Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Thursday, 8 November 2018

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு






கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு 

சிவசுப்ரமணியசுவாமி கோவில்  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு மிகவும் பிடித்த கோவிலாக விளங்குகிறது, 
அவர் பல சொற்பொழிவுகளை நமது கோவிலில் நடத்தி இருக்கிறார், 
நமது குமாரசுவாமிபேட்டை இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒருவர் நமது கிருபானந்தவாரியார் சுவாமிகள்,

அவர் ஒரு சில சொற்பொழிவுகளை நானும் சிறுவயதில் பார்த்தும் மட்டும் கேட்டு இருக்கிறேன்,
என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது, 
அவர் தான் எனக்கு எனக்கு பெயர் சூடினார் என்பது இன்னும் எனக்கு பெருமையாக இருக்கிறது, 

அவர் சொற்பொழிவு என்றால் போதும் கூட்டம் அலைமோதும் கோவிலின் முன் , அவரின் சொற்பொழிவு கேட்பதற்கு மிகவும் 
அருமையாக இருக்கும்,





தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை,

"அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார்,

பிறப்பும் கல்வியும்:
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர்,முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார்,அன்னையார் கனகவல்லி அம்மையார்,

“கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். 

* இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். 

* எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்,

தமிழோடு தவழ்தல்:
வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். 


வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். 

நன்னூல் முதலான இலக்கண நூல்களையும்,
தேவாரம்
நளவெண்பா
ஒளவையாரது நூல்கள்
திருப்புகழ்க் கீர்த்தனைகள்
முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார்.



பன்னிரண்டு வயது நிரம்பியபோதே

தேவாரம்
திருப்புகழ்
திருவருட்பா
கந்தபுராணம்
கம்பராமாயணம்
வில்லிபாரதம்
முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அது தான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார்.
இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்,

இசை பயணம்:


வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கி கெளரவித்தார்கள்.

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும், சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர். சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு "இதுகாறும் இதனை அறிந்திலமே" என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள்.

"வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன" என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள்.

சொற்பொழிவாளர்:



இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை,
 தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே” என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும். 


பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து சில முறை (தாத்தா சொல்லி) சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்,

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

படைப்புகள் :



சுவாமிகள்,
திருமுருகாற்றுப்படை
திருவாசகம்
தேவாரம்
திருப்புகழ்
கந்தர் அலங்காரம்
கந்தர் அநுபூதி
வேல் விருத்தம்
மயில் விருத்தம்
திருவகுப்பு
திருவருட்பா
முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள். அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்" என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.

அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின. திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள்,

சிவனருட்செல்வர்
கந்தவேள் கருணை
இராமகாவியம்
மகாபாரதம்
ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்" என்ற நூலை அவர் படைத்தார். 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒரு முறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

கவிதை
கட்டுரை
கதை
காவியம்
ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும் இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர் கூறுவர்.

மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும் பிரசங்கங்களும், உபந்யாசங்களும் கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால்,
ஞானாசிரியராகவும்
மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும்
பத்திரிகை ஆசிரியராகவும்
பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும்
கட்டுரை ஆசிரியராகவும்
சிறுகதை எழுத்தாளராகவும்
அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும்
விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்,







Thursday, 13 October 2016

காட்சி மொழிகளாக செதுக்கப்படும் சென்னை வாழ்க்கை

காட்சி மொழிகளாக செதுக்கப்படும் 
சென்னை வாழ்க்கை


நடைபாதை கடையில் நாஷ்டா சாப்பிடுபவர் முதல், ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடுபவர்கள் வரை, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது சென்னை. அதிகாலையில் அலறும் ஆட்டோ சத்தத்தில் துவங்கி, நள்ளிரவில் கேட்கும் குல்பி ஐஸ் சத்தம் வரை பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.


இப்படி, மாநகர் மக்களின் அன்றாட வாழ்க்கை கேட்போருக்கு, ஒரு புதிய செய்தியையும், பார்ப்போருக்கு புதிய படம் பார்த்த அனுபவத்தையும் தரும். சென்னை வாழ்க்கையை படம் பிடித்தாலே போதுமானது. புதிதாக கற்பனை தேவையில்லாதது என, அறிந்த இளைஞர்கள் பலர், டிஜிட்டல் கேமராவுடன் சென்னையை வலம் வந்து படம் பிடிக்கத் துவங்கியுள்ளனர்.



இதன் தாக்கமாக, சென்னை மக்கள், வாழ்க்கையை நகர்த்த நூதனமாக செயல்படும் விதத்தையும், கிராமத்து மக்களின் சென்னை பார்வை குறித்தும் குறும்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


சமீபத்தில் வெளிவந்த குறும்படங்களில் சில...


அதிகாலை: 
விபத்திற்கான அடிப்படை காரணத்தை களையாமல் விபத்துகளை குறைப்பது சாத்தியமில்லை என்கிற விஷயத்தை, மாநகரில் தொடரும் இரு வேறுபட்ட பிரச்னைகளை களமாக கொண்டு வெளிக்காட்டும் படம் 


"அதிகாலை' ஐ.டி., துறையில் வேலை எப்போதும் நிரந்தரமில்லை என்ற கருத்தை விளக்கும் விதமாக, இளைஞர் ஒருவருக்கு வேலை பறிபோகிறது. 


நல்ல சம்பளத்தில் புதிய வாழ்க்கையில் பழகிப் போன அவர், வேலையிழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார். சகோதரி, காதலி, குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்ற, மன உளைச்சலில் அதிகாலையில் காரை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பும் அவர், விபத்தில் சிக்கி பலியாகிறார். 

இதே போல, கூவம் கரையோரம் வசிக்கும் குடிசைவாசிகள், புறநகர் பகுதிக்கு குடியேற்றம் செய்வதால் ஏற்படும் வாழ்க்கை சிக்கலை விளக்குகிறது படத்தின் மற்றொரு பகுதி. 

புதிய வீட்டை பார்க்க மனம் இல்லாமல், குழப்பத்துடன் அதிகாலை புறப்பட்டு பார்க்க போகும் இளைஞர் மீது கார் மோதி விபத்தில் பலியாகிறார். இப்படி இரண்டு தளங்களில் அதிகாலை படம் நகர்கிறது. 

"எத்தனை பாதுகாப்பு உடைமைகளும் உருவாக்கப்பட்டும், விதிமுறைகளை பின்பற்றக் கூறுவதாலும் மட்டுமே விபத்துகள் முழுவதுமாக குறைந்துவிடப் போவதில்லை. அதையும் மீறி, பெரும்பாலான விபத்துகள் மன அழுத்தத்தினால் நடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது,'' என அழுத்தமாக கூறிய படத்தின் இயக்குனர் கவின் அந்தோணி, ஒரு விபத்தில் தனது கையை இழந்தவர்.

பூச்சாண்டி: 

சிறுவன் ஒருவனது கதாபாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு, சென்னை மெரீனா கடற்கரையின் மறைவான முகத்தை பளிச்சென வெளிச்சம் போட்டு காட்டும் குறும்படம் தான் "பூச்சாண்டி'. 

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த சிறுவன், மெரீனா கடற்கரையில் சுற்றி அலைகிறான். புதிதாக கடற்கரையில் சுற்றும் அவனை பலர் நோட்டமிடுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல், கிட்னியை எடுத்து விற்பனை செய்யும் கும்பல், ஒரே இன பாலுறவு உணர்வு உடைய நபர்கள் என, பலரது பார்வையும் சிறுவனை நோக்கியே உள்ளது. 


கடற்கரையில் சுண்டல் விற்கும் மற்றொரு சிறுவன், அவர்களிடம் இருந்து கிராமத்து சிறுவனை தப்பிக்க வைக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. "சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த போது, அங்கு ஒரு சிறுவன் தனக்கு மெரீனா கடற்கரையில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து கூறியதை கேட்டு அதிர்ந்த நான், அதையே காட்சிகளாக அமைத்து தந்து உள்ளேன், ''என்றார், படைப்பை உருவாக்கிய சைமன் ஜார்ஜ்.

அடுத்த விடுமுறை: 

தொடர்ந்து, ஞாயிறு பொழுதை வீணாக கடத்தும் இன்றைய இளைஞர்களுக்கு, கொடுங்கையூர் குப்பை கிடங்கை அடித்தளமாக அமைத்து, நல் வழிக்கு அழைத்து செல்லும் படைப்பு தான் "அடுத்த ஞாயிறு'. விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமையை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கழிப்பதற்காக, மூன்று இளைஞர்கள் புறப்படுவதாக கதை துவங்குகிறது. 


அவர்கள், அங்கு சுற்றித் திரியும் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்வதும், அங்கு வேலை பார்ப்பவர்களுடன் இணைந்து பொங்கல் விழா எடுப்பதுமாக, அவர்கள் உற்சாகமாக காணப்படுகின்றனர். இப்படி, அடுத்தடுத்த ஞாயிற்றுக் கிழமைகளில், மேலும், பல இளைஞர்களுடன் அங்கு சென்று, அப்பகுதி மக்களுடன் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடும் சமூக நலன் சார்ந்த படைப்பாக முடிகிறது. 

"மாநகரில் மக்கள் பிரச்னைகளையே காட்சி மொழியாக்க விரும்பும் நான், எனது முந்தைய படைப்புகளில் பேசின்பாலம் பகுதி பிரச்னை மற்றும் திருவொற்றியூர் பகுதி ரயில் தண்டவாளம் அருகேயுள்ள பிரச்னைகளை சுட்டிக் காட்டியுள்ளேன். வரும் காலங்களில் பல பிரச்னைகளுக்கு எனது படங்கள் மூலம் சிறியளவிலான தீர்வுகளை எட்ட விரும்புகிறேன்,''என விரிவாக விளக்கினார் இப்படத்தின் இயக்குனர் ராஜராஜன்.

அடைக்கலம்: 

சிறிய குடிசைக்குள், பல குடும்பங்கள் ஒன்றாக வசிக்கும் மாநகர் வாசிகளின் இக்கட்டான வாழ்க்கையை, அப்படியே படம் பிடித்து காட்டுகிற குறும்படம் "அடைக்கலம்'. தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தால், வீட்டில் தண்டிப்பார்களே என்ற பயத்தில், செருப்பு தைத்து வாழும் ஏழைகளின் வீடுகளில் அடைக்கலம் ஆகிறார், வசதியான வீட்டில் பிறந்த ஒரு சிறுவன். 

மிகக் குறுகிய இடத்தில் வசிக்கும், அவர்களின் வாழ்க்கை எல்லாம் அவனுக்கு புதிராக உள்ளது. மறுநாள் சிறுவனை மீட்டு செல்லும் தந்தையிடம், சிறுவன் ஏழைகளின் வாழ்க்கை நிலை குறித்து கேள்விகளை தொடுக்கிறான். தந்தையோ, அதுவெல்லாம் இறைவனின் செயல் என, கடவுள் மீது பதிலை திசை திருப்பி விட, "கடவுள் நல்லவருன்னு சொன்னீங்களே அப்பா' என முடிக்க, அடைக்கலம் அசத்தலாக முடிகிறது. 

"சென்னை ஓட்டேரி பகுதியருகே, மேட்டுபாளையத்தில் இன்றும், பல நூறு குடும்பங்கள் செருப்பு தைத்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மிக குறுகிய இடத்தில் வசிக்கும் நிலைமையை, இவ்வுலகிற்கு காட்டும் படமே அடைக்கலம், ''என, விளக்கினார் படத்தின் இயக்குனர் விஜயன்.

புறக்கணிப்பு: 

மாநகரின் ஒரு அங்கமான திரையுலகம், போலியான கலைஞர்களின் சிக்கியுள்ள நிலையை, உண்மையான ஒரு கூத்துக் கலைஞன் பாத்திரத்தின் கோபத்தின் வழியே காட்டும் குறும்படம் தான் "புறக்கணிப்பு'. 



தேனாம்பேட்டை பகுதியில் மரக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு, அரசியல்வாதியாக ஆசை. அவரிடம் உதவியாக இருக்கும் சிறந்த கூத்துக் கலைஞராக ராஜ்பாட் நடராஜன் என்கிற வயதான பாத்திரம். மரக்கடை வைத்திருப்பவர் அரசியல்வாதியாக இலக்கியமும், சினிமாவும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு, தகுதியற்ற கலைஞர்களிடம் பாடம் கற்கிறார். 

அந்த கலைஞர்களிடம் கோபப்படும், நடராஜன் ஒரு சிறந்த கூத்துக் கலைஞர் என்பதை படம் பின்னோக்கி பார்க்கிறது. இப்படி வளர்ந்தவர் திரையுலகில் வாய்ப்பு கேட்டு, மூன்றாம் தர கலைஞராக மட்டுமே வாய்ப்பு கிடைத்து, அதில் வெறுத்து ஒதுங்கியே மரக்கடையில் இணைந்ததாக படம் முடிகிறது.

 "அசோகமித்திரன் எழுதிய மீதம் இருக்கும் சொற்கள்' நாவலை தழுவி, இந்த குறும்படத்தை எடுத்துள்ள நான், யதார்த்தத்தை விட்டு விலகி நிற்கும் தமிழ் திரையுலகில், யதார்த்தமான கலைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதை அழுத்தமாக சொல்ல முயற்சி செய்துள்ளேன், ''என பக்குவமாக பேசினார், படத்தின் இயக்குனர் ஜெயராவ்.

நிழல் திருநாவுக்கரசு:

சென்னையைப் பற்றி உரையாடிச் செல்லும் குறும்படங்கள் ஏராளமாக உருவாகியுள்ளன. கொட்டிக் கிடக்கும் காட்சிகளுடன் சென்னைநகர வாழ்க்கையை, சீட்டு கட்டு போல் தங்களுக்கான விருப்பம் போல் கோர்த்து சித்திரமாக உருவாக்கியுள்ளனர். இப்படி சென்னை வாழ்க்கை குறும்படச் சுருளுக்குள்ளும் சிக்கி உள்ளது. 

சினிமா ஆசையில், சென்னை நகரை நோக்கி இளைஞர்கள் வருவது, தினமும் நடக்கும் நிகழ்வு. அவர்களில் அதிகமானோர் தோற்றுப்போகின்றனர். சிலர் உண்மை நிலை உணர்ந்து வேறு பக்கம் திரும்புகின்றனர். அப்படி திரும்புவோரை வாழ்க்கை படம் பிடிக்க கற்றுத்தருகிறார் நிழல் திருநாவுக்கரசு. சென்னை வாழ்க்கையை காட்டும் குறும்படங்கள் குறித்து அவர் கூறியதாவது:



தற்போது வெளிவரும் குறும்படங்கள் சென்னையில் உள்ள அவல நிலையை எடுத்து காட்டுகின்றன. அது சிறப்பான விஷயமாக இருந்த போதிலும், சிக்கலான சென்னை வாழ்க்கையில் சாதுர்யமாக காலத்தை நகர்த்தும் வாழ்க்கை நிலையையும், இங்கு பிரச்னைகளை எளிதாக எதிர்கொள்ளும் வழிவகைகள் குறித்த குறும்படங்களையும் படைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசு கூறினார். 

Tuesday, 16 August 2016

வாழ்க்கை ஒரு புத்தகம் ...தத்துவம் ... அதை கிழித்துவிடாதே மகனே -முத்துக்குமார்

வாழ்க்கை ஒரு புத்தகம் ...தத்துவம் ...
அதை கிழித்துவிடாதே மகனே 
-முத்துக்குமார் 






மரணத்தருவாயில், நா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்!
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை.
மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்…

.
வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். 
சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள்.
 பெண் உடல் புதிராகும்.












என்தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் 
அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல 
நீயும் தேடத் தொடங்குவாய்.




பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. 
உனக்கு த் தெரியாதது இல்லை. 
பார்த்து நடந்து கொள்.






நிறைய பயணப்படு. 
பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்கு ப்பின்னாலும் 
இரண்டு கண்களைத்திறக்கின்றன.



புத்தகங்களை நேசி.ஒரு புத்தகததை தொடுகிறபோது 
நீ ஓர் அனுபவத்தைத் தொடவாய்.
உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் 
தொலைந்தவர்கள். 

உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே
 இருக்கட்டும்.






கிடைத்த வேலையை விட பிடித்த வேலையைச்செய். 
இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால்இல்லை 
எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். 
அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.

உறவுகளிடம் 
நெருங்கியும் இரு.
விலகியும் இரு. 

இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட 
மேன்மையானது நட்பு மட்டுமே.
நல்ல நண்பர்களை ச்சேர்த்துக்கொள். 
உன் வாழ்க்கை நேராகும்.

இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு
 சொல்லாமல் சொன்னவை. 
நான் உனக்கு சொல்ல 
நினைத்துச்சொல்பவை.

என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான் 
என் தகப்பனின் அன்பையும் அருமையையும் 
நான் அடிக்கடி உணர்கிறேன்.







நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் 
என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.







நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் 
ஏதோ ஒரு ஊரில் கொஞ்சி ப்பேசி விளையாடிக்கொண்டு 
இருக்கையில் என் ஞாபகம் வந்தால்,இந்தக் கடிதத்தை 
எடுத்துப்படித்துப்பார்.








உன் கண்களில்இருந்து உதிரும் கண்ணீர் த்துளியில் 
வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.




இப்படிக்கு,
உன் அப்பா
நா.முத்துக்குமார்

Sunday, 14 August 2016

மொபைல் போனின் மாய வலையத்திடம் நாம் ....


மொபைல் போனின் மாய வலையத்திடம்  நாம் ....






இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன், நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் அங்கம் போலவே மாறிவிட்ட மொபைல் போனின் மாய வளையத்தில், நம் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறோம். இதிலிருந்து மீள்வது சற்று கடினம் தான்.


ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகமே மொபைல் போனிற்குள் அடங்கி விட்டது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், நம் இணைய தேடல்களுக்காக, 'பிரவுசிங் சென்டர்'களுக்கு சென்றோம். ஆனால், இப்போது நம் கையடக்க மொபைல் போனிலேயே, இணைய வழி சேவைகளை பயன்படுத்துகிறோம்.
சமூக வலைதளங்கள் பெருகிவிட்டன. அதில் உறுப்பினர்களாகும் விடலைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு, படிப்பில் நாட்டமின்மை, மன உளைச்சல், பாலியல் வக்கிர எண்ணங்கள் உருவாகி விடுகின்றன.

பல மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டு, மொபைலில் இன்டர்நெட் சலுகைகளையும், 'டாக் டைம்' சலுகைகளையும் தாராளமாக வழங்குகின்றன. இப்போதைய கணக்குப்படி, இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 100 கோடியை தாண்டியுள்ளது; இது, இனி வரும் காலங்களில், மேலும் அதிகரிக்கக்கூடும்.

அப்போது, இணைய வழி குற்றங்களும் அதிகரிக்கக் கூடும். அக்காலங்களில் சாலையில் போவோர் யார், வருவோர் யார் என்ற, புறச்சூழலில் பயணித்தோம். சுற்றுலா போன்ற தலங்களுக்கு செல்லும் போது, போகும் வழியில் இயற்கையை ஆனந்தமாக ரசித்து பயணித்தோம்.
ஆனால், இன்று அப்படியா? சாலையில் சென்றால் பசை ஒட்டியது போல, மொபைல் போனை காதில் ஒட்டிக் கொண்டே, பேசி செல்கிறோம்.
அதோடு விட்டோமா... எதிரே வாகனங்கள் வருவது கூட தெரியாமல், மொபைல் போனில் முகம் புதைத்து நடக்கிறோம். வாகனம் ஓட்டும்போது, மொபைலை காதில் அணைத்த படியே பேசிச் சென்று, விபத்துக்கு ஆளாகிறோம் அல்லது மற்றொருவரை விபத்துக்கு உள்ளாக்குகிறோம்.
பஸ்சுக்கு காத்திருக்கும் அக்குறுகிய நிமிடத்தில் கூட, நாம் வெளி உலகை ரசிப்பதில்லை. அப்போதும் கூட மொபைலில் மூழ்கி திளைக்கிறோம். மொத்தத்தில் நாம் சாலையில் குனிந்த தலை நிமிராமல், மொபைலை காதலித்த படியே செல்கிறோம்.

'இணையதளம் வழியாகவே, 100 சதவீத ஆபாச காட்சிகள் பரப்பப்படுகின்றன; ஆபாசக் காட்சிகளை பார்த்து, இளைஞர்கள் பாலியல் துாண்டலுக்கு ஆளாகின்றனர்; இவ்வாறு பாதிக்கப்படுவதில், 80 சதவீத ஆண்களும், 60 சதவீத பெண்களும் அடங்குவர்' என, சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
மொபைல் பாங்கிங், இன்டர்நெட் பாங்கிங் போன்றவற்றில் கவனக் குறைவால் பணத்தை இழந்த, படித்த, 'மேதை'களும் உண்டு. இப்படியாக இணையத்தில் வீழ்ந்த கதைகள் பல நீள்கின்றன.
'வாட்ஸ் ஆப்' மொபைல் போன் அப்ளிகேஷனில், பல அரசியல்வாதிகளின் அந்தரங்க உரையாடல்கள் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. தான் எடுக்கும், 'செல்பி'யை ஏதாவது ஒரு சமூக வலைதளத்தில் வெளியிடும் போது, அதன் விமர்சனங்கள் நேர்மாறாக இருந்தால், மிகுந்த மன அழுத்தத்திற்கு அந்த நபர் ஆளாகுகிறார். இதனால், தாழ்வு மனப்பான்மையும் உருவாகிறது.

'செல்பி' எடுக்கிறேன் பேர்வழி என, பின்னால் சென்று மாடியில் இருந்து கீழே விழுந்து மாய்ந்தவரும் உண்டு.
இரண்டிலிருந்து, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, மொபைலை ஒரு ஆர்வமான பதைப்புடன் எடுத்து, எடுத்து பார்க்கிறோம். இது ஒரு, மன நோய்க்கான அச்சாரம் எனவும், மொபைலில் நீண்ட நேரம் பேசுவது மற்றும், 'ஹெட்செட்'டில் நீண்ட நேரம் பாட்டு கேட்பது போன்றவற்றால், செவித்திறன் குறைபாடு, மூளை செல்கள் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் கூறப்படுகிறது.


இணையம் மற்றும் மொபைலை நீண்ட நேரம் ஒரே இடத்திலிருந்து பல மணி நேரம் உற்று நோக்குவதால், கண்கள் களைப்படைந்து, வறட்சி அடைந்து, கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. உடல் அசைவின்றி, ஒரே இடத்தில் இருப்பதால் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தண்டுவட பாதிப்பு, கழுத்து வலி, மன நோய், பசி இன்மை, மலச்சிக்கல், ஆண்மைக் குறைவு போன்ற கணக்கில் அடங்கா நோய்களுக்கு வழி வகுக்கிறது என்றும் மருத்துவ ஆய்வு கூறுகிறது.

ரயில் அருகில் வருவது கூட தெரியாமல், ஹெட்செட்டில் தன்னை மறந்து பாட்டு கேட்டவாறு சென்று, எத்தனை மாணவ, மாணவியர் ரயில் மோதி பலியாகி உள்ளனர். இவையெல்லாம், ஜீரணிக்க முடியாத பெரும் சோகம்.
இந்த இயந்திர வாழ்வில் மொபைல் மற்றும் இணைய பயன்பாடு முக்கியமானது இல்லை என, சொல்லவில்லை. இச்சேவைகளை ஆக்கப்பூர்வமான வழியில், சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம்.
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அண்ணன், சகோதரி, மனைவி, மக்களுடன் கூடி மகிழாமல், ஒரு கை அளவே உள்ள உயிரற்ற ஜடப் பொருளின் மேல் ஏன் இவ்வளவு பாசம், பைத்தியம்?

நம் மூதாதையர் தாத்தா, பாட்டி கதைகள் கேட்டுத் தானே நல்லொழுக்கமுடன் வளர்ந்தனர். அப்போது, பாசமும், நேசமும் நிரம்ப இருந்தது. ஆனால், இப்போது இதுபோன்ற ஜடப் பொருட்களின் மீது, நாம் பாசம் காட்டுவதால், பாசத்தையும், நேசத்தையும் மறந்து விட்டோம்.
மொபைல் மற்றும் இணையத்தை அளவுடன் பயன்படுத்தி, அதில் பெரும் பகுதி நேரத்தை தொலைக்காமல், நம் உறவுகளோடு கூடி மகிழ்வோம்.
இ-மெயில்: isaipriyann@gmail.com