Showing posts with label ART. Show all posts
Showing posts with label ART. Show all posts

Tuesday, 2 March 2021

SCULPT ART - KRISHNAPURAM , VENKATACHALAPATHY TEMPLE ,NEAR NELLAI

 


SCULPT ART - KRISHNAPURAM  ,

VENKATACHALAPATHY TEMPLE ,NEAR NELLAI


சிற்ப கலைக்கு சிறந்த சான்று..




சிற்ப கலைக்கு சிறந்த சான்று, நெல்லை அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்தான் என்பதை, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தவர்கள் ஏற்றுக்கொள்வர்..

 திருநெல்வேலியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் திருச்செந்தூர் சாலையில் உள்ளது கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில். இக் கோயில் 16-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.

இக் கோயிலின் தனிச் சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இந்த கோயிலின் வீரப்ப நாயக்கர் மண்டபம், அரங்க மண்டபம் ஆகிய இரு மண்டபங்களிலும் சுமார் 6 அடிக்கு குறையாமல் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.





இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில்தான் உள்ளன. ஒரே தூணில் எண்ணற்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள சிற்பங்களில் வீரன், அரச குமாரியை கடத்துதல், குறத்தி அரச குமாரனை கடத்துதல், அர்ச்சுனன், கர்ணன், ரதி, மன்மதன், நடன மங்கை என்று சிற்பக் கலைக்கு பெருமை சேர்க்கக் கூடிய சிலைகள் உள்ளன.

இந்த சிலைகளில் மனிதர்களுக்கு தெரிவதுபோல எலும்பு, நரம்பு, கை, கால் மொளிகள் தெரிவது  காண்போரை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. மேலும், மன்மதன் கரும்பு வில் சிற்பத்தின் மேல் பகுதியில் ஒரு ஊசியைப் போட்டால் அதை வில்லின் கீழ் பகுதியில் எடுத்து விடலாம். இந்த அளவுக்கு நுட்பமும், கலைநயமும் நிறைந்த சிலைகள் கிருஷ்ணாபுரத்தில்மட்டும் தான் உள்ளன என்று சிற்பக் கலைஞர்கள் கூறுகின்றனர்.





கிருஷ்ணாபுரம் சிற்பங்கள், சிற்பக் கலைஞர்களால் அளிக்கப்பட்ட அருள்கொடை என்பதில் ஐயமில்லை. திருச்செந்தூர் சாலையில் பயணிக்கும் யாராக இருந்தாலும், இக் கோயிலின் சிற்பங்களை காணத் தவறுவதில்லை.

இந்த கோயில் 1.8 ஏக்கர்கள் (0.73 ha) பரப்பளவிலான வளாகமானது கருங்கல் மதிலால் சூழப்பட்டுள்ளது. இந்த கோவிலில் முதலில் மூன்று பிரகாரங்கள் இருந்தன.

 அவற்றில் வெளிப்புற பிரகாரமானது ஆற்காடு நவாப்பின் உத்தரவினால் சந்தா சாகிப்பால் இடிக்கப்பட்டது. அக்கற்கள் பாளையங்கோட்டையில் கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்டன.

 கோயிலின் நுழைவாயில் உள்ள ஐந்து அடுக்கு இராஜகோபுரமானது 110 ft (34 m) உயரமானது ஆகும். கருவறையில் 4 ft (1.2 m) உயரத்தில் கருங்கல்லால் அமைக்கபட்ட வெங்கடாசலபதி சிலை வடிவில் உள்ளார். இவர் நான்கு கைகளைக் கொண்டுள்ளார். இவரது பின்னிரு கைகள் சங்கு மற்றும் சக்ரத்தை ஏந்தியுள்ளன. முன் வலக்கையானது அபயமுத்திரையோடும், இடக்கையானது கடஹஸ்த முத்திரையோடும் உள்ளது.



 இவரது இருபுறமும் ஸ்ரீதேவியும், பூமாதேவியும் உள்ளனர். உற்சவர் சீனிவாசன் என்று அழைக்கப்படுகிறார், மேலும் உற்சவரின் வடிவம் மூலவரின் அம்சங்களை ஒத்ததாக உள்ளன. அர்த்த மண்டபம் இருபுறமும் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர்.

 மூன்றாவது வளாகத்தில் அலர்மேல்மங்கைக்கு தனி ஆலயம் உள்ளது, அதில் உற்சவர் சிலையும் உள்ளது.

கோவில் வளாகத்தில் பந்தல் மண்டபம், வாகண மண்டம், ரெங்க மண்டம், நங்குநேரி ஜீயர் மண்டபம் என பல மண்டபங்கள் உள்ளன. பந்தல் மண்டபத் தூண்களில் புஷ்பபொய்கை, பலகை மற்றும் வரிக்கோலம் ஆகியவற்றைக் கொண்ட கட்டடக்கலை அம்சங்கள் நிறைந்து உள்ளன.


Friday, 28 February 2020

STORY TELLING IS AN ART






STORY TELLING IS AN ART

உலகில் கதைகள் சொல்லப்படுவது எப்படி?
June 12, 2015 வரலாறு உலகம், கதை, கதைசொல்லி, கலாச்சாரம்
ஒரே கதையாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு  சொல்வதே மக்களின் இயல்பு. ஒவ்வொரு கலாச்சாரமும் தனிச்சிறப்பும், வழக்கமும் கொண்டவை. தமிழகத்தில் தெருக்கூத்து முதல் பரதநாட்டியம் வரை பல்வேறு முறைகளில் கதைகளை, உண்மைகளை மக்களுக்கு கொண்டுசெல்வது பல ஆயிரம் ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது. அதே போல வெவ்வேறு கலாச்சார கதை சொல்லும் முறைகளில் சிறந்ததாக நான் கருதுவதை, நான் வியந்ததை தெரிவு செய்து பட்டியலிட்டிருக்கிறேன். காண்க.

யுலா

அவாயித் தீவுகள், வடக்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம். அங்கே வாழும் மூத்த குடிகளாம் பொலினீசியர்கள் உருவாக்கிய நடன வடிவமே யுலா. யுலா இசைக்கருவிகளை சார்ந்த நடனம் இல்லை, அது அவர்களது மொழி சார்ந்த நடனம். மெட்டுகளுக்கு ஆடும் நடனமில்லை, வார்த்தைகளுக்கு ஆடும் நடனம். ஒவ்வொரு வார்த்தையையும் தங்களது முகபாவங்களாலும், உடல் அசைவுகளாலும் காண்போரை சென்றடையச் செய்வதே யுலா நடனக் கலைகர்களின் சிறப்பு.

hula

சீன நிழல் பொம்மலாட்டம்

பாரம்பரிய நிழல் பொம்மலாட்டம் நாட்டுப்புற கதைகளை, அறநெறி பாடங்களை, உள்ளூர் பிரச்சனைகளை  மக்களிடையே கதை வடிவில் சொல்கிறது. பெரும்பாலும் மண அல்லது மத விழாக்களில் இதைக் காண முடியும். தோலால் செய்யப்பட்ட பொம்மைகளை கதைசொல்லிகள் இரும்பு கம்பிகளால் இயக்குவர். இசைக்குழுவின் இசைக்கு ஏற்ப பொம்மலாட்டம் நடத்தப்படும். சீனாவின் ஆன் அரசமரபு நடைபெற்ற காலத்தில் துவங்கப்பட்ட போதிலும் இக்கலை தெற்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் பரவிற்று.

chinese_03

சசல்

கவிதை வடிவிலான பாரம்பரிய பாடல் கலை. லெபனான் நாட்டில் உருவாக்கப்பட்ட இக்கலை கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் புழக்கத்தில் உள்ளது. ஒரு கவிஞர் அல்லது கதைசொல்லி சரணத்தை மெட்டெடுத்து பாட அதே மெட்டில் வேறு வார்த்தைகளுடன் எதிரில் உள்ள கவிஞர் பெருமக்கள் பாடுவர். ஒரு போட்டி போலவே நடைப்பெறும் இந்த சசல்.

கண்டோ

பழமைவாய்ந்த சிசிலிய கதைசொல்லல் முறையான கண்டோ கிரேக்க நாடகக்கலையிலிருந்து உருவாக்கப்பட்டது. மேம்படுத்துதலை பெரிதும் நம்பியுள்ளது இக்கலை. சிறிய மரத்தாலான மேசையின்மீது நடந்தேறும் இந்த கலைநிகழ்ச்சி பாடல்கள் அல்லது உரைநடைகளினூடாக கதையை சொல்லும். சில நேரங்களில் இசைக்கருவிகளின் உதவியுடன் நிகழ்ச்சி நடைபெறும். கதைச்சொல்லிகள் கண்டிச்டி என்று அழைக்கப்படுகின்றனர். தங்கள் நாட்டின் வரலாற்று நாயகர்களின் வீரதீர செயல்கள், அவர்கள் கடந்து வந்த போராட்டங்கள் போன்றவற்றை கதைகளாக சொல்வதை வழக்கமாக வைத்திருந்த கண்டிச்டிகள் தற்பொழுது சமகால பிரச்சனைகளின் அடிப்படையிலும் கதைகளைச்  சொல்லி வருகின்றனர்.



ரகுகோ


ஜப்பானிய பாரம்பரிய கதைசொல்லல் முறையான ரகுகோ ஒரே ஒருவரால் சொல்லப்படும் கலையாகும். கதைச்சொல்லியை அனாசிக்கா என்று அழைக்கின்றனர். நகைச்சுவை கலைஞர்களான இவர்கள் அன்றாட வாழ்வியல் பிரச்னைகளை, அறநெறி பாடங்களை கதைகளாக நகைச்சுவை உணர்வுடன் சொல்கின்றனர். எந்த குற்றங்களையோ, நிகழ்வுகளையோ நேரடியாக தாக்காமல் மறைமுகமாக மக்களை சென்றடைய இக்கலையை பயன்படுத்துகின்றனர்.

rakugo

கிரியோட்

கிரியோட்டர்கள் அல்லது செள்ளிகள் என்றழைக்கப்படும் கலைஞர்கள் மேற்கு ஆப்பிரிக்க சமுகத்தின் வரலாற்றையும்  கலாச்சாரத்தையும் பேணிக்காப்பவர்கள். கிரியோட்டர்கள் வீணை போன்ற வடிவில் இருக்கும் இசைக்கருவியான கோரா’வை தங்களது நிகழ்சிகளின்போது பயன்படுத்துகின்றனர். குடும்ப மற்றும் கலாச்சார வரலாறுகளைப் பரம்பரையியல் முறையில் பாதுகாக்கின்றனர். சில மேற்காப்பிரிக்க கிரியோட்டர்கள் மன்னர்களை வாழ்த்திப் பாடும் கவிஞர்களாகவும் செய்தி பரிமாறும் தூதுவர்களாகவும் இருந்துள்ளனர்.

griot3

தமிழ்நாட்டு கிராமிய கலையாம் வில்லுப்பாட்டும் ஒரு கதைச்சொல்லி முறை என்பது யாமறிந்ததே!

3 Comments

Friday, 18 May 2018

LIFE IS AN ART LIKE MUSIC DISC






LIFE IS AN ART LIKE MUSIC DISC



இசைத்தட்டாகச் சுழலட்டும் இனிய வாழ்க்கை

பாடலின் ஊடாக ஒலிக்கும் இசையால் பல பாடல்கள் உயிர்ப்புடன் துள்ளுகின்றன.

பாடல்கள், குறிப்பாக சில திரைப்பாடல்கள் தரும் இன்பத்தை அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. நம் காதுகளுக்குப் பழக்கப்பட்ட ஒரு பாடல், காற்றில் மிதந்து வந்ததும், உள்ளம் அதில் தோய்ந்து அதனோடு பயணம் செய்யத் தொடங்குகிறது. இன்ன இன்ன இடத்தில், இந்த இந்த இசைக் கருவி ஒலிக்கும், பாடல் தொடரும், பல்லவி முடிந்து, தாளக் கட்டு இப்படியாக மாறும் என்று சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இதெல்லாம் ஒரு திரைப்பாடல் நம் மனதுக்குள் நிகழ்த்தும் அதிசயங்கள். பாடலுடன் இணைந்து ஒலிக்கும் இசையையும், அதுதரும் சுகானுபவத்தையும் பிரித்துப் பார்க்க முடியுமா?

மெல்லிசை மென்மையாக உள்ளத்தை ஊடுருவிச் செல்கிறது. மழையோ, வெயிலோ, பனிக் காற்றோ, இளம் தென்றலோ அந்தந்தப் பாடலுக்கு ஏற்றவாறும், கேட்பவர் மனநிலைக்குத் தக்கவாறும் உணர்வுகளைக் கிளர்த்துகிறது. கேக் துண்டின் மீது நம்மைப் பார்த்துக் கண்ணடிக்கும் செர்ரிப் பழம் போலவோ, மயிலின் கொண்டை அழகாகவோ பாடலின் மீது சிலபோது மிதக்கிறது இசை.

ஊடுபாவாக…

‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு' (படம்: நாடோடி) என்ற அருமையான பழைய பாடலில்

டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா இருவரின் குரல்களோடு மூன்றாவது குரலாகவே ஒலிக்கும் ஹார்மோனியம் இசையையே எடுத்துக்கொள்ளுங்களேன். அடடா... என்ன இன்பம் அந்த இசைக் குறுக்கீடு! நெசவுத்தறியில் ஊடுபாவாகக் குறுக்கும் நெடுக்கும் அந்த இசை துள்ளித் துள்ளிச் செல்லும். அதே படத்தில் இடம் பெறும் ‘அன்றொரு நாள் இதே நிலவில்' பாடலில் வரும் இசையும் அத்தனை இனிமையானது.

சர்க்கஸ் ‘பார்' விளையாட்டில் இந்த முனையிலிருந்து தாவிச் செல்லும் ஒருவரை அடுத்த முனையில் இருப்பவர் தாவித் தன்னோடு இணைத்துச் செல்வதுபோல, இசையின் ஒரு முனையில் விடுபடும் சொற்கள் அதே இசையின் அடுத்த முனையில் வந்து பற்றிக்கொண்டு தொடரும் சாகசத்தை எத்தனை பாடல்களில் பார்த்திருக்கிறோம்.

பழைய தலைமுறை மனிதர்கள், ‘குங்குமப் பூவே கொஞ்சு(ம்) புறாவே' (மரகதம்) என்கிற திரைப்பாடலுக்கு ஈடாக என்னவும் தரத் தயாராக இருப்பார்கள். சந்திரபாபு – ஜமுனா ராணி குரல்களில் துள்ளத் துள்ள இசைக்கும் அந்தப் பாடலின் பல்லவியில்,போக்கிரி ‘ராஜ்ஜா....’ என்று ஜமுனா இழுக்கும்போது ‘போய்ங்... போய்ங்…’ என்று இழைக்கும் இசைக் கருவியை தவிர்த்து அந்தப் பாடலை யோசித்துப் பார்க்க முடியுமா?

வயலினுக்கு வாழ்க்கைப்பட்ட பாடல்கள்

‘வான் நிலா நிலா அல்ல' (பட்டினபிரவேசம்) பாடலும், ‘கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' (புன்னகை மன்னன்) பாடலும் வயலின் கருவியோடு வாழ்க்கைப்பட்ட ரசம் ததும்பும் கீதங்கள் அல்லவா? அந்த இசைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு யார்தான் இந்தப் பாடல்களை ரசிக்க முடியும்?

பக்திப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மதுரை சோமுவின் புகழ்பெற்ற பாடலான ‘மருதமலை மாமணியே முருகய்யா’ தரும் பக்திப் பரவசம் சாதாரணமானதா! அதன் ஒரு சரணத்தில், ‘பனி அது மலை அது நதி அது கடல் அது’ என்று அவர் மூச்சு விடாது பட்டியல் போட்டு வரும் ராகத்தின் கம்பியைப் பிடித்தபடி புல்லாங்குழல் ஓசை ஒரு பாம்பைப் போல இசைத்து நழுவிச் செல்லும் அந்த ரசனை மிக்க இடத்தை யார்தான் இழக்கச் சம்மதிப்பார்கள்? ‘உயிரே... உயிரே…' (பம்பாய்) என்று ஹரிஹரன் குரலெழுப்பும்போது அந்தக் காதல் ஏக்கத்தைச் சிந்தாமல் சிதறாமல் மூங்கிலில் சேகரித்துக்கொள்ளும் குழலோசை பின்னர், நேயர்களின் உயிரையே உருக்கி வார்த்துவிடுவதில்லையா?

‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' (அவளுக்கென்று ஒரு மனம்) என்ற எஸ். ஜானகியின் இனிமை கொஞ்சும் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலில் திருமண நிகழ்வைக் குறிக்கும் வாத்திய இசை புறப்பட்டு, அப்படியே மென்மையாக ஆர்கெஸ்ட்ரா இசையோடு கலந்து, கடைசி சரணத்தை எடுத்துக் கொடுக்கும் இடம், கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் விரும்பித் தேடுவதாக இருக்கும் அல்லவா?

வாணி ஜெயராம் பாடிய ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்' (தீர்க்க சுமங்கலி) என்ற பாடலின் சரணத்தில், ‘வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது' என்ற இடத்தைத் தபேலா தாளக்கட்டு தன்னுள் வாங்கி வெல்வெட் மெத்தை போல இதப்படுத்தி உருட்டி, திரும்ப விடை கொடுக்கும் இடத்தில் பாடகி, 'குளிர்க் காற்றிலே தளிர் பூங்கொடி' என்று அடுத்த அடியை எடுத்துப் பாடவும் உள்ளம் எவ்வளவு கிறக்கம் கொள்கிறது!

ஜேசுதாஸின் ‘என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி) பாடலில், அப்படியே கிடாரின் கம்பியாக மாறும் அவரது குரலும், அவரது குரல்நாணாக உருமாறும் கிடார் இசைத் தந்தியும் போட்டி போட்டு நடத்துவது ஒரு ரசவாதமே! ஜாகிங் ஓட்டத்துக்கு ஏற்ப இளையராஜா இசையமைத்த ‘பருவமே புதிய பாடல் பாடு' (நெஞ்சத்தைக் கிள்ளாதே) பாடலில் கால்களின் ஓட்ட ஜதியை ஒலிக்கும் தாளக் கட்டு எத்தனை பிரிக்கவியலா பந்தம் கொண்டிருப்பது!

மெல்ல மெல்லச் சுழன்று இசைக்கும் இசைத் தட்டு அதே சுழற்சியின் அதிராத தேய்தலில் ஒரு கட்டத்தில் இயல்பாக அமைதி நிலையை வந்தடைகிறது. அதே போன்று நிறைவடையும் வாழ்க்கை அமையுமானால் அதுவும்கூட ஓர் இசைத்தட்டுதானே!

- எஸ்.வி. வேணுகோபாலன், தொடர்புக்கு: sv.venu@gmail.com