Showing posts with label AKILAN. Show all posts
Showing posts with label AKILAN. Show all posts

Wednesday, 31 January 2018

AKILAN ,THE GREAT WRITER DIED JANUARY 31,1988




AKILAN ,THE GREAT WRITER
DIED JANUARY 31,1988





எழுத்தாளர் அகிலன் இறப்பு ஜனவரி 31, 1988

தமிழின் முதல் ஞானபீடப் பரிசை வென்ற எழுத்துக்குச் சொந்தக்காரரான அகிலனின் முதல் எழுத்துப் பூ 1939இல் அவரது 17-வது வயதில் மலர்ந்தது. கல்லூரிக் காலாண்டு சஞ்சிகையில் வெளிவந்த' அவன் ஏழை' என்பதே அக் கதை. கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர், “இந்தக் கதையை நீ எங்கே திருடினே?’’ எனக் கேட்க, கலங்கித் திடுக்கிட்ட அகிலன் தழுதழுத்த குரலில், கோபத்துடன், “நீங்க என் கதையைப் போட வேண்டாம்; திருப்பிக் கொடுத்திடுங்க” என்றான். ஆசிரியர் எழுந்து வந்து முதுகில் தட்டிக் கொடுத்து, “நீயே சொந்தமா எழுதியிருப்பேன்னு என்னால நம்ப முடியவில்லை; கதை நல்லா இருக்கு “என்று கூறி, தமிழாசிரியருக்கே உரிய பழக்கத்தால் தலைப்பை மட்டும் 'மிடியால் மடிதல்' என்று மாற்றி வெளியிட்டார்!


தமிழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய அகிலன் இருபது நாவல்கள், இருநூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல வடிவங்களில் சமூகம் சார்ந்த பார்வைகளைப் பதிவு செய்தார்.

1944-ல் அகிலனின் முதல் நாவல் ‘மங்கிய நிலவு' நேரடியாகப் புத்தகமாக வெளிவந்தது. பின்னர் 1949-ல் ‘இன்ப நினைவு' எனும் தலைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்தது. முதல் நாவலில் இருந்து, தம் இறுதி நாவல் ‘வானமா பூமியா' வரை இந்த நாட்டையும், இந்திய - குறிப்பாகத் தமிழர்களின் வளர்ச்சியையும் பற்றியே சிந்தித்தார். சிந்தனையைத் தூண்டும் சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், நிஜமான நிகழ்ச்சி கள், சுவையான, அழகிய, எளிய நடை என்று குழைத்து அழகிய சுடுமணல் சிற்பங்களாக வடித்து வைத்தார்.


அகிலன் எதற்காகவும் பணிந்து வளைந்து கொடுக்காதவர். கொள்கைப் பிடிப்பும் அதனை அடைய உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான உழைப்பும் கொண்டவர்.

எளிய தமிழில், இனிய நடையில், உயர்ந்த கருத்துக்களைச் சுவைபடக் கதையாகக் கூறி உணர்த்தும் கலையில் செய்நேர்த்தி பெற்றிருந்ததால் அகிலனின் பல படைப்புக்கள் இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றிலும் உலக மொழிகள் பலவற்றிலும் அன்று முதல் இன்று வரை மொழியாக்கம் கண்டுவருகின்றன.


பள்ளியிறுதி வரை மட்டுமே கல்வி கற்ற இவர் வாழ்நாள் முழுவதும் கற்றுவந்தார். டால்ஸ்டாய், கார்கி, செகாவ், டாஸ்டாவ்ஸ்கி, கோகல் முதல் ஷோலகாவ், மாப்பசான், வால்ட்டேர் என நீள்கிறது அகிலனின் வாசிப்பு. அகிலன் முதலில் சிறுகதைகளில் பயணித்து, குறு நாவல்கள் பெரு நாவல்கள் எனப் பரிமளித்தார். ‘தொடர்கதை என்பது இலக்கியமாகுமா', ‘இவர் வெறும் காதல் கதை மன்னர்' என்றெல்லாம் விமர்சன அம்புகள் வெவ்வேறு நோக்கத்தால் இவர் மீது பாய்ந்தன. “மலர் மாலைக்கு எப்படித் தலை வணங்குகிறோமோ, அப்படியே கல்லெறிக்கும் தலை வணங்கும் பக்குவம் பெற வேண்டும்” என்பார் அகிலன்.

அகிலனின் அனைத்துப் படைப்புகளிலும் அன்பும் அற நெறியும் ஆதிக்கம் செலுத்தின. போதனைகளாக அல்லாமல் சுவை யான வாழ்க்கை நிகழ்ச்சிகளாக அமைந்தன அவை. உணர்ச்சியும் அறிவும் அடிக்கடி மோதிக்கொள்ளும். ஆனால், அதன் மூலம் நமக்குக் கிடைத்தவை என்னவோ, அலாதியான அனுபவமும் வாழ்க்கைப் பாடங்களும். ‘வேங்கையின் மைந்த’னில் நாடாள்பவரின் தகுதி பற்றி, மக்களை நேசிக்கும் தலைவனைப் பற்றி, சரித்திரச் சான்றுகளுடன் அழகோவியம் தீட்டினார் அகிலன்.

அகிலனின் கலை, இலக்கிய, அரசியல் பங்களிப்பு என்பது மக்கள் முன்னேற்றம் என்பதையே நோக்க மாகக் கொண்டிருந்தது. அதனால்தான் பல் துறைப் பிரமுகர்களும் அகிலனை மரியாதையுடன் நேசித்தனர்.

மு.வ., கி.வ.ஜ., கி.ஆ.பெ.வி., ம.பொ.சி., சிவராம காரந்த் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள், சிவாஜி, டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, ராமு காரியத், டி.எம்.எஸ்., கே. அசோகன் போன்ற கலையுலகப் படைப்பாளிகள் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் போன்ற அரசியல் வல்லுனர்கள் எல்லாம் மிக இயல்பாக அகிலனின் இல்லம் வந்து விவாதித்திருக்கிறார்கள்.

சரித்திர நாவல்களிலும் அகிலனின் சமூகப் பார்வையின் வெளிப்பாடே பிரதானமானது. இன்றும் அவை வாசகர்களின் வரவேற்பைப் பெற்று வருவதிலிருந்து அவர் எழுத்தின் வலிமையும் காலம் தாண்டி நிற்கும் அதன் முக்கியத்துவமும் புலனாகின்றன.

- கட்டுரையாளர், எழுத்தாளர், அகிலனின் மகன்

அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

படைப்புகள்[மூலத்தைத் தொகு]
புதினங்கள்[மூலத்தைத் தொகு]
நிகழ்காலப் புதினங்கள்[மூலத்தைத் தொகு]
அவளுக்கு
இன்ப நினைவு
எங்கே போகிறோம் ?
கொம்புத்தேன்
கொள்ளைக்காரன்
சித்திரப்பாவை
சிநேகிதி
துணைவி
நெஞ்சின் அலைகள்
பால்மரக்காட்டினிலே
பாவை விளக்கு (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
புதுவெள்ளம்
பெண்
பொன்மலர்
வாழ்வெங்கே (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
வானமா பூமியா
வரலாற்றுப் புதினங்கள்[மூலத்தைத் தொகு]
வேங்கையின் மைந்தன் (இராசேந்திர சோழனின் கதை)
கயல்விழி (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) (சுந்தரபாண்டியன் கதை)
வெற்றித் திருநகர் (விசுவநாத நாயக்கன் கதை)
கலை[மூலத்தைத் தொகு]
கதைக் கலை
புதிய விழிப்பு
சுயசரிதை[மூலத்தைத் தொகு]
எழுத்தும் வாழ்க்கையும்
மொழிபெயர்ப்பு நூல்கள்[மூலத்தைத் தொகு]
தாகம் - ஆஸ்கார் வைல்ட்
சிறுகதை தொகுதிகள்[மூலத்தைத் தொகு]
சத்ய ஆவேசம்
ஊர்வலம்
எரிமலை
பசியும் ருசியும்
வேலியும் பயிரும்
குழந்தை சிரித்தது
சக்திவேல்
நிலவினிலே
ஆண் பெண்
மின்னுவதெல்லாம்
வழி பிறந்தது
சகோதரர் அன்றோ
ஒரு வெள்ளை சோறு
விடுதலை
நெல்லூர் அரசி
செங்கரும்பு
அகிலன் சிறுகதை - அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுப்பு
சிறுவர் நூல்கள்[மூலத்தைத் தொகு]
தங்க நகரம்
கண்ணான கண்ணன்
நல்ல பையன்
பயண நூல்கள்[மூலத்தைத் தொகு]
நான்கண்ட ரஷ்யா
சோவியத் நாட்டில்
மலேசியா சிங்கப்பூரில் அகிலன்
கட்டுரை தொகுப்புகள்[மூலத்தைத் தொகு]
நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000)
வெற்றியின் ரகசியங்கள்
நாடகம்[மூலத்தைத் தொகு]
வாழ்வில் இன்பம்
திரைக்கதை வசனம்[மூலத்தைத் தொகு]
காசுமரம்
ஒலித்தகடு[மூலத்தைத் தொகு]
நாடும் நமது பணியும் - அகிலன் உரை
விருதுகள்[மூலத்தைத் தொகு]
1963 - சாகித்ய அகாதமி விருது (வேங்கையின் மைந்தன்)
1975 - ஞான பீட விருது (சித்திரப்பாவை)
1975 - ராஜா சர் அண்ணாமலை விருது (எங்கே போகிறோம்?)