Showing posts with label தவமாய். Show all posts
Showing posts with label தவமாய். Show all posts

Thursday, 5 December 2019

THAVAMAAI THAVAM IRUNTHU தவமாய் தவமிருந்து' review



THAVAMAAI THAVAM IRUNTHU
தவமாய் தவமிருந்து'





``படம் பார்த்துட்டு எங்க அம்மா கோபப்பட்டாங்க! ஏன்னா...'' - சேரன் #14YearsOfThavamaiThavamirundhu
சனா
அப்பா கேரக்டருக்கு மம்முட்டி, நாசர் சார்கிட்டலாம் பேசினோம். சில காரணங்களால் அவங்களால் பண்ண முடியல. ஆனா, எல்லாரையும் தாண்டி எங்களுக்கு முழுமையா நின்னது ராஜ்கிரண் சாரோட முகம்தான்.


தமிழ் சினிமாவின் ஃபேமிலி சென்ட்டிமென்ட் படங்களில் முக்கியமானது, சேரனின் `தவமாய் தவமிருந்து'. மிகப்பெரிய ஹிட் அடித்த இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பாக இயக்குநர், நடிகர் சேரனிடம் பேசினோம்.


`` `சினிமா'த்தனம் இல்லாத எதார்த்தமான படமாத்தான் இந்தப் படம் இருக்கும். அதனாலதான் ஆடியன்ஸ்னால படத்தை உணர முடிஞ்சது. நாம எடுக்குற சினிமா, நம்ம வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கணும்னு நினைப்பேன். அதுக்கான வேட்கைதான் `ஆட்டோகிராப்'. இதுக்குப் பிறகு எடுத்த படம்தான் `தவமாய் தவமிருந்து'. `ஒரு நடுத்தர குடும்பம் முப்பத்தஞ்சு வருஷத்தைக் கடக்குறதுக்குள்ள என்னவெல்லாம் சந்திக்கிறாங்கன்னு' யோசிச்சேன். ஒரு வீடு, குடும்பத் தலைவனின் பொருளாதாரத்தை சார்ந்துதான் இங்கே இயங்கிட்டிருக்கு. அதனாலதான் அப்பாவின் வாழ்க்கையில் பயணம் பண்ணிட்டு இந்தப் படத்தை எடுத்தேன். படத்தோட காட்சிகளை ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை
வெச்சுத்தான் எடுத்திருப்பேன். படம் எடுத்து முடிச்சப்போ, மொத்தம் அஞ்சு மணி நேரமா இருந்தது. எடிட்டிங்கில் மூணு மணிநேரம் இருபது நிமிஷமா கொண்டு வந்தோம். படம் பெருசா இருந்தாலும் ஆடியன்ஸ் கடைசி வரைக்கும் உட்கார்ந்து பார்த்தாங்க. படம் ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கும் போனேன். அப்போ, மாயாஜாலில் இரவு நேர காட்சி பார்க்கப்போனேன். அங்கே பெரிய குடும்பம் ஒண்ணு படம் பாத்துட்டிருந்தது. `படம் முடிஞ்சிருச்சா அதுக்குள்ள'னு ஒரு அம்மா படம் முடிஞ்சவுடனே கேட்டாங்க. எனக்கு ஆச்சர்யமா இருந்தது. இந்தப் படத்தைப் பொருத்த வரைக்கும் எனக்கு கிடைச்ச அங்கீகாரமா அவங்க சொன்ன வார்த்தையைத்தான் பார்க்குறேன்.''

``ஸ்க்ரிப்ட் எழுதும்போதே `தவமாய் தவமிருந்து'னுதான் பெயர் வெச்சிருந்தீங்களா?"


``ரொம்ப வலிமையான பேர் தேவைப்பட்டது. ஒரு அப்பாவுடைய உழைப்பும், அத்தனை கால தவமும், முழு வாழ்க்கையும் பேர்ல இருக்கணும்னு தோணுச்சு. அப்பாவைச் சார்ந்து வைக்கலாமா, இல்லை குடும்பம் சார்ந்த பெயரா இருக்கலாமானு ரொம்ப யோசிச்சோம். குழந்தை பெத்துக்கணும்ங்கிறது எல்லாருடைய வாழ்க்கையிலும் கனவா, ஆசையா இருக்கும். ஒரு பொண்ணுக்கும் ஆணுக்குமான அடையாளமே இதுதான். பெற்றோர் ஆனதுக்குப் பிறகுதான் இந்த உறவே முழுமை அடையுதுனு சொல்லலாம். தவமாய் தவமிருந்துதான் ஒவ்வொரு குழந்தையையும் உருவாக்குறாங்க. அதே மாதிரி பசங்க ஏதாவது தப்பு பண்ணிட்டாலும், `இதுக்காகவா உன்னை தவமிருந்து பெத்தேன்'னு சொல்லுவாங்க. இந்த வார்த்தைகளிலிருந்து எடுத்ததுதான் இந்தப் படத்தோட தலைப்பு."


``ஒவ்வொரு கேரக்டரையும் எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?"



``என்னோட படங்களைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு விஷயங்களில் ரொம்ப கவனமா இருப்பேன். முதல்ல படத்துல நடிக்கிற கதாபாத்திரங்கள். இரண்டாவது, கதையோட பின்புலம். ராஜ்கிரண் சாரை அச்சுத் தொழிலாளியா காட்டியிருப்பேன். கதையை நகர்த்திச் செல்லுற இந்த கதாபாத்திரம் ரொம்ப முக்கியம். அதனால அப்பா கேரக்டருக்கு மம்முட்டி, நாசர் சார்கிட்டலாம் பேசினோம். சில காரணங்களால் அவங்களால் பண்ண முடியல. ஆனா, எல்லாரையும் தாண்டி எங்களுக்கு முழுமையா நின்னது ராஜ்கிரண் சாரோட முகம்தான். அவருனால முழுமையா அப்பா கேரக்டரில் ட்ராவல் பண்ண முடியும்னு நம்புனோம். அவர்கிட்ட கதை சொன்னேன். அவரும் ஆர்வமா இருந்தார். சரண்யா மேடம் அப்போதான் அம்மா கேரக்டரில் நடிக்க ஆரம்பிச்சிருந்தாங்க. நான் கேட்டவுடனே ஓகே சொல்லிட்டாங்க. இந்தப் படம், அவங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. மலையாளத்துல காழ்ச்சா (Kaazhcha) படம் பார்த்தேன். அதுல பத்மபிரியா சின்ன கேரக்டர்தான் பண்ணியிருந்தாங்க. ஆனா, ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. உடனே, ஹீரோயினா தமிழ்ல அறிமுகப்படுத்தினேன். பாந்தமான மருமகள் கேரக்டருக்கும் சரியா இருந்தாங்க. என்னோட அண்ணா கேரக்டருக்கு புதுமுகம் யாராவது நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. ரேடியோ மிர்ச்சி செந்தில் எனக்கு அப்போ அறிமுகம். நிறையமுறை இன்டர்வியூஸ் பண்ணியிருக்கார். அவரை கேட்டப்போ ஆச்சர்யப்பட்டார். `நீங்க வாங்க செந்தில்'னு கூப்பிட்டு நடிக்க வெச்சிட்டேன். படத்தோட ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு டிஜிட்டல் வடிவத்துல காட்சிகளைப் பதிவுசெய்திருந்தார். இதுக்கு முன்னாடி `மும்பை எக்ஸ்பிரஸ்', `வானம் வசப்படும்' படங்கள் டிஜிட்டல் வடிவுல வந்திருந்தாலும் முழுமையான ரிசல்ட் இந்தப் படம் கொடுத்தது. ஒருத்தருடைய 35 வருஷ வாழ்க்கையைக் கண் முன்னாடி நகர்த்த, கலை இயக்குநர் ஜே.கே சார் பெரும் உதவியா இருந்தார். ராஜீவ் காந்தி இறந்துட்டார்னு படத்துல வரும். அதுக்குத் தேவையான சில கால வடிவமைப்புகளெல்லாம் பண்ணியிருந்தார்."

``இந்தப் படத்துல நீங்க ஒரு பாடல் எழுதியிருந்தீங்களே?"

`` `பாரதி கண்ணம்மா' படத்துல இருந்து எனக்கு இசையமைப்பாளர் சபேஷ் முரளியைத் தெரியும். முதலில் படத்தோட பேக்கிரவுண்டு ஸ்கோர்ல மட்டும் வேலைபாத்தார். அப்புறம், சில படங்களுக்கு இசையமைக்க ஆரம்பிச்சார். ஆனா, அவருக்குப் பேர் கிடைச்சது இதுலதான். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருத்தவங்க எழுதியிருந்தாங்க. அப்போதான் `என்ன பார்க்கிறாய்' பாட்டை நான் எழுதினேன். எப்போதும் பாட்டுக்கு அப்புறம்தான் ரியாக்‌ஷன் வரும். ஆனா, இந்தப் படத்துல ரியாக்‌ஷனுக்கு அப்புறம்தான் பாடல் வரும். எத்தனை பேர் இதைக் கூர்ந்து கவனிச்சாங்கன்னு தெரியல. உருவாக்கப்பட்ட விதமே புதுசாதான் இருக்கும். தேன்மொழி ரெண்டு பாட்டு எழுதியிருந்தாங்க. தமிழ் சினிமா கவனிக்காத கவிஞர்களில் தேன்மொழியும் ஒருத்தவங்க. அற்புதமான வரிகளை கொடுக்கக்கூடியவங்க."


``கனமான படங்கள் வசூல் ரீதியா சம்பாதிக்காமல் போயிருமே?"

பத்மப்பிரியா
பத்மப்பிரியா
``இந்தப் படத்துக்கு முன்னாடி ரிலீஸான `ஆட்டோகிராப்' ஹிட் அடிச்சதுனால அடுத்தப் படத்துக்கான தயாரிப்பாளர் கிடைக்குறதுல எந்தப் பிரச்னையும் ஏற்படல. சிருஷ்டிங்குற புது நிறுவனம்தான் படத்தைத் தயாரிச்சாங்க. படத்துக்காக அவங்க போட்ட காசை எடுத்துட்டாங்க. தவிர, நஷ்டமும் ஏற்படல. தயாரிப்பாளருக்கு தேசிய விருதும் கிடைச்சது. சிறந்த நடிகருக்காக ராஜ்கிரண் சாருக்கு எந்த விருதும் கிடைக்கலைங்கிற வருத்தம் எங்க குழுவுக்கு அப்போ இருந்தது."

``உங்க அம்மா, அப்பா படம் பார்த்துட்டு என்ன சொன்னாங்க?"

``படம் பார்த்துட்டு எங்க அம்மா  கோபப்பட்டாங்க! ஏன்னா...'' - சேரன் #14YearsOfThavamaiThavamirundhu
``எங்க அப்பா சினிமா ஆபரேட்டரா இருந்தார். பொருளாதார ரீதியா அவரால வீட்டுக்கு பெருசா உதவ முடியல. உழைப்பைக் கொடுத்தது எங்க அம்மாவும் அம்மாச்சியும்தான். எங்க வீட்டுல என்னையும் தங்கச்சியையும் படிக்கவெச்சு எல்லா நல்லது கெட்டதும் பண்ணுனது அவங்கதான். ஆனா, என் படத்துல வந்த ராஜ்கிரண் மாதிரியான அப்பா கேரக்டரை வெளியே பார்த்திருக்கேன். மதுரை மேலூரில் மொய்தீன்னு ஒருத்தர் அச்சகம் வெச்சிருந்தார். நடிகர் ராமராஜனுக்கு வேண்டியவர். இவர் மூலமா ராமராஜனைப் பிடிச்சு சினிமாவுக்கு போயிரலாம்னு தினமும் இவரைத் தேடிப் போயிருவேன். அங்கே அவருக்கும் அவரோட பையனுக்கும் இடையே நடக்குற விஷயங்களையெல்லாம் பார்ப்பேன். அவரோட உடல்பாவனை இதெல்லாம் பார்த்து என்னோட
கற்பனையையும் சேர்த்துத்தான் ராஜ்கிரண் கேரக்டரை உருவாக்குனேன். எங்க அப்பாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. படம் பாத்துட்டு எங்க அம்மா, `இந்த குடும்பத்துக்காக இவ்வளவு நாளா கஷ்டப்பட்டிருக்கேன், என்னை படத்துல காட்டலையே'ன்னு கோபமும் வருத்தமும் பட்டாங்க. இதை இதுவரைக்கும் யார்கிட்டயும் சொன்னதில்லை. ஒரு அம்மாவுடைய கஷ்டத்தை எந்தப் படமும் இதுவரைக்கும் சரியா பதிவு பண்ணல. எங்க அம்மாவுடைய வாழ்க்கையைப் படமா எடுக்கணும்னு ஆசைப்படுறேன். அதே மாதிரி, படத்துல சரண்யா அம்மா சென்னைக்கு வந்தவுடனே வெஸ்டன் டாய்லெட்டைப் பாத்துட்டு `என்னடா இது அடுப்பு மாதிரி'னு டயாலக் பேசுவாங்க. எங்க அம்மாச்சியை சென்னைக்கு கூப்பிட்டு வந்தப்போ, அவங்க சொன்ன வார்த்தைகள்தான் அவை. என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்தப் படத்தோட கதைனு சொல்ல மாட்டேன். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் உள்ள கதைனு சொல்லலாம். எல்லா மிடில் க்ளாஸ் அப்பாக்களும் படக்கூடிய ஒரு துயரம்தான் இந்த `தவமாய் தவமிருந்து' '' என்கிறார் சேரன்.