Showing posts with label CHETTIAR. Show all posts
Showing posts with label CHETTIAR. Show all posts

Thursday, 29 July 2021

A.V MEIYAPPA CHETTIAR , PIONEER OF FILM INDUSTRY BORN 1907 JULY 28 - 1979 AUGUST 12

 

A.V MEIYAPPA CHETTIAR , PIONEER OF FILM INDUSTRY  BORN 1907 JULY 28 - 1979 AUGUST 12



ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) (28 சூலை 1907–12 ஆகத்து 1979), ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.[2] தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)[3]. தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், சிறீ வள்ளி, களத்தூர் கண்ணம்மா ஆகியன.


இளம்பருவம்

மெய்யப்பர் காரைக்குடியில் வாழும் நகரத்துச் செட்டியார் குடும்பத்தில், ஆவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் யூலை, 28, 1907.[4] ஆவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார்.[1] இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர்.[4][5] தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார்.[1][2][4] தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.[4]



திரைத்துறையில் தொடக்கக் காலம்

டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.[2] 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படமான அல்லி அருச்சுனா என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார்.[2][4] 1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார்.[4] நந்தக் குமார் என்ற இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார்.[6][7] இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார். லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே.[4] 1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார்.[1] அதே ஆண்டில், பூகைலாசு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் கன்னட மொழி நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட சபாபதி, போலி பாஞ்சாலி, என் மனைவி ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான அரிச்சந்திரன் பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.[1][7] பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.


ஏவியெம் புரொடக்சன்சு


ஏவிஎம் நிறுவன முத்திரை

நவம்பர் 14, 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) சென்னையின் சாந்தோமில் நிறுவினார். கோடம்பாக்கத்தில் இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை காரைக்குடியில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் வேதாள உலகம் ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, நாம் இருவர் என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார்.[4][8] இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது.[9] இதைத் தொடர்ந்து வெளியான வேதாள உலகம், வாழ்க்கை ஆகிய திரைப்படங்களும் பெருவெற்றியடைந்தன. பரவலாக அறியபப்டும் வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்படம் வாழ்க்கை. பின்னாளில் வைஜெயந்திமாலா புகழ்பெற்ற முன்னணி நடிகையாக விளங்கினார்.[10] 25 வாரங்கள் தொடர்ந்து வெளியான இத்திரைப்படம் ஜீவிதம் என்ற பெயரில் தெலுங்கிலும்[11], பகர் என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. வாழ்க்கை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், வங்காளம், சிங்களத்திலும் திரைப்படங்களைத் தயாரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின், ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.


1950களில்

1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்)பராசக்தி திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. மு. கருணாநிதியால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான சிவாஜி கணேசன் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[12] தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார்.[12][13][14] ஏவிஎம் வெளியிட்ட அந்த நாள் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.[15] இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன.[16] இதில் இரண்டாம் உலகப் போரின்போது ஊடுருவிய யப்பானியருடன் சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.[17] இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், அகிரா குரோசவாவின் ரசோமோன் என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில், சடகபாலா என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான சடகபாலம் என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது.[18][19] 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் பூகைலாசு என்ற திரைப்படம் வெளியானது.[20] இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை பக்த ராவணா எனத் தமிழிலும், பக்தி மகிமா என இந்தியிலும் வெளியிட்டனர்.[21]


1960கள்

1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சிவாசி கணேசன், செமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமலஃகாசன் அனாதைச் சிறுவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் நாகேசும், தொடர்ந்து வெளியான மேசர் சுந்தரராசன் திரைப்படமும் வெற்றியடைந்தன. மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் நடித்த சுந்தரராசன் தன் பெயரை மேசர் சுந்தரராசன் என் மாற்றிக் கொண்டார். ஏவியெம் நிறுவனம் வெளியிட்ட பவித்ர பிரேமா, பெஞ்சின பிரேமா, நாடி ஆட சன்மே, சிட்டி செல்லுலு, லேத மனசுல, மூக நோமு ஆகிய தெலுங்குத் திரைப்படங்களும் வெற்றியடைந்தன.




இருப்பினும் ஏவியெம்மின் பெரிய வெற்றியைத் தந்தது பக்த பிரகலாதா என்னும் திரைப்படமே. இது தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. வைணவர்களின் புராண நாயகரான நரசிம்மரை பற்றிய கதை இது. சித்திரப்பு நாராயண மூர்த்தி இயக்கத்தில், கிரணியகசிபுவக ரங்கா ராவும், பிரகலாதனாக குழந்தை ரோசாமணியும் நடித்தனர். இதை முன்பு கருப்பு வெள்ளைத் திரையில் எடுத்து வெளியிட்டார். திரைப்படம் தோல்வியடைந்தது. பிரகலாதனைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகம் அறியப்படுகிறது. சரோஜா தேவி, நாகேசு, எம். ஜி. ஆர் நடித்து வெளியான அன்பே வா என்ற திரைப்படமும் வெற்றி பெற்றது.


இந்தித் திரைப்படங்கள்

திரைத்துறையில் இணைந்ததிலிருந்து பல வட இந்திய இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். 1938 இல் வெளியான நந்தகுமார் என்னும் திரைப்படம் மராத்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் இந்தித் திரைத்துறையில் நுழைந்தார். பகார் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இதில் வைசெயந்திமாலா, கரன் திவான், பண்டரி பாய், பிரான், ஓம் பிரகாசு, டபசும் நடித்திருந்தனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான வாழ்க்கை என்னும் திரைப்படத்தைத் தழுவி வெளியானது. இது வைசெயந்திமாலாவின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டில், வைசெயந்தி மாலாவின் நடிப்பில் லட்கி என்னும் இந்தித் திரைப்படத்தைத் தயாரித்தார். இவ்விரண்டு திரைப்படங்களும் ஓரளவு வெற்றி பெற்றன. 1957 ஆம் ஆண்டில், அம் பஞ்சி ஏக் தால் கி என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதாக இருந்ததால், பிரதமர் தங்கப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார். தமிழ்த் திரைப்படமான மிச்சியம்மா இந்தியில் பாய் பாய் என்று வெளியானது. இது மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலுக்காக நன்கு அறியப்படுகிறது. பாபி என்னும் திரைப்படத்தில் ஜக்தீப், பண்டரி பாய், பால்ராஜ் சஹ்னி, நந்தா ஆகியோரும் நடித்தனர். இந்தித் திரைப்படங்களான மிஸ் மேரி, பக்தி மகிமா, பக்த் பிரக்லாத் ஆகிய திரைப்படங்கள் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை மொழிமாற்றி எடுக்கப்பட்டவை. 1961 ஆம் ஆண்டில் நிருபா ராய்க்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. ஏவியெம் தயாரித்த பிற இந்தித் திரைப்படங்களுள் சில: மன் மௌஜி, மெயின் சூப் ரகுங்கி, பூஜா கே பூல், மெக்ர்பான். மெய்யப்பரின் கடைசி இந்தித் திரைப்படமான ஜைசே கோ தைசா, 1973 ஆம் ஆண்டு கிருசுணா- பஞ்சு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது





ஏவி.எம். அறக்கட்டளை

மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அது சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது.


கட்டிடங்கள்

இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர்.


கல்வி நிறுவனங்கள்

இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.


அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு

1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த சூலை 28ஆம் நாள் சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவு, அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இது சென்னை ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. கம்பராமாயணத்தை ஆராய்ந்து வல்லுநர் ஒருவர் இந்நாளில் சொற்பொழிவாற்றுவார். அச்சொற்பொழிவு வானதி பதிப்பகத்தால் நூலாக்கப்பட்டு ஆகத்து மாத நடுவில் நடைபெறும் சென்னை கம்பன் கழக விழாவில் வெளியிடப்படும். அவ்வகையில் இதுவரை ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள்:



கருப்பு, வெள்ளை திரைப்படம், பலரது வாழ்க்கையை வண்ணமயமாக்கி விடும் என்ற காலகட்டம் அது. 1949, டிசம்பர், 22ல், வெளிவந்த, ‛வாழ்க்கை என்ற, திரைப்படமும் அப்படிப்பட்டது தான் என, ஏ.வி.எம்., எனப்படும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரிப்பில் உருவான அந்த திரைப்படத்துக்குப் பின் உள்ள வரலாற்றை, விவரித்தார் ஏ.வி.எம்.சரவணன்.


என் தந்தை, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் எப்போதும் புதுமை விரும்பி. சிறு வயதில், தாத்தாவின் வணிகத்தை கவனித்தார். பின், கிராமபோன் ரெக்கார்டுகளில், தமிழ் பாடல்களை பதிவு செய்து, விற்பனை செய்தார். பின், பாரதியார் பாடல்களை ஒலி, ஒளி அமைக்க உரிமை பெற்றிருந்தார். பேசும் படங்கள் வந்த போது, மும்பையிலும், கோல்கட்டாவிலும் இருந்த ஸ்டுடியோக்களில், படப்பிடிப்பு நடத்தி, தமிழ் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டார்; அதில், நஷ்டப்பட்டார். நஷ்டத்தை ஈடுகட்ட, சென்னையில், பிரகதி ஸ்டுடியோவை நிறுவி வெற்றிப்படங்களை கொடுத்தார். பின், பங்குதாரர்கள் ஒத்துழைப்பின்மையால், ஸ்டுடியோ விற்கப்பட்டது.


புதிய ஸ்டுடியோ அமைக்க முயற்சித்த போது, இரண்டாம் உலகப்போர் நடந்ததால், சென்னையில், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், எங்களின் சொந்த ஊரான காரைக்குடியில் இருந்த, தேவக்கோட்டையில், ஜமீன் இடத்தில், ஷெட் போட்டு, நடிகர்களை, ஆண்டுக் கணக்கில் ஒப்பந்தம் செய்து, படங்களை தயாரித்தார். படங்கள் வெற்றியடைந்ததால், திடீரென வாடகையை பல மடங்கு உயர்த்தினார் ஜமீன். காரைக்குடியில் படப்பிடிப்பு நடத்தினாலும், பிரின்ட் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு, சென்னை வர வேண்டியிருந்ததால், ஜமீன் இடத்தை காலி செய்தார். அப்போது, இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தது.





சென்னையில் மீண்டும் ஸ்டுடியோ அமைக்க முயற்சித்தார். வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு மேற்கில், தோல் கிடங்கு வைத்திருந்த முஸ்லிம் ஒருவர், அதைக் காலி செய்து விட்டு, பாகிஸ்தான் சென்றார். அவரின், 10 ஏக்கர் நிலத்தை, 37 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு வாங்கினார் தந்தை. அதில், சினிமா ஸ்டுடியோவுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்ததோடு, நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கவும், தனித்தனி குடில்களை அமைத்தார்; அது தான், ஏ.வி.எம்., ஸ்டுடியோ.


ஏற்கனவே, புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையும் எடுத்து, அது, டிரண்டான நிலையில், அதிலிருந்து மாறுபட்ட கோணத்தில் படத்தை எடுத்தால், நன்றாக இருக்கும் என சிந்தித்து, சமூக நாடகமான, வாழ்க்கையை, படமாக தயாரிக்க முடிவெடுத்தார். கதாசிரியர் ப.நீலகண்டனிடம் அனுமதியும் பெற்றார். அந்த படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரன், கதாநாயகன். பெண்ணை ஏமாற்றும் கதாபாத்திரத்தில், கே.டி.சந்தானம், ஏமாறும் பெண்ணாக, பண்டரிபாய், கதாநாயகியின் தந்தையாக சாரங்கபாணி என, நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


கல்லுாரி செல்லும் பாத்திரத்துக்கான கதாநாயகி கிடைக்கவில்லை. இந்த தேடலுக்கிடையில், தமிழ் தெரியாத பண்டரிபாய்க்கு, இரண்டு மாத தமிழ் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் பேசிய தமிழ் சரியாக இல்லாததால், அவரின் கதாப்பாத்திரத்தில், டி.கே.சண்முகம் நாடகக் குழுவில் நடித்த, துரவுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகி தேடலின் போது, அப்போதைய நடிகை வசுந்தராவின் மகள், வைஜெயந்திமாலாவின் பரத நாட்டிய நிகழ்ச்சியை, விக்டோரியா ஹாலில் பார்த்து வியந்த அப்பா, அவரையே கதாநாயகியாக்க முடிவு செய்தார். அவருக்கு, மாதம், 2,350 ரூபாய் சம்பளமாக நிர்ணயித்து, ஒப்பந்தம் செய்யப்பட்டது. மூன்று மாதங்களில் படம் தயாரானது.




முதலில், அலுவலர்களை படம் பார்க்க வைத்தார், அப்பா. அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில், மீண்டும் படப்பிடிப்பு நடத்தி, படத்தில் சில திருத்தங்கள் செய்து, வெளியிட்டார். முறைப்படி, 1949, டிச., 22ம் தேதி, சென்னை, பாரகன் டாக்கீசில் ரிலீசானது. ஆனால், அதற்கு முந்தைய நாள் நல்லநாள் என்பதால், காரைக்குடியில், எங்களுக்குச் சொந்தமான சரஸ்வதி டாக்கீசில் ரிலீஸ் செய்தார். படம் வெளியாகி, சென்னையில் மட்டும், 25 வாரங்கள் ஓடியது. இதில், ராஜேஷ்வரி பாடிய ‛டடடா டடடா பாடல், பலராலும் முணுமுணுக்கப்பட்டது.


அது, கிடுக்கி என்ற, தெலுங்குப் பட பாடலின் மெட்டு. இந்த படத்தில் அசோசியேட் டைரக்டர்களாக இருந்த, எம்.வி.ராமன், இதே கதையை, ஜீவிதம் என்ற பெயரில், தெலுங்கில் இயக்கினார். அதுவும், பெருவெற்றி பெற்றது. இன்னொரு, அசோசியேட் டைரக்டராக இருந்த, ப.நீலகண்டன், சி.என்.அண்ணாதுரையின் விருப்பத்தின் படி, எங்களின் அடுத்த படமான, ஓர் இரவு படத்துக்கு இயக்குனரானார். வாழ்க்கை திரைப்படத்தின் தென்னிந்திய வெற்றியை அடுத்து, ஹிந்தியில், பகார் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அப்போது, வைஜெயந்தி மாலா, ஏ.வி.எம்., நிறுவனத்தில் தொடர்ந்து நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அதனால், பகாரில், கவர்ச்சி வேடத்தில், கதாநாயகியாக நடித்தார்.


தமிழில் வாய்ப்பிழந்த பண்டரிபாய், ஹிந்தி படத்தில் நடித்தார். பகார், வட மாநிலங்களில் வியக்கத்தக்க வெற்றி பெற்றது. கதாநாயகியின், பாம்பாட்டி பாடல், அங்குள்ளவர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வெற்றிக்குப் பின், ஹிந்தி பட தயாரிப்பாளர் ஒருவர், வைஜெயந்தி மாலாவின் வீட்டுக்கே சென்று, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, 50 ஆயிரம் ரூபாய் முன்பணமும் தந்துவிட்டு, ஹிந்திப் படத்தில் நடிக்க அழைத்தார். ஹிந்தி திரை உலகில் இருந்து, தமிழ் நடிகையைத் தேடி வந்த முதல் நிகழ்வு அது தான். புதிதாக துவக்கப்பட்ட, ஏ.வி.எம்., நிறுவனம், அறிமுக இணை இயக்குனர்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் என, பலருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது, அந்த வாழ்க்கை திரைப்படம் தான்.


இவ்வாறு, அவர் கூறினார்.


எல்லா பெருமையும் ஏ.வி.எம்., - எம்.வி.ஆருக்கே

இந்த படத்தில் நடித்தது குறித்து, வைஜெயந்தி மாலா பாலி பகிர்ந்து கொண்டது: என், திரையுலக, வாழ்க்கையை துவக்கி வைத்த, வாழ்க்கையை நினைப்பதே சந்தோஷமாக உள்ளது. நான் அப்போது, சென்னை, சர்ச் பார்க் கான்வென்டில், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்று, சபாக்களில் நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த, ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும், இயக்குனர் எம்.வி.ராமனும் மிகவும் பாராட்டினர்.


எம்.வி.ராமன், எங்கள் குடும்ப நண்பர். இருவரும், என் வீட்டுக்கு வந்து, என் அப்பாவிடம், புதிய படத்தில் நடிக்க வைக்கும் படி கூறினர். முதலில், எங்கள் வீட்டில் தயங்கினாலும், படக்குழுவினர் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால் ஒப்புக்கொண்டனர். எனக்கு, படம் நடிக்க வாய்ப்பு வந்ததால், தோழிகள் கேலி செய்வரோ என, கூச்சமாகவே இருந்தது. படப்பிடிப்பு துவங்கியது. வாழ்க்கையில் நான் எப்படி இருந்தேனோ அப்படியே தான் அங்கும் இருந்தேன். படத்தில், டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரியின் பாடல்கள் இடம் பெற்றன. பாரதியார் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


பின், தெலுங்கில், ஜீவிதம் என்ற பெயரில் வெளியானது, அதில், நான் மட்டுமே தமிழ் நடிகை. அந்த படமும் சூப்பர், ஹிட் ஆனது. அதன்பின், ஹிந்தியில் தயாரானது. அங்கு, என் நாட்டியத்தையும், குழந்தைத் தனமான நடிப்பையும் வெகுவாக பாராட்டினர். அதிலும், நான் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திரம். ஹிந்தியிலும், நானே சொந்த குரலில் பேசியிருந்தேன். அதுவரை, தமிழ் நடிகையாக இருந்த நான், அந்த படத்துக்குப் பின், அகில இந்திய நடிகையாகி விட்டேன். இப்போதும், என்னைப் பார்க்கும் பலர், வாழ்க்கை படத்தைப் பற்றி நினைவு கூர்கின்றனர். அந்த புகழெல்லாம், ஏ.வி.எம்.,முக்கும், எம்.வி.ஆருக்கும் தான் போய்ச் சேரும்.


இவ்வாறு, அவர் கூறினார்.


திரையின் வெளிச்சத்தில் ஒளிரும் அந்த மூன்றெழுத்தும், அதன் பின்னணியில் ஒலிக்கும் இசையும் தரத்தின் சான்று. வன்முறையற்ற, ஆபாசமற்ற, எல்லோரும் பார்க்கத் தகுந்த திரைப்படம் என்பதன் ஐ.எஸ்.ஐ முத்திரை அது. தமிழ் திரையுலகுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் கலாபூர்வமாகவும் உயரிய அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது அந்த மூன்றெழுத்து. தமிழ் உள்ளவரை, கலை உள்ளவரை காலத்தின் உயிர்ப்பாய் நிலைத்திருக்கும் அந்த மூன்றெழுத்து... AVM.

திறன்மிக்க பல கலைஞர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவுக்கு தந்த அப்பச்சி, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிறந்தநாள் இன்று. பல்லாண்டுகள் கடந்தும், இன்றும் திரையுலகச் சின்னமாகச் செயல்படும் ஏவி.எம் நிறுவனத்தின் வேர். அவரது வாழ்க்கை சாகசங்களால் நிரம்பியது. இழப்புகளுக்கு உடைந்து போகாமல், கனவுகளைச் சிதறவிடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து அடுத்து அடுத்தென்ற அவரது நகர்வுகள், ஒரு மாபெரும் இயக்கமாக ஏவி.எம் நிறுவனத்தை வளர்த்தெடுத்தன.




உங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா!


Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.


Sign-up to our newsletter

செட்டி நாட்டின் மையமான காரைக்குடியில் 1907 ஜூலை 28-ம் தேதி பிறந்தார் அப்பச்சி. அப்பா பெயர் ஆவிச்சி செட்டியார். அம்மா பெயர், லட்சுமி ஆச்சி. 9-ம் வகுப்பு வரையே படித்த மெய்யப்பனுக்கு, ஆங்கிலத்தில் பேசுவது கனவாக இருந்தது. சுயமாக ஆங்கிலச் செய்தித்தாள்களை வாங்கிப் படித்து அகராதிகளில் பொருள்தேடிப் படித்தார். அந்த தீவிரம்தான், உலகம் முழுவதும் வெற்றியாளராக சுற்றி வரவும், ஜெர்மானியர்களோடு வணிகம் செய்யவும் காரணமாக இருந்தது.


ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நினைவு தபால் தலை 

ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நினைவு தபால் தலை

சிறு வயதிலேயே வணிகத்தில் தீவிர ஆர்வம் இருந்தது மெய்யப்பனுக்கு. அப்பா நடத்திய கடையில் அவருக்கு உதவியாக இருந்து வணிக நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். 22 வயதில் ஃபோர்டு கார் கம்பெனியின் முகவரானார். ஒரு கட்டத்தில் சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 1932 செப்டம்பரில் `சரஸ்வதி ஸ்டோர் ரெக்கார்டிங் கம்பெனி' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, கர்நாடக சங்கீத உரிமைகளைப் பெற்று இசைத்தட்டுகளை வெளியிட்டார். அந்த முயற்சி வெற்றிதேடித்தர படிப்படியாகத் திரைத்துறையில் தீவிரமானார்.




அக்காலகட்டத்தில் இந்திய திரையுலகின் மையமாக இருந்தது கொல்கத்தா. தென்னிந்தியாவில் திரைப்படம் எடுப்பதற்குரிய ஸ்டூடியோவோ, வசதிகளோ இல்லை. நண்பர்களோடு சேர்ந்து கொல்கத்தா சென்று அல்லி அர்ஜுனா, ரத்னாவளி, நந்தகுமார் போன்ற திரைப்படங்களை எடுத்தார். ஆனால், அந்தத் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. பெரும் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், முடங்கவில்லை ஏவி.எம்.


தோல்விக்கான காரணங்களை அலசினார்.


`செலவு, மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. நம்மூரில் போதிய வசதியிருந்தால் முதலீட்டைக் குறைக்கலாம்...'


அந்த சிந்தனை, நாமே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன என்ற முடிவில் வந்து நின்றது. செயலில் இறங்கினார். 1940-ல், சென்னை, விஜயநகர பேலஸில் பிரகதி ஸ்டுடியோவைத் தொடங்கினார். பூகைலாஷ், திருவள்ளுவர் போன்ற படங்களைத் தயாரித்தார். சபாபதி என்ற படத்தை அவரே இயக்கினார். அந்தப் படத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி மனம் திறந்து பாராட்டினார்.



திரைக்கலைக்கு ஏதுமொழி... தமிழைக் கடந்து கன்னடத்துக்குப் பயணமானார் ஏவி.எம். வசந்தசேனா, அரிச்சந்திரா என அவர் எடுத்த கன்னடப் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்தப் படங்களைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். திரையுலகில், ஒருமொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு டப் செய்தது அதுதான் முதல்முறை. இந்தியாவே இந்த முயற்சியை வியந்து பார்த்தது. திரை மொழியும், தொழில்நுட்பமும் மெய்யப்பனுக்கு கைவந்த கலையாக இருந்தது. கலைஞர்களை கச்சிதமாகப் பயன்படுத்தி திறனை வெளிக்கொண்டு வந்தார். படங்கள் அடுத்தடுத்து வெற்றிக்கொடி நாட்ட, கலைஞர்களுக்கும் தனி அடையாளம் கிடைத்தது.


AVM Studios 

AVM Studios

Melanie M | Wikimedia Commons | CC BY

சென்னை வடபழனியில் சுற்றும் ஏவி.எம் உலக உருண்டை சென்னைக்கு அடையாளமாக இருக்கிறது. ஆனாலும், ஏவி.எம் நிறுவனம் முதலில் இயங்கத் தொடங்கியது காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டை ரஸ்தாவில். ஜமீன்தார் நாடகக் கொட்டகை `ஏவி.எம் ஸ்டுடியோ' ஆனது. கீற்றுக்கொட்டகையில் தொடங்கிய ஏவி.எம் ஸ்டுடியோதான் இன்று பெருமரமாக விரிந்து நிற்கிறது.



ஏவி.எம்மின் முதல் தயாரிப்பு நாம் இருவர். அந்தப் படத்தில் பாரதியாரை பாடலாசிரியராக்கினார் மெய்யப்பன். பாரதியார் பாடல்களின் உரிமையை வைத்திருந்த ஜெய்சிங் லால் கே.மேதா என்பவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து பெற்று மெய்யப்பன், படத்தில் பயன்படுத்தினார். `ஆடுவோமே... பள்ளு பாடுவோமே', `வெற்றி எட்டுத்திக்கும் என கொட்டுமுரசே' போன்ற பாரதியாரின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கத் தொடங்கின.


முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பாரதியார் பாடல்களை அரசுடமையாக மாற்ற விரும்பினார். அவற்றின் உரிமையை வைத்திருந்த மெய்யப்பனை அணுகி, `எவ்வளவு பணம் வேண்டும்' என்று கேட்க, `பாரதி இந்தத் தேசத்தின் சொத்து... 1 ரூபாய்கூட வேண்டாம்' என்று மொத்தமாக அள்ளிக் கொடுத்தார் மெய்யப்பன்.



பல தொழில்நுட்பங்களைத் திரையில் அறிமுகப்படுத்தினார் மெய்யப்பன். கிராபிக்ஸ் பற்றி எவரும் சிந்தித்திராத காலகட்டத்தில் `வேதாள உலகம்' படத்தில் மந்திர, தந்திரக் காட்சிகளெல்லாம் கேமராவைப் பயன்படுத்தியே எடுத்துக்காட்டி மிரள வைத்தார். எங்கிருந்தோ ஒரு தட்டு நகர்ந்து வர, அதில் பலகாரங்கள் படிப்படியாக வந்து அமர, தானே நகர்ந்து வந்து சுற்றி நிற்கும் தட்டு ரசிகர்களைக் குதூகலிக்க வைத்தது. இந்தப் படத்தையும் ஏவி.எம்மே இயக்கினார். பாடல்களே இல்லாமல், `அந்த நாள்' படத்தை எடுத்து திரும்பிப் பார்க்க வைத்தார். அந்தப் படத்தைப் பார்த்துதான் சினிமா எடுக்க வேணடும் என்ற ஆசை வந்தது என்று கூறியிருக்கிறார் மணிரத்னம்.


ஏவி.மெய்யப்ப செட்டியார் 

ஏவி.மெய்யப்ப செட்டியார்

Photo: Vikatan

பிறகு சகல வசதிகளுடன் சென்னையில் ஏவி.எம் ஸ்டுடியோவை உருவாக்கினார் மெய்யப்பன். `வாழ்க்கை', அங்கிருந்து வெளிவந்த முதல் திரைப்படம். ப.நீலகண்டனின் கதை வசனத்தில், இதையும் மெய்யப்பனே இயக்கினார். `ஓர் இரவு' திரைப்படம் பல புதுமைகளைக் கொண்டு வந்தது. ஒரே இரவில் கதை வசனம் எழுதித்தந்தார் அண்ணா. பாரதிதாசனின், `துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற பாடல் இப்போதும் இதயத்தைத் தாலாட்டிக்கொண்டிருக்கிறது. பிறகு, பி.ஏ.பெருமாளோடு இணைந்து மெய்யப்பன் தயாரித்த `பராசக்தி' வரலாறானாது.



1956-ல் எடுத்த `குலதெய்வம்' பெண்கள் மறுமணம் பற்றிப் பேசியது. இந்தப் படத்தின் வசனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதலில் வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் வசனகர்த்தா பெயர் இல்லை. வசனம் பரபரப்பாகப் பேசப்பட்டதும் இரண்டாவது வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் `மாறன்' என்று போட்டார்கள். எந்த மாறன் என அடையாளக் குழப்பம் ஏற்பட, அதன்பின் அடிக்கப்பட்ட சுவரொட்டிகளில் `வசனம் - முரசொலி மாறன்' என்று போடப்பட்டது. `மாறன்', `முரசொலி மாறனா'னது அந்தக் கணத்தில்தான். 1933-ல் ஏவி.எம்முக்குத் திருமணமானது. மனைவி, ராஜேஸ்வரி. தன் மனைவியை சிறந்த மதியூகி என்று கூறியிருக்கிறார் ஏவி.எம். வெளியூர் சென்றால் உடன் ராஜேஸ்வரியும் வர வேண்டும் என்று விரும்புவார். கண்டிப்பாக பச்சை புடவை கட்டி வர வேண்டும் என்பது சென்டிமென்ட்.


திரைக்கலைக்காக ஏராளமான விருதுகளையும் அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பெற்றிருக்கிறார் ஏவி.எம். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்கள் ஏவி.எம்மோடு பணிபுரிந்திருக்கிறார்கள். பழனிச்சாமியாக இருந்தவரை `காக்கும் கரங்கள்' படத்தில் சிவகுமாராக்கி அறிமுகம் செய்தார் ஏவி.எம்.


தன் வெற்றிக்குப் பின்னணியாக இருந்த தொழிலாளர்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார் ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அருகிலேயே குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தார். பலருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காகத் தன் அப்பா பெயரில் பள்ளியும் தொடங்கினார். எப்போதும் எவரும் அணுகும் வகையில் இறுதி வரை வாழ்ந்தார்.



ஏவி.எம்மால் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.


``175 படங்கள்... 75 ஆண்டுகளைக் கடந்து இயங்கும் ஸ்டூடியோ... நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. இன்று ஏவி.எம் நிறுவனம் பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. என் சினிமா ஆர்வத்தைக் கண்டு தந்தை ராம சுப்பையா ஏவி.எம்மிடம் என்னை அழைத்துச் சென்றார். அப்போது நான் கண்ணதாசன் நடத்திய `தென்றல்' பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். அதைப்பற்றிக் கேட்ட ஏவி.எம், ``நீ பத்திரிகையில எடிட்டிங் பிரிவுல வேலை செஞ்சிருக்கே... சினிமா பத்தி கத்துக்க மிகச்சிறந்த இடம் எடிட்டிங் பிரிவுதான். அங்கே போ..." என்று அனுப்பி வைத்தார். 5 ஆண்டுகள் எடிட்டிங்கில் இருந்தேன். ஏவி.எம்மின் மகன் குமரனும் என்கூட எடிட்டிங் பிரிவில் டிரையினியாக இருந்தார். `களத்தூர் கண்ணம்மா' படம் எடுத்தபோது, என்னை உதவி இயக்குநராக அழைத்தார் குமரன். ஆனால் எடிட்டராக இருந்த சூர்யா என்னை அனுப்ப மறுத்தார். ஆனால், ஏவி.எம் தலையிட்டு `முத்துராமனை அனுப்பு' என்றார். அங்கிருந்துதான் என் திரைப்பயணம் தீவிரமானது.


ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 

ஏ.வி.மெய்யப்ப செட்டியார்

Photo: Vikatan

ஏவி.எம் கடுமையான உழைப்பாளி. இரவு, பகல் ஸ்டூடியோவிலேயே இருப்பார். கேட்டால், `எனக்குப் பிடித்த விஷயம் இது. அதனால் இருக்கிறேன்' என்பார். தவறுகளை நுட்பமாகக் கண்டுபிடிப்பார். குறை பொறுக்கவே மாட்டார். கடுமையாகக் கண்டிப்பார். நல்ல விஷயங்களை மனம் திறந்து பாராட்டுவார். நேரத்தை அவரளவுக்கு திட்டமிட முடியாது. காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலான வேலைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொள்வார். ஒவ்வொரு வேலையாக முடிய முடிய சீட்டில் அழித்துக்கொண்டு வருவார். ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்க மாட்டார். அவரது வழிகாட்டுதல்தான் எங்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கையைத் தந்தது. இது ஏவி.எம்முக்கு 113 வது பிறந்தநாள். காலம் இருக்கும்வரை அவர் நிலைத்திருப்பார்..." என்று நெகிழ்கிறார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்.



தான் நேசித்த கலையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, மிகவும் நேர்மையாக வாழ்ந்த ஏவி.எம் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அருகில் வந்து மகன் சரவணன் நிற்க, ``அதோ ஒரு லைட் வீணா எரியுது பார்... அணை" என்றார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள். யாருடைய பொருளாகினும் வீணாகக் கூடாது. அந்தப் பொறுப்புணர்வுதான் ஏவி.எம்மின் வெற்றி.

1979 ஆகஸ்ட் 12 அன்று அந்தப் பெருவிளக்கு அணைந்தது. ஆனால், அந்த விளக்கு எழுப்பிய வெளிச்சம் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்!