Showing posts with label BHOOMI. Show all posts
Showing posts with label BHOOMI. Show all posts

Tuesday, 5 May 2020

KALKI `S THYAGA BHOOMI



KALKI `S THYAGA BHOOMI


கல்கியின் ’தியாகபூமி’ ஆனந்தவிகடனில் 1939-இல் வெளிவந்தது.  சரியாக அறுபது வருடங்களுக்குப் பின் 1999-இல் எழுதிய ஒரு கட்டுரையில் ரா.கி.ரங்கராஜன் அந்த நாவலைப் படித்த அனுபவங்களைக் கூறுகிறார்.  படியுங்கள்!
====


மயிலாப்பூர் மாடவீதி வட்டாரங்களில் வெள்ளிக்கிழமை இரவு, எட்டு ஒன்பது மணியானால், ஒரு குரல் ஒலிக்கும். ‘ஆனந்தவிகடன்! ஆனந்த விகடன்’ என்று ஒரு சைக்கிள் பையன் கூவிக் கொண்டே விற்பனை செய்வான். வாடிக்கையாக வாங்குவோரின் வீடுகளில் ஒரு பிரதி போட்டு விட்டுப் போவான்.
. . .// . ..
கோடை விடுமுறைக்காகச் சென்னைக்கு வந்திருந்த எட்டாம் வகுப்புச் சிறுவனான நான் அதற்காகவே விழித்துக் கொண்டிருப்பேன். ஓவியர் வரைந்த படங்களுக்குப் பதிலாகப் புகைப்படங்களுடன் --திரைப்படத்துக்கான ஸ்டில் படங்களுடன்  --வந்து கொண்டிருந்த ‘தியாக பூமி’ கதையைப் படத்துக்காக ஒருமுறையும் கதைக்காக ஒரு முறையுமாக விழுந்து விழுந்து படிப்பேன்.அப்போதெல்லாம் ‘ஆனந்தவிகடன்’ ஏராளமான பக்கங்களுடன் மிகத் தடிமனாக
வெளிவரும். பெரும்பாலான பக்கங்களில் கல்கியின் கைவண்ணம் மிளிர்ந்திருக்கும். ஆகவே, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை வரை வரிவரியாய்ப் படித்து ரசிப்பதிலேயே பொழுது கழியும்.விடுமுறை முடிந்து கும்பகோணத்துக்குத் திரும்பியபோது ஆனந்த விகடனை -- குறிப்பாகக் கல்கியின் எழுத்தை -- தேடிப் பிடித்துப் படிப்பதில் பித்துக் கொண்டவனாக ஆனேன். ‘தியாக பூமி’ என்னை அடிமை கொண்டது. கதையம்சத்தில் உள்ள சுவாரஸ்யம் மட்டுமல்ல; பாத்திரங்களும் வாக்கியங்களின் ஜாலங்களும் தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் கூட மனசுக்குள் வட்டமடிக்கிற மாதிரி இருந்தன.ஏழை சம்பு சாஸ்திரி தன் மகள் சாவித்திரிக்கு வரன் பார்த்து, அந்த மாப்பிள்ளைக்காக  ஒரு பட்டு வேட்டி வாங்கி வைத்திருக்க, அவருடைய வீட்டோடு இருக்கும் ஒரு பையன் அதைப் பிரித்துத் தன்
மார்பின் மீது போர்த்திக் கொண்டதும் சாவித்திரிக்குக் கோபம் வந்த காட்சி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. ‘சீ, கொடுடா அதை!’ என்று அவன் கையிலிருந்து  அந்தப் பட்டு வேட்டியை அவள் பறித்துக் கொள்கிற வேகம்! ஏழை சாவித்திரியாக இருந்தவரையில்
உதாசீனப்படுத்திய கணவன் அவள் பணக்காரி உமாராணியாக உயர்ந்ததும் ‘நீ மிதித்த பூமியை  நான் பூஜிக்கத் தயாராயிருக்கிறேன்’ என்று அவளிடம் கெஞ்ச, ‘நீங்கள் மிதித்த பூமியை நான் மிதிக்கக் கூடத் தயாராயில்லை!’ என்று அவள் திருப்பியடிக்கும் சீற்றமும் -- எப்படி அந்தக் கட்டங்களை மறக்க முடியும்?


[ நன்றி: கல்கி ]