Showing posts with label SIVANTHA MANN. Show all posts
Showing posts with label SIVANTHA MANN. Show all posts

Tuesday, 10 November 2020

SIVANTHA MANN ,SHOOTING, EDGE.....

 SIVANTHA MANN SHOOTING EDGE.....




.அந்நிய மண்ணில் ‘சிவந்த மண்’ படமாகிக்கொண்டிருந்தது. படக்குழு அப்போது பாரிஸ் நகரத்தில் முகாமிட்டிருந்தது. அன்று படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பி ஆயிற்று. அந்த ஹோட்டலின் பெரிய பூங்காவில் உலா போய்விட்டு தன் அறைக்குத் திரும்பிச் செல்ல லிப்டில் ஏறினார் கோபு. அப்போது உள்ளே நுழைந்தார் ஒருவர்.

அவர் தி.மு.க எம்.பி. முரசொலி மாறன். “என்ன கோபு சார் இங்கே. அதுவும் வேட்டியுடன்?” - மாறன் கேட்டார். “நான்தான் வேட்டி! சிவாஜி, ஸ்ரீதர் எல்லாரும் லுங்கியோட வாக்கிங் போறாங்க. ‘சிவந்த மண்’ ஷூட்டிங், இங்கதான் தங்கியிருக்கோம்” என கோபு பெருமையுடன் சொன்னார். “தப்பு பண்ணிட்டீங்களே கோபு” என்றவர், அவர்கள் படக்குழுவைக் காண வந்தார் மாறன்.

மாறனைப் பார்த்ததும் சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் வியப்பு. நல விசாரிப்புகளுக்குப் பின் முரசொலி மாறன் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். “ஸ்ரீதர்... இன்னும் ரெண்டு நாள் நீங்க இந்த ஹோட்டல்ல தங்கினீங்கன்னா ‘சிவந்த மண்’ படத்தோட பட்ஜெட் முழுவதையும் இந்த ஹோட்டலுக்கே செலவழிக்க வேண்டியிருக்கும். நல்லவேளை, நான் கோபுவைப் பார்த்தேன். உடனே காலி பண்ணிக்கிட்டு, வெளியிலே நான் சொல்லுற ஓட்டலுல போயி தங்குங்க. வசதியாவும் இருக்கும். சிக்கனமாவும் இருக்கும்” என்றார்.


ஸ்ரீதர் அலறியடித்தபடி டேராவைத் தூக்கச் சொன்னார். ஒரு நாள் தங்கியதற்கான ஹோட்டல் பில் வர, அந்த ஹோட்டல் பில்லைப் பார்த்ததுமே கோபுவின் கண்களில் ரத்த கண்ணீர் “டேய் ஸ்ரீ... இந்த பைசாவுக்கு ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ மாதிரி மூணு படங்களை எடுத்திருக்கலாம்” என்று சொல்ல, “தலைக்கு வந்தது முரசொலி மாறனால போச்சு” என்றார் ஸ்ரீதர். அனைவரும் மாறன் கூறிய ஹோட்டலில் தங்கிப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார்கள்.

நாடு திரும்பிய படக்குழு

“பார்வை யுவராணி கண்ணோவியம்’’ பாடலை ஈபிள் டவரில் படமாக்கிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா பரபரப்புடன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன. ஸ்ரீதரின் தாயார் காலமாகிவிட்டதாகத் தகவல் வந்திருப்பதாக அவர் கூறியதும் ஸ்ரீதர் அதிர்ந்து கலங்கிப்போனார். சிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக்கொண்டு, கோபுவைத் தனியே அழைத்த ஸ்ரீதர், “கோபு... கஷ்டப்பட்டு பெரிய நட்சத்திரங்களோட கால்ஷீட்டை வாங்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கோம்.

ராஜியை (சி.வி.ராஜேந்திரன்) வச்சுக்கிட்டு மீதிப் படப்பிடிப்பை முடிச்சுட்டு வந்து சேருங்க. நானும் தேவசேனாவும் கிளம்பறோம்” என்று சொன்னவுடன் கோபுவும் ராஜேந்திரனும் மறுத்து விட்டார்கள்.


“எங்களையும் பிள்ளை மாதிரிதானே உங்கம்மா பார்த்தாங்க நாங்களும் வருவோம் ஸ்ரீ” என்று சொல்லிவிட்டனர். சிவாஜி கணேசனிடம் துக்கச் செய்தியைக் கூறியபோது, அவரும் கண்டிப்புடன் கூறிவிட்டார். “கால்ஷீட் எப்ப வேணுமானாலும் கிடைக்கும்… ஆனால் அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுபடி வாய்ப்பு கிடைக்காதுப்பா! நீ துக்கப்பட்டிருக்கும்போது இங்கே படப்பிடிப்புல எங்களுக்கு எப்படிக் கவனம் போகும். எல்லாரும் கிளம்புவோம் ஸ்ரீதர். நீ எப்பக் கூப்பிடுறியோ அப்ப கால்ஷீட் தரேன்” என்று சிவாஜி கூறினார். அதே உத்திரவாதத்தை ராஜேந்திரகுமாரும் வஹீதா ரஹ்மானும் தந்தனர். உடனே அனைவரும் சென்னைக்குக் கிளம்பினோம்.

தோல்வி கண்ட ‘தர்த்தி’

தாயாரின் காரியங்கள் முடிந்ததும் சென்னையிலேயே பிரம்மாண்ட அரங்கங்களை நிர்மாணித்துப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார் ஸ்ரீதர். ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ பாடலை அமர்க்களமாகப் படம்பிடித்தார். இந்த இடத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். தமிழில் எம்.எஸ்.வி போட்டிருந்த இந்தப் பாடல் மெட்டை சங்கர் - ஜெய்கிஷன் மற்றும் லதா மங்கேஸ்கருக்குப் போட்டுக் காட்டியது சித்ராலயா.

ஈஸ்வரியின் பாட்டைக் கேட்ட லதா, “இந்த அளவு சுவாசத்தைக் கையாண்டு முனகுவது என்னால் இயலாத காரியம். அற்புதமாகப் பாடியிருக்கிறார் ஈஸ்வரி!” என்று லதாவே வியந்து பாராட்டினார் என்றால் ‘பட்டத்து ராணி’ பாடலுக்கு இதைவிட வேறு என்ன ஏற்றம் வேண்டும்?

1969 தீபாவளித் திருநாளில் சிவந்த மண்ணும் ஒரு மாதத்துக்குப் பின் ‘தர்த்தி’ படமும் வெளியாயின. ‘சிவந்த மண்’ நன்றாக ஓடினாலும் ‘தர்த்தி’ படுதோல்வியைத் தழுவியது. இதனால் சித்ராலயாவுக்குப் பெருத்த நஷ்டம். இனி, இந்திப் படவுலகில் காலை வைக்க வேண்டாம் என்று ஸ்ரீதர் தீர்மானமான முடிவுக்கு வந்தார்.

இந்த நேரத்தில் சிவாஜி கணேசனைக் கதாநாயகனாக வைத்து, ‘ஹீரோ 72’ என்ற படத்தை அறிவித்தார் ஸ்ரீதர். அந்தப் படமே பின்னர் ‘வைரநெஞ்சம்’ ஆனது. இந்த படத்தின் நாயகியாக பத்மப்ரியா என்ற புது நடிகையை அறிமுகம் செய்யத் தீர்மானித்தார். அசப்பில், பார்ப்பதற்கு ஹேமமாலினியைப் போலவே இருந்தார் பத்மப்ரியா.

இந்த நேரத்தில் கோபு இயக்கிய ‘காசேதான் கடவுளடா’ படம் பெரும் வெற்றியைப் பெற்றது. கோபுவே இயக்குநராகி விட்டார். இனி அவர், ஸ்ரீதருடன் பணி புரிவாரா என்று பத்திரிகைகள் எழுதின. காரணம் அப்போது அவருக்குப் புதிய படங்களும் ஒப்பந்தம் ஆகத் தொடங்கியிருந்தன.

ஒரு நாள் இரவு எட்டு மணி இருக்கும். ஸ்ரீதர் தானே காரை ஓட்டிக்கொண்டு கோபுவின் வீட்டுக்கு வந்தார். உடன் அவர் மனைவி தேவசேனாவும் வந்திருந்தார். அப்போது கோபு கே.கண்ணனுக்காக ஒரு நாடகத்தை எழுதிக்கொண்டிருந்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதர், திடீரென்று, கோபுவையும் அவரது மனைவி கமலாவையும் தங்களுடன் கிளம்பச் சொன்னார். ஸ்ரீதரைப் பார்த்தபோது ஒருவித பதற்றத்தில் அவர் இருந்ததை ஊகிக்க முடிந்தது.

கோபுவும் அவர் மனைவியும் எங்கே, எதற்கு என்று கேள்வி கேட்காமல் கிளம்பினார்கள். ஸ்ரீதரின் கார் வடபழனி நோக்கி விரைந்து, அங்கிருந்த பிரிவியூ திரையரங்கு ஒன்றில் நுழைந்தது.

ஏதோ ஒரு படத்தைத் தங்களுக்குக் காட்டவே ஸ்ரீதர் தன்னை சம்சாரம் சகிதமாய் அழைத்து வந்திருக்கிறார் என்று தெரிந்துபோனது கோபுவுக்கு. “என்னடா படம்?” என்று கோபு கேட்க, ஸ்ரீதர், “தெலுங்குப் படம்டா, நாகேஸ்வர ராவ் நடிச்சது” என்று மட்டும் கூறினார். படம் ஓடத் தொடங்கியது. அந்த ‘தசரா புல்லோடு’ என்ற தெலுங்குப் படத்தில் நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ, சந்திரகலா ஆகியோர் நடித்திருந்தனர். ராஜேந்திர பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார்.

அதன் தயாரிப்பாளர் ஜக்கம்பத்தி ஆர்ட் பிச்சர்ஸ் ஸ்ரீதருக்கு நன்கு அறிமுகமானவர்கள். படம் தொடங்கியதும் கோபு படத்தின் கதையோட்டத்தில் கரைந்துபோனார். திடீரென்று, கோபுவின் காதுக்கு அருகில் வந்த ஸ்ரீதர், “கோபு... இந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. நான் ஏற்கெனவே பார்த்துட்டேன். உனக்குக் காட்டத்தான் இந்த ஸ்பெஷல் ப்ரிவியூ. இந்தப் படத்தோட உரிமையை வாங்கி தமிழ்ல எடுக்கலாம்னு இருக்கேன். நீ அபிப்ராயம் சொன்ன பிறகுதான் இறுதி முடிவு எடுப்பேன்” என்று கிசுகிசுத்தார்.

கோபுவுக்கு மகிழ்ச்சி. “கதை நல்லா இருக்கு. நீ காதல் மன்னன். நிச்சயம் இந்தப் படத்தை இன்னும் பெட்டரா எடுப்பே. நாகேஸ்வர ராவ் ரோலுக்கு சிவாஜியைப் போட்டா நல்லா இருக்கும்” என்று கோபு தன் கருத்தைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே, ஸ்ரீதர் அவர் காதில் மீண்டும் கிசுகிசுக்க, அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார் கோபு. வழக்கமாக, தெலுங்குப் படங்களைத் தமிழில் எடுக்கும்போது நாகேஸ்வர ராவ் நடித்த படங்களை சிவாஜி கணேசனை வைத்தும், என்.டி ராமராவ் நடித்த படங்களை எம்.ஜி.ஆரை வைத்தும் எடுப்பதை ஒரு ஃபார்முலாவாகவே கடைப்பிடிப்பது வழக்கம்.

அந்த எண்ணத்தில்தான், ஸ்ரீதர் தான் அந்தப் படத்தைத் தமிழில் தயாரிக்கப் போவதாகக் கூறியதும், அவரை உற்சாகப்படுத்தும் எண்ணத்துடன், “சிவாஜி கணேசனைப் போட்டு இந்தப் படம் எடுத்தால் நன்றாக ஓடும்..!” என்று கோபு கூறக் காரணம். ஆனால், ஸ்ரீதர் தனது பால்ய நண்பரின் காதில் இரண்டாம் முறையாக கிசுகிசுத்தது இதைத்தான்..

“கோபு.. இந்தக் கதையைச் சற்றே மாற்றி நான் எம். ஜி. ஆரை வைத்து எடுக்கலாம் என்று இருக்கிறேன்”. ‘தனது ஆருயிர் நண்பனா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறான்’ என்று அரண்டு போனவராக ஸ்ரீதரைப் பார்த்தார் கோபு.


Monday, 13 April 2020

50 YEARS OF SIVANTHA MANN RELEASED 1969 NOVEMBER 9













.
பொன் விழா காணும் சிவாஜியின் “சிவந்தமண்”..!!

சிவாஜிக்கு ஒரு பிரம்மாண்டம்!
sivandha-mann
தமிழ் சினிமாவின்  சிறந்த நடிகரும் புதுமை இயக்குநரும் ஆக்‌ஷன் திரைப்படம் ஒன்றில் ஒன்றாக இணைந்தனர். அவர்கள் இருவருமே அதிகம் பயணப்பட்டிராத பாதையில் கைகோத்தபோது தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்தது ஓர் கேளிக்கைக் காவியம். 1969 நவம்பர் 9-ல் வெளியாகி 50 வருடங்களை நிறைவு செய்து பொன்விழா காணும் அந்தப் படம் ‘சிவந்த மண்’. நடிகர் திலகம் சிவாஜிக்கு ஆக் ஷன் பாதையை பாலாஜி திறந்து வைக்க, ராமண்ணா இன்னும் கொஞ்சம் செப்பனிட்டார். அதை ‘சிவந்த மண்’ மூலமாக ராஜபாட்டையாக விரிவாக்கம் செய்தார் இயக்குநர் ஸ்ரீதர்,
உடைப்பெடுத்த ஆறு
சமூகப் படங்களில் பிரம்மாண்டம் என்பது ‘சிவந்த மண்’ணிலிருந்து தொடங்கியது. படத்தின் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட, எஞ்சிய காட்சிகளைப் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்துப் படமாக்கினார்கள். எகிப்தின் பிரமிடை மிகப் பெரிய அளவில் வடிவமைத்து ‘பட்டத்து ராணி’ பாடலுக்கான அரங்கம் அமைக்கப்பட்டது.
போர்த்துக்கீசிய கப்பலின் உள்வடிவம், மதுபானக் கடைக்குப் பின்புறமாகப் புரட்சிக்காரர்கள் தங்கும் பாழடைந்த மண்டபம், மதுபானக் கடையையும் மண்டபத்தையும் இணைக்கும் ஆறு, மன்னரின் அரண்மனை, உயர் காவல் அதிகாரியின் வீடு எனப் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டன. மிக முக்கியமாக, வாஹினி ஸ்டுடியோவில் ஆறு செட்டுக்காக பிரம்மாண்டத் தொட்டிகள் கட்டப்பட்டுத் தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில் தொட்டியில் உடைப்பெடுத்தது.
தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த இரண்டு லட்சம் கேலன் தண்ணீர் ஸ்டுடியோ முழுக்கப் பரவி, வடபழனி சாலை முழுவதும் ஓடியது. மீண்டும் இரவு பகலாகத் தண்ணீர் நிரப்பி செயற்கை ஆறு உருவாக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடந்தது அன்றைய நாளிதழ்களில் செய்தியானது.
திருப்பங்களிலும் பிரம்மாண்டம்
காட்சியமைப்பில் மட்டுமல்ல; திரைக்கதையில் காட்சிக்குக் காட்சி விரவிக் கிடந்த திருப்பங்களைக் கண்டும் பிரம்மாண்ட உணர்வில் திளைத்தார்கள் ரசிகர்கள். கடலில் நீந்திச் சென்று போர்ச்சுக்கீசிய கப்பலுக்கு வெடிகுண்டு வைக்கும் காட்சி பரபரப்பின் உச்சம். ரயிலுக்கு குண்டு வைக்க பாலத்தின் இரும்புத் தூண்களின் மேல் நடக்கும்போது கால் தவறுகையில் தலைக்கேறும் பதற்றம்.
‘பட்டத்து ராணி’ பாடலில் பதினைந்து சவுக்கடிகளுக்குப் பிறகு வில்லனைச் சுடுவது என்ற திட்டத்துக்கும் அதே நேரத்தில் அரபி வேடத்தில் இருப்பவர் புரட்சி வீரன் பாரத் என்று தெரிந்து திவான் அவரைச் சுடத் தயாராகும்போதும் ரசிகர்கள் கிறுகிறுத்துப் போனார்கள். கிளைமாக்ஸில் பறக்கும் பலூனில் நடக்கும் சண்டைக்காட்சியில் கத்தியால் குத்துப்பட்டவர் யார் என்ற தவிப்பையும் உருவாக்கி ரசிகர்களை இருக்கையின் நுனிக்குச் கொண்டுவந்தார்கள்.
புரட்சி வீரர்கள் மலையின் முகட்டில் கூடியிருக்கும்போது ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் அவர்களை அழிக்க முயற்சி நடக்கும் காட்சியில் ரசிகர்கள் உறைந்தே போனார்கள். ஹெலிகாப்டர் வழியான தாக்குதலிலிருந்து தப்பிக்க நாயகன், நாயகி இருவரும் குழியில் குதிக்கும் காட்சியில் பதைபதைத்துப்போனார்கள்.
இந்தக் காட்சியில் டூப் இல்லாமல் நடித்த சிவாஜி நூலிழையில் உயிர் தப்பியது அன்றைய பரபரப்புச் செய்தி. வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளில், பாரிஸ் நகரின் ஈபிள் டவர், இத்தாலியின் ரோம், ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கும் விளையாட்டு, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலை என்று அதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத இடங்கள் காட்சிகளாக விரிந்தபோது அந்த நாடுகளுக்குப் போய்வந்த உணர்வைக் கொடுத்தன.

ஆக்‌ஷனும் நடிப்பும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் லட்சியத்தை வென்றெடுக்கும் புரட்சி வீரனாகத் தனது உடல்மொழியை வடிவமைத்திருப்பார். சண்டைக் காட்சிகளில் சிரத்தை தெரியும். குறிப்பாக, சிறையில் அடைக்கப்படும்போது கால்களால் முன் சுவரை உதைத்துத் திரும்பித் தாக்கும் காட்சிக்குத் திரையரங்கில் ஆரவாரம் அலையாக எழுந்தது நினைவில் இருக்கிறது.
ஆக்‌ஷனில் மட்டுமல்ல; அவரின் நடிப்பை ரசிக்க வரும் ரசிகனையும் திருப்திப்படுத்தி அனுப்பி வைத்தார். போலீஸ் அதிகாரியான தந்தையிடம் “பாராட்டு வார்த்தைகளில் அல்ல… செயல்களில் வேண்டும்” என்று கூறும் காட்சி, தன் திட்டம் தோல்வியடைய, தனது தாய்தான் காரணம் என்று தெரிந்ததும் வார்த்தை வராமல் தடுமாறித் தவிக்கின்ற தருணம், சிறையில் அடைக்கப்பட்ட தந்தையைத் தப்பிச் செல்ல மாறுவேடத்தில் சென்று அவரிடமே அடி வாங்கி, அவர் சென்றவுடன் புன்னகைப்பது, தன்னை அடையாளம் கண்டுபிடிக்க திவான் தன் தாயைக் கொடுமைப்படுத்த, கையறு நிலையில் அதைக் கண்ணீரோடு காணும் தருணம்-இப்படி நடிப்புக்கு வாய்ப்பிருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் தனக்கேயுரிய நடிகர் திலக முத்திரையை நச்சென்று பதித்துவிட்டிருந்தார் சிவாஜி.
சர்வாதிகாரி திவான் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருப்பார் நம்பியார். தான் வரும் ஐந்து காட்சிகளில் அழுத்தமாக மனத்தில் பதிவார் முத்துராமன். ‘சித்ராலயா’ கோபு, சி. வி. ராஜேந்திரன், எடிட்டிங் சங்கர் போன்ற தன் குழுவினரின் முழு ஒத்துழைப்போடு புத்திசாலித்தனமான பரபரப்பான நகர்வுகள் என்று திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர். வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் படமாக்கப்பட்ட காட்சிகளைப் பிரம்மாண்டமான முறையில் சித்தரித்துக் காட்சியாக்கியவர் ஒளிப்பதிவாளர் என்.பாலகிருஷ்ணன்.


‘ஒரு ராஜா ராணியிடம்’, ‘பட்டத்து ராணி’, ‘பார்வை யுவராணி கண்ணோவியம்’, ‘ஒரு நாளிலே, சொல்லவோ’ போன்ற தேன் சொட்டும் பாடல்கள், கதையோட்டத்தின் வேகத்தை மேலும் கூட்டிய பின்னணி இசை இரண்டையும் வடிவமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், தர் படங்களின் அடர்த்தியான கதை, பொழுதுபோக்குத் தன்மை ஆகிய இரு அம்சங்களையும் ரசித்து இசையமைத்தது இந்தப் படத்துக்குச் சற்று அதிகமாகவே அமைந்துபோனது.
‘சிவந்த மண்’ படத்தின் வெற்றியைப் பற்றிப் பொதுவெளியில் உலவும் சில தவறான புரிதல்களைச் சரிசெய்ய இது பொருத்தமான தருணம். தமிழகத்தில் வெளியான 32 திரையரங்குகளிலும் 50 நாட்கள் ஓடியது. 9 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ‘சிவந்த மண்’ சென்னையில் அதிகபட்சமாக 21 வாரங்கள் ஓடி நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களின் பட்டியலில் சேர்ந்தது.
‘சிவந்த மண்’ கதைக்கு ‘தர்த்தி’ என்று தலைப்பிட்டு, ராஜேந்திரகுமார் – வஹீதா ரெஹ்மான் நடிக்க இந்தியிலும் ஒரே நேரத்தில் படமாக்கினார் இயக்குநர் தர். நம்பியார் கதாபாத்திரத்தில் இந்தி வில்லன் நடிகர் அஜித் நடித்தார். நாயகன் ராஜேந்திரக்குமாரின் நண்பன் ஆனந்த் கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்தார். இசைக்கு


இங்கே எம்.எஸ்.வி என்றால் அங்கே சங்கர் – ஜெய்கிஷன்.
நன்றி :-இந்து தமிழ் திசை(8-11-2019 )
கட்டுரை:-முரளி ஸ்ரீநிவாஸ்.
பொன் விழா காணும் சிவாஜியின் சிவந்தமண் -்!—சென்னை
வாணிமகாலில் சிறப்பு விழா…!!


கடந்த 10-11-2019 அன்று மாலை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பொன் விழா காணும் சிவாஜியின் ‘சிவந்தமண்’ படத்திற்கு—சென்னை
வாணிமகாலில் சிறப்பு விழாவை நடத்தினார்கள்.படத்தில் கதாநாயகியாக நடித்த காஞ்சனா,நகைச்சுவை நடிகை
குமாரி சச்சு,பிரபல பின்னணிப்பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ,பி.சுசீலாபோன்றோர்கள்
விழாவில் கலந்து கொண்டார்கள்.இவர்களை நடிகர்திலகத்தின் புதல்வர் ராம்குமார் கௌரவித்து படத்தின் பொன்விழா ஷீல்டைவழங்கினார்.
         மேலும்’சிவந்தமன்’ படத்தில் பணியாற்றியவர்கள் குடும்பங்களிலிருந்து வந்தவர்களில் இயக்குநர் ஸ்ரீதரின் மனைவி தேவசேனா,இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மனைவி,,கண்ணதாசனின் புதல்வர் காந்திகண்ணதாசன்,,சித்ராலயாகோபுவின் புதல்வர் ஸ்ரீராம்
,நாகேஷின் புதல்வர் ஆனந்தபாபு,





நம்பியாரின் புதல்வர்,எம்.எஸ்.வியின் புதல்வர்,மற்றும் பலருக்கு ராம்குமார் கௌரவித்து மரியாதை செய்தார்.சிறப்பு விருந்தினராக இயக்குநர் சேரன் கலந்துகொண்டார்.படத்தின் சிறப்பு அம்சங்களை திரையில் காட்டி அழகுற அதனை தொகுத்து விளக்கி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா.






































.