Showing posts with label BHARATHIRAJA. Show all posts
Showing posts with label BHARATHIRAJA. Show all posts

Thursday, 18 February 2021

MUTHAL MARIYATHAI -MOVIE HAPPENINGS BHARATHIRAJA - SIVAJI GANESAN -RADHA

 


MUTHAL MARIYATHAI -MOVIE HAPPENINGS

BHARATHIRAJA - SIVAJI GANESAN -RADHA


‘நீயும் தோற்கலை; நானும் தோற்கலைன்னு சொன்னார் சிவாஜி சார்!’ - பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ அனுபவங்கள்

நன்றி : இந்து தமிழ் திசை செய்திப்பிரிவு

‘முதல் மரியாதை’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘டேய் நீயும் தோற்கலை, நானும் தோற்கலை. உலகத்தரம் வாய்ந்த படத்தைக் கொடுத்திருக்கேடா’ என்று சிவாஜி சார் மனமுவந்து பாராட்டினார்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற தலைப்பில் இணையதளச் சேனல் நடத்தி வருகிறார். அதில் தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரையுலக அனுபவங்களையும் மனம் திறந்து பகிர்ந்து வருகிறார்.

நடிகர்திலகம் சிவாஜியை வைத்து பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தை இயக்கினார். இந்தப் படம் குறித்தும் சிவாஜி குறித்தும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அதில் பாரதிராஜா கூறியிருப்பதாவது :


‘’நான் ரசித்த சிவாஜி சார், நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு வருவதற்குக் காரணமாக இருந்த சிவாஜி சார், அவரை நான் இயக்குகிறேன். அவர் எப்படி நடிக்கவேண்டும் என்று நான் சொல்லி நடிக்க வைத்தேன் என்பதையெல்லாம் நான் என் வாழ்நாளில் நடக்கும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

படத்தில், ஒருகாட்சி. சிவாஜி வயலில் வேலை செய்துகொண்டிருப்பார். அப்போது வயலுக்குள் புகுந்துகொண்டு ராதா பரிசலுடன் வருவார். அதில் ஆர்ட் டைரக்டர் சேகரும் நடித்தான். என் நல்ல நண்பன். திறமைசாலி. இப்போது அவன் இல்லை. ஹார்ட் அட்டாக்கால் இறந்துவிட்டான். அந்தக் காட்சியில் அவனும் நடித்திருந்தான்.

அப்படி வயலுக்குள் இறங்கி நடந்து வரும் போது, கிராமத்து ஸ்டைலில் ஒரு காட்டுக்கத்து கத்த வேண்டும் சிவாஜி சார். நகரத்திலேயே இருந்ததால், சிவாஜி சாருக்கு இப்படிக் கத்துவதெல்லாம் தெரியவில்லை. ‘நீ கத்திக் காட்டுடா’ என்றார். நான் ‘ஹோய்.. யாருடா அது?’ என்று கத்திக் காட்டினேன். அதேமாதிரி கத்திப் பேசினார். நடித்துமுடித்துவிட்டு, ‘டேய்... நீ கிராமத்துலேருந்து இப்பதான் வந்திருக்கே. நான் வந்து எத்தினியோ வருசமாச்சு’ என்றார் சிரித்துக் கொண்டே.

ஒரு கலைஞனாக, சிவாஜியுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. நல்ல மனிதர். நல்ல சாப்பாட்டுப் பிரியர். மத்தியான ஷூட்டிங்ல சாப்பிடமாட்டேன். சிவாஜி சார் சாப்பாட்டுப்பிரியர். நன்றாக ரசித்துச் சாப்பிடுவார். நான் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘டேய்... என்னடா சாப்பிடாம இருக்கே? உழைக்கறதே சாப்பிடுறதுக்குத்தாண்டா. உக்காருடா’ என்று சொல்லி என்னை சாப்பிடவைத்தார். மீன் எப்படிச் சாப்பிடவேண்டும், உணவை எப்படி எடுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார்.

AMP


’முதல் மரியாதை’ படத்தை 32 நாட்களில் எடுத்து முடித்தேன். சிவாஜி சார் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருணத்தில் இருந்தது. ராதாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் வேலை. சிவாஜி சார் ஒரு மகாகலைஞன் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்... ‘இன்னியோட உங்க காட்சிகள் முடிஞ்சுதுண்ணே. கிளம்பிடலாம்ணே’ என்று சொன்னேன். ‘ராசா...’ என்று அழைத்தார். அவரின் கண்கள் கலங்கியிருந்தன. ‘ராசா... இம்புட்டு நாள் இங்கேயே நடிச்சேனா. இருந்த இந்த இடத்தைவிட்டு போறதுக்கு மனசு வரமாட்டேங்கிதுடா. ஒவ்வொரு இடமும் எங்கிட்ட ஏதோ பேசுற மாதிரியே இருக்குடா’ என்று கண்கலங்கிவிட்டார். அதான் உண்மையான கலைஞன்.

அதேசமயம், காமெடியாவும் நடந்துப்பார் சிவாஜி சார். அதுவும் எப்படி? கண்கலங்கி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்த சிவாஜி சார்... ‘ராசா... என்னை இப்படி அனுப்பிச்சிட்டு, அப்புறம் ராதாவுக்கு நிறைய சீன் எடுத்து சேத்து வுட்றாதடா’ என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அப்படி நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அவர்’’.

படமெல்லாம் முடித்தாகிவிட்டது. அடுத்து டப்பிங் போவது என் வழக்கம். ஆனால் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு டப்பிங் பேசுவது சிவாஜி சாரின் வழக்கம். எங்களுக்குள் இதுசம்பந்தமாக வாக்குவாதம். நான் கொஞ்சம் சர்வாதிகாரி மாதிரி நடந்துகொள்வேன். என் நண்பன் சித்ரா லட்சுமணன், ‘சார் இது உங்க கம்பெனி படம். வீணா பிரச்சினை வேணாம்’ என்று சொல்ல, அடுத்து மனோராமாவுக்கு சொந்தமான தியேட்டரில், படத்தை ரஷ் போட்டுக் காட்டினேன். சிவாஜி சார், ராம்குமார், பிரபு, நான் எல்லோரும் படம் பார்த்தோம்.

இரண்டு ரீல் பார்த்தார். திருப்தி அவருக்கு. அடுத்து கரண்ட் கட்டாகிவிட்டது. இருபது நிமிடங்கள் காத்திருந்தார். பிறகு சிவாஜி சார், ‘டேய்... நான் சொன்னபடி ரெண்டு ரீல் பாத்துட்டேன். நானும் தோற்கலை. நீ சொன்னபடி முழுசா போட்டுக்காட்டலை. நீயும் தோற்கலைடா. டப்பிங் போயிடலாம்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.

பிறகு ஒருநாள் டப்பிங் முடிந்தது. ‘ஆஸ்கார் விருது கிடைத்தால் கூட இந்த திருப்தி வந்திருக்காது. அப்படியொரு படம் எடுத்திருக்கே. நீ எங்கே கேமிரா வைச்சே, ஏன் வைச்சே, எதனால அந்த ஷாட் வைச்சே... எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கே. உலகத்தரமான படத்தைக் கொடுத்திருக்கே’ என்று சிவாஜி சார் மனப்பூர்வமாகப் பாராட்டினார்’



'முதல் மரியாதை' வெளிப்புறப் படப்பிடிப்பில் நடிகை ராதா பிறந்த நாள் கொண்டாட, படத்தின் நாயகன் சிவாஜி கணேசன் அவருக்கு இனிப்பு வழங்கிட,  

அருகில் இயக்குநர் பாரதி ராஜா, சித்ரா லட்சுமணன், குள்ளமணி மற்றும் படப்பிடிப்புக் குழுவினர்


Wednesday, 19 August 2020

BHARATHIRAJA LEGEND




BHARATHIRAJA  LEGEND





``என் முதல் பட ஹீரோயின் ஶ்ரீதேவி இல்ல; ஜெயலலிதா...?!'' - இயக்குநர் பாரதிராஜா #VikatanOriginals
விகடன் டீம்
.
கே.அன்னசிங், சோமனூர்.

`` `என் இனிய தமிழ் மக்களே’னு பாசமாப் பேசுறீங்க. ஆனா, தமிழர்களின் கலாசார அடையாளமான வேட்டி, சட்டையைத் தவிர்த்துட்டு எப்பவும் ஜீன்ஸ், டி-ஷர்ட்லயே இருக்கிறீங்களே... ஏன் சார்?''

``அன்னசிங்...

நம்ம சொஸைட்டில பார்த்தீங்கன்னா எப்பவுமே பிரபலங்கள் பத்தி ஒரு இமேஜ் இருக்கும். தமிழ்நாட்டுல எந்தப் பிரபலத்தின் பேர் சொன்னாலும் டக்குனு நம்ம மனசுல வந்துபோறது அவங்க தோற்றம்தான்.

பெரியார்னா, வெள்ளைத் தாடி, கறுப்புச் சட்டை. எம்.ஜி.ஆர்னா, பஞ்சு போன்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி. கலைஞர்னா, தோள் துண்டு, கறுப்புக் கண்ணாடி. மேடம்னா, கோட்டு போல சேலை அணிந்த தோற்றம். அப்படித்தான் பாரதிராஜான்னு சொன்னா... ஜீன்ஸ், டி-ஷர்ட் ஞாபகம் வர்ற அளவுக்கு இமேஜ் உண்டாகிருச்சு. அதே சமயம், ஐ லைக் திஸ் காஸ்ட்யூம்! அதனால இமேஜைத் தொந்தரவு பண்ணாம விட்டுட்டேன்!''

அன்பு மாதவன், சென்னை-14.

``நீங்கள் பார்த்துப் பெருமைப்படும், பொறாமைப்படும் இயக்குநர் யார்?''

``1982-ம் வருஷம்னு நினைக்கிறேன்... ஓர் இளைஞன் என் ஆபீஸுக்கு வந்தார். வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் ரத்னத்தோட பையன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்ட அந்த இளைஞன், என்கிட்ட ஒரு கதை சொன்னார். நவீனமா, அதே சமயம் ரொம்ப க்ளாஸிக்கலா இருந்தது அந்தக் கதை. எக்ஸ்ட்ரார்டினரி ஸ்டோரி.ஆனா, நானே அப்போ வளரும் இயக்குநர்தான். அதனால அந்தப் படத்தை அப்போ நான் பண்ண முடியாதுனு சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிட்டேன்.

பின்னாடி அந்த இளைஞன் இயக்கிய `பகல் நிலவு’ படம் பார்த்து அசந்துபோனேன். யெஸ்... ஹி இஸ் மணிரத்னம். அவருடைய `மௌன ராகம்’, `நாயகன்’ படங்கள் அவர் மேல பெரிய மரியாதையை உண்டாக்குச்சு. நான் பெருமைப்படும் பொறாமைப்படும் ஒரே இயக்குநர் மணிரத்னம் மட்டும்தான். இந்திய அளவில் சிறந்த 10 இயக்குநர்கள்னு பட்டியல் போட்டால், அதில் மணிரத்னத்துக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தியாவில் இருக்கும் உலகத் தரப் படைப்பாளி மை லவ்வபிள் டைரக்டர் மணிரத்னம். அவருடைய `கடல்’ படத்தை எல்லாரும் பலவிதமாக விமர்சனம் செஞ்சாங்க. ஆனா, `கடல்’ படம் நான் முழுமையாக அங்கீகரிக்கும் படம்!''


எல்.தாமரை, காஞ்சிபுரம்.

``கண்ணதாசன் - வைரமுத்து... ஒப்பிடுங்க?''

``நான் சின்ன வயசுல இருந்தே வியந்து பார்த்த மகா கவிஞன் கண்ணதாசன். என் முதல் படமான `16 வயதினிலே’ படத்தில் `ஆட்டுக் குட்டி முட்டையிட்டு’னு இறவாப் புகழ்கொண்ட பாடல் கொடுத்தவர். தமிழ் சினிமாவின் மிகச் சுமாரான பல படங்களைக்கூடத் தன் பாடல் வரிகளால் வரலாற்றில் இடம் பிடிக்கவைத்த பிறவிக் கவிஞன்... கவியரசர்!

அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என் மண்ணின் மகாகவி வைரமுத்து. என்னுடைய மண் சார்ந்த படங்களுக்குத் தனது வைர வரிகளால் உயிரூட்டியவர் வைரமுத்து. நான் விதை போட்டேன்... இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறார் வைரமுத்து.

இரண்டு பேருமே தமிழ்த் தாயின் அற்புதமான தவப்புதல்வர்கள்!''

.

ராசி.அன்பழகன், சோளிங்கநல்லூர்.

``உங்கள் அம்மா கருத்தம்மா உங்களுக்கு எந்த அளவுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள்?''

``கருத்தம்மா இல்லைன்னா, இந்த பாரதிராஜா இல்லை. அரசாங்க வேலையை உதறிட்டு சென்னைக்குப் புறப்பட்டப்போ, என் எல்லா உறவுகளும் கறுப்புக் கொடி காட்டினாங்க. ஆனா, என் அம்மா மட்டும்தான் எனக்கு ஆதரவு தெரிவிச்சு பாசத்தோட அனுப்பிவெச்சா. என் சூட்கேஸ்ல மூணு பேன்ட், மூணு சட்டை போக எனக்குப் பிடிச்ச மூணு சிகரெட் பாக்கெட்களையும் வாங்கிவெச்சு என்னை வழி அனுப்பினா.

சென்னை வந்து சினிமாவில் வேர் பிடிச்சு நான் வளர்ந்த பிறகு, என் கூடவே வந்து தங்கிட்டா. சில வருடங்களுக்கு முன்னாடி அவ உடல்நிலை சரியில்லாம போனப்போ என்னைப் பக்கத்துல உக்கார வெச்சு, `ராசா... ராசா...’னு என் முகத்தை வருடிக் கொடுத்துட்டே இருந்தா அந்தப் பாசக்காரி. அப்போ திடீர்னு ஒருநாள் அவ சுயநினைவு இழந்துட்டா. அதுல இருந்து அவளை ஒரு குழந்தை கணக்கா நான் பார்த்துக்கிட்டேன். சாப்பாடு ஊட்டுறது, குளிப்பாட்டுறதுனு எல்லாமே நானே செஞ்சேன். மருந்து மாத்திரைகளோட நான் ஊட்டிய பாசம் வீண்போகலை. திடீர்னு ஒருநாள் சுயநினைவு வந்து பழைய பாசத்தோடு `ராசா...’னு கண் கலங்கக் கூப்பிட்டு என்னைக் கலங்க வெச்சா என் ஆத்தா. அப்புறம் ரெண்டு வருஷம் வரை உயிரோடு இருந்தா. இப்போ கருத்தம்மா இல்லாத உலகத்துல, இந்த பாரதிராஜா பாதி உயிரோடதான் நடமாடிட்டு இருக்கான்!''

பழ.குணசேகரன், தஞ்சாவூர்.

`` `தேவர் மகன்’ படம் பார்த்தப்போ, உங்களுக்கு என்ன தோணுச்சு?''

`` `தேவர் மகன்’... இட்ஸ் எ குட் மூவி. என் நண்பர் இயக்குநர் பரதன், ரொம்ப கலை அம்சத்தோட அந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

சிவாஜி கணேசன், கமல், ரேவதி எல்லோருமே ரொம்பச் சிறப்பா நடிச்சிருந்தாங்க. அந்தப் படத்தில் அருவா இருந்தது... மீசை இருந்தது. ஆனா, அந்த மக்களின் வாழ்க்கையோ, மொழியோ, கலாசாரமோ அந்தப் படத்தில் முறையா பதிவுசெய்யப்படலை. இதுதான் அந்தப் படத்தைப் பத்தின என் கருத்து!''


வி.பாரதி, காசர்காடு.

`` `16 வயதினிலே’, `முதல் மரியாதை’... இது இரண்டும்தான் நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்குப் பெருமை சேர்ப்பவைனு சொல்றேன் நான். ஒரு தேர்ந்த படைப்பாளி என்ற முறையில் இதை மறுத்துப் பாருங்களேன்?''

``ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பொறுத்தவரை அவரோட எல்லாப் படைப்புகளுமே சிறந்த படைப்புகள்தான். உங்கள் பார்வையில் அந்த இரண்டு படங்களும் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... அவ்வளவுதான். ஆனா, என்னைப் பொறுத்தவரை நீங்க சொன்ன அந்த இரண்டு படங்களுமே என்னோட முழுமையான படைப்பு இல்லை. இன்னொரு நிறைவான படைப்பில் எனது முழுத் திறமையையும் பயன்படுத்தி, நானே நடிச்சு, இயக்கி உங்கள் பார்வைக்கு வைப்பேன். அதுதான் எனக்கு முழு நிறைவு தரும் படமாக இருக்கும்!''

மு.இஸ்மாயில், ராஜபாளையம்.

``எம்.ஜி.ஆர் - கருணாநிதி - ஜெயலலிதா... மூவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

``அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய மூன்றாம் நாளே தன்னுடைய உடல் நலத்தையும் பார்க்காமல், என் புதுவீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு அதிகாலையிலேயே வந்து அசத்திய எம்.ஜி.ஆர்... நான் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய செய்தியை அறிந்து, `காக்கப்பட வேண்டிய கலைஞன்’ என்று என் மீது பாசம் வைத்து, என் வீட்டுக்கு அமைச்சர் ஒருவரை அனுப்பி மருத்துவ உதவி செய்த கலைஞர்... நான் எப்போது பேச விரும்பினாலும், தன்னுடைய பல்வேறு பணிகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இன்முகத்தோடு, கரிசனமாக அழைத்து விசாரிக்கும் ஜெ. மேடம்... இவங்க மூணு பேரைப் பத்தியும் பேசணும்னா, அதுக்கு விகடன் புத்தகம் மொத்தமுமே பத்தாதே!''

.
உ.ரமேஷ், சிவகங்கை.

``நீங்க நல்லவரா... கெட்டவரா?''

``ரியலி ஐ டோன்ட் நோ!

சில ஆசைகளை வெட்ட முடியலை. அதனால, கெட்டவனா இருக்கேன். சில ஆசைகளை வேண்டாம்னு உதறித் தள்ளியிருக்கேன்.

அப்போலாம் ஞானியாகி இருக்கேன். நல்லவனும் கெட்டவனுமாக் கலந்து நிக்கிறேன். முழு மனுஷனா மாற முயற்சி பண்ணிட்டே இருக்கேன். ஆனா, அப்படி முழு மனுஷனாகணும்னா, சினிமாவை விட்டு விலகணும். அது சத்தியமா சாத்தியம் இல்லை. ஐம் ஸாரி... என்னை மன்னிச்சுக்கங்க!''


எஸ்.ஜெனித் நிர்மல், முசிறி.

``ஒளிப்பதிவாளர் பி.கண்ணனுக்கும் உங்களுக்கும் எந்த அளவுக்கு அலைவரிசை பொருந்திப் போனது?''

``மை பார்ட்னர்!

என் லைஃப்ல மனைவி, குழந்தைகளோட நான் கழிச்ச நேரத்தைவிட, கண்ணனுடன் படப்பிடிப்பில் டிராவல் பண்ண நேரம்தான் அதிகம். என் சிந்தனையை அழகா ஸ்க்ரீனில் காட்டிருவான் கண்ணன். `அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்கு ஹீரோயின் தேடி கேரளாவுக்குப் போனேன்.

கிராமத்து வீட்டில் இருந்த ராதாவைப் பார்க்க நாங்க போய் நின்ன சமயம், கரன்ட் கட். ஒல்லியா, கறுப்பா கையில் சிமிழ் விளக்கோட இருட்டுல இருந்து வந்து நின்னாங்க ராதா. பார்த்துட்டு வெளியில் வந்து கண்ணன் முகம் பார்த்தேன். அது வீட்டுக்குள்ள இருந்த இருட்டைவிட இருளோனு இருந்தது. `சார்... அந்தப் பொண்ணு ஒல்லியா, கறுப்பா இருக்கு. நம்ம படத்துக்குச் சரிப்பட்டு வராது’னு சொன்னார். `இல்லை கண்ணன்... அந்தப் பொண்ணுதான் நம்ம பட ஹீரோயின். நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’னு சொன்னேன். அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசலை கண்ணன். ஆனா, நான் எதிர்பார்த்ததைவிட ராதாவை ஸ்க்ரீன்ல அழகாக் காமிச்சார். என் வேவ்லெங்த்தை கேட்ச் பண்றதுல கண்ணன் அந்த அளவுக்கு மாஸ்டர்!''

சு.சிதம்பரம், தம்பிக்கோட்டை.

``நீங்கள் அறிமுகப்படுத்தும் நாயகன், நாயகிகளுக்கு `ஆர்’ வரிசையில் பேர் வைப்பீங்க. ஆனா, யாருக்காச்சும் பட்டம் கொடுத்திருக்கீங்களா?''

``சென்னை நகரத்தில் உலாவி அதன் ஆன்மாவை ஆழமாகப் புரிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். சவுத் தமிழ்நாடு பக்கம் எட்டிக்கூடப் பார்த்திருக்க மாட்டார் அவர். ஆனா, அவரை `கிழக்குச் சீமையிலே’ படத்துக்கு மியூஸிக் பண்ணவெச்சேன். `சிட்டி சப்ஜெக்ட்டுக்கு ரஹ்மான் ஓ.கே. கிராமத்துக் கதைக்கு அவர் செட் ஆக மாட்டாரே? இந்த பாரதிராஜா வுக்கு என்னாச்சு?’னு அப்போ கோடம்பாக்கத்தில் முணுமுணுத்தாங்க. ஆனா, `கிழக்குச் சீமையிலே’ படப் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பின. பிறகு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு `இசைப் புயல்’னு பட்டம் கொடுத்தேன். அதே மாதிரி வடிவேலுவுக்கும் `வைகைப் புயல்’ பட்டம் நான் கொடுத்ததுதான். இதை எல்லாம் எந்த சபையிலும் நான் சொல்லிக்கிட்டது இல்லை. ஆனா, நீங்க கேள்வியாக் கேட்டதால சொன்னேன்!''

ச.இளமாறன், சிதம்பரம்.

``சினிமாக்காரர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ஆறு கோடித் தமிழர்களும் அலற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஆனால், ஆறு கோடி மக்களும் பாதிக்கப்படும் பிரச்னைகளை சினிமாக்காரர்கள் கண்டுகொள்வதே இல்லையே?''

``நான் பிறந்த மண்ணுக்கு அடிக்கடி விசேஷத்துல கலந்துக்கப் போயிட்டு வருவேன். அப்போலாம் விசேஷ வீட்டு வாசல்கள்ல பெரிய பெரிய கட்அவுட், ஃப்ளெக்ஸ் போர்டுகள்ல, யாராச்சும் சினிமா நடிகன் சிரிச்சுட்டு நிப்பான். எனக்கு ஆச்சர்யமா இருக்கும். `அட! கல்யாணப் பொண்ணுக்குத் தாய்மாமன் சினிமால நடிச்சுட்டு இருக்கான்போல... நமக்குத் தெரியாமப்போச்சே’னு நொந்துக்கு வேன். ஐ ஆஸ்க் யூ திஸ் இளமாறன்... உங்க அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி போட்டோஸ் போட்டு பேனர் வை. நான் கை தட்டுறேன். ஏன், நீ சினிமா நடிகனைக் கொண்டாடுற? அப்புறம் நீ திண்டாடுறப்ப, `அவன் எனக்கு எதுவும் பண்ணலை’னு குத்தம் சொல்லுற? என் இனிய தமிழ் மக்களே... சினிமாக்காரங்க தன் தொழில்ல தெளிவா இருப்பாங்க. வேலையில் சின்சியரா இருப்பாங்க. அதைத் தாண்டி அவங்ககிட்ட எதையும் எதிர்பார்க்கக் கூடாதுங்கிற உண்மையை, பாவப்பட்ட தமிழன் என்னைக்குப் புரிஞ்சுக்கிறானோ... அன்னைக்குத்தான் அவனுக்கு விடிவுக் காலம் பிறக்கும்!''

.

``பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் ரசவாதம் என்ன? அந்த மாய மந்திரத்தில் நாங்கள் மீண்டும் லயிக்க முடியுமா?''

``இந்த ஒரு கேள்வியை இன்னும் வெச்சுக்கிட்டு ஊர் ஊருக்கு, ஆளாளுக்குக் கொடி பிடிச்சுக் கோஷம் போட்டுக் கிளம்பிடுறீங்களேப்பா..!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு காம்பினேஷன் ஹிட் ஆகும். அதுதான் தமிழ் சினிமா மரபு. ஆரம்பத்துல ஸ்ரீதர் - கண்ணதாசன் - விஸ்வநாதன் காம்பினேஷன் ஹிட்! ஆனா, அதே ஸ்ரீதர் அப்புறம் இளையராஜா - வைரமுத்துவை வெச்சு `நினைவெல்லாம் நித்யா’ படப் பாடல்களை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கலையா? அந்த காம்பினேஷன் ஜெயிக்கலையா? `வேதம் புதிது’ படத்தில் தேவேந்திரனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் உங்களை ஈர்க்கவே இல்லையா?

நான் `கிழக்குச் சீமையிலே’னு ஏ.ஆர்.ரஹ்மானை வில்லேஜ் சப்ஜெக்ட்டுக்கு முதல்முறையா மியூஸிக் பண்ண வெச்சேன். அப்போ என்னைத் திட்டாதவங்களே இல்லை. ஆனா, அதுக்குப் பிறகு டவுன் சவுத்ல ஒவ்வொரு வீட்டு விசேஷத்துலயும் `மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே’ பாட்டுதானே அலறுது. `கருத்தம்மா’ படத்துல வந்த `போறாளே பொன்னுத்தாயி... பொலபொலவெனக் கண்ணீர்விட்டு’ உங்களுக்குள்ள எமோஷனைத் தூண்டலையா? ஆன்ஸர் ஆல் திஸ் கொஸ்டீன்ஸ்!

அண்ட் அஸ் எ ஃப்லிம் மேக்கர், நான் இளையராஜா இசையில் மகிழ்ந்திருக்கிறேன். தேவேந்திரன் இசையில் வியந்திருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நெகிழ்ந்திருக்கிறேன். இதோ இப்போ ஜி.வி.பிரகாஷ் இசையில் சிலிர்க்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் மாய மந்திரம் நடந்துக்கிட்டேதான் இருக்கு!''


சு.அருளாளன், ஆரணி.

``உங்கள் முதல் பட ஹீரோயினாக ஸ்ரீதேவியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?''

``என் முதல் பட ஹீரோயின் ஸ்ரீதேவின்னு யார் சொன்னா? தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா மேடம்தான், என் முதல் பட ஹீரோயின். என்ன... நம்ப முடியாத அதிர்ச்சியா இருக்கா? யெஸ்... இட்ஸ் எ மிராக்கிள்... பட் இட்ஸ் ட்ரூ!

`16 வயதினிலே’ படத்துக்கு முன்னாடியே கதாசிரியர் ஆர்.செல்வராஜோட சேர்ந்து `சொந்த வீடு’னு ஒரு ஃபென்டாஸ்டிக் கதை பண்ணோம். என் முதலாளி கே.ஆர்.ஜி. தானே தயாரிப்பாளராகப் படம் எடுக்க வந்தார். அந்தப் படம் பெண்ணுரிமை பத்திப் பேசுற சப்ஜெக்ட். `சொந்த வீடு’ படத்துக்கு ஹீரோவா முத்துராமனை ஒப்பந்தம் செய்தேன். ஹீரோயினா ஜெயலலிதாவை நடிக்கவைக்கலாம்னு ஐடியா. அதுக்காக நானும் செல்வராஜும் ஜெயலலிதா மேடத்தின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போனோம். ஒரு மணி நேரம் பொறுமையா உக்கார்ந்து நாங்க சொன்ன கதையை ரசிச்சுக் கேட்டாங்க ஜெயலலிதா. ஷி லைக்ட் அவர் ஸ்டோரி டெல்லிங்.

நாங்க கதை சொல்லி முடிச்சதும், `கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்கதான் டைரக்டரா?’னு என்னைப் பார்த்துக் கேட்டாங்க. நான் `ஆமாம்’னு சொன்னேன். சிரிச்சுக்கிட்டே `ஓ.கே’ சொல்லிட்டு 28 நாள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தாங்க. நான், செல்வராஜ், முத்துராமன், இசையமைப்பாளர் குமார் எல்லோரும் படப்பிடிப்புக்குப் போறதுக்குத் தயாராகிட்டோம். பட், அப்போ ஃபீல்டுல இருந்த ஒரு பெரிய டைரக்டர் சில்லியா பிஹேவ் பண்ணார். என்னைப் பத்தி ஜெயலலிதா மேடம்கிட்ட, `அவன் ஒரு சின்னப் பையன். ஷூட்டிங் ஸ்பாட்ல க்ளாப் போர்டு அடிக்கக்கூட லாயக்கில்லாத பையன். அவனை நம்பி ஷூட்டிங்குக்குப் போய் மாட்டிக்காதீங்க’னு தடுத்து நிறுத்திட்டார். அதனால `சொந்த வீடு’ படம் டிராப் ஆகிருச்சு. அதே கதையைத்தான் ரொம்ப வருஷம் கழிச்சு `புதுமைப் பெண்’ங்கிற பேர்ல ஏ.வி.எம். தயாரிச்சாங்க. ஜெயலலிதா மேடம் நடிக்க இருந்த `புதுமைப் பெண்’ கேரக்டர்ல ரேவதி நடிச்சிருந்தாங்க. ஸோ, நான் ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ண முதல் ஆர்ட்டிஸ்ட் ஜெயலலிதா. அப்புறம் இந்த மாதிரி எந்தப் பஞ்சாயத்தும் வரக் கூடாதுன்னுதான் `16 வயதினிலே’ படத்துல புதுப் பொண்ணா ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தினேன்!''

.

``சென்னையில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்த சின்னச்சாமியை இன்றைய இயக்குநர் இமயம் பாரதிராஜா எப்படிப் பார்க்கிறார்?''

``ஸ்வீட் மெமரீஸ்! சொந்த மண்ணில் 120 ரூபாய் சம்பளத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராகக் கம்பீரமாக வேலை பார்த்த சின்னச்சாமி, `பாரதிராஜா’வின் சினிமாக் கனவை நனவாக்குவதற்காக சென்னைக்கு வந்தான். வந்த இடத்தில் மாசம் 70 ரூபாய் சம்பளத்தில் பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச் சேர்ந்தான். அந்த சொற்ப சம்பளத்திலும் குருவிபோலச் சேர்த்து வைத்து சென்னையில் நாடகம் போட்டான். அத்தனை வறுமையிலும் துயரத்திலும் `பாரதிராஜா’வின் கலைத்தாகத்தை அணையவிடாமல் காப்பாற்றியதில் சின்னச்சாமிக்குப் பெரிய பங்கு உண்டு. பாரதிராஜாவின் கனவுகளுக்காக பெட்ரோல் பங்க் வேலை அலுப்பையும் பசி வேதனையையும் சின்னச்சாமி தாங்கிக்கொண்டான். இந்த இயக்குநர் பாரதிராஜாவை அந்த சின்னச்சாமிதான் வார்த்து எடுத்தான்... வளர்த்து எடுத்தான். இப்போதும் என் ஒரே உற்ற நண்பன் நான்தான்!''

ஆர்.ஜெயந்தி, திருக்குவளை.

``உங்கள் ஆங்கில மோகம் எப்போது தொடங்கியது? ஆங்கிலம் கற்றுக்கொள்ள நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?''

``முயற்சி இல்லை... வலி!

பள்ளிக்கூடத்துல Book, Cow - இந்த ரெண்டு இங்கிலீஷ் வார்த்தையை மனப்பாடம் பண்ண எனக்கு மூணு நாள் ஆகும். அப்படியும் சரியா சொல்லாம வாத்தியார்கிட்ட பிரம்படி வாங்கியிருக்கேன். ஹி வில் பீட் மீ அப்ஹார்ஷ்லி. என்ன செய்றது... நாங்க பிறந்த கிராமம் அப்படி. எங்களுக்கு வாய்ச்ச வாத்தியாருங்க அப்படி. அப்போ ரெண்டு இங்கிலீஷ் வார்த்தை பேசத் தெரியாம அடி வாங்கிய பாரதிராஜாவை விதி எங்கே போய் நிறுத்துச்சு தெரியுமா? அமெரிக்காவில்! இட்ஸ் டெஸ்டினி. உலக மொழியாம் திரை மொழியில் ஒரு படைப்பாளியாக பாரதிராஜா பணிபுரிய வேண்டிய சூழ்நிலை. தொழில் சார்ந்த நிர்பந்தத்தில் நண்பர்கள்கிட்ட பேசுறப்போ, கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கத்துக்கிட்டேன். ஐ லேர்ண்டு இட். தமிழ் மொழியும் தமிழ் மக்களும் எனக்குக் கொடுத்த அங்கீகாரம் அமெரிக்காவுக்கு என்னை அழைச்சுட்டுப் போனது. அமெரிக்க அரசாங்கம் சிறந்த ஓவியன், சிறந்த அரசியல்வாதி, சிறந்த திரைக்கலைஞர்னு இந்திய அளவில் ஏழு பேரைத் தேர்வுசெய்து, சிறப்பு விருந்தாளியாக அழைத்தது. என்னையும் இந்தியாவின் சிறந்த திரைக்கலைஞனாக அழைத்துச் சென்று நியூயார்க், நியூஜெர்சி போன்ற இடங்களில் பேசவைத்தார்கள். அப்போ எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என் சினிமா பற்றிப் பேசினேன். பட் தே அண்டர்ஸ்டுட் திஸ் க்ரியேட்டர்ஸ் வாய்ஸ். கைதட்டினாங்க. `முதல் மரியாதை’ படத்துக்குப் பிறகு நடந்த முக்கியமான சம்பவம் இது!''

சி.ஆர்,ரகு, தஞ்சாவூர்.

`` `16 வயதினிலே’ படத்தை ரீமேக் செய்தால், இன்றைய ஹீரோ, ஹீரோயின்களில் யார் உங்கள் சாய்ஸ்?''

``ஐ ஹேட் ரீமேக் ஃப்லிம்ஸ்! ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை ரீமேக் பண்றதுல எனக்கு எப்பவுமே உடன்பாடு இல்லை. என் மகன் மனோஜ், என் மனைவி வயித்துல கருவா இருந்தான், பிறந்தான், வளர்ந்தான். இப்போ அவனைத் திரும்பவும் என் மனைவி வயித்துக்குள்ள திணிக்க முடியுமா?

அப்படித்தான் நான் ஏற்கெனவே எடுத்த ஒரு படத்தை ரீமேக் பண்றதோ, படத்தின் ஹிட் பாடல்களை ரீமேக் பண்றதோ... ஐ நெவர் லைக். பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயிலை இடிச்சுட்டு, கலையழகு மிளிரும் தாஜ்மஹாலை இடிச்சுட்டு, மறுபடி அதே இடத்தில், அதே மாதிரி கட்டுறோம்னு சொன்னா, நீங்க அனுமதி கொடுப்பீங்களா? கேன் யூ ஃபீல் எ க்ரியேட்டர்ஸ் பெய்ன்?''

தா.சூரியா, வேதாரண்யம்.

`` `முதல் மரியாதை’யில் நடிகர் திலகம் சிவாஜியை இயக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

``ஐ'ம் நாட் ஹீரோஸ் டைரக்டர். பொதுவா, எந்த ஹீரோவையும் மனசுலவெச்சு நான் கதை, திரைக்கதை எழுத மாட்டேன். ஆனா, நானும் செல்வராஜும் `முதல் மரியாதை’ கதை எழுதி முடிச்சப்போ, என் மனசுல கம்பீரமா வந்தது சிவாஜிதான்.

`முதல் மரியாதை’ படம் சம்பந்தமாப் பேச சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். `அண்ணே... உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது, மேக்கப் கிடையாது. நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்கக்கூட வேணாம்... நான் சொல்றபடி இங்கிட்டும் அங்கிட்டும் நடங்க, உட்காருங்க, எந்திரிங்க, நான் சொல்ற டயலாக் மட்டும் பேசுங்க... அது போதும்’னு சொன்ன என்னைக் குறுகுறுனு பார்த்தார். ஆனா, எதுவும் சொல்லலை.

படப்பிடிப்புக்கு வந்தார். நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு வெவ்வேறு ஆங்கிளில் அவரை நிக்கவெச்சு, நடக்கவெச்சு... ஷூட் பண்ணிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துக்கு அப்புறம், `ஏண்டா பாரதி... என்னடா படம் பிடிக்கிறே? உன்கிட்ட கேட்கவும் வெட்கமா இருக்குடா’னு கேட்டார். `அண்ணே... கடைசியாக் காமிக்கிறேண்ணே’னு மட்டும் சொல்லிட்டேன். ஒருநாள், `டேய்... நீ ஒரு தடவை நடிச்சுக் காட்டு’னு என்னைக் கேட்டார். நான் நடிச்சதைப் பார்த்துட்டு ராதாகிட்ட, `இவன் நடிக்கிறதுல பத்து பெர்சன்ட் நடிச்சாக்கூடப் போதும்...ஜெயிச்சுரலாம்டி பொண்ணே’னு அவர் சொன்னப்போ, நான் சிலிர்த்துட்டேன். `அண்ணே, நான் மதுரைல இருந்து சென்னைக்குக் கிளம்பும்போதே, சினிமாவுல நடிச்சு சிவாஜியைக் கவிழ்க்கணும்னுதான் வந்தேன்’னு நைஸா சொன்னேன். அதைக் கேட்டு `ஹேய்...ஹேய்’னு வாய்விட்டுச் சிரிச்சவர், `ஏண்டா... உங்க ஊர்ல முகம் பாக்குற கண்ணாடியே இல்லையாடா?’னு கேட்டு என்னைக் கலாட்டா பண்ணிட்டார்.

ப்ரிவியூ-ஷோல படம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வந்த பிறகும் சிவாஜி மட்டும் அப்படியே சீட்ல உக்காந்தே இருந்தார். நான் மெள்ள அவர் பக்கத்துல போய் நின்னேன். என் பக்கம் திரும்பிப் பார்த்தார். அவர் முகம் அப்படியே நெக்குருகி இருந்தது. ஹி வாஸ் வெரி எமோஷனல்... `ஏண்டா காட்டுப் பயலே... எப்படிடா இப்படிப் படம் எடுத்த?

இப்பத்தாண்டா தெரியுது... ஷூட்டிங்ல நீ என்னை அங்கே, இங்கே அடிக்கடி திரும்பச் சொன்ன சூட்சுமம் புரியுது. இது சாதாரணப் படம் இல்லடா... இன்டர்நேஷனல் கிளாஸிக்டா’னு அப்படியே என்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.

சிவாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தப்போ, நான்தான் திரையுலகைக் கூட்டி, அண்ணா சாலை டிராஃபிக்கையே திருப்பிவிடுற அளவுக்குப் பிரமாண்டமா விழா நடத்தினேன். விழாவுக்கு அந்த சமயம் முதல்வரா இருந்த எம்.ஜி.ஆரை அழைச்சுட்டு வந்தேன். அவர் கையால் சிவாஜிக்குத் தங்கக் காப்பு அணியவெச்சோம். அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை!''


வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.

``தங்களது முதல் படைப்பான `16 வயதினிலே’ படத்துக்கு ஆனந்த விகடன் விமர்சனக் குழு 62.5 மதிப்பெண்கள் வழங்கியது. அந்த மதிப்பெண்ணை அதன் பிறகு எந்த இயக்குநரும் தொடவோ, தாண்டவோ இல்லை. ஏன், நீங்களே கூடத் தாண்டவில்லை. அதை நினைத்துப் பெருமிதம் அடைகிறீர்களா அல்லது வருத்தப்படுகிறீர்களா?''

``தமிழ் சினிமாவில் என்னைவிட ஆழமான, அம்சமான, கருத்தான சினிமாக்களைத் தந்த பல இயக்குநர்கள் இருக்காங்க. ஆனா, பாமரனுக்கு எட்டாத கனவுபோல, உலகத்தின் பரம ரகசியம்போல ஸ்டுடியோவுக்குள் முடங்கிக் கிடந்த சினிமாவை, முதன்முதல்ல என் கிராமத்துக்கு அழைச்சுட்டுப் போனேன். அந்த தைரியத்துக்காகவும் படைப்பாற்றலுக்காகவும்தான் அவ்வளவு மதிப்பெண் கொடுத்துக் கௌரவிச்சது விகடன்.

இப்போ சில பசங்க பம்பரமா சுத்திப் படம் எடுக்கிறாங்க. 62.5 ரெக்கார்டை அவங்க பிரேக் பண்ணுவாங்கனு எதிர்பாக்கிறேன். ஆனா, அப்படி யாராச்சும் தாண்டிட்டா, நிச்சயம் நான் அதைத் தாண்டிக்காட்டுவேன். யெஸ்... ஐ வில் ரிப்பீட்... நிச்சயம் நான் அதைத் தாண்டுவேன்!''

.

``உங்களைக் குருநாதர்னு கொண்டாட சினிமாவில் ஒரு பட்டாளமே இருக்கு. ஆனா, உங்க குருநாதர் பத்திப் பெருசா தகவல் எதுவும் கேள்விப்பட்டதில்லையே..?''

``குருநாதர்னு யாரைச் சொல்வீங்க? எனக்குப் பேசக் கத்துக்கொடுத்தது என் ஆத்தா. நடக்கக் கத்துக்கொடுத்தது என் அப்பன். `அ’னா... `ஆ’வன்னா கத்துக்கொடுத்த நாடார் சரஸ்வதி பள்ளிக்கூட டீச்சர் பேர்கூட எனக்கு மறந்துபோச்சு. பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுத்த வெங்கட சுப்புராவ், தமிழையும் நாடகத்தையும் கத்துக்கொடுத்த ராமலிங்கம் வாத்தியார்... இப்படிப் பலபேர்கிட்ட பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

தொழில் நிமித்தமா மிகப் பெரும் இயக்குநர்களான புட்டண்ணா கனகல், மலையாளத்தில் கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி, சங்கர அய்யர்... இவங்க ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றவன் நான். மதுரை மண்ணின் மக்களிடமிருந்து கதையைக் கத்துட்டு இருக்கேன். இதுல யார்னு ஒருத்தரை மட்டும் என் குருநாதரா குறிப்பிட்டுச் சொல்ல முடியும்? எனக்குத் தனியா `குரு’னு யாரும் கிடையாது. அடமா யாரையாவது சொல்லுங்கனு கேட்டா, இந்த இயக்குநர் பாரதி ராஜாவின் குருவா, அந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமியைச் சொல்லலாம்!''

திருநாவுக்கரசு, தேனி.

``உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்பி எம்.ஜி.ஆர்., கதை கேட்டாராமே?''

``இட்ஸ் ஷாக்கிங்ல... யெஸ் ட்ரூ! எம்.ஜி.ஆர். முதல்வரா இருந்தப்போ ஒருமுறை ராமாவரம் தோட்டத்துக்கு என்னை அழைச்சார். ரொம்ப நேரம் சினிமாவைப் பத்தியே பேசிட்டு இருந்தவர், திடீர்னு என்னை அதிர்ச்சி அடைய வைக்கும் அந்தச் செய்தியைச் சொன்னார்... `பாரதி... நாம கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நாவலை சினிமாவா எடுக்கணும். அதில் நான் பொன்னியின் செல்வனா நடிக்கணும்கிறது என் நீண்ட நாள் கனவு. ஆனா, இப்போ எனக்கு இருக்கிற வேலையில தூங்கக்கூட நேரம் ஒதுக்க முடியலை. `எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’ படம் தயாரிச்சு ரொம்ப வருஷமாச்சு. என் பேனருக்காக `பொன்னியின் செல்வன்’ படத்தை நீ டைரக்ஷன் பண்றியா? என்னால் நடிக்க முடியாது. கமல்ஹாசன் பொன்னியின் செல்வனாவும், ஸ்ரீதேவி குந்தவை நாச்சியாராவும் நடிச்சா நல்லா இருக்கும். என்ன... டைரக்ஷன் பண்றியா?’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். அப்படி ஒரு வாய்ப்பை மறுக்க முடியுமா? நானும் சரி சொல்லிட்டேன். ஆனா, அதன் பிறகு அந்த புராஜெக்ட் பத்தி ஒரு வார்த்தைகூட ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை. எப்படியோ... எங்கேயோ மிஸ் ஆகிருச்சு!''

.

``உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''

``விமர்சிக்கப்படும் வரைதான் நான் உயிரோடு இருக்கேன்னு அர்த்தம். என் மீதான விமர்சனங்கள் நின்னுட்டா, நான் இறந்துட்டேன்னு நினைச்சிக்கோங்க!''

.

Monday, 16 July 2018

BHARATHIRAJA ,TAMIL DIRECTOR BORN 1941 JULY 17





BHARATHIRAJA ,TAMIL DIRECTOR 
BORN 1941 JULY 17





பாரதிராஜா (Bharathiraja, பிறப்பு: சூலை 17, 1941), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்


பாரதிராஜா அல்லிநகரத்தில் பிறந்தது 1941-ல் பெரிய சம்சாரிக் குடும்பம். அக்கா இரண்டு பேர், அண்ணன்கள் இருவர், ஒரு தம்பி, ஒரு தங்கை எனப் பெரிய குடும்பம். பெரிய மாயத்தேவர் – கருத்தம்மாவின் ஜந்தாவது வாரிசு!

· சினிமாவுக்கு வருவதற்கு முன் `ஊர் சிரிக்கிறது’ `அதிகாரம்’ `சும்மா ஒரு கதை’ என நாடகங்கள் எழுதி திருவிழா காலங்களில் இயக்கி நடித்திருக்கிறார். பிறகு தான், புட்டண்ணா கனகலிடம் சினிமா கற்றார்!

· சென்னையில் ஆரம்பத்தில் சேர்ந்து தங்கியிருந்த நண்பர்கள் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ், கச்சேரித் தெருவில் சிறு வீட்டில் இருந்து இவர்களின் பயணம் தொடங்கியது. இப்பவும் கூடிப் பேசினால் அவர்களின் அனுபவங்கள் மேலே விரிந்து பரவும்!

· இது வரை தமிழில் 31 படங்களும், தெலுங்கில் நான்கு படங்களும், இந்தியில் நான்கு படங்களும் இயக்கியிருக்கிறார் பாரதிராஜா!

· பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்கள், பாக்யராஜ், ராதிகா, விஜயன், நிழல்கள் ரவி, கார்த்திக் ராதா, ரேவதி,பாபு, நெப்போலியன், ரஞ்சிதா என நீங்களும். அவரது உதவியாளர்கள் சினிமாவில் ஆதிக்கம் செய்த வரலாறும் அதிகம்!

· சுடச்சுட சமைத்த நாட்டுக் கோழிக் குழம்புக்கு பாரதிராஜா அடிமை. நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை விருந்துக்கு அழைத்து உண்டு, பேசிச் சிரித்து மகிழ்வார்!


· பாரதிராஜாவின் படைப்புலக வெற்றிக்கு தேசிய விருது, தமிழக அரசு விருது, ஆந்திர அரசு விருது, பத்மஸ்ரீ, கலைமாமணி, டாக்டர் பட்டம் என ஏராளமாகப் பெற்றிருக்கிறார்!

· பாரதிராஜாவுக்கு அப்போது பிடித்த நடிகர் சிவாஜி, இப்போது ஆல் டைம் ஃபேவரைட் கமல் தான். இன்றைக்கும் வெளியிட்டால் பரபரப்பாக ஓடுகிற படமாக `16 வயதினிலே’ தான் இருக்கிறது!

· மனைவி சந்திரலீலா, மாமன் மகள்தான், மனோஜ் கே.பாரதி, ஜனனி ஜ்ஸ்வர்யா என இரண்டு குழந்தைகள். ஜனனி திருமணமாகி சிங்கப்பூர் போய் விட மனோஜ் டைரக்டராகும் தீவிரத்தில் இருக்கிறார்!

· பாரதிராஜாவின் படங்களில் அவருக்கே பிடித்தது `16 வயதினிலே’, `முதல் மரியாதை’, `வேதம் புதிது’, ஆத்ம திருப்தியாகப் பிடித்தது `காதல் ஓவியம்’, இனி எடுக்க இருக்கிற `அப்பனும் ஆத்தாளும்’ தான் உலக சினிமாவில் வைக்க வேண்டிய படம் என நம்புகிறார் இயக்குநர்!

· பாரதிராஜாவின் படங்களில் வெள்ளை உடை தரித்த பெண், சூர்யாகாந்திப் பூ, மலை அருவி, செம்மண், மாட்டு வண்டி, ஒற்றைப் பள்ளிக்கூடம், அதில் ஒற்றை வாத்தியார் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்!

· புலிகள் தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த இயக்குநர் பாரதிராஜா, ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை பாரதிராஜாவால் எடுக்க முடியும் என்று நம்பினார் பிரபாகரன். அதை இயக்குநரிடம் கேட்கவும் செய்தார். பாரதிராஜாவும் சம்மதம் சொன்னது வரலாறு!

· எப்பவும் விரும்புகிற டிரெஸ் டி-ஷாட், ஜீன்ஸ் பேண்ட் சமீப காலமாக வெள்ளை ஜிப்பா, பேண்டைத் தேர்ந்தெடுக்கிறார்!

· ரஷ்யா , அமெரிக்கா போன்ற நாடுகளின் அழைப்பின் பேரில் அங்கு சினிமாபற்றி வகுப்பு எடுத்து உரையாடி வந்திருக்கிறார் அல்லிநகரம் பாரதிராஜா!

· `குற்றப் பரம்பரை’, `அப்பனும் ஆத்தாளும்’ என இரு படங்களின் திரைக்கதையை வடிவமைக்கிற வேலையில் தீவிரமாக இருக்கிறார். அநேகமாக அவரே பெரிய கேரக்டரில் நடித்துவிடுவார் எனப் பேசிக் கொள்கிறார்கள்!

· அதிகம் வெளியில் தெரியாத விஷயம், சிறப்பாக ஓவியம் வரைவார். அதை நெருக்கமான நண்பர்களிடம் காட்டி மகிழ்வார். காட்சி அமைப்புகளை வரைந்து வைத்துக்கொள்கிற அளவுக்கு அவரது ஓவியம் நுட்பமானது!

· 1991 –ல் சிக்ரெட் புகைப்பதை நிறுத்தினார் பாரதிராஜா. நுரையீரல் பாதிக்கப்பட்டு. சிறு ஆபரேஷன் வரைக்கும் போனதுதான் அதற்குக் காரணம். இப்போது புகை இல்லாத உலகம் அவருடையது!

· மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டீலும் அதைப் பெற்றுக் கொண்டு, ஒப்புதல்பெற்று கடிதம் எழுதினார்!

· 1986 –ல் தாஷ்கண்ட் படவிழாவில் `முதல் மரியாதை’ திரைப்படத்தை திரையிட்டார்கள். சப்டைட்டில் போட்டும் அந்தப் படத்தைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள் மக்கள். விழாவுக்குப் போயிருந்த ராஜ்கபூர், ரஷ்ய மொழியில் முழுக்க முழுக்க ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். பாராட்டினர் மக்கள். கண்கள் நனைந்தது பாரதிராஜாவுக்கு!

· கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ., என மூன்று முதல்வர்களிடமும் நெருங்கிய பழகியவர்.

எம்.ஜி.ஆர் அன்புடன் அழைப்பது `வாங்க டைரக்டரே’, கலைஞர் `என்னப்பா பாரதி’
ஜெ.... `மிஸ்டர் பாரதிராஜா’,

அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருக்கமாக இருந்தார் பாரதிராஜா!

· `16 வயதினிலே’ வில் ஆரம்பித்து `புதிய வார்ப்புக்கள்’ வரை பார்த்துவிட்டு எல்.வி.பிரசாத் தன்னை உதவி இயக்குநராக சேர்த்துகொள்ள முடியுமா என்று கேட்டதைத் தனது உச்சபட்ச கெளரவமாக எடுத்துக்கொள்வதாகச் சொல்வார் பாரதிராஜா!

· பாரதிராஜாவைப் பாதித்த இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பிடித்த இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், அகத்தியன், சேரன், பாலா, அமீர், பாலாஜி, சக்திவேல், வசந்தபாலன், வடக்கில் சாந்தாராமின் படைப்புக்கள்!

· தன் அம்மாவின் பெயரில் எடுத்த `கருத்தம்மா’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரை யே விருது வாங்கச் செய்தார் பாரதிராஜா. அந்தத் தாய் பெருமிதப்பட்டு மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்டது அருமையான நிகழ்வு!

· நினைத்தால் தேனிக்குப் போய் அம்மா சமாதியில் உட்கார்ந்து தியானத்தில் இறங்கிவிடுவார் பாரதிராஜா. `அம்மா என்னை சின்ன வயதில் குளிக்கவெச்சு சாப்பா ட்டு ஊட்டிவிட்டது அதையே அம்மா படுக்கையிலே கிடந்தபோது... நான் செய்து பெற்ற கடனை நிறைவே ற்றி னேன்’ என நெகிழ்வார் பாரதிராஜா!

Wednesday, 26 July 2017

K.BHAGYARAJ , UNIQUE STORY TELLER



K.BHAGYARAJ , UNIQUE STORY TELLER


திரைக்கதைத் திலகம்’என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ். கடந்த வாரம் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ பத்தியைப் படித்திருக்கிறார். கையோடு தொலைபேசியில் என்னை அழைத்தார் ‘ கைதியின் டைரி’ படத்துக்கான கதை உருவான பின்னணியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். உடனே நேரில் சந்தித்தேன். விவரிக்க ஆரம்பித்தார். விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒரு பர்சனல் டயரியைப் படிப்பதுபோன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது அவர் விவரித்த விதம். இனி எல்லாம் அவர் சொன்னதே...
மும்பையில் சந்தித்தேன்
“வாழ்க்கையில் சுகமும் துக்கமும் மாறி மாறி வரும் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்றாகவே வந்தது. ‘முந்தானை முடிச்சு’அபார வெற்றி பெற்று, எனக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அதேநேரத்தில் என் மனைவி பிரவீணா என்னை விட்டுப் பிரிந்தாள். சென்னையில் இருந்தால் அவளது ஞாபகமே வந்து என்னைச் சோகத்தில் மூழ்கடிக்கிறது என்று கோவா சென்றேன். அங்கேயும் அதே நிலை. பிறகு மும்பை சென்றேன். அங்கே சீராக் ஹோட்டலில் தங்கினேன். ஹோட்டலில் வேலை செய்துவந்த தமிழ் ஊழியர் ஒருவர் என்னிடம் வந்து “உங்கள் டைரக்டர் இங்குதான் தங்கியிருக்கிறார்” என்று கூறினார். 

அவர் சன்னி தியோலை இயக்கவிருக்கும் இந்திப் பட வேலைக்காக வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். அவரது வேலையில் குறுக்கிடாத வண்ணம் இரவு ஒரு மணிக்கு அவர் அறைக்குச் சென்று கதவைத் தட்டினேன். அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவர் முகத்தில் கவலை தெரிந்தது.

கைவிடப்பட்ட ‘டாப் டக்கர்’
நலம் விசாரித்தபடி பேச்சுக்கொடுத்தேன். கமலை வைத்து ‘டாப் டாக்கர்’ என்ற படத்தை சுமார் 5 ஆயிரம் அடி எடுத்த பின் நிறுத்திவிட்டதாகக் கூறினார். ஏன் என்றபோது, “அந்தக் கதை சிவப்பு ரோஜாக்கள் போலவே உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. எனவே அதை நிறுத்திவிட்டு , வேறு கதை எடுப்போம் என்று நானும் கமலும் முடிவெடுத்துவிட்டோம்” என்றார். பிறகு அவரே தொடர்ந்தார். 

“கிழக்கே போகும் ரயிலை இந்தியில் சன்னி தியோலை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தேன். ஒப்பந்தம் செய்தபோது சன்னி பெரிய ஹீரோ அல்ல, இப்போது கமர்ஷியல் ஹீரோவாக மாறிவிட்டார். கழுதைமேல் அவரை உட்காரவைத்து ஊர்வலம் விடுவது போன்ற காட்சிகள் இருப்பதால் சன்னி தியோலின் அப்பா தர்மேந்திரா இந்தக் கதையை வேண்டாம் என்று கூறிவிட்டார். இரண்டு படங்களிலுமே முட்டுக்கட்டை” என்றார்.
லட்சுமி வந்துவிட்டாள்
கண் முன்னால் குருநாதர் கவலையுடன் பேசுவதை எந்த மாணவன்தான் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பான். நான் சென்னை திரும்பியதும் ‘டாப் டக்கர்’ கதையில் ஏதாவது பண்ண முடியுமா என்று பார்க்கிறேன் என்று அவரிடம் கூறினேன். “நீ இப்போது உதவி இயக்குநர் கிடையாது. பெரிய ஹீரோ, பிரபலமான இயக்குநர்” என்றார். “ நான் என்றும் உங்கள் மாணவன்” என்றேன்.
சென்னை திரும்பியதும் அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் “ லட்சுமி வந்துவிட்டாள்” என்று கூறி வரவேற்று அழைத்துப்போய் கதை சொன்னார். ‘டாப் டக்கர்’ இன்னொரு ‘சிகப்பு ரோஜாக்கள்’ போலத்தான் இருந்தது. எழுத்தாளர் பாக்யராஜுக்கு சென்னை அடையாறு பார்க் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறை போடப்பட்டது. இதுநாள் வரை நடிகர் பாக்கியராஜுக்கு ஏற்ற கதையை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த நான், அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து சிந்தித்தேன்.
அன்றிரவு 2 மணிக்கு ஒரு பொறி தட்டியது. மறுநாள் காலை, பாரதிராஜா சாருக்கு போன் செய்து உடனே வருமாறு கூறினேன். “அதற்குள்ளேயா?” என்று ஆச்சரியப் பட்டார். கதையின் அவுட்லைனைக் கூறினேன். அந்த நிமிடமே கமலிடம் தொடர்புகொண்டார். அவுட்லைன் சொல்ல வேண்டும் என்றார். அதற்குக் கமல், “நேற்று நீங்கள் பாக்கியராஜை சந்தித்தும் கதையை விவாதித்ததும் என் காதுக்கு வந்துவிட்டது. இப்போது கதையைச் சொல்ல வேண்டியதில்லை. படப்பிடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் சொன்னால் போதும்” என்று கூறிவிட்டார்.
ஒரு கைதியின் டைரி

முழுத் திரைக்கதை உருவானதும் அதை குருநாதரிடம் கொடுத்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். அதுதான் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம். படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவந்தது. இதற்கிடையில் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவுக்கு ஒரு இந்திப் படம் எடுத்துக்கொடுப்பதாக நான் வாக்களித்திருந்தேன். இப்போது ‘ஒரு கைதியின் டைரி’ இந்திப் பதிப்பை நான் இயக்க விரும்புகிறேன்.அதில் அமிதாப் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன். அவர் அமிதாப்பிடம் பேசி, கதை கேட்க ஏற்பாடு செய்தார். அமிதாப் சென்னை வந்தார். மொத்தக் கதையையும் நடித்தே காண்பித்துவிட்டேன். உடனே ஒப்புக்கொண்டார். நான் தயாரிப்பாளர், ஹீரோ இருவரிடமும் ஒரு நிபந்தனையை வைத்தேன். “என் கதையைத்தான் எடுப்பேன். எனது குருநாதர் பாரதிராஜா மாற்றங்களுடன் எடுத்துவரும் படத்தை நான் மறுஆக்கம் செய்ய மாட்டேன்” என்றேன். இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
க்ளைமாக்ஸ்
இரண்டு கதைகளுக்கும் முக்கியமான சில வேறுபாடுகள் இருக்கின்றன. கல்லறையில் தந்தையும் மகனும் சந்திக்கும் காட்சி என் கதையின் முக்கிய கட்டம். அது இந்தியில் இருந்தது, தமிழில் இல்லை. அதேபோல் க்ளைமாக்ஸ். தமிழில் கதாநாயகன் சிவாஜி சிலைபோல் அசையாமல் நின்று வில்லன் நெருங்கியதும் பழி வாங்குவார். அது என் குருநாதர் செய்த மாற்றம்.
நான் எனது க்ளைமாக்ஸை இந்தியில் வைத்தேன். ஆனால் தமிழ்ப் பதிப்பின் க்ளைமாக்ஸையே இந்தியிலும் எடுக்க வேண்டும் என்று அமிதாப், தயாரிப்பாளர், கேமராமேன், சண்டைப் பயிற்சி இயக்குநரான வீரூ தேவ்கன் (அஜய் தேவ்கனின் அப்பா) என அனைவரும் ஆசைப்பட்டனர். எனது க்ளைமாக்ஸை எடுத்துப் போட்டுப்பார்ப்போம், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தமிழ்ப் பட க்ளைமாக்ஸை எடுத்துத் தருகிறேன் என்று கூறினேன்.
அனைவரும் ஒப்புக்கொண்டு முழுமனதுடன் ஒத்துழைப்பு தந்தார்கள். படம் தயாரானதும் போட்டுப் பார்த்தோம். அனைவருக்கும் எனது க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது. அந்தப் படம்தான் அமிதாப்புக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘ஆக்ரி ராஸ்தா’.
ஒரு சின்ன ப்ளாஷ் பேக்
அமிதாப் தன் மனைவியின் கல்லறையில் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் என் ரசிகர்களுக்குப் புரியாது என்று மறுத்தார். நீங்கள் ஆங்கிலத்தில் புலமை அடைந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் மனைவியிடம் சொல்வதுபோல காட்சியை அமைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் இந்தக் காட்சிக்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்றேன். கொஞ்சம் தயங்கியவாறு அரைமனதுடன் ஒப்புக்கொண்டவர் அந்தக் காட்சிக்கான வசனத்தையும் அவரே எழுதி அற்புதமாக நடித்துக்கொடுத்தார்.

படம் வெளியான அன்று இரவு ஒரு மணிக்கு அமிதாப் போனில் பேசினார். “நீங்கள் சரி, நான் தவறு. ஆங்கிலத்தில் நான் பேசிய காட்சிக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு” என்றார். “என் மனைவி, இது உங்கள் படமல்ல. இயக்குநர் பாக்கியராஜின் படம் என்று கூறினாள்” என்றார்.
பிறகு இந்திப் படத்தைப் பார்த்த எனது குருநாதர் பாரதிராஜா “என்ன மாயம் செய்தாய்? நீ எடுத்த இரண்டு காட்சிகளையும் க்ளைமாக்ஸையும்தானே நான் எடுக்கவில்லை. என் படம் ஆக்‌ஷன் படமாக அமைந்தது. உன் படமோ எமோஷனல் மூவியாக இருக்கிறதே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். “ சார் உங்களது நாயகன் இளைஞர், உங்கள் கதையை அந்த இளைஞர் மீது எடுத்துச் சென்றீர்கள். என் நாயகனோ நடுத்தர வயதுக்காரர். எனவே நான் சிறைக் கைதி மீது கதையை எடுத்துச் சென்றேன். இதுதான் வித்தியாசம் என்றேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்திப் படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தார்.
இந்தப் பாராட்டுக்களைப் போலவே மிக முக்கியமாக நான் கருதியது பாலிவுட்டின் அந்நாளைய பிரபல திரைக்கதை எழுத்தாளர்கள் ‘ஷோலே’ படப்புகழ் சலீம் - ஜாவேத் இரட்டையர்களின் பாராட்டு. “ஒரு காட்சியிலாவது அவரை ஆங்கிலத்தில் பேச வைக்க முயன்றோம். முடியவில்லை. நாங்கள் செய்ய முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இதன் மூலம் கதாசிரியர் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர் என்பதை அமிதாப்புக்கு உணர்த்திவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.
படத்தின் மாபெரும் வெற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியான ஜூன் 6-ம் தேதியை நினைவில் வைத்து, படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற இருப்பதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் அபிதாப். இதுதான் ‘ஒரு கைதியின் டைரி’, ‘ஆக்ரி ராஸ்தா’(கடைசி வழி) படங்களின் பின்னணிக் கதை” என்று நினைவுகூர்ந்தார் பாக்யராஜ்.