Showing posts with label - 1956. Show all posts
Showing posts with label - 1956. Show all posts

Friday, 14 August 2020

BERTOLT BRECHT PLAYWRITER,POET BORN 1898 FEBRUARY 10 - 1956 AUGUST 14





BERTOLT BRECHT PLAYWRITER,POET 
BORN 1898 FEBRUARY 10 - 1956 AUGUST 14



பெர்தோல்ட் பிரெக்ட் (ஆங்கில மொழி: Bertolt Brecht) (/brɛkt/;[2][3] பிறப்பு About this soundஐகன் பெர்தோல்ட் பிரெட்ரிக் பிரெக்ட் (உதவி·தகவல்); 10 பெப்ரவரி 1898 – 14 ஆகத்து 1956) ஓர் செருமானிய கவிஞரும் நாடகாசிரியரும் நாடக இயக்குனரும் ஆவார்.[4]

இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ள பிரெக்ட் நாடக வடிவாக்கலில் புதுமையை மேற்கொண்டு நிகழ்காவிய அரங்கு என்ற நாடக வகையை உருவாக்கினார். பிரெக்டும் அவரது மனைவி ஹெலன் வீகலும் இணைந்து இயக்கிய பெர்லினர் ஆன்செம்பிள் என்ற நாடக கம்பனி பல இடங்களுக்கும் பயணித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[5]

வாழ்கை வரலாறு
பிரெக்ட் 1898 ஆம் ஆண்டு செர்மனிப் பேரரசின் ஆக்ஸ்பர்க் நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை சிறிய காகித ஆலையொன்றின் நிர்வாக இயக்குநர்; தாயார் பிளேக்ஃபாரஸ்ட் பகுதியில் பணிபுரிந்த ஓர் அரசாங்க அலுவலரின் மகள். முதல் உலகப் போர் தோடங்கியபோது, பிரெக்ட் மாணவராக இருந்தார். அப்போதே இவர் துணிச்சலாகப் போர் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிட்டார். மியூனிச் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் பல்கலைக் கழக மரபுகளுக்கு மாறான பணிகளில் ஈடுபட்டதோடு, ஒரே சமயத்தில் பலபெண்களைக் காதலிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். இவ்வழக்கம் அவர் வாழ்நாளில் இறுதிவரை தொடர்ந்தது.[6]

கல்வியை முடித்துக் கொண்டு, ஜெர்மன் இராணுவ மருத்துவமனையில் சிலகாலம் பணிபுரிந்தார். முதல் உலகப் போர் முடிவுற்றதும் இராணுவப் பணியிலிருந்து விலகி பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டார். 1933-இல் ரீச்ஸ்டாக் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின், இவர் ஜெர்மனியை விட்டு வெளியேறினார், ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஆகிய நாடுகளில் ஏழாண்டுகள் எளிய வாழ்க்கை மேற்கொண்டு சுற்றித் திரிந்தார். 1941-ஆம் ஆண்டு உருசியநாடு வழியாகப் பயணம் செய்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவை அடைந்தார்.

உருசியாவில் பயணம் செய்த காலத்தில் அந்நாட்டில் ஏற்பட்டிருந்த திட்டமிட்ட முன்னேற்றங்களைக் கண்டு மிகவும் வியப்படைந்தார். தன்னை அறியாமல் இவர் உள்ளம் மார்க்சீயத்தின்பால் ஈர்க்கப்பட்டது. இவருடைய படைப்புக்களில் மார்க்சீயத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. அமெரிக்காவில் இருந்த போது, தமது நாடகங்களையும் கவிதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரங்கேற்ற விரும்பினார். அதில் ஓரளவே வெற்றி பெற்றார். ஹாலிவுட்டில் திரைப்படத் தொழிலில் ஈடுகடத் தீவிரமாக முயன்று அம்முயற்சியைக் கைவிட்டார். 1947-ஆம் ஆண்டு அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கை விசாரணைக் குழுவின் (Un-American Actryities Committee) முன் வருகைத் தரும்படி அமெரிக்க அரசாங்கம் அவரைப் பணித்தது. அக்குழு கேட்ட கேள்விக்குக் குதர்க்கமான வாக்குமூலங்களை வழங்விட்டு, அமெரிக்காவை விட்டு வெளியேறிக் கிழக்கு ஜெர்மனியை அடைந்தார். அங்கு தம் மனைவியோடு சேர்த்து புகழ்மிக்க பெர்லினிய இசைக்குழுவைத் தோற்றுவித்தார்.

கிழக்கு ஜெர்மனி அப்போது ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த நேரமாகும். ஸ்டாலினிய அதிகாரிகளோடு பிரெக்டால் ஒத்துப் போக முடியவில்லை. அடிக்கடி அவர்களோடு பூசலும், புகைச்சலுமாகவே இவர் இறுதி வாழ்க்கை கழிந்தது. 1956-ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி ஹூகதாட் இடுகாட்டுக் கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார்.[6]

இலக்கியப் பணிகள்
பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டபோது. அங்கு பொழுது போக்கு அரங்குகளிலும், விடுதிகளிலும் நாடோடிப் பாடகராகச் சிலகாலம் புகழ்பெற்றார். அன்றையப் பிற்போக்கு நாடகங்களைத் தாக்கிப் பத்திரிகைகளில் விமரிசனம் எழுதினார். பின்னர் இவரே நாடகம் எழுதிப் புகழ் பெறத் தொடங்கினார். 1924 முதல் 1933 வரை பெர்லின் நாடக உலகில் துடிப்போடு இயங்கினார். சிறந்த இசைப் புலவரான 'குர்த்வீல்' என்பாரின் துணையோடு ‘மூன்று பென்னிய இசைநாடகம்’ (The Three Penny Opera) என்ற சிறந்த படைப்பை வெளியிட்டார். அந்நாடகம் பெர்லினில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அது எல்லாராலும் விரும்பி நடிக்கப்பட்டது. இவர் அமெரிக்காவில் இருந்த போது, தமது நாடகங்களையும் கவிதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரங்கேற்ற விரும்பினார். அதில் ஓரளவே வெற்றி பெற்றார்.[6]

நாடக ஆசிரியராக விளம்பரம் பெற்ற பிறகே இவர் கவிதை எழுதத் தொடங்கினார். மதம், அரசியல் சமுதாயம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை மக்கள் கண் முன்னால் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நாடகமே சிறந்த சாதனம் என்பதை இவர் அறிந்திருந்தாலும், அன்றாட உண்மைகளைச் சொல்லோவியங்களாக மாற்றி மக்கள் நாவில் நடமாட விடுவதற்குக் கவிதை விறுவிறுப்பான சாதனம் என்பதையும் அறிந்திருந்தார். பிரெக்ட், கவிதையின் எல்லாச்சட்டதிட்டங்களையும் உடைத் தெறிந்துவிட்டு எழுதினார். சாமான்யர்களிடையில் காணப்பட்ட சாதாரணப் படிமங்களையே (Common Place Images) இவர் தமது கவிதைகளில் கையாண்டார். மேலும் இவர் பாடல்கள் பிரச்சார அடிப்படையிலேயே- குறிப்பாக மார்க்சீயச் சிந்தனை- அமைந்திருந்தன.

யாப்பமைதியோடு கூடிய தன்னுணர்ச்சிப் பாடல்களை இவர் அரிதாகவே எழுதினார். தொடர்களை உடைத்தெழுதும் துண்டுக் கவிதையையே (Official back- verse) இவர் விரும்பிக் கையாண்டார். ப்ரெக்டின் கவிதை முதன் முதலாக வெளியான போது, அதற்குப் பலமான எதிர்ப்பு இருந்தது. அதைக் கவிதையென்று யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் பிரெக்டை ஒரு சிறந்த கவிஞர் என்பதை விட, ஒரு சிறந்த நாடகாசிரியர் என்றே இலக்கியத் திறனாய்வாளர்களுள் ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றொரு சாரார் சிறந்த கவிஞருக்குரிய எல்லாப் பண்புகளும் பிரெக்டிடம் இருப்பதாக வாதிடுகின்றனர்.[6]


பிரெக்டின் கவிதையாற்றலுக்கு மூலமாக விளங்கியவர்கள் லூதரும், கிப்ளிங்கும் ஆவர். இவர்களையும்விட ஆர்தர் வேலியின் சீனக்கவிதை மொழிபெயர்ப்புகள், பிரெக்டின்மீது அதிகத்தாக்கத்தை ஏற்படுத்தின. அம்மொழிபெயர்ப்புகள் ஒரு புதிய நடையைத் தம்மிடத்தில் தோற்றுவித்துக் கொள்ளப் பிரெக்டிற்குப் பெரிதும் உதவின் இவரும் சில சீனப்பாடல்களை மொழிபெயர்த்ததோடு, அதே பாணியில் தாமே சில கவிதைகளும் எழுதியுள்ளார். சீன மொழிபெயர்ப்புகளின் தொடர்பால் பிரெக்டின் கவிதைகளும் ஹைக்கூவைப் போலவும் டங்காவைப் போலவும், சுருக்கமும் சித்திரத் தன்மையும் பெற்றன. அதற்கு எடுத்துக்கட்டாக இவர் எழுதியுள்ள சிங்கக் கவிதை (To a Chinese Tea Root Lion) குறிப்பிடப்படுகிறது.[6]

மேற்கோள்கள்


அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்
கி.பி பத்தாம் நூற்றாண்டில் பாரசீக அறிஞர் அல்பெருணி அன்றைய இந்தியாவின் சாதி, மதச் சமூகத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் தனது நூலொன்றில் அற்புதமாகப் படம் பிடித்தார்.

பிரெக்ட்
பெர்தோல்ட் பிரெக்ட்
அன்றைய அறிவியலாளர்களான வராகமிகிரர், பிரம்ம குப்தர் இருவரையும் பற்றிக் கூறும்போது, “இவ்வறிஞர்களுக்கு சூரிய – சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பது நன்றாகத் தெரியும். இவர்கள் அறிவியல் விவரங்களைக் கணக்கிட்டு கிரகணம் பற்றித் துல்லியமாக தமது ஆய்வு நூல்களில் விளக்கி வரும் போது திடீரென்று ராகு பாம்பு சூரியனை விழுங்குகிறது என்ற பிராமணர்களின் பழைய நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்கள். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக பார்ப்பனர்களுக்குப் பயந்து இப்படிச் சொல்ல வேண்டியிருப்பது பற்றி,” அல்பருணி வருத்தப்படுகிறார்.

17-ஆம் நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ திருச்சபைக்குப் பயந்து தனது வானியல் ஆய்வுகளைக் கைவிடுகிறார். மனச்சாட்சிக்கு விரோதமான கலிலியோவின் வாழ்வை சமகால நாடகமாக்கியிருக்கிறார், பிரெக்ட் என்ற ஜெர்மனியின் மார்க்சியக் கலைஞர்.

பிரெக்டின் நாடகத்தில் இரண்டு விதமான கலிலியோக்களைக் காண்கிறோம். ஒருவர் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த உண்மையான கலிலியோ. இவரைத் தெரிந்து கொள்வதற்கு மறுமலர்ச்சிக்கால வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்திருப்பது அவசியம்.

***


பழமையான கிரேக்க நாகரீகம் தான் ஆரம்பகால அறிவியல் சாதனைகளைப் படைத்தது. அரிஸ்டாட்டிலும் அவருக்குப் பின் 5 நூற்றாண்டுகள் கழித்து வந்த தாலெமியும் (கி.பி.2-ஆம் நூற்றாண்டு) பூமியை மையமாக வைத்து சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் சுழல்கின்றன எனும் வானியல் கோட்பாட்டைப் படைத்தனர். பின்பு கிரேக்கத்தின் அறிவுத் துறை வரலாறு அரேபியாவுக்கு இடம் பெயர்ந்தது. அரேபிய அறிவியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கிரேக்க அறிவியல் 13-14-ம் நூற்றாண்டுகளில் மீண்டும் ஐரோப்பா வந்தது. அன்றைய உலகின் மையமாக இருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை தாலமியின் பூமி மைய வானியல் கோட்பாட்டினை வரவேற்று அங்கீகரித்தது.

எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான சொத்துக்களை வைத்திருந்த திருச்சபை, கல்வி – அறிவியல் -இறையியல் – அரசியல் போன்ற முக்கியத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி, நிலவுடைமைச் சமூகத்தின் பிற்போக்குக் கோட்டையாக விளங்கியது. அதனுடைய இறையியல் பணியும், விவிலிய விளக்கமும் அதற்காகவே பயன்பட்டது. எனவே, திருச்சபை பூமியின் மையம் என்பதை நிறுவ பூமிதான் அண்ட வெளியின் மையம் என்று விளக்கிய தாலமி கோட்பாடு அவர்களின் அங்கீகாரம் பெற்றது. தவறெனச் சொன்னவர்கள் திருச்சபையின் மதவிரோத குற்ற விசாரணைக் குழுவான இன்க்விஸிசன் பயங்கரவாதிகளால் தண்டிக்கப்பட்டார்கள்.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற விளக்கிய போலந்து நாட்டுப் பாதிரி கோப்பர் நிக்கஸ் திருச்சபையால் முடக்கப்பட்டார். அதையே உரத்து முழங்கிய இத்தாலியைச் சேர்ந்த ஜோர்தனோ புருனோ நாத்திகன் எனக் குற்றம் சாட்டப்பட்டு எரிக்கப்பட்டார். கோப்பர் நிக்கசின் ஆய்வுப்படி தயாரிக்கப்பட்ட வானியல் வரைபடங்கள், நேரக்கணிப்பு, பஞ்சாங்கம் ஆகியவற்றை ஏற்ற திருச்சபை அவரது கோட்பாட்டை மட்டும் மதவிரோதம் என்று அறிவித்தது.

தனது தொலைநோக்கியின் மூலம் கோப்பர்நிக்கசின் வானியல் கொள்கையை நிரூபித்த இத்தாலியின் கலிலியோவும் திருச்சபையால் சிறை வைக்கப்பட்டார். இறுதியில் தனது ஆய்வையே தவறென மறுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இருப்பினும் தனது ‘டிஸ்கோர்சியா’ என்ற நூலில் தாலமி கோட்பாட்டை ஆதரிப்பவனுக்கும், கோப்பர்நிக்கசின் கோட்பாட்டை ஆதரிப்பவனுக்கும் நடைபெறும் உரையாடலின் மூலம் தனது கொள்கையை மனிதகுலத்திற்குப் பறைசாற்றிவிட்டு 1642-ம் ஆண்டில் கலிலியோ மடிந்தார்.


கலிலியோ காலத்து ஐரோப்பியச் சமூகம் நவீன கால வரலாற்றின் தொடக்கமும், மனிதகுல வரலாற்றின் திருப்புமுனையும் ஆகும். ரோஜா யுத்தம், சிலுவை யுத்தம் போன்ற பெரும் போர்களினாலும், காலரா-பிளேக் போன்ற கொள்ளை நோய்களினாலும் அக்கால மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தது. யாரைச் சுரண்டிக் கொழுத்தார்களோ அந்தப் பண்ணையடிமைகளுக்குக் கூட வேலையும், கால்வயிறுக் கஞ்சியும் கொடுக்க முடியாமல் நிலவுடைமை ஆளும் வர்க்கம் திணறியது. பழைய உலகம் அழுகியபோது புதிய உலகமும் பிறப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தது.

கலிலியோ கலிலீ
கலிலியோ கலிலீ
புதிய கடல் வழிகள் அறியப்பட்டன. நீராவி – விசைத்தறி எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறு, நடுத்தர பட்டறைத் தொழிற்சாலைகள் தோன்றி சந்தைக்கான உற்பத்தியைத் தொடங்கின. வேலை இழந்த பண்ணையடிமைகள் நகரத்தை நோக்கிப் படையெடுத்தனர். அரசியல் அரங்கில் திருச்சபை, நிலப்பிரபுக்கள், பேரரசர்கள் ஒருபுறமும்; சிற்றரசர்கள், வணிகள்கள், பட்டறை முதலாளிகள் மறுபுறமும் முரண்படத் தொடங்கினர். மத அரங்கில் ஜெர்மனியின் மார்டின் லூதர் திருசபையை எதிர்த்து புராட்டஸ்டண்டு மதத்தை தோற்றுவித்தார். திருச்சபையின் மண்ணுலக ராஜ்ஜியத்தில் மூன்றிலொரு பங்கு பிரித்து சென்றது. அறிவியலறிஞர்களினால் விண்ணுலக ராஜ்ஜியமும் தகர்க்கப்பட்டது. நிலவுடைமைச் சமூகத்தை அழித்து 18-ம் நூற்றாண்டில் நடைபெற இருந்த முதலாளித்துவ புரட்சியின் கொதிநிலைக் களனாக இருந்த இக்காலம் ‘மறுமலர்ச்சிக் காலம்’ என்ற வரலாற்றில் புகழப்படுகிறது.

மறுமலர்ச்சிக்கால அறிஞர் பெருமக்களைத்தான் மார்க்சியப் பேராசான் ஏங்கெல்ஸ் மாபெரும் மனிதர்கள் என்று புகழ்ந்துரைக்கிறார். விரிவாகப் பயணம் செய்வதிலும், பன்மொழிப் பயிற்சியிலும், பல்துறைத் திறமைகளிலும் ஈடுபாடு கொண்ட அம்மாமனிதர்கள் பேசியும், எழுதியும், வாளெடுத்தும் தம் காலப் போராட்டத்தில் பங்கேற்றனர். படிப்பறை ஆராய்ச்சி மட்டும் செய்வது அப்போது இழிவாகக் கருதப்பட்டது. இத்தகைய மறுமலர்ச்சிக் கால அறிவியலாளர்களில் கலிலியோவும் ஒருவர்.

எத்தகைய ஒரு புரட்சியினை உருவாக்கப் போகிறோம் என்பதை மறுமலர்ச்சிக்கால மாவீரர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அவ்வகையில் அவர்கள் வரலாற்றின் கருவியாகச் செயல்பட்டனர். வரலாற்றுணர்வை விளக்குகின்ற தத்துவமும், சமூக அறிவியலும் அப்போது குழந்தைப் பருவத்திலிருந்தன. இயற்கையை, அதன் இயக்கத்தை, தனித்தனித் தோற்றங்களாக மாறா நிலையில் வைத்துப் பார்த்த அன்றைய அறிவு, சமூகத்தை புரிந்து கொள்ளவும் அந்தப் பார்வையையே பயன்படுத்தியது.

எனவேதான் திருச்சபையையும், விவிலியத்தையும் மனதார ஏற்றிருந்த கலிலியோ தன் அறிவியில் ஆய்வுகளை திருச்சபை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை முற்றிலும் அறிந்திருக்கவில்லை. அப்போது முளைவிடத் தொடங்கியிருந்த முதலாளித்துவ சமூகமும், முகிழ்த்து வந்த தெளிவற்ற வர்க்கப் போராட்டமும் கலிலியோவின் குழப்பத்தை நமக்கு உணர்த்தும்.

ஆயினும் பிரெக்டின் இன்னொரு கலிலியோ இத்தகைய குழப்பங்களுக்கு விடை தருகிறார். காரணம் மறுமலர்ச்சி காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரையும், இனிமேலும் வரக்கூடிய ஒரு அறிவியலாளனின் வாழ்க்கை இயக்கத்தை இந்த புதிய கலிலியோவிடம் காண்கிறோம். தத்துவத்திற்கும் – அறிவியலுக்கும், அறிவியலுக்கும் – சொத்துடமை வர்க்கச் சமூகத்திற்கும், தூய அறிவியல் விதிகளுக்கும், சமூக அறிவியலின் தேவைகளுக்கும், உள்ள முரண்பாடுகளை பொருத்தமான காட்சியமைப்புகளுடனும், அழகான நகைச்சுவையுடனும், இயல்பான துணைப் பாத்திரங்களின் சித்தரிப்புடனும் பிரெக்ட் இந்நாடகத்தைப் படைத்திருக்கிறார்.

தத்துவத்தை உயிராகவும் நடைமுறையை உடலாகவும் கொண்ட மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டத்தைக் கற்றுத் தேர்ந்த ஒருவரே இத்தகைய வரலாற்றுணர்வு கொண்ட, கலையழகு மிளிருகின்ற ஒரு இலக்கியத்தைப் படைக்க முடியும். பிரெக்ட் அந்நாடகத்தில் வரலாற்றுக் கலிலியோவை இன்றைய நவீன அறிவியலாளனையும் இணைத்து ஒன்றாகப் படைத்திருப்பதன் காரணம் என்ன?

மேற்கண்ட முரண்பாடுகளிலிருந்து அறிவியலின் ஆரம்பகால அவஸ்தையையும், நவீன அறிவியலின் அவலநிலையையும், நேர்மறையில் ஒரு அறிவியலாளனது இலக்கணங்கள் என்ன என்பதையும் வாசகர்கள் உணர வேண்டும் என்பதே நாடகத்தின் கருவும், நாடகாசிரியரின் நோக்கமும் ஆகும்.

***

அறிவுத் தேடலுக்காக அல்ல ஆடம்பரக் கனவுகளுக்காகவே கல்வி என்பதற்கு இன்றைய கணினி மோகம் ஒரு எடுத்துக்காட்டு. அன்றோ அந்த மோகம் அறிவியலாக இருந்தது. தனக்கு விருப்பமில்லாமல் தாயாரின் தொந்தரவிற்காக அறிவியல் கற்க வரும் பணக்கார வாலிபனிடம் கலிலியோ கேட்கிறார். ‘இயற்பியலை ஏன் கத்துக்கணும்? குதிரை வளர்ப்பைப் பத்தி படிக்கலாமே?’
கலிலியோவின் தொலைநோக்கியை வைத்து பார்க்கம் கனவான்களில் ஒருவர், ‘இனி மொட்டை மாடியில் நம் வீட்டுப் பெண்கள் குளிக்கக் கூடாது’ என்கிறார். மற்றொருவர் தொலைவில் படகில் தெரியும் மீனை பொரித்துச் சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்கிறார். இன்னுமொருவர் தொலைநோக்கிக்கு என்ன விலை வைக்கலாம் என்று வியாபாரக் கணக்குப் போடுகிறார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்பட வேண்டிய தொலைநோக்கி ஒரு விளையாட்டு – வியாபாரப் பொருளாக பயன்படுவது பற்றி கலிலியோ நொந்து கொள்கிறார். இன்றும் பழிவாங்கும் அமெரிக்க டயனோசர்கள், வீட்டு வேலை செய்யும் ஜப்பானிய ரோபட்டுகள், ஜாதகம் கணிக்கும் இந்தியக் கம்ப்யூட்டர்கள், ஆஸ்திரேலிய யானை குட்டி போட்டதை உலகச் செய்தியாக காட்டும் தொலைக்காட்சிகள் என இந்த விளையாட்டு தொடருகிறது. அதனால்தான் ஒரு அறிவியலாளன் தன் ஆய்வையே ஒரு வியாபாரமாக செய்வதற்கு மட்டும் சுதந்திரம் உண்டு என்று கலிலியோ புலம்புகிறார்.
தொலைநோக்கி மூலம் பால்வெளி மண்டலத்தின் நட்சத்திரக் கூட்டத்தை நண்பனுக்குக் காட்டுகிறார் கலிலியோ. ‘திருச்சபையின் அறிவை எதிர்க்கும் இந்தக் காட்சியை யார் நம்புவார்கள்’, நண்பர் கவலையடைகிறார். “நாளைக்கு பயணம் என்றால் இன்று தன் சுமையிழுக்கும் கழுதைக்கு ஒரு கட்டுப் புல்லை அதிகமாகப் போடும் கிழவி, மழை வருவதை உறுதி செய்து கொண்டு தலையில் குல்லா போடும் பள்ளிச் சிறுவன் என சாதாரண மக்கள் – தங்கள் வாழ்க்கையில் பகுத்தறிவைப் பயன்படுத்தும் பாமரர்கள், அறிவியல் ஆய்வுகளை நிச்சயம் ஏற்பார்கள்”. நம்பிக்கை கொள்கிறார் கலிலியோ, திருப்தியுறாத நண்பரோ, ‘உன்னைப் பார்க்கும் போது சிதையின் மேல் நிற்பது மாதிரி தெரியுது’ (புருனோவை திருச்சபை எரித்ததை நினைக்கிறார்) என்று பதறுகிறார்.தொலைநோக்கி
வானியல் ஆய்வுகளுக்குப் பயன்பட வேண்டிய தொலைநோக்கி ஒரு விளையாட்டு – வியாபாரப் பொருளாக பயன்படுவது பற்றி கலிலியோ நொந்து கொள்கிறார்.
இங்கே சமஸ்கிருதத்தைப் போல ஐரோப்பாவில் லத்தீன் ஆதிக்கம் செலுத்திய காலம். கலிலியோவின் சீடரும், கண்ணாடிக்குச் சாணைபிடிக்கும் தொழிலாளியுமான ஒருவருக்கு லத்தீன் தெரியாது. அறிஞர் பெருமக்கள் லத்தீனில் விவாதிக்கும் போது கலிலியோ நமது மொழியிலேயே (இத்தாலிய மொழி) விவாதிக்க வேண்டும் என மல்லுக்கட்டுகிறார். அறிஞர்களோ அறிவின் மேன்மையே பாழ்பட்டுவிடும் என்று பார்ப்பனர்களைப் போல சாபமிடுகிறார்கள். போப்பிடம் பேசும் இன்க்விசிஷன் தலைவனொ, ‘இந்தக் கயவன் கலிலியோ தன் வானசாஸ்திர நூல்களை லத்தீனில் எழுதாமல் செம்படவச்சி பாஷையில், ஆட்டுரோமம் விற்பவர்களின் பாஷையில் எழுதுகிறான்’ என கோபம் கொள்கிறான்.
தன் ஆய்வு வசதிக்காக அருகாமை நாட்டிற்கு குடிபெயர விரும்பும் கலிலியோ அந்நாட்டின் அரசனுக்கு (10 வயது சிறுவன்) முழு அடிமைத்தனத்தோடும் மிகுந்த பணிவுடனும் ஒரு கடிதம் எழுதுகிறார். பின்பு ‘என்னை மாதிரி ஒருவன் கவுரவமான பதவியை அடையணும்னா குப்புறப்படுத்து கும்புடு போடறதைத் தவிர வழியில்லப்பா’ என்று விளக்கம் தருகிறார். பில்கேட்சை இதயக் கோவிலில் வழிபடும் கணினி இளைஞர்கள், இந்த விசயத்தில் மட்டும் கலிலியோவை மிஞ்சுகிறார்கள்.
அரிஸ்டாட்டிலின் விளக்கம் தவிர வேறு எதையும் ஏற்கமாட்டோம் என்று தொலைநோக்கி வழியாகக் கோள்களை பார்க்க மறுக்கும் அறிஞர்களிடம், ‘உண்மைகள் பிறப்பது அதிகாரத்தின் அதட்டலிலிருந்து அல்ல; நடைமுறை அனுபவங்களிலிருந்தே அவை உதிக்கின்றன’ என்று சீறுகிறார் கலிலியோ. “பண்டிதராகிய நீங்கள் உங்களின் பத்தாம்பசலித்தனமான கருத்துக்களை கைவிட வேண்டும்” அவரது சீடரான கண்ணாடித் தொழிலாளியும் வாதிடுகிறார்.
தங்களது அறிவார்ந்த விசயங்களில் ஒரு தொழிலாளி எப்படித் தலையிடலாம் என்று கோபமடையும் அறிஞர்களிடம், பல்வேறு உழைக்கும் பிரிவினரிடம் தான் கற்றுக் கொண்டதைப் பட்டியலிடும் கலிலியோ, அம்மக்கள் மட்டுமே ஐம்புலன்களையும் பட்டறிந்து உண்மைகளை ஏற்பவர்கள், அந்த உண்மைகள் தங்களை எங்கு கொண்டு செல்லுமோ என்று கவலை கொள்ளாதவர்கள் என்கிறார். இன்றும் அறிவை அதிகாரத்தோடு பயன்படுத்தும் கல்லூரிப் பேராசிரியர்களும் அரசு அதிகாரிகளும் சாதாரண மக்களை ஆட்டு மந்தையாகவும், கீழ்பணிவையே கடமையாகக் கொண்ட அடிமைகளாகவும்தானே கருதுகிறார்கள்!
பிளேக் நோயின் வருகையினால் நகரமே காலியாகிறது. காலி செய்ய இயலாத ஆதரவற்றவர்களுடன் கலிலியோவும் தங்குகிறார். தனது ஆய்வை விட்டகல அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் “எந்த வசதியுமில்லாத இந்தியாவில். தம்மாத்துண்டு சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்” என்று அமெரிக்கா போவதை நியாயப்படுத்துகிறார்கள் ஐ.ஐ.டி.யின் இளம் விஞ்ஞானிகள்.
“மனித குலத்தைச் சுமந்திருக்கும் இப்பூவுலகை அண்டவெளியின் ஒரு சாதாரண கோளாக்கி பூலோகத்தையும், பரலோகத்தையும் வேறுபாடில்லாமல் ஆக்கிவிட்டீர்களே, இன்னும் சில நாட்களில் மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று கூறுவீர்களோ” என்று கேட்கும் பாதிரி ஒருவனுக்கு கலிலியோ தரும் பதில் சுவாரசியமானது! எப்போதும் சட்டைப் பையிலிருக்கும் தனது கல்லைக் கீழே போட்டு, “இல்லை சுவாமி (மனிதனுக்கும் கீழோ இந்த அற்பக்கல்) இது… எப்படிக் கீழே விழ முடியும்? அதை நான் மேலே எழும்பச் செய்கிறேன்” என்று குனிந்து எடுக்கிறார். பொறுக்க முடியாத பாதிரி தரும் பதில் ‘திமிர் பிடித்த பன்றி’
அறிவியல் ஆர்வம் காரணமாக கலிலியோவின் மாணவராகிறான் ஒரு இளம் பாதிரி. தனது பெற்றோரைப் போன்ற பரம ஏழைகள் தமது துன்ப துயரங்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்வது எதனால், இவையெல்லாம் விதி எனக் கற்பித்து ‘நம்பிக்கை’யளிப்பது விவிலியமும், திருச்சபையும் தானே, அவற்றைக் கேள்வி கேட்டால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் எப்படி ‘அமைதியாக’ வாழ முடியும், என்று வாதிடுகிறான் அந்த மாணவன். அது அறியாமையின் அமைதி, தனது தொலை நோக்கி கொண்டு கோள்களை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தையும் நெருக்கமாகப் பார்க்கும் மக்கள் தங்கள் துயரங்களுக்குக் காரணம் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள், ‘ஐயம்கொள் ஆய்ந்து பார்’ என்ற நமது ஆய்வுமுறை அவர்களுக்கு இகலோக விடுதலையைக் கொண்டுவரும் என வேறு ஒரு இடத்தில் பதிலளிக்கிறார் கலிலியோ.
“நமது ஆய்வு உண்மையாக இருந்தால் நம்முடைய உதவியில்லாமல் அது வெற்றியடையணுமே” என்கிறான் மாணவன். “இல்லை, நாம் எந்த அளவு வெற்றி பெறுகிறோமோ அந்த அளவுக்கே உண்மையும் வெற்றி பெறும்” என்கிறார் கலிலியோ. அதற்கு மக்களிடமிருக்கும் ‘புனிதமான பொறுமையை’ ‘நியாயமான கோபமாக’ மாற்ற வேண்டும். இந்த உண்மை தெரியாமல் இருப்பவன் முட்டாள்; தெரிந்தே பொய் என்று சொல்பவன் அயோக்கியன் என்று சினமடைகிறார் கலிலியோ.
‘ஹெரெஸ் என்ற கவிஞனின் பாடல் ஒன்றில் ‘இருக்கை’ என்ற சொல்லை போடச் சொன்னால் அந்தக் கவிஞன் சம்மதிப்பானா? என்னுடைய பிரபஞ்சக் கோட்பாட்டில் வளர்ச்சி – தேய்வு இல்லாத ஒரு வெள்ளிக் கோளைக் கொண்டு வந்து பொருத்தினால் என்னுடைய அழகியல் உணர்வு புண்படாதா என்று அறிவியலின் விதியை அழகியலோடு உவமை சேர்த்து ஒரு கவிதைக் கேள்வியைக் கேட்கிறார் கலிலியோ.
“அவர்கள் சிரிக்கும் போது எனக்கு வயிறு கலங்குகிறது, ஏன் அப்படிச் சிரிக்குறீர்கள் புரியவில்லையே” கலிலியோவின் வேலைக்காரம்மாள் கேட்கிறார். “குருமார்களுக்கு ஆலய மணி ஒலிப்பது எப்படியோ அப்படித்தான் இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு சிரிப்பு என்று அப்பா அடிக்கடி கூறுவார்” பதிலளிக்கிறார் கலிலியோவின் மகள். ஆன்மீகத்தின் பொய்யொழுக்கமும், அறிவியலின் உண்மைக் கொண்டாட்டமும் அழகிய முரண் உவமையாகச் சேர்ந்திருக்கக் காரணம். இரண்டும் இருபிரிவினரிடத்தில் கொண்டிருக்கும் முக்கியத்துவம் தான்.
“நமது ஆய்வை முழு நம்பிக்கையோடு அல்ல, ஓரளவு நம்பிக்கையோடு தான் தொடங்க வேண்டும். நமது ஊகமும், முடிவுகளும் மாறலாம். ஒவ்வொன்றையும் துருவித் துருவித் திரும்பத் திரும்பக் கேள்விகளை எழுப்ப வேண்டும். இன்று சரி எனக் கண்டதை நாளையே மறுக்க வேண்டி வரலாம். நமது வேகம் நத்தையைப் போல மாறலாம். இறுதியில் தோற்றுப் போய் குப்புற விழலாம். சோர்வு வரலாம். ஆயினும் மீண்டும் மீண்டும் ஆய்வு. அதுவே நமது தெளிவான இறுதி முடிவைத் தரும். அப்போது அதை எதிர்ப்பவர்களை இரக்கம் காட்டாமல் எதிர்ப்போம்” என்று அறிவியல் ஆய்வில் வழிமுறையைக் கூறுகிறார் கலிலியோ. தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவைப் புரிந்து, முரணை வென்று வரும் புரட்சி நமது நினைவுக்கு வருகிறது.
திருச்சபையின் வீட்டுச்சிறைக் கண்காணிப்பில் தனது இறுதி நாட்களைக் கழிக்கும் கலிலியோ தனது பழைய மாணவனைச் சந்திக்கிறார். தன்னைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் சுயவிமரிசனம் செய்கிறார். “மனிதகுலத்தின் சுமைகளைக் குறைப்பதுதான் அறிவியலின் ஒரே இலக்காக இருக்க வேண்டும். அறிவியல் அறிவியலுக்கே என்று தூயகலைவாதம் பேசினால் அறிவியல் முடங்கிவிடும்; நமது கண்டுபிடிப்புகளும் மனித குலத்தை அடக்குவதற்கும், பின்னடையச் செய்வதற்கும் தான் பயன்படும்; இத்தகைய அறிவியலாளர்களின் வெற்றிக் குரல் மனிதகுலம் பயத்தால் எழுப்பும் கூக்குரலாக எதிரொலிக்கும்.”
“அறிவியலாளனான எனக்கு ஒரு வாய்ப்பிருந்தது. என்கால அறிவியல் சாதாரண மக்களையும் சென்றடைந்தது. இந்த அரிய சூழ்நிலையில் நான் ஒருவன் உறுதியாகப் போராடியிருந்தால் அது மாபெரும் விளைவுகளை உருவாக்கியிருக்கும், மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் ‘ஹிப்போக்ரெடசின் உறுதி மொழி’ போன்று அறிவியலாளர்களும் மனிதகுல மேன்மைக்காக மட்டுமே எங்களின் ஞானத்தைப் பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி மேற்கொள்ளும் நிலை உருவாகியிருக்கும். ஆனால் இன்றைய நிலையில் எதற்கு வேண்டுமானாலும் தங்களை விற்றுக் கொள்ளும், சில்லறைச் சுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் அடிமை விஞ்ஞானிகளின் ஒரு தலை முறையை நாம் எதிர்பார்க்கலாம். அவ்வளவுதான்… என்னுடைய தொழிலுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன். என்னைப் போன்ற துரோகிக்கு அறிவியலாளர்களின் குழுவில் இடமில்லை”

***

பிரெக்டின் நாடகத்திலிருந்து எதைச் சொல்வது எதை விடுவது என்ற குழப்பத்தாலும், பக்க அளவு கருதியும் இந்நூலறிமுகத்தை முடித்துக் கொள்கிறோம். இத்தகைய கருத்துச் செறிவான நூலை விறுவிறுப்புடனும், நயத்துடனும், அதே சமயம் எளிமையுடனும் தி.சு.சதாசிவம் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கும் இந்த அரிய நூலை வெளியிட்ட அலைகள் பதிப்பகத்தாருக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். நாடகத்தைச் செறிவுடன் உணரும் வாசகருக்கு ஏராளமான முக்கியமான செய்திகள் இருக்கின்றன. அதற்கு கீழ்க்கண்ட நூல்களைச் சேர்த்துப் படிப்பது பயனளிக்கும்.

ஏங்கெல்சின் ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற கட்டுரை.
ஏங்கெல்சின் ‘கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்’ என்ற கட்டுரை.
நவீன ஐரோப்பிய வரலாறு.
ஜார்ஜ் தாம்சனின் ‘மனித சமூக சாரம்’
மாவோவின் ‘அறிவுத் தோற்றம்’ பற்றிய கட்டுரை.
நாடகத்தைப் படித்து முடித்ததும் வாசகர்கள் சிந்திக்க வேண்டிய விசயங்களும் நிறைய இருக்கின்றன. அன்று திருச்சபையால் கட்டி வைக்கப்பட்ட அறிவியல் இன்று எதனால் கவ்வப்பட்டிருக்கிறது? இன்று கோள்களின் சுழற்சி உட்பட ஏராளமான அறிவியல் உண்மைகள் மக்களுக்குத் தெரிந்திருந்தால் அறியாமையும், மூடநம்பிக்கையும், ஏழ்மையும் இன்னும் ஏன் அகலவில்லை? இந்தக் கேள்விகளுக்கு உங்களால் விடை காண முடிகிறாதா?

இல்லையென்றால் மீண்டும் நாடகத்தைப் படியுங்கள்.


– வேல்ராசன்




Tuesday, 14 April 2020

AMBEDKAR ,ACTIVIST BORN 1891 APRIL 14 - 1956 DECEMBER 6


AMBEDKAR ,ACTIVIST BORN 
1891 APRIL 14 - 1956 DECEMBER 6



பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

வாழ்க்கை வரலாறு

இளமை

அம்பேத்கர் இளமையில்[4]
அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில்[5] 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.[6] அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில்[7] பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

கல்வி

அம்பேத்கர்
1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும்.[8] அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும்.[9] வடமொழி கற்கவும் தடை இருந்தது.[10] இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.

பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். இது ஒரு சாரரின் கருத்து. ஆனால் இந்த கருத்து முற்றிலும் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. ஏனெனில் இந்தியாவில் எந்தவொரு பிராமணருக்கும் இத்தகைய குடும்ப பெயர் இல்லை. மேலும் இது தங்களின் சமூகத்திற்கு பெருமையை சேர்த்து கொள்ள அவர்கள் செய்து கொண்ட ஒரு போலி இடைச்செருகல் என்பதே பலரின் குற்றசாட்டு. இவர் அம்பவாடே என்னும் கிராமத்தில் பிறந்ததால் இவரை
அம்பவாடேகர் என்று முதலில் அழைத்தனர். பின்னர் அதுவே அம்பேத்கர் என்றானது என்பது ஒரு சாரரின் கருத்து.[11] 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டதாரியானார்.


படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா
பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

சமூகப்பணிகள்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1932-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.(1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது) சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 - டிசம்பர் 6-ல் காலமானார்.

தீண்டாமைக்கு எதிராக
புனே உடன்படிக்கை
தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.[12] அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார்.[12]

பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார்.[13] இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.[14]

அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப அவர் குணம் மாறும்; ஆதரவும் மாறும்; ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”,

பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

இந்திய அரசியலமைப்பில் பங்கு
இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.[15]

அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.[16]

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.

இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்.[17]

டாக்டர். அம்பேத்கர் காஷ்மீர்க்கு தனி அந்தஸ்த்து வழங்குவதை விரும்பவில்லை.'[18]

ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்கு
அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.

கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
1921-பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
1923-ருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்[19][20][21]
கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.[19][21][22][23]

பௌத்த சமயத்திற்கு மாறுதல்

நாக்பூரின் தீக்சாபூமியில் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் எழுதப்பட்ட கற்றளி


நாக்பூரின் தீக்சாபூமியில் அம்பேத்கர் முயற்சியால் எழுப்பட்ட, சாஞ்சி மாதிரியான ஸ்தூபி

அம்பேத்கர் பழங்கால இந்தியாவைப்பற்றியும் மானிடவியலைப்பற்றியும் செய்த ஆராய்ச்சியின் மூலம் மகர் மக்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும் கருதினார்.[சான்று தேவை] இதனாலயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்று கருதினார்.[சான்று தேவை] இதைப்பற்றி யார் சூத்திரர்கள்? (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார்.

பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.[24] புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்று கூறினார். அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.[25] 1954ம் ஆண்டு இரு முறை பர்மாவிற்கு பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு ரங்கூனில் நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார்.[26] 1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார்.[27] 1956ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார், அவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது.[27]

இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் [28] அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள்.[25] அதன் பின் இவர் காட்மண்டுவில் நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார்.[26] இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.[29]

மரணம்

அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை









அம்பேத்கர் அருங்காட்சியகம், புனே

1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் [25] 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்கநேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது.[30] இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.[31] டிசம்பர் 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.[32] அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரின் உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர்.[32]
நாக்பூரின் தீக்சாபூமியில்
 அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்
எழுதப்பட்ட கற்றளி


மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அம்பேத்கர் கருத்துக்கள்
'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

மகாத்மாக்கள் பலபேர் வருவார்கள் போவார்கள், ஆனால் நமது வாழ்க்கை நிலை அப்படியே தான் இருக்கிறது
கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக பலியிடுவார்கள், சிங்கங்களை அல்ல. நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்
கற்பி, ஓன்று சேர், புரட்சி செய்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்