Showing posts with label ACTING. Show all posts
Showing posts with label ACTING. Show all posts

Sunday, 30 January 2022

M.R.RADHA EXTRAORDINARY IN ACTING

 

M.R.RADHA EXTRAORDINARY IN ACTING


திருச்சி -  கரகரப்பாய் ஒரு கலகக் குரல் - நடிகவேள் எம்.ஆர்.ராதா!

கவிஞர் நந்தலாலா & தே.தீட்ஷித்


பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்...” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” இது ஒரு மகா கலைஞனின் எடைக்கல் வார்த்தை.

எம்.ஆர்.ராதாஎம்.ஆர்.ராதா

'பாகப்பிரிவினை' படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், "சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார். ஆனால் ராதாவின் 'சிங்கப்பூர் சிங்காரம்' பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது" என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார். ராதாபோல் செய்ய தெலுங்கில் ஆள் இல்லை என்று. அந்த ஏற்றமும் இறக்கமும் திடீரெனக் கீழே இறங்கிக் கெக்கலி கொட்டும் மாடுலேஷனும், அந்தக் குரலின் மாயவித்தைகளை முகத்திலும் காட்டத் தெரிந்த பாவனைகளும் யாரிடமும் கற்காத ராதாவின் சொந்தக் கண்டுபிடிப்புகள். ஒரே காட்சியில் மிகை நடிப்பு, யதார்த்த நடிப்பு, கீழ் நடிப்பு என்று எல்லா நடிப்பு வகைகளையும் காட்டிக்கொண்டே எல்லாவற்றையும் கலந்த ஒரு புதுவகை நடிப்பையும் மக்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்தியதால்தான் அவரை 'நடிகவேள்' என்றது தமிழ்நாடு. கவிதையை ஜனநாயகப்படுத்திய புதுக்கவிதை போல, ஓவியத்தில் பார்க்கும்போதெல்லாம் புதிய அனுபவம் தந்த நவீன ஓவியம்போல, நடிப்பில் பல மரபுகளை உடைத்த 'நவீன நடிப்பு' அவருடையது. அதனால்தான் எத்தனைமுறை பார்த்தாலும் ராதா நடிப்பு சலிப்பதேயில்லை. சினிமாவில் எல்லா நடிகர்களும் சுத்தத் தமிழ் பேசிய காலத்திலேயே ராதா மட்டும்தான் கொச்சைத் தமிழ் பேசுவார். அந்தக் கொச்சைத் தமிழ் மக்களைச் சுத்தமாக்கியதுதான் வரலாறு.

பிம்பங்களை உருவாக்கும் நாடகத்திலும் சினிமாவிலும் இருந்துகொண்டே எல்லா பிம்பங்களையும் உடைத்தவர் எம்.ஆர்.ராதா. அதில் முக்கியமாக தன்மேல் உருவான பிம்பத்தையும் அவரே உடைத்தார். அவர் வாழ்ந்த வீடு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருந்தது. ராதா காலனி என்று மக்கள் அழைத்தனர். நாங்கள் அதை ஆசையோடு பார்த்த நாள்கள் உண்டு. அதை இப்போது இடித்து பெரிய அப்பார்ட்மென்ட் கட்டிவிட்டார்கள். அந்த வீட்டின் சாக்கடையை அவரே தள்ளுவாராம். "என்னண்ணே, நீங்க பெரிய ஆக்டர், நீங்கபோய் சாக்கடை தள்ளிகிட்டு’ என்று யாராவது கேட்டால், ’உன் வீட்டுச் சாக்கடையைத் தள்ளலையே, என் வீட்டுதைத்தானே தள்றேன். வேலையில என்னய்யா ஒஸ்தி மட்டம், எல்லாம் ஒண்ணுதான் போய்யா" என்று தன்மீது கட்டமைக்கப்பட்ட நடிகர் என்ற பிம்பத்தையும் அவரே உடைத்ததுதான் அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் சாரமாகத் தோன்றுகிறது.

அவருக்கும் திருச்சிக்குமான உறவு ஆழமானது. அவர் வாழ்ந்ததும் மறைந்ததும் திருச்சியில்தான். “காந்தா” என்ற கரகரத்த குரலை முதன்முதலில் கேட்ட ஊர் திருச்சி. ராதாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற 'ரத்தக்கண்ணீர்' நாடகம் 1949-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் திருச்சியில்தான் அரங்கேறியது. 3000 முறை மேடை கண்ட அந்த நாடகத்தைத் திருவாரூர் கே.தங்கராசு எழுதினார். சாகித்ய அகாடமியின் செயலாளராக நேருவால் அமர்த்தப்பட்ட பிரபாகர் மாச்வே ஒரு மராத்தியர். அவர் ரத்தக்கண்ணீர் பார்த்துவிட்டு, சிறந்த உலக மேடை நாடகங்களில் ரத்தக்கண்ணீர் ஒன்று என்றும் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றில் உள்ள முக்கியப் பெயர்களில் ஒன்று என்றும் சொன்னார். ரத்தக்கண்ணீர் நாடகத்தை காங்கிரஸ்காரரான பி.ஏ.பெருமாள் முதலியார் சினிமாவாக எடுத்தார். ராதா முதலியாரிடம் சில நிபந்தனைகள் விதித்தார். சினிமாவுக்காக நாடகம் நடத்துவதை விட முடியாது. நாடகம் முடிந்துதான் ஷூட்டிங் வைக்கணும். நாடகத்தின் உச்சக் காட்சியான தன் மனைவியை நண்பன் பாலுவுக்கு மணமுடிப்பதை மாற்றக்கூடாது. அடுத்ததுதான் அவரின் தனித்துவம், கே.பி.சுந்தராம்பாள்தான் அந்தக் காலத்தில் நந்தனாராக நடிக்க ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர். அதைவிட அதிகமாக ரூ.25,000 தரவேண்டும் என்றார் ராதா. பெருமாள் முதலியார் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார்.

ரத்தக்கண்ணீர் படத்தில்...

1954 தீபாவளிக்கு வந்த 'ரத்தக்கண்ணீர்' படம் சூப்பர் டூப்பர் ஹிட். மூட நம்பிக்கைகளை நகையாடிய படமது. சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் மக்கள் ஏற்பார்கள் என்பதன் சிறந்த உதாரணம் ரத்தக்கண்ணீர். இன்று தொலைக்காட்சிகளில் போட்டால்கூட 68 ஆண்டுகள் கழிந்தும் மக்கள் ரசித்து, ராதாவின் வசனங்களைப் பேசுகிறார்கள். அதுபோலவே ராதாவின் பெயரோடு ஒட்டி உறவாடும் 'நடிகவேள்' பட்டம் தரப்பட்டதும் திருச்சியில்தான். 'போர்வாள்' நாடகம் திருச்சி தேவர் ஹாலில் நடந்தபோது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி 'நடிகவேள்' என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கினார்.

எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் பெரிய எதிர்ப்பைச் சந்தித்த நாடகம் 'ராமாயணம்.' அதில் ராதா ராமனாக நடித்தார். வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகமது. மேடையின் இரண்டு பக்கமும் தன் நாடக எழுத்துக்கு ஆதாரமான சமஸ்கிருத மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அடுக்கி வைத்தார். அரசு தடை விதித்தது. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று 15-9-1954-ல் பெரியார் தலைமையில் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் முதல் முறையாக மேடையேற்றினார். திருச்சி தேவர் ஹாலில் ராமாயணம் நடந்தபோது “உள்ளே வராதே” என்று அதிரடியாக போஸ்டரும் நோட்டீசும் வெளியிட்டார். “என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராய் இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம்” என்றார் துணிச்சலோடு. இவருக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் நாடகத் தடைச் சட்டம்.

ராமாயணம் நாடக போஸ்டர்

'இழந்த காதல்' நாடகம்தான் ராதாவை அடையாளப்படுத்திய நாடகம். “எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைக் காணத்தவறாதீர்கள்” என்று விளம்பரம் செய்யப்பட்ட நாடகமிது. இந்த நாடகம் சேலத்தில் நடந்தபோதுதான் ராதாவின் ஆற்றலைக் கண்டு வியந்த அண்ணா, பெரியாரையும் அழைத்துவந்து நாடகம் பார்க்கவைத்தார். மேலை நாட்டு நடிகர் பால்முனிக்கு ராதாவை அண்ணா ஒப்பிட்டார். ராதாவின் ஒரு நாடகம் தாங்கள் நடத்தும் 100 மாநாடுகளுக்குச் சமம் என்றார் அண்ணா. இந்த நட்பால்தான் ராதாவின் 'திராவிட மறுமலர்ச்சி நாடக சபா' உருவானது. ஆனாலும் அண்ணா பெரியாரை அரசியலில் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரம்' என்று புத்தகம் எழுதி அண்ணாவிடமே கொடுத்து, இதைப் படியுங்கள் என்றவர் ராதா.

'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' என்ற புது நாடகத்தில் பெண்கள் படும் வேதனைகளை ராதா வலிமையாகப் பேசினார். சமூக சீர்திருத்த நாடகம் என்று நாகப்பட்டினத்தில் விளம்பரம் செய்திருந்தார். ஊர் பெரியவர்கள் சிலர் நாடகம் நடத்தத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றனர். கணேசய்யர் நீதிபதியாக இருந்தார். இவர் சாஸ்திர அறிவு மிக்கவர். பார்க்காமல் தடை விதிக்க மறுத்த கணேசய்யர் ஒருநாள் நாடகம் பார்க்க வந்தார். ராதா தன் சக நடிகர்களிடம் எதையும் மாற்றாமல் அப்படியே நடியுங்கள், வருவது வரட்டும் என்றார். ஒரு காட்சிகூட விடாமல் எல்லாக் காட்சிகளையும் ரசித்த கணேசய்யர் மேடையில் சொன்னார், ”விதவைகள் படும் துன்பம் சாதாரணமானதல்ல. அவர்களுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் இந்த நாடகம் நாட்டுக்குத் தேவையான ஒன்று. விதவைகள் பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது என்பதெல்லாம் அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு சமமல்லவா. நாடகம் எல்லா ஊரிலும் நடக்கட்டும். ராதா நீண்டநாள் வாழ்ந்து தொண்டு செய்யட்டும்” என்றார்.

படத்தில் எம்.ஆர்.ராதா

அநேகமாக நாடக மேடையில் சொல்லப்பட்ட தீர்ப்பாக இதுவே இருக்கும் என்று தொன்றுகிறது. எவர் வந்தாலும் உண்மையைச் சொல்வேன் என்ற நடிகவேள் ராதாவின் துணிச்சலும், விமர்சனத்தில் தன் சமூகத்தை உட்படுத்தினாலும் நியாயம் என்றால் ஏற்பேன் என்ற கணேசய்யரின் நீதிவழுவா நெறியும் இந்தக் காலத்திலும் தேவையாகவே படுகிறது.

'தூக்கு மேடை' நாடகம் கலைஞர் கருணாநிதி எழுதியது. 'கலைஞர்' என்ற அடைமொழிதான் அவரது பெயரான கருணாநிதி என்பதைவிட அதிகமான தமிழர்களால் உச்சரிக்கப்படுகிறது. இந்தக் கலைஞர் பட்டம் அவரை வந்தடைந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. புது நாடகம் ஒன்று போட எம்.ஆர்.ராதா விரும்பினார். திருவாரூரிலிருந்து வந்த இளைஞரான கருணாநிதி தஞ்சையிலேயே தங்கி 'தூக்கு மேடை' நாடகத்தை எழுதிக்கொடுத்தார். மகிழ்ந்துபோன ராதா, நாடகம் எழுதியவரை 'அறிஞர் கருணாநிதி' என்று போஸ்டர்களில் விளம்பரப்படுத்தினார். அண்ணாவுக்கான அடைமொழியைத் தனக்குப் பயன்படுத்தியதை கருணாநிதி ஏற்கவில்லை. “ஏன் உங்க கட்சியில ஒரு அறிஞர்தானா” என்று ஜாலியாகச் சிரித்த ராதா, நாடகத்தின் முதல் நாள் கருணாநிதியை ‘கலைஞர் கருணாநிதி’ என்று அழைத்தார். அன்றுமுதலே தான் கலைஞரானதாகவும் அதுவே தன்னோடு நிலைத்ததாகவும் கலைஞர் 13-9-1989 முரசொலியில் எழுதினார்.

நாடகத்தில் இல்லாத வசனங்களைப் பேசி அதிர்ச்சியூட்டுவது ராதாவின் வாடிக்கை. அதுவே பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது. 'தூக்கு மேடை' நாடகத்தில் பாண்டியனாக நடித்த கலைஞரிடம் “உங்க அண்ணாவை தளபதி தளபதின்னு சொல்றீங்களே, அவரு எந்தப் போருக்குத் தளபதி” என்று திடீரெனக் கேட்டார் ராதா. கலைஞர் சுதாரித்துக்கொண்டு, “வீணை வாசிக்கப்படும்போது மட்டும் வீணையல்ல. உறையில் இருந்தாலும் வீணைதான். அதுபோலத்தான் போருக்கும் அவர்தான் தளபதி. அமைதிக்காலத்திலும் அவர்தான் தளபதி” என்று சொன்னதாக பின்னாள்களில் கலைஞர் எழுதினார்.

எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து. அந்த நாடகத்துக்குத் தலைமை பெரியார். பாதி நாடகம் முடிந்து இடைவேளை நேரத்தில் பெரியார் பேசுகிறார். பார்வையாளரில் ஒருவர் எழுந்து, "இவரு பேச்சைக் கேட்க நாங்க காசுகொடுக்கலை. நாடகத்தைப்போடு" எனக் கத்துகிறார். மேக்அப் ரூமிலிருந்த ராதாவுக்குச் செய்தி போகிறது. பாதி மேக்கப்போடு வந்த ராதா, கத்தியவரைப் பார்த்து, "நாடகம் முடிஞ்சிடுச்சு, நீங்கள் போகலாம். இனி இவர்தான் பேசுவார்" என்றாரே பார்க்கலாம், பெரியாரே அசந்துவிட்டார். இந்தமாதிரி பதிலை அவரே எதிர்பார்க்கவில்லை.

அவரின் கரகரத்த குரலும் அதிரடியான கருத்துகளும் அவருக்கு முரடர் போன்ற தோற்றத்தைக் கொடுத்ததென்னவோ உண்மை. ஆனால் அன்பும் மனிதமும் நிறைந்த மனிதராகவே அவர் வாழ்ந்தார். என்.எஸ்.கே, பாகவதர், ஏ.பி.நாகராஜன், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், டி.ஆர். மகாலிங்கம், வசனகர்த்தா இளங்கோவன், பட்டுக்கோட்டை அழகிரி என்று பலருக்கு அவர்களின் கடைசிக்காலத்தில், அவர்களால் பயன்பட்டவர்களெல்லாம் ஒதுங்கிக்கொள்ள, சத்தமில்லாமல் உதவி செய்தவர் ராதா மட்டும்தான். நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மறைந்தபோது அவரின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தியதோடு, அவரின் சமாதியில் 48 அடி உயரத்தில் நாதஸ்வரம் செய்துவைத்தார். அவரின் மகனுக்கு ஒரு மெக்கானிக் பட்டறையும் வைத்துக்கொடுத்தார்.

நாடக விவசாயி என்று புகழப்பட்டவர் திருச்சி உறையூரைச் சேர்ந்த டி.பி.பொன்னுசாமி பிள்ளை. 'யதார்த்தம் பொன்னுசாமி' என்றே இவரை நாடக உலகம் அழைத்தது. சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, டி.எஸ்.பாலையா, காகா ராதாகிருஷ்ணன் போன்ற மகா நடிகர்களை உருவாக்கியவர் இவர். நாடக உலகம் இவரை மறந்துவிட்ட சூழலில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் 40 ஆண்டுக்கால நாடகப் பணியைப் பாராட்டி 4-11-1956-ல் விழா எடுத்து நாடகம் நடத்தி நிதியளித்து நன்றி செலுத்தியவர் எம்.ஆர்.ராதாதான்.

ராதாவைத் தன் வீட்டுக்கு அழைத்த காமராசர் அவருக்காக தேர்தல் பிரசாரம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். "அய்யா பெரியார் உங்களை ஆதரிப்பதால் உங்களை ஆதரிப்பது என் வேலை" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ராதா. படத்தயாரிப்பாளர் வாசுவிடம் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையைத் தேர்தல் செலவுக்காக காமராசர் கொடுத்தனுப்பினார். "பணத்துக்காகவா நான் பிரசாரம் செய்கிறேன். நாம் மந்திரியாக இருந்தால்கூட இவ்வளவு காரியங்கள் செய்ய முடியாது என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார். அதற்காக அல்லவா ஒப்புக்கொண்டேன். காசோலையை காமராசரிடமே கொடுத்துவிடுங்கள்" என்று வாசுவை அனுப்பிவிட்டார் ராதா. "ராதாவைப்போன்ற ஒருவர் தொண்டராகக் கிடைக்க உண்மையில் பெரியார் கொடுத்துவைத்திருக்க வேண்டும்" என்றாராம் காமராசர்.

எம்.ஆர்.ராதாவின் நாடகப் பணியையும் கொள்கை உறுதியையும் நேசித்த காமராசர் தானே முன்னின்று ராதாவைப் பாராட்டி 'புனித ஆடை போர்த்தும் விழா' ஒன்றை 29-3-1964-ல் நடத்தினார். பொதுவாக அதிகம் பேசாத காமராசர் அன்று மனம்விட்டுப் பேசினார். “நேர்மையானவர்களை சேவை செய்பவர்களை மனசில் பட்டதை தைரியமாகச் சொல்பவர்களை வாயாரப் புகழவேண்டும். ராதா அவருக்கென்று சில கொள்கைகள் வைத்திருக்கிறார். அவற்றை யாருக்காகவும் கைவிடமாட்டார். பணத்துக்காகவும் கைத்தட்டலுக்காகவும் நடிக்கக்கூடியவரல்ல அவர். வசனங்களை எடுப்பாகப் பேசி நடிக்கக்கூடியவர் அவர். என்னை ராதா பலமுறை திட்டியிருக்கிறார். நான் வருத்தப்பட்டதில்லை. நியாயம் இருந்தால் எடுத்துக்கொள்வேன். அவரைப் பாராட்டி விழா நடத்த வேண்டும் என்று யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையிடம் சொன்னேன். இந்த விழா நானே ஏற்பாடு பண்ணியது. இப்போது அவருக்கு புனித ஆடை போர்த்துகிறேன்.” காமராசரின் இந்தப் பேச்சு நடிகவேளை காலத்தின் கலைஞனாக உயர்த்தியது. இந்த விழாவிலும் ராதா தன் வழக்கமான பாணியில் பேசினார். “புனித ஆடை என்றால் என்ன, என்ன புனிதம், ஆடையில் என்ன புனிதம் இருக்கிறது? ஆடையில் புனிதமெல்லாம் இல்லை என்கிறவன் நான். இருந்தாலும் இதைப் போர்த்துகின்றவர் புனிதர் என்பதால் இந்த ஆடையைப் புனித ஆடையாகக் கருதுகிறேன்” என்று காமராசரைப் புனிதர் என்றும் ஒரு புனிதர் போர்த்தியதால் இது புனித ஆடை என்றும் ராதா சொல்லியதை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று - காமராசர் ஆட்சியில் ராதா 52 முறை கைது செய்யப்பட்டார்.

காமராஜர், அண்ணா

குன்றக்குடி பெரிய அடிகளார் எம்.ஆர்.ராதாவுக்கு 'கலைத்தென்றல்' என்ற பட்டத்தைக் கொடுத்தபோது மலைக்கோட்டை மணி அடிக்க ராதாவின் மேல் மலர்மழை பொழிய ஒரே அமர்க்களம். அப்போது அடிகளார், “ராதா மதத்தையும் சமயத்தையும் வெளுத்தெடுப்பதாகச் சொல்கிறார்கள், தூய்மையாக்கவே அவர் வெளுக்கிறார். அதனால்தான் அவரை நான் தென்றல் என்கிறேன்” என்றார்.

சேலத்திலும் பொன்மலையிலும் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது ராதாவால் தாங்கமுடியவில்லை. இதை ஏன் என்று கேட்க நாதியே இல்லையா என்று பெரியாரிடம் கொதித்தார். அந்தக்கால நாடக மரபை மீறி நாடக முன்திரையில் உழைப்பாளியின் படம் வரைந்து “உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள்” என்று பதாகையைத் தொங்கவிட்டுப் புரட்சி செய்தவர் அவர். தோழர் ஜீவா தலைமறைவாக இருந்தபோது அவருக்கு மொட்டையடித்து சாமியார் வேடம்போட்டு அவரைத் தன் நாடகக் குழுவிலேயே வைத்துப் பாதுகாத்தார். கேட்பவரிடமெல்லாம் இவர்தான் நம்ம ரஷ்ய சாமியார், பேசமாட்டார் என்பாராம். ஜீவாவுக்கும் பத்மாவதிக்கும் காதல் இருந்த காலமது. ஏதோ புரட்சிக்கான வேலை என நினைத்து ஜீவா தந்த கடிதங்களைக் கொடுத்துவந்த ராதாவுக்கு அவை காதல்மடல் என்பதே பிறகுதான் தெரிந்ததாம். ஜீவாவின்மேல் அவருக்கு அவ்வளவு பிரியம். ஜீவா மறைந்த பிறகு பெரியார் தலைமையில் நடந்த சிலை திறப்பு விழாவில் ராதாவும் கலந்துகொண்டார். மக்கள் கலைஞன் என்றால் அது ராதா ஒருவர்தான் என்றார் பி.இராமமூர்த்தி.

ராதாவால் ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவர் அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு. எங்கும் அதிகநேரம் உட்கார்ந்தே பழக்கப்படாத ஜி.டி.நாயுடு 3 மணி நேரம் உட்கார இடமில்லாதபோதும் நாடக இசைக்குழுக்கான இடத்திலிருந்து நாடகத்தை ரசித்தார். தனது தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்காக ராதாவின் நாடகத்தை நாயுடு நடத்தினார். அந்த நாடகத்திற்குத் தலைமை ஏற்ற நோபல் விஞ்ஞானி சர் சி.வி.இராமன் பேசும்போது, “மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதாவின் நாடகங்களும் வேண்டும்” என்றார். இன்றைய காலநிலையை விளக்கிக் காட்டும் ராதாவுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறேன் என்றார் நாயுடு. இதன்பிறகு ராதாவுக்கும் அவரது தொழிலுக்கும் நாயுடு ஏராளமான உதவிகள் செய்தார்.

பெரியார்

“நான் சினிமா உலகத்துக்கு மாறுபட்டவன்-எதிர்ப்பாளன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நானே ராதா பெயரில் ஒரு மன்றம் நிறுவுகிறேன்” என்று சொல்லி, பெரியார் 'ராதா மன்ற'த்தை 17-9-1963-ல் திறந்து வைத்தார். அப்போது சொன்னார், "எல்லாக் கலைஞர்களும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த அவர்களின் பின்னால் செல்வார்கள். ஆனால் ராதாவோ ரசிகர்களின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தன் பின்னால் வரவைப்பவர். அதனால்தான் அவருக்கு மன்றம் வைத்தேன்" என்ற பெரியார், ’ராதா வாழ்க’ என்று பேசி முடித்தார்.

இம்பாலா காரை அந்தஸ்தின் அடையாளமாகப் பலர் பார்த்தனர். ஆனால் ராதா தனது இம்பாலா காரில் கேளம்பாக்கத்தில் இருந்த தனது மாட்டுப்பண்ணைக்கு வைக்கோல் ஏற்றி அனுப்பினார். "என்ன இது, வைக்கோல் ஏத்த இம்பாலாவா" என்ற அந்தப் பெரிய நடிகரிடம் ராதா சொன்னார், "இதுவும் ஒரு சாயம் பூசிய தகரம்தான். நம் வேலையை சற்று வேகமாகச் செய்துகொள்ளப் பயன்படும் ஒரு சாதனம் அவ்வளவுதான். இதற்கு மேல் எந்த மதிப்பும் அதுக்கு இல்லை. பசிக்கும் என் மாட்டுக்கு உடனே அனுப்பத்தான் வைக்கோலை இம்பாலாவில் ஏத்தினேன்" என்றாரே பார்க்கலாம். அந்தப் பெரிய நடிகருக்கு முகத்தில் வழிந்த அசடை தன் நடிப்பால் துடைத்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிம்பம் உடைத்தல்!

1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான். ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி "சார் நீங்கள் உடனே கிளம்பலாம்" என்றார். ’பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.

சினிமா நாடகம் எதிலும் அவர் பேசிய பல வசனங்கள் உதட்டின் உற்பத்தியல்ல; வாழ்வின் செய்தி. ஒரு படத்தில் எஸ்.வி.சுப்பையாவைப் பார்த்துக் கேட்பார், “அது எப்படி ஜேம்ஸ், நீ நல்லவனா இருந்தும் பணக்காரனா இருக்கே.” இதை வெறும் வசனந்தானே என்று தள்ள முடியுமா? எழுத்தாளர் விந்தனோடு அவர் சிறையில் நிகழ்த்திய உரையாடல் முக்கியமானது. அதில் சொன்னார், “என்னுடைய பெருமை மட்டும் உலகத்துக்குத் தெரிஞ்சாப் போதாது. பலகீனமும் தெரியணும். இல்லைன்னா மக்களை ஏமாற்றுவதா ஆகிவிடும்.” இது சாதாரண நடிகனின் பேச்சா, ஒரு ஞானியின் ஒளிக்கீற்று அல்லவா?!

எம்.ஆர்.ராதா

வீதி நாடகத்தின் முன்னோடி வடிவமாகவே அவர் நாடகங்கள் இருந்தன. மிகக் குறைந்த செலவு. அதிக சீன் செட்டுகள் இல்லை. செலவு குறைந்தால்தான் சாதாரண மக்களாலும் நாடகம் போடமுடியும் என்பது அவரது கோட்பாடு. அதிக மூலதனம் கலையை அழிக்கும் என நம்பினார். நாடகங்கள் வழியாக நேரடியாக மக்களைச் சந்திப்பதையே விரும்பினார். அவர் சினிமா நடிப்பை 'ரிட்டயர்டு நடிப்பு' என்றார்.

1907ஆம் ஆண்டு சென்னை சூளையில் இராசகோபாலுக்கும் இராசம்மாளுக்கும் மகனாகப் பிறந்த இராதாகிருஷ்ணன் (ராதா) இளம் வயதிலேயே நாடக நடிகரானார். ஜெகந்நாத ஐயரின் நாடகக் கம்பெனிதான் ராதா முளைவிட்ட இடம். 72 ஆண்டுகள் மேடையிலேயே வாழ்ந்த கலைஞன் ராதா, பெரியாரின் 101-ம் பிறந்தநாளான 17-9-1979 அன்று திருச்சியில் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ரத்தக்கண்ணீரைத் துடைக்கும் 'போர்வாள்' வரலாற்றில் எப்போதாவதுதான் பிறக்கும்.

Friday, 8 May 2020

KAMALAHASAN LIFE IS ALSO ACTING OR TRUE




KAMALAHASAN  LIFE IS ALSO ACTING OR TRUE



நான் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ரஜினி பில்லா, முரட்டுக்காளை,கழுகு என மிரட்டிக் கொண்டிருந்தார்.

கமலும் குரு, எல்லாம் இன்ப மயம், சவால் என போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்காமல் கமலைப் பிடித்தது எதற்க்காக என்பதற்கு உளவியலாளார்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் கமல் ரசிகனாக தெருவில் பார்ம் ஆகிவிட்டேன்.

அதற்கடுத்த ஆண்டு சகலகலாவல்லவன் எங்கள் ஊருக்கு வந்தபோது எங்கள் தெருவே விழாக் கோலம் பூண்டது. முதல் நாள் இரவு டேப்ரிக்கார்டரில் படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டேயிருந்தார் எதிர் வீட்டு செல்வம் அண்ணன். அவர் வீட்டு வாசலில்தான் அடுத்த நாள் தியேட்டரில் வைக்கப்படப் போகும் தட்டிகள் தயாராகிக் கொண்டிருந்தன. பழைய சைக்கிள் டயர்களின் உள்ளே எக்ஸ் வடிவத்தில் மூங்கில் தப்பைகளை வைத்து அதை உறுதிப்படித்தி, பின்னர் அதன் மீது வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி தட்டிகள் தயாரிக்கப்படும்.

அதில் சகலகலா வல்லவனைக் காண வரும் கண்களுக்கு நன்றி. இவண் காதல் இளவரசன் கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்று எழுதி கீழே மன்ற உறுப்பினர்களது பெயர்களை எழுதுவார்கள். நான் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென செல்வம் அண்ணன், எழுதிக்கொண்டிருந்தவர்களிடம்

“டேய், இவன் பேரையும் எழுதுங்கடா” என்று சொல்லவும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. அடுத்த நாள் தியேட்டருக்குச் சென்று அதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடுநிலைப் பள்ளி நாட்களிலும், பின்னால் மேல்நிலைப் பள்ளி விடுதி வாழ்க்கையிலும் ரஜினி – கமல் சண்டை என்றாலே கமல் அணியின் முக்கிய தளபதி நான் தான். எந்தப் படம் எவ்வளவு நாள் ஓடியது? வசூல் என்ன? போன்ற விபரங்களுடன் சண்டை போடுவேன்.

பின்னர் கல்லூரிக்குள் நுழைந்ததும் மனம் பக்குவப்பட்டது. எல்லாப் படங்களையும் ரசிக்கும் மனநிலை ஏற்பட்டது. கல்லூரி முதலாண்டு தீபாவளிக்கு தளபதியும் குணாவும் ரிலீஸ். நான் ரஜினி,மணிரத்னம்,மம்முட்டி மற்றும் பாடல்களுக்காக தளபதிக்கே ஓப்பன் ஷோ சென்றேன். அங்கு என்னை எதிர்பாராத ”ராஜபந்தா ரஜினிகாந்த்” ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்.

பின்னர் சென்னை வாசம். பல திரைப்பட கலைஞர்கள், நண்பர்கள், சிறு பத்திரிக்கைகள் தற்போது இணையம் என கமலைப் பற்றி கேள்விப்படாத எதிர்மறை செய்திகள் இல்லை.

யாரையும் மதிக்க மாட்டார், கர்வி, துதிபாடிகள் தான் அண்ட முடியும் என அவரைப் பற்றி கேட்காத செய்திகள் இல்லை.

எனக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள பிரியமானது கடலளவு. இந்த இங்க் பில்லர்களால் அதை எவ்வளவு உறிஞ்ச முடியும்?

இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். கமல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். தேநீர் இடைவேளை முடிந்து பங்கேற்பாளர்கள் அரங்கத்துக்கு உள்ளே சென்று கொண்டு இருந்தனர். கமல் வெளியே நின்று கொண்டிருந்த தன்னார்வலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அருகில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நீல நிற ஜீன்ஸ், பயிற்சிப் பட்டறை சீருடையான சாம்பல் நிற டி சர்ட், சாதாரண லெதர் செருப்பு, கையில் கறுப்பு நிற டயல் மற்றும் வாருடன் கூடிய வாட்ச். உன்னைப் போல் ஒருவனுக்காக ட்ரிம் செய்யப்பட்ட தாடி. 55 வயதில் 30க்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றத்தில் இருந்தார்.

அங்கே இருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். நான் கமலையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பி ஆர் ஓ நிகில் முருகன் வாங்க போட்டோ எடுத்துக்குங்க என்று அழைத்தார். மிக மகிழ்ச்சியுடன் என் ஆதர்சத்தின் அருகில் சென்றேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்ததும், ”உன்னைப் போல் ஒருவன் தீபாவளி ரிலீஸா” என அவரிடம் கேட்டேன்.

”இல்லை, அதற்கு முன்னாலேயே வந்து விடும்” என பதிலளித்தார். அனேகமாக ஆகஸ்ட் 15க்கு வரும் என நான் நினைத்துக் கொண்டேன்.

அங்கு இருந்த செக்யூரிட்டிகள், உணவு கொண்டுவந்த கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் அனைவரும் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர். கேட்டரிங் உதவியாளர் ஓடிச்சென்று வண்டி டிரைவரையும் கிளீனரையும் அழைத்து வந்தார். அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டு போஸ் கொடுத்தார். பின்னர் பட்டறை நடக்கும் அரங்கத்தின் உள்ளே சென்றார்.

நான் வெளியே வரும் போது, அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்கள் பேசிக் கொண்டார்கள். “ கமல் அப்படி இப்படின்னாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுறாரு, ரொம்பத் தன்மையா இருக்காரு” என.

கேட்டரிங்காரர்களும் அதே கருத்தை எதிரொலித்தார்கள். அங்கு இருந்த தன்னார்வலர்களும் டிட்டோ.

இந்த மாதிரி ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஊற்றுவதால் எனக்கும் கமலுக்கும் இடையேயான பாசக் கடலின் நீர் மட்டம் உயர்ந்துவிடுமா என்ன?
 தகவல் தங்கையா.

Monday, 30 July 2018

PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET -M.R.RADHA







PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET
-M.R.RADHA




'மக்கள் என் நடிப்பை பாக்க தான் வர்றாங்களே தவிர, செட்டிங்கை இல்ல...' என்பார் ராதா.

அக்காலத்தில், 'மைக்' கிடையாது; கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் வகையில், தொண்டை கிழிய கத்தி பேச வேண்டும். அதனால், ஒவ்வொரு நாள் இரவும் நாடகம் முடிந்த பின், ஒப்பனை அறையில் இவருக்காக ஒரு பெரிய குண்டானில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் இருக்கும்.
அதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார் ராதா. நள்ளிரவில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் சாப்பிட்டால், பலருக்கு ஜன்னி வந்து விடும். ஆனால், மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடிக்கும் ராதாவுக்கு, அந்த உணவு தேவையாக இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பது தான் முக்கிய வேலை.

தன் குழுவில் இருந்த ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டினார் ராதா. குழுவில், 50 லிருந்து 60 பேர் வரை இருந்தனர். அதில், பெண்கள், 10 முதல் 15 பேர்.

'நாடக நடிகர்கள் யாரும் தூங்கக் கூடாது; தூங்கும் போது கூட காலாட்டிக்கிட்டே தான் தூங்கணும். இல்லேன்னா செத்துப் போயிட்டான்னு வேற யாரையாவது போட்டுருவாங்க...' என்பார் ராதா. தன்னுடைய எம்.ஆர்.ராதா நாடக மன்றத்திலிருந்து யாராவது விலகிச் செல்ல நினைத்தால், அவர்கள் நினைத்து பார்க்க முடியாத பெருந்தொகையை கொடுத்து, அவர்களை வாழ்த்தி வழியனுப்புவது ராதாவின் வழக்கம்.

என்றாவது ஒருநாள் விடுமுறை கிடைக்காதா என்று குழுவினர் ஏங்கித் தவிக்கும் அளவுக்கு, ஆண்டு முழுதும் நாடகங்கள் நடந்தன. அதனால், குழுவினர் யாரும் சோர்ந்து போகாதபடி உற்சாகப்படுத்தியவாறு இருப்பார் ராதா.

அதேபோன்று, தன் குழுவினருக்கு உணவளிக்கும் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வார். சமையல் சரியில்லை என்றால் சமையல்காரன் செத்தான். ராதாவின் வாயிலிருந்து கிளம்பும் கெட்ட வார்த்தைகள், அவனை சுட்டுப் பொசுக்கி விடும்.

வாரத்தில் மூன்று நாட்களாவது அசைவம் போட வேண்டுமென்பது ராதாவின் கட்டளை. மீன், ஆட்டுக்கறி பிரதானமாக இருக்கும். ராதாவுக்கு சமைப்பதில் ஆர்வம் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மட்டன் சமைப்பதில் ஆர்வம் காட்டுவார். அவர் சமைக்கப் போகிறார் என்றாலே குழுவினருக்கு எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவு சமையலில், 'எம்டன்' ராதா.

சில சமயம், தன் குழுவினருக்கு தானே உணவு பரிமாறுவார். அவரது குழுவில் சைவம் உண்பவர்களும் இருந்தனர். அவர்களுக்கு தனி பந்தி நடைபெறும்.
ஒரு ஸ்டுடிபெக்கர் கார், இரண்டு வேன்கள், ராதாவின் கம்பெனிக்கு சொந்தமாக இருந்தன. காரில் நடிகைகளை ஏற்றிக் கொள்வார். வேனில் நடிகர்கள் வருவர். இன்னொரு வேனில் சாமான் செட்டுகள் வரும். கம்பெனியை நிர்வகிக்கும் சாம்பு அய்யரின் மேல், ராதாவிற்கு மிகுந்த மரியாதை. அவர் தன்னுடன் காரில் வரப்போகிறார் என்றால், பெண்களிடம் ரகசியமாக, 'அடியேய்... வேன்ல வாங்கடி, கார்ல ஏறாதீங்கடி...' என்று கடிந்து கொள்வார்.

ராதாவின் குழுவில், பெரிய பேபி, நீலா, ரமணி, பிரேமா, சுகுணா மற்றும் இன்னும் சிலரும் இருந்தாலும், சந்திரா கதாபாத்திரத்தில் நடித்த நீலா, பேரழகி என்றும், ராதா அவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகள் உண்டு.

ரத்தக்கண்ணீரில் வேலைக்கார வேஷம் போட்டு வந்த சுந்தரம் என்பவர், திடீரென கம்பெனியிலிருந்து வெளியேறினார். அப்போதுதான் அறிவானந்தம் என்ற, 12 வயது சிறுவன் கம்பெனியில் சேர்ந்திருந்தான். அவனுக்கு அந்த வேடத்தைக் கொடுத்தார் ராதா. அவனோ நடுங்கியபடி நின்றான்.

'என்னடா பயமா இருக்கா?' எனக் கேட்டார் ராதா. அவனும், 'ஆமாம்...' என்று தலையசைத்தான்.
'நம்மளை பாக்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கான்; அவங்கள விட, நாம மூணு அடி உயரத்துல இருக்கோம். முன்னால இருக்கறவனு களுக்கு எல்லாம் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுட்டு நடிடா...' என, ராதா உற்சாகப்படுத்த, அறிவுக்கு கொஞ்சம் பயம் தெளிந்தது.

வசனங்களை ராதா உள்வாங்கிக் கொள்ளும் விதமே அலாதி. 'அறிவு... ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டு, நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்வார். அறிவு வாசிக்க ஆரம்பிப்பான். ராதாவிடமிருந்து பதிலோ, அசைவோ இருக்காது. அவர் தூங்கி விட்டாரோ என்று நினைத்து நிறுத்துவான்.

'ம்...' என்று குரல் கொடுப்பார் ராதா. மீண்டும் வாசிக்க ஆரம்பிப்பான். தொடர்ந்து மூன்று நாட்கள் வாசித்தால் போதும், அதற்குபின், ராதாவுக்கு பாடம் தேவையில்லை. அவரது ஞாபக சக்தி அந்த அளவுக்கு அபாரமானது.

அக்காலத்தில், நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியின் நாடக செட்டுகளுக்காவே மக்கள் நாடகம் பார்க்க வருவர். பெரிய பாம்பு, பிளக்கும் கடல், சிருங்கார அரண்மனை, பிரமாண்ட தேவலோகம் என்று, மக்களை அசர வைத்தனர். ஆனால், ராதா அதற்கு நேர் எதிர்.
நீல நிறப்படுதா, அதில் காடு. காட்சி மாறும்... சிவப்பு நிற படுதா, அதில் வீடு. அடுத்து, பச்சை நிறப்படுதா, அதில் பொது இடம். எந்த செட்டிங்கும் கிடையாது. மக்கள் படுதாவை பார்த்து, காட்சி எங்கே நடக்கிறது என்று புரிந்து ரசிப்பர்.

'மக்கள் என் நடிப்பை பாக்க தான் வர்றாங்களே தவிர, செட்டிங்கை இல்ல...' என்பார் ராதா.

பல நேரங்களில் வெளியூர் செல்கையில், 'செட்' சாமான்கள் எதையும் எடுத்துச் செல்லாமல், வெறும் படுதாக்களை வைத்து, வெற்றிகரமாக நாடகம் நடத்தியிருக்கிறார் ராதா. அதிலும், குறிப்பாக ரத்தக்கண்ணீர் நாடகம், அப்படி பலமுறை அரங்கேறியிருக்கிறது.

தன் வாழ்நாளில், புதுப்புது காட்சிகளுடன், புதிய வசனங்களுடன் கிட்டத்தட்ட, 5,000 தடவைக்கு மேல், ரத்தக்கண்ணீர் நாடகத்தை மேடையேற்றியிருக்கிறார் ராதா.

மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற, 'ஸ்கிரிப்ட்!' அதை திரைப்படமாக்க எல்லாருக்கும் ஆசையிருந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்கிரிப்டை வைத்து வேறு யாரையாவது போட்டு படமெடுக்கலாம் என்றால், யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன் வருவர்? அப்படியே நடித்தாலும் ராதாவைப் போன்று நடிக்க முடியுமா? அத்துடன், முரட்டு மனிதர், கலகக்காரர் என்ற, 'இமேஜ்' ராதாவிற்கு இருந்ததால், தயாரிப்பாளர்கள் ராதாவை நெருங்க பயந்தனர்.

ராதாவுக்கு அப்போது சினிமாவில் விருப்பம் இல்லை. அதற்கு, பழைய அனுபவங்களே காரணம்.
அவ்வையார் படத்திற்காக கே.பி.சுந்தரம்பாள், ஜெமினி வாசனிடம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய செய்தி, பரபரப்பாக பேசப்பட்ட காலம் அது! நேஷனல் பிக்சர்ஸ், பி.ஏ.பெருமாள், ராதாவை தேடி வந்தார்.

முதலில் ரத்தக்கண்ணீர் படத்தில் கதாநாயகன் தேர்வு செய்யப்பட்டவர் சிவாஜி கணேசன் தான் . பராசக்தி அப்போது முடிவடையவில்லை . சினிமாவில் ராதா நடிக்க பிரியப்படா விட்டால் கதையாவது 

வாங்கலாம்னு ராதாவை அணுகினார் பெருமாள் 


'சினிமாக்காரங்க பழக்கத்தை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. இப்போ நீங்க விரும்பிக் கூப்பிடறீங்க; வரேன். ஆனா, என் வழி, தனி வழின்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்....' என்றார்.

'எல்லாத்தையும் தெரிஞ்சு தான் வந்திருக்கேன்; என்ன செய்யணும் சொல்லுங்க?' என்று கேட்டார் பெருமாள்.
'சினிமாவுக்காக நாடகத்தை விட மாட்டேன்; எனக்கு நாடகம் தான் பெரிசு. ஒற்றை வாடைத் தியேட்டர்ல என் நாடகம் தொடர்ந்து நடக்கும். அது, முடிஞ்ச ராத்திரியில தான் என்னால படப்பிடிப்புக்கு வர முடியும்; சம்மதமா...' என்றார் ராதா.

'அதுக்கென்ன; தாராளமா வைச்சுக்கலாம்...' என்றார் பெருமாள்.'நான் நாடக நடிகன். கேமராவின் இஷ்டத்துக்கு திரும்பத் திரும்ப நடிக்க மாட்டேன்; என் இஷ்டத்துக்கு தான் கேமரா என்னை படம் பிடிக்கணும். என்ன சொல்றீங்க...'

'சரி...'


'சமீபத்துல வாசன், கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு லட்ச ரூபா சம்பளம் கொடுத்திருக்காரு; எனக்கு நீங்க, 25 ஆயிரம் கூடுதலாப் போட்டு ஒண்ணே கால் லட்சமாக கொடுத்துடுங்க...' என்றார்.

'அதுக்கென்ன... தாராளமா செஞ்சுட்டாப் போச்சு...'
எல்லாவற்றுக்கும் சம்மதித்தார் பெருமாள்.
நேஷனல் பிக்சர்ஸ் அளிக்கும், ரத்தக்கண்ணீர் என்று, செய்தித்தாள்களில் விளம்பரம் வந்தது.

உடனே, 'இதுவரை படமாக்கப்பட்ட நாடகங்களில் பல, தோல்வியடைஞ்சுருக்கு; இது என்ன ஆகுதுன்னு பாக்கலாம்...'என்று, எதிர்மறை கருத்துகளும் வந்தன.
இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில், 1952ல் பிரகாஷ் ஸ்டுடியோவில், பட துவக்க விழா நடைபெற்றது. நரசு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு ஆரம்பமானது. கதை, வசனம், திருவாரூர் தங்கராசு; இயக்கம், கிருஷ்ணன் - பஞ்சு. சந்திரா கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீரஞ்சனி ஒப்பந்தமாயினார். இந்நிலையில், காந்தா என்ற தாசி கதாபாத்திரத்தில் நடிக்க யாருமே கிடைக்க வில்லை. அப்போதைய முன்னணி நடிகைகள் இப்பாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டனர்.

ஆறு மாதத்தேடலுக்கு பின், காந்தா கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக நடிகையாக ஒப்பந்தமானார் ஒரு இளம் பெண். அவர் பெயர் எம் .என் .ராஜம்

Monday, 7 August 2017

M.R.RADHA ,THE LEGEND OF ACTING ART


M.R.RADHA ,THE LEGEND OF ACTING ART

ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்… 
நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்கய





எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா… எவருக்கும் அஞ்சாத ராஜா!
மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்… எம்.ஆர்.ராதா. ஜெர் மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய!
அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்துஇருப் பார் ராதா!
சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளி யில் படிக்க மனம் இல்லை. நான் ஓர் அநாதை என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத் தங்கா ள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறி யது முதல் அனுபவம் ‘நாடகத்தில் நடி க்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய் யர் தான் என்பார்!
எம்.ஆர். ராதா நடித்த முதல் படம் ‘ராஜ சேகரன்ய (1937), கடைசிப் படம் பஞ்சா மிர்தம்ய (1979), சினிமா வாய்ப்பு கிடை த்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடு வார்கள். ஆனால், சினிமா – நாடகம் இர ண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!
உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லி, அரி வாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திரா விடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டி விட்டுத் தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!
ரத்தக்கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கே ற்றப்பட்ட து. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட் சுமி காந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டு ள்ளன!
ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப்பல கார் களை வைத்திருந்தார். இம் பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப்பலரும் ஆச்சர்யப் பட்டார்கள்.
‘நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயி ன்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப்போக முடியும்? என்று கேட்டார்!
நாடகம் நடந்துகொண்டு இருக் கும்போது செருப்பு, கல், அழு கிய முட்டை போன்றவை எதி ரிகளால் வீசப்படுவது வாடிக் கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பா ர். ‘நேற்று பேடிகள் விட்டுச் செ ன்ற சாமான்கள் என்று அதில் எழுதிவைப்பார்!
எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா என்றும், சிவாஜியை ‘கணேசா என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத் துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளா கத்துக்குப் போய் விட்டா ர். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதை யே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!
என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர் பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்’
என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டு வைக்கப் போய் வெடி மருந் தைக் காயவைத்து, அது வெ டித்துச் சிறுவிபத்தான சம்ப வமும் உண்டு!
எம்.ஜி.ஆரை அவரது ராமா வரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதா கப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்ட னை தரப்பட்டது.
‘நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக் கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது? என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!
நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக் கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பி ட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போ னது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந் தது!
‘அடியே காந்தா… ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்… நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்கய,
‘ஊருக்கு ஒரு லீடர்… அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக் கு ஒரு பட்டினிப் பட்டாளம்…. நான்சென்ஸ் இப்படி ராதாவின் வார் த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!
ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடி த்தவர். ‘கீமாயணம் என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும் போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். மனம் புண்படு பவர்கள் யாரும் வர வேண்டாம்’
என்று விளம்பரம் கொடுத்தார்! ‘நீங்கள் எதில் அதிக இன்பம் காண் கிறீர்கள்? என்று கேட்டபோது. எதிர்ப்பில்தான்,
மக்கள் எதை விரும்புகிறார்களோ… அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் ‘என்றார்!
ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வ ளவு நீளமான வசனங் களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்கு ள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல் ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடு களாக அந்தக் காலத்தில் வெளிவந்தன.
‘அண்ணாவின் அவசரம், ‘ராமாயணமா? கீமாயணமா?ய என்ற இரண்டும் அதிக சர்ச் சையைக் கிளப்பிவை!
ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன் னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட் டும் போ துமா, பெரிய இடத்துப்பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்துகாட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!
மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை ‘கலைஞர் கருணாநிதி என்று அழைத்துப்பட்டம் கொடுத்த வர்.
‘நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும் என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!
”திராவிட இயக்க ஆட்சி தமிழ கத்தில் மலரும் போது ராதா தான் கலைத் துறை அமைச்ச ராக நியமிக்கப்படுவார் என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங் காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்! தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்க ள் வந்தால் விரட்டுவார்.
”போய்ப் படிங்கடா… நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடாய் என்பது அவரது அழுத் தமான கருத்து!
விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல் லாத காம ராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தி னார்.
‘ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகி றவர் புனிதர்… அதனால ஏத் துக்கிறேன். என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!
‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதா து. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை  என்று சொன் னவர். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்! ”சுட்டாள்….
சுட்டான்.. சுட்டேன் என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக் கத் திட்டமிட்டார். வி.என். ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்… என்று விஷயம் அறிந் தவர்களால் விளக்கம் சொல்லப்பட் டது!
”தமிழினத்துக்குத் துரோகம் செய்கிற வர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடை ய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடை த்தால் போதும் என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந் தார்!
****
ராமாயணமா? கீமாயணமா? எம்,ஆர். ராதா அவர்கள் எழுதிய நூல் பற்றிய விவரங்களும் அதுபற்றிய‌ பிரபலங்களின் கருத்தும்
ராமாயணமா? கீமாயணமா? என்ற நூல் எம். ஆர். ராதாவால் எழுத ப்பட்டது. இது டிசம்பர், 1954ம் ஆண்டு பாரதி அச்சகம், குடந்தை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் புதிய பதிப்பை அன்பு அச்சகம், மதுரை 2008ம் ஆண்டு வெளியிட்ட து.
முன்னுரை
அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மாக்களின் மூல (சமசுகிருத) மொழி பெயர்ப் புக்கள் அறிஞர்களின் சொல்லோவியங்கள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள், இத்தகை ய அடிப்ப டையிலேயே எழுந்ததுதான் என் ராமாயண நாடகம். வினா விடு த்தவர்களுக்கும் விடைபகரும், நோக்கமே உருவானது இச்சிறு நூல். ஐயப்பாடுடைய அக்ரகாரங் களுக்கு ஆதாரம். வேதனைப்படும் ஆத்தீக நன்பர்களுக்கு விளக் கம். விருப்பு வெறுப்பின்றி நடுநிலைமை வகித்து இதைப்படிக்கி ன்ற வாசகர்கள் கூறட்டும் இது ராமாயணமா? கீமாயணமா என்று? முடிவை மக்களிடம் விட்டு விடுகின்றேன்.
இந்நூலை பற்றிய தந்தை பெரியார்

நடிகவேள் எம்.ஆர் இராதா அவர்களால் நாட கரூபமாய் நடிக்கப்ப டும் இராமாயணம் என்னும் நாடகத் தைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியடை ந்தேன்.அவர் நாடகத்தில் நடிக்கும் பாகங்கள் குறிப்புகள் அவ்வளவும் அனேகமாக வால் மீகி இராமாயணம் என்னும் நூலில் காணப்படும் உண்மை களை. இந்த உண்மைகளை மக்கள் அறியாமல் இருக்க வேண்டும்மென்றே பலர் மறைத்தும், திரித்தும், அடியோடு புது வடயங்களை புகுத்தியும் வந்ததி னால் பெரும் பாலான மக்களுக்கு ராமா யண உண்மைத் தத்துவம் தெரி யாமல் போய்விட்டது. நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிரு ந்தே இரா மாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண் மையை யும் சொற் பொழிவாலும் பத்திரிக்கையாலும் ஆராய்ச்சி நூல் என் பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்த்தினாலும் அவை மக்க ளிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது நடகவேள் ராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச் சிக் கருத்துக்களையே தழுவி நாடகரூபமாக்கி நடிக்க முன் வந்தி ருப்பதா னது மிகவும் பாராட்டத்தக்கதாகம் என்பதோடு இரு வரை யும் யாரும் செய்யமுடியாத இக்காரியத்தை இவரே முதலாக நடிக்க முன்வந்த இவரது துணிவையும் நான் பாராட்டுகின்றேன்.
இந்நூலைப் பற்றி அறிஞர் அண்ணா
நடிகவேள் இராதா நடத்தும் இராமாயணம் நாட்டிலே இன்று ஏற் பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியி ன் ராமாயணத்தை மெருகளிப்பதாக கூறி க் கொ ண்டு கம்பன் தமிழகத்தாருக்கு ஓர் கரைபடிந்த காவியத்தைத் தந்து சென்றா ன். அதன் பயனாக இராமாயணம் கலாச் சாரபோரின் விளைவாக ஆரிய காவியங் களின் உண்மைகளும், தன்மைகளும் விள க்கப்பட்டு வருகின்றன. இதற்கு உறுது ணையாக ராதாவின் ராமாயணம் அமை ந்திருக்கிறது. இன எழுச்சியும் மனத் துணி வும் நடிப்புத் திறனும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகவேள் இராதா அவர்கள், இந்த நாடகம் மூலம் நாட்டு விடுதலைக் கிளர்ச் சிக்கு சிறந்த தொண்டாற்றுகிறார் என்று மகிழ்ந்து பாராட்டுகிறேன்.