Showing posts with label OPIUM WAR. Show all posts
Showing posts with label OPIUM WAR. Show all posts

Wednesday, 3 March 2021

FIRST OPIUM WAR OR First Anglo-Chinese War 1839 -1842

 

FIRST OPIUM WAR OR 

First Anglo-Chinese War 1839 -1842



முதலாம் அபின் போர் (First Opium War) என்பது அபின் எனும் போதைப்பொருள் வணிகச் சந்தையை சீனாவிற்குள் பலவந்தமாகத் திறப்பதற்கு பிரித்தானியா சீனாவிற்கு எதிராகத் தொடுத்தப் போராகும். இப்போரின் பின்னரே பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவை கைப்பற்றிக்கொண்டது. இப்போரை முதலாம் ஆங்கிலோ- சீனப் போர் (First Anglo-Chinese War) என்றும் அழைப்பர். இப்போரின் போது தென்சீனாவின் குவாங்தோவ் மாகாணத்தின் கெண்டன் துறைமுகம் மற்றும் அதனை அண்டியப் பகுதிகள் பிரித்தானியப் படைகளால் அழித்தொழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவில் நிலைக்கொண்டன. அதன் பின்னர் நாஞ்சிங் உடன்படிக்கை எனும் உடன்படிக்கையின் படி சீனாவிடம் இருந்து ஹொங்கொங்கை பலவந்தமாக ஒப்புதல் மூலம் பிரித்தானியா பெற்று, பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக அறிவித்துக் கொண்டது.


முதலாம் அபின் போர் வரலாறு


சீனத்தில் அபினி இறக்குமதி

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிரித்தானிய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுடனான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. தென்சீனப்பகுதியான குவாங்தோவ் மாகாணத்தில் அமைந்திருந்த கெண்டன் துறைமுகத்தின் ஊடாகவே தமது வணிகத்தொடர்பைக் கொண்டிருந்தது. உலகிற்குத் தேயிலையை அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்களாவர். சீனாவிடம் இருந்து தேயிலை கொள்முதல் செய்து ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வது பிரித்தானியாவின் முதன்மை வணிகங்களில் ஒன்றாக இருந்தது. குளிர் நாடுகளான ஐரோப்பிய நாடுகளில் தேயிலைக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. சீனாவில் இருந்து பெருமளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்துவந்த பிரித்தானியா, அதற்கு ஈடாக கைக்கடிகாரம், மணிக்கூடு போன்ற ஆடம்பரப் பொருட்களை சீனாவிற்குள் இறக்குமதி செய்தது. இந்த வணிகத்தில் சீனாவின் கைமேலோங்கி இருந்தது. சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யும் தேயிலையின் பெருமதிக்கு ஏற்றவாறு பிரித்தானியாவின் பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியது. எனவே தேயிலையைச் சீனாவிடம் இருந்து கடன் வாங்கும் நிலை பிரித்தானியாவிற்கு தோன்றியது. இதனை ஈடு செய்யும் முகமாக இந்தியாவில், வங்காளப் பகுதிகளில் அபின் போதைப்பொருள் உற்பத்தியைப் பெருக்கி அவற்றை சட்டவிரோதமான முறையில் சீனாவில் இறக்குமதி செய்தது. இந்த சட்டவிரோதமான கடத்தல் போதைப்பொருள் வணிகத்தில் பிரித்தானியா அதிக இலாபம் ஈட்டத்தொடங்கியது. அதேவேளை சீனாவில் பொதுமக்கள் இப்போதைப் பொருளுக்கு அடிமையானதுடன் பல சமூக சீர்கேடுகளும் எழத்தொடங்கின. இவ்வாறான அவலங்கள் குறித்தோ, அழிவுகள் குறித்தோ பிரித்தானியா எந்த அக்கறையும் கொள்ளவில்லை. அதன் நோக்கம் எப்படியாயினும் வெள்ளிக்காசுகளை குவிப்பதாகவே இருந்தது. அப்போது சீனாவில் குயிங் பேரரசு ஆட்சியில் இருந்தது. சீனாவுக்குள் நடைபெற்று வரும் இந்த சட்டவிரோதமானதும் பொது மக்களுக்கும் தீங்கானதுமான போதைப்பொருள் வணிகத்தை குவிங் சீனப்பேரரசு அதிகார பூர்வமாகத் தடைசெய்தது. இருப்பினும் பிரித்தானியாவால் தொடர்ந்து நடைபெற்று வந்த போதைப் பொருள் வணிகத்தை குவிங் பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.


குவாங்தோவ் சிறப்பு ஆளுநர்


ஆளுனர் இலின் சீசு

அப்போது லின் சீசு (Lin Ze-xu) என்பவர் குவிங் பேரரசின், குவங்தோவ் மாகாணத்தின் சிறப்பு ஆளுநராகப் (Special Commissioner of Guangzhou) பதவியேற்றார். இவர் சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைபெற்றுவந்த போதைப்பொருள் வணிகத்தை தடுத்து நிறுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேவேளை பிரித்தானியா தமது நாட்டிற்குள் அபின் புகைத்தலைத் தடை செய்திருந்தது. பிரித்தானியா தமது நாட்டில் அபின் போதைப்பொருள் பாவனையை தடைச்செய்துக்கொண்டு, அதனையே சீனாவிற்குள் சட்டவிரோதமாக வினியோகித்து அப்பாவி சீன மக்கள் அழிவுக்குள்ளாவதைக் கண்டு ஆத்திரமுற்றார். இந்தச் சட்டவிரோத அபின் வணிகத்தை உடனடியாக நிறுத்தும்படி விக்டோரியா மகாராணிக்கு எழுத்து மூலமாக அறிவித்தார்.[2] குவிங் வம்ச சீனப்பேரரசும் மீண்டும் மீண்டும் தடை உத்தரவுகளை பிறப்பித்தவண்ணமே இருந்தது. ஆனால் இவை எதனையும் பிரித்தானியா ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. சீனப்பேரரசின் தடை உத்தரவுகளை மீறி தொடர்ந்து அபினி இறக்குமதியை சீனாவுக்குள் சட்டவிரோதமாக தொடர்ந்த வண்ணமே இருந்தது.



லின் சீசுவின் கடும் நடவடிக்கைகள்

குவாங்தோவ் சிறப்பு ஆளுநரான லின் சீசு இப்போதைப்பொருள் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கி தண்டித்தார். இப்போதைப்பொருள் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், பக்கவிளைவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவை எதுவும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பிரித்தானியாவின் போதைப்பொருள் கள்ளக்கடத்தல் வணிகம் மேலும் மேலோங்கிக்கொண்டே போனது. இதனால் லின் சீசுவின் நடவடிக்கைகளும் கடுமையாகியன. குவாங்தொவ் மாகாணத்தில் களஞ்சியப்படுத்திருந்த அபின்களை எல்லாம் தேடித் தேடி அழிக்கத் தொடங்கினார். அபின் வணிகத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக்க் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அபின்கள் ஏற்றி வந்த கப்பல்களும் தாக்கப்பட்டன. அத்துடன் வெளிநாட்டு வணிகம் அனைத்தையும் இடைநிறுத்தினார்.


இதனை எதிர்த்தும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்கும் பிரித்தானியா, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளைக் கொண்டு சீனாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப் படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்காக நடந்த முதல் போரும் இதுவே ஆகும்.



போரின் முடிவு

போரின் முடிவில் பிரித்தானியப் படைகள் வென்றன. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவைக் கைப்பற்றிக்கொண்டன. அதன் பின் நாஞ்சிங் உடன்படிக்கை எனும் உடன்படிக்கையில், சீனப்பேரரசை பலவந்தமாகப் பணியவைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அந்த ஒப்பந்தங்களில் ஒன்று ஹொங்கொங் தீவை சீனப்பேரரசு பிரித்தானியாவிற்கு கையளித்தலாகும்.

Thursday, 23 July 2020

OPIUM WAR OF CHINA 1839 -1842


OPIUM WAR OF CHINA1839 -1842










ஓப்பியப் போர்கள்

இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்றுவந்தது. கொஞ்சமாக கர்நாடக நவாபுகளின் பங்காளிச் சண்டைக்குள் புகுந்தது. வங்கத்தில் முகலாய ஆட்சி ஆட்டம் கண்டபோது அதிலும் தலையிட்டது. மொத்தத்தில் வர்த்தக வருமானத்தைவிட வரி வருமானம் கணிசமாக இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவிலிருந்து தேயிலையையும் பட்டையும் இறக்குமதி செய்தது. ஆனால் அந்நாட்டு மக்களுக்கு விற்க கம்பெனியிடம் ஏதும் பொருட்கள் இல்லை. தங்கத்தை மட்டும்தான் அவர்கள் கேட்டனர். ஆனால் இங்கிலாந்து, பிரான்சுடன் நீண்டகாலப் போரில் ஈடுபட்டிருந்தது. தன் நாட்டுத் தங்கத்தையெல்லாம் தேநீருக்குத் தாரை வார்க்க அரசு தயாராக இல்லை. ஆனால் அதே நேரம், நாட்டு மக்களெல்லாம் தேநீர் பருகி சந்தோஷமாக இருந்தனர். தேநீர் இனி கிடையாது என்று சொல்லியிருந்தால் புரட்சியேகூட வெடித்திருக்கலாம்.

எனவே வேறு வழியின்றி, சர்வதேச போதைக் கடத்தல் கும்பலாக ஆவதே மேல் என்ற முடிவுக்கு வந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. சீனாவில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் அபின் அல்லது ஓப்பியத்துக்கு அடிமையாகி இருந்தனர். இந்தச் சரக்கு இந்தியாவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் பிகாரில்தான் உத்தமமான சரக்கு கிடைத்தது. காசிப்பகுதியில் சுமாரான சரக்குதான். துருக்கி சரக்கும் அவ்வளவு சிலாக்கியமானதில்லை. பிகார் சரக்கோ, சீனர்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.

கம்பெனி, ஓப்பியக் கொள்முதல் மற்றும் ஏற்றுமதிக்கு ஏகபோக உரிமை கொண்டாடியது. நம் ஜாம்ஷெட்ஜி டாட்டா போன்ற பல்வேறு வணிகர்கள்மூலம் உள்ளூரில் கொள்முதல் செய்து, இங்கிலாந்து வணிகர்களைக் கொண்டு சீனாவில் கள்ளத்தனமாக விநியோகம் செய்ய ஆரம்பித்தது.

ஏன் கள்ளத்தனமாக? சீனப் பேரரசர், தன் நாட்டு மக்கள் ஓப்பியத்தில் மூழ்கி உயிரிழப்பதை விரும்பவில்லை. எனவே ஓப்பியம் விற்பது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லிவிட்டார். ஆனால் கம்பெனிக்கோ வேறு வழியில்லை. ஓப்பியம் விற்ற காசில்தான் தேயிலை வாங்கவேண்டும்.

கம்பெனியின் கண்காணிப்பில் ஓப்பிய வருமானம் பிரமாதமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானத்தில் மிகப் பெரும் பகுதி ஓப்பியத்திலிருந்தே வந்தது. ஆனால் இந்த லாபத்துக்குப் பலரும் பலவிதமான விலைகளைக் கொடுக்கவேண்டியிருந்தது.

பிகார் விவசாயிகள் கஞ்சாச் செடிகளை மட்டுமே பயிரிடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டு அவர்கள் நிரந்தரக் கடனில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.

சீனாவின் கஞ்சா தேவையை உணர்ந்த பலர், மராத்தியர்களின் ஆளுகையில் இருந்த மால்வா பகுதியில் கஞ்சா பயிரிட்டு சீனாவுக்குக் கொண்டுசென்றனர். கம்பெனி, மராத்தியர்கள்மீது போரிட்டு அவர்களைத் தோற்கடிக்க இதுவும் ஒரு காரணம். மால்வா பகுதி கைவசம் வந்ததும் இங்கு பல வழிமுறைகளைக் கையாண்டு ஓப்பிய விற்பனையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது கம்பெனி.

இதன் விளைவாக, மிக அதிக அளவுக்கு சரக்கு கைவசம் வந்தது. அனைத்தையும் சீனாவில் விற்பனை செய்ய முற்பட்டதில் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரு பெட்டிக்கான லாபம் குறைந்தாலும் வால்யூம் விற்பனை காரணமாக கம்பெனிக்குப் பணம் வந்துகொண்டே இருந்தது.

சீனப் பேரரசரின் ஒரு மகன் ஓப்பியப் பயன்பாட்டால் உயிர் துறக்க, வெகுண்ட பேரரசர், லின் என்ற அதிகாரியை அனுப்பி ஆங்கிலேயர்களின் ஓப்பிய வியாபாரத்தை அழிக்கக் கட்டளையிட்டார். லின் அதிரடியாக ஆங்கிலேய வணிகர்களிடமிருந்து ஓப்பியப் பெட்டிகளைக் கைப்பற்றி, அதில் உப்பைக் கொட்டிக் கடலில் எறிந்து நாசமாக்கிவிட்டார்.

உடனே ஆங்கிலேய வணிகர்கள் தாய்நாட்டிற்கு ஓலை அனுப்பினர். தங்களுடைய பொருள்களைச் சீனர்கள் அழித்துவிட்டார்கள் என்றும், சுதந்தர வர்த்தகத்துக்கு சீனப் பேரரசு எதிராக இருக்கிறது என்றும் அதில் புகார் கூறியிருந்தனர்.

தான் செய்வது மகா கேவலமான விஷயம் என்றாலும், எக்கச்சக்கமான பணம் புழங்குவதாலும், இந்த ஓப்பிய விற்பனை இல்லை என்றால் தன் நாட்டு மக்களுக்குத் தேநீர் குடிக்கக் கிடைக்காது என்பதாலும், கிழக்கிந்தியக் கம்பெனியே ஒட்டுமொத்தமாக திவால் ஆகிவிடும் என்பதாலும் பிரிட்டன் அதிரடியாகக் களத்தில் இறங்கியது. தன் போர்க்கப்பல்களை சீனக் கடற்கரைக்கு அனுப்பியது.

சீனாவின் கப்பல்கள் எல்லாம் உதவாக்கரை. அவர்களுடைய படைகளே அந்தக் காலத்தில் கொஞ்சம் ஜோக் வகைதான். எனவே பிரிட்டிஷ் படைகள் எளிதாகச் சீனப் படைகளை உதைத்து நொறுக்கின. அடுத்தடுத்த இரண்டு சண்டைகளுக்குப் பிறகு சீனா வேறு வழியின்றிப் பணிந்து ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, அதிகாரி லின் அழித்த ஓப்பியத்துக்கு நிகரான பணம் ஆங்கிலேய வணிகர்களுக்கு ஈடாகத் தரப்படும். மேலும் பிரிட்டனிலிருந்து கஷ்டப்பட்டு கப்பலை ஓட்டிக்கொண்டுவந்து சண்டை செய்த செலவும் ஈடு செய்யப்படும். ஓப்பிய வர்த்தகத்தைத் தடையின்றிச் செய்ய உதவியாக ஹாங் காங் என்ற தீவு நீண்டகால லீஸுக்கு பிரிட்டனுக்கு அளிக்கப்படும்.

இப்படியாக பிரிட்டன் இந்த உலகில் நீதியை நிலை நாட்டினார்கள். 😂😜🤔
.

.இந்திய ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் எழுதிய மூன்று நாவல் தொகையான இபிஸ் நாவல் வரிசை, நவீன இந்தியாவே அபின் மூலம் உருவானது என்ற ஒரு சித்திரத்தை அளிக்கிறது. அது ஒரு பார்வையில் உண்மை. அமிதவ் கோஷ், இலக்கியப் படைப்பாளி மட்டும் அல்ல; பொருளாதாரத்தின் வரலாற்றை எழுதும் ஆய்வாளரும் கூட.
Sea of Poppies, River of Smoke, Flood of Fire ஆகிய மூன்று நாவல்களில் இந்தியாவில் பிரிட்டிஷார் வேரூன்றிய ஆரம்ப காலத்தை அவர் சித்தரிக்கிறார். ஆப்ரிக்காவிலிருந்து கறுப்பின மக்களை பொறிவைத்துப் பிடித்து கட்டி இழுத்து அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று விற்கிறார்கள். அந்த, 'மனிதச்சரக்கு' ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அப்படியே இந்தியாவுக்கு சரக்குகள் ஏற்றிக் கொண்டு வந்தன. இங்கிருந்து ஓப்பியத்தை [அபின்] ஏற்றிக் கொண்டு சீனாவுக்குச் சென்றன.பிரிட்டிஷ் அரசு அதன் ஆதிக்க விரிவாக்கத்துக்கு, ஓப்பியத்தை மிகவும் நம்பியிருந்தது.
அவர்கள் சென்ற பகுதிகளில் எல்லாம், அபினை அறிமுகம் செய்தனர். ஆனால் தங்கள் படைவீரர்கள், அதைப் பயன்படுத்துவதை மிகக் கடுமையாகத் தடை செய்திருந்தனர். சீனாவைக் கைப்பற்றுவதற்காக வலுக்கட்டாயமாக அவர்கள், சீனாவில் அபினை அறிமுகம் செய்தனர். அதை அங்குள்ள அரசு எதிர்த்தபோது, அவர்களைப் போரில் தோற்கடித்து அபினை அங்கே பரவலாக்கினர்; சீனாவை வென்றனர். இவை ஓப்பியம் போர்கள் எனப்படுகின்றன. 1839ல் முதல் ஓப்பியம் போரும், 1856ல் இரண்டாம் ஓப்பியம் போரும் நிகழ்ந்தது.
இந்தியாவில் வேரூன்றிய பிரிட்டிஷார், இந்தியாவிலுள்ள விவசாயிகளை ஓப்பியம் பயிரும்படிச் சொல்லி கட்டாயப்படுத்தினர். ஓப்பியம் பயிரிடப்படாத வயல்களுக்கு பாசனம் மறுக்கப்பட்டது. மிகையான வரி போடப்பட்டது. விளைவாக ஓப்பியம் பயிர் பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தில் பெருகியது. ஓப்பியம் பிரிட்டிஷாருக்கு, அதிகாரத்தையும், பணத்தையும் அளித்தது. ஜமீன்தார்களும் கொழித்தனர். ஆனால் உணவு உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்து மக்கள் பட்டினியால் செத்தனர்.
இந்த ஓப்பியம் விதைகளைச் சேகரித்து பிரிட்டிஷாருக்கு அளிக்கும் வணிகர்கள் உருவாகி வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் பார்ஸிகள். இவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகி, காலப்போக்கில் இந்திய முதலாளிகளாக வளர்ந்தனர். டாட்டா, பிர்லா போன்ற பார்ஸி பெருமுதலாளிகளின் உருவாக்கம், இப்படித்தான் நிகழ்ந்தது என்கிறார் அமிதவ் கோஷ். ஒருகட்டத்தில் இந்த முதலாளிகள் பிரிட்டிஷாரை மீறி வளர்ச்சி பெற்றனர். இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு இவர்கள் நன்கொடைகளை அள்ளிக் கொடுத்தனர்.
உண்மையில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் இவர்களின் பங்களிப்பை நம் வரலாறு சொல்வதே இல்லை. டாட்டா, பிர்லா இருவருக்குமே நெருக்கமானவர் காந்தி. அவர்களுக்கு ஒரு கொள்கையை அவர் உருவாக்கி அளித்தார். அதை, 'தர்மகர்த்தாக் கொள்கை' என அவர் அழைத்தார். தன் செல்வத்தை பிறர் வளர்ச்சிக்காகச் செலவிடும் அறக்கட்டளையாளர்களாக பெருமுதலாளிகள் செயல்படவேண்டும் என்றார் காந்தி.
இன்றைய இந்தியாவிலுள்ள பெருமை மிகுந்த கல்வி நிறுவனங்கள் இந்த பெருமுதலாளிகளால் தொடங்கப்பட்டவை. நவீன இந்தியாவில் கல்வி, தொழில்நுட்பம், கலைகள் ஆகியவற்றுக்கான முக்கியமான பல அறநிலைகள் இவர்களுடையவை. காந்தி சொன்ன தர்மகர்த்தாக் கொள்கையின் விளைவு இது.ஆனால் இவற்றை விட முக்கியமானது, தங்கள் சொந்த லாபத்தை நோக்கமாகக் கொண்டு இவர்கள் உருவாக்கிய பெருந்தொழில்கள் இந்தியப் பொருளியலுக்கு அளித்த நன்மை. இந்தியாவின் மாபெரும் தொழில் அமைப்புகளை இவர்கள் தான் உருவாக்கினர். இவர்கள் இரும்பு உருக்கு, உள்நாட்டுப் போக்குவரத்து போன்ற துறைகளில் பெரும் முதலீடுகளைச் செய்யாமலிருந்திருந்தால், இன்றைய நவீன இந்தியாவே உருவாகியிருக்காது என்பதே உண்மை.
அப்படியென்றால் இவர்களின் பின்னணியை நாம் எப்படி தார்மீகமாக மதிப்பிடுவது? இது சிக்கலான ஒரு கேள்வி. இதை நாம் வரலாற்றுப் பார்வையுடன், நிதானத்துடன் அணுக வேண்டும்.ஒரு தேசம் வளர பெரிய முதலீடு தேவை. பெருந்தொழில்களையும், பெரும் கட்டுமானங்களையும் அப்படித்தான் உருவாக்கமுடியும். அவை இல்லையேல், அந்நாட்டுக்கு அடித்தளமே இல்லை. அதற்கு இரு வழிகள். ஒன்று, முதலாளித்துவம். முதலாளிகள் இப்படித்தான் உருவாவர். எங்கே ஈரம் இருக்கிறதோ அங்கே மரம் முளைப்பது போல வரலாற்றில் எங்கே ஒரு சின்ன வாய்ப்பு உள்ளதோ அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் வளர்ந்து வருவார்கள்.
எந்தப் பெருமுதலாளிக்கும் அடியில் ஒரு பெரிய சுரண்டல், ஒரு சந்தர்ப்பவாதம் இருந்தே தீரும். ஐரோப்பாவின் பெருமுதலாளிகள் எல்லாருமே அடிமை வணிகம், ஆயுத வணிகம் மூலம் உருவானவர்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் ஒளிமிக்க முகம் என்றால், அது ஜான் கென்னடி. அவரது மூதாதையர் கள்ளச்சாராயக் கடத்தல் தொழிலில் இருந்து பணம் சம்பாதித்தவர்கள்.இரண்டாவது வழி கம்யூனிசம். அது இந்தப் பெருந்தொழில்களை அரசாங்கமே செய்வது. அதற்குரிய முதலீட்டை, அரசே சேகரிக்கும். அந்தப் பொறுப்பை அதிகாரிகள் செய்வர். அதற்கு மக்களில் பெரும்பான்மையினரை கிட்டத்தட்ட அடிமை வேலையாட்களாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுத்து மிச்சத்தைச் சுரண்டிச் சேகரித்து முதலீடாக ஆக்குவார்கள்.
இன்றும் சீனாவில் தொழிலாளர்கள் ஒரு நகரத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்ல பாஸ்போர்ட் - விசா தேவை. அவர்கள் தங்கள் முதலாளிகளை அரசு அனுமதி இல்லாமல் மாற்றிக் கொள்ள முடியாது. அவர்களுக்குரிய குறைந்தபட்ச ஊதியத்தை அரசே நிர்ணயித்து அளிக்கும். பல்லவி அய்யர் எழுதி தமிழில் வெளிவந்துள்ள, 'சீனா - விலகும்திரை' என்னும் நூலை ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.
இன்றைய இளைஞர் வலதுசாரியாக இருக்கலாம், முதலாளிகள் மூலம் மூலதனம் திரண்டு முதலீடாக ஆவதை அவர் ஆதரிக்கலாம். அல்லது இடதுசாரியாக இருக்கலாம். மூலதனத்தை அரசே திரட்டி முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் எண்ணலாம். எதுவானாலும் அவரே வாசித்தும் சிந்தித்தும் அந்த நிலைபாட்டை எடுக்க வேண்டும்.நான் முதலாளித்துவ ஆதரவாளன். எனக்கு அரசு அதிகாரிகளைவிட முதலாளிகளே மேல் என்னும் எண்ணமே இருக்கிறது. ஏனென்றால், முதலாளிகளை பல்வேறு பொருளாதார அமைப்புகள் கட்டுப்படுத்தும். பங்குச்சந்தை கட்டுப்படுத்தும். தொழிற்சங்கம் கட்டுப்படுத்தும். சர்வாதிகார அரசின் அதிகாரிகளை மக்கள் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.
ஆனால் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் நமக்கு அதன்மேல் மூர்க்கமான நம்பிக்கை இருக்கலாகாது. அதை வரலாற்றுரீதியாக அணுகும் நிதானம் தேவை. வாசிப்பு தேவை. நான் முதலாளித்துவம் நல்லது என நினைப்பதனால் இங்குள்ள முதலாளிகள் பிரிட்டிஷ் அரசின் சுரண்டலில் பங்குபெற்று உருவானவர்கள் என்னும் உண்மையை மழுப்ப மாட்டேன். அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் இருப்பேன்.
இன்று வலதுசாரி முதலாளித்துவப் பொருளாதாரம் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்படுகிறது. ஆனால் அதன் உருவாக்கத்தைப் பற்றிய தெளிவு நமக்கிருக்கும் என்றால் அதை ஒரு தேவதூதனாக நாம் நினைக்க மாட்டோம். அது ஒரு காட்டுயானை. உரிய முறையில் கால்சங்கிலிகள் போடப்பட்டு துரட்டியால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அந்த கால்சங்கிலியாகவும் துரட்டியாகவும் இடதுசாரி அரசியல் இருக்கவேண்டும். 1991ல் சந்திரசேகர் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது பெரும்பொருளியல் நெருக்கடி ஏற்பட்டது.
இந்தியாவின் வைப்புநிதியான தங்கத்தை உலகநிதியத்திற்கு அடகுவைக்கும் முயற்சி நிகழ்ந்தது. அப்போது அதற்கெதிரான வலுவான இடதுசாரி நிலைபாடுதான் இந்தியா அதீதமுடிவுகளை எடுக்கமுடியாமல் காத்தது.அதேபோல மன்மோகன்சிங் அரசு ஊழியர் வைப்பு நிதியை அன்னிய நிதியமைப்புகளில் முதலீடு செய்வதற்கு எடுத்த முயற்சியும் இடதுசாரிகளின் எதிர்ப்பால்தான் கைவிடப்பட்டது. இல்லையேல் 2008ல் அமெரிக்காவின் பெரும்பொருளியல் வீழ்ச்சியில் இந்தியா பலத்த அடிவாங்கியிருக்கும்.
இன்று முதலாளித்துவப் பொருளியலில் நாம் கண்மண் தெரியாத பாய்ச்சலில் சென்று அடிவாங்காமல் தடுக்கும் பெரிய எதிர்சக்தி இடதுசாரிகள். படிப்படியாக நம் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களின் இடம் குறைந்துவருவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன்.இந்தியத் தேர்தல் நேரத்தில் மூர்க்கமான ஒற்றைப்படை நிலைப்பாடுகள் உருவாகின்றன. ஒரு தரப்பினர் வலதுசாரி முதலாளித்துவத்தின் தரப்பில் நின்று இடதுசாரிகளை நாசகாரச் சக்திகள் என்பார்கள். இடதுசாரிகளை ஆதரிப்பவர்கள் முதலாளித்துவமே மோசடி என்பார்கள். இருதரப்பையும் நிதரிசனத்துடன் பார்க்கும் ஒரு வலுவான தரப்பு இளையதலைமுறையினரில் உருவாகவேண்டும். அதுவே ஜனநாயகத்தின் சுக்கான்.
ஜெயமோகன் ,கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in