Showing posts with label OOTY. Show all posts
Showing posts with label OOTY. Show all posts

Sunday, 2 August 2020

JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY



        JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY 

உதகமண்டலம் எப்படி உருவானது 

.அந்த மலைக்கு மேல் போன மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. அங்கு பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன’ - இப்படி ஒரு பயம், அன்றைய சமவெளிப் பிரதேச மக்களுக்கு இருந்தது. அந்த மலைக்கு மேல் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அந்த மலையைப் பற்றி உலா வந்த கதைகளின் காரணமாக, அதை நெருங்க பயந்தனர். அந்த மலை, இன்று சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி.
மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்த, பெரும் காடாக விளங்கிய, மற்ற மக்கள் நெருங்க பயந்த நீலகிரியை, நவீன உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர், ஜான் சல்லிவன். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர். வாருங்கள்... ஜான் சல்லிவனின் கதையோடு, நவீன நீலகிரியின் வரலாற்றையும் அறிவோம்.


தோடமலாவில் என்ன இருக்கிறது?

1800-களில் நீலகிரி, 'தோடமலா’ என்றே அழைக்கப்பட்டது. அந்த மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களில் சிலர், அவ்வப்போது கீழே இறங்கிவருவதும், அவர்களுக்குத் தேவையான பொருட்களைப் பண்டமாற்று முறையில் பெற்றுச் செல்வதும் நடந்துவந்தன. அந்த மலைவாழ் மக்களுடன் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரே வணிகம் செய்துவந்தனர். மற்றவர்கள் அவர்களை
விநோதமானவர்களாகவே பார்த்துவந்தனர். திடீர் திடீரென சமவெளிப் பகுதியில் பிரசன்னமாகி, தங்கள் தேவை முடிந்தவுடன் மாயமாக மலை மீது ஏறிச் சென்றுவிடும் அவர்களைக் கண்டு பயமும் மக்களுக்கு இருந்தது. அதேசமயம், 'தோடமலாவில் அப்படி என்னதான் இருக்கிறது’ என அறிந்துகொள்ளும் ஆர்வமும் சமவெளிப் பிரதேச மக்களுக்கு அதிகமாக இருந்தது. மலை மேல் என்ன இருக்கிறது என்பது குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் உலவின. 'அங்கே பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன. அங்கே சென்ற சமவெளிப் பிரதேச மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது’ என்றே பேசி வந்தனர். இந்தக் கதைகளின் காரணமாக, மலையை நெருங்க மக்கள் பயந்திருந்த நிலையில், மலையின் மீது ஏறி முதல் கட்டடத்தைக் கட்டினார் ஜான் சல்லிவன்.

ஊட்டி பிறந்த கதை!
1602-ம் ஆண்டில் இருந்தே நீலகிரி மலை மீது ஏறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மலபார் பகுதியில் இருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஜேகோம் பினிஷியோ என்ற பாதிரியாரை அனுப்பிவைத்தது. 'மலை மீது மக்கள் சிலர் வசிக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவர்களின் வழித்தோன்றலாக இருக்கலாம்’ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அந்தப் பாதிரியார் அனுப்பி வைக்கப்பட்டார். இன்றைய கேரளத்தின் 'மன்னார்க்காடு’, 'கெத்தை’ வழியாக மலையேறிய அவர், மலைவாழ் மக்களைக் கண்டார். அவர்கள் கிறிஸ்துவ வம்சாவளியை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரியவந்ததும், தன் பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

அதன் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில், மலை மீது ஏறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியிலேயே முடிந்தன. இந்த நிலையில், நீலகிரியை உள்ளடக்கிய கோவை மாவட்டத்துக்கு கலெக்டராக வந்து சேர்ந்தார் ஜான் சல்லிவன். அவருக்கு தோடமலையைப் பற்றி உலா வரும் கதைகள் வியப்பைத் தந்தன. அதை எல்லாம் நம்ப அவர் தயாராக இல்லை. 'மலை மீது குறிப்பிட்ட சில இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தனித்தே வாழ்கிறார்கள்’ என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. அதுமட்டும் அல்லாமல், 'தோடமலையை முழுக்க சர்வே செய்ய வேண்டும்... அங்கு வாழும் மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும்’ எனத் தணியாத ஆர்வமும் ஏற்பட்டது. எனவே, தோடமலையைப் பற்றி அறிந்து வர ஆட்களைப் பணித்தார்.  

1818-ம் ஆண்டு ஜான் சல்லிவனால் அனுப்பட்ட ஜே.சி.விஷ் மற்றும் என்.டபிள்யூ.கிண்டர்ஸ்லே என்கிற அவருடைய உதவியாளர்கள், குறிப்பிட்ட தூரம் வரை மலை மீது ஏறி, 'அங்கு உள்ள பள்ளத்தாக்குகளிலும் மலைச்சரிவுகளிலும் மக்கள் வாழ்கிறார்கள். அதை தூரத்தில் இருந்து பார்த்தோம்’ என்று பாசிட்டிவ்வான பதிலைச் சொன்னார்கள். அதன் பிறகே, 'நானே புறப்பட்டுச் செல்கிறேன்’ என சல்லிவன் களத்தில் இறங்கினார்.

ஜான் சல்லிவனின் முன்கதை!

ஜான் சல்லிவனுக்கும் இந்தியாவுக்கும் அவருடைய தந்தை காலத்தில் இருந்தே தொடர்பு உண்டு. காரணம், சல்லிவனின் தந்தையும் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியவர். அந்த வகையில் மகனையும் கிழக்கிந்திய கம்பெனி பணிக்காகத் தயார்ப்படுத்தினார். லண்டனில் பிறந்து வளர்ந்த ஜான் சல்லிவன், தனது 15-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியில், மதறாஸ் பிராந்தியத்தில் ரைட்டராகப் பணியில் சேர்ந்தார். வருவாய் துறை, நீதித் துறை என வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர், படிப்படியாகப் பணி உயர்வு பெற்று, 1815-ம் ஆண்டு கோவையில் சிறப்பு வருவாய் கமிஷனராகப் பதவிஏற்றார். அதே ஆண்டிலேயே கோவை மாவட்டத்தின் நிரந்தர கலெக்டராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் தன் ஆளுகைக்கு உட்பட்ட 'தோடமலா’ என்று அழைக்கப்படும் நீலகிரி மலையின் ரகசியம் அறியும் முயற்சியில் இறங்கினார்.

ஊட்டி பிறந்த கதை!
தன்னால் அனுப்பிவைக்கப்பட்ட உதவியாளர்கள் பாசிட்டிவ்வான பதிலைச் சொன்னதை அடுத்து, 1819-ம் ஆண்டு, ஜனவரி மாதம் நீலகிரி மலை மீது முதன்முதலாக ஏறினார். மலை மீது ஏறும் முயற்சியில் கோவைச் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ''தோடமலையை நோக்கிப் பயணம்; மலையேறி, வெற்றிகரமாகத் திரும்பி வந்தால், உங்களுக்கு விடுதலை. பயணத்திலேயே உயிர் போகும் ஆபத்தும் உண்டு'' என்று சொல்லியே அழைப்பு விடுக்கப்பட்டது. கைதிகள் மற்றும் சிப்பாய்களுடன் குதிரைப் படை, யானைப் படையையும் அழைத்துக்கொண்டு போருக்குப் புறப்படுவதுபோலக் கிளம்பினார்கள்.

சிறுமுகைப் பகுதியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தார்கள். பவானி ஆற்றை ஒட்டிய தனநாயக்கன் கோட்டைப் பகுதியில் இருந்து மலையேறினார்கள் (தனநாயக்கன் கோட்டை என்பது திப்புசுல்தான் ஆட்சிக் காலத்தில் வரி வசூல் மையமாகத் திகழ்ந்தது. அதன் காரணமாக, அதற்கு 'தண்டல் நாயக்கன் கோட்டை’ என்ற பெயரும் உண்டு. அந்த தனநாயக்கன் கோட்டை இப்போது இல்லை. பவானி சாகர் அணை கட்டப்பட்டபோது, அதில் மூழ்கிவிட்டது).

அடிவாரப் பகுதியைத் தெம்பாகக் கடந்தார்கள். மலையேற்றத்தில்தான் சிக்கல் தொடங்கியது. குறிப்பிட்ட தூரத்துக்குப் பிறகு யானைகள் மற்றும் குதிரைகளால் மலையில் ஏற முடியாமல் போகவே, அவை திருப்பி அனுப்பப்பட்டன. மற்றவர்கள் மட்டும் மலை ஏறும் முயற்சியைத் தொடர்ந்தார்கள். வழியில் காட்டருவி ஒன்று தென்பட... அதனைக் கடக்க முடியாமல் தவித்தார்கள். இருப்பினும், முயற்சியில் இருந்து பின்வாங்காமல் அந்த அருவியைக் கடக்கத் திட்டமிட்டார்கள். அந்த அருவியில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாக... மீதம் உள்ளோர் மட்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நீண்ட பயணத்துக்குப் பிறகு, 'திம்மட்டி’ (திம்மஹட்டி) என்ற இடத்தை அடைந்து, அங்கே டென்ட் அடித்துத் தங்கினார்கள். திம்மட்டி என்ற ஊர்தான் தற்போது 'கன்னேரிமுக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இது கோத்தகிரியின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.

தோடமலாவில் சல்லிவன் கண்டது என்ன?

'தோடமலா’ தோடர்கள் வாழும் மலைப்பகுதி என்பது சல்லிவன் உள்ளிட்டவர்கள் அறிந்துவைத்திருந்ததுதான். ஆனால், மலையில் அமைந்திருக்கும் பெரும் பள்ளத்தாக்குகளும் சமவெளிப் பிரதேசங்களும் அவர்களை ஆச்சர்யப்படுத்தின. மலைச் சரிவுகளிலும் மக்கள் வாழ்ந்ததைக் கண்டு வியந்தனர்.

ஊட்டி பிறந்த கதை!
மலை உச்சியில் தோடர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் எருமையை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள்தான் மற்ற மலைவாழ் மக்களுக்கு பால் சப்ளை செய்கிறார்கள். தோடர்களுக்கு அடுத்த நிலையில் கோத்தர்கள் வசிக்கிறார்கள். கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள். விவசாயமும் இவர்களுக்கு கைவந்த கலை. இவர்கள்தான் அதிக அளவில் சமவெளிப் பகுதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

குரும்பர்களும் இருளர்களும் மலைச் சரிவுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் காட்டை நம்பி வாழ்கிறார்கள். வேட்டையாடியும், மலைப் பொருட்களைச் சேகரித்தும் வாழ்க்கை நடத்துகிறார்கள். நீலகிரியில் பெரும்பான்மையான பகுதிகளில் படுகர்கள் வசிக்கிறார்கள். நீலகிரி முழுவதும் கிட்டத்தட்ட 150 ஊர்களில் அவர்கள் வசித்தனர். இன்றும் நீலகிரியில் பெரும் அளவில் வசிப்பவர்கள் இவர்கள்தான்.

தான் பார்த்த விஷயங்கள் பற்றி தங்கள் தலைமைக்கு கடிதம் எழுதினார் சல்லிவன். 'மலையில் இங்கிலாந்தைப் போல குளிரான காலநிலை நிலவுகிறது. இரவு நேரத்தில் பாத்திரத்தில் ஊற்றி வைத்திருந்த தண்ணீர் உறைந்து போய்விட்டது என்றால், அங்கு உள்ள குளிரின் தன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று எழுதினார். இருப்பினும், மேலிடம் அதை நம்புவதாக இல்லை.

சல்லிவனின் அடுத்த பயணம்!

மீண்டும் அதே வருடம், மே மாதம் தனது நண்பரான தாவரவியலாளர் லெச்சினால்ட் உடன் சென்றார் சல்லிவன். பயணத்தின் பாதி வழியிலேயே சல்லிவனின் நண்பர் நோய்வாய்ப்பட்டார். உயிர் பிழைப்பாரா என்பதே சந்தேகமாக இருந்தது. 'சரி வந்தது வந்துவிட்டோம்... மேலே போய்ச் சேருவோம்’ என பயணத்தைத் தொடர்ந்தார்கள். திம்மட்டி வந்து சேர்ந்ததும், லெச்சினால்ட்டின் உடல்நிலை சீரானது. அங்கும் இங்குமாக ஓடி, ஆடினார். திம்மட்டியிலேயே பண்டமாற்று முறையில் ஆறு ஏக்கர் நிலத்தை வாங்கி, சிறிய கல் வீடு ஒன்றைக் கட்டினார்கள். அங்கேயே சில காலம் சுற்றித் திரிந்தார்கள். தாங்கள் வாங்கிய நிலத்தில் பரிசோதனை முயற்சியாகப் பல வெளிநாட்டு தாவரங்களைப் பயிர் செய்துபார்த்தார்கள்.

ஊட்டி பிறந்த கதை!
அப்போதைய காலகட்டத்தில் நம் நாட்டின் சீதோஷ்ணம் தாங்க முடியாமலோ, காயம்பட்டோ, இதர காரணங்களாலோ நோய்வாய்ப்பட்ட சிப்பாய்களை சிகிச்சைக்காக, மொரீசியஸ் தீவுக்கு அல்லது தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனுக்கு அனுப்பிவைப்பது வழக்கம். அவர்கள் கப்பல் பயணத்தின்போது பாதி வழியிலேயே மரணிப்பதும் சகஜமான ஒன்று. எனவே, கோவைக்குத் திரும்பியதும், உடல்நிலை சரியில்லாத லெச்சினால்ட்டின் உடல்நிலை, மலை மீது ஏறியதும் அதிசயத்தக்க வகையில் குணமானதைக் குறிப்பிட்டு மீண்டும் மேலிடத்துக்கு கடிதம் எழுதினார் சல்லிவன். 'நோய்வாய்ப்பட்ட சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சானட்டோரியம் (நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை மையம்) அமைக்க சிறந்த இடம் இது’ என்றும் குறிப்பிட்டார். அதற்கும் பாசிட்டிவ்வான பதில் இல்லை.

இந்த நிலையில் அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் நிர்வாகப் பணி நிமித்தம் சல்லிவன் மதராஸில் இருக்க வேண்டிய சூழல். அப்போது ஹென்ட்ரியேட்டா சிசிலியா என்பவருடன் அவருக்குத் திருமணம் நடந்தது. அதன் பின்னர் மீண்டும் கோவை வந்தார். மீண்டும் சல்லிவனின் நீலகிரி பயணம் ஆரம்பமானது. 1821-ம் ஆண்டு உதகமண்டலம் பகுதியை அடைந்தார் சல்லிவன். மிகப் பெரிய சமவெளிப் பகுதியைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். உதகமண்டலம் பகுதியில் ஒரு கல் வீட்டைக் கட்டினார். அடுத்து சாலை வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். கோத்தகிரி சாலை அமைக்கப்பட்டது. அதனை அடுத்து ஆங்கிலேய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதகமண்டலத்தில்

குடியேறினார்கள். ஜான் சல்லிவனும் பெரும்பாலான நாட்கள் தன் குடும்பத்துடன் உதகமண்டலத்திலேயே வசிக்க ஆரம்பித்தார்.

ஊட்டி ஏரியைக் கட்டியவரும் சல்லிவன்தான்!

சல்லிவன் உதகமண்டலத்துக்கு வந்த பிறகு, விவசாயத்திலும் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்தார். டீ, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் மூன்றையும் பயிர்செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தினார். அது அங்கு குடியேறியுள்ள ஆங்கிலேய மக்களின் தேவைக்கும், உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்று நம்பினார்.

ஊட்டி பிறந்த கதை!
அப்போது, மழைக்காலங்களில் மலையில் இருந்து கீழே பாயும் நீர் வீணாவதைக் கண்டார். அதனை சேகரிக்கும்விதமாக ஏரி ஒன்றை அமைத்தால் உள்ளூர் மக்களுக்குப் பயன் தருமே என நினைத்தார். அதோடு சீகூர், ஈரோடு போன்ற சமவெளிப் பகுதிகளின் விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம் என அப்போதைய கவர்னருக்கு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தும் அனுப்பினார். 'நீலகிரியில் ஏரி அமைத்து, அங்கு இருந்து சமவெளிக்கு நீர் கொண்டு செல்ல, நிறையப் பணச் செலவு ஏற்படும்’ எனச் சொல்லி, அந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அழகுடன்கூடிய பயன்பாடு என்ற நோக்கத்தில் ஏரி மட்டும் அமைத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டது. ஜான் சல்லிவனின் நேரடி மேற்பார்வையில் 1825-ம் ஆண்டு ஏரியின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

கிட்டத்தட்ட 65 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த ஏரி, கால ஓட்டத்தின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கியது. ஏரியின் மேற்பகுதியில் ஊட்டி பஸ் ஸ்டாண்ட், ரேஸ் கோர்ஸ் ஆகியவை உருவாகின. மிச்சமிருக்கும் ஏரிப் பகுதி, 'போட் ஹவுஸ்’ என்ற பெயரில் சுற்றுலாவாசிகளின் பொழுதுபோக்கும் இடமாக விளங்குகிறது.

வந்தது சானட்டோரியம்...

இப்படி நீலகிரியில் படிப்படியான முன்னேற்றங்கள் நடந்துகொண்டிருந்தாலும், 'உதகமண்டலத்தில் சானட்டோரியம் அமைக்க வேண்டும்’ என்ற சல்லிவனின் எண்ணம் மட்டும் அவ்வளவு சுலபத்தில் ஈடேறவில்லை. அதற்கு பலகட்டப் போராட்டங்களும், பல ஆண்டு காத்திருப்பும் தேவைப்பட்டது. தொடர்ந்து மேலிடத்துக்கு கடிதங்கள் எழுதியதன் விளைவாக, 1825-ம் ஆண்டு அப்போதைய கவர்னரான தாமஸ் மன்றோ வந்து சல்லிவன் கட்டிய கல் வீட்டில் தங்கினார். உதகமண்டலம் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார். இரண்டு ஆண்டுகள் கழித்து, கிட்டத்தட்ட தனது மரணத் தருவாயில்தான் சானட்டோரியம் அமைக்க தாமஸ் மன்றோ கையெழுத்து போட்டார். அதன் பின்னரே நீலகிரியில் சாலை வசதிகள் பெருக, ஆங்கிலேய மக்களும் அதிக அளவில் குடியேற, சர்ச்சுகள், பள்ளிகள் கட்டப்பட, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த... நீலகிரி விறுவிறு வளர்ச்சியைப் பெற்றது.

மனைவியின் மரணமும் மகனின் வருகையும்!

ஜான் சல்லிவனின் மனைவி ஹென்ட்ரியேட்டாவும் மூத்த மகள் ஹேரியேட்டும் மரணம் அடைந்தது ஊட்டியில்தான்.

ஊட்டி பிறந்த கதை!
1820-ல் ஹென்ட்ரியேட்டாவை சல்லிவன் திருமணம் செய்துகொண்ட பிறகு, கோவையில் திருமண வாழ்க்கையைத் தொடங்கினார்கள். அடுத்த வருடமே அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, சில மாதங்களிலேயே இறந்துபோனது. அதன் பின்னரே சல்லிவன் உதகமண்டலத்தைக் கண்டறிந்து, அங்கு ஒரு கல் வீடு கட்டினார். பெரும்பாலான நாட்கள் தன் மனைவியுடன் அங்கேயே தங்கினார். அதன் பிறகு அவருக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன.

1838-ம் ஆண்டு... நீலகிரியில் காசநோயும் மலைக் காய்ச்சலும் பெருமளவில் பரவின. அதற்கு சல்லிவனின் மனைவி ஹென்ட்ரியேட்டாவும், மகள் ஹேரியேட்டும் தப்பவில்லை. இருவருக்கும் கடுமையான காசநோய் ஏற்பட... அப்போது அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், அவர்களைக் குணப்படுத்த முடியவில்லை.

சல்லிவனின் மூத்த மகள் ஹேரியேட் 1838-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி இறக்க... அந்தச் சோகம் தீர்வதற்குள் மனைவி ஹென்ட்ரியேட்டா செப்டம்பர் 3-ம் தேதி இறந்தார். அவர்களுக்கு ஊட்டி செயின்ட் ஸ்டீஃபன் சர்ச் பின்புறத்தில் கல்லறைகள் அமைந்திருக்கின்றன. அந்த சர்ச் அவர்களின் இறப்புக்குப் பின்னரே கட்டப்பட்டது. அந்த சர்ச்சில் இவர்கள் நினைவாக கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

மனைவியும் மகளும் இறந்துபோன மூன்று ஆண்டுகளில், அதாவது, 1841-ம் ஆண்டு ஜான் சல்லிவன் பணி ஓய்வு பெற்று ஏழு குழந்தைகளுடன் லண்டனுக்குத் திரும்பிச் சென்றார். அங்கே சென்று விட்டாலும், அவரின் எண்ணம் முழுவதும் நீலகிரியைச் சுற்றியே இருந்தது. தனது இறுதிக் காலத்தை நீலகிரியில் கழிக்கவே விருப்பம் தெரிவித்தார். அந்த ஆசை நிறைவேறவில்லை. தனது 66-வது வயதில் லண்டனிலே காலமானார்.

சல்லிவனின் மரணத்துக்கு முன்னரே, அவருடைய மகன் ஹென்றி எட்வர்டு சல்லிவன், கிழக்கிந்திய கம்பெனியில் மதராஸ் பிராந்தியத்தில் பணியில் சேர்ந்தார். 1869-ம் ஆண்டு, தன் தந்தை பணியாற்றிய கோவை மாவட்டத்துக்கே கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். இப்படி, சல்லிவன் இறந்த பின்பும் அவரின் வாரிசுகள் மூலம் இந்தியாவுடனான பந்தம் தொடர்ந்தது.  

ஊட்டி பிறந்த கதை!
நீலகிரியில் கல் வீட்டைக் கட்டி குடியேறிய சல்லிவன், தன்னுடன் தோட்டக்காரர் ஒருவரையும் அழைத்துச் சென்றார். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அவர் பெயர், ஜான்ஸ்டன். அவர்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தாவரங்கள், நீலகிரி மண்ணில் வளர்கிறதா என்ற பரிசோதனையில் ஈடுபட்டவர். உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் ஆகியவற்றை இங்கு உள்ள மண்ணில் விளைவித்துப்பார்த்தார். ரோஜா வகைகளையும் வளர்த்துப் பார்த்தார். அந்தத் தோட்டக்காரர் ஏற்படுத்திய நம்பிக்கையின் அடிப்படையிலேயே, அவற்றை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்துவைத்தார் சல்லிவன். ஜான் சல்லிவனால் நீலகிரியில் கட்டப்பட்ட கல்வீடு, தற்போது ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இருக்கிறது. அதனை ஒட்டி சல்லிவனால் வளர்க்கப்பட்ட மரம் ஒன்றும் பட்டுப்போன நிலையில் நிற்கிறது.

 ஜான் சல்லிவன் முதன்முதலில் கட்டடம் கட்டிய கன்னேரிமுக்கு பகுதியில், அதே இடத்தில் தற்போது ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நினைவிடம் அமைக்க முயற்சி எடுத்தவர்களில் முக்கியமானவர், தர்மலிங்கம் வேணுகோபால். இவரின் தந்தை தர்மலிங்கம், நீலகிரியில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவர். படுகர் இனத்தைச் சேர்ந்த முதல் பத்திரிகையாளர். தந்தை வழியில் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதிவரும் வேணுகோபால், பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நீலகிரி ஆராய்ச்சி மற்றும் ஆவணக் காப்பக மையத்தின் இயக்குநராக இருக்கிறார். ஜான் சல்லிவனின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக தீவிர முயற்சி எடுத்த இவர், அதற்காக லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.

.


ஊட்டி பிறந்த கதை!
சல்லிவனின் வரலாறு முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லையே!’ என்ற கவலை பேச்சில் வெளிப்பட்டது. அப்போது அவர், சல்லிவனின் மனைவி மற்றும் மூத்த மகளின் கல்லறைகள் ஊட்டியில்தான் இருக்கிறது என்ற தகவலைச் சொன்னார். ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக இருந்தாலும், நமக்காகப் பல திட்டங்களைத் தீட்டி மனைவி, மகளையும் இங்கேயே பறிகொடுத்த சல்லிவனின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதற்காக, பல இடங்களுக்கும் பயணம் செய்தேன். 

லண்டனில் சல்லிவனின் கொள்ளுப்பேரன் டேவிட் சல்லிவன் இருக்கும் தகவலை அறிந்து, அவரைச் சந்தித்தேன். சல்லிவன் பற்றிய பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். லண்டன் அப்டவுன் பகுதியில், செயின்ட் லாரன்ஸ் சர்ச்சில் இருந்த சல்லிவனின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன். சல்லிவனின் வம்சாவளியைச் சேர்ந்த பலரையும் சந்தித்தேன். அரசாங்கப் பதிவேடுகளில் இருந்தும் பல தகவல்களைப் பெற்றேன். இன்றும் ஜான் சல்லிவனின் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் என் பயணத்தைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறேன்'' என்கிறார்  வேணுகோபால்.






சான் சல்லிவன் (ஜான் சல்லிவன்; John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவராலேயே, 1819ம் ஆண்டுவாக்கில் நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 1804ம் ஆண்டு சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில்யில் சாதாரண எழுத்தராக சேர்ந்த சல்லிவன், தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து 1839ம் ஆண்டு ஆளுனர் அவை உறுப்பினராக உயர்ந்தார். இயற்கை, சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் முயற்சியாலேயே ஊட்டி ஏரி வெட்டப்பட்டது[1]. 1841ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிய பின், 1855ம் ஆண்டு மரணமடைந்தார்.

இளமைக்காலம்
சல்லிவன் 1788ம் ஆண்டு சூன் 15ம் நாள் இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை சிட்டீபன் சல்லினன், தஞ்சை நகரில் கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக பணியாற்றியவர்.[2]. இவரின் முயற்சியால் தஞ்சையை சுற்றி பல ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. தாயார் பெயர் ஆன் சல்லினன் ஆகும். சான் சல்லினன் அரித்மெடிக் அண்ட் மெர்ச்சன்ட் அக்கௌன்டிங்க் ( Arithmetic and Merchant Accounting ) பிரிவில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.

கிழக்கிந்திய நிறுவனப்பணி
சல்லிவன், தனது 15ஆவது வயதில் (ஆகத்து 1803) சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக சேர்ந்தார். இதன் பிறகு சிறிது சிறிதாக உயர்ந்த இவர், 1806ம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்ட நீதிமன்ற பதிவராகவும், 1807ம் ஆண்டு ரகசிய காப்பு, அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக தலைமை செயலரின் உதவியாளராகவும், 1809ம் ஆண்டு மைசூரில் அமைந்திருந்த இங்கிலாந்து அமைச்சக உதவியாளராகவும், 1814ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், 1815ல் கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதே ஆண்டு கோவை மாவட்ட நிரந்தர ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார்.

நீலகிரி உருவாக்கம்

கோத்தகிரியில் உள்ள நினைவகம்
இதன் பிறகு 1819ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் நாள், பிரான்சு நாட்டை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசுட் லூயிசுடனும் (Jean Baptiste Louis), படகா பழங்குடியின வழிகாட்டியுடனும் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அந்த பகுதியை சுற்றிப்பார்த்த இவர், அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டினார்[1]. நீலகிரியின் முதல் கட்டிடமான இது இன்றளவும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ளது. இதன் பிறகு இந்தப் பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்த பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார். மேலும், மக்கள் எளிதில் இந்தப் பகுதியை அணுகவேண்டி, 1820ஆம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையை ஏற்படுத்தினார். இதன் பிறகு ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டார். படகா பழங்குடி இன மக்களின் உயர்வுக்காக மேம்படுத்தப்பட்ட பார்லி விதைகளையும் இறக்குமதி செய்தார். மேலும் ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் வெட்டினார். மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.

குடும்பம்
சல்லிவன் கென்ரித்தா என்பவரை 1820ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1822ம் ஆண்டு காரியட் ஆன் என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து மொத்தம் ஒன்பது குழந்தைகள் இவர்களுக்குப் பிறந்தன. இதில் இரண்டு குழந்தைகள் ஊட்டியிலேயே இறந்து விட்டன. மேலும் 1838ம் ஆண்டு கென்ரித்தாவும் ஊட்டியிலேயே இறந்துவிட்டார். இவர்கள் மூவரின் உடல்களும் அங்கேயே புனித சிட்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் முதல் மகன் கென்றி எட்வர்ட் இவரைப் போலவே கோவை மாவட்ட ஆட்சியராக பின்னாட்களில் (1869ம் ஆண்டு) நியமிக்கப்பட்டார்[2].
இறப்பு

பல கம்பெனி பொறுப்புகளை வகித்த சல்லிவன், 1841ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்றுக்கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கு தனது குழந்தைகளுடன் தனது இறுதி நாட்ளைக் கழித்தார். 1855ம் ஆண்டு சனவரி 16ம் நாள் தனது 66ம் வயதில் அங்கேயே இறந்தார். விடுதலை பெற்ற இந்தியாவில், சல்லிவனைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரின் கல்லறையை கண்டுபிடிக்கும் பணி 1999 தொடங்கி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியில் சூலை 14, 2009 அன்று, இங்கிலாந்தின் ஈத்ரு விமான நிலையம் அருகில் உள்ள புனித லாரன்சு பேராலயத்தில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது[3].
.

Friday, 20 September 2019

THE BRIEF HISTORY OF COIMBATORE ALIAS COVAI






THE BRIEF HISTORY OF 
COIMBATORE ALIAS COVAI

1804 ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் உருவானதுதான் கோவை மாவட்டம். இந்தக் காலகட்டத்தை வைத்துதான் கோவை தினமாக கோவை பிரமுகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகிறார்கள். மாவட்டம் உருவானபோது நீலகிரி, கோவை, ஈரோடு, தாராபுரம் வரை நீண்டிருந்தது. அதற்கு முன்பு காடு அடர்ந்து கிடந்தது. ஆதிகாலத்திலோ மலையும், மலை சார்ந்த காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருளர்கள், வேடுவர்கள், வேளாளர்கள் குழுவாக, கூட்டங்களாக வசித்து வந்தனர்.

கோயம்புத்தூரின் பூர்வகுடிகள் இருளர்கள். இவர்களின் தலைவன் கோவன் என்பவன் இந்த அடர்ந்த காட்டுப்பகுதியை பரிபாலனம் செய்து வந்தான். அவன் கும்பிட்டு வந்த தெய்வம் கோனியம்மன்.


கோவனின் வழி வந்த கோசர் குலத்தவர்கள் சங்க காலத்தில் இங்கே ஆட்சி புரிந்ததால் கோவன், கோனியம்மன், கோசர் பெயராலேயே கோவன்புத்தூர், கோசர்புத்தூர், கோயம்புத்தூராகி, கோவையாகி மருவியது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று. இன்றைக்கும் இவனுக்காக, அவனுக்காக, அவளுக்காக, இவளுக்காக, இவருக்காக, அவருக்காக என்பதை அவனுக்கோசரம், இவனுக்கோசரம், இவளுக்கோசரம், அவளுக்கோசரம், இவருக்கோசரம், அவருக்கோசரம் என கொங்கு மொழியில் சொற்கள் உருளுவதைக் காணலாம். அநேகமாக கோசரம் என்ற சொல் இப்படி கோவை மண்ணில் விடாப்பிடியாக உருண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அது சரி. இதற்கு கொங்கு நாடு என எப்படி பெயர் வந்தது? மலைகளும், மலைசார்ந்த பகுதிகளான கோவையில் சோலைகளும், தேனடைகளும் அதிகம். அதைச் சுவைத்துப் பருகிய ஆதிகுடிகள் மத்தியில் சேரர் மரபை சேர்ந்த கொங்கன் என்ற அரசன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அதனால் இது கொங்குநாடு என்றும் பெயர் பெற்றதாக பேரூர் புராணம் குறிப்பிடுகிறது. இதில் ஆதி முதலான நகராக பேரூர் சொல்லப்படுகிறது.

பேரூர் புறநகரில் பொய்கைகளும், அதில் தாமரை மலர்களும், அவற்றில் அன்னப்பறவைகளும், மயில், கிளி, நாகண வாய்ப்பறவை, சக்கரவாகப்பறவை என காட்சிப்படுத்தப்படுகின்றன. வன்னி, வில்வம், கொன்றை, பாதிரி முதலிய மரங்களும் சாதி முல்லை, மல்லி முதலிய கொடிகளும் படர்ந்து நிற்கின்றன. இதில் இடைநகர், உள்நகர், பரத்தையர் வீதி, கடை வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி என வகைப்படுத்தப்பட்டு நட்ட நடுவே பட்டிபெருமாள் எழுந்தருளியிருக்கும் கோயில் இருக்கிறது.

கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் ஒன்று ஆறை நாடு. இன்றைக்கும் கோவைக்கு மேற்கே ஆனைகட்டி மலைப்பகுதிகளில் ஆறைநாட்டுக்காடு என ஒரு பழங்குடி கிராமம் பெயர் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. இந்த ஆறைநாட்டுக்காடு மேற்கில் வெள்ளிமலை தொடங்கி கிழக்கில் அவிநாசி வரை நீள்கிறது. இதில் கிழக்குப் பாகத்தை வடபரிசார நாடு என்றும் மேற்குப் பாகத்தை பேரூர் நாடு என்றும் பெயர் வழங்கியிருக்கிறார்கள்.



கி.மு. 44 முதல் கி.பி. 54 வரை உரோமபுரி நாட்டுடன் பேரூர் நாட்டிற்கு வாணிகத்தொடர்பு இருந்தது. அக்கால ரோமானியக் காசுகள் பேரூர் நொய்யல் கரைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.பி. 3 முதல் 7-ம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழகம் முழுக்க ஆண்டுள்ளனர். கி.பி. 650-ல் அப்பர் சுவாமிகள் பேரூருக்கு வந்து சென்றுள்ளார் என பேரூர் புராணம் குறிப்பிடுகிறது.

கி.பி. 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் சேரர்களும், பாண்டியர்களும், அதன் பின் கங்கர்களும் பேரூர் நாட்டை ஆண்டுள்ளனர். கங்கர்கள் ஆட்சியில் சுந்தரர் கி.பி. 850-ல் பேரூர் வந்துள்ளார். கி.பி. 9 முதல் 12 வரை பேரூர் நாடு சோழர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பேரூர் திருக்கோயிலின் அரத்தமண்டபம், மகாமண்டபம் சோழ நாட்டுச் சோழர்களால் கட்டப்பட்டது. அதன் பின்னர் கொங்கு சோழர்களும், கொங்கு பாண்டியர்களும். ஹொய்சாளர்களுமே மாறி மாறி இதனை ஆண்டனர்.

கி.பி. 1295-ல் அல்லாவுதீன் என்ற அரசன் தென்னாட்டு அரசர்களைத் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றியதில் பழைய அரசியல் முறைகள் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டது. பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது. விஜயநகர அரசர்கள் ஆட்சியின் போது அருணகிரிநாதர் கி.பி. 1450-ல் பேரூர் வந்துள்ளார். 1565-ல் விஜயநகர அரசு முடிவுக்கு வந்தது. 1600-ல் கொங்குநாடு மைசூர் வசம் சென்றது. சில ஆண்டுகளில் நாயக்கர்கள் இதை வசப்படுத்தினர். இந்தக் காலத்தில் வீரசைவர் ஆச்சார்ய சாந்தலிங்கர் என்பவர் இங்கே வந்து திருமடம் அமைத்து மாணவர்களுக்கு பாடம், சாஸ்திர நூல்கள் கற்றுத் தந்திருக்கிறார்.

கி.பி. 1672-ல் மீண்டும் பேரூர் நாடு மைசூர் வசம் சென்றது. 1773 வரை சர்வமான்யமாக இருந்த பேரூரை திப்பு சுல்தான் ஜப்தி செய்து, அதில் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை மட்டும் கோயிலுக்குக் கொடுத்து வந்திருக்கிறார். 1790-91ல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கைப்பற்றி இதன் முழு வருவாயை கோயிலுக்கே கொடுத்துள்ளனர். 1799-ல் ஆங்கிலேயர் பேரூர் கிராமம் முழுவதும் கைப்பற்றி கோயிலுக்கு பட்டா செய்து கொடுத்து விட்டனர். 1847-ல் இந்த கிராமம் தர்மகர்த்தாக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பேரூர் 1607.50 ஏக்கர், மாவுத்தம்பதி 3005.77 ஏக்கர் என இரண்டு கிராமங்கள், ஒரு வாய்க்கால், இரண்டு குளங்கள், இன்னொரு குளத்தில் பாதி என இதன் பரப்பளவு நீண்டது.

கோயில் சார்ந்த, கிராமம் சார்ந்த, விளைச்சல் சார்ந்த மக்கள் வாழ்க்கை என்பது இங்கே, இந்தக் காலகட்டத்தில் தொய்வு பெற்று அதைத்தாண்டி கிழபுறமுள்ள பிரதேசம் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், பவுண்டரிஸ், இண்டஸ்ட்ரீஸ், இயந்திர பணிமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என பெருக தற்போதுள்ள கோவை நகரமும், கோவை மாவட்ட கிராமங்களும் வளம்பெற்றன. பேரூர் என்ற ஆதி கோவை நகரம் இதில் ஒரு சிறு கிராமமாக மாறி நிற்கிறது.


பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 214  ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. அதையொட்டி, கடந்த பத்து ஆண்டுகளாக நவம்பர் 24-ம் தேதியை கோயமுத்தூர் தினமாக கோவை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கோவை மாநகராட்சியும் ஆண்டுதோறும் கோயமுத்தூர் தினத்தில் புகைப்படக் கண்காட்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சரித்திர முக்கியத்துவம்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நகரமாக திகழ்ந்துள்ளது கோவை. இதுகுறித்து பேசும் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன், “தற்போதைய தெக்கலூர் அருகே நடந்த அகழாய்வில் வண்ணத்தாங்கரை என்ற இடத்தில் கால்நடைகளின் செமி ஃபாசில்கள் கிடைத்துள்ளன. அவை மேற்கே உள்ள குருடிமலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாளமடல் ஓடை, தன்னாசி பள்ளத்தில் கரைபுரண்ட காட்டாற்றில் அடித்துவரப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என்கிறார்கள். அப்போதே அங்கு கால்நடைகளை வளர்த்த நாகரிக மனிதர்கள் வாழ்ந் தார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

சோழ நாட்டையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் ராஜகேசரி பெருவழி பாலக்காட்டு கணவாய்க்கு அருகில் செல்கிறது. கி.மு 4-ம் நூற்றாண்டிலேயே ரோமானிய கிரேக்க நாடுகளுடன் சோழநாடு வணிகத் தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு ஆதாரமாக இப்பெருவழியையொட்டி ஓடும் நொய்யலில் பல இடங்களில் அகழாய்வின்போது ரோமானிய காசுகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன. இதில் பழமையான நகரங்களாக திருப்பூர் மாவட் டத்தில் அமைந்துள்ள கொடுமணல், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர், பேரூர் இருந்துள்ளது” என்கிறார்.

“கி.பி. 10 மற்றும் 11-ம் நூற்றாண்டுகளில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை 32 அணைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் கட்டி நீர் பரிபாலனம் செய்துள்ளனர் அன்றைக்கு இப்பகுதியை ஆண்ட சோழர்கள். இதனால், ஆண்டு முழுக்க செழிப்பான பகுதியாக இருந்தது கோவை. 1804-ல் பிரிட்டீஷார் கோவை மாவட்டத்தை உருவாக்கியபோது, கேரளத்தின் பாலக்காடு தொடங்கி கர்நாடகாவின் கொள்ளேகால் வரையிலும் கோயமுத்தூரின் பரப்பு பரந்து விரிந்திருந்தது.


அதிலிருந்து 1868-ல் நீலகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில், பவானி, கோவை, தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், பாலக்காடு, உடுமலைப்பேட்டை ஆகியவை கோயமுத்தூர் மாவட்டத்தின் தாலுகாக்களாக இருந்தன. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிறந்தபோது, பாலக்காடு கேரளத்துடனும், கொள்ளேகால் கர்நாடகத்துடனும் இணைக்கப்பட்டன. மாவட்ட பிரிவினையின்போது, கரூர் தாலுகா திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு பின்னர், கரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உதயமானது.

இதேபோல், பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் ஆகியவை, 1979-ல் உருவான ஈரோடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. கடைசியாக, 2009-ல் திருப்பூர், உடுமலை பகுதிகளை பிரித்து திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது” என்கிறார் கோயமுத்தூர் வரலாற்று நூல்களை எழுதியுள்ள சி.ஆர்.இளங்கோவன்.

கோனியம்மன் வரலாறு

“என்னங்கண்ணா.. ஏனுங்கண்ணா என்று அழைப்பதை மட்டுமே கொங்குச் சீமையாம் கோவையின் அடையாளமாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி பல நல்ல விஷயங்கள் கோவையின் சிறப்பைச் சொல்கின்றன. கோவையின் பெயர்க் காரணமாகச் சொல்லப்படும் கோனியம்மன் தற்போது அமைந்துள்ள இடத்துக்கு தெற்கே ஓடும் நொய்யலாற்றில் முன்பு இருந்தது.

ஆறு பெருக்கெடுத்து அழித்ததால் அம்மனை கோட்டைமேட்டில் கொண்டு வந்து வைத்தார்கள் என்கிறார்கள் சிலர். கோனியம்மன் தற்போது கோயில் கொண்டுள்ள இடத்துக்கு வடக்கில் ஓடும் சங்கனூர் பள்ளத்தில் இருந்தது. அங்கே வெள்ளம் வந்ததால்தான் தற்போதுள்ள இடத்துக்கு அம்மன் கொண்டுவரப்பட்டார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இதில் உண்மையான தகவல் எது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் வெளிக் கொண்டுவர வேண்டும்” என்கிறார் ஆண்டுதோறும் கோவை தின விழாக்களில் பங்கெடுத்து வரும் பேரூர் ஜெயராமன்.

கோவை பஞ்சாலைகளுக்கு புகழ்பெற்ற நகரம். இங்கே உருவான முதல் பஞ்சாலை ‘கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் (சி.எஸ்.டபிள்யூ). இதை உருவாக்கியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர். தற்போது ‘என்டைஸ்’ நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த மில்லின் கட்டிடங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. கோவையின் முதல் ரயில் நிலையமும், தபால் அலுவலகமும் அமைந்தது போத்தனூரில்தான். தென் மேற்கிலிருந்து வீசும் கேரளத்தின் குளுமையான காற்று இங்கே இதமான தட்பவெப்பத்தைத் தந்ததால், ஆங்கிலேயருக்கு மிகவும் பிடித்தமான ஊராக இருந்தது போத்தனூர்.

ஆங்கிலேயர்கள் கட்டிய மிகப் பழமையான லண்டன் தேவாலயம் போத்தனூரில் உள்ளது. தற்போது கோவையிலுள்ள வனக்கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படும் விக்டோரியா ஹால், ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹாமில்டன் கிளப் எல்லாமே ஆங்கிலேயர் உருவாக்கித் தந்தவையே. எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரும் இணைந்து பணியாற்றிய சென்ட்ரல் மற்றும் பட்சிராஜா ஸ்டுடியோக்கள் இருந்ததும் கோவையில்தான்.

அடையாளங்களை பாதுகாப்போம்

இதில், ஹாமில்டன் கிளப் அண்மையில் காவல்துறை மியூசியமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வேளாண் பல்கலைக்கழகம், வனக்கல்லூரி, விக்டோரியா ஹால் போன்றவை பொலிவு மாறாமல் இருக்கின்றன. மற்ற கட்டிடங்கள் ஆங்காங்கே சிதிலமடைந்தும், உருத் தெரியாமலும் போய்க் கொண்டிருக்கின்றன. இவைகளையும் புதுப்பித்து பாரம்பரியம் மிக்க கோவைக்கான தனி அடையாளங்களாக பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள் கோவை மக்கள். பிறந்த நாளில் நாமும் கோவை செழிக்க வாழ்த்துவோம்.

(இன்று கோவை தினம்)

கோயமுத்தூரூ கிழகோடி ஊரு ஒண்டிப்புதூரு. அங்கிருந்து கிழக்கு மோனா பிரிட்டிஷ்காரன் போட்ட தார் ரோட்டுலயே போயி ரெண்டு மைல்  போயி சோத்தாங்கை பக்கமா திரும்பி, மறுக்காவும்  முக்கா மைல் நடந்தா ஒட்டபாளையம் அணைக்கட்டு.

சுத்துப்பத்து நூறு கிராமத்துக்கும் கம்பு, சாமை, கரும்பு, ராகின்னு அமோக விளைச்சல் எடுக்க காரணமான நீர்க்கட்டு. சுத்தி எல்லா பக்கமும் தென்னை, வாழைத்தோப்புகளா மினுங்கும். எல்லாத்துக்கும் மீறி அந்தக் காலத்து இளசுகளுக்கு கொண்டாட்டம் தந்த நீர்ப்பரப்பு.  கத்தாழைக் கிழங்கு, எருமுட்டி, ஸ்கூட்டர் டயரு, டியூப்னு எது கிடைச்சாலும் அதைக் கட்டிட்டு நீச்சல் பழகாத பசங்களே இல்லை. சனி, ஞாயித்துக்கிழமை, மே மாச லீவுல மட்டும் இல்ல, பள்ளிக்கூடத்தை கட் அடிச்சுட்டும், ஒண்ணுக்கு, ரெண்டுக்கு வருதுன்னு வாத்தியார்கிட்ட பொய் சொல்லிட்டும் வந்து அணைக்கட்டுல குதியாட்டம் போடாதவங்களே இல்லை.

அணைக்கட்டுக்கு கீழேயும், மேலேயும் அஞ்சு மைல் தூரத்துக்கு வெங்கச்சாங் கல்லுமேடு, மொட்டைப்பாறை, தோப்புப்பாறை, வண்டிமண்ணு குழின்னு அத்தனையும் நொய்யல் ஆத்து தண்ணி போற வழிதான்.  எனக்கு அம்மாவும், அக்காவும் துணி துவைக்கப் போகும்போது கூடவே போய் பழகிய பழக்கம். மத்த பசங்க மாதிரி நீச்சல்ல போகாம அம்மா மாதிரியே கரையோரமா பாத்து பதனமா உக்காந்து குளிக்கவே பழகிப்போச்சு. அப்படியும் மணிக்கணக்குல ஆனாலும் தண்ணிய விட்டு வர மனுசு வராது. நானும் தம்பியும் இடுப்பழவு ஆழத்துல தவக்கா முக்குளி போடறதுக்கே, ‘அம்மா டேய் பாத்துடா. ஆழத்துக்கு போயிடாதீங்க!’ன்னு கூப்பாடா போடும்.

நீலிக்கோனாம்பாளையம் ஊர்க்கவுண்டர் பய. நாலாங்கிளாஸ் படிக்கும்போது கத்தாழை முட்டியக் கட்டிட்டு பசங்களோட பசங்களா வந்து குதிச்சு மண் எடுத்த கொடங்குல சிக்கி பொணமாத்தான் மீண்டான். அதுலயிருந்து அம்மாவுக்கு பயம்னா பயம். வகுப்புல கண்ணையன், சிவராசு, பாபு, கோயிந்தராசு, செல்வராசு எல்லாரும் ஒட்டபாளையம் ஆத்துல இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நீச்சல்லயே போய் திரும்பறதை கதை கதையா சொல்லும்போது பொறாமையா இருக்கும்.

இது ஒரு பக்கம்னா தெரு ஓரமா நெளியற சாக்கடையில மண்புழுவைத் தோண்டியெடுத்து, ரெண்டு காசு தூண்டிலையும் வாங்கி தட்டுக்குச்சியில மாட்டிக்கிட்டு போய் தண்ணியில போட்டா ஜிலேபி கெண்டை, பட்டை கெண்டைன்னு கிடைக்கும். ராத்திரியில் ஒரு வேளை மொளசாத்துக்கு ஆகும். பல பசங்க நீச்சல்ல போய் பாறை வங்குக்குள்ளே கெளுத்தி மீன், மீசை மீன்னு புடிச்சுட்டு வருவாங்க. முள்ளுக்குச்சிய  நீளமா செதுக்கி எடுத்து ஆத்தங்கரையோரம் இருக்கிற வங்குக்குள்ளே விட்டா பால்நண்டு, கொறநண்டுன்னு நாலஞ்சு நண்டுக அதைப் புடிச்சுக்கிட்டே வெளிய வரும். அதுமட்டுமா? தோப்பு நாயக்கர் தோப்புக்குள்ளே போனா ஓசியிலயே இளநீ தண்ணீ கிடைக்கும். அங்கங்கே வான் ஒசக்க நிக்கிற பனை மரங்கள்லயிருந்து உழுந்து கிடக்கிற பனம்பழங்கள் சூப்பி சூப்பி சாப்பிட்டா சக்கரையா இனிக்கும். வந்த பசியெல்லாம் காணாமப்போகும்.

ஆத்தோரமா ஒரு ஊத்து தோண்டி உட்டா போதும். அதுல சுரக்கும் தண்ணீ அமிர்தமா இனிக்கும். அதனால ஆத்துக்குப் போகும்போது குடிக்கத்தண்ணீ கொண்டு போகவேண்டிய தேவையே வந்ததில்ல. வேச காலத்துல அளவா ஓடற தண்ணீ திடுதிப்புன்னு அங்கங்கே குட்டையா தேங்கிடும். சில சமயம் வறண்டும் போய்விடும். அதுவே ஆடி வந்தா செந்தண்ணியா பெருக்கெடுக்கும். ஐப்பசி அடைமழைக்கு சொல்லவே வேண்டாம். ஒரு தடவை ஒட்டபாளையம் அணையில பொங்கிய வெள்ளம் வண்ணாத்தி வள்ளம், ஆணைவாரி பள்ளம்ன்னு பாஞ்சதோட, காமாட்சிபுரம், ஸ்டேன்ஸ் காலனி ஊடுகளுக்குள்ளேயும் நாலு மைல் தூரத்துக்கு நிரவிடுச்சு. அப்பத்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதை காலளவு வேட்டி மடிச்சுக்கட்டீட்ட வந்து பார்த்தது இப்ப மாதிரி இருக்கு. 


ஆறு வறண்டு கிடக்கிற காலத்துல தொவைக்கிறதுக்கு தார்ரோட்டு கல்லுக்குழி, ஏராட்ரூம் கல்லுக்குழிக்குத்தான் துவைக்கப் போகணும். குட்டை மாதிரி நின்னு கிடக்கிற கல்லுக்குழியில துவைக்கிற துணி ஊழை நாத்தமா நாறும். என்னதான் இருந்தாலும் ஓடற ஆத்து தண்ணியில துவைக்கிற மாதிரி இருக்குமான்னு அம்மா பொலம்பாத நாளிருக்காது.

மேகோட்டு மானத்துல இடி இடிச்சு மின்னல் மின்னினா வெள்ளியங்கிரி மலையில் பேஞ்ச மழை ஆத்துல வெள்ளமா ஓடி ஒட்டபாளையம் அணைக்கு வரும்னு  அம்மா அனுபவ நம்பிக்கை ததும்ப சொல்லுவா. அண்ணன்தான் அம்பர் சைக்கிள் எடுத்துட்டு சொய்ய்ன்னு போய் அதைப் பார்த்துட்டு, ‘அம்மா ஆத்துல செந்தண்ணிதான் ஓடுது. அதுல தொவைக்க முடியாது. ரெண்டுநாள் போகட்டும்!’ன்னு சொன்னதெல்லாம் இப்ப நடந்தது போல் இருக்கு.

அப்படி ஒரு நாள் புதுத்தண்ணு வந்த சூட்டுல அம்மாகூட நானும் தம்பியும், வண்டிமண் குழிக்குப் போயிட்டோம். அம்மாவும், அக்காவும்  துவைக்கிறதுக்கு கல்லு தேடிட்டு இருந்த சமயம். அங்கெ எங்களை விட சின்ன பொடிப் பசங்க ஏழெட்டு பேர் முக்குளி போட்டுட்டு இருந்ததைப் பார்த்து எங்களுக்குள்ளே ஆசை முக்குளி போட்டுச்சு.

நானும், தம்பியும் டவுசரக் கழட்டி வீசிட்டு, ஒரு துண்டை மட்டும் கோவணமா கட்டிக்கிட்டு எகிறிக் குதிச்சுட்டோம். சலசலன்னு ஓடுது தண்ணீ.  அந்தக் கரையோரத்துல ஆள் அளவுதான் ஆழமிருக்கும். அன்னெய்க்குன்னு எப்படி அவ்வளவு ஆழம் ஆச்சோ தெரியலை. தண்ணீயில எட்டிக்குதிச்ச உடனே கால் நிலத்தை தொடலை. உடம்பு மேலேயும் கீழேயுமா போயிட்டுப் போயிட்டு வருது. எனக்கும் அப்பால தம்பீ. வவக்கு, வவக்குன்னு தண்ணீயக் குடிச்சுட்டு மூழ்கி, மூழ்கி வெளிய வர்றது தெரியுது.

அப்புறம்தான் தெரிஞ்சது நாங்க குதிச்சது மண்ணெடுத்த குழின்னு. நீச்சல்ல இருந்த எங்க சோட்டு பசங்க, நாங்க நீச்சல் தெரியாம தண்ணியில சாவுப் போராட்டம் நடத்தறோம்னு புரிஞ்சுட்டாங்க. கரையில நின்னவங்க சிலபேரு ஆத்துக்குள்ளே குதிக்கிறாங்க. முக்குளி போட்டவங்க கைகளை தண்ணீயில வீசி வீசி நீச்சல் எங்களைப் பார்த்து வர்றாங்க. எனக்கோ தண்ணியில அந்தரத்துல மிதக்கிற மாதிரி இருந்தாலும், தம்பி தண்ணியில தவிக்கிற தவிப்புதான் கண்ணுல தெரியுது.

எனக்கு எப்புடி அப்படியொரு துணிச்சல் வந்ததுன்னு தெரியலை. கண்டபடி கையாக்காலை உதறினதுல தம்பி பக்கத்துலயே போயிட்டேன். அவன் அரைஞாண் கயிறோட கோவணமும் மாட்டினதுதான் தெரியும். கரைக்கு நடந்தனா? நீச்சல்ல வந்தனான்னு கருப்பராயனுக்குத்தான் வெளிச்சம். தம்பியும் மீண்டு... நானும் மீண்டு...

அம்மா, அக்கா எல்லாம் கரையில் பதறிப்போய் நின்னாங்க.  ரெண்டு பசங்களையும் அந்த நொய்யலாத்தாதான் காப்பாத்தினான்னு ரெண்டு கையும் எடுத்துட்டு மானத்தைப்பார்த்து கும்பிட்டு கண்ணீர் உட்டுட்டா அம்மா.  அதுக்கப்புறம் நொய்யலாத்துக்குப் போனாலும் அவ்வளவு சுலபமா தண்ணிக்குள்ளே எறங்கிட மாட்டோம். நின்னு நிதானமா, தண்ணியில் , கால் வைத்து, கைவைத்து நீரடி பாத்து பதனமா தவ்வி தவ்வி...

இப்ப அதே நொய்யலாறு சாக்கடை தண்ணியும், சாயத்தண்ணியுமா நாறுது. உப்பும், கசடு களிம்புமா ஒரம்பெடுத்து ஊறுது. மேகோட்டு மானம் பொத்துகிட்டு ஊத்தி வெள்ளியங்கிரி மலையிலிருந்து தண்ணி கரைபுரண்டு ஓடி வந்தாலும் இந்த ஒட்டபாளையம் ஆத்துல மட்டும் நுரைச்சு நொங்கெடுக்கும் ரசாயனத் தண்ணியாத்தான் வருது. எப்பவாச்சும் ஒரு நாள் ஆத்தோரம் போனலே சொறி, சிரங்கு வந்தவன் மாதிரி ஆயிரம் நாள் சொறிஞ்சுட்டு திரியவேண்டி இருக்கு. நாகரீகங்கிற வாழ்க்கை போர்வையில நாம தொலைச்சுது ஆத்தை மட்டும் இல்லீங்கோ ... நம்மளையும், நம்ம சந்ததிங்களையுந்தானுங்கோ. அதுக்கு இந்த நதியை தவிர வேற உதாரணம் வேணும்ங்களா?


தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழுக்குரிய நகரம் கோவை. இங்கிலாந்து நாட்டில் பருத்தி, பஞ்சு, நூல், துணி என சகலத்திற்கும் அச்சாரம் இட்ட நகரம் மான்செஸ்டர். அதுபோல இந்தியாவில் உருவான இரண்டே நகரங்கள் மும்பையும், அதற்கடுத்து கோவையும்தான். கடும் வெயிலும் இல்லாமல், கடுங் குளிரும் இல்லாமல் இருக்கும் மிதமான சீதோஷ்ண நிலை, மெலிதாக அடிக்கும் கூதக்காற்று, பருத்தி விளையும் கரிசல் மண், உழைப்புக்கு அஞ்சாத கிராமப்புற மக்கள்.

இவைதான் 1890ல் முதல் பஞ்சாலையான ஸ்டேன்ஸ் மில்லை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மில்கள் பெருக காரணமாக அமைந்தது. 1970 வாக்கில் கோவையின் பெரிய பஞ்சாலைகள், நூற்பாலைகள் 175ஐ தாண்டின. இதன் சார்பு மில்களான வேஸ்ட் காட்டன்களும் நூற்றுக் கணக்கில் பெருகின. அது மட்டுமா? இந்த பஞ்சாலை, நூலாலைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள், மோட்டார்கள், ஸ்டாட்டார்கள், டெக்ஸ்டைல் மிஷினரிகள் செய்வதற்கும் சிறு, குறு, பெரும் தொழிற்சாலைகள் உருவெடுத்தன.

அந்த வகையில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், டெக்ஸ்டூல் ஆலைகள் குறிப்பிடத்தக்கன. ஆலை முதலாளிகள், மானேஜர்கள், சூப்பர்வைசர்கள் பணம் படைத்தவர்களாக மாற, அவர்களுக்கான நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகத் தொழிற்சாலைகள் உருவெடுத்தன. இவர்கள் அத்தனை பேரின் நுகர்வுக்கென மோட்டல்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஜவுளிக்கடைகள் என சகலமும் பெருக்கெடுத்தன.

1970களில் பெரிய ஆலைகளில் ஒரு ஆலைக்கு தலா 1000 பேர் முதல் 5 ஆயிரம் பேர் வரை பணியாற்றினர். அந்தக் காலத்தில் மில் தொழிலாளி என்பவன் மாதம் ரூ. 900 வாங்கிய காலத்தில் ஒரு பள்ளி ஆசிரியரின் சம்பளம் வெறும் ரூ. 150 முதல் ரூ. 300 தான். தவிர இந்த தொழிலாளி ஓவர் டைம், போனஸ், மருத்துவ லீவு சம்பளம் என கைநிறைய பெற்றான். ஒரு காலத்தில் 12 மணி நேர வேலை மேஸ்திரி எனப்படும் கங்காணிகள் சாட்டையை வைத்து அடித்து தொழிலாளியை வேலை வாங்கின காலம் மாறி, தொழிலாளர் போராட்டங்களின் மூலம் எட்டுமணிநேர வேலை. பிஎப், இஎஸ்ஐ, போனஸ், பெண்களுக்கு பேறு கால லீவு, மருத்துவவிடுப்பு என சகலமும் கிடைத்தன.

இதனால் வாங்கும் சக்தி அதிகரித்தது. 1980கள் வரை இதன் மூலம் பலன் பெற்றவர்கள் கோவை மாவட்டத்தில் 80 சதவீதம் பேர் (சுமார் 8 லட்சம் பேர்) பொருளாதார வளம் பெற்றனர். அன்றைக்கு பஞ்சாலைத் தொழிலாளி என்றால் மட்டுமே பெண் கொடுப்பது பழக்கமாகவே மாறியது. இப்படியாக இருந்த நிலை 1980 களில் எம்ஜிஆர் ஆட்சிக்கு பின்பு மாறியது. தொழிலாளர் சலுகைகள் முடக்கப்பட்டன. தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அந்த அளவுக்கு தொழிலாளர் துறையில் லஞ்சமும் லாவண்யமும் பெருக்கெடுத்தது.

தொழில் முனைவோருக்கான சட்டங்கள் திருத்தப்பட்டன. சிறு மில்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. குறைந்த ஊதியம், நிறைந்த உற்பத்தி என வரும் சிறுமில்களுக்கு கிடைக்கும் லாபம் பெருமில்களை குப்புற சாய்த்தன. அதைத் தொடர்ந்து வந்து புதிய பொருளாதார கொள்கை. தாராளமயமாக்கல் இந்த துறையை வளர்த்ததோ இல்லையோ தொழிலாளர் நல சலுகைகளை புதை குழிக்கே இட்டுச் சென்றன. பெரிய மில்கள் எந்த வகையிலான தரமுள்ள நூல்களை உற்பத்தி செய்கிறதோ, அதே வகை நூல்களை சிறுமில்களும் தயாரிக்கலாம் என்ற நிலை ஏற்பட பெரிய மில்கள் அதோ கதிக்கு சென்றன.


வரிசையாய் பெரு மில்கள் பூட்டப்பட, சிறு மில்கள் பெருக்கெடுத்தன. பெரு மில் தொழிலாளர்கள் லே ஆப் என கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட, சிறு மில்கள் கேம்ப் கூலி சிஸ்டத்தில் தென்மாவட்டத்திலிருந்து 14-15 வயது சிறுமிகளை கூட புரோக்கர்கள் மூலம் அழைத்து வந்து அடிமைகளை போல தங்க வைத்தனர். அவர்களை 8 மணி நேரம் என்றில்லை; பனிரெண்டு, பதினாறு மணி நேரம் கூட வேலை வாங்க ஆரம்பித்தனர்.

உண்டி, உறையுள், மாதம் ஒரு சிறு தொகை கொடுப்பதோடு, மூன்று வருடம் கழிந்ததும் ரூ. 30 ஆயிரம் திருமணச் செலவுக்கு தரப்படும் என்று ஆசை வார்த்தை காட்டப்பட்டனர். அதற்கு மாங்கல்யத் திட்டம் என்றும் பெயரிட்டனர். இப்படி மூன்று வருடம் பயிற்சியாளராகவே உழைப்பு வாங்கப்பட்ட பெண்கள் பின்னர் திருமணமாகி புருஷன் வீட்டிற்கு செல்ல அந்த ரூ. 30 ஆயிரம் பயன்பட்டதோ இல்லையோ, அவர்களின் நெஞ்சுக்குழிக்குள் சிக்கிய பஞ்சுப் புகை மண்டலம், அதனால் ஏற்பட்ட ஆஸ்துமா, டி.பி உள்ளிட்ட நோய்கள் பாடாய் படுத்தின. இதிலிருந்து இன்னும் சிலர் தப்பிப்பிழைத்தாலும் வறுமையும் கொடுமையும் அவர்களை விடவில்லை.

மறுபடியும் மூன்றாண்டு கால ஒப்பந்தம். மறுபடி அட்வான்ஸ் தொகை. மறுபடி விரட்டல், வேலை வாங்கல் என புறப்பட்டனர். இதன் மூலம் மில் தொழிலாளி என்பவன் தொழிலாளி என்ற நிலை மாறி அத்துக்கூலி நிலைக்கும், அடிமைக்கூலி நிலைக்கும் மாற்றப்பட்டனர். இதில் சங்கம் சேர்க்கவோ, நியாயம் கேட்கவோ வாய்ப்பில்லை. அன்றைக்கு தொழிலாளியின் உரிமைக்காக போர்தொடுத்து குரல் கொடுத்த தொழிற்சங்கவாதிகள் எல்லாம் பெரிய அரசியல்வாதிகளாக மாறி விட்டனர்.

அதையும் மீறி நேர்மையாக சங்கம் வைக்கவும், சங்கம் நடத்தவும், சங்கத்தை தொடரவும் இருந்தவர்களை முதலாளிகள் உருவாக்கின பெயர் அளவு சங்கங்கள் இறுக்கி முடக்கி நசுக்கி கொன்றன. பஞ்சாலை என்றால் கைநிறைய சம்பளம் என்ற நிலை மாறி, பஞ்சாலை என்றால் கேம்ப் கூலி என்பதுதான் நிஜம் என்றே மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.

அன்றைய காலத்தில் இருந்த 175 பெரிய மில்களை துவம்சம் செய்த சிறிய இன்றைய கணக்குக்கு கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் 20 ஆயிரத்தை தாண்டும் என கணக்கிடப்படுகிறது. அவற்றில் சுமார் 15 லட்சம் பேர் வரை கூட பணிபுரியக்கூடும். அதில் கேம்ப் கூலிகளாக வருபவர்கள் மட்டும் 90 சதவீதம் பேருக்கும் மேலே.

அவர்களுக்கான மொத்த ஊதியம் என்று கணக்கிட்டால் மாதம் ரூ. 5 ஆயிரம் தாண்டினால் அதிசயமே. ரூ. 300 ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மாத ஊதியம் வாங்கும்போது, ரூ. 1000 மாத ஊதியம் பெற்ற பஞ்சாலைத் தொழிலாளி, இன்றைக்கு ரூ. 70 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் இருக்கும் நிலையில் பஞ்சாலை தொழிலாளி -அதுவும் இளம்பெண்கள் பயிற்சி என்ற பெயரில் வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு அடக்கமாக வழங்கப்பட்டு நசுக்கப்படுகிறார் என்றால் இதை கொடுமை என்பதா, வளமை என்பதா?

இதோ சில பஞ்சாலைகள் பள்ளி இடைநிற்றலோடு வரும் இளம் பெண்களை தன் இருப்பிடத்திலேயே தங்க வைத்து 8 மணி நேர வேலை வாங்கிக் கொள்வதோ, அப்படியே கல்லூரியில் படிக்க வைப்பதாக சொல்கிறது. அதன் மூலம் ப்ளஸ்டூ, டிகிரி, முதுநிலை பட்டம் எல்லாம் கொடுத்து தன்னை பேருபகார வாதியாகக் காட்டிக் கொள்கிறது. அதை பெருமை பொங்க, இதுவல்லவோ பஞ்சாலை என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள் சில மேலோட்ட சிந்தனாவாதிகள்.

ஒரு இளம்பெண்ணை கசக்கி பிழிந்து தினம் எட்டுமணி நேரம் வாங்குதலின் மூலம் ஒன்றுக்கு நான்கைந்து மடங்கு கூலியையே சுரண்டிக் கொழுக்கும் ஆலை நிர்வாகங்கள் வருடத்திற்கு ரூ. 5 ஆயிரம் , ரூ. 10 ஆயிரம் செலவழித்து படிக்கவைக்கிறேன் என கிளம்புவது பேரதிசயமா என்ன?

ஒரு காலத்தில் ஒரு தொழிலாளி பல குடும்பங்களை வாழ வைத்து, தன் குடும்பத்தையும் பிழைக்க வைத்து, தன் குழந்தைகளையும் படிக்க வைத்தான். இன்றைக்கோ தொழிலாளியாகப்பட்டவன்/ள் அடிமைத் தொழிலாளியாக பஞ்சாலையிலேயே தங்கி, பணிபுரிந்து அவர்கள் கொடுக்கும் சோற்றையும், சாற்றையும் உண்டு, அவர்கள் கொடுக்கும் படிப்பையும் படித்து பிறகுதான் திருமணம் செய்து அன்றாட வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் தொழிலாளி முறையே எங்கோ இடிக்கிறதே.

அந்த இடித்தலுக்குள்தான் பஞ்சாலைகள் சிக்கித் தவிக்கின்றன. இங்கே பஞ்சாலைகள் உண்டு. அதுவும் முந்தையதை விட பலமடங்கு உற்பத்தி, பல மடங்கு தரத்துடன் கூடிய பல மடங்காக பஞ்சாலைகள் பெருகியிருக்கின்றன. ஆனால் தொழிலாளிதான், அன்றாடக் கூலியாகி காணாமலே போய்விட்டான். அதை சரிப்படுத்த சட்டங்களும், திட்டங்களும் சரியாக வேலை செய்ய வேண்டும். அதற்கான சரியான அரசியல் தலைவர்கள் வரவேண்டும்.








கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன், கல்லாறு பழப்பண்ணை, ஆனைமலை மாசணியம்மன் ஆலயம், ஈச்சனாரி விநாயகர் போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களால் எப்போதும் நிறைந்தே காணப்படுகிறது. அங்கெல்லாம் யாவரும் சென்று வரலாம். அவற்றைத் தவிர்த்து கோவையைச் சுற்றி பார்த்தே ஆக வேண்டிய 11 இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. ஆதிகோனியம்மன்


கோவைக்குப் பெயர் காரணியானது கோனியம்மன் கோயில். கோவை ரயில் நிலையத்திலிருந்து கூப்பிடும் தொலைவில் அமைந்திருக்கிறது. கோவை அடர் கானகம் சூழ்வெளியாக இருந்த ஆதிகாலத்தில் இருளர்குலத் தலைவன் கோவன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பெயரால் கோவன் புத்தூர் என்று வழங்கப்பட்ட ஊர் பின்னாளில் கோயம்புத்தூராகி, கோவையுமாகி சுருங்கி விட்டது. அந்தக் காட்டரசனுக்கு அருள்பாவித்து ஊருக்கே காவல் தெய்வமாக விளங்கிய அம்மன், இப்போது கோவை நகரின் நடுமையத்தில் ஆலயம் எழுப்பி குடி வைக்கப்பட்டிருக்கிறாள். கோனியம்மன் சிற்பம் புதிதாக எழுப்பி வைக்கப்பட்டிருப்பதால் ஆதியில் இருந்த அம்மன் ஆதி கோனியம்மன் என்ற பெயரில் இக்கோயிலுக்கு பின்புறம் மரத்தடியில் வீற்றிருக்கிறாள். கோவைக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து அம்மனை தரிசிக்காமல் செல்வதில்லை.

2. மருதமலை

அருள்மிகு தண்டாயுதபாணி வாசம் செய்யும் பக்தி ஸ்தலம். ஆதிகாலத்தில் சித்தர்கள் வாழ்ந்த இடம். இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் இடம். தமிழ் சினிமாவில் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பாதேவர் இக்கோயிலின் அருமை பெருமைகளைக் காட்டியதன் விளைவு உலகப்புகழ் பெற்றது. அப்போதிருந்து இப்போது வரை முருகனின் ஏழாவது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுவது. அதனால் அன்றாடம் பக்தர்கள் கூட்டம் மட்டுமல்ல சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் நிரம்பி வழிகிறது. கோவை ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவு. பஸ் வசதி உண்டு. அங்கு சென்று அடிவாரத்தில் இறங்கினால் அங்கிருந்து சுமார் ஆயிரம் படிக்கட்டுக்கள் மலை ஏறிச்சென்று முருகனை தரிசித்து வரவேண்டும். அல்லது அடிவாரத்திலிருந்து தேவஸ்தான பஸ் உண்டு.

3. சிறுவாணி


26cbkk01siruvani-1jfif100 

உலகிலேயே இரண்டாவது சுவையாள நீர் சிறுவாணி. கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த நீர் கேரள- தமிழக எல்லையில் பல்வேறு நீரோடைகள் வாயிலாக வந்து சிறுவாணி அணையில் குவிகிறது. இதன் உபரிநீர் அங்கிருந்து சிறுவாணி ஆறாக கேரளாவுக்குள் நளின நடைபயின்று பவானி நதியில் கலக்கிறது. சிறுவாணி அமைந்திருக்கும் இடம் கேரள பகுதிதான். என்றாலும் இந்தப் பகுதியை தரிசிக்க இரு மாநில டூரிஸ்ட்டுகள் மட்டுமல்ல. வெளி நாட்டவர்களும் படையெடுக்கிறார்கள். ஏனென்றால் இது அவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். எனவே சராசரி மக்கள் இங்கே நுழையத் தடை விதித்திருக்கிறது வனத்துறை. உங்களுக்கு யாராவது அரசு நிர்வாகத்திலோ, வனத்துறையிலோ தொடர்பு இருந்தால் அவர்களிடம் அனுமதி பெற்று இந்த ரம்மியமான இடங்களை தரிசிக்கலாம். இந்தப் பகுதியைப் பார்வையிட நீங்கள் செல்லும்போது வனத்துறையினர் இருவரும் துப்பாக்கி ஏந்திய வண்ணம் உங்களுக்கு துணை வருவார்கள். ஏனென்றால் இந்த வழித்தடத்தில் எந்த நேரத்தில் எத்தனை யானைகள் நம்மை மறித்து அட்டகாசம் செய்யும் என்று சொல்லமுடியாது. இதன்தூரம் கோவையிலிருந்து சுமார் 40 கி.மீதான். ஆனால் கடைசி 8 கி.மீ பயண தூரத்தை அடர்ந்த கானகத்தின் வழியே ஜீப் அல்லது வேன் மூலமாகத்தான் கடக்க வேண்டும்.

4. கோவை குற்றாலம்

kovaijfif100 

போகிற வழியிலேயே அமைந்திருக்கிறது கோவை குற்றாலம். விண்முட்ட நிற்கும் நீல மலைகள். அதை மிஞ்சிப் பறக்கும் பஞ்சுப்பொதிகளாய் மேகங்கள். பச்சைக்கம்பளம் போர்த்ததுபோல் அடர்ந்த தேக்கு மரக்காடுகள். அதன் ஊடே ஆங்காங்கே பெருக்கெடுக்கும் நீரோடைகள். சறுக்கி விழும் பேரருவி. சிற்றருவி. அதில் எதில் உங்களுக்கு நனையத் தோன்றுகிறதோ நனையலாம்  ஆடலாம். பாடலாம். ஆனால் கொஞ்சம் மிகவும் கவனமாக ஆட வேண்டும். ஏனென்றால் நீங்கள் நிற்கும் இடம் அத்தனையும் சறுக்கி விடும் பாறைகள். அதில் சறுக்கி பலருக்கு கபாலம் பிளந்த கதைகளும் உண்டு. எப்படியாகினும் சாடிவயல் பஸ்ஸைப் பிடித்து கோவை குற்றாலம் வனத்துறை செக்போஸ்ட்டில் (கோவையிலிருந்து சுமார் 35 கி.மீ. ஒரே அரசு பஸ் செல்கிறது.

டிக்கெட் அதிகபட்சம் போனால் 5 ரூபாயைத் தாண்டாது. ஆனால் வனத்துறை செக்போஸ்ட்டில் தலைக்கு பத்து, இருபது அனுமதிக் கட்டணம் செலுத்த வேண்டும். கேமரா கொண்டுபோனால் அதற்கு சார்ஜ் தனி. அது கன்னாபின்னாவென்று இருக்கும். இந்த செக்போஸ்ட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் அடர்ந்த காடுகள் வழியே நடந்தால் சோவென்று அருவியின் சப்தம் கேட்கும். அதை மீறி ஆங்காங்கே யானைகளின் பிளிறலும் கேட்கும். அந்த யானைகள் உங்களை துவம்சம் செய்துவிடும் என்று கருதித்தான் வனத்துறை சுற்றுலாப் பயணிகளை இங்கே காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மட்டும் அனுமதிக்கிறார்கள். இந்த நேரத்திற்கு விரோதமாக நீங்கள் அங்கே இருந்தால் கஜராஜன்களிடம் தப்பிக்க யாரும் கேரண்டி கொடுக்க முடியாது.

5. பூண்டி வெள்ளியங்கிரிமலை ஆண்டவர் சன்னதி

இமயமலை வடகயிலாயம் என்று வழங்கப்படுவது போல் இதற்கு தென்கயிலாயம் என்றும் பெயர் உண்டு. இதற்கும் கோவை மத்திய நகரப் பேருந்து நிலையத்திலிருந்து (30 கி.மீ.) பஸ் உண்டு. சிவராத்திரி. சித்ரா பௌர்ணமி, அமாவாசை  தினங்களில் சிறப்புப் பேருந்துகளும் உண்டு. இதுவும் மலைகள் அடர்ந்த ரம்மியமான காட்டு யானைகள் மிகுந்த பிரதேசம் என்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் இங்கே நடமாடுவது ஆபத்தானது. என்றாலும் இந்த வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமியன்று இரவில் ஆண்கள் தடி ஊன்றிக்கொண்டு ஏறுகிறார்கள். கிட்டத்தட்ட செங்குத்தான ஏழு மலைகளைக் கடந்து அங்குள்ள சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு கீழிறங்குகிறார்கள். இதை வருடந்தோறும் நேர்த்திக்கடனாகவே செய்கிறார்கள் கொங்கு நாட்டு மக்கள். மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி நாதரை தரிசித்து விட்டுவரும் வழியிலேயே (இரண்டு கி.மீ. தூரத்திலேயே) ஈஷா யோகா மையம் இருக்கிறது. அங்கே ஏழு கண்டங்களை கொண்ட பிரம்மாண்ட லிங்கம் இருக்கிறது; ஆதியோகி சிலையும் உள்ளது. பார்த்து விட்டு வரலாம்.

6. ஆழியாறு

பொள்ளாச்சி கோவையிலிருந்து 45 கி.மீ. தூரம். அங்கிருந்து சுமார் 20 கி.மீ. ஆழியாறு அணை. வால்பாறை மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட அணையையும், அதன் சுற்றுப் பகுதியையும் நீங்கள் முதன்முறையாகப் பார்த்தாலும் கூட ஆஹா இந்த இடத்தை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேனே என்று சொல்லத்தோன்றும். ஏனென்றால் தமிழ்ப் படங்கள் இந்த சுற்று வட்டாரப்பகுதிகளில்தான் அவுட்டோர் எடுக்கப்பட்டு உங்கள் கண்களுக்கு விருந்தாக்கப்பட்டுள்ளன. அணையில் எந்நேரமும் போட்டிங் நடக்கிறது. அதில் ரவுண்ட் சென்றால் அடுத்துள்ள மலைக்குன்று வரை படகில் அழைத்துச் சென்று காட்டுகிறார்கள். அடுத்த பிரம்மாண்ட பூங்கா வெளியில் ஆடிப்பாடி கொண்டாடலாம். உணவருந்தலாம். குட்டித்தூக்கமும் போடலாம்.

7. குரங்கருவி

அதாவது மங்கி ஃபால்ஸ் ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்கு செல்வதற்கு முன்பு ஒரு கி.மீ. தொலைவில் ஒரு வனத்துறை செக்போஸ்ட் குறுக்கிடும். அங்கே தலைக்கு கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். கேமராவிற்கு தனி சார்ஜ். அந்த டிக்கெட் இருந்தால்தான் நம்மை அருவிக்குள் அனுமதிப்பார் பால்ஸ் முகப்பில் நிற்கும் வன ஊழியர். உள்ளே சென்றுவிட்டால்- அதிலும் அருவியில் குளித்துவிட்டால் அங்கிருந்து விடுபடவே தோணாதுங்க. இங்கே குளிக்கச்செல்லும் முன்பு உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். காரில் சென்றிருந்தீர்களென்றால் கண்ணாடிகளை நன்றாக ஏற்றிவிட்டு விடுங்கள். இல்லாவிட்டால் திருடர்களை விட ரொம்ப ஆபத்தானவர்கள் இங்கு கும்மாளமிடும் குரங்குகள். உங்கள் பொருட்களை எடுத்து வாலிபால் விளையாட ஆரம்பித்துவிடும்.

8. காடாம்பாறை அணை

குரங்கருவியிலிருந்து பத்து கி.மீ. தொலைவு அட்டகட்டி. இங்கிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு சென்றால் காடாம்பாறை நீரேற்று அணைத்திட்டம் உங்களை வரவேற்கும். இங்கு செல்ல ஒரே ஒரு பஸ்தான் உண்டு. பரம்பிக்குளம் மற்றும் பல்வேறு சிற்றோடைகளிலிருந்து வரும் நீரைப் பயன்படுத்தி இங்கே மின்சாரம்தயாரிக்கிறார்கள். இங்கு தனியாருக்கு அனுமதி இல்லை. மின்வாரியத்தில் உங்களுக்கு இன்புளூயன்ஸ் இருந்தால் இந்தப் பகுதியையே ஒரு ரவுண்ட் வரலாம். அல்லது போகிற போக்கில் அணைக்கட்டு சுற்றுப்பகுதியைச் சுற்றிவந்தாலே இயற்கையின் அரிய பொக்கிஷங்களை தரிசித்து மிரண்டு போவீர்கள்.

 9. டாப் ஸ்லிப்

cm17Trek-at-TopSlipjfif100 

அதி அற்புத இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். பொள்ளாச்சியிலிருந்து கிளம்பினால் இரண்டரை மணி நேர பஸ் பயணம். ஊட்டியில் எப்படி முதுமலை யானைகளின் வாசஸ்தலமோ.  அதுபோல இது வால்பாறை மலைகளுக்கு யானைகள் புகலிடமாக விளங்குகிறது. தலைக்கு பத்து ரூபா கொடுத்தால் யானை சவாரி கூட்டிப்போகிறார்கள் வனத்துறையினர். இருபது ரூபாய்க்கு வனத்துறை பஸ்ஸில் அடைத்து காட்டுக்குள் அரிய விலங்குகளைக் காட்டுவதற்காக அழைத்தும் செல்கின்றனர். இது முடித்து கொஞ்ச தூரம் போனால் பரம்பிக்குளம் அணை. இது கேரள - தமிழக எல்லையில் இருக்கிறது. இதுவரை சென்றுவிட்டு நீங்கள் மிருகங்கள் பார்க்காமல் வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் காட்டு மிருகங்கள் பார்க்கவே அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கே செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணிக்குள் உங்கள் டாப் ஸிலிப் சுற்றுலா திட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வழியெங்கும் யானைகள் மொய்க்க ஆரம்பித்துவிடும். அதைக் கருத்தில் கொண்டு உங்களை டாப் ஸ்லிப்புக்கு உள்ளேயும் வெளியேயும் விடமாட்டார்கள் வனவர்கள்.

10. திருமூர்த்தி மலை

வால்பாறை, டாப் ஸ்லிப்  இயற்கை ரம்மியக்காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது உடுமலை திருமூர்த்தி மலை. பொள்ளாச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. உடுமலை. அங்கிருந்து 18 கி.மீ.  திருமூர்த்தி அணை. இங்கிருந்துதான் உடுமலைக்கு குடிநீர் சப்ளை ஆகிறது. கோவைக்கு சிறுவாணி நீர் அமிர்தம் என்றால், திருமூர்த்தி நீர் உடுமலைக்கு தேன். அப்படியொரு சுவை. அணைக்கு சற்று தள்ளி படகு சவாரிகள் நடக்கிறது.  இங்குள்ள மலைச்சரிவில் அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கிருந்து பொடிநடையாக மலைச்சரிவுகளில் ஏறினால் எண்ணி இரண்டு கி.மீ. தூரத்தில் பஞ்சலிங்க அருவி கொட்டுகிறது. இங்கே கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். இங்குள்ள குகையில் தேங்காய் ஒன்றை உருட்டிவிட்டால் உள்ளே தேங்காய் உடைபட்டு பூஜை மணியோசை கேட்குமாம். அதை நாம் பரிட்சித்துப் பார்க்கவில்லையானாலும் சொல்லக்கேள்வி. அந்தக் குகை பழநிமலை முருகன் சந்நிதானத்திற்குச் செல்லும் குகை என்றும் ஒரு கருத்து உண்டு. ஆனால் யாரும் குகைக்குள் புகுந்து சென்று பார்த்ததில்லை. 

11. பர்லிக்காடு பரிசல் சவாரி

கோவை நகரிலிருந்து சுமார் 50 கி.மீ. பில்லூர் அணை. கோவையின் குடிநீர் ஆதாரங்களில் அடுத்த முக்கியமான அணை. இங்கு வனத்துறையே பரிசல் சவாரி செய்கிறது. அதுவும் எப்படி ஆதிவாசிகள் ஸ்டைலில் குடில் அமைத்து சமைத்துப் போட்டு மக்களை பரிசல் சவாரிக்கு இட்டுச் செல்கிறார்கள் ஆனால், கட்டணம்தான் கொஞ்சம் ஜாஸ்தி. ஆளுக்கு ரூ.300. இதையும் 20 கி.மீ.க்கு அப்பால் உள்ள காரமடை வனத்துறை அலுவலகத்தில் செலுத்தி டிக்கெட் வாங்கவேண்டும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் சவாரி நடக்கும். அப்படி கஷ்டப்பட்டு சவாரி செய்வதற்கு அப்படி என்னதான் இருக்கிறது? அங்கே சவாரி மட்டுமல்ல கொங்கு மக்களின் இஷ்ட உணவுகளான ராகிக் களி, சோளக்களி, கம்மங்கூழு, கம்மஞ்சோறு, ரக்கரிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு, மீன் வறுவல் என நாட்டுப்புற உணவுகள் எல்லாம் கிடைக்கிறது. இதை சமைத்துத் தருபவர்கள் இங்குள்ள பழங்குடிகள்.




1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை; மதுரையைக் கடக்கிறது வைகை; நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி; தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது; திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது; என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.
வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார். இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை; ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன; ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம். மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம். கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம். வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது. எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.
பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை. உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...
அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான். எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை. அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்; குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி'; மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை'; ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ், அத்துப்படியான ஆங்கிலம், இதமான காலநிலை, சுவையான சிறுவாணி, அதிரடியில்லாத அரசியல்... இவற்றையெல்லாம் தாண்டி, அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.
புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி பீடு நடை போடுகிறது. அதைக்கொண்டாட வேண்டிய அழகான நாள் இன்று...கோயம்புத்தூர் தினம்.
எல்லோரும் சொல்வோம் இறுமாப்பாய்...

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.