Showing posts with label ILAIYARAJA. Show all posts
Showing posts with label ILAIYARAJA. Show all posts

Monday, 7 June 2021

ILAIYARAJA , ARTIST DIED ON CORONO JUNE 7 ,2021

 ILAIYARAJA , ARTIST  DIED 

ON CORONO JUNE 7 ,2021




தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்!
புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா.
ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இவருக்கு வயது 43.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். ‘’ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது’’ என நண்பர்களிடம் சொன்னவர் அவராகவே மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர் மூச்சடைப்பின் காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தொற்று நுரையீரல் முழுக்கப் பரவிய நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட மரணம் அடைந்தார் ஓவியர் இளையராஜா.
ஓவியர் இளையராஜாவின் ‘தமிழக இந்து பெண்கள்' ஓவியங்கள் பெரும்புகழ் பெற்றவை. அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை மிகத்தத்ரூபமாக வரைவதில் தேர்ந்தவர் இளையராஜா.
தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. இவரது இழப்பு உண்மையிலேயே ஓவிய உலகுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.
கொரோனாவால் தலைசிறந்த கலைஞனைப் பறிகொடுத்திருக்கிறோம். சிறு அலட்சியம்கூட பேராபத்தில் கொண்டுபோய்விடும் என்பதை உணர்வோம்.கவனமாக இருப்போம்..
ஒம் சாந்தி.
119
51 Comments
36 Shares

Wednesday, 2 June 2021

ILAIYARAJA,MUSIC DIRECTOR BORN PROPOSED AS JUNE 4,1953 , CELEBRATED AT HIS WILL BORN 1953 JUNE 2

 



ILAIYARAJA,MUSIC DIRECTOR BORN 

PROPOSED AS JUNE 4,1953 , CELEBRATED

 AT HIS WILL BORN 1953 JUNE 2



ஜூன் 2,


இசைஞானி இளையராஜா பிறந்த தினம் இன்று (1943).


இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...


1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

2. பிறந்த தேதி : 2.6.1943

3. தந்தை : டேனியல் ராமசாமி 

4. தாய் : சின்னத்தாய் 

5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

6. கல்வி : எட்டாம் வகுப்பு

7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )

8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி

9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)

10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25 ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது

11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே  ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன் மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.

12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும், பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய் இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.

14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.

15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் இளையராஜா.


16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள் ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு ரயில் ஏறினார்.


17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்


18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர். 


19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர். 


20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும் அங்கேயே பயிற்சி பெறலானார்.

21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்.

22. க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது 1961 ம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார்.

24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி வந்துள்ளார்கள்.

25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால் அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார். 


26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும், இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும் போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங் அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார். 

27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில் சேர்ந்தார்.

28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.

29.. முதல் படம் “அன்னக்கிளி” தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார். 

30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய  அனைவருக்கும் பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு 

எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது திறமையை நிரூபித்தார் இளையராஜா. 

31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில் அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய் 

உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”. 

32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது. ஆனால் சினிமாவில் சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.

33. கதை, கவிதை, கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது. ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள். 

35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின் வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன் காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன் வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.

36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.

37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான் புத்துயிர் பெற்றன.

38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான் கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.  

39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான 

ஒன்று. 


40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில் இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள். 

வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும். 

ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக முடிந்துவிடும். சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்க வேண்டியதில்லை. அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.


41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார். 

மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம் என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.

42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.

43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்


46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார். 


1985  - சாகர சங்கமம் (தெலுங்கு)

1987  - சிந்து பைரவி (தமிழ்)

1989  - ருத்ர வீணை (தெலுங்கு)

2009  - பழஸிராஜா (மலையாளம்)

2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)


47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.


48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘இளையராஜா இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர். 


பண்டிட் பீம்ஸென் ஜோஷி, பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும் பாராட்டிப் பேசினார்.


49. கோவையில் தான் எனது 

ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம் வாங்கினேன்.

அந்த ஹார்மோனியம் தான் இன்றும் என்னிடம் உள்ளது என்று அடிக்கடி சொல்வார்.


50. கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.

ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ் செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு 

பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும் ‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.


51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால் பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார். 


அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.


52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. 


இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை 

மும்மூர்த்திகளில் ஒருவரான ” தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.


53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத் தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.


54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். 

இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.


55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.


56. 1994 ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996 ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.


57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர், 


58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக் கொடுத்து இதற்கு காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக் 

கொடுத்திருக்கிறார்.


59. பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று வெள்ளம் என்று வர்ணிப்பார்.


60. அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.


61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. 


ஹிந்தி பாடல்களை கேட்பதையும் 

பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான சாதனையை செய்தவர் இளையராஜா.


62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.


63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.


64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.


65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து சாதனை படைதுள்ளார்.


66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.


67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின் இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.

69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.

70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது. அதே இணையதளம் இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.

71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75 ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின் “ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.

Wednesday, 10 March 2021

GIREESH PUTHENCHERRY , LYRICS WITH ILAIYARAJA

 

GIREESH PUTHENCHERRY , 

LYRICS WITH ILAIYARAJA



பாடலாசிரியர் GIREESH PUTHENCHERY அவர்கள் 🙏

இந்தத் தாமரைப் பூ தீயில் இன்று, காத்திருக்கும் உள்ளம் நொந்து, கண்கள் என்னும் பூந் தேன் தும்பி பாடிச் செல்லாதோ? ❤️
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், மலையாளத்தில் பல பாடல் வரிகளைப் பாடலாசிரியர் Gireesh Puthenchery அவர்கள் எழுதியுள்ளார். இசைஞானியின் இசையில், "Kaalapani" எனப்படும் மலையாளப் படத்தில் (தமிழ்: சிறைச்சாலை) அனைத்துப் பாடல்களின் வரிகளையும் எழுதியது இவரே என்பது குறிப்பிடத் தக்கது. இப் படத்தில் வந்த "Chempoove Poove" என்னும் மலையாளப் பாடலின் போது இசைஞானிக்கும், இவருக்குமிடையில் நடந்த சம்பவமொன்றை எப்போதோ வாசித்துள்ளேன். அச் சம்பவம் பற்றி என் நினைவிலிருப்பதை இங்கே உங்களனைவருடனும் பகிர விரும்புகிறேன்:
"Chempoove Poove" பாடலுக்காகக் Gireesh Puthenchery அவர்கள் எழுதிய வரிகள் விரசம் கொண்டனவையாக இருப்பதினால், பாடலின் வரிகளை மாற்றா விடில் இப் பாடலுக்கு இசையமைக்க மாட்டேனென இசைஞானி மறுத்து விட்டார். வரிகளில் ஒரு சொல்லைக் கூட மாற்ற மாட்டேனெனச் சொல்லிய Gireesh Puthenchery அவர்கள், வரிகளில் இயற்கை (Nature) பற்றிச் சொல்லப்பட்டுள்ளதே தவிரப் பெண்ணைப் பற்றியல்ல என்று சொல்லிச், சில சமஸ்கிருத ஸ்லோகங்களை எடுத்துரைத்து, இயற்கை பற்றிச் சொல்லும் இச் சமஸ்கிருத ஸ்லோகங்களின் மலையாள வடிவமே தானெழுதிய வரிகளென இசைஞானிக்கு விளக்கமளித்தார். இவருக்கிருந்த சமஸ்கிருத அறிவைக் கண்ட இசைஞானி, இளம் வயதில் கடினமான சமஸ்கிருதத்தில் எப்படி இவ்வளவு அறிவு வந்ததென வியந்து போய் கேட்க, ஆயுர்வேத வைத்தியரான தனது தந்தையிடமிருந்தும், சமஸ்கிருதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற தனது தாயாரிடமிருந்தும் பாரம்பரியமாகத் தனக்குப் புகட்டப்பட்ட சமஸ்கிருதத்தைத் தான் உயிரோடு வைத்திருந்ததே தனது அறிவுக்குக் காரணமென இவர் பதிலளித்துள்ளார். தானெழுதிய பாடல் வரிகளில் தனது சமஸ்கிருத அறிவை இதுவரை உபயோகிக்காததால் தனது சமஸ்கிருதப் புலமை வெளியே தெரிய வரவில்லையென்றும் இவர் சொல்லியுள்ளார். இதைக் கேட்ட இசைஞானி "தற்காலிகமான விளையாட்டு வீரர் போலில்லாமல் வாழ்நாள் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்" என்று சொல்லி இவரை வாழ்த்தியதோடு, இவர் எழுதிய "Chempoove" பாடல் வரிகளில் ஒரு சொல்லைக் கூட மாற்றாது அவ் வரிகளுக்கு இசையமைத்தார். அந்தப் பாடல் பெரும் வெற்றியடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இளம் வயதிலேயே, நோய்வாய்ப்பட்டு இவர் மரணமாகியது பாடல் துறைக்கு மிகப் பெரும் இழப்பாகும்.
விரசமிருப்பதால் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத வரிகளுக்கு இசையமைக்க மாட்டேன் என்று தன் நிலையில் நின்ற இசைஞானியின் பிடிவாதத்தையும், வரிகளின் அர்த்தங்களுக்கு விளக்கம் கொடுத்த பின், ஒரு பாடலாசிரியரின் விளக்கத்திற்காகத் தன் நிலையை விட்டு இறங்கி வருவதா என்ற மனநிலையில்லாமல், பாடலாசிரியரைப் பாராட்டியதோடு, வரிகளிலுள்ள ஒரு சொல்லைக் கூட மாற்றச் சொல்லிக் கேட்காமல் இசையமைத்த இசைஞானியின் மேன்மையான குணத்தையும், மிகப் பெரிய இசையமைப்பாளரிடம், வாய்ப்புப் போகலாம் என்ற பயமின்றித் தான் எழுதிய வரிகளில் ஒரு சொல்லைக் கூட மாற்ற மாட்டேன் எனச் சொன்ன பாடலாசிரியரின் தைரியத்தையும், இசைஞானியே சம்மதம் தெரிவிக்குமாறு விளக்கம் கொடுக்கக் கூடிய பாடலாசிரியரின் புலமையையும் எண்ணி வியக்கிறேன் 🙏
எனக்கு மிகக் குறைவான மலையாள மொழிப் புரிதலிருப்பதால், மலையாள மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் இப் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ள இயற்கை பற்றிப் பின்னூட்டங்களில் சொல்லவும். இயற்கையை விடப் பெண்ணின் அழகே பாடல் காட்சியில் படமாக்கப்பட்டுள்ளது.
இப் பாடலின் தமிழாக்க வரிகளைப் பாடலாசிரியர் அறிவுமதி அவர்கள் எழுதியிருப்பார்கள்:
செம்பூவே !! பூவே !!
உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ?
சாய்ந்தாடும் சங்கில்
துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே
படை கொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ?
மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ?
இமைகளும் உதடுகள் ஆகுமோ?
வெட்கத்தின் விடுமுறை
ஆயுளின் வரை தானோ?
அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில்
முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப்
பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாசச் சூட்டில்
காதல் குற்றாலம்
தேன் தெளிக்கும் தென்றலாய்
நின் அருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய்
நீந்தி விளையாடவா?
நாளும் மின்னல் கொஞ்சும்
தாழம் பூவைச் சொல்லி
ஆசை கேணிக்குள்ளே
ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால் வலி கொள்ளாதோ?
கை வளை கைகளைக் கீறியதோ?
இந்தத் தாமரைப் பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந் தேன் தும்பி
பாடிச் செல்லாதோ?
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டுப்
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்
சேலைப் பொன் பூவே
விம்மியது தாமரை
வண்டு தொடும் நாளிலா?
பாவை மயில் சாயுதே
மன்னவனின் மார்பிலோ?
முத்தத்தாலே பெண்ணே
சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தால் ஓர் ஆடை
சூடிக் கொள்வேன் நானே
பாயாகும் வழி சொல்லாதே
பஞ்சணைப் புதையல் ரகசியமே..
தமிழ்:
செம்பூவே பூவே (படம்: சிறைச்சாலை):
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம் & K S சித்ரா:

Thursday, 23 July 2020

ILAIYARAJA , MOST TALENTED MUSIC DIRECTOR -KAMAL HASSAN





ILAIYARAJA , MOST TALENTED MUSIC DIRECTOR
-KAMAL HASSAN




இளையராஜா எனும் இசை மேதை பற்றிய கமல்ஹாசன் அவர்களின் முழு பதிவு 

"ஹேராம் - முழுப்படத்தையும் முடித்துவிட்டு ஃபைனல் மிக்ஸிங்குக்காக ஒரிஜினல் இசையைக் கேட்டால், ‘ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் கொடுப் பேன்’ என்றார் அறிமுக இசையமைப்பாளரான அந்த இசைமேதை. ‘வேறு வழியில்லை, ராஜாவிடம் போவோம்’ என்றேன். ‘வேறு ஒருவரிடம் போய்விட்டு வந்ததால் அவர் பண்ணுவாரா என்பது சந்தேகம்’ என்றார்கள். ‘பண்ணுவார், நான் போவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன். ‘என்ன’ என்று கேட்டார் ராஜா. ‘தப்புப் பண்ணிட்டேன். இந்த மாதிரியெல்லாம் ஆகிப்போச்சு’ என்று என் குறைகளைச் சொன்னேன்.

வேறு நபராக இருந்திருந்தால், ‘செம மேட்டர் சிக்கிடுச்சு’ என்று நினைத்துக்கொண்டு, ‘எனக்குத் தெரியும்…’ என்று எதிராளியைப் பற்றிக் குறை சொல்லத் தொடங்குவார்கள். இல்லையென்றால், ‘இல்லல்ல… எனக்கு வேறு வேலைகள் இருக்கு’ என்று சொல்லித் தவிர்ப்பார்கள். ஆனால் ராஜாவோ, ‘`சரி, அதை விடுங்க. இப்ப என்ன பண்ணப்போறீங்க?’’ என்று நேராக பிரச்னைக்குள் வந்தார். ‘`பாட்டெல்லாம் ஷூட் பண்ணிட்டேன்’’ என்றேன். ‘`அப்ப அந்தப் பாட்டை யெல்லாம் திரும்ப எடுக்க எவ்வளவு செலவாகும்?’’ என்றார். ‘`அதைப்பற்றி இப்ப பேசவேணாம். நாம அந்தப் பாடல்களைப் புதுசா கம்போஸ் பண்ணி ரெக்கார்ட் பண்ணுவோம். அதைவெச்சு நான் புதுசா ஷூட் பண்ணிக்கிறேன். எவ்வளவு குறைவான பட்ஜெட்டில் இதைப் பண்ண முடியும்னு நீங்க சொல்லுங்க’’ என்றேன்.

‘`எனக்கு என்ன கொடுப்பீங்க?’’ என்றார். ‘`என்னங்க இந்த நேரத்துல இப்படிக் கேக்குறீங்க. தப்புப் பண்ணிட்டேன்னு சொல்லிட்டுதானே வந்திருக்கேன். தண்டனைக்கு இது நேரமில்லையே’’ என்றேன். ‘`அதெல்லாம் பேசப்படாது. பாட்டைப்பூரா எடுத்தீங்கன்னா என்ன செலவாகுமோ அந்தச் செலவை எனக்குக் கொடுங்கன்னா கேக்குறேன்?’’ என்றார். ‘`என்னங்க, இப்ப பண்ண மாட்டேங்குறீங்களா, என்ன சொல்றீங்க?’’ என்றேன். ‘`மாட்டேன்னு எங்க சொன்னேன். உங்களுக்கு அந்தச் செலவே இல்லாம பண்றேன். எனக்கொரு ஐடியா வந்துடுச்சு’’ என்றார்.

‘`என்ன?’’ என்று கேட்டேன். ‘`ஏற்கெனவே எழுதிய பாடல்கள், நீங்க எடுத்த வீடியோ காட்சிகள் எதையும் மாத்த வேணாம். அப்படியே இருக்கட்டும். அந்த வரிகளுக்கும் காட்சிகளுக்கும் பொருந்துறமாதிரியான இசையை நான் கம்போஸ் பண்ணித் தர்றேன். திரும்ப ஷூட் பண்ண வேணாம். எனக்கு என்ன கொடுக்குறீங்களோ கொடுங்க. அதைப்பற்றிக் கவலையில்லை. நான் செஞ்சுகாட்டுறேன்’’ என்றார் உறுதியுடன்.

‘`என்னடா இது, கிணறுவெட்ட வேறு பூதம் கிளம்புதே, தப்பாயிடுமோ’’ என்ற பயம் எனக்கு. ஒருமாதிரி தயக்கத்துடன், `‘அது பரவாயில்லைங்க. என்னைக் காப்பாத்துறேன்னு சொல்லிட்டு மியூசிக்கை நாம கம்மிபண்ணிடக்கூடாது. எல்லாம் ஹிட் சாங்கா வரணும். நீங்க போடுறபடி போடுங்க. செலவானா பரவாயில்லை. நான் ஷூட் பண்ணிக்கிறேன்’’ என்றேன். ‘`அப்படின்னா என் மேல நம்பிக்கை இல்லைனு எடுத்துக்கலாமா’’ என்றார். ‘`ஐயய்யோ… அப்படியில்லைங்க’’ என்று அவசர அவசரமாக மறுத்தேன். ‘என்னமோ நடந்துடுச்சு. இனிமேலாவது நண்பர் சொல்வதைக் கேட்போம்’ என்று நினைத்துக்கொண்டு, ‘`நீங்க சொல்றதுமாதிரியே கம்போஸ் பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பிறகு, என்னை அழைத்துக் காட்டினார். ‘இது உண்மைதானா, மேஜிக்கா, இசையில் இப்படியெல்லாம் நிகழ்த்த முடியுமா?’ என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆம், ‘ஹேராம்’ படத்தில் அத்தனை ஹிட் பாடல்களும் ஏற்கெனவே எழுதி, ஷூட் பண்ணின காட்சிகளுக்குப் புதிதாக இசையமைக்கப் பட்டவை. அதே வரி, அதே சொற்கட்டு. ஆனால், இசையும் ராகமும் வேறு. ராஜா வழி வந்தவை.

அதில் ஒரு காட்சியில், இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்ய, பெண் பார்க்க ஹீரோ வந்திருப்பான். அவள், மிகவும் இளம் வயது பெண். ‘வைஷ்ணவ ஜன தோ…’ என்று காந்தியாருக்கு மிகவும் பிடித்த பாடலை அந்தப் பெண் பாடுவாள். அதில் ஓர் இடத்தில், ‘`ஸ்ருதியை ரொம்ப மேல எடுத்துட்டா பிசிறி நாறப்போகுது’’ என்று ஒரு விதவை ஐயங்கார் பாட்டி சொல்வார். அதனால் அவள் சரியாகப் பாடவேண்டுமே என்கிற பதற்றத்துடன் அனைவரும் கேட்டுக் கொண்டிருப் பார்கள். அவர் மேல் ஸ்தாயியில் பாடும் இடம் வரும். எல்லோரும் பதறி, பிறகு, ‘நல்லா பாடிட்டா’ என்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். பின், அந்தப் பெண் பாடியபடியே தன் குடும்பத்தினரை கர்வமாகத் திரும்பிப் பார்ப்பாள். இதுதான் காட்சி. அந்தக் காட்சியையும் ஏற்கெனவே படமாக்கிவிட்டோம்.

அந்தக் காட்சியைக் காட்டி, ‘`இதுக்கு எப்படிப் பண்றது? சரியா உச்சஸ்தாயி போகவேண்டிய இடத்தில் உச்சஸ்தாயி போகணும். எப்படிப் பண்ணலாம்னு எனக்குப் புரியலை’’ என்றேன். ‘`என்ன வேணும் சொல்லுங்க’’ என்றார் ராஜா. ‘`மொத்தக் கதையும் நார்த் இண்டியாவுல நடக்குது. ஆனால், இதுமட்டும் சென்னையில் நடக்கும் காட்சி. அதனால இதுமட்டும் தென்னிந்தியத் தன்மையோட இருக்கணும்’’ என்றேன். ‘`அவ்வளவுதானே’’ என்றவர் உச்சஸ்தாயி போவதுபோல் மூன்று டியூன்கள் போட்டார். அதற்கும் 30 நிமிடங்கள்தான். எனக்கு அந்த மூன்றுமே பிடித்திருந்தன. ‘`நானே சூஸ் பண்றேன்’’ என்று மூன்றில் அவர் தேர்ந்தெடுத்த பாடல்தான் படத்தில் வந்தது.

இப்படி வேலைகள் போய்க்கொண்டிருந்த சமயத்தில், ‘`எல்லாம் சரி, உங்க வேலைகளை முடிச்சுக்கிட்டீங்க. எனக்கு ஒரு பாட்டுப் போட இடமில்லாம பண்ணிட்டீங்களே’’ என்றார். ‘`இதுவே பெரிய சாதனை. அதென்ன பெரிய விஷயம்’’ என்றேன். `‘இல்ல, எனக்கு ஒரு இடம் இருக்கு’’ என்றார். `‘ஒரு இயக்குநரா பார்க்கும்போது, இதுல இன்னொரு பாட்டுக்கான இடம் இல்லையே. தவிர இன்னொரு பாட்டு ரொம்ப ஜாஸ்தியாயிடும், வேண்டாங்க’’ என்றேன். `‘ஐயா, இருக்கிற இடத்துல நான் போட்டுக்குறேன். நீங்க சும்மா இருங்களேன்’’ என்றார். ‘`எங்க?’’ என்றேன். ‘`அவர் பாங்கு குடிச்சிட்டு வர்ற அந்த இடம். இயக்குநரா நீங்க அதை ரீரெக்கார்டிங்கா நினைச்சிருந்தீங்க. நானும் அது ரீரெக்கார்டிங்தான்னு சொல்றேன். ஆனா, அதையே பாட்டா போட்டுக்கொடுக்குறேன்’’ என்றார். ‘`நல்லாருக்குமானு பாருங்க’’ என்றேன் அரைமனதாக.

அப்படி அவரே முடிவு செய்து, கம்போஸ் பண்ணி அவரே எழுதியதுதான், ‘`இசையில் தொடங்குதம்மா’’ என்ற பாடல். முன்பெல்லாம் பாட்டுப்போட்டிகளில் தன் திறமையைப் பார்வை யாளர்களுக்குக் கடத்த, ‘சிந்தனை செய் மனமே’, ‘ஒருநாள் போதுமா’ போன்ற பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது, ‘ஒருநாள் போதுமா’ பாடலை அதைப் பாடிய பாலமுரளி சாருக்கும் பெரிய வீணை வித்வான்களுக்கும் பாடிக்காட்டியிருக்கிறேன். அப்படி இன்று தனக்குப் பாட வரும் என்பதை நிரூபிப்பதற்காக, பாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் பாடிக்காட்டும் ஒரு ஐக்கானிக் பாடலாக ‘இசையில் தொடங்குதம்மா’ பாடல் அமைந்திருக்கிறது. இதன்மூலம் பிரபல இந்துஸ்தானி பாடகர் அஜய் சக்கரவர்த்தி அவர்களின் நட்பையும் ராஜா எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.

‘`பணம், உழைப்பு, நாள்கள்… என்று இந்தளவுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறாரே’’ என்று சந்தோஷம். அவரை பதிலுக்கு சந்தோஷப்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் ‘ஹேராம்’க்கான பின்னணி இசையை புதாபெஸ்ட் கொண்டுபோய் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து ரீரெக்கார்டிங் செய்வது என்று முடிவு செய்தேன். புதாபெஸ்ட் அழைத்துச் செல்லும்போது அவருடன் வந்தவர்கள் அனைவருக்குமே அந்த வடிவம், தொழில்முறை அனைத்தும் புதிதாகவும் வேறாகவும் இருந்தன. ஆனால், அவர்களை ஒன்று சேர்த்தது இசை மட்டுமே. அங்கேயும் வேட்டிகட்டிக் கொண்டு, குளிருக்குக் குல்லாவெல்லாம் போட்டுக்கொண்டு வந்து நின்ற ராஜாவை, அங்குள்ளவர்கள் ‘`இவரா கம்போஸர்?’’ என்பதுபோல் பார்த்தனர்.

அவர்களின் முகத்தில், ‘`இந்தியாவுல இருந்து ஏதோ வந்திருக்காங்க. அவங்களுக்கும் பண்ணணுமே’’ என்ற சலிப்பு தெரிந்தது. ‘`இது சரியில்லை, அது சரியில்லை’’ என்றார்கள். ராஜாவை வைத்துக்கொண்டு அவர்கள் அப்படிப் பேசியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. ‘`காசு கொடுத்து வந்திருக்கோம். எங்க ஆளுக்கு இது இது வேணும்னு கேட்கிறார். அதைச் செஞ்சுகொடுக்க வேண்டியது உங்க வேலை. ஏன் இவ்வளவு சலிப்பு’’ என்று அவர்களை அதட்டினேன்.

ஆனால், அவர்கள் திறமையான இசைக்கலைஞர்கள். தியேட்டரை நம்புபவர்கள். ஒருவருக்கொருவர் பேப்பர் கொடுப்பதில் ஏதோ ஒரு பிசகு நடந்திருக்கிறது என்பது தெரிந்தது. நான் அதட்டியதால் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சற்று இறுக்கமாகவே வேலையை ஆரம்பித்தனர். பிறகு இவர் கொடுத்த பேப்பரை அங்கிருக்கும் இசைக்கலைஞர்களின் முன் வைத்ததும் அதை அவர்கள் 10 நிமிடங்கள் கவனித்தனர். பின், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். பிறகு அங்கிருக்கும் கண்டக்டர், பேட்டனைத் தட்டி, ‘ரிகர்சல் பார்க்கலாம்’ என்று உற்சாகத்துடன் அந்தக் குச்சியை ஆட்டியவுடன் இசைக்கலைஞர்கள் அனைவரும் அந்த இசையைப் புரிந்துகொண்டு ஒரே சமயத்தில் இசைத்தபோது எனக்குப் புல்லரித்துவிட்டது. `ராஜா என்ன பண்ணுகிறார்’ என்று திரும்பிப்பார்த்தால், அவரின் கண்களில் கண்ணீர்.

ஏனெனில், குழுவில் உள்ள எல்லோருக்கும் சொல்லிப் புரியவைத்து அந்த ஒலியை வரவழைக்க அவர் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அரைநாளாவது ஆகும். ஆனால் பத்தே நிமிடங்களில் புதாபெஸ்ட்டில் அவர்கள் அதை வாசித்ததும், ‘இது என்ன இசை’ என்று யாரோ போட்ட இசையைக் கேட்பதுபோல் நின்ற இளையராஜாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அதை யாரோ ஒருவர் போட்டோ எடுத்ததாகவும் நினைவு. ‘`யாரோ போட்டமாதிரி நீங்க என்னங்க இப்படி ரசிக்கிறீங்க. உங்க மியூசிக்தாங்க’’ என்றேன். அதன்பிறகு அங்கிருந்த இசைக்கலைஞர்கள் ராஜாவிடம் நடந்துகொண்ட முறையே வேறாக இருந்தது. சென்னையில் அவர் வரும்போது எப்படிச் சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்று வணக்கம் சொல்லி வழிவிடுவார்களோ அப்படி புதாபெஸ்டிலும் அடுத்தநாள் ரெக்கார்டிங்குக்காக வந்தவரை, ‘மேஸ்ட்ரோ, மேஸ்ட்ரோ… மேஸ்ட்ரோ’ என்று அழைத்து ஒதுங்கி வழிவிட ஆரம்பித்தனர். இப்படி ‘ஹேராம்’ படம் மூலம் ராஜா, இசையில் வேறொரு அனுபவத்தைத் தந்தார். அதனால்தான், இசையமைப்பாளர்களாக ஆசைப்படுபவர்களுக்கு `ஹேராம்’ பட இசை ஒரு மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் என்றேன்.

“ ‘ஹேராம்’ படத்தில் நடந்த இந்த விஷயத்தை ஊர் ஃபுல்லா தண்டோரா போட்டுச் சொல்லணும்ங்க’’ என்று நான் சொன்னபோது, ‘`அதெல்லாம் பண்ணக்கூடாது. ரொம்பத் தற்பெருமையா இருக்கும்’’ என்றார் ராஜா. நானும் சில பேட்டிகளில் இதைச் சொல்ல முற்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் செய்த சாதனையை ஒவ்வொரு வரியாகப் போட்டுக் காட்டி, எது எதுவாக மாறியது என்று சொன்னால்தான் புரியும். அதாவது கிட்டத்தட்ட காளமேகம் புலவர் ஒரு பாட்டுக்கு இரண்டு அர்த்தம் வருவதுபோல் சிலேடைப் புலமையால் பாடுவார் என்பார்களே, அப்படி இசையில் பல்வேறு அர்த்தங்கள் கண்டறியும் இசைக் காளமேகம் இவர்.

இப்படி நிறைய சம்பவங்கள் உள்ளன. ‘விருமாண்டி’யில் நடந்த இரண்டு விஷயங்கள் சொல்கிறேன். பாடல்கள் தவிர, அந்தப் படக் காட்சிகள் அனைத்தையும் ஷூட் செய்துவிட்டு வந்து படத்தை அவருக்குப் போட்டுக்காட்டினேன். ‘`என்ன கமல், இப்படி வெட்டுக் குத்தா இருக்கு. ஓலமே கேக்குதே’’ என்றார். ‘`வெட்டுக்குத்தைப் பற்றிச் சொல்லும்போது ஓலம் தன்னால வரத்தானே செய்யும்’’ என்றேன். `‘உங்க மூடு அப்படி இருக்கிறதால இப்படியான படங்கள் எடுக்குறீங்களா’’ என்றவர், ‘`காமெடிப் படங்கள் எடுங்க’’ என்றார். ‘`எடுக்கலாம். இது எனக்கு ஆசையா இருக்கு’’ என்றேன். ‘`சரி, முடிவு பண்ணிட்டா பண்ணிட வேண்டியதுதான். வாங்க’’ என்றபடி கம்போஸிங்குக்கு வந்தார்.

ஒரு ட்யூன் வந்தது. ‘`பிரமாதமா இருக்குங்க. இதுக்கு ஒரு நல்ல கவிஞரை வெச்சு எழுத வைக்கணும்’’ என்றேன். ‘`அதெல்லாம் நீங்க சொல்லப்படாது’’ என்றார். எனக்கு என்னவென்று புரியவில்லை. அமைதியாக இருந்தேன். ‘`சரி, இப்ப என்ன பண்றீங்க. இங்க உட்கார்ந்து இந்த ட்யூனுக்குப் பாட்டு எழுதிக்கொடுத்துட்டுப் போங்க’’ என்று ஒரு பேப்பரை என் கையில் திணித்துவிட்டு, தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். ‘`என்னங்க விளையாடுறீங்களா, நான் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் போகணும்’’ என்றேன். `‘அதெல்லாம் தானா வரும். போங்க, எழுதுங்க’’ என்றார். ‘`எனக்கிருக்குற டென்ஷன்ல முதல்வரியே வராது. முதல் வரியையாவது சொல்லுங்க. அதுல இருந்து புடிச்சிக்கிட்டு எழுதுறேன்’’ என்றேன். ‘`சொல்லட்டுமா’’ என்றவர், ‘`உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல… ஒண்ணுமில்ல…’ என்று பாடலாகவே பாடியவர், ‘போங்க, இப்ப எழுதிக்கொடுங்க’ என்றார். ஆமாம், அந்த முதல் வரி இளையராஜா அவர்களுடையது.

பிறகு அந்தப் பாடல் ரெக்கார்டிங். ஸ்ரேயா கோஷல் தன் வசீகரிக்கும் குரலில் அழகாகப் பாடியிருந்தார். ‘உங்களுக்கு நீங்கதான் பாடுறீங்க’ என்றார் ராஜா. ‘`ஏங்க அவங்க நல்லா பாடியிருக்காங்க. விட்டுடலாமே’’ என்றேன். ‘`இல்ல, நீங்க பாடுங்க’’ என்றார். சமயத்தில் சிலர், அழகான பாட்டை பெரிய ஆர்க்கெஸ்ட்ரா போட்டு ‘ஜங்கர ஜங்கர’ என்று சத்தம் எழுப்பிக் கெடுத்துவிடுவார்கள். ஆனால் ராஜா, அந்தப் பாட்டுக்கு சத்தம் கூட்டாமல் வெறும் ஆறு இன்ஸ்ட்ருமென்ட்டுகள் மட்டுமே வைத்து ஒலி கோத்தார். அந்த ஆறுமே ஒன்றோடொன்று பிசிறில்லாமல் தனித்தனியாகக் கேட்கும். என் டீமில் உள்ளவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று என்னைப்போலவே ராஜாவுக்குத் தெரியும். எங்களுக்குப் பிடித்ததை, விருப்பமானதை அதில் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்.

அப்போது சந்தானபாரதியின் தம்பி சிவாஜி சின்னமுத்து என்னுடன் இருந்தார். ‘` `காட்டு வழி காளைகள்…’னு வர்ற இடத்துல காளைகளோட கழுத்துமணிச் சத்தம் சேர்த்தா நல்லா இருக்கும். அந்த பெல் சத்தங்கள் பதிவு பண்ணின வீடியோ ரெக்கார்டிங் என்கிட்ட இருக்கு. அதைக்கேக்குறீங்களா’’ என்றார் ராஜாவிடம். `சேர்த்தா கண்டிப்பா நல்லா இருக்கும். வாங்குய்யா அதை’ என்றார். வீடியோ கேமராவிலிருந்து வந்த சவுண்டை ட்ரீட் பண்ணி, அதைப் பாட்டுக்கு நடுவில் எடுத்துப் போட்டுக்கொண்டார். அது, அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக் கண்கலங்கக்கூடிய அந்த இளகிய மனதுதான் அவரின் இசையையே பெரிதாக்குவதாக எனக்குத் தோன்றும். ‘விருமாண்டி’யில் மற்ற பாடல்களை முத்துலிங்கம் சார் எழுதினார். அதில் ஒன்று, அப்பத்தாவைப் பற்றிப் பாடும் ஒப்பாரிப் பாடல். ‘மாடவிளக்கை யார் கொண்டுபோய் தெருவோரம் ஏற்றினா? மல்லிகைப்பூவை யார்கொண்டு முள்வேலியில் சூட்டினா?’ என்ற பாடல். அதில், ‘ஆறாக நீ ஓட, உதவாக்கரை நான்’ என்று ஒரு வரி எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டு ராஜாவும் நானும் நேருக்குநேர் பார்த்து, ‘உதவாக்கரைனு வையிறதுக்கான அர்த்தத்தை இதுநாள்வரையிலும் நாம சரியா புரிஞ்சுக்கலையே’ என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது ராஜாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. முத்துலிங்கத்தின் கைகளைப்பிடித்தபடி பாராட்டினார். அந்த நெகிழ்வு எனக்கு ராஜாவிடம் மிகவும் பிடிக்கும். அந்த நெகிழ்வு இல்லாத எந்தக் கலைஞர்களும் பணி ஓய்வு பெற்றுவிடலாம். இந்தச் சின்னச்சின்ன விஷயங்களை ரசிக்க முடியாதபோது அவர்கள் எல்லோருமே ஒருமாதிரி வெறுத்து சக்கையாகிவிட்டார்கள் என்றே அர்த்தம். எங்களை எளிதாக அழவெச்சிடலாம். ‘உதவாக்கரை’னு ஒரு வார்த்தைக்காக இப்படியா கொண்டாடுவது’ என்றால், கொண்டாடத்தான் வேண்டும். அந்தமாதிரியான சின்னச்சின்னக் கொண்டாட்டங்களில்தான் இளையராஜாபோன்ற ஒருவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடிந்தது. இதேபோல எத்தனை சின்னச்சின்னக் கொண்டாட்டங்களுக்கு அவர் தன் இசையின் மூலம் காரணமாக இருந்திருப்பார்?

வாலி சாரின் கோபம் தமிழ்க்கோபம் என்றால், ராஜாவினுடையது இசைக்கோபம். அவரின் ரெக்கார்டிங் தியேட்டர் போகும்போது, ‘பட்டர் என்ன பண்றார்?’ என்று கேட்டுவிட்டுதான் உள்ளே போவேன். ஆமாம், ராஜா, அபிராமிபட்டர் மாதிரி. டக்கென ‘போடா’ என்று சொல்லிவிடுவார். அதைக்கேட்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். காதலியாக இருந்தால் இன்னொரு முறை சொல்லக் கேட்டு ரசிக்கலாம். இவர் ராஜாவாயிற்றே, கேட்டுவிட்டு அப்படியே ஓடிவந்துவிட வேண்டும்.

ஆனால், அது செல்லக்கோபம்தான். வாலி சாருக்கெல்லாம் இவ்வளவு மரியாதை தருபவர் இல்லை என்பேன். நான்கூட சமயங்களில் வாலி சாரை எதிர்த்துப் பேசுவேன். வாதாடுவேன். ஆனால் இவர், ‘ஏங்க சும்மாயிருங்க. அவர்ட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாது. பெரிய மனுஷன் சொல்றார். கேட்டுட்டுப் போறதைவிட்டுட்டு, அவர்ட்டபோய் வாக்குவாதம் பண்றீங்க. நாமதான் பொறுமையா இருந்து வாங்கணும். இருங்க, நான் வாங்கித்தர்றேன்’ என்று என்னை சீனில் இருந்து ஓரங்கட்டிவிட்டு, எனக்காக அவர் வேலை செய்வார். ஒருமுறை பிரகாஷ்ராஜ், ‘உங்கப் பேச்சை எடுத்தால் அவருக்குக் கண் பளபளக்குதுங்க’ என்றார். உண்மைதான், இது இருவருக்குமான மியூச்சுவல் புரிந்துணர்வு.

எனக்கு அவரைத் தெரியும் என்பதையும் தாண்டி அவர் எனக்கு உறவாகவே மாறிவிட்டார் என்பதே எனக்குப்பெருமை. இளையராஜா என்கிற கலைஞனை நண்பராக்கி, பிறகு என் சகோதரராகவே ஏற்றுக்கொண்டவன். சந்திரஹாசன் அவர்களின் இழப்புக்குப் பிறகு, `அவரின் இடத்தை நாங்கள் நிரப்புகிறோம்’ என்று என்னுடன் நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இளையராஜா. ஆம், சந்திரஹாசன் அவர்களின் இடத்தை நான் அவருக்குத் தந்திருக்கிறேன்.

இத்தனை ஆண்டுக் காலப் பயணத்தில்… எத்தனையோ பிசகுகள் நேர வாய்ப்புள்ள துறை. இருவருமே கோபக்காரர்கள். காசு, கருத்துவேறுபாடு… என்னென்னமோ இருக்கின்றன. நான் பகுத்தறிவு பேசுகிறவன். அவர் மிகத் தீவிர ஆன்மிகவாதி. ஆனாலும் அவரிடம் பேசும்போது என் கருத்தை அடக்கிவாசித்ததே கிடையாது. ஆனால், அதற்கு இருவருமே இடம்கொடுக்காத அளவுக்கான அன்பு எங்கோ அனைத்தையும் பூசிமெழுகிவிட்டது.

எப்படி பாலசந்தர் சார், சிவாஜி சார், கண்ணதாசன், வாலி, நாகேஷ், ஜெயகாந்தன்… பற்றிப் பேசும்போதெல்லாம் சந்தோஷத்தில் நெஞ்சு விம்முமோ, அப்படி இவரைப்பற்றி அழாமல் பேசுவது சிரமம். இவர்தான் இளையராஜா என்று தெரியாமல் ஆரம்பித்ததில் இருந்து, சின்ன கேசட் கடைகளில் இவரின் படத்தைப் போட்டு தமிழகமே கொண்டாடிக்கொண்டு இருப்பது கடந்து, அவருடனான என் 100 படங்கள், மொத்தமாக அவரின் ஆயிரம் படங்கள்… என்று அவரின் பயணத்தைப் பார்க்கையில் ஏதோ இவரை நானே கண்டறிந்ததுபோலவும் இசை கற்றுக்கொடுத்துக் கூட்டிவந்ததுபோலவும் எனக்கு அவ்வளவு பெருமை.

ஒரு விஷயம் சொல்லட்டுமா, 30 வருடம் முன்பு கேட்டு இருந்தாலும் இதையேதான் பேசியிருப்பேன். அன்று அப்படிப் பேசியிருந்தால், ‘இன்னும் படம் பண்ண வேண்டியிருக்கு. அதனால் காக்கா பிடிக்கிறான்யா’ என்றெல்லாம் நினைத்திருப்பார்கள். அதனால் 30 வருடங்கள் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்கிறேன். ஆம், எங்கள் ராஜா நடந்து வந்தாலும், தவழ்ந்து வந்தாலும் இவரின் இசை யானை மீதுதான் வரும் என்பது எனக்கு அப்போதே புரிந்திருந்தது. அதைத்தான் எனக்கான பெருமையாக நினைக்கிறேன்.

#என்னுள்மையம்கொண்ட_புயல்