகம்’ டி.ஆர்.மகாலிங்கத்தின் இன்னொரு மாபெரும் வெற்றிப்படம். இப்படத்திலும் ஏராளமான பாரதியார் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ போன்ற பாடல்கள் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் பெரும் வெற்றியை அடைந்தன.

மாபெரும் வெற்றிப்படமான ஞானசௌந்தரி அதைத் தொடர்ந்து வெளிவந்தது. ஆனால் அதே இயக்குநர் டி.ஆர்.மகாலிங்கத்தை நாயகனாக வைத்து எடுத்த சமூகப்படமான ‘இதய கீதம்’ ஒரு பெரும் தோல்வியாக இருந்தது. டி.ஆர். மகாலிங்கத்தின் உச்ச நட்சத்திரப் புகழ் அப்படத்துக்கு உதவவில்லை. ஆனால் அதில் அவர் பாடிய ‘வானுலாவும் தாரை நீயே இதய கீதமே’ என்ற பாடல் இன்றும் ரசிகர்களின் இதழ்களில் ஒலிக்கிறது.

அதைத்தொடர்ந்து வந்த லைலா மஜ்னு படமும் வெற்றி பெறவில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் டி.ஆர்.மகாலிங்கம் அவரது வாழ்க்கையின் மிக மோசமான முடிவை எடுத்தார். அவரே படங்களை எடுத்து அவற்றில் நடிக்க முடிவுசெய்தார். மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை போன்ற படங்களை அவரே தயாரித்தார். ஜே.ஆர்.ரங்கராஜுவின் பிரபலமான நாவலை ஒட்டிய மோகனசுந்தரம் ஜி.வரலட்சுமியுடன் இணைந்து அவர் பாடிய ‘ஓ ஜெகமதில் இன்பம்’, ‘புள்ளிமானைப்போலே’, ‘கண்ணீர் தானோ’, ‘கனவிலும் உன்னை மறவேன்’ போன்ற இணைக்குரல் பாடல்களுக்காகப் புகழ்பெற்றது. ஆனால் படம் பெரும் தோல்வியடைந்தது. தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை போன்ற படங்களையும் அவரே தயாரித்தார். அவை வெளியாகவே இல்லை. இக் காலகட்டத்தில் வெளிவந்த அவரது எல்லாப் படங்களுமே தோல்வி அடைந்தன. பொருளாதார ரீதியாக டி.ஆர்.மகாலிங்கம் முற்றிலும் நலிவடைந்து போனார்.

டி.ஆர்.மகாலிங்கம் அவரது பணத்தை இழந்தபோது அவரைச் சூழ்ந்திருந்த அனைவருமே அவரை முற்றிலும் கைவிட்டதாகவும் கடுமையான நெருக்கடியில் வாடிய அவரை, கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படமே மீட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்ணதாசனே தயாரித்த அந்தப்படத்துக்கு டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் துணிந்து கதாநாயகனாக ஆக்கினார். அதை அன்றைய இயக்குநர்களும் உச்ச நடிகர்களும் எல்லாம் தடுத்தார்கள். காரணம் டி.ஆர்.மகாலிங்கம் அன்று சினிமாவின் மைய ஓட்டத்தை விட்டு வெகுவாக விலகிச் சென்றுவிட்டிருந்தார். ஆனால் மாலையிட்ட மங்கை ஒரு இசைப்படம் ஆகையால் கண்ணதாசன் துணிந்து அம்முடிவை எடுத்தார்.

படம் தொடங்கியபோது கண்ணதாசனின் தி.மு.க நண்பர்கள் ஒரு பிராமணனை அப்படத்தில் நடிக்கவைப்பதாகச் சொல்லி அவரை எதிர்த்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய திராவிட அரசியல் சூழலில் பிராமண வெறுப்பு அத்தகைய உச்சத்திலிருந்தது. அவர்களை சமாதானம் செய்வதற்காக, தி.மு.கவின் கொள்கைகளை மறைமுகமாகப் புகழும் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்ற பாடலை கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்துப் பாடச்செய்தார். இப்படத்தில்தான் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘நானன்றி யார் வருவார்’ போன்ற காலத்தாலழியாத பாடல்கள் உள்ளன.

நானன்றி யார் வருவார் பாடலை கண்ணதாசன் மகாதேவி படத்துக்காக எழுதினாராம். எம். ஜி.ஆர் அப்பாடல் பிடிக்கவில்லை என்று நிராகரித்தார். ‘கண்மூடும் வேளையிலும்’ என்று ஏ.எம்.ராஜாவும் பி.சுசீலாவும் பாடும் பாடல்தான் அதற்குப் பதிலாக மகாதேவியில் சேர்க்கப்பட்டது.

மாலையிட்ட மங்கை படத்துக்குப் பின்னர் டி.ஆர்.மகாலிங்கத்தின் மதிப்பு மீண்டும் நிலைபெற்றது. ஆனால் குறுகிய காலத்துக்குத்தான். அவரைப்போன்ற பாடகநடிகர்களின் காலம் முடிந்துவிட்டிருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் யுகம் நடந்துகொண்டிருந்தது. நடிகர்கள் பாடவேண்டிய அவசியமே இருக்கவில்லை. மேலும் சமூகப்படங்களில் பாடல்களைவிட வசனங்கள் முக்கியம் என்பதனால் அவருக்கு அவை பொருத்தமாக இருக்கவில்லை.

டி.ஆர்.மகாலிங்கம் அக்கால கட்டத்து ‘நவீன’ பாடல்களுக்கு எதிராகவும் இருந்தார். கர்நாடக இசை பாணியில் அமைந்த பாடல்களையே அவர் விரும்பினார். ஏ. எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன் போன்றவர்கள் தமிழ்த் திரைப் பாடல்களின் சுவையையே மாற்றி அமைத்தார்கள். பின்னணிப் பாடகர்கள் உருவாகி வளர்ந்து வந்த இந்தப் புதிய சூழலைப் புரிந்து கொள்ளவும் அங்கீகரிக்கவும் மகாலிங்கம் மறுத்தார். அவர், நடிகர்கள் பாட வேண்டும் என்ற மரபு முறையில் பிடிவாதமாக இருந்தார். பாடக நடிகரான டி.ஆர்.மகாலிங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

படங்களில் தான் நடிக்கும் பாத்திரங்களுக்கு தானே பாடுவேன் என்று சொல்லி தேடி வந்த பல திரைப்பட வாய்ப்புகளை அவரே நிராகரித்தார். பிறருக்குப் பின்னணி பாட அவர் முற்றிலும் மறுத்துவிட்டார். பாடல் இல்லாத நடிப்புக்கோ நடிப்பு இல்லாத பாடலுக்கோ தான் தயாரில்லை என்று அவர் ஒதுங்கிய காரணத்தால் சினிமா அவரைக் கைவிட்டது. அவரது இனிமையான பாடல்களைக் கேட்கும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்தார்கள்.

பாடும் வாய்ப்புள்ள படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்தார். திருவிளையாடல் (1965), அகத்தியர் (1971), திருநீலகண்டர் (1972), ராஜராஜ சோழன் (1973) முதலியவை உதாரணங்கள். இப்படங்களிலும் அவரது அற்புதமான பாடல்கள் வரத்தான் செய்தன. திருவிளையாடல் படத்தின் ‘இசைத்தமிழ் நீ செய்த’ பாடலும் அகத்தியர் படத்தின் ‘மலைநின்ற திருக்குமரா’ பாடலும் அவை வெளிவந்த காலத்தைப் பெரிதும் கவர்ந்து இன்றும் புகழுடன் இருக்கின்றன.

சினிமாவில் தனக்கு ஏற்பட்ட சரிவைப் புரிந்துகொள்ள முடியாமல் சென்னையை விட்டு விலகி தன் சொந்த ஊரான சோழவந்தான் அருகில் உள்ள தென்கரைக்குப் போய்ச்சேர்ந்தார் டி.ஆர்.மகாலிங்கம். ஞான சௌந்தரி, ஸ்ரீ வள்ளி என்று பொன்விழாப் படங்களின் நாயகனாக இருந்தவர் சினிமாவை விட்டு விலகி நாடகமேடைக்குத் திரும்பினார். உச்ச நட்சத்திரமாக, பெரும் செல்வந்தராக இருந்த கடந்த காலத்தின் திரையுலக நினைவுகளுடன் டி.ஆர்.மகாலிங்கம் நாடகமேடைகளில் கடைசிவரை பாடி நடித்தார்.

1978ல் தன் 58 ஆவது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தார். ஆனால் இந்த கணம்கூட நிலாவென சிரிக்கும் செந்தமிழ் தேன் மொழியாக அவரது குரல் வசீகரம் எங்கெங்கெல்லாமோ ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


தமிழில் ஜெயமோகன்

போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக்கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பிவிட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’ முடியும் என்று 55 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியவர் டி.ஆர்.மகாலிங்கம்.
‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’போன்ற காலத்தை வென்ற பல பாடல்களைப் பாடியவர். பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளரும்கூட. இவரது கலைப் பயணம் தொடங்கியது மதுரையிலிருந்து.

14 வயதில் சினிமா

1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ராமகிருஷ்ண கனபாடிகள்- லட்சுமி தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.

8 வயதில் பள்ளிக்கூடம் போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.

இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன் மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது. 14 வயதே நிரம்பிய மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்துவந்துவிட்டார்.

முதல் வெற்றி

மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’ 1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றன. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பக்த பிரகலாதா, பரசுராமன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை அது பெற்றுக்கொடுத்தது.

‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.எம். செட்டியாருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.

அக்காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.

இசை வாரிசு

ஒலிபெருக்கிக் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், உரத்த குரலில் பாடித்தான் நாடக ரசிகர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி. கிட்டப்பா என்றால் உயிர்.

எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே (1933) துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட, கிட்டப்பாவின் பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.

சினிமாவைத் தூக்கியெறிந்தார்!

புகழின் உச்சியை அடையும்போது, திரைத்துறையினர் பொதுவாகச் செய்யும் அதே தவறுகளை செய்தார் மகாலிங்கம். தன் படத்துக்கு இன்னார்தான் இசையமைக்க வேண்டும், இன்னாரைத்தான் நாயகியாகப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுக்க, தானே தயாரிப்பில் இறங்கினார் மகாலிங்கம்.

மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை என்று அவர் தயாரித்து நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவின.

பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.

மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.

கண்ணதாசனுடன் டி.ஆர். மகாலிங்கம்

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.

அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக அமர்த்தினார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தவர் கண்ணதாசன்தான்.

17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. 1958-ல் வெளியான அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்.

அரசியலில் சிக்காதவர்

டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும் நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில் பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால், இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.

இறுதிக் காலம்

மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில் நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டார்.

நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.

சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.

தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்னமும் வாழ்கிறார் டி.ஆர். மகாலிங்கம்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஞானம்

எம்.ஜி.ஆர்-டி.ஆர்.மகாலிங்கம் – இரண்டு திரையுலகக் குடும்பங்கள்!

சோழவந்தானுக்கு அருகில் உள்ள தென்கரை கிராமத்தில் உள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின் வீட்டுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மையாரும் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்!

 பழைய நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பாவைப் போல பாடக்கூடியவரும், நாற்பது ஐம்பதுகளில் திரைப்படத் துறையில் நடிகராவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ரி.ஆர்.மகாலிங்கம் பற்றி தெரிந்து கொள்வோமா? பாடவும் நடிக்கவும் தெரிந்த சிலரில் ரி.ஆர்.மகாலிங்கம் முக்கியமானவர். மிக அருமையான குரல் வளம், நல்ல பிருகாவுடன் பாடக்கூடிய திறமை, அழகு இவ்வளவும் ஒருங்கே அமைந்த நடிகர் ரி.ஆர்.மகாலிங்கம். ஏவி.எம் நிறுவனம் எடுத்த வேதாள உலகம், ஸ்ரீ வள்ளி முதலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பாடல்களும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை. மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, ராஜ ராஜ சோழன் போன்ற படங்களிலும் இவருடைய இசை இன்று வரை ஜீவனோடு பாடப்பட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். செந்தமிழ் தேன்மொழியாள் போன்ற இறவா புகழுடைய பாடல்கள் இவருடையவை. 

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த மகாலிங்கம் இளம் வயதிலேயே நடிப்பிலும், பாட்டிலும் ஆர்வமுடையவராக இருந்தார். அந்தக் கால வழக்கப்படி சிறுவர்களை வைத்து நாடகம் நடத்தும் கம்பெனிகளிலும், தனியாக நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் ஸ்பெஷல் நாடகங்கள் போன்றவற்றிலும் இவர் கலந்துகொண்டு நடித்து வந்தார். இவருடைய பாட்டுக்காகவே இவரை நாடகங்களில் பாடச் சொல்லிக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப்படி இவர் நாடகங்களில் நடித்த நாட்களிலேயே பிரபல பாடகர் எஸ்.சி.கிருஷ்ணன் இவருடைய தோழராக இருந்திருக்கிறார். எஸ்.சி.கிருஷ்ணனுக்கு தனிச்சிறப்பு மிக்க கட்டைக் குரல். அந்தக் குரலோடு இவர் திரைப்படங்களில் பாடிய பாடல்கள் குறிப்பாக நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவுக்குப் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலத்தில் இப்போது போன்ற ஒலி அமைப்புகள் கிடையாது என்பதால் பாடுபவர்கள் கூட்டத்தின் கடைசியில் உட்கார்ந்திருப்பவருக்குக் கூட கேட்கும்படி உரத்த குரலில் பாடவேண்டும். அதனால்தான் இந்தப் பாடகர்கள் உச்சஸ்தாயில் மிக சுலபமாகப் போய் பாடுவதை நாம் கவனிக்க வேண்டும். இப்போதெல்லாம் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்பது போல மெல்லிய குரலில் பாடினாலும், ஒலிவாங்கி அதனை மிக துல்லியமாக பதிவு செய்து விடுகிறது. அப்போது நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒலி அமைப்புகள் எதுவும் இல்லாமல் கூட்டத்தின் சந்தடிகளையும் மீறி, திருவிழா என்றால் அங்கு நடக்கும் மேள தாள சத்தங்களையும் தாண்டி பாடினால்தான் மக்கள் காதுகளுக்கும் போகும், பாராட்டுக்களும் கிடைக்கும். இப்படிப் பாடுவதனால் இவர்களுடைய உடல் சக்தி குறையவும், அதனால் கிட்டப்பா போன்ற பெரிய நாடக நடிகர்/பாடகர்கள் இளமையில் மாண்டு போவதும் சகஜமாக இருந்து வந்தது.
இளம் வயதிலேயே மிக அருமையாகப் பாடிவந்த ரி.ஆர்.மகாலிங்கம் கிட்டப்பா போல பாடுகிறார் என்று பெயர் வாங்கிவிட்டார். இந்த நாட்டின் நாடகக் கலைக்கும் இசைத்துறைக்கும் பெருத்த நஷ்டம் கிட்டப்பாவின் இறப்பு. அவர் தனது 28-ஆம் வயதில் காலமாகிவிட்டார். அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய ரி.ஆர்.மகாலிங்கம் வந்துவிட்டார். இவருடைய 14-ஆம் வயதில் 1937-இல் ஸ்ரீ கிருஷ்ணன் பற்றிய ஓர் திரைப்படத்தில் “நந்தகுமார்’ என்ற பெயரில் உருவான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை உருவாக்கியவர் காரைக்குடி ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்கள். அப்போது அவர் காரைக்குடியில் சினிமா ஸ்டுடியோ வைத்து படங்களை எடுத்து வந்தார். ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் இளம் வயது லீலைகளை எடுத்துக் கூறும் ஓர் அற்புதமான நூல். அதில் கிருஷ்ணன் சிறு பிள்ளை காலத்தில் நடந்தவற்றை எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் அலுக்காது. அப்படி அந்தக் கதை சிறுவயது கிருஷ்ணன் பற்றியது என்பதால் சிறுவனான ரி.ஆர்.மகாலிங்கத்தை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் செட்டியார் அவர்கள். மேலும் சிறுவன் மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவன். அந்தப் படம் ஒன்றும் வெற்றிப் படமாக அமையவில்லை. இருந்தாலும் அதில் வந்த பாடல்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றன. அடுத்து செட்டியார் எடுத்த படம் ஸ்ரீ வள்ளி. அந்தப் படத்தில் மகாலிங்கம்தான் கதாநாயகன். ஸ்ரீ வள்ளி நாடகங்களில் விளம்பரம் செய்யும்போது முருகன் தானாகவும், கிழவனாகவும், வேட்டுவனாகவும் வரும் காட்சிகள் இருப்பதால் அந்தந்த நடிகரின் பெயருக்கு முன்னால் இன்னார் வேலன், வேடன், விருத்தனாக நடிக்கும் என்று எழுதுவார்கள். ஏ.வி.எம். ஸ்ரீ வள்ளி படத்தில் ரி.ஆர்.மகாலிங்கம், அப்படி வேலன், வேடன், விருத்தனாக வந்து பாடி நடித்தார். அந்தப் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? இன்றைய புகழ்பெற்ற நடிகை லக்ஷ்மியின் தாயார் காலஞ்சென்ற குமாரி ருக்மணி.

அந்தப் படத்தில் மகாலிங்கத்துக்கு நல்ல பெயர் வந்தது. அது முதல் அவருக்கு ஏறு முகம்தான். பல படங்கள் வந்தன. அவற்றில் நடித்தார். செல்வம் சேர்ந்தது. வழக்கம் போல சொந்தத்தில் படம் எடுத்தார். மோகனசுந்தரம் என்ற படத்தில் நடித்த எஸ்.வரலக்ஷ்மியுடன் இவர் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.  சின்னத்துரை இவர் தயாரித்தது. அது தோல்விப்படமாக அமைந்தது. அதனால் ஓரளவுக்கு இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. சில காலம் சினிமாத் துறையிலிருந்து ஒதுங்கி இருந்த இவரை மறுபடி சினிமாவுக்குக் கவியரசு கண்ணதாசன் கொண்டு வந்தார். பின்னர் ஏ.பி.நாகராஜன் வாய்ப்புக்கள் கொடுத்தார். அவருடைய திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், அகத்தியர் போன்ற படங்களில் இவருக்கு பாடவும் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன.

ரி.ஆர்.மகாலிங்கம் நடித்து வெளியான படங்களின் பட்டியலும் பெரியதுதான். அவை:-

நந்தகுமார்,  ஸ்ரீ வள்ளி, நந்தனார், மனோன்மணி, வேதாள உலகம், சின்னதுரை, தெருப்பாடகன், திருநீலகண்டர், விளையாட்டு பொம்மை, மோகனசுந்தரம், மச்சரேகை, நாம் இருவர், பவளக்கொடி, ஆதித்தன் கனவு, ஞானசெளந்தரி, ரத்தினபுரி இளவரசி, லைலா மஜ்னு, வேலைக்காரன், தயாளன், ஆட வந்த தெய்வம், இதய கீதம், அபலை அஞ்சுகம், மணிமேகலை, அமுதவல்லி, திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், அகத்தியர், திருமலை தெய்வம், கவலை இல்லாத மனிதன், பண்ணையார் மகள், மாலையிட்ட மங்கை போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிய படங்கள். மகாலிங்கம் புகழும் செல்வமும் ஓங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஒரு தீங்கு சிலருக்கு வீழ்ச்சியும் ஏற்படுத்தத்தான் செய்யும். திவால் நோட்டீஸ் கூட கொடுத்துவிட்டார். அப்படி நல்ல நிலையிலிருந்த ரி.ஆர்.மகாலிங்கம், காலமானபோது அப்படியொன்றும் செல்வத்தின் சிறப்போடு இறக்கவில்லை. இரவு நித்திரைக்குச் சென்றவர் உறக்கத்திலேயே இறந்து போனார். இவரது மனைவி சமீபத்தில்தான் காலமானார். என்றாலும் மக்களால் மறக்கமுடியாத மனிதராக, இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரராக மக்களின் அன்புக்கு உகந்தவராக இருந்து மறைந்தார். வாழ்க அவர் புகழ்!

Wednesday, 19 February 2020

T.R.MAHALINGAM ,A LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21






T.R.MAHALINGAM ,A LEGEND BORN 


1924 JUNE 16 - 1978 APRIL 21





நடிகர் டி. ஆர். மகாலிங்கம் பிறந்த தினம் ஜூன் 16 . 1924 .

தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978)  1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் , பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம் [2] ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழவந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கமும் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில்

ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன் , எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் டி. எம். செளந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.
பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13 ஆவது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் , தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த பாடலைப் பாடியபடியே அறிமுகமானார் மகாலிங்கம்.

கிருஷ்ணரைப் பற்றி தமிழ், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா , சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

நடித்த திரைப்படங்கள்

1. பூலோக ரம்பை (1940)
2. சதி முரளி (1940)
3. தயாளன் (1941)
4. பிரகலாதா (1941)
5. நந்தனார் (1942)
6. மனோன்மணி (1942)
7. ஸ்ரீ வள்ளி (1945)
8. நாம் இருவர் (1947)
9. ஞானசௌந்தரி (1948)
10. வேதாள உலகம் (1948)
11. ஆதித்தன் கனவு (1948)
12. பவளக்கொடி (1949)
13. மாயாவதி (1949)
14. இதய கீதம் (1950)
15. லைலா மஜ்னு ) (1950)
16. மச்சரேகை (1950)
17. மோகனசுந்தரம் (1951)
18. வேலைக்காரன் (1952)
19. சின்னதுரை (1952)
20. விளையாட்டு பொம்மை (1954)
21. மாலையிட்ட மங்கை (1958)
22. அபலை அஞ்சுகம் (1959)
23. மணிமேகலை (1959)
24. அமுதவல்லி (1959
25. ரத்தினபுரி இளவரசி (1960)
26. ஆடவந்த தெய்வம் (1960)
27. கவலை இல்லாத மனிதன் (1960)
28. தந்தைக்குப்பின் தமையன் (1960)
29. ஸ்ரீ வள்ளி (1961)
30. திருவிளையாடல் (1965)
31. திருநீலகண்டர் (1972)
32. அகத்தியர் (1972)
33. ராஜ ராஜ சோழன் (1973)
34. ஸ்ரீ கிருஷ்ணலீலா (1977)
35. தெருப்பாடகன்
36. பண்ணையார் மகள்
37. என்னைப் பார்
38. திருமலை தெய்வம்




‘போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக்கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பிவிட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’ முடியும் என்று 55 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியவர் டி.ஆர்.மகாலிங்கம்.
‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’போன்ற காலத்தை வென்ற பல பாடல்களைப் பாடியவர். பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளரும்கூட. இவரது கலைப் பயணம் தொடங்கியது மதுரையிலிருந்து.
14 வயதில் சினிமா
1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ராமகிருஷ்ண கனபாடிகள்- லட்சுமி தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.
8 வயதில் பள்ளிக்கூடம் போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.
இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன் மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது. 14 வயதே நிரம்பிய மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்துவந்துவிட்டார்.
முதல் வெற்றி
மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’ 1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றன. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பக்த பிரகலாதா, பரசுராமன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை அது பெற்றுக்கொடுத்தது.
‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.எம். செட்டியாருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.
அக்காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.
இசை வாரிசு
ஒலிபெருக்கிக் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், உரத்த குரலில் பாடித்தான் நாடக ரசிகர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி. கிட்டப்பா என்றால் உயிர்.
எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே (1933) துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட, கிட்டப்பாவின் பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.
சினிமாவைத் தூக்கியெறிந்தார்!
புகழின் உச்சியை அடையும்போது, திரைத்துறையினர் பொதுவாகச் செய்யும் அதே தவறுகளை செய்தார் மகாலிங்கம். தன் படத்துக்கு இன்னார்தான் இசையமைக்க வேண்டும், இன்னாரைத்தான் நாயகியாகப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுக்க, தானே தயாரிப்பில் இறங்கினார் மகாலிங்கம்.
மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை என்று அவர் தயாரித்து நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவின.
பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.
மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.
கண்ணதாசனுடன் டி.ஆர். மகாலிங்கம்

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.
அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக அமர்த்தினார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தவர் கண்ணதாசன்தான்.
17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. 1958-ல் வெளியான அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்.
அரசியலில் சிக்காதவர்
டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும் நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில் பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால், இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.
இறுதிக் காலம்

மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில் நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டார்.
நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.
சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.
தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்னமும் வாழ்கிறார் டி.ஆர். மகாலிங்கம்.


இன்றைய உலகம் மிக வேகமானது. நம் தாத்தாவின் பெயர் நமக்குத் தெரியும். நம் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்றால் நிச்சயமாக பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. காரணம் அதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதுமாதிரிதான் திரைப்பட கலைஞர்களும், தமிழில் சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் சினிமாவை வளர்த்த அற்புதமான கலைஞர்களை எத்தனை பேருக்குத் தெரியும். தியாகராஜ பாகவர், பி.யூ.சின்னப்பா போன்றவர்களை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம். அவர் காலத்தில் இருந்த மற்ற கலைஞர்கள் பற்றி யாருக்குத் தெரியும். அப்படி காலம் மறந்த அற்புத கலைஞர்தான் டி.ஆர்.மகாலிங்கம்.
செந்தமிழ் தேன் மொழியாள்...
"செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்...", "ஆடைகட்டி வந்த நிலவோ..." திருவிளையாடல் படத்தில் வரும் "இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை..." பாடல்களை இப்போதும் கேட்டு உருகிவிடுகிறோம். ஆனால் அதை பாடியதும், அந்த பாடலில் நடித்ததும் டி.ஆர்.மகாலிங்கம் என்ற மகா கலைஞன் என்பது பலருக்குத் தெரியாது.
ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தந்த வாய்ப்பு
1924ம் ஆண்டு மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ராமகிருஷ்ணன், லட்சுமி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் மகாலிங்கம். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர்.மகாலிங்கம். பள்ளி படிப்பு படிக்காமல் பாடத்தான் பிடித்தது மகாலிங்கத்திற்கு காரணம் அவரது குடும்பமே கனபாடிகள் குடும்பம்தான். வாய்ப்பாட்டு கற்றுக் கொண்ட மகாலிங்கம், ராஜரத்தினம் பிள்ளையின் பாய்ஸ் நாடக கம்பெனியில் பாடகராக வேலைக்குச் சேர்ந்தார். சில வேடங்களில் நடிக்கவும் செய்தார். ஒரு முறை நாடகத்தில் மகாலிங்கத்தின் நடிப்பை பார்த்த ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "வாப்பா உன்னை சினிமாவில் நடிக்க வைக்கிறேன்" என்று தனது ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
புகழ் தந்த ஸ்ரீவள்ளி
1937ம் ஆண்டு நந்தகுமார் படத்தில் பால்ய வயது கிருஷ்ணராக நடித்தார். அந்த படம் ஹிட்டானதும் அதன் பிறகு கிருஷ்ணர் வேடம் என்றால் மகாலிங்கத்தை தேட ஆரம்பித்தார்கள். பக்தபிரகலாதன், பரசுராமன் உள்பட பல படங்களில் கிருஷ்ணனாகவே நடித்தார். முருகனாக நடித்த ஸ்ரீவள்ளிதான் டி.ஆர்.மகாலிங்கத்தின் புகழுக்கு மகுடம் சூட்டியது. 52 வாரங்கள் ஓடி அந்தப் படம் சாதனை படைத்தது. தியாகராஜ பாகவதருக்கு பிறகு பாடி நடிக்கும் நடிகர்களில் முதன்மையாக திகழ்ந்தது டி.ஆர்.மகாலிங்கம்தான். நடிப்பில் தியாகராஜபாகவதரின் மறு உருவமாகவும், பாடலில் பி.யூ.சின்னப்பாவின் வாரிசாகவும் சினிமாவில் வலம் வந்தார்.
புகழின் உச்சியில் இருக்கும்போது தன் இஷ்டப்படி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அமையாததால் தானே சொந்தப் படம் எடுக்க ஆரம்பித்தார். மோகசுந்தரம், சின்னதுரை, மச்சரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை போன்ற படங்களை தயாரித்தார். அத்தனையும் தோல்வி அடையவே நடித்து சம்பாதித்த அத்தனை செல்வத்தையும் இழந்தார். பிறகு சினிமா மீது வெறுப்பு கொண்டு மீண்டும் நாடகத்திற்கே திரும்பினார். திரைப்படங்களுக்கு நிகராக நாடகங்கள் நடத்தி அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.
கவியரசர் கண்ணாதாசன் தனது மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் ஹீரோவாக நடிக்க வைத்தார். அந்தப் படம் மாபெரும் பெற்றிபெற மீண்டும் சினிமாவில் வெற்றிகரகமாக வலம்வரத் தொடங்கினார். திருவிளையாடல் உள்ளிட்ட பல புராண படங்களில் மீண்டும் நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி மீண்டும் மேடைதோறும் பாடி மக்களை மகிழ்வித்தார். கடைசி வரை மக்களை தன் இனிய குரலால் தாலாட்டிய டி.ஆர்.மகாலிங்கம் 1978ம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் நிரந்தரமாக தூங்கிவிட்டார். சினிமாவை துச்சமென மதித்து நாடகத்தை உயிராக நினைத்து வாழ்ந்த உத்தம கலைஞன் அவர்.



தமிழ்ப்பட உலகின் முதல் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ஆகியோர் ஆவார்கள். அவர்கள் புகழுடன் விளங்கிய காலக்கட்டத்திலேயே மூன்றாவது சூப்பர் ஸ்டார் ஆனவர் டி.ஆர்.மகாலிங்கம்.
டி.ஆர்.மகாலிங்கத்தின் பிறப்பிடம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை. தந்தையார் ராமகிருஷ்ண கனபாடிகள். இவரது மூன்றாவது மனைவியின் இரண்டாவது மகன் தான் மகாலிங்கம். இவர் 1923–ம் ஆண்டு பிறந்தார். பையனின் படிப்பு திண்ணைப்பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புடன் முடிந்தது; ஆனால் தன்னிச்சையாக எழுந்த இசை வளர்ந்தது.
கோவில்களில் தெய்வீக மணம் கமிழும் இசையைப் பாடி பக்த கோடிகளுக்கு பரவசமூட்டினார் மகாலிங்கம். இவரை ஊக்குவித்து பாட்டு சொல்லிக்கொடுத்து ‘குருநாதர்’ என்று பெயர் பெற்றவர் செல்லூர் சேஷ அய்யங்கார். இதனால் தரகர் ராமய்யர், மகாலிங்கத்தை ஜகன்னாத அய்யரின் பாய்ஸ் கம்பெனியான ‘பாலமோகன கானசபா’வில் சேர்த்துவிட்டார்.
தென்னாட்டின் முக்கியமான தேசபக்தர்களில் ஒருவர் காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி. அவர் மாஸ்டர் மகாலிங்கம் நடித்த நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கி, மகாலிங்கத்தின் குரலில் மயங்கி பாராட்டினார். மறுநாள் திடுமென ஒரு கச்சேரியில் மகாலிங்கத்தைப் பாடச்சொன்னார்.
மகாலிங்கத்தின் குரலையும், நடிப்பையும் நாடகத்தில் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து மகாலிங்கத்துக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம் தயாரித்த ‘‘நந்தகுமார்’’ படத்தில் நடிக்க மகாலிங்கம் வாய்ப்பு பெற்றார்.
பேசும் படங்கள் வருவதற்கு முன் நாடக உலகில் புகழ்பெற்ற நடிகராகவும், பாடகராகவும் விளங்கியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவருடைய குரலைப் பெற்றிருந்தார், மகாலிங்கம். இதன் காரணமாக கிட்டப்பா பாடல்களை அப்படியே பாடி, ‘‘கிட்டப்பாவின் எதிரொலி’’ என்று புகழ்பெற்றார்.
ஸ்ரீவள்ளி
பிரகலாதா, மாயஜோதி, வாமன அவதாரம் முதலிய படங்களில் சிறுவேடங்களில் நடித்த மகாலிங்கம், அடுத்து ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரித்த ‘‘ஸ்ரீவள்ளி’’ படத்தில் கதாநாயகனாக (வேலன், வேடன், விருத்தன்) நடித்தார். அப்படத்தில், கிட்டப்பாவின் புகழ்பெற்ற பாடல்களை (‘காயாத கானகத்தே’, ‘எல்லோரையும் போல என்னை எண்ணலாகுமோடி’) கம்பீரமாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
‘‘ஸ்ரீவள்ளி’’ 52 வாரங்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மகாலிங்கத்தின் நடிப்பும், பாட்டும் முக்கியக் காரணம்.
‘‘ஸ்ரீவள்ளி’’ படத்தை சில பங்குதாரர்களுடன் சேர்ந்து, ‘ப்ரகதி பிக்சர்ஸ்’ பேனரில் ஏவி.எம். தயாரித்தார். அடுத்து, ‘ஏவி.எம். புரடெக்ஷன்ஸ்’ நிறுவனத்தை தொடங்கி, முதல் படமாக ‘‘நாம் இருவர்’’ படத்தை 1947–ம் ஆண்டில் தயாரித்தார்.
இப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கமும், டி.ஏ.ஜெயலட்சுமியும் இணைந்து நடித்தனர். ஏவி.எம். டைரக்ட் செய்தார்.
‘‘நாம் இருவர்’’ படம் பெரிய வெற்றி பெற்றது. மகாலிங்கம் நட்சத்திர அந்தஸ்து பெற்று, தமிழ்ப்பட உலகின் மூன்றாவது சூப்பர் ஸ்டார் ஆனார். பல பட அதிபர்கள் மகாலிங்கத்தை ஒப்பந்தம் செய்தனர். சிட்டாடல் ஞானசவுந்தரியில் எம்.வி.ராஜம்மாவுடன் இணைந்து நடித்தார். படம் பெரிய வெற்றிபெற்றது.
1948–ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பாக வந்த ‘‘ஆதித்தன் கனவு’’, 1949–ம் ஆண்டில் ‘‘பவளக்கொடி’’, ‘‘மாயாவதி’’ மற்றும் ‘‘இன்பவல்லி’’ போன்ற படங்கள் மகாலிங்கத்துக்கு எதிர்பார்த்த வெற்றியை தேடித்தரவில்லை.
தவிர மகாலிங்கம் நடித்துக் கொண்டிருந்த சிலபடங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நின்றன. மகாலிங்கமும், பி.பானுமதியும் நடித்த ‘‘புலேந்திரன்’’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு விளம் பரங்கள் வெளியிடப்பட்டு, பின் கைவிடப்பட்டது.
‘‘ஆதித்தன் கனவு’’ திரைப்படத்தில் மகாலிங்கத்தின் ஜோடியாக நடித்தவர் அஞ்சலிதேவி. அவரை மகாலிங்கத்தின் ஜோடியாகக் கொண்டு ‘‘தூக்குத்தூக்கி’’ என்ற படமும் ‘‘மங்கையர்க் கரசி’’ என்ற படமும் தயாரிக்கப்பட்டு பின் தயாரிப்பாளர்களால் கைவிடப்பட்டன.
சொந்தப்படம்
இந்த சூழ்நிலையில்தான் மகாலிங்கத்தின் மனதில் ஒரு துர்பாக்கியமான எண்ணம் தோன்றியது. அது தான் சொந்தத்தில் படம் எடுப்பது.
‘‘நாம் இருவர்’’ திரைப்படத்தில் மகாலிங்கம் ஏற்ற பாத்திரத்தின் பெயர் ‘சுகுமார்’. அதுவே தனக்கு அதிர்ஷ்டம் தந்த பெயர் என்று கருதி மகாலிங்கம் தனது மகனுக்கும் சுகுமார் என்று பெயரிட்டிருந்தார். தனது திரைப்பட நிறுவனத்திற்கும் ‘ஸ்ரீ சுகுமார் புரடெக்ஷன்ஸ்’ என்று பெயரிட்டார்.
இந்நிறுவனத்தின் சார்பாக ‘மச்சரேகை’ என்ற திரைப்படம் 1950–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் மகாலிங்கம் சர்வாதிகாரியாகவும், மச்சராஜனாகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். கதாநாயகி எஸ்.வரலட்சுமி.
சி.ஆர்.சுப்பாராமன் இசையமைக்க பி.புல்லையா இயக்கியிருந்தார். படம் தோல்வியுற்றது.
மகாலிங்கம் நடித்த பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘‘லைலா–மஜ்னு’’ வெளிவந்து தோல்வி எண்ணிக்கையைக் கூட்டியது. எனினும் சிட்டாடலின் ‘‘இதயகீதம்’’ ஓரளவு ஓடி மகாலிங்கத்திற்கு ஆறுதல் தந்தது.
எனினும் தன் சொந்தப்பட முயற்சியை கைவிடாத மகாலிங்கம் 1951–ம் ஆண்டில் ‘‘மோகனசுந்தரம்’’ என்ற படத்தை ஸ்ரீ சுகுமார் புரடெக்ஷன்ஸ் சார்பில் எடுத்து வெளியிட்டார். ‘‘மோகனசுந்தரம்’’ ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய துப்பறியும் நவீனத்தை தழுவியது. மகாலிங்கம், எஸ்.வரலட்சுமி தான் படத்தில் ஜோடி. ஏ.டி.கிருஷ்ண சாமி படத்தை இயக்கியிருந்தார். படம் சுமாராக ஓடியது. டி.ஜி.லிங்கப்பா இசை அமைப்பில் ‘ஓ, ஜெகமதில் இன்பம் தான் வருவதும் எதனாலே’, ‘பாட்டு வேணுமா’ என்று மகாலிங்கம் பாடிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.
மகாலிங்கம் அடுத்து எடுத்த படம் ‘‘சின்னதுரை’’. 1952–ம் ஆண்டில் வெளிவந்தது. இப்படத்தின் கதை வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய ‘‘இருமன மோகினிகள்’’ என்ற கதையைத் தழுவியது.
இப்படத்தை மகாலிங்கமே இயக்கியிருந்தார். ஜோடியாக நடித்தவர் எஸ்.வரலட்சுமி. இப்படத்தின் கதை அமைப்பு, இடியாப்ப சிக்கலாக அமைந்து மகாலிங்கத்திற்கு தோல்வியைக் கொடுத்தது.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஜே.பி.சந்திரபாபு நடித்து ‘‘போடாராஜா பொடி நடையாக’’ என்ற பாடலையும் பாடியிருந்தார். போதாதற்கு அதே ஆண்டில் ஸ்ரீவள்ளி புரடக்ஷன்ஸ் மகாலிங்கம், மாதுரிதேவி மற்றும் வரலட்சுமியைக் கொண்டு பி.வி.கிருஷ்ணன் இயக்கத்தில் ‘‘வேலைக்காரன்’’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டது. இப்படமும் பெரிய வெற்றி பெறவில்லை.
எப்படியும் வெற்றித் தயாரிப்பாளராக வேண்டும் என்ற உணர்வு மகாலிங்கத்துக்கு இருந்து கொண்டேயிருந்தது. 1954–ம் ஆண்டில் ஸ்ரீ சுகுமார் புரடெக்ஷன்ஸ் பேனரில் ‘‘விளையாட்டு பொம்மை’’ என்ற திரைப்படம் தயாரித்தார். இந்த படத்தில் முந்தைய அவரது படங்களின் தயாரிப்பிலிருந்து சில மாறுதல்கள் செய்யப்பட்டன. குறிப்பாக இப்படத்தில் மகாலிங்கத்தின் ஜோடியாக குமாரி கமலா நடித்தார். இயக்கம் டி.ஆர்.ரகுநாத். வழக்கம்போல் படத்தில் மகாலிங்கம் பாடிய, ‘தீர்த்தக் கரையினிலே’, ‘மோகத்தைக் கொன்றுவிடு’, ‘விதிக்கு மனிதன் விளையாட்டு பொம்மை’ போன்ற சிறப்பான பாடல்களை மகாலிங்கம் பாடியிருந்தும் படம் தோல்வியுற்றது.
போட்ட இடத்தில் தானே தேடவேண்டும். இழந்த பொருளை மீட்க படத்தயாரிப்புதான் ஒரே வழி என்று திரும்பவும் அக்கிணற்றிலேயே குதித்தார் மகாலிங்கம். நடிகை கிரிஜா போன்றவர் களுக்கு வாய்ப்பளித்து தானும் நடித்து ‘‘தெருப்பாடகன்’’ என்ற படத்தை தயாரித்தார். படம் முடிக்கமுடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இப்படத்தில் நடித்த ஒரு பெரிய நடிகர் கால்ஷீட் ஒழுங்காக கொடுக்காததால் வெறுப்படைந்த மகாலிங்கம் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கம்பெனியையும் மூடிவிட்டார்.
துரதிஷ்டவசமாக படம் வெளிவரவில்லையென்றாலும் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்து ரசிகர்களை தாலாட்டியது.
மஞ்சள் கடுதாசி
கம்பெனியை மூடிய மகாலிங்கம் தனது மயிலாப்பூர் மாளிகையையும் இழக்க வேண்டிவந்தது. பின் தன் பிறப்பிடமான தென் கரையை புகலிடமாக்கிக் கொண்டார். இப்படி 1950–ம் ஆண்டிலிருந்து 1955–ம் ஆண்டு வரை அவர் தயாரித்த ஐந்து திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர் தலையில் விழுந்த இடியானது. பொன், பொருள், சுகபோக வாழ்வு என்ற எல்லாவற்றையும் இழந்த மகாலிங்கம் ‘இன்சால் வென்சி’ (‘மஞ்சள் கடுதாசி’) அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையிலும் மகாலிங்கத்துடன் பிரியாது இணைந்திருந்தவை அவரது இனிமையான, கம்பீரம் நிறைந்த சாரீரம். அது ஈட்டித்தந்த புகழும் தான்.
ஐந்து படங்கள் தயாரித்து வெளியிட்டு ‘கையை சுட்டுக்கொண்டு’ நான்கு வருடங்கள் தென்கரையில் தங்கியிருந்தார் மகாலிங்கம். காலம் இந்த கலைஞனைக் கட்டிப்போட்டது. இசை ஞானம் அவரை விடுவித்தது. ‘‘மீண்டும் சினிமா’ என்ற வாய்ப்பு மகாலிங்கத்தை இப்போது தேடிவந்தது.
மாலையிட்ட மங்கை
கவிஞர் கண்ணதாசனுக்கும் திரைப்படம் தயாரிப்பதில் நாட்டமிருந்தது. ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். முதல்படமாக சரத்சந்திர சட்டர்ஜியின் ‘‘சந்திரநாத்’’ என்ற கதையைத் தழுவி ‘‘மாலையிட்ட மங்கை’’ என்ற கதையை கவிஞர் உருவாக்கினார். நொடிந்திருந்த மகாலிங்கத்தை, எதிர்ப்புகளிடையே, கதா நாயகனாக நடிக்க வைத்தார். பண்டாரிபாயும், மைனாவதியும் உடன் நடித்தனர்.
படத்தின் டைரக்டர் ஜி.ஆர்.நாதன். தன் ஆசை தீர படத்திற்கு 17 பாடல்களை எழுதித் தீர்த்தார் கவிஞர். பாடல்கள் இனிக்க இசை அமைத்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.
நான்கு பாடல்கள் மகாலிங்கத்துக்கு. படத்தின் தலைவிதி எப்படியோ என்று சிருஷ்டியாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். படம் துவங்கும்போதே தனது கம்பீரக் குரலில் ‘‘எங்கள் திராவிடப் பொன்னாடே’’ என்று மகாலிங்கம் பாடி தியேட்டரையும் மக்களையும் அதிரவைத்தார். அடுத்து ‘‘செந்தமிழ் தேன்மொழியாள்’’. மகாலிங்கம் பாடிய இப்பாடலை ரசித்து பாடாத நாவே இல்லை.
‘‘மாலையிட்ட மங்கை’’ 1958–ம் ஆண்டில் வெளிவந்து, வெற்றி பெற்றது. மகாலிங்கத்தின் 2–வது சினிமா பயணம் தொடங்கியது.
1959–ம் ஆண்டு வெளிவந்த ‘‘அமுதவல்லி’’யில் ‘‘ஆடைகட்டி வந்த நிலவோ’’, ‘‘அபலை அஞ்சுகத்தில்’’, ‘‘வெண்ணிலா குடைபிடிக்க’’ மற்றும் மணிமேகலையில் ‘‘கண்களின் வெண்ணிலவோ’’ போன்ற மகாலிங்கம் பாடிய இனிய பாடல்கள் மக்கள் மனதில் நிரந்தரமான இடம் பிடித்தன.
1959–ம் ஆண்டில் நியூ ஏஞ்சல் புரடெக்ஷன்ஸ் மகாலிங்கம், ராகினியைக் கொண்டு ‘‘பண்ணையார் மகன்’’ என்ற படம் எடுத்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இப்படத்தில் மகாலிங்கம் ‘‘கலைவாணி கல்யாணி’’ என்ற பாடலை மிக இனிமையாகப் பாடியிருந்தார். ஆனால் படமோ வெளிவந்ததாகத் தகவலில்லை.
1960–ம் ஆண்டில் கண்ணதாசன் மறுபடியும் மகாலிங்கத்தைக் கொண்டு ‘‘கவலை இல்லாத மனிதன்’’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். படம் தோல்வியைத் தழுவியது. அதிலும் மகாலிங்கத்தின் ‘‘நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா’’ என்ற பாடல் ஆக்ரோஷமாக ஒலித்தது.
1961–ம் ஆண்டில் மகாலிங்கத்துக்கு இரண்டு படங்கள் பழனியப்பா புரடெக்ஷன்ஸ் ‘என்னைப் பார்’ மற்றும் சிவாஜி முருகனாக நடித்த ‘‘ஸ்ரீவள்ளி’’. என்னைப் பார் படத்தில் மகாலிங்கம் பாடிய ‘‘காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்’’ என்ற பாடல் ரசிகர்களை ‘‘என்னைப் பார்’’ என்று அழைத்தது. ஸ்ரீவள்ளியிலோ மகாலிங்கத்துக்கு கொடுக்கப்பட்டது நாரதர் வேடம். இந்த வேடத்தில் முருகனின் பெருமையை ‘‘கற்பகச் சோலையிலே’’ மற்றும் ‘‘பழமே ஞானபழமே’’ என்ற இரண்டு பாடல்களை கம்பீரமாக பாடியிருந்தார்.
1965–ம் ஆண்டில் வெளிவந்த ‘‘திருவிளையாடல்’’ படத்தில் பாணபத்திரர் என்ற பாத்திரத்தில் தோன்றி ‘‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’’ என்று சிவனை துதித்துப் பாடி தன் இசைத் திறனை, குரல் வளத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டினார்.
பிறகு மகாலிங்கம் திரையுலகில் மூன்றாவது சுற்று வலம்வந்தார். 1972–ம் ஆண்டில் ‘‘அகத்தியர்’’, அதிலும் நாரதர் வேடமே. மகாலிங்கத்தை மீண்டும் கதாநாயகனாக உயர்த்திய படம் 1972–ம் ஆண்டில் வெளிவந்த ‘‘திருநீலகண்டர்’’. இதில் மகாலிங்கம் திருநீலகண்டராக பாடி நடித்தும் பயனில்லை. 1939–ம் ஆண்டில் எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘‘திருநீலகண்டராக’’ அற்புதமாக பாடி நடித்த காட்சி, மக்கள் நெஞ்சை விட்டு அகலாதிருந்ததே அடிப்படை காரணம். இரண்டையும் ரசிகர்கள் ஒப்பு நோக்கிப் பார்த்து மகாலிங்கத்தின் ‘‘திருநீலகண்டரை’’ கைவிட்டனர்.
இதன்பின் 1973–ம் ஆண்டில் சாந்தி கம்பைன்ஸ் தயாரிப்பான ‘‘திருமலை தெய்வம்’’ படத்தில் நடித்தார். இதில் மகாலிங்கம் பாடிய ஒரே பாட்டு ‘‘திருவருள் தரும் தெய்வம் திருமலைத் தெய்வம்’’ என்பதே.
மகாலிங்கம் கடைசியாக நடித்தபடம் 1973–ம் ஆண்டே வெளிவந்த மற்றொரு திரைப்படமான ‘‘ராஜராஜசோழன்’’. இதில் ‘‘தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே’’ என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.வரலட்சுமி ஆகியோருடன் இணைந்தும் ‘‘தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்’’ பாட்டை சிவாஜியுடன் இணைந்து பாடினார். குரல் உச்சஸ்தாயில் ஒலித்தது.
1938–ம் ஆண்டில் நந்தகுமாரில் தொடங்கிய மகாலிங்கத்தின் திரையுலக வாழ்க்கை 1973–ம் ஆண்டில் வெளிவந்த ‘‘ராஜராஜசோழன்’’ வரை 35 ஆண்டுகள் நீடித்தது. சுமார் 40 படங்களுக்கு மேல் மகாலிங்கம் நடித்துள்ளார்.
எந்த நிலையிலும் யாருக்காகவும் மகாலிங்கம் பின்னணி பாடாமல் இறைவன் அவருக்கு அருளிய இசையின் தனித்துவத்தை இறுதிவரையில் கட்டிக்காத்தவர்.
சொந்தப் படங்கள் எடுத்ததால் சோதனையில் சிக்கிய மகாலிங்கம் 21–4–1978 அன்று தனது 55–வது வயதில் காலமானார்.

Saturday, 16 June 2018

T.R.MAHALINGAM HIGH PITCH VOICE SINGER BORN 1924 JUNE 16-1978 APRIL 21






T.R.MAHALINGAM  HIGH PITCH VOICE SINGER,ACTOR BORN 1924 JUNE 16-1978 APRIL 21





தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978)[1] 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.

‘போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக்கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பிவிட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’ முடியும் என்று 55 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியவர் டி.ஆர்.மகாலிங்கம்.

‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’போன்ற காலத்தை வென்ற பல பாடல்களைப் பாடியவர். பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளரும்கூட. இவரது கலைப் பயணம் தொடங்கியது மதுரையிலிருந்து.

வாழ்க்கைக் குறிப்பு

1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ராமகிருஷ்ண கனபாடிகள்- லட்சுமி தலட்சுமி தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.

8 வயதில் பள்ளிக்கூடம் போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.


மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம்[2] ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழவந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கமும் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் டி. எம். செளந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.

இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன் மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது. 13 வயதே நிரம்பிய மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்துவந்துவிட்டார்.

பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13 ஆவது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த பாடலைப் பாடியபடியே அறிமுகமானார் மகாலிங்கம். கிருஷ்ணரைப் பற்றி தமிழ், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.

திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

முதல் வெற்றி

மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’ 1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றன. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பக்த பிரகலாதா, பரசுராமன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை அது பெற்றுக்கொடுத்தது.

‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.எம். செட்டியாருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.

அக்காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.


இசை வாரிசு

ஒலிபெருக்கிக் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், உரத்த குரலில் பாடித்தான் நாடக ரசிகர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி. கிட்டப்பா என்றால் உயிர்.

எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே (1933) துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட, கிட்டப்பாவின் பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.

சினிமாவைத் தூக்கியெறிந்தார்!


புகழின் உச்சியை அடையும்போது, திரைத்துறையினர் பொதுவாகச் செய்யும் அதே தவறுகளை செய்தார் மகாலிங்கம். தன் படத்துக்கு இன்னார்தான் இசையமைக்க வேண்டும், இன்னாரைத்தான் நாயகியாகப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுக்க, தானே தயாரிப்பில் இறங்கினார் மகாலிங்கம்.

மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை என்று அவர் தயாரித்து நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவின.

பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.

மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.

கண்ணதாசனுடன் டி.ஆர். மகாலிங்கம்

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.

அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக அமர்த்தினார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தவர் கண்ணதாசன்தான்.

17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. 1958-ல் வெளியான அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்.

அரசியலில் சிக்காதவர்

டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும் நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில் பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால், இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.

இறுதிக் காலம்

மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில் நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டார்.

நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.

சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.

தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்னமும் வாழ்கிறார் டி.ஆர். மகாலிங்கம்


நடித்த திரைப்படங்கள்

பூலோக ரம்பை (1940)
சதி முரளி (1940)
தயாளன் (1941)
பிரகலாதா (1941)
நந்தனார் (1942)
மனோன்மணி (1942)
ஸ்ரீ வள்ளி (1945)
நாம் இருவர் (1947)
ஞானசௌந்தரி (1948)
வேதாள உலகம் (1948)
ஆதித்தன் கனவு (1948)
பவளக்கொடி (1949)
மாயாவதி (1949)
இதய கீதம் (1950)
லைலா மஜ்னு) (1950)
மச்சரேகை (1950)
மோகனசுந்தரம் (1951)
வேலைக்காரன் (1952)
சின்னதுரை (1952)
விளையாட்டு பொம்மை (1954)
மாலையிட்ட மங்கை (1958)
அபலை அஞ்சுகம் (1959)
மணிமேகலை (1959)
அமுதவல்லி (1959
ரத்தினபுரி இளவரசி (1960)
ஆடவந்த தெய்வம் (1960)
கவலை இல்லாத மனிதன் (1960)
தந்தைக்குப்பின் தமையன் (1960)
ஸ்ரீ வள்ளி (1961)
திருவிளையாடல் (1965)
திருநீலகண்டர் (1972)
அகத்தியர் (1972)
ராஜ ராஜ சோழன் (1973)
ஸ்ரீ கிருஷ்ணலீலா (1977)
தெருப்பாடகன்
பண்ணையார் மகள்
என்னைப் பார்
திருமலை தெய்வம்


டி.ஆர்.மகாலிங்கம் 91-வது பிறந்த தினம்:
 ஜூன் 16


‘போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக்கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பிவிட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’ முடியும் என்று 55 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியவர் டி.ஆர்.மகாலிங்கம்.

‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’போன்ற காலத்தை வென்ற பல பாடல்களைப் பாடியவர். பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளரும்கூட. இவரது கலைப் பயணம் தொடங்கியது மதுரையிலிருந்து.

14 வயதில் சினிமா

1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ராமகிருஷ்ண கனபாடிகள்- லட்சுமி தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.

8 வயதில் பள்ளிக்கூடம் போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.

இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன் மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது. 14 வயதே நிரம்பிய மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்துவந்துவிட்டார்.

முதல் வெற்றி

மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’ 1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றன. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பக்த பிரகலாதா, பரசுராமன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை அது பெற்றுக்கொடுத்தது.

‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.எம். செட்டியாருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.

அக்காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.

இசை வாரிசு

ஒலிபெருக்கிக் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், உரத்த குரலில் பாடித்தான் நாடக ரசிகர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி. கிட்டப்பா என்றால் உயிர்.

எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே (1933) துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட, கிட்டப்பாவின் பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.

சினிமாவைத் தூக்கியெறிந்தார்!

புகழின் உச்சியை அடையும்போது, திரைத்துறையினர் பொதுவாகச் செய்யும் அதே தவறுகளை செய்தார் மகாலிங்கம். தன் படத்துக்கு இன்னார்தான் இசையமைக்க வேண்டும், இன்னாரைத்தான் நாயகியாகப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுக்க, தானே தயாரிப்பில் இறங்கினார் மகாலிங்கம்.

மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை என்று அவர் தயாரித்து நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவின.

பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.

மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.

கண்ணதாசனுடன் டி.ஆர். மகாலிங்கம்

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.

அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக அமர்த்தினார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தவர் கண்ணதாசன்தான்.

17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. 1958-ல் வெளியான அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்.

அரசியலில் சிக்காதவர்

டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும் நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில் பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால், இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.

இறுதிக் காலம்

மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில் நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டார்.

நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.

சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.

தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்னமும் வாழ்கிறார் டி.ஆர். மகாலிங்கம்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஞானம்


சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வே கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.

தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்னமும் வாழ்கிறார் டி.ஆர். மகாலிங்கம்.