Showing posts with label 1602. Show all posts
Showing posts with label 1602. Show all posts

Saturday, 20 March 2021

DUTCH EAST INDIA COMPANY FORMED 1602 MARCH 20

 

DUTCH EAST INDIA COMPANY 

FORMED 1602 MARCH 20


தமிழ் அடிமைகள்

ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு



ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு?  



தஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.


எந்தவொரு அரசியல்வாதியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எந்தவொரு இலக்கியவாதியும் அது பற்றி எழுதுவதில்லை. தமிழ் அடிமைகள் பற்றி அறிந்தவர்கள் கூட, தெரியாத மாதிரி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், தமிழ் மக்களை மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாற்றி வைத்திருக்க விரும்புவோர், உண்மைகளை பேசப் போவதில்லை. 




ஆப்பிரிக்காவில் இருந்து, கறுப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு சென்றது போல, தமிழ் நாட்டில் நடந்துள்ளது. தமிழகத்தில் அடிமைகளாக பிடிக்கப் பட்ட தமிழர்கள், பெரும்பாலும் சிறுவர்கள் என்பது மிகவும் கொடுமையானது. தமிழர்கள் மத்தியில், "பிள்ளை பிடிகாரர்கள்" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அனேகமாக, அழும் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அதைக் கூறுவதுண்டு. உண்மையிலேயே, பிள்ளை பிடி காரர்கள் காலனிய கால கட்டத்தில் இருந்துள்ளனர். 


தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், காலனிய எஜமானர்களின் கீழ் வேலை செய்யும் பிள்ளை பிடிகாரர்கள் உலாவித் திரிந்தனர். சிறு நகரங்கள், கிராமங்கள் தோறும், சந்தைகள் கூடுமிடங்களில் காணப் பட்டனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைப் பிடித்து சென்றனர். இதனால், ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுவர்கள் சந்தை போன்ற பொது இடங்களுக்கு செல்ல அஞ்சினார்கள். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, தமிழ் அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வந்தது. தமிழகத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில், அடிமைகளின் விலை மிகவும் குறைவாக இருந்தது.


தமிழர்கள் அடிமைகளான வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு, நாம் கிழக்கிந்தியக் கம்பனி தோன்றிய கால கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும், ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவப் பொருளாதாரம், கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஆரம்பமாகியது என்றால் அது மிகையாகாது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடம் தான், ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான பங்குச் சந்தை ஆகும்.  


ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக டச்சுக் காரர்கள் தான், தமிழகத்தில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டனர். அதற்காக, சென்னை நகரத்திற்கு வடக்கே, பழவேற்காடு எனுமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகம் இயங்கி வந்தது. கிழக்கிந்தியக் கம்பனி என்பது, உலகின் முதலாவது பன்னாட்டு நிறுவனம் ஆகும். அதன் பங்குதாரர்களாக, நெதர்லாந்து நிலப்பிரபுக்கள் இருந்துள்ளனர். கம்பனி என்ன தொழில் செய்தாலும், பங்குகளின் ஈவுத் (டிவிடன்ட்) தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். இதனால், கிழக்கிந்தியக் கம்பனி அதிக இலாபம் தரும் வியாபாரங்களில் ஈடுபட்டது. அடிமை வாணிபம் அதில் ஒன்று. 


பழவேற்காட்டில் தளம் அமைத்த கிழக்கிந்தியக் கம்பனி, ஆரம்பத்தில் தமிழ் நாட்டு பருத்தி ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தது. அந்தக் காலத்திலேயே, தமிழகத்தில் ஆடைத் தொழிற்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்து பருத்தி ஆடைகள் உலகம் முழுவதும் தரமானதாக கருதப் பட்டன. டச்சுக் காரர்கள், இந்தோனேசியா, இலங்கையை  தமது காலனிகளாக்கிக் கொண்ட பின்னர் தான், அடிமைகளை வாங்கத் தொடங்கினார்கள்.


இந்தோனேசியாவின் ஜாவா தீவு, ஒரு காலத்தில்   "பதாவியா"(Batavia ) என்று அழைக்கப் பட்டது. அங்கே தான், ஆசியாவில் முதலாவது டச்சு காலனிய ஆட்சி நிலைநாட்டப் பட்டது.  அமெரிக்க கண்டங்களில் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கு வேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு சென்று குவித்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அதே மாதிரி, பதாவியா காலனியில் (இந்தோனேசியா) வேலை செய்வதற்கு, தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு சென்றனர். 


ஐரோப்பியர்கள், ஆசிய காலனிகளில் காணப்பட்ட வளங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டதை சரித்திர நூல்கள் எழுதி வைத்துள்ளன. ஆனால், ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகம் செய்தமை பற்றி, மிகக் குறைந்தளவு சரித்திரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. 


ஐரோப்பியர்கள், குறிப்பாக போர்த்துக்கேயர்கள் வருவதற்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சீன மற்றும் அரேபிய வணிகர்களின் கைகளில் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகம் செய்த போர்த்துக்கேய வணிகர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், சில இடங்களில் தங்கி விட்டார்கள். 


காலப்போக்கில், போர்த்துக்கேயர்கள் அவற்றை தமது காலனிகளாக்கி, கோட்டைகளை கட்டி இராணுவ ரீதியில் பலப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில், போர்த்துகேய கப்பல்களில் கடமையில் இருந்த டச்சுக் கடலோடிகள், பிற்காலத்தில் தனியான காலனிய சக்தியாக மாறினார்கள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக, பல இடங்களில் போர்த்துக்கேயர்களை விரட்டி விட்டு, தமது காலனிகளை உருவாக்கினார்கள்.


இலங்கையிலும் அது தான் நடந்தது. இலங்கையின் வட பகுதியும், தென் மேற்குப் பகுதியும் மட்டுமே போர்த்துக்கேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. மத்திய பகுதியும், கிழக்குப் பகுதியும் கண்டி மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தன. போர்த்துக்கேயர்களை விரட்டுவதற்காக, டச்சுக் காரர்கள் கண்டி மன்னனுடன் கூட்டுச் சேர்ந்தனர். இரு தரப்பு ஒப்பந்தப் படி, போர்த்துக்கேயர்கள் விரட்டப் பட்ட பின்னர், அந்தப் பகுதிகளை கண்டி மன்னனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒப்பந்தங்களை முறிப்பது காலனிய வெள்ளையர்களுக்கு கைவந்த கலை.  


யாழ் குடாநாடு, மன்னார், திருகோணமலை, கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், அவற்றை கண்டி மன்னனிடம் ஒப்படைக்காமல் தாமே ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல, போர்ச் செலவு என்று கூறி, பெரியதொரு தொகையை கண்டி மன்னன் தமக்கு செலுத்த வேண்டும் என்று பொய்க் கணக்குக் காட்டினார்கள்.  அந்தளவு பெருந் தொகையை கண்டி மன்னனால் கட்ட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதே நேரம், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியது குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்கள் மனதில் இருக்கவில்லை. 


இலங்கைத் தீவு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை மட்டுமல்லாது, காலியும் முக்கியமான துறைமுகமாக கருதப் பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையில் இருந்து கிளம்பும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிக் கொண்டு காலித் துறைமுகத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து வேறு கப்பல்கள், அந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லும்.  ஐரோப்பா முதல் இந்தோனேசியா வரையிலான கடற் போக்குவரத்துக்கு, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. 


இலங்கையில், யானைகள், கறுவா பட்டைகள், முத்துக்கள் என்பன, டச்சுக் காலனியாதிக்கவாதிகளுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தந்த ஏற்றுமதிப் பொருளாதாரமாக இருந்தது. கொழும்பில் இருந்த டச்சு காலனிய நிர்வாக எல்லைக்குள், தென்னிந்தியப் பகுதிகளும் அடங்கி இருந்தன. அதனால், தூத்துக்குடி முத்துக்களும் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகவே ஏற்றுமதி செய்யப் பட்டன. நாகபட்டினம், யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் அடங்கி இருந்தது.  


யாழ் குடாநாட்டில் இருந்து, நாகபட்டினம் துறைமுகத்திற்கு, யானைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. (யாழ் குடாநாட்டை இணைக்கும் பகுதி யானையிறவு என்று அழைக்கப் பட்டதும் அதனால் தான்.) இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்குடன், யாழ்ப்பாண கோட்டையும், காரைநகர் ஹம்மன்ஹீல் கோட்டையும் கட்டப் பட்டிருந்தன.  


தென்னிலங்கையில், கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளில், உலகிற் சிறந்த கறுவாப் பட்டைகள் கிடைத்து வந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும், கறுவா வணிகம் முழுவதும் டச்சுக்காரர்கள் கைகளில் வந்திருந்தது. பெருமளவு வருமானத்தை ஈட்டித்தந்த, வளம் கொழிக்கும் இலங்கைத் தீவை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தென்னிந்தியாவில் இராணுவ தளம் அமைக்கப் பட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பனி நினைத்தது. 


இருநூறு போர்வீரர்களைக் கொண்ட டச்சுக் காலனிய படை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து நாகப் பட்டினத்திற்கு படையெடுத்துச் சென்றது. அங்கிருந்து தரை வழியாக கொச்சினுக்கு சென்றது. கேரளாவில் உள்ள கொச்சின், அன்று போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. டச்சுப் படைகள் போர்த்துகேயர்களை விரட்டி விட்டு, அங்கே ஒரு முகாம் அமைத்துக் கொண்டன. போன காரியத்தை நிறைவேற்றி விட்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் போர்க் கப்பல்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தன. அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 


டச்சு காலனிய சிறப்பு படையினர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் ஒரு சதிப்புரட்சி நடக்க இருந்தது. எப்படியோ அது கண்டுபிடிக்கப் பட்டது. டச்சு காலனியப் படைகளில் இருந்தவர்கள் தான், யாழ்ப்பாண அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்தனர். அனேகமாக, அன்றைய காலனியப் படையில் பெருமளவு உள்நாட்டு வீரர்களும் இருந்திருக்கலாம்.


சதிப்புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் கண்டுபிடிக்கப் பட்டு, சிரச் சேதம் செய்யப் பட்டனர். இனிமேல் சதிப்புரட்சி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, கொடூரமான காட்சிகள் அரங்கேறின. மரங்களில் இறந்த உடல்கள் கட்டித் தொங்க விடப் பட்டன. வெட்டப் பட்ட தலைகளை ஈட்டிகளில் குத்தி, பொதுச் சந்தைகளில் காட்சிக்கு வைத்திருந்தனர். 


டச்சுக் காரர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வடக்கில் குடியேறியோர் தமிழ் மொழியும், தெற்கில் குடியேறியோர் சிங்கள மொழியும் பேசத் தொடங்கினார்கள். அதே மாதிரி, இந்தோனேசியாவில் குடியமர்த்தப் பட்ட தமிழகத்து அடிமைகள், இன்று இந்தோனேசிய மொழியை பேசுகின்றனர். சுருக்கமாக, ஐரோப்பியரால் கொண்டு செல்லப் பட்ட தமிழ் அடிமைகள், உள்ளூர் மக்களுடன் இனக் கலப்பு செய்து விட்டனர். அதனால், அவர்களது பூர்வீகத்தை கண்டுபிடிப்பது இயலாத காரியம். 


தென்னிலங்கையில், கறுவாத் தோட்டங்களில் வேலை செய்த உள்ளூர்வாசிகள் (சிங்களத் தொழிலாளர்கள்), கடுமையான உழைப்புச் சுரண்டல் காரணமாக வேலை நிறுத்தம் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த மேலதிக படையினர், கறுவாத் தொழிலாளர்களின் கலகத்தை அடக்குவதற்கு பயன்பட்டனர். அதற்குப் பின்னர், கறுவாப் பட்டைகளை உரிக்கும் தொழிலுக்கு, தமிழ் அடிமைகளை பயன்படுத்தினார்கள். பிற்காலத்தில், அந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறி விட்டனர். 


இலங்கையில், தமிழ் அடிமைகள் பல்வேறு கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக, கோட்டைகளை கட்டியதிலும், பாதைகள் செப்பனிட்டதிலும், தமிழ் அடிமைகளுக்குப் பங்குண்டு. யாழ்ப்பாணம், காலியில் இன்றைக்கும் உள்ள டச்சுக் கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பினால் கட்டப் பட்டவை தான். நாடு முழுவதும் இருந்த நெல் வயல்களிலும் நிறையத் தமிழ் அடிமைகள் வேலை செய்தனர். 


புத்தளத்தை அண்டிய கடற் பகுதியில் முத்துக் குளிப்பதற்காகவும், தமிழ் அடிமைகள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். 1666 ஆம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் மேஜர் தரத்தில் இருந்த யான் வான் டெர்  லான் (Jan van der Laan), 400 படகுகளில் முத்துக் குளிப்போரைக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் முத்துக்கள் எடுப்பதற்காக கடலில் குதித்தனர். அனேகமாக, அவர்கள் எல்லோரும் தமிழகத்து அடிமைகளாக இருக்க வேண்டும். 


புத்தளம் கடலில் முத்துக் குளிப்பது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்து வந்தாலும், பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கடலுக்குள் இறங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் எப்போதும் பெரியளவில் தான் சிந்திப்பார்கள். அதாவது அதிக இலாபம் சம்பாதிப்பதே அவர்களது குறிக்கோள். விளைவு? அன்றைய முத்துக்குளிப்பினால் கடல் நீர் நஞ்சாகியது. அதனால் சுமார் 1500 பேரளவில் அந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர். 


இன்றைக்கு எங்காவது ஒரு தொழிற்துறையில் நடக்கும் விபத்தில், 1500 தொழிலாளர்கள் கொல்லப் பட்டால், அது படுகொலையாக கருதப் பட்டு உலகின் மனச் சாட்சியை உலுக்கி இருக்கும். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு பலியானவர்கள் என்று உலகம் உணர்ந்திருக்கும். ஆனால், அன்று இறந்தவர்கள், (தமிழ்) அடிமைகள் என்பதால், உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.


அதே வருடம் (1666), வட இலங்கையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்ததன் மூலம், வருடாந்த நிகர இலாபம் கூடியது. அதனால், அந்த வருடத்து அடிமைகளின் இழப்பை விட, கிடைத்த மொத்த இலாபம் அதிகம் என்று, கிழக்கிந்தியக் கம்பனி திருப்தி அடைந்தது. இந்தக் கணக்கு, வழக்குகள் கிழக்கிந்தியக் கம்பனியால் கவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் வைக்கப் பட்டுள்ள, கிழக்கிந்தியக் கம்பனியின் ஆவணங்களை, நீங்கள் இன்றைக்கும் பார்வையிடலாம்.




இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (இடச்சு மொழியில் Vereenigde Oostindische Compagnie அல்லது VOC), 1602, மார்ச் 20 இல் நிறுவப்பட்டது. நெதர்லாந்து அரசினால், ஆசியாவில் குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் தனியுரிமை வழங்கப்பட்டது. உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் பங்குகளையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, முறிவு நிலை (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. [1]

அமைப்பு
இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஒல்லாந்திலுள்ள, துறைமுக நகரங்களான, அம்ஸ்டர்டாம், டெல்வ்ட், ரொட்டர்டாம், என்குசென், ஊர்ன் ஆகியவற்றிலும், சீலாந்திலுள்ள (Zeeland), மிடில்பர்க், மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து ஹீரென் XVII (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.

இதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.


இந்தியாவிலிருந்த ஒல்லாந்து மற்றும் ஏனைய ஐரோப்பியக் குடியேற்றங்கள்
இந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சின்னம், ஒரு பெரிய "V" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான "O" வையும், "C" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான "A" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.

Wednesday, 12 August 2020

ABUL FAZL ,ONE OF NINE MINISTER ( GEM) BORN 1551 JANUARY 14-1602 AUGUST 12



ABUL FAZL ,ONE OF NINE MINISTER ( GEM) BORN 1551 JANUARY 14-1602 AUGUST 12


.அபுல் ஃபசல் (Abu'l Fazl ibn Mubarak, பாரசீக மொழி: ابو الفضل, ஜனவரி 14, 1551 - ஆகஸ்ட் 12, 1602) பேரரசர் அக்பர் அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் ஒண்மணிகளுள் (நவரத்தினங்கள், Nine Jewels) ஒருவர். இவரின் தந்தையார் ‌ஷேக் முபாரக். இவரது சகோதரர் புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர் அபுல் ஃபைஸி.

1574 ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய நண்பராக தன் இறுதிநாள் வரை இருந்தார். இவர் அக்பரின் வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை, அக்கால இலக்கிய சமயத் தத்துவங்கள் குறித்து மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதினார். முதல் இரண்டு பாகங்கள் அக்பர் நாமா என்ற பெயரிலும் மூன்றாவது பாகம் அயினி அக்பரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

அக்பரின் மகன் சலீம் (ஜஹாங்கீர்) அரியணை ஏறுவதை ஃபசல் எதிர்த்ததாகத் தெரிகிறது. அத்தோடு இளவரசன் சலீமுக்கு அபுல் ஃபசலின் செல்வாக்கு கண்ணில் கிடந்த துரும்பாக உறுத்தியது. துரும்பை அகற்றத் திட்டமிட்ட சலீம் பீ(வீ)ர்சிங்க் என்பவனைக் கொண்டு 1602 ஆம் ஆண்டு இவர் அரசுமுறைப் பயணமாக ஆக்ரா நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது அவரது தலையைத் ‌துண்டிக்கச் செய்தான். வெட்டப்பட்ட அவரது தலை அலகாபாத்தில் இருந்த சலீமிடம் அனுப்பப்பட்டது[1][2][3].

அவருடைஅய முழுப் பெயர் அபு இல் பாசல் இபின் முபாரக். அவர் அக்பர் அரசவையின் நவரத்னங்களில் ஒருவர். அவருடைய சகோ தரர் பைஜி (Faizi), அக்பரின் ஆஸ்தானப் புலவர். அவர்கள் புஸ்தகங்களை பாரஸீக மொழியில் யாத்தனர்.

இத்துடன் நூற்றாண்டுக்கு முன்னர் அரும்பொருட் திரட்டு என்னும் புஸ்தகத்தில் மதுரை எம்.கோபாலய்யர் மொழிபெயர்த்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ!

அக்பர், மக்களை சந்தோஷப்படுத்துபவனே ராஜா என்னும் கொள்கை உடையவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர். ஈஸ்வரனுக்குத் திருப்தியுடைய காரியங்களையே செய்பவர்.

2.அகம்பாவமோ கோபமோ இல்லாதவர்; ஆனால் பேரறிவு உடையவர். அவரைப் பார்ப்பவர்கள் சூரியனுக்கு முன்னால் நாம் மின்மினிப்பூச்சி போல என்று நினைப்பர்.

3.இரவு தூங்குவதற்கு முன்னர், விநோதக் கதைகள் சொல்லச் சொல்வார். எந்த மதத்தையும் தூஷிக்க மாட்டார். கேலி கூட பேச மாட்டார்.

4.நான்கு நேரங்களில் ஆத்ம சோதனை செய்து கொள்ளுவார். சூரிய உதயத்துக்கு முன்னால், சூரியன் உச்சிக்கு வரும் வேளை, படுகடலில் சூரியன் பாயப்போகும் நேரம், நள்ளிரவு 12 மணி ஆகிய நேரங்களில் தான், செய்வது சரியா இல்லையா என்று சிந்திப்பார்.

5.அவர் பெரும்பாலும் மாம்ஸ போஜனத்தைத் தவிர்ப்பார்; பல மாதங்களுக்கு மாம்சத்தைப் பார்க்காமலும் இருப்பார். தீபங்களை இறைவனின் ஜோதி வடிவம் என்று கருதி வழிபடுவார்

6.பெரும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூசுவார்.

7.அவருக்கு சிற்றின்பத்திலும் ஸ்த்ரீலோலனத்திலும் விருப்பமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்.

8.நித்திரை செய்யும் காலம் வெகு அற்பம்; இராப்பகலாக ராஜ்ய காரியத்திலும் பகவத் தியானத்திலுமே காலம் கழிப்பார்

9.தத்துவ சாஸ்திர விற்பன்னர்களும் மகமதிய சூபி (sufi) மஹான்களும் தங்கு தடையின்றி உள்ளே நுழைவர். அவர்க ளை மரியாதையுடன் ஆஸனத்தில் அமர்த்தி விவாதிப்பார்.

10.பழைய சம்பிரதாயங்களை முரட்டுத்
தனமாக ப் பின்பற்றாமல் நூதனமாக மாற்றுவார்; இளைஞர்களும் அவற்றைப் பின்பற்றுவர். அதற்குத் தக புதிய சட்டங்களை இயற்றுவார்.

11.இராக்கலத்தில் இலாகா வாரியாக உத்தரவுகளைப் போடுவார். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கையில் சகல வாத்ய விற்பன்னர்களும் வந்து இன்னிசை விருந்து அளிப்பர். அதைக் கேட்டுவிட்டு சூர்யோதய காலத்தில் சன்மானம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்வார். அவருடன் கூர்னிஷ் தொ ழுகையில் ஈடுபட்டுவிட்டுப் போவர்

12.பின்னர் பத்தினிமார்களும், மங்கள விலாஸ காதலிகளும் வந்து தண்டம் சமர்ப்பிப்பார்கள். அன்போடு எல்லோருடைய நலத்தையும் விசாரிப்பார்.

13.ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்; காலைக் கடன்களை முடித்தவுடன் ‘ஜரோகா’வில் அமர்ந்து எல்லா திகாரிகள், துருப்புகளையும் சந்தித்து நலன் விசாரிப்பார்.

காலை ஒன்பது மணிக்கு ‘தவலத் கானா’வில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார். யாரும் சிபாரிசு இல்லாமல் நேரே சென்று மனுக் கொடுக்கலாம். உடனே படித்து குறை தீர்க்க உத்தரவிடுவார்.

15.சக்கரவர்த்தி கொலு கூட்டுவதானால் பேரிகை மூலம் அறிவிப்பர். அப்போது எல்லோரும் கூடுவர்; தோட்டி முதல் தொண்டைமான் வரை வந்தவுடன் அந்தஸ்துக்கு ஏற்ப வரிசையில் நிற்பர். தட்டார், கொல்லர், நெசவாளர் எல்லோரும் கூர்னீஷ் தொழுகைக்கு தயாராக இருப்பர். உயர் அதிகாரிகள் அறிக்கை சமப்பிப்பர்.

மல்யுத்தம், சிலம்பம் முதலியன நடக்கும்; கூர்னீஷ், தஸ்லீம் என்ற இரண்டு வகையில் மக்கள தொழுவர்.
தஸ்லீம் என்பது தன் பிதா முன்னிலையில் தான் தெரியாமல் செய்த வணக்கம் என்றும் அதைத் தன் பிதா பாராட்டியவுடன் அதுவும் வழக்கத்தில் வந்தது என்றும் அக்பர் கூறுவார்.


18.அக்பரின் தத்துவ நம்பிக்கையை அபுல் பாஸல் விவரிக்கிறார்
19.அக்பருக்கு சிறு வயது முதலே அற்புத சக்திகள் உண்டு என்றும் இது அனைவரும் அறியும்படி வெளிப்படும் என்றும் அபுல் பாஸல் கூறுகிறார்.

20.சிலருக்கு தத்துவ விசாரம் சொல்லி கை தூக்கி விடுவார். சிலருக்கு அவர் கொள்கைக்கு விரோதமாகப் பேசுவார். சிலருக்கு அவரவர் இஷடப்படி பாடம் சொல்லுவார்.
21.சக்ரவர்த்திக்கு பல சிஷ்யர்கள் உண்டு; ஒரு மண்டலம் சநயாசிகளுக்கு சுஷ்ருசை செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இவருடைய சந்நிதி விஷேஷத்தாலும், ஸ்பர்சத்தாலும், போதனா முறையாலும் உடனே ஞானம் பெறுவர். இவரை சந்திக்கும் நானாவித தொழிலாளர்களும் பரவித்தை ஞானத்துடன் திரும்புவர்.

22.பலரும் தெய்வத்துக்குப் பதிலாக இவருக்கு பிரார்த்தனையை சமர்ப்பிப்பர். அவர்கள் காணிக்கையாக வைத்திருந்த பொருள்களை இவர் முன் வந்து கொட்டுவர். மன்னர், ராஜ்யத்தைப் பார்க்கவும் வேட்டையாடவும் செல்லுகையில் அதுவரை மன்னருக்குக் காணிக்கையாக வைத்திருந்த காணிக்கைகளை, தொலை தூர கிராம மக்கள் அவரிடம் சமர்ப்பிப்பர்.

23.சக்ரவர்த்தி ஒரு மஹான்; அவர் சித்த புருஷர்; வியாதி உடையோர் இவரைப் பிராத்தித்து சுமகமடைவர்; பிள்ளைப்பேறு இல்லாதோர் அக்பரிடம் பிராத்தித்து மகப்பேறு அடைந்தனர். விரோதிகள் இவர் முன்னிலையில் வந்து பரஸ்பர மித்திரர் ஆயினர். யார் யார் என்ன வேண்டினரோ அவற்றையெல்லாம் அடைந்தனர்.

24 அவர் அற்புத சக்திகள் உடையவர். ஆகையால் மக்கள், ஜலத்தைக் கொண்டு வந்து மந்திரித்துத் தர வேண்டுவர். அவர் அந்த நீர்க்குடத்தை வாங்கி, சூரிய புடமிட்டு, மூன்று முறை வாயால் ஊதிக் கொடுப்பார். அகபர் மந்திரித்துக் கொடுத்த ஜலத்தால் பலனடந்தோர் பலர். ஆனால் ஞான த்ருஷ்டியால் பார்த்து யாருக்கு ஊதித் தர வேண்டுமோ அவருக்கு மட்டுமே அளிப்பார்.

ஒரு முறை ஒரு துறவி வந்து மஹாத்மாவே என் இதயத்தில் ஏதேனும் நல்ல பொருள் இருக்குமானால் அதை வெளிக் கொணர்ந்து எனக்கருள் புரிக என்று வேண்டினான். அகபரும் அப்படியே செய்தார். அவன் வாயில்படிக்குச் செல்லுகையிலேயே மூர்ச்சையாகி சமாதி ஆகி விட்டான்.

26 யாரேனும் உபதேசம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்? நானே கற்க வேண்டி உளதே என்பார். அதையும் மீறி அவன் போகாமல் காத்திருந்தால் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் அவனுக்கு உபதேசம் சொல்லி கடைத் தேற்றுவார்.

27.அக்பரின் அற்புத சக்திகளைக் கண்டவர்கள் அவரைத் தெய்வமாகக் கருதி வணங்கினர்.

இவரிடம் உபதேசம் பெற வருபவன் தலைப் பாகையைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என் அகம்பாவம் தீய குணங்களையெல்லாம் விட்டுவிட்டேன் எனக்கருள்க என்றவுடன் அவரே தலைப் பாகையை அவன் தலையில் வைத்து ஒரு தங்க காசைக் கையில் கொடுத்து உனக்காக பகவானைப் பிரார்த்தித்து விட்டேன் என்பார்.

29.அவர் வெகு வினயத்தோடு தத்துவ சாஸ்திரங்களைப் பெரிய ஞானிகளோடு விவாதிப்பார். அக்பருடைய அத்தனை தெய்வீக லீலைகளையும் எழுத இங்கு இடமில்லை. நான் மட்டும் உயிருடன் இருந்தால் அவைகளை தனி புஸ்தகமாகவே எழுதுவேன்.

30.பல ஒழுக்க விதிகளையும் அக்பர் போதித்தார்; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘பகவானே பெரியவர்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்ல வேண்டும் அதைக் கேட்பவன் ‘பகவானின் மஹிமையே மஹிமை’ என்று பதில் சொல்ல வேண்டும்; ஒவ்வொருவனும் பிறந்த நாளன்று விருந்து கொடுக்க வேண்டும்; சக்திக் கேற்ப பிச்சையிட வேண்டும்

ஒவ்வொருவரும் மாமிசம் புசிப்பதைக் கைவிட வேண்டும் அல்லது புனித தினங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் (இப்படித் தவிர்த்தால் எவரும் 45 நாட்களுக்கு மேல் மாமிசம் சாப்பிட முடியாது)

தானே கொன்ற எந்தப் பிராணியையும் யாரும் சாப்பிடக்கூடாது. வேடர்கள், கசாப்புக் கடைக்காரர்களுடன் யாரும் உண்ணனக் கூடாது.

கர்ப்ப ஸ்த்ரீக்கள், மலடிகள், பருவமடையாத கன்னிப் பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் பல ஒழுக்க விதிகளை அக்பர் பிரபலப் படுத்தினார்”.
இவ்வாறு அபுல் பாஸல், அயினி அக்பரியில் செப்புகிறார்.
.