Showing posts with label CHINNAPPA. Show all posts
Showing posts with label CHINNAPPA. Show all posts

Sunday, 10 June 2018

CHINNAPPA DEVAR -A MAN OF DESTINY









CHINNAPPA DEVAR -A MAN OF DESTINY


இது சின்னப்பா தேவர் கதை ! வெற்றி வரலாறு !!


“யார் யாரோ வர்றாங்க. தேவருக்கு நூற்றாண்டு விழான்னு ஆரம்பிக்கிறாங்க. பேஷா செய்யலாமேன்னு சொல்றேன். போயி கலந்து பேசிட்டு உடனே வர்றோமுன்னு கிளம்புறாங்க. அவ்வளவுதான். அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியாது. தமிழ் சினிமாவுக்கு தேவர் எவ்வளவு பங்களிப்பு செஞ்சிருக்காரு. எவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்காரு.

எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. வள்ளலா வாரி வாரி வழங்கியிருக்காரே. கருத்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லாருமா சேர்ந்து எவ்வளவு பிரும்மாண்டமா நடத்திக் காட்டியிருக்கணும். மறந்துவிடக்கூடிய மனிதரா அவரு. வயசு மட்டும் ஒத்துழைச்சிருந்தா நானே ஆடி, ஓடி செஞ்சிருப்பேன்” கலைஞானத்தின் கண்களில் கடந்தகாலம் நிழலாடுகிறது.

எட்டு வயதில் டூரிங் தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த கலைஞானம், பிற்பாடு முப்பது படங்களுக்கு கதை எழுதி, நூற்றுக்கணக்கான படங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குபெற்று, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தேவரின் கதை இலாகா அவ்வளவு பிரபலம். திரைப்படத்தின் டைட்டிலிலேயே ‘கதை : தேவர் கதை இலாகா’ என்று பெயர் வரும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்வார்கள். அந்த பிரசித்தி பெற்ற கதை இலாகாவின் தூண்களில் ஒருவராக இருந்தவர் கலைஞானம்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் குறித்த தன்னுடைய நினைவலைகளை தினகரன் தீபாவளி மலருக்காக பகிர்ந்துக் கொண்டார்.

“எல்லாம் தேவரோட ஆசி. நான் நல்லா இருக்கணும்னு முதல் சந்திப்பிலேயே விரும்பினவரு அவரு. அப்போதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருந்தேன். சிவம்னு ஒருத்தரு தேவரண்ணனோட குழுவில் இருந்தவரு. அவர்தான் என்னை அண்ணன் கிட்டே அழைச்சிட்டுப் போனாரு.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நான் எழுதிக்கொடுத்த படங்களோட பேரையெல்லாம் வரிசையா சொன்னவரு, ‘இதையெல்லாம் நீதானே எழுதினே’ன்னு கேட்டாரு. ‘ஆமாம்’னு சொன்னேன். ‘கோபாலகிருஷ்ணனே அருமையா கதை சொல்லுவாரு. அவரையே நீ கதை சொல்லி அசத்தியிருக்கே. கெட்டிகாரன் தாம்பா’ன்னு பாராட்டினாரு.

கொஞ்ச நேரம் பேசிட்டு, குடும்ப நிலவரத்தை விசாரிச்சாரு. அப்போ நான் பெருசா சம்பாதிக்கலை. அதை சொன்னதும், ‘அடப்பாவி, இவ்வளவு ஹிட்டு கொடுத்துட்டு இன்னும் ஒண்ணும் சேர்த்து வைக்கலையா?’ன்னு கேட்டாரு.

உடனே தன்னோட தம்பிகிட்டே சொல்லி பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. என் கையிலே கொடுத்து, ‘இது வெறும் அட்வான்ஸ்தான். இதை எடுத்துட்டு ஊருக்குப் போய் ஏதாவது நிலபுலன் வாங்கி போட்டுட்டு வா. எதிர்காலத்துக்கு உதவும். மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’னு சொன்னாரு. இப்படிதான் நான் தேவர் கிட்டே சேர்ந்தேன்.

தேவரோட இருந்த ஒவ்வொருத்தருக்கும் இதுமாதிரிதான் அனுபவம் இருக்கும். அறிமுகமானவுடனேயே ஒருத்தர் மேலே அளவில்லாமே அக்கறை காட்ட தேவராலே மட்டும்தான் முடியும்.

தேவர் கிட்டே வேலைக்கு சேர்ந்ததுமே தினமும் ஒரு கதை சொல்ல சொல்லுவாரு. கதை இலாகாவை சேர்ந்தவங்களுக்கு இது மட்டும்தான் வேலை. நாங்க சொல்லிக்கிட்டே இருப்போம். அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு. பிடிக்கலைன்னா துப்பிடுவாரு. பிடிச்சிருந்தா உடனே ஓக்கே பண்ணி வெச்சுப்பாரு. ஏதாவது படம் படப்பிடிப்பிலே இருந்தாகூட கேப் விடமாட்டார். நாங்க அடுத்தடுத்த படத்துக்கு கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். எங்களையெல்லாம் ஆசையா ‘டேய் கதைக்காரனுங்களா...’ன்னுதான் கூப்பிடுவாரு.

அவரும் சுவாரஸ்யமா கதை சொல்லுவாரு. அண்ணன் சொல்ல ஆரம்பிச்சாருன்னா நேரம் போறதே தெரியாது. அவரோட வாழ்க்கையோட ஒவ்வொரு அங்குலத்தை யும் மனசு திறந்து எங்களிடம் சொல்லியிருக்காரு.

சின்ன வயசுலே அண்ணன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை நல்லா பலமா வெச்சிருப்பாரு. கோயமுத்தூர் ராமநாதபுரம் பகுதியிலே ‘மாருதி உடற்பயிற்சி நிலையம்’னு இருந்துச்சி. அங்கேதான் அண்ணன் பயிற்சி பண்ணுவாரு. அவருக்கு சினிமா விலே பெரிய ஸ்டண்ட் கலைஞரா வரணும்னு ஆசை. அங்கேதான் எம்.ஜி.ஆரும் உடற்பயிற்சி செய்ய வருவார். இப்படியாக ரெண்டு பேருக்கும் நட்பு மலர்ந்துச்சி.

அண்ணன் மாச சம்பளத்துக்கு ஜூபிடர் பிக்சர்ஸ்லே வேலைக்கு சேர்ந்துட்டாரு. ஷூட்டிங் இருந்தாலும் சரி. இல்லைன்னாலும் சரி. அவருக்கு மாசாமாசம் சரியா சம்பளம் வந்துடும். ஆனா அப்போ எம்.ஜி.ஆர் காண்ட்ராக்டுலே இல்லை. அதனாலே அவருக்கு வேலை இருந்தாதான் காசு. குடும்ப கஷ்டம்.

ஒருமுறை தேவரண்ணன் எம்.ஜி.ஆர் வீட்டு வழியா நடந்து போய்க்கிட்டிருக்காரு. அப்போ எம்.ஜி.ஆரோட தாய் சத்யாம்மா தெருவிலே மிரண்டுப்போய் நின்னுக்கிட்டிருந்தாங்க. என்ன்ன்னு இவரு கேட்டிருக்காரு. ‘காசு வாங்கிட்டு வர்றேன்னு முதலாளியை பார்க்க ராமச்சந்திரன் போயிருக்கான். அவன் வந்து காசு கொடுத்தப்புறம்தான் அரிசி வாங்கி சமைக்கணும். இப்பவே இருட்டிடிச்சி. புள்ளை பசியோட வருவான். என்ன செய்யுறதுன்னு தெரியலை’ன்னு அம்மா சொல்லியிருக்காங்க. தேவருக்கு அப்படியே ஒரு மாதிரி ஆயிடிச்சி.

உடனே தன்னோட வீட்டுக்கு ஓடிப்போனவரு சமையலறைக்கு போய் அரிசிப்பானையிலே இருந்து அரிசியை எடுத்து தன்னோட சட்டை, டவுசர் பாக்கெட்டில் எல்லாம் நிரப்பிக்கிட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஓடியிருக்காரு. அந்த அரிசியை கொடுத்து சீக்கிரமா சோறு வடிச்சி வைங்கம்மான்னு சொல்லியிருக்காரு.

நைட்டு வீட்டுக்கு வந்துப் பார்த்த எம்.ஜி.ஆர், சாதம் தயாரா இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கார். சத்யாம்மா என்ன நடந்ததுன்னு மகன் கிட்டே சொல்லியிருக்காங்க. அப்படியே நெகிழ்ந்துப் போயிட்டாராம் எம்.ஜி.ஆர்.


பிற்பாடு எம்.ஜி.ஆரை வெச்சி தேவர் எப்படி அதிகப் படங்கள் தயாரிச்சாருங்கிறதுக்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணம். ஒருத்தரு மேலே ஒருத்தரு அவ்வளவு அன்பு ஆரம்பத்துலேருந்தே வெச்சிருந்தாங்க.

தேவருக்கு கல்யாணமாகி குழந்தைகள்லாம் பிறந்திருந்தது. சினிமாவையெல்லாம் மறந்துட்டு கோயமுத்தூரில் பால் கடை நடத்திக்கிட்டிருந்தாரு. நேர்மையா வியாபாரம் பார்க்குறவரு என்பதால் பிசினஸ் நல்லா இம்ப்ரூவ் ஆச்சி. பழைய சினிமா ஆளுங்க அப்பப்போ வந்து தேவரை பார்த்து பேசிட்டு போவாங்க. அப்படிதான் ஒருமுறை கேமிராமேன் விஜயனும், நடிகர் எஸ்.ஏ.நடராஜனும் பேசிக்கிட்டிருந்தாங்க.

பேச்சுவாக்கிலே நாமளே படம் தயாரிக்கலாம்னு திட்டம் தீட்டினாங்க. மூணு பேரும் காசு போட்டு படக்கம்பெனி ஆரம்பிச்சாங்க. பால் வியாபாரத்துலே சேர்த்த காசை தேவரண்ணன் முதலீடா போட்டாரு.

படம் பேரு ‘நல்ல தங்கை’. எஸ்.ஏ.நடராஜனே நடித்து இயக்கினார். கதை, வசனம் ஏ.பி.நாகராஜன். நம்பியார், ராஜசுலோசனா, மாதுரிதேவின்னு நடிக நடிகையர் எல்லாம் ஸ்டார்ஸ். படம் பூஜை போட்ட அன்னிக்கே நல்லா வியாபாரம் ஆச்சி. நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த நேரத்துலே ஒரு பிரச்சினை. பார்ட்னர் ஒருத்தர் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ புதுமுக நடிகை ஒருத்தர் கிட்டே நடந்துக்கிட்டு, விஷயம் தேவரண்ணன் காதுக்கு வந்துச்சி. இப்படியே போச்சின்னா தன்னோட பேரும் கெட்டுப் போயிடும்னு தேவர் போய் அவரோட சண்டை போட்டாரு. அடிதடி லெவலுக்கு போக அப்புறம் எல்லாரும் வந்து சமரசம் பண்ணி, தேவரண்ணன் தன்னோட பங்கை பிரிச்சி வாங்கிக்கிட்டாரு.

சினிமா ஃபீல்டுக்குள்ளே நுழையணும்னு ஆசைப்பட்டு இப்படி ஆகிப்போச்சேன்னு அவருக்கு வேதனை. ஏ.பி.நாகராஜன்தான் சமாதானப்படுத்தி, ‘நீங்களே தேவர் பிலிம்ஸ் என்கிற பேருலே படக்கம்பெனி ஆரம்பிக்கலாமே?’ன்னு யோசனை சொன்னாரு. தேவருக்கு படக்கம்பெனி ஆரம்பிக்கிற ஐடியாவை விட கம்பெனிக்கு ஏ.பி.என். சொன்ன பேரு ரொம்ப புடிச்சிருந்தது. குடும்பத்தை அப்படியே சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. தி.நகரில் சின்னதா ஒரு ஆபிஸ் போட்டாரு. இப்படிதான் புகழ்பெற்ற தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தோன்றிச்சி.

முதல் படமே எம்.ஜி.ஆரை வெச்சிதான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தாரு. அதுதான் ‘தாய்க்குப் பின் தாரம்’. படம் எடுக்குறப்பவே தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கதையோட முடிவு விஷயத்தில் சின்ன மனஸ்தாபம். இதனாலே அடுத்து ரஞ்சனை வெச்சி நீலமலைத் திருடன் எடுத்தாரு தேவர். இதுவும் வெற்றிப்படம் தான்னாலும் ‘தாய்க்குப் பின் தாரம்’ அடைந்த வெற்றியை தொட முடியலை. அடுத்து ‘செங்கோட்டை சிங்கம்’னு ஒரு படம். இது ஓடலை. ஜெமினியை வெச்சி ‘வாழவைத்த தெய்வம்’ எடுத்தாரு. சுமாராதான் போச்சி. ‘யானைப்பாகன்’, ‘கொங்கு நாட்டு தங்கம்’னு அடுத்தடுத்து ரெண்டு ஃபெய்லியர்.

தேவர் ஃபிலிம்ஸ்லே கலகலத்துப் போயிடிச்சி. இனிமேல் தேவர் அவ்வளவுதான்னு எல்லாரும் அவரை விட்டு விலக ஆரம்பிச்சாங்க. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கோயமுத்தூருக்கே திரும்பப்போய் ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம்னு அண்ணன் முடிவெடுத்திருக்காரு. அப்போதான் நாகிரெட்டி நிலைமையை கேள்விப்பட்டு கூப்பிட்டு அனுப்பியிருக்காரு. ‘நீங்க தொடர்ந்து சினிமா தயாரிக்கணும்’னு சொல்லி அவரோட ஸ்டுடியோவில் எந்த வேலையா இருந்தாலும் செஞ்சுக்கலாம். காசு பத்தியெல்லாம் பிற்பாடு பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு.

சரி. ஒருமுறை முயற்சிக்கலாம்னு அண்ணனும் சாங்ஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு வேலையை தொடங்கினாரு. அப்போ எம்.ஜி.ஆருக்கு கால் உடைஞ்சிருந்த சமயம். யதேச்சையா அண்ணனும், அவரும் வாகினி ஸ்டுடியோவில் எதிர்படுறாங்க. ஏற்கனவே இருந்த மனஸ்தாபத்தாலே அஞ்சு வருஷம் பிரிஞ்சிருந்த நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் கட்டி தழுவிக்கிறாங்க. தன்னைப் பத்தி பேசாம, எம்.ஜி.ஆரோட நலனைப் பத்தி மட்டுமே விசாரிச்சிக்கிட்டிருந்தாரு தேவர்.

அப்போ எம்.ஜி.ஆர் செஞ்ச ஒரு காரியம் மகத்தானது. தேவரை தன்னோடவே தன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். அவரோட தாய் சத்யபாமா படத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் மவுனமா நின்னாங்க. ‘அண்ணா! என் தாய் மீது ஆணை. இனிமேல் நீங்க எப்போ என்னை கேட்டாலும் கால்ஷீட் இல்லைன்னு சொல்லமாட்டேன்’னு சத்தியம் பண்ணினாரு.

சத்தியபாமா தாய் சொர்க்கத்திலிருந்தே தேவரை ஆசிர்வதிச்சிருக்கணும். உடனே தான் எடுத்துக்கிட்டிருந்த படத்துக்கு எம்.ஜி.ஆரை ஹீரோவா போட்டாரு. தேவர், படத்துக்கு வெச்ச பேரை பார்த்தோம்னா, அவரு எவ்வளவு பெரிய குசும்புக்காரருன்னு தெரியும். எம்.ஜி.ஆர் செய்த சத்தியத்தை நினைவுறுத்தும் விதமா ‘தாய் சொல்லைத் தட்டாதே’ன்னு பேரு வெச்சாரு.

அதில் தொடங்கி அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை வெச்சி பதினாறு படம் தயாரிச்சாரு. எம்.ஜி.ஆர் படம் எடுக்கலைன்னா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் மிருகங்களை வெச்சி படம் எடுப்பாரு. பக்திப்படம் எடுப்பாரு. இந்திக்கெல்லாம் போய் ராஜேஷ்கண்ணா வை வெச்சு ‘ஹாத்தி மேரா சாத்தி’யெல்லாம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். தேவர் பிலிம்ஸ் என்றால் நாடு முழுக்க தெரியுமளவுக்கு கம்பெனியை வளர்த்தார். கதையை முதல்லேயே பக்காவா ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு குறுகிய காலத்துலே படப்பிடிப்பை முடிச்சி நாற்பது, நாற்பத்தஞ்சி நாளில் முழுப்படத்தையும் எடுத்துடுவாரு. உழைப்புக்கு தாராளமா ஊதியம். அதே நேரத்தில் வேலையில் கறாரான கண்டிப்புங்கிறதுதான் தேவரோட ஃபார்முலா.

தன் கூட இருக்குறவங்களும் தன்னை மாதிரியே முன்னேறனும்னு நெனைக்கிற பரந்த மனசு. என்னை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்க்க விரும்பினார் தேவர். ‘எல்லாத்தையும் நானே கூட இருந்து முடிச்சிக் கொடுக்கறேன்’னு வாக்கும் கொடுத்தார். நானும் உற்சாகமா போய் முதன்முதலா ரஜினியை ஹீரோவா புக் பண்ணினேன். வில்லன் வேஷம் பண்ணிக்கிட்டி ருக்குறவரை ஹீரோவாக்குறியே, சரிபடாதுன்னு தேவர் விலகிட்டாரு. அவரு பேச்சை கேட்கலைன்னு என் மேலே கோவம் கூட பட்டாரு.

எப்படியோ கஷ்டப்பட்டு ‘பைரவி’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினேன். முதல் காட்சி முடிந்ததுமே தேவரண்ணன் கூப்பிட்டு அனுப்பினாரு. ‘நீ ஜெயிச்சிட்டடா’ன்னு சொன்னாரு. எனக்கு குழப்பமாயிடிச்சி. இப்போதானே முதல் காட்சியே முடிந்திருக்கு, அண்ணன் நம்மளை சமாதானப்படுத்த சொல்றாரோன்னு நெனைச்சேன். ‘நீங்க படம் பார்த்த அதே தியேட்டர்லேதாண்டா நானும் மாறுவேஷத்துலே பார்த்தேன். படம் பிரமாதம். நீ ஜெயிச்சிட்டே’ன்னு திரும்பச் சொன்னாரு. அப்போதான் அண்ணன் என் மேலே எவ்வளவு அக்கறையா இருந்திருக்காருன்னு தெரிஞ்சது.

நான் இந்தப் படத்தை தயாரிச்சிக்கிட்டிருந்த நேரத்துலே தினமும் பூஜையிலே உட்கார்ந்து, நான் ஜெயிக்கணும்னுதான் முருகனை வேண்டிக்கிட்டிருந்திருக்காரு. தயாரிப்பாளர் ஆயிட்டதாலே பொம்பளை, தண்ணீன்னு கெட்ட பழக்க வழக்கம் பக்கமா போறேனான்னு ஆளுங்களை வெச்சி கண்காணிச்சி இருக்காரு. அப்படியெல்லாம் இல்லை ன்னு தெரிஞ்சதும்தான் என்னோட வெற்றியையே அங்கீகரிச்சாரு.

எந்த ரஜினியை வெச்சி படம் பண்ணக்கூடாதுன்னு அண்ணன் எனக்கு சொன்னாரோ, அதே ரஜினியை வெச்சி மூணு படம் அடுத்தடுத்து பண்ணனும்னு ஆசைப்பட்டாரு. என்னை கதைகூட ரெடி பண்ணச் சொன்னாரு. அந்த படம்தான் ‘தாய் மீது சத்தியம்’.

அதுக்காக அவரோட ஆபிசுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தேன். ஊட்டியிலே அமிதாப்பச்சனை வெச்சி தேவர் எடுத்துக்கிட்டிருந்த படத்தோட ஷூட்டிங். அதுக்கு கிளம்பிக்கிட்டிருந்தார். ஆபிஸில் அப்போ கொஞ்சம் கையாடல் மாதிரி ஊழல்கள் நடந்து, தேவரண்ணன் கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்தார். ஒரே நேரத்துலே மூணு படம் எடுக்கற டென்ஷன் வேற. முருகன் படத்துக்கு முன்னாடி நின்னு, “ஏண்டா என்னை இப்படி சோதிக்கறே? சீக்கிரமா என்னை கூப்பிட்டுக்கடா”ன்னு மனமுருக வேண்டினார். எனக்கு அப்படியே பக்குன்னு ஆயிடிச்சி.

மூணு நாள் கழிச்சி செய்தி வந்தது. எங்களை வாழவைத்த தெய்வம் எங்களை விட்டுப் போனது. அவர் கேட்டுக்கிட்ட மாதிரியே முருகன் அவரை அழைச்சிக்கிட்டான். இத்தனைக்கும் தேவரண்ணனுக்கு அப்போ வயசு வெறும் அறுபத்தி நாலுதான். நாற்பது வயசுலேதான் அவரோட சினிமா வாழ்க்கையே தொடங்கிச்சி. மிகக்குறுகிய காலத்தில் அப்படியொரு அமரப்புகழை அடைந்த மகத்தான சாதனையாளர் அவர். சினிமா எப்படி எடுக்கணும்னு கத்துக்கணும்னா, தேவர் என்னவெல்லாம் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டாலே போதும். ஒரு மனிதன் எப்படி வாழணும்னாலும் அவருதான் எல்லாருக்கும் பாடம்”

- யுவகிருஷ்ணா

Saturday, 22 July 2017

SANDOW M.M. A. CHINNAPPA DEVAR - AN EXAMPLE OF HARD WORK


SANDOW  M.M. A. CHINNAPPA DEVAR - AN EXAMPLE OF HARD WORK





தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது.
அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
நாகி ரெட்டியின், எங்க வீட்டு பிள்ளை, ஏவி.எம்.,மின், அன்பே வா, பந்துலுவின், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள், எம்.ஜி.ஆரை எட்ட முடியாத உயரத்துக்கு கொண்டு சென்றன. 1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்!
இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு!
வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், 'என்ன முருகா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க...' என்றார்.


'நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே...' என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இலாகாவை எட்ட, அவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ள வராண்டாவுக்கு வந்தனர்.
'அண்ணே... 
சிவாஜி இங்க எதுக்காக வந்துருக்காரு... 
உங்களுக்கு ஏதாவது தெரியுமா...' 
என எடிட்டர் பாலுராவைக் கேட்டனர். அவர் தெரியாது என்றதும், 

'பத்மஸ்ரீ விருது கிடைச்சுருக்கில்ல... 
அதுக்கு ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார்...' என்றும், 
'இப்ப சிவாஜி கணேசனோட மார்க்கெட் அவுட்டுப்பா... 
மோட்டார் சுந்தரம்பிள்ளை கூட, இந்தியில வசூல் ஆன மாதிரி, இங்கே போகாதுங்கறாங்க; 
புதுப்படம் எதுவும், 'புக்' ஆகலே. அதான் வாய்ப்பு கேட்டு வந்திருப்பார்...' 
என்றும் ஆளாளுக்கு கருத்துக் கூறினர்.

சிவாஜி கணேசனை வழியனுப்பி விட்டு வந்த தேவர், 
'இங்கே என்னப்பா செய்யறீங்க... 
நான் சொன்ன சீனை யோசிச்சீங்களா...' 
என்று குரலை உயர்த்தினார்.

'அண்ணே... 

சிவாஜி இப்ப எதுக்காக வந்தாருன்னு சொன்னாத் தான் எங்களுக்கு வேலை ஓடும்...' என்றனர்.
'என் பெரிய பொண்ணு சுப்புலட்சுமிக்கு, கணேசன் வரன் கொண்டு வந்துருக்காருப்பா. நாம அவருக்கு தொழில் கொடுக்கலன்னாலும், அவருக்கு என்மேல ஒரு தனிப் பாசம் இருக்கத் தான் செய்யுது. அவரே வீடு தேடி வந்து பேசிட்டுப் போறாரு...' என்று கணேசனை, புகழ்ந்து தள்ளினார் தேவர்.


மாப்பிள்ளை ஆர்.தியாகராஜனின் மூத்த சகோதரர் சேது, பொள்ளாச்சியில் பிரபல வணிகர்; சிவாஜி கணேசனின் நண்பர். கணேசனின் முயற்சியால், ஜூன் 1, 1966ல் தேவர் மகள் சுப்புலட்சுமி, திருமதி தியாகராஜன் ஆனார். தி.மு.க.,வை எப்படியாவது ஆட்சியில் அமர வைத்து விட வேண்டும் என்று இளைஞர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நேரம்

அது. அச்சமயத்தில்,
 'அண்ணே... தனிப்பிறவி படத்துல ஒரு கனவு பாட்டு சீன் வருது; 
அதுல, நீங்க முருகர் வேஷமும், அம்மு வள்ளியா வந்தா நல்லா ருக்கும்ண்ணே... கவிஞர் பல்லவியை அற்புதமா ஆரம்பிச்சுருக்காரு...' என்று தேவர் கூறியதும், அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.,

ஏற்கனவே, நல்ல தங்காள் படத்துக்கு வசனம் எழுத தடை விதித்து, கதை, வசனகர்த்தா ஏ.கே.வேலனுக்கு, நாவலர் நெடுஞ்செழியனுக்கு, கடிதம் அனுப்பிய வரலாறும் உண்டு.

மேலும்,
 'அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா...' என்று நடித்து கைத்தட்டல் வாங்கிய பின், திடீரென்று முருகனாகத் தோன்றினால், கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்புமே...' என்று தயங்கியவர், 'முகராசிக்கு கிடைச்ச வெற்றியில, 'ரிஸ்க்' எடுக்காதீங்க அண்ணே...' என்றார்.

உண்மையில், எம்.ஜி.ஆரும் முருக பக்தரே! ஜூபிடர் படங்களில் நடிக்கிற காலத்தில், தேவரோடு சென்று, மருதமலை முருகனை வழிபடுவார் எம்.ஜி.ஆர்.,
பராசக்தி படத்தின் வெற்றிக்குப் பின், வறுமையில் வாடிய தமிழர்களில் பெரும்பாலோர், தி.மு.க.,வில் நம்பிக்கை வைத்தனர். எம்.ஜி.ஆரும் அதுவரை கதர் ஆடை அணிந்த காந்தியவாதியாகவும், கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் சந்தனம், குங்குமம், திருநீறு என்று பக்திப் பழமாகவே வாழ்ந்தவர் தான். பராசக்தி அடித்த புயலில், அவரும் தி.மு.க.,வில் கரை ஒதுங்கினார்.


ஆனாலும், அவர் மனசுக்குள் எப்போதும் முருகனே குடியிருந்தான். கவிஞர் வாலியின் நெற்றியில் பூசிய விபூதியை, கே.ஆர்.ராமசாமி விரும்ப வில்லை என்பதற்காக, அதை அழிக்கச் சொன்னவர் எம்.ஜி.ஆர்., ஆனால், தேவர், தனக்கு முருகனின் திருநீற்றைத் தராவிட்டால், அவரிடம் பேசக்கூட மாட்டார் எம்.ஜி.ஆர்.,

'சும்மா நடிங்கண்ணே ஜோரா இருக்கும்...' என்றார் விடாப்பிடியாக தேவர். எம்.ஜி.ஆருக்காகவே ஆள் உயர வெள்ளி வேலுக்கும் ஆர்டர் கொடுத்தார். நீண்ட தயக்கத்துக்குப் பின், தேகமெங்கும் நகைகளும், ஆபரணங்களும் தவழ, கையில் வேலோடு முருகனாகக் காட்சி அளித்தார் எம்.ஜி.ஆர்.,

அக்காட்சி படமாக்கப்பட்ட போது, தேவர் -
எம்.ஜி.ஆர்., உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர். முருகன் கை வேலை, தன் நண்பருக்கே அன்புப் பரிசாக கொடுத்தார் தேவர். எம்.ஜி.ஆரின் முருக பக்தி குறித்து, பிப்., 1974ல், 'பொம்மை' இதழுக்கு தேவர் அளித்த பேட்டி இது:


நான் இப்போ சொல்லப் போற சேதி உங்களுக்கெல்லாம் பிரமிப்பா இருக்கும். எம்.ஜி.ஆருக்கு தெய்வ பக்தி இல்லன்னு ரொம்ப பேரு சொல்றாங்க. ஆனா, நான் எப்ப மருதமலைக்கு போனாலும், எம்.ஜி.ஆர்., பேருக்கு அர்ச்சனை செய்வேன்; அந்தப் பிரசாதத்தைக் கொடுக்கும் போது, உட்கார்ந்திருந்தால் கூட, எழுந்து, பய பக்தியோட வாங்கிப்பார். எம்.ஜி.ஆரிடம்., ஒருநாள், 'மருதமலை போயிட்டு வந்தே'ன்னு சொன்னேன்; உடனே, 'பிரசாதம் எங்கே?'ன்னு கேட்டார். ஆனால், பிரசாதத்தை எடுத்துப் போக மறந்து விட்டேன். அன்று முழுவதும் எம்.ஜி.ஆர்., என்னுடன் பேசவே இல்ல!
- இவ்வாறு கூறியிருந்தார் தேவர்.


தேவரின், 'தா' வரிசைப் படங்கள் வசூல் செய்த மாதிரி, கன்னித்தாய், தொழிலாளி மற்றும் முகராசிக்குப் பின் வந்த, தனிப் பிறவி மக்களைக் கவரவில்லை. செப்.,1966ல் தனிப்பிறவியோடு வெளியான, சரஸ்வதி சபதம், கே.எஸ்.கோபால கிருஷ்ணனின், சின்னஞ்சிறு உலகம் மற்றும் முக்தா பிலிம்சின், தேன் மழை அத்தனையும் வெற்றி!

கொடைக்கானலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஜெமினி கணேசன், மீண்டும் கோடம்பாக்கத்தில் பிசியானார். பொங்கல் ரிலீசாக, தாய்க்கு தலைமகன் படம் வெளியாக இருந்தது. அத்துடன், கந்தன் கருணை, 'சோ'வின் மனம் ஒரு குரங்கு, பீம்சிங்கின், பட்டத்து ராணி மற்றும் பெண்ணே நீ வாழ்க என்று நிறைய படங்கள் வெளியாக காத்திருந்தன.

ஜனவரி, 13ல், பொங்கலுக்கு முதல் நாள், வெலிங்டனில், தாய்க்கு தலைமகன் படத்தை வெளியிட முடிவு செய்தார் தேவர். சில நேரங்களில், பொங்கல் தினம், கரிநாள் என்றும், 'சுபம் விலக்க' என்று காலண்டர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேவருக்கு ராசி எண் 5; ஆனால், ஏனோ,

1967ல் போகி அன்றே, படத்தை வெளியிட்டார் தேவர்.
தேவர் பிலிம்சின் ஆஸ்தான எழுத்தாளர் ஆரூர்தாஸ் மற்றும் மாராவும், மதுரை திருமாறனும் இணைந்து உருவாக்கிய படம், தனிப்பிறவி. ஆனாலும், அப்படத்தை எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் புறக்கணித்து விட்டனர். அதனால், தாய்க்கு தலைமகன் படம் குறித்து ரொம்ப ஆர்வமாய் இருந்தார் தேவர்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஜெயலலிதா - ரவிச்சந்திரன் நடிக்க, மகராசி படத்தை இயக்கினார் திருமுகம். ஆனால், படம் பாதியில் நின்று விட்டது. காரணம், ரவிச்சந்திரனுக்கு, அம்மை!
அம்மை குணமாகி வந்த ரவிச்சந்திரன், அவர் ஒப்பந்தமான மற்ற படங்களை தவிர்த்து, முதலில், மகராசி படத்தில் நடித்துக் கொடுத்தார். அவரை வைத்து ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில், மூன்று சண்டை காட்சிகளை, அசுர வேகத்தில் படமெடுக்க முடிவெடுத்தார் இயக்குனர், எம்.ஏ.திருமுகம். இதனால், களைத்துப் போனார் ரவிச்சந்திரன். 'தம்பி சோர்ந்து போகாதீங்க... இன்னும் நம்ம கம்பெனியில நிறைய படங்கள் நடிப்பீங்க. நாளைக்கு காலையில பத்திரிகையை பாருங்க. 'ரவிச்சந்திரன் பூரண குணமானார்; ஒரே நாளில் மூன்று சண்டைக் காட்சியில் நடித்தார்ன்னு செய்தி வரும்; புதுசா நாலு பேர் உங்கள, 'புக்' செய்ய ஓடி வருவாங்க...' என்று உற்சாகம் ஊட்டினார் தேவர்.


கடந்த, 1967ல் தமிழ்ப் புத்தாண்டில் வெளியான, மகராசி பெரிய வெற்றி பெறவில்லை. அதே தினத்தில் வெளியான, பட்டணத்தில் பூதம் நல்ல வசூல். அதனால், அடுத்து தன் படங்களில் ஜெய்சங்கரை ஒப்பந்தம் செய்தார் தேவர். அவரை வைத்து, நேர்வழி, அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் மற்றும் கெட்டிக்காரன் என்று, வரிசையாக படம் தயாரித்தார்.


ஓர் இடை வேளைக்குப் பின், மீண்டும் நடிக்க வந்தார் எம்.ஜி.ஆர்., உற்சாகமான தேவர், மறுபிறவி, விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், மற்றும் தந்தையும் மகனும் என, பல படங்களுக்கு பூஜை போட்டார்.


இதில், மறுபிறவி படத்தில், எம்.ஜி.ஆர்., நிறைய குதிரை சவாரி செய்ய வேண்டி இருந்ததால், அவர் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை; கூடவே, சுடப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனால், எம்.ஜி.ஆர்., மறுபிறவியை தள்ளிப் போட்டார்.


ஏறக்குறைய, 10 ஆண்டுகளுக்கு பின், மறுபிறவி படத்துக்கு உயிர் கொடுத்தார் தேவர். அப்போது எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர். அவருக்கு பதில், ரஜினி நடித்தார். படத்தின் பெயர், தாய் மீது சத்தியம்!



அப்பா மற்றும் மகன் என, இரு வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை. அத்தகைய கதை என்பதால், தந்தையும் மகனும் படத்துக்கு பூஜை போடப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பத்மினி, விஜயா என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், என்ன காரணமோ, அப்படத்தையும் தள்ளி வைத்து விட்டார் எம்.ஜி.ஆர்.,


எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் தீர்ப்பு வெளிவந்த, நவ., 1967ல் தீபாவளியன்று, விவசாயி ரிலீசானது. ஆனால், 'பாடல்களை நீக்கி விட்டுப் பார்த்தால், படம் அக்ரிகல்சுரல் டாகுமெண்டரி...' என்று பத்திரிகைகள் விமர்சித்தன; ரசிகர்கள் படத்தை ரசிக்கவில்லை.


விவசாயி வெளியாகி மூன்று மாதங்களுக்கு பின், தேர்த் திருவிழா வந்தது; அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. டி.ஆர்.ராமண்ணாவிடம் பணிபுரிந்தவர், டி.என்.பாலு. பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த சம்பவங்களைக் கூறுவதில், புகழ் பெற்றிருந்தார். இவரின் கதைகளாலேயே, ராமண்ணா வெற்றி மேல் வெற்றி பெறுகிறார் என நினைத்த எம்.ஜி.ஆர்., அவரை தேவர் பிலிம்சுக்கு அழைத்து வந்து, அவருக்காக, தேவரிடம் வாதாடினார். வேறு வழியின்றி சம்மதித்தார் தேவர். ஆனால், அவரது, காதல் வாகனம் என்ற கதை, தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவிற்கும், தேவருக்கும் பிடிக்கவில்லை.


எம்.ஜி.ஆரின், 101வது படம், காதல் வாகனம். அதில் விசேஷமாக ஆங்கிலோ இந்தியப் பெண் வேடத்தில் வந்து போனார் எம்.ஜி.ஆர்., இப்படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் மோதல் ஏற்பட்டது.


அச்சமயத்தில், அடிமைப் பெண் படத்தை இரண்டாவது முறையாகத் தயாரித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்., இம்முறையாவது படத்தை முடித்து விட வேண்டும் என அவர் நினைத்துக் கொண்டிருக்கையில், தேவரின், காதல் வாகனம் குறுக்கிட்டு விட்டது. 1968ல், 'தீபாவளி ரிலீஸ், காதல் வாகனம்...' என்று தேவர் அறிவிக்க, எம்.ஜி.ஆரும், 'சரி...' என்றார்.


அதற்குள், அடிமைப்பெண் வெளிப்புறப் படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆர்., ராஜஸ்தான் செல்ல வேண்டியிருந்ததால், 'அண்ணே... நான் இல்லாத சீன் எல்லாத்தையும் எடுத்து முடிங்க; ராஜஸ்தான்ல இருந்து திரும்பி வந்து, என் போர்ஷனை சீக்கிரமே நடிச்சுக் கொடுத்துடறேன்...' என்றார் எம்.ஜி.ஆர்.,


சற்று எரிச்சலோடு எம்.ஜி.ஆரை வழி அனுப்பினார் தேவர். சொன்ன தேதியில் எம்.ஜி.ஆர்.,திரும்பவில்லை; மெதுவாகத் தான் சென்னை வந்தார்.


தீபாவளிக்கு சில நாட்களே இருந்த நிலையில், டென்ஷனான தேவர், 'முருகா... என் படம் கண்டிப்பா தீபாவளி ரிலீஸ்; முடிஞ்சா இப்பவே நீங்க வந்து வேலையை ஆரம்பிங்க. ரெஸ்ட் எடுக்கறேன்னு இன்னும் லேட் செய்யாதீங்க...' என்றார் சிறிது கறாராக! ஓடோடி வந்து, இரவு பகலாக நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்., ஆனாலும் காதல் வாகனம் ஓடவில்லை. வடபழனி முருகன் கோவில் சன்னிதியில் நின்று, 'இத பார் முருகா... காதல் வாகனம் படம் தேவர் பிலிம்சுக்கு கரும்புள்ளி ஆகிடுச்சு. எம்.ஜி.ஆர்., கால்ஷீட்டும் இனி உடனடியாக கிடைக்காது. இதுவரை உன் தயவால, 30 படங்கள் எடுத்துட்டேன்; அதெல்லாம் எம்.ஜி.ஆர்., ஆதரவுல ஜெயிச்சது. அடுத்து, நான் எடுக்கற படத்துக்கு, உம்மேலே நான் வெச்சுருக்கிற பக்தியும், உனக்கும், எனக்குமான உறவு மட்டுமே மூலதனம்.



'என்னைக் கைத்தூக்கி விடறதும், குப்புறத் தள்ளுறதும் உன் இஷ்டம். இது, என் முதல் பக்திப் படம். இதுல ஜெயிச்சிட்டா, தொடர்ந்து, உன் புகழைச் சொல்ற மாதிரி நெறைய சாமி படம் எடுப்பேன். இல்ல வழக்கம் போல, நாயையோ, பாம்பையோ வெச்சு தான் படம் தயாரிப்பேன். என்ன சொல்ற... எனக்கு துணை நிக்கிறியா...' என்று மானசீகமாக முருகனிடம் கேட்டவரின் மனசுக்குள், துணைவன் என்ற வார்த்தையே விதையாக விழுந்து விட்டது. அதையே தன் அடுத்த படத்துக்கு தலைப்பாக வைத்தார். அப்போது புராணப் படங்களாக எடுத்து கொண்டிருந்தார் ஏ.பி.நாகராஜன். தேவருக்கு புராணக் கதைகளில் ஆர்வம் கிடையாது. அவர், தன் சொந்த வாழ்வில் முருகனோடு பெற்றிருந்த நிஜ அனுபவங்களே படம் எடுக்கப் போதும்; ஆனாலும், சிறு தயக்கம். தன் சொந்தக் கதைகளை எடுத்தால் எடுபடுமா என்று!


புதிய தயாரிப்புக்கு பக்திக் கதை தேவை; அதை யாரை வைத்து எழுதி வாங்கலாம் என்று யோசித்தார். கதை இலாகாவில் உள்ளோரிடம், 'ஏம்பா... எல்லாரும் இப்படி கம்முன்னு இருந்தா எப்பிடி... என் ரசனை தான் உங்க எல்லாருக்கும் தெரியுமே... படத்துல விலங்குகள் வர்றதோட, முருகனும் இருக்கணும். முருக வேஷத்துல சின்னக் குழந்தை நடிச்சா நல்லாருக்கும்...' என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இடை மறித்த திருமுகம், 'பாலமுருகன் மாதிரியா...' என்று கேட்டார்.


'நல்ல வேளை ஞாபகப்படுத்தினே... பாலமுருகன், சிவாஜிக்கு எழுதிய, எங்க ஊர் ராஜா சக்கப்போடு போடுது; போயி அவர நான் கூப்பிட்டன்னு சொல்லுங்க...' என்றார். கதை இலாகா குஷியானது; கதாசிரியர் பாலமுருகன் வீட்டுக்கு, கார் பறந்தது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அண்ணாசாலையில் ஓடுகிற முக்கால்வாசி சினிமாக்களில், அந்த நடிகை, இரண்டாவது கதாநாயகியாகவே வந்து போனார். நிறமோ கறுப்பு; சர்ச் பார்க்கில் படித்திருந்தாலும், பேச்சில் முழுக்க முழுக்க தமிழ் நெடி. பிரபலமான நடன ஆசானின் உறவு பெண்ணான ஸ்ரீபிரியாவை தவிர, வேறு யாரையும், அலமேலுவாக தேவரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

எதுகை மோனைக்காக, ஆட்டுக்கார அலமேலு என்று படத்திற்கு பெயர் சூட்டினர். ஏற்கனவே கஜானா காலி. அதனால், வழக்கமாக வாகினி ஸ்டுடியோவில் பூஜை போடுவதை தவிர்த்து, முதன் முதலாக தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திலேயே பூஜை போட்டனர். தன் பேத்தி சண்முக வடிவை, 'கேமரா ஸ்விட்ச் ஆன்' செய்ய வைத்தார் தேவர்.



ஆட்டுக்கார அலமேலு படத்திற்காக மேட்டுப்பாளையத்தில் முகாமிட்டார், தேவர். திரைக்கதை மற்றும் வசனத்தை தூயவன் எழுத, அதிக செலவில்லாமல், படம் எடுத்தனர். கிட்டு கவுண்டரின், 100 ஏக்கர் தோட்டத்தில், ராமுவின் தனி ஆவர்த்தனம்.
பாட்டெழுத கண்ணதாசன் அகப்படவில்லை. தேவர் யாருக்காகவும், எதற்காகவும், காத்திருந்து பழக்கப்படாதவர். மாராவை அழைத்து, 'ஏம்பா... நாலு பாட்டு தானே... நீயே எழுதிடேன்; இதுக்கு எதுக்கு கவிஞரு...' என்றார்.



வேர்க்கடலையை, உள்ளங்கையில் வைத்தபடி, ராமுவின் முன் செல்வார், பயிற்சியாளர் நசீர். ராமு, எம்.ஜி.ஆர்., கணக்காக குதிக்கும்; முட்டும்; கொம்பால் குத்தி மோதும்; எஜமானி அலமேலுவின் உயிரை காப்பாற்றும்; 'டேப் ரிகார்டரை ஆன்' செய்து, பாட்டு கேட்கும்; அதை வாயில் கவ்வியபடி, க்ளைமாக்சில் போலீசிடம் ஓடும். தேவரை கிண்டல் செய்து, 'என்ன அண்ணே... இந்த ஆடு, நம்பமுடியாத சாகசத்தையெல்லாம் செய்யுது, ஜனங்க ஏத்துக்குவாங்களா...' என்பார் சிவக்குமார்.



'அடப்போப்பா... விட்டலாச்சாரியா படங்கள மக்கள் எப்படி ரசிக்கிறாங்க. மாயாஜாலத்தை ஒத்துக்கிறவங்க, ஆடு பல்டி அடிக்கிறத ரசிக்க மாட்டாங்களா... தாசரி நாராயணராவ் தெலுங்குல எடுத்த, சொர்க்கம் நரகம் படம் வெள்ளிவிழா கொண்டாடிடுச்சு. அந்தப் படத்த இந்தியில, ரீ - மேக் செஞ்சு, காசு அள்றாரு நாகி ரெட்டி. நாம அந்தப் படத்த தமிழ்ல தயாரிச்சோம்; ஓடலை. தேவருக்கு எதுக்கு இந்த வேலை. 'இவர யாரு விலங்குக இல்லாம படம் எடுக்க சொன்னதுன்னு கடிதம் போடறானுங்க...' என்றார்.



தேவரை தவிர, ஒருவருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. வழக்கமாக அவரிடம் படம் வாங்கும் வினியோகஸ்தர்கள், 'ஒரு வாரம் தாங்காது அண்ணே...' என்று, முகத்தை தொங்கப் போட்டபடியே, படப்பெட்டியை எடுத்தனர். ஒரு சிலர் மிக புத்திசாலித்தனமாக வந்த விலைக்கு, வாங்கிய படத்தை விற்று விட்டனர்.
கோமாதா என் குலமாதா தேவருக்கு வெற்றிப்படம். ஆட்டுக்கார அலமேலு அந்த அளவு ஓடினாலும் போதும் என்று நினைத்தார் தேவர். 1977ல் தீபாவளி அன்று, வெலிங்டன், பரங்கிமலை ஜோதி, அபிராமி என்று, தியேட்டர்களுக்கு படை எடுத்தனர் மாரா மற்றும் தியாகராஜன்.


வழக்கமாக தீபாவளி ரேசில் பங்கு கொள்ளும் சிவாஜி, ஜெய்சங்கர் படங்களுடன் சிவகுமாரின் மூன்று படங்கள் வெளியாகி இருந்தன. முதன் முதலாக பெரிய கம்பெனியில், தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான கதாநாயகி வேடம் என்பதால், படம் வெற்றியடைய வேண்டுமே என்று, தேவருக்கு மேல் முருகனை கும்பிட்டார் ஸ்ரீபிரியா.


தேவர் பிலிம்சிலிருந்து காலையிலேயே அவர் வீட்டுக்கு ஊழியர்கள் சென்று விட்டனர். ஸ்ரீபிரியாவிடம் பழநி பஞ்சாமிர்தம், விபூதி, சந்தன பிரசாதங்களை கொடுத்தனர். ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும், தங்களுடன் பணியாற்றிய கதாநாயகன், கதாநாயகிகள், டெக்னீஷியன்கள், கதை, வசனகர்த்தா அனைவருக்கும் பழநி பஞ்சாமிர்தமும், விபூதியும் வழங்குவது தேவர் பிலிம்ஸ் வழக்கம் என்று, அவருக்கு விளக்கினர்.


ஸ்ரீபிரியா கண்களில் ஒற்றி, 'முருகா நீ தமிழ்க் கடவுள்... நான் என்ன முயற்சி செஞ்சாலும், இங்கே தெலுங்கு, மலையாள கதாநாயகிகளுக்கு கிடைக்குற, வாய்ப்பு எனக்கு வரமாட்டேங்குது. அந்த நிலைமை மாறணும். நானும் முன்னணி கதாநாயகி ஆகணும்...' என, வேண்டிக் கொண்டார். அவர் வேண்டுதல் அப்படியே பலித்தது. 1977ம் ஆண்டு, ஆடு ஜெயித்த தீபாவளியாகி விட்டது. கதாநாயகன் சிவகுமார் முதல், 'ஜாக்பாட்டை' கோட்டை விட்ட வினியோகஸ்தர்கள் வரை, தேவரின் கணிப்பை மெச்சினர். தேவர் பிலிம்சில் அதுவரை எந்த விலங்குக்கும் கிடைக்காத பேரும் புகழும், ராமுவுக்கு கிடைத்தது.



ஆடு தோன்றிய ஒவ்வொரு காட்சியும், தியேட்டர்களில் ஆரவாரம். தேவர் பிலிம்சில் எம்.ஜி.ஆர்., நடித்த, 16 படங்களையும் கடந்து, ஆட்டுக்கார அலமேலு வெள்ளி விழா கொண்டாடியது. தெலுங்கிலும் இப்படத்தை, புட்டேலு பொன்னம்மா என்ற பெயரில் தயாரித்தது, தேவர் பிலிம்ஸ். தமிழை விடவும் அங்கு வசூலும், வரவேற்பும் அதிகம்.
மே 4, 1978ல் அபிராமி தியேட்டரில் ஆட்டுக்கார அலமேலு படத்தின் வெள்ளி விழா. அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ராமு என்ற ஆடும் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆரிடம் கேடயம் பரிசு பெற்றது.


நீலமலைத் திருடன் மற்றும் நேர்வழி படங்களைத் தொடர்ந்து ரஜினியை குதிரை மீது ஏற்றி, தாய் மீது சத்தியம் படத்தை தயாரித்தார் தேவர். ரஜினிக்காக, 'புறப்படடா தம்பி, புறப்படடா! தர்மம் பூமியில் நின்று நிலையாய் வாழ புறப்படடா...' என எழுதினார் மருதகாசி.

மூன்று பாடல்களையுமே டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். காட்சியை படமாக்கலாம் என்றால், படப்பிடிப்பில் ரஜினி ஒத்துழைக்கவில்லை என்றனர். ரஜினிக்கு பைத்தியம் என்று, திரை உலகமும், பத்திரிகைகளும் சேர்ந்து முரசு கொட்டின. தேவருக்கும் அது புது அனுபவம். நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் வழி இல்லை. அதிக வேலை பளு மற்றும் போதை பழக்கத்தால் ஏற்பட்ட நரம்பு தளர்ச்சி என்று மருத்துவர்கள் காரணம் கூறினர். கடந்த 1978ல் தமிழ் சினிமா, ரஜினிக்கு மாறியிருந்தது. சிவாஜி கணேசன் படத்திலும், சிறப்புத் தோற்றத்தில் ரஜினி வந்தார். படப் பிடிப்புக்கு ரஜினியைத் தேடி சென்று தனியே கூப்பிட்டு பேசினார் தேவர்; தன் முடிவைக் கூறினார் ரஜினி.



'முடியல அண்ணே... எல்லாம் போதும்ன்னு இருக்கு. நான் எச்சித்துப்பினாக் கூட, 'நியூஸ்' வருது. சுதந்தரமா வாழ முடியல. பொறுமைய ரொம்பவே சோதிக்கறாங்க. தூங்கி நாலு நாளாச்சு. மூணு, ஷிப்டும், 'டைட் கால்ஷீட். 'ஷாட் ரெடி' மட்டும் தான் காதுல கேக்குது. எந்தப் புகழைத் தேடி சென்னை வந்தேனோ, அதுவே இப்ப என்னை ஓட ஓட விரட்டுது. தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு தோணுது...' என்றார் ரஜினி.


அதிர்ந்த தேவர், 'முருகா... என்ன வார்த்தை சொல்ற... உங்கிட்ட திறமையும், உழைப்பும் இல்லேன்னா இந்த வெற்றி வந்துருக்குமா... நீ பழசை மறக்கற ஆளு இல்ல; பெங்களூர்ல கண்டக்டரா வேல செஞ்சது முதல், எல்லாத்தையும் குமுதம் புத்தகத்துல படிச்சேன். கடவுள் பக்தியும் இருக்கு. அப்புறம் ஏன் ஒடிஞ்சு போறே? இத்தனைக் கெடுபிடியிலும் உடம்பு சுகமில்லன்னாலும், ஷூட்டிங்குக்கு சரியா வந்துட்ட. தொடர்ந்து நடி. எம்.ஜி.ஆருக்கு அப்புறம் வயசுப் பசங்க உங்கிட்ட தான் மயங்கிக் கிடக்கிறாங்க. போ தம்பி... மருதகாசி பாட்டைப் படிச்சப் பார்த்தியா, உனக்காகவே எழுதின மாதிரி இருக்கு...' என்று ஆறுதல் கூறினார் தேவர்.
குதிரையில் ஏறினார் ரஜினி.