Showing posts with label எம்ஜியார். Show all posts
Showing posts with label எம்ஜியார். Show all posts

Wednesday, 31 August 2016

கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை படத்தைப் பார்த்த எம்ஜியார்


கோவைத் தம்பி தயாரித்த 
பயணங்கள் முடிவதில்லை 
படத்தைப் பார்த்த எம்ஜியார்








கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை படத்தைப் பார்த்த எம்ஜியார். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால் கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.


பயணங்கள் முடிவதில்லை கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய தலைச்சன் குழந்தையை தன் தலைவர் எம்ஜியார்  பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.

எம்ஜியார் ரை சந்தித்தார். அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். பயணங்கள் முடிவதில்லை என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


குடும்பத்தோடு வரலாமா? என்று சிரித்துக்கொண்டே எம்.ஜp.ஆர். கேட்டார்.

கோவைத்தம்பி அசந்துவிட்டார். என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்! என்றார்.
1982 பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவி தியேட்டரில், எம்.ஜp.ஆருக்காக பயணங்கள் முடிவதில்லை படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்ஜியார்  வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்ஜியார். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் ஹதிக் திக் என்று அடித்துக்கொண்டது.

கிளைமாக்ஸ் வந்தபோது, அரங்கத்தில் பூரண  அமைதி நிலவியது. ஆனால் லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.

இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:

"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்ஜியார் உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார். பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம் அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மௌனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.
எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.


அருகில் நின்ற சில அமைச்சர்கள், நாங்கள் அப்போதே சொன்னோமே கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா! என்று என்னிடம் கூறினார்கள்.
சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நின்றது. SECURITY மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார் என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.


எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்ஜியாரைப் பார்த்துக் கும்பிட்டேன்.
இந்தப் படத்தின் மூலம் இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக  எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள் என்று கூறினார்.

என் கண் கலங்கி விட்டது. எம்ஜியாரின் கார் புறப்பட்டு பார்வையில் இருந்து மறையும் வரை அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.
என் இரண்டாவது படத்தை மணிவண்ணன் டைரக்'னில் தயாரித்தேன். இளமைக் காலங்கள் என்பது படத்தின் பெயர். மோகனும் சசிகலாவும் நடித்தார்கள்.

18-8-1983ல் படம் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றிப்படம்தான். 200 நாட்கள் ஓடியது.  இரண்டாவது படமும் வெற்றிப்படமாக அமைந்ததால் கலைத்துறையில் எனது ஈடுபாடு அதிகமாகியது. அடுத்த படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.


முதல் படமான பயணங்கள் முடிவதில்லை டைரக்ட் செய்து பெரும் வெற்றியடைய வைத்த டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்'னில் சிவகுமார் - அம்பிகா ஆகியோரை வைத்து நான் பாடும் பாடல் என்ற படத்தைத் தயாரித்தேன். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரில் எடுத்தோம். இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை சுந்தர்ராஜன் வைத்திருந்ததால் எதை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது. 

எந்த கிளைமாக்ஸை வைத்துக் கொள்வது என்று நானும் சுந்தர்ராஜனும் கடும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தோம். கதாநாயகி அம்பிகா இறப்பது போல அமைந்தது ஒரு கிளைமாக்ஸ். சிவகுமார் தொட்டு பொட்டு வைத்த நெற்றியை அம்பிகாவே நெருப்புக்கட்டையை எடுத்து சுட்டு  வைத்துக் கொள்வது போல மற்றொரு கிளைமாக்ஸ். இரண்டு கிளைமாக்ஸ்களில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதால் ரீ ரிக்கார்டிங் செய்யும்போது இசையமைப்பாளர் இளையராஜh முடிவிற்கே விட்டு விடுவோம் என்று இருவரும் தீர்மானித்தோம்.




அப்படிஇளையராஜா  தேர்ந்தெடுத்த கிளைமாக்ஸ்தான் நான் பாடும் பாடல் கிளைமாக்ஸ். சிவகுமார் பொட்டு வைத்த நெற்றியை அம்பிகா - தானே சுட்டுக்கொள்வது போன்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியால் படம் சக்கை போடு போட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது. 
தொடர்ந்து  மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, மதர்லேண்ட் பிக்சர்ஸ் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.

Tuesday, 30 August 2016

எம்ஜியாரும் அவரது நாஜிக்கட்சி போன்ற செயல்பாடும் - தமிழகத்தை குட்டி சுவராக்கிய எம்ஜியார்



எம்ஜியாரும் அவரது நாஜிக்கட்சி 
போன்ற செயல்பாடும் -
தமிழகத்தை குட்டி சுவராக்கிய எம்ஜியார் 


எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், ஜெயலலிதாவின் தற்போதைய அனைத்து அரசியல் விகாரங்களுக்கும் பிதாமகராகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் எம்ஜிஆரே!

கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அதனை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக அனைத்து லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளுக்கும் ஒற்றைச்சாளர ஊற்றுக்கண்ணாக அவரே விளங்கினார். அவருக்குத் தெரியாமல் வேறு யாரும் அதில் “பங்குபெற” முடியாது என்ற பரிணாம நிலையே அவரது சாதனை!

தனது திரைப்படங்களில் மதுவுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் எம்ஜிஆர், 

மதுவிலக்கு என்பது ஓர்  ஏமாற்று முழக்கம். இது மனச்சாட்சி உள்ளவர்களுக்கு தெரியும். மது இல்லாத தமிழகம் இருந்ததாக கூறுவது முற்றிலும் புரட்டு. சங்கத் தமிழ் நூல்களை உரத்துப் பேசும் சிலரே இப்படி ஒரு பொய்யைக் கட்டவிழ்ப்பதும், கட்டமைப்பதும் எத்தனை பெரிய மோசடி! எந்தக் காலத்தில் தமிழகத்தில் மது இல்லை. ஆனால், மதியைக் கெடுக்கும் விஷத்தை மது என்ற பெயரில் தமிழர்கள் அருந்தவில்லை. பனை, தென்னைகளில் இருந்து கிடைத்த ஆரோக்கியமான கள்ளையும், பழங்களையும் இன்ன பிற மூலிகைகளையும் ஊற வைத்த தேரல்களையும் உண்டு, களித்து உடல் வலுவுடன் காணப்பட்டிருக்கின்றனர். இல்லாவிட்டால் போரும், காதலும் எப்படி அவர்களது வாழ்க்கை முறையாக இருந்திருக்க முடியும்.


ஆனால், மது என்ற பெயரால் அந்நிய நிறுவனங்களின் தயாரிப்புகளையும், போதாக்குறைக்கு இங்குள்ள விஷக்கழிவுகளையும் கலந்து கொடுத்ததால்தான் மது என்பது உயிர்க்கொல்லியாக மாறியது. கள் என்பது ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால் கள்ளச்சாராயம் ஏன் வருகிறது? இன்று மதுவுக்கு எதிராக வேஷம் கட்டி ஆடும் பல அரசியல் கட்சிகளின் பொருளாதார மூலதனமே கள்ளச்சாராய வியாபாரத்தின் மூலம் திரட்டப்பட்டதுதான். 

எம்.ஜி.ஆரும் தனது அரசியல் சுகபோகத் தேவைகளுக்கு சாராய வியாபாரிகளையே நம்பி இருந்தார். அதற்குப் பரிசாக அவர்களை கல்வித் தந்தையர்களாகவும், மருத்துவ தேவ தூதர்களாகவும் ஆளாக்கி மகிழ்ந்தார். போலீஸ்காரராக இருந்து மாமூல் வாங்கிப் பிழைத்து, பின்னர் எம்.ஜி.ஆரின் முக்கிய அடியாட்களில் ஒருவராக வாழ்க்கையில் முன்னேறியவர்தான் ஜேப்பியார். அவர் இப்போது தமிழகத்தின் தவிர்க்க முடியாத கல்வித்தந்தை. நாலாந்தரக் காமெடி நடிகராகவும், எம்.ஜி.ஆரின் அடிவருடியாகவும் இருந்த ஐசரிவேலனும், அவரது மகனும் கல்வித் தந்தைகள் ஆனார்கள். 


இந்த வரிசை ஏ.சி.சண்முகம், ஜி.விஸ்வநாதன், என நீண்டு கொண்டே செல்கிறது. அத்தனை பேரும் இன்று கற்பனையிலும் கணக்கிட முடியாத அளவுக்கு செல்வத்தைக் குவித்து வைத்துள்ள பில்லியன் டாலர் கோடீஸ்வரர்கள். ஏழைப்பிள்ளைகள் அனைவருக்கும் உயர் கல்வி வரை இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜரின் கனவில், இப்படித்தான் எம்.ஜி.ஆர் அமிலத்தை ஊற்றி எரித்துச் சாம்பலாக்கினார். 

இத்தனைக்கும் திமுகவில் இருக்கும் போதே, அண்ணாவை எரிச்சல் படுத்துவதற்காக காமராஜரே என் தலைவர் என்ற முழக்கத்தை வேறு முன்வைத்தவர் எம்.ஜி.ஆர். தொடக்கப்பள்ளி வரையிலேனும் ஏழை, நடுத்தரக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கிடைத்து வந்த தரமான கல்வி, எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு முற்றிலும் கடைச்சரக்காக மாறியது. எல்.கே.ஜி, யுகேஜிக்கே இப்போது எவ்வளவு பணம் கட்ட வேண்டி உள்ளது என்பதை இன்றைய பெற்றோர் அறிவர். அத்தோடு மட்டுமா எம்.ஜி.ஆர் விட்டார்.

சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், 


போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார்.

 முனு ஆதி, 
லியாகத் அலிகான், 
அங்கமுத்து, 
உக்கம் சந்து, 
பழக்கடை பாண்டியன், 
கோடம்பாக்கம் குமார், 
சுலோச்சனா சம்பத், 
கல்யாணி ராமசாமி, 
அனகாபுத்தூர் ராமலிங்கம், 
பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். 



ஜெயலலிதா, 
வெண்ணிற ஆடை நிர்மலா, 
கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார். 

தனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, 
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது 
தேசத்துரோக வழக்கு, 
சட்டமன்ற பதவி பறிப்பு, 
வெடி குண்டு வழக்கு, 
இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட 
கட்சியினர் மீது தாக்குதல், 

தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என எம்.ஜி.ஆரது அரசியல் அக்கிரமங்கள் எல்லையின்றி நீடித்தன.

எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிக்கைகள் மீது அடியாட்களை ஏவித் தாக்கினார்; 


சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார்.

 சிறை – 
சித்திரவதை – 
படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் நிகழ்ந்த சில மோசமான சம்பவங்களை அப்போதைய ஏடுகள் சில பட்டியலிட்டிருக்கின்றன. அவற்றில் இருந்து:

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். 

மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 

850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், போலீசாராலும் தாக்கப்பட்டனர்.

சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். 


எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆசிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர்.  
விடுதியைச் சூறையாடினர்.

தொழிலாளர்கள் மீது தாக்குதல்

1974-க்குப் பிறகு ஊதிய உயர்வே கண்டிராத பஞ்சாலைத் தொழிலாளர்கள் 77-78-ல் வேலை நிறுத்தத் தாக்கீது கொடுத்தபோது எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவேயில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய இரண்டாம் நாளே போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக எம்.ஜி.ஆர். அரசு முடிவு செய்தது. 

இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலீசை ஏவித் தடியடிப் பிரயோகம் நடத்தியது; நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர் மீது பொய் வழக்குகள் போட்டது.  பின்னர், தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாகத் திடீரென்று ‘சுதந்திர’ தினத்தன்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு செய்தார். ஆனால், போலீசார் எந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளவில்லை.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று யார் போராடினாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்று மிரட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்திரா கைது செய்யப்பட்டதையொட்டி வெடிகுண்டு வீசியும், பஸ்களைத் தாக்கியும் பலரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்டுக் கைதான காங்கிரஸ் கட்சியினர் பலரை விடுதலை செய்தார். 

1972-ல் தனிக்கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க. வினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களுக்காக அவர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்ட எம்.ஜி.ஆர்., பஞ்சாலைத் தொழிலாளருக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகளை விலக்கிக் கொள்ளவில்லை.


போக்குவரத்துத் தொழிலாளர் போட்டத்தின் போது தீவிரமாக நடந்து கொண்டிருந்தன டி.வி.எஸ் – டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் போராட்டங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் மீது நிர்வாகம் திணித்திருந்த காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தலைமையைத் தூக்கியெறிந்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத் தலைவரான வி.பி. சிந்தன் தலைமையை சென்னை – பாடி டி.வி.எஸ். தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். 

மதுரையிலிருந்து  குண்டர்படையை இறக்குமதி செய்து ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தாக்கியது நிர்வாகம்.தொழிலாளருக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில், பாடி – வில்லிவாக்கம் – அம்பத்தூர் தொழில் வட்டாரமெங்கும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டன. டி.வி.எஸ். ஆலைக்குள் நிர்வாகத்தின் குண்டர் படை திரட்டப்பட்டது. நான்கு மாதக் கதவடைப்புக்குப் பிறகு, 350 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த பிறகு நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

 நிர்வாகத்தின் குண்டர் படையும், போலீசும் தொழிலாளர்களை மிரட்டி அரசு பேருந்துகளில் கடத்திப் போய் டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தியை நடத்தினர்.டி.வி.எஸ். ஆலைக்கு வெளியே போடப்பட்ட தொழிலாளர் பந்தல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போராடும் தொழிலாளர்களை குண்டர்கள் தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். போலீசார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். 

டி.வி.எஸ். பாணியைத் தொடர்வது என்று மற்ற முதலாளிகள் தீர்மானிக்கவே, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கதவடைப்பும் தொடங்கியது. சென்னை நகரத் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர்.மதுரை மாநகரத் தேர்தலுக்குப் பிறகு டி.வி.எஸ்., டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் பிரச்சிைனையைத் தீர்க்காமல் அவர்களை ஒடுக்குவதில் இறங்கியது எம்.ஜி.ஆர். அரசு. 

1978 அக்டோபர் 16-ல் மாநில மற்றும் மத்திய போலீசை ஏவி தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அமைதியாக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. ஆத்திரமுற்று வேலை நிறுத்தத்தில் இறங்கி வெளியேற முயன்ற “டன்லப்” தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. “டன்லப்” தொழிற்சங்க அலுவலகத்திலிருந்த குசேலர், கோபு, சுப்பு ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குகள் போட்டது.

போராட்டத்தை உடைக்கும் எம்.ஜி.ஆர்.- டி.வி.எஸ். முதலாளியின் அராஜக வேலைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டு சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் அரிபட் மற்றும் இருவர் உயர் நீதிமன்றத்தருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஐந்தாம் நாள் “வலது” கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கோபு, சுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் குடும்பத்தினர். எம்.ஜி.ஆர். அரசின் உத்தரவுப்படி, அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ்படை. பெண்களும், குழந்தைகளும்,  கம்யூனிஸ்டுத் தலைவர்களும் படுகாயமுற்றனர். 


அதேசமயம், உயர்நீதிமன்றத்தருகே உண்ணாவிரதமிருந்தவர்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்படை தாக்கியது. 45 நிமிடம் வெறியாட்டம் போட்டு, போலீஸ் நிலையத்துக்கு அருகாமையில் இருந்த உண்ணாவிரதப் பந்தலைக் கொளுத்தியது; தொழிலாளர்களும் தலைவர்களும் சிதறி ஓடினர்.எம்.ஜி.ஆர். அரசின் இந்தக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 1978 அக்.23-ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்துவதாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தன. கடையடைப்பை முறியடிப்பதாக எம்.ஜி.ஆர் யுத்தப் பிரகடனம் செய்தார். 10 நாட்களுக்குக் கல்லூரிகள் மூடப்பட்டு வேறு மாநில மற்றும் மத்திய போலீசுப் படைகள் குவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி  மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. வினர் வெறியாட்டம் போட்டனர். ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.

இனி “டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ்” பாணியிலே தொழிலாளர்களை ஒடுக்குவது என்று முதலாளிகளும் எம்.ஜி.ஆர். அரசும் தீர்மானித்தனர். ஆளும் கட்சித் தலைமையிலான “அல்ட்ரா மரைன்” ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கூட பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேகதிதான் போராடிய கோவை லட்சுமி மிஷின் டூல்ஸ், மேட்டூர் மில்ஸ், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும் நேர்ந்தது. 

அதன் பிறகு குறிப்படத் தகுந்த அளவு உறுதியாக நடந்தது திருச்சி “சிம்கோ மீட்டர்ஸ்” ஆலைத் தொழிலாளர் போராட்டம்தான். இங்கும்  ஐ.என்.டி.யு.சி.யின் தலைமையும், துரோக ஒப்பந்தமும்  தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர்.டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டங்களை முறியடித்த மமதை, அமெரிக்காவில் தனக்கு “ராஜ உபசாரம்” செய்த “சிம்கோ மீட்டர்ஸ்” முதலாளியிடம் விசுவாசம் காரணமாக போலீசையும், அ.தி.மு.க. வெண் சட்டைப் படையையும் “சிம்கோ” தொழிலாளர் மீது ஏவினார் எம்.ஜிஆர். தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, சங்கத்தலைவர் உமாநாத்  வீடும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டது. திருச்சி நகர மக்கள் பலர் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைத்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகள்

தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். 

அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. 

கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பேருந்துகளை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். 

நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி  ஆத்திரமடைந்து விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு போலீசார், விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தனர். சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து மூதாட்டிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கினர். பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில்  நாள் முழுவதும்  நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது போலீஸ். 

தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.

அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்

ஒடுக்குமுறைகள் மூலம் அதிகாரத்தின் குரூர ருசியைச் சுவைத்திருந்த  எம்.ஜி.ஆர்., ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் பாய்ந்தார். ஊதிய உயர்வு, ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் பிறகோரிக்கைகளுக்காக 1978 மார்ச்சில் மாநில அரசு ஊழியர்கள் போராடியபோது தனது கட்சி தலைமையில் போட்டிச் சங்கத்தை தொடங்கினார். 30 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது.


 “விவசாயப் பெண்களுக்கு மானத்தைக் காத்துக் கொள்ள துணி கூட இல்லை, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமா? பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரித்தார். பொதுமக்கள் என்கிற போர்வையில் அ.தி.மு.க.வினரை ஏவி அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றார். ஆயுதங்களுடன் வந்த குண்டர்களைப் பிடித்துக் கொடுத்த போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

வேலை நிறுத்தத்தை எதிர்க்கும்படி அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை விட்டார், எம்.ஜி.ஆர். கைதுகள், வேலைநீக்கங்கள், தற்காலிக ஊழியர்கள் வேலைநீக்கம்  – என பழிவாங்குவதில் ஈடுபட்டார். வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாகவும் அறிவிப்புகள் கொடுத்தார். 

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டு உருவாகி உறுதிப்பட்டவுடன் சற்றுப் பின் வாங்கிய அவர், சில்லரைச்  சலுகைகளை அறிவித்தார். போராட்டத்துக்குத் தலைமையேற்ற சிவ.இளங்கோ தலைமையிலான கும்பலை விலைக்கு வாங்கினார்.

போலீசாரையும் விட்டு வைக்காத எம்.ஜி.ஆர்

பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். 

ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது அடிவருடிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.

போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.


இந்துத்துவ இயக்கங்கள் வளர உதவிய எம்.ஜிஆர்


பெரியாரின் பகுத்தறிவு – சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடர்ந்து சற்று வரம்புக்குள் இருந்த சாதி, மதவெறியர்கள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு புதிய நம்பிக்கை – வேகத்துடன் சாதி-மதக் கலவரங்களில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு விழுப்புரம் நகரில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்பட்டனர். 12 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். 

பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர். குடிசைகள் கொளுத்தப்பட்டன. மண்டைக்காடு, புளியங்குடி, மீனாட்சிபுரம், பேர்ணாம்பட்டு, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாதி-மதக் கலவரங்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டனர். இந்து முன்னணியின் பெயரில், எம்.ஜி.ஆர். கட்சியினரின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.பண்ணையார்களும், அ.தி.மு.க. காரர்களும், முதலாளிகளும், போலீசாரும் பல கொலைகள் புரிந்தனர்.  

தஞ்சை விவசாய சங்கத் தலைவர் வெங்கடாச்சலம், பண்ணையார்களால் கொல்லப்பட்டார். நாகை எம்.பி. முருகையன் அ.தி.மு.க. கவினரால் கொல்லப்பட்டார். மதுராந்தகம் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டார். கோயில் நகை கொள்ளைகளில் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்படிருந்தனர்.திருச்செந்தூர் கோவிலில் நகை சரிபார்க்கும் அதிகாரி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு  எம்.ஜி.ஆர் அரசு முயலவேயில்லை; காரணம் தெரிந்ததே!

அப்பாவிகளும் தப்பவில்லை

மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறத் தொடங்கவிட்டது, எம்.ஜி.ஆர் அரசு. போலீஸ் “லாக்-அப்” சித்திரவதை கொலையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகப் போலீசு, சென்னை – வியாசர்பாடியில் சந்தேகத்தின் பேரில் இழுத்துப்போன ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது. நியாயம் கேட்கத் திரண்ட பகுதி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது.

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

உலக வங்கி உத்தரவின் கீழ் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக முடிவு செய்து பெரும் போலீஸ் படையுடன் போய் இரவோடு இரவாக மீனவர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்காக, ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொன்றது; மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது.பஸ் வசதி கோரிப் போராடிய மக்களைக்கூட விட்டு வைக்கவில்லை. 


பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மூவரைக் கொன்றது. பெரும் போலீஸ் படை கிராமத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் தாக்கியது. மிரண்டு போன மக்கள் தப்பி ஓடி, காடுகளுக்குள்  தஞ்சம் புகுந்தனர்.

கண்மூடித்தனமான ஒடுக்குமுறைச் சட்டங்கள்

சாதாரண மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய எம்.ஜி.ஆர். புரட்சிகர சிந்தனையாளர்களை மட்டும் விட்டு வைப்பாரா? வட ஆற்காடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நக்சல்பாரிகள் வேட்டை என்ற பெயரில் 21 பேரை மோகன்தாஸ் – தேவாரம் போலீஸ் கும்பல் படுகொலை செய்தது. போலீசின் படுகொலைகளை விசாரிக்கப்போன மக்கள் உரிமைஅமைப்பினரையும், பத்திரிக்கையாளரையும் கூட போலீசு தாக்கியது. 

மாநிலம் முழுவதும் பலர் மீது தேச விரோதப் பொய் வழக்குப் போட்டது.வரம்பில்லாத இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் மூழ்கிக் கிடந்த எம்.ஜி.ஆர். அவற்றை அம்பலப்படுத்திக் குற்றஞ்சாட்டுவோரையே பழிவாங்கும் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி குற்றஞ்சாட்டுவோர்தான் அவற்றை நிரூபிக்க வேண்டும்; தவறினால், அவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று மிரட்டினார்.

 கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, அதை விலக்கிக்கொண்டார்.அரசை விமர்சிக்கும் “அப்பாவி” பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார். குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல் குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்!

கள்ளச்சாராயத்தில் கரைந்த ஊழல் எதிர்ப்பு

அ.தி.மு.க. ஆரம்பித்ததிலிருந்து தாய்மார்களுக்காக கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர், சாராயம், லஞ்ச ஊழலின் பரம எதிரி போல நடித்தார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டத்தைக் கடுமையாக்கினார். இது கள்ளச் சாராய பெரும் புள்ளிகளுக்கும், போலீசாருக்கும் கொள்ளையடிப்பதற்கு மிகவும் வசதியாகிப் போனது. கள்ளச் சாராயத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பணம் கட்டி உரிமை பெற்றவர்களுக்கு மட்டும் சாராயம் குடிக்க அனுமதி என்றார். 


அப்புறம், படிப்படியாக கள்ளு – சாராயக் கடைகளை முழுவதுமாகத் திறந்து விட்டார். சாராயத் தொழிற்சாலை வைக்கும் உரிமை வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அம்பலப்பட்டு போனார்.மதம் ஏழை – எளிய மக்களை ஏய்க்கும் போதையாக இருப்பதைப் போலவே, சினிமா ஒரு கவர்ச்சிப் போதையைத் தருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அதைக் கொண்டு கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற உதிரிப் பாட்டாளிகளையும் ஏய்த்தார்.

 போதாக்குறைக்கு சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளின் கூட்டு, பிற பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற உதவியது. சத்துணவு உட்பட ஏழைகள் மீதான அவரது கரிசனையும் தான தருமங்களும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கே உரித்தான அடிமைகளின் பாலான பரிவுதான்.அவசர நிலையை ஆதரித்த எம்.ஜி.ஆர். அதன் கொடுமைகளை விசாரித்த ஷா, அனந்த நாராயணன் மற்றும் இஸ்மாயில் கமிசன் அறிக்கைககளைக் குப்பைத் தொட்டியில் வீசினார். மாறாக, சென்னை மத்திய சிறை சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பொன்.பரமகுரு, வித்யாசாகர் உள்ளிட்டவர்களுக்குப் பதவி உயர்வளித்தார். 

ஜனதா ஆட்சியானாலும், அது கொண்டு வந்த தொழிலாளர் விரோத தொழிலுறவு மசோதா போன்றவற்றை ஆதரித்தார். தாய்க்குலத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜீவ் கொண்டுவந்த பிற்போக்குத்தனமான முஸ்லீம் மண முறிவு (ஷாரியத்) சட்டத்தை ஆதரித்தார்.

இதையெல்லாம் விட இடஒதுக்கீடு விவகாரத்தில் இன்னொரு கூத்தும் நடந்தது. 1977ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளின் ஆலோசனையை ஏற்று, ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள பிற்படுத்தப் பட்டோர், உயர் வகுப்பினராகக் கருதப்படுவார்கள் என அரசாணை பிறப்பித்தார். 


1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கு எம்.ஜி.ஆர் உலைவைத்துவிட்ட விவரத்தைக் கூறி திமுக தீவிரமாக பரப்புரை செய்தது. இதன் விளைவாக திமுக 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக 2 தொகுகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைப்பார்த்து மிரண்டு போன எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கனவே கலைஞர் கருணாநிதி காலத்தில் அளிக்கப்பட்டிருந்த 31 சதவீத இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக அதிகரித்து ஆணை பிறப்பித்தார்.

 ஆக திரையில் தன்னைப்பற்றி கட்டமைத்திருந்த புரட்சியாளர் சித்திரத்திற்கு சற்றும் தொடர்பில்லாத மோசமான, மக்களுக்கு வெகுமக்களுக்கு எதிரானதோர் ஆட்சியையே எம்.ஜி.ஆர் நடத்தி வந்தார். ஆனால், அதை அந்த மக்களே உணராமல் செய்த பெருமை நம்மூர் கம்யூனிஸ்டுகளுக்கே உரியது. மதுவுக்கும், ஊழலுக்கும் எதிராக அவர்கள் இப்போது கூக்குரலிடுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. 

இடி அமீன் ஆட்சி என வர்ணிக்கப்பட்ட எம்ஜிஆரின் மக்கள் விரோத ஆட்சியை கடுமையாக எதிர்க்க வேண்டிய இடதுசாரிகள்  அதனை ஆதரித்து வந்த நிலையில், கலைஞர் தலைமையிலான திமுக மட்டுமே தொடர்ச்சியாக 13 ஆண்டுகாலமாக சமரசமின்றி எதிர்த்து வந்தது. வரலாற்றில் இது ஒரு நகைமுரண்தான். எனினும் இதுதான் வரலாறு. திமுகவின் அரசியல் திண்மையை காலமே உரசிப் பார்த்த தருணம் என்றே அதைக் கூறலாம்.

அம்பிகா, 


ராதா, 
சாராய உடையார் போன்ற தனது எடுபிடிகளுக்கு அரசு சொத்துக்களை அள்ளி வழங்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கு அரசு பதவிகளை தானமாக வழங்கினார். எளியமக்களுக்கு பல்பொடி, செருப்பு, பிளாஸ்டிக் குடம் போன்ற “அதிமுக்கியமான” பொருட்களை இலவசமாக வழங்கினார். அந்த வகையில் அவர் ஒரு வள்ளல்தான். 

மொத்தத்தில் தனது பத்தாண்டு கால ஆட்சியில், தமிழகத்தின் அடிநாதமான அனைத்து உன்னதங்களையும் கூர் மழுங்கச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர். இவரைப் பின் பற்றாமல் ஜெயலலிதா நாட்டைக் கெடுத்துவிட்டதாக சில எம்.ஜி.ஆர் விசவாசிகள் மூக்கைச் சிந்துவதுதான் வேதனையான வேடிக்கை.


Saturday, 6 August 2016

எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு- ஆரூர் தாஸ்

 எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு- ஆரூர் தாஸ் 


 கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம்.

இப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.

சதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டாம். வேறு வீடு பார்த்து, குடிவையுங்கள்” என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

இதைத் தொடர்ந்து, “தாய்வீடு” இருந்த தெருவுக்கு எதிர்த்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு வி.என்.ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் வசித்து வந்தார்.
எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்ற நான், வெளியிலிருந்த அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். உடனே திரைச்சீலையை விலக்கிக் கொண்டு பட்டு ஜிப்பா அணிந்து, அதன் இரு கைப்பகுதித் துணியை உருட்டி, முழங்கைக்கு மேலே முண்டா தெரியும்படியாகப் பொருத்தியவாறு எலுமிச்சம் பழ நிறத்தில் ஒருவர் வெளியில் வந்தார்.

அவரது முகத்தைப் பார்த்தேன். ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மோகினி’, ‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’ போன்ற படங்களில் நான் பார்த்து ரசித்த அதே முகம். என் இதயத்தை எடுத்து பனிக்கட்டி மீது வைத்து, அது இளகி உருகுவது போல ஓர் உணர்வு! ஒப்பனை இல்லாமலே எம்.ஜி.ஆர். அழகாக இருந்தார். கும்பிட்டேன். கும்பிட்டார்.

ஒரு நொடிப் பொழுது மலைத்து மவுனமாக நின்றேன்.
அந்த மவுனத்தை அவரே கலைத்தார்.
‘‘யார் நீங்க? என்ன வேணும்?’’
‘‘வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் கிட்டேர்ந்து வரேன். இந்த ராணி லலிதாங்கி பைலை ஒங்ககிட்டே குடுத்திட்டு வரச்சொன்னாரு.

‘‘நீங்க யாரு?’’

‘‘அவரோட அஸிஸ்டெண்ட்.’’

‘‘சரி, இரண்டு நாள் கழித்து இதே நேரத்துக்கு இங்கே வாங்க. நீங்க போகலாம்’’ என்று உள்ளே போய்விட்டார்.
திரும்பி கோடம்பாக்கம் வந்து இந்த விவரத்தை வாத்தியாரிடம் சொன்னேன்.
மூன்றாவது நாள் காலை மணி 9. எம்.ஜி.ஆர். இல்லம். அழைப்பு மணி.
எம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். கையில் லலிதாங்கி பைலுடன் சில காகிதங்கள்.


வெளிவராந்தாவில் வட கோடியில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். எதிரே என்னை உட்காரச் சொன்னார்.
பைலையும், காகிதங்களையும் மேசை மீது வைத்தார். கேட்டார். ‘‘இந்தத் திரைக்கதையை யார் எழுதினது?’’

‘‘நாடகக் கதையையும், சில குறிப்புகளையும் வாத்தி யாரு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு நான்தான் எழுதினேன். வாத்தியார்கிட்டேயும் படித்து காட்டினேன். நல்லாருக்குன்னாரு. அதுக்கப் புறந்தான் ஒங்ககிட்டே கொடுக்கச் சொன்னாரு.’’

‘‘ஓகோ, சரி. லலிதாங்கி ‘ஒடியாத இடையினால் ஊர்வசியாக ஆடினாள்’ அப்படின்னு ஒரு காட்சியில் எழுதியிருக்கீங்களே. அது என்ன ஒடியாத இடை? அப்படின்னா என்ன?’’ என்று கேட்டார். அதற்கு நான் விளக்கம் சொன்னேன்.

‘‘துடி இடை, பிடி இடை, கொடி இடை, மின்னல் இடை, மெல்லிடை, சிற்றிடை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘‘இருங்க இருங்க. இப்ப நீங்க சொன்ன ஒவ்வொண்ணுக்கும் எனக்கு விளக்கம் சொல்லுங்க.’’
‘‘துடின்னா உடுக்கு. இடைன்னா இடுப்பு. உடுக்கு மாதிரி ஒடுங்குன இடுப்பு. பிடின்னா ஒரு கைப்பிடி. அந்த அளவுள்ள இறுகிய இடுப்பு. கொடின்னா பூங்கொடி போல வளைந்தாடும் தன்மையுள்ள இடுப்பு. மின்னற்கொடி போன்ற மெல்லிய இடுப்பு. இப்படியெல்லாம் பெண்களின் இடுப்பழகை கவிஞர்கள் கவிதையிலே வர்ணிச்சிருக்காங்க. அதெல்லாம் இல்லாம புதுசா இருக்கட்டுமேன்னு ஒடியாத இடை – அப்படின்னா இன்னும் கொஞ்சம் ஆடுனா, அவ இடிப்பு ஒடிஞ்சிடும். அந்த அளவுக்கு மெல்லிய இடுப்பு அப்படிங்குறதுக்காக ஒடியாத இடைன்னு எழுதினேன்.

இந்திர மன்றத்தின் நடன ராணிகள்னு சொல்லப்படுகிற ரம்பா, திலோத்தமா, மேனகா, ஊர்வசி இந்த நாலு பேர்ல, சொல்லின் ஓசை நயத்துக்காக ஊர்வசியைச் சேத்துக்கிட்டேன்.’’
– இந்த எனது விளக்கத்தைக் கேட்டு ரசித்து மலர்ந்த முகத்துடன் மேலும் என்னைக் கேட்டார்.
‘‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’’


‘‘எஸ்.எஸ்.எல்.சி.! தமிழ் நூல்கள் நிறையப் படிச்சிருக்கேன். தமிழார்வமும், தமிழ்ப்பற்றும் அதிகம்.’’
‘‘உங்க பெயரென்ன?’’
‘‘ஆரூர்தாஸ்.’’
இதைக்கேட்டதும் எறும்புக்கடி பட்டது போல – ‘‘ஆரூர்! அப்படின்னா திருவாரூர்தானே?’’
‘‘ஆமா.’’
‘மு.க.வைத் தெரியுமா?’’
‘‘நல்லாத் தெரியும். அவர் படிச்ச அதே பள்ளிக்கூடத்துலதான் நானும் படிச்சேன். என்னைவிட ஏழு வருஷம் பெரியவரு. முரசொலிமாறன் என் பள்ளித் தோழர்.’’

‘‘ஓ! நீங்க நம்மாளுதான். ஜானு! (ஜானகி அம்மையாரை அவர் ஜானு என்றுதான் அழைப்பது வழக்கம்) ஒரு டீ அனுப்பு’’ என்றார், சற்று உரத்த குரலில். பிறகு சொன்னார்:

கருத்து வேறுபாடு

‘‘கதை சம்பந்தப்பட்ட காட்சிகள்ள எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. ஆனா, அதை நீங்க விளக்கியிருக்கிற விதமும், நடு நடுவுலே எழுதியிருக்கிற நல்ல தமிழ் வசனமும் ரொம்பப் பிடிச்சிருக்கு.’’

‘‘ரொம்ப நன்றி!” என்றேன். இதற்குள் ஒரு சிறு பணிப்பெண் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள். கை காட்டினார். பருகினேன். அவர் தொடர்ந்தார்:–
‘‘குறிப்பிட்ட சில காட்சிகளை நான் மாத்தி, இந்தப் பேப்பர்ல எழுதியிருக்கேன். இதையெல்லாம் நீங்க வாத்தியார்கிட்டே படிச்சிக் காட்டிட்டு, அந்தந்தக் காட்சிகளோட பொருந்தும்படியா எழுதி இணைச்சிக்கிட்டப்புறம் மறுபடியும் எங்கிட்டே வந்து படிச்சிக் காட்டணும்.’’
‘‘சரி.’’
‘ஏன்னா, நான் வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும். அதே சமயத்துல என் கொள்கையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நீங்க அழகான தமிழ்ல எழுதியிருக்கிற இந்த திரைக்கதையை நான் படிச்சிப் பார்த்ததுல, உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எனக்குத் தோணுது.’’

‘‘நன்றி.’’
‘‘வாழ்த்துக்கள்! 
நீங்க புறப்படலாம். 
அப்புறம் சந்திப்போம். 
இடை யில் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன்.’’
‘‘வணக்கம்.’’


அப்பொழுது என் வயது 23. 
முண்டா திரண்டு இளமை முறுக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் 
வயது 37. ஆனால் அழகும் ஆரோக்கியமும் சேர்ந்து அவர் 
வயதைக் குறைத்திருந்தன. 

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான், முழுமை பெற்ற ஒரு கதை வசன கர்த்தாவாகி, இதே எம்.ஜி.ஆரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறேன். என் வசன வலையை வீசி அந்தக் கலைமானைப் பிடிக்கப் போகிறேன். 

என்னைப் பொறுத்தமட்டில் அவருடைய இந்தக் கேள்விகள் எல்லாம் இல்லாமல் நான் சொன்னதே கதை, எழுதியதே வசனம் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர் இதயத்தில் எனக்கென்று ஓர் இடம் பெற்று அவருடைய ‘அவை எழுத்தாளனாக’ ஆகப் போகிறேன் என்றெல்லாம் அப்பொழுது நான் எண்ணிப் பார்க்கக்கூட இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு பாய்மரக் கப்பல். காலம் என்ற காற்று வீச்சுக்கு ஏற்றவாறு அந்தந்தத் திசையில் அந்தக் கப்பல் தானாகச் செல்லும். சுக்கான் கொண்டு அந்த வாழ்க்கைக் கலத்தை இந்த உலகப் பெருங்கடலில் எவரும் செலுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. சேரும் இடம் என்பது குறிக்கோள். சேர வேண்டும் என்பது முயற்சி. சேர வைப்பது காலம்.

‘‘ராணி லலிதாங்கி’’யில் சிவாஜிகணேசன்
ராணிலலிதாங்கியில் பி .எஸ். வீரப்பா 

‘‘ராணி லலிதாங்கி’’ திரைக்கதையில் எம்.ஜி.ஆர். செய்திருந்த மாற்றங்களை, தயாரிப்பாளரான தஞ்சை ராமையாதாஸ் 
ஏற்கவில்லை.ஆனால், எம்.ஜி.ஆர். சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. தன் கொள்கையில் எப்போதுமே உறுதியோடு இருப்பவர் 
அவர். ‘‘ராணி லலிதாங்கி கதை எனக்கு ஒத்துவராது’’ என்று கூறி 
அந்தப் படத்திலிருந்து அவராகவே சுமூகமாக விலகிக்கொண்டார்.

எனவே, சிவாஜிகணேசனையும், பானுமதியையும் ஜோடியாக நடிக்க வைத்து, லலிதாங்கியை எடுக்கத் தொடங்கினார்கள். படத்தை இயக்கியவர் டி.ஆர்.ரகுநாத். இந்த நிலையில், 1955–ம் ஆண்டு அக்டோபர் 14–ம் நாள் (வெள்ளிக்கிழமை) எனக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாக என் தந்தை கடிதம் எழுதியிருந்தார்.

வாத்தியாரிடமும், அய்யரிடமும் சொல்லிவிட்டு திருவாரூருக்குப் புறப்பட்டேன். மனையாளையும், மகளையும் கண்டு மகிழ்ந்தேன்.
திருவாரூர் தேவாலயத்தில் எங்கள் தலைமகளுக்கு ஞானஸ்நானம் செய்வித்து ஆரோக்கியமேரி என்று பெயரிட்டோம். நாட்டியதாரா பட நினைவாக தாராதேவி என்று செல்லப்பெயரால் அழைத்தோம்.

இதற்குள் சிவாஜிகணேசன் பானுமதியுடன், படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது என்பதைப் பத்திரிகைகளில் படித்தேன். உடனே புறப்பட்டு வரவும் என்று வாத்தியாரிடமிருந்தோ, கம்பெனியிலிருந்தோ தந்தி வரும் என்று தினமும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். 

ஒரு போஸ்ட்கார்டு கூட வரவில்லை. குழந்தை பிறந்திருக்கிறது அல்லவா? தாஸ் மெதுவாக வரட்டுமே என்று விட்டிருப்பார்கள். 
இப்படி என் சஞ்சல மனதை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு தகவலும் வரவில்லை.
மேற்கொண்டும் ஊரில் இருக்க இருப்புக் கொள்ளாமல் பழையபடி மனைவியையும், புதிய மகளையும் பிரிந்து மெயிலில் ஏறி, சென்னை வந்திறங்கி நேராக வாத்தியார் வீட்டிற்குச் சென்றேன்.

ஒரு சிறு இடைக்காலத்திற்குப் பிறகு சென்னைக்கு வாத்தியார் வீட்டிற்கு வந்த எனக்காக அதிர்ஷ்டம் காத்திருக்கவில்லை. அதிர்ச்சிதான் என் வருகையை எதிர்பார்த்து, வாத்தியார் வீட்டு வாசலிலேயே காத்திருந்தது.

தஞ்சையைச் சேர்ந்த, ஊரிலேயே வாத்தியாருக்கு அறிமுகமாகியிருந்த சக்ரவர்த்தி என்பவர், ஏற்கனவே வாத்தியார் வசனம், பாடல்கள் எழுதிய நரசூஸ் கம்பெனி தயாரித்த படங்களுக்கு உதவியாளராக இருந்தவர். கையில் கோப்புகளுடன் வராந்தாவில் உட்கார்ந்திருந்த அவர் என்னை நோக்கி வெடிகுண்டு ஒன்றை வீசினார்.

சிவாஜிகணேசன், பானுமதி நடிக்கும் ராணி லலிதாங்கி படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. சக்ரவர்த்திதான் படப்பிடிப்பில் வாத்தியாருக்கு உதவியாளராகச் செயல்படுகிறார். இதை அறிந்து வெடித்துத் துடித்துப்போன என்னிடம் அவர் மேலும் சொன்னார்:

‘‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்சில் இருந்து யாரோ வந்து உங்களைத் தேடுனாங்க. நீங்க ஊரோட போயிட்டீங்க. திரும்பி சென்னை வரமாட்டீங்கன்னு சொன்னாங்களே.’’
அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொண்டு அய்யனார் சிலை போல அமர்ந்திருந்தேன். வாத்தியார் வெளியில் வந்தார். என்னைக் கண்டதும் அவர் முகத்தில் ஒரு சிறு சலனம்.

‘‘வாப்பா, எப்போ வந்தே?’’

‘‘இப்போதான் ரெயிலில் இருந்து இறங்கி, நேராக வந்துகிட்டே இருக்கேன்.’’

‘‘சிவாஜி உடனே கால்ஷீட் கொடுத்ததினால், திடீர்னு ஷூட்டிங் வச்சிக்க வேண்டியதாகி விட்டது. இப்போது சக்ரவர்த்திதான் அசிஸ்டெண்டா இருக்கு. நீ ஒண்ணு செய். முந்தி நான் சொன்னேன் பாரு ‘அந்த’ தாமானவளே, அந்தத் தெலுங்கு ஸ்கிரிப்ட் டிரான்ஸ்லேட் ஆகி வந்திருக்கு. அதை வச்சிக்கிட்டு நீ தமிழ் வசனம் எழுது. மாடியிலேயே இருந்துக்க. நம்ம ராஜாராமனும் (வாத்தியாரின் நண்பர் கும்பகோணத்துக்காரர்) மாடியிலதான் தங்கியிருக்கிறார். அவரோட சேர்ந்து நீயும் இரு. (பக்கத்தில் இருந்த ராஜாராமண்ணனிடம்) தாசைக் கவனிச்சிக்குங்க. நான் ஷூட்டிங் போயிட்டு வர்றேன்’’ என்று கூறிவிட்டு சக்ரவர்த்தி சகிதம் காரில் உட்கார்ந்தார். கார் ஸ்டூடியோவை நோக்கி பறந்தது

எம்.ஜி.ஆருடைய பாராட்டுதலைப் பெற்று, அவருடன் எனக்கு ஏற்பட இருந்த அந்தத் தொடர்பும் அறுந்து, அதன்பிறகு சிவாஜி வந்து, லலிதாங்கி படப்பிடிப்பில் அவருடன், எனக்கு உண்டாக இருந்த இந்தத் தொடர்பும் இழக்கப் பெற்று நூலறுந்த பட்டமாக ஆடி நொந்துபோன நான் ராஜாராமண்ணனைப் பின்தொடர்ந்து மாடிக்குப்போனேன்.

தெலுங்கு ஸ்கிரிப்ட், வெள்ளைக் காகிதம், பைல் முதலியவற்றை எடுத்து அவர் மேஜை மேல் வைத்தார். பையனைக் கூப்பிட்டு டீ கொண்டுவரச் சொன்னார்.

அவரிடம் சொன்னேன்: ‘‘அண்ணே! நான் ஊருக்குப் போயிருந்தப்போ எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்லேருந்து வந்து என்னைத் தேடுனாங்களாம். நான் திரும்பி சென்னைக்கு வரமாட்டேன்னு யாரோ சொல்லிட்டாங்களாம். இப்போ எம்.ஜி.ஆர். பிக்சர்சுக்குப் போயி நான் வந்திட்டதைச் சொல்லலாமா?’’

‘‘வேண்டாம். இங்கேயே இருந்திடுங்க நீங்க’’ என்றார்

நான் ‘நாயுடு வேலை’யில் ஈடுபடலானேன். தெலுங்குத் தமிழ் உதட்டசைவு உரையாடல் அமைக்கும் அந்தத் தமிழாக்க வேலையை (டப்பிங்) நான் வேடிக்கையாக நாயுடு வேலை என்று சொல்வது வழக்கம்.

அன்று இரவு! கும்மிருட்டு. கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பரவிக் கிடந்தது. அப்போதைய ஆற்காடு சாலையின் அகலம் இப்போது இருப்பதில் பாதிதான் இருக்கும். வாத்தியார் வீட்டு மாடியில் ராஜாராமண்ணன் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.

‘என்னை மட்டும் வாத்தியார் ஏன் இந்த டப்பிங் டப்பாவிற்குள் வைத்து மூடுகிறார்? மந்திரவாதி தன் உயிர் நிலை உள்ள வண்டை ஒரு சிறு பெட்டிக்குள் அடைத்து வைத்திருப்பதைப்போல. ஒருவேளை இந்தக் கடினமான டப்பிங் வேலையை கஷ்டமும், களைப்பும் தோன்றாமல் நான் இலகுவாகக் கையாளுகிறேன் என்பதால் இந்த பாரத்துக்கு என்னை சுமைதாங்கியாக்கப் பார்க்கின்றாரோ? 

அப்படியென்றால் என் இளமூளையில் குடிகொண்டுள்ள அந்தத் தமிழ்! என் மனோராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கும் அந்தப் புதுப்புதுக் கற்பனைகள்! என் கண்களில் தோரணங்களாகத் தொங்கும் அந்த இனிய கனவுகள்! இவை எல்லாமே வீணாக வேண்டியவைதானா?’ இரவு முழுவதும் இமையோடு இமை மூடாமல் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். ‘இந்தத் தடவை இங்கு நாம் வந்தே இருக்க வேண்டியதில்லை. நாம் தேவைப்படாததால்தான் வரச்சொல்லி திருவாரூருக்கு கடிதம் வரவில்லை.

வைராக்கியத்தை அடகு வைத்து வயிறு வளர்ப்பதைவிட பட்டினியால் வருந்துவது மேல். ‘கோள்’ சரி இல்லை என்றாலும் ‘குறிக்கோள்’ சரியாக இருந்து நிறைவேறல் வேண்டும். இந்த வகையில் எனக்கும் கொஞ்சம் எம்.ஜி.ஆர். குணம் உண்டு.’ விடிந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இந்த சென்னையை விட்டே அகன்றுவிட வேண்டும்.

இந்தக் கதை வசனம், கலை ஆர்வம் எல்லாவற்றையும் மூட்டைகட்டி எங்கள் ஊர் ஓடம் போக்கி ஆற்றில் போட்டுவிட்டு, யாரிடமாவது 
கடன் வாங்கியாவது, தமிழாசிரியர் பயிற்சி பெறுவது. இல்லாவிட்டால் ஊரில் ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

காலையில் நான் எண்ணியிருந்தபடியே, ராஜாராமண்ணனிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் வாத்தியார் வீட்டை விட்டு வெளியேறினேன்.
‘நல்லபிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல் கொள்ளாமல் போவது’ – இது ஊர்ப்பழமொழி.

வாத்தியார் வீட்டிலிருந்து கிழக்கு நோக்கி சற்றுத் தொலைவு வந்ததும் என் எதிரே ஒருவர் வந்தார்.என்னைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் என் இயற்பெயரைச் சொல்லி, ‘‘ஜேசு! எங்கே இவ்வளவு தூரம்?’’ என்று கேட்டார்.
‘‘அம்பி! நல்லாயிருக்கீங்களா?’’ என்று விசாரித்தேன்.

அவர் பெயர் திருவேங்கடத்தான். அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்பி என்பது செல்லப்பெயர். திருவாரூரில் என்னுடன் படித்தவர். மன்னார்குடி அருகில் உள்ள வடுவூரைச் சேர்ந்தவர். வசதியான குடும்பம்.அம்பியிடம் எல்லா விவரத்தையும் சொன்னேன். ஏற்கனவே ஊரிலேயே என் எழுத்து, நாடகம் பற்றிய சகல சங்கதிகளும் அவருக்குத் தெரியும்.

அவர் சொன்னார்:‘‘வந்தது வந்திட்டீங்க – ஊருக்குப் போகவேண்டாம். நான் உங்களுக்கு ஒரு ஏற்பாடு பண்றேன். இப்போ நானும் சினிமாக் கம்பெனியில்தான் உதவி டைரக்டராக இருக்கிறேன். நளினி பிக்சர்ஸ்னு பேரு. ‘‘படித்த பெண்’’ணுன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கோம். ஏ.எஸ்.முத்துங்குறவரு கதை, வசனம் எழுதுறாரு. அவர்கிட்டே உங்களை அறிமுகப்படுத்துகிறேன்.

கதை, வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனும் என் நண்பர்தான். அவரையும் நாம் சந்திக்கலாம். என் வீடு வில்லிவாக்கத்தில் தேவர் தெருவில் இருக்கிறது. என் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு அறையில் ‘நிவாஸ்’னு ஓவியர் இருக்காரு. அவர் என் சொந்தக்காரர்தான். அவரோட அந்த அறையில் நீங்கள் தங்கிக்கலாம்’’ என்றார்.
நான் உடன்பட்டு, அவருடன் சென்றேன். இந்த நிவாஸ் மிகச்சிறந்த ஓவியர். ஸ்ரீநிவாசன் என்பது முழுப்பெயர். ‘லதா’ என்ற பெயரில் வார பத்திரிகைகளிலும், சரித்திர நாவல்கள் எழுதுவதில் வல்லவரான சாண்டில்யனின் தொடர் கதைகளுக்கும், நாவல்களின் அட்டைகளுக்கும் படம் போட்டுப் புகழ் பெற்றவர். அவர் அறையில் சில நாட்கள் தங்கியிருந்து, அம்பியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

அம்பி சொன்னபடியே ‘‘படித்த பெண்’’ படக்கதை வசனகர்த்தா ஏ.எஸ்.முத்துவிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் ஓர் கத்தோலிக்க கிறிஸ்துவர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டதாரி. ஏ.சவேரிமுத்து என்பது அவரது முழுப்பெயர். சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். கலையார்வத்தின் காரணமாக நாடகங்கள் நடத்தி அப்படியே படத்துறைக்கு வந்தவர். என்னிடம் அன்பு காட்டினார்.

அம்பி – முத்து இருவருடைய பரிந்துரையின் பேரில் அப்படத்திற்கு ஒரு பாட்டு எழுதும் வாய்ப்பைப் பெற்றேன். ‘அருண்’ என்ற நாடக இசை அமைப்பாளரும், ‘ராகவன்’ என்ற வீணைக் கலைஞரும் சேர்ந்து ‘அருண் ராகவன்’ என்ற பெயரில், ‘‘படித்த பெண்’’ படத்திற்கு இசையமைத்தனர்.

ஏதோ ஒரு கர்நாடக ராகத்தைப் பாடிக்காட்டி அதற்கேற்றவாறு பாட்டு எழுதுமாறு கூறினர். உடனே நான் ஒரு பல்லவி எழுதினேன். பாடிப்பார்த்தார்கள். சரியாக இருந்தது. பாராட்டினார்கள். பாட்டைத் தொடர்ந்தேன்.

வாழ்வினில் காணேன் இன்பம் –
என்றும் வருந்தவே வந்ததே துன்பம்

இதுதான் அந்தப் பல்லவி! கதைச் சூழலுக்கும், இசையமைப்பாளரின் ராகத்திற்கும் மட்டுமல்ல, அன்றைய என் நிலைமைக்கும் இந்தப் பல்லவி பொருத்தமாக இருந்தது.