Showing posts with label NAZIST. Show all posts
Showing posts with label NAZIST. Show all posts

Wednesday, 7 October 2020

NAZIST KARUNANIDHI ATTEMPT TO ASSASSINATE CHO

 


NAZIST KARUNANIDHI ATTEMPT 

TO ASSASSINATE CHO



தமிழ் நாட்டில் புலிகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த சூழலில் மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த அப்பொழுதைய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது. சோ தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்ட ஒரே அரசியல் கட்சி மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி மட்டுமே.


அன்றைய பொதுக் கூட்டம் மதுரை மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நானும் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தேன். மிகவும் குறைவான நபர்களே இருந்த கட்சி அது என்பதினால் நிகழ்ச்சி ஏற்பாட்டு உதவிக்காக சீக்கிரமே நானும் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றிருந்தேன்.


மாநிலத்தில் கருணாநிதியின் காட்டுமிராண்டி ஆட்சி உச்சத்தில் இருந்தது. கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லாம் கடுமையாகத் தாக்கப் பட்டனர். கொல்லவும் பட்டனர். புலிகளின் ஆதரவில் தான் தனித் தமிழ் நாட்டின் அதிபர் ஆகி விடும் கனவில் கருணாநிதி மிதந்து கொண்டிருந்தார். அந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் அன்று காலையிலேயே தினமலர் நிருபர்கள் மாலையில் சோ தாக்கப் படுவார் என்றும் கொலை கூடச் செய்யப் படலாம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த என் நண்பர்களை எச்சரித்திருந்தார்கள். மாலையில் போலீஸ் பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கப்பட்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் எச்சரித்திருந்தார்கள்.


அதை மீறியே கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேடையின் இடது புறம் நின்று கொண்டிருந்தேன். கூட்டத்தில் நெல்லை ஜெபமணி, தமிழருவிமணியன் ஆகியோர் முதலில் பேசினார்கள். கடைசியாக சோ மைக் பிடித்தார். தன் கணீரென்ற குரலில் எடுத்தவுடனேயே பிரபாகரனைத் தொட்டு விட்டார். பத்தாயிரம் பேர்களுக்கு மேலாகக் கூடியிருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கூட அங்கு இல்லை. அப்பொழுது டி எஸ் பி யாக இருந்த சிவணாண்டி என்பவரின் உத்தரவின் பேரில் போலீஸ்பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கப் பட்டிருப்பதை நாங்கள் உணர முடிந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.



சோ பிரபாகரன் பேரைச் சொன்னவுடனேயே சரமாரியாக முன் வரிசையில் இருந்து ஆசிட் பாட்டில்கள் ஆசிட் நிரப்பப் பட்ட பல்புகள் அவர் மீது வீசப் பட்டன. சோ ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்காரர் ஒரு கிரிக்கெட் விமர்சகரும் கூட என்பது அவரது பன்முகத் திறனைப் பற்றி பேசும் பலருக்கும் தெரியாததொரு விஷயம். மேடையில் வீசப் பட்ட பல பாட்டில்களை அவர் லாவகமாகப் பிடித்துக் கொண்டேயிருந்தார்.


தினமலரில் அவர் ஆசிட் பாட்டிலைப் பிடிக்கும் ஒரு ஃபோட்டோ வெளியாகியிருந்தது. தொடர்ந்து ஆசிட் வீசப் பட்டன. பெரும் குழப்பம், களேபரம் ஏற்பட்டது. அது வரை அங்கு வராமல் மறைந்து இருந்த போலீஸ்காரர்கள் கூட்டத்தினரை அடிக்க ஆரம்பித்தார்கள். நெடுமாறன், கருணாநிதி, புலிகள், போலீஸ்காரர்கள் கூட்டணியில் அந்த தாக்குதல் மேற் கொள்ளப் பட்டது. சோவையும் பிறரையும் மேடையின் பின்னால் தள்ளி விட்டார்கள். மேடை முழுக்க ஆசிட் வீச்சினால் புகை மண்டியது. தமிழருவிமணியனின் கண்களில் ஆசிட் பட்டிருந்தது. நான் அவரை ஒரு ரிக்‌ஷாவில் ஏற்றிக் கொண்டு வடக்குமாசி வீதியில் இருந்த ஒரு டாக்டரின் வீட்டைத் தட்டி உள்ளே கொண்டு போய் சிகிச்சை அளித்து விட்டு அதே ரிக்‌ஷாவில் சோ இருந்த சுப்ரீம் ஹோட்டலுக்கு அழைத்துச் செனறேன்.


அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். கொதி மன நிலையில் இருந்த நான் கருணாநிதியைக் கடுமையாக வசை பாடினேன். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார்.


ஜெபமணி என்னை தன் நண்பரின் பேரன் என்று சொல்லி சோவிடம் அறிமுகம் செய்து வைத்தார். டெல்லியில் அப்பொழுது சந்திரசேகர் பிரதமராக இருந்தார். நாடு முழுவதும் குழப்பமான சூழலில் இருந்தது. தமிழ் நாட்டைச் சுடுகாடாக ஆக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது டெல்லியில் உங்கள் நண்பரிடம் இதை எடுத்துச் சொல்லி உடனடியாகக் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் ஆக்ரோஷமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். தான் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாகவும் அதற்கான முழு ஏற்பாடுகளையும் தான் கட்டாயம் எடுப்பேன் என்று சோ கூறினார்.


அந்தக் கொடூரமான இரவு காலை வரை நீண்டது. சோ தன் எழுத்தில் மட்டும் அச்சமில்லாதவராக இல்லை நிஜ வாழ்விலும் தன் மீது ஒரு கொடூரமான கொலைகாரக் கும்பல் தாக்குதல் நடத்திய தருணத்திலும் அச்சமின்றி துணிவுடன் நடுங்காமல் அதை எதிர் கொண்டதை அன்று என்னால் நேரடியாக உணர முடிந்தது. அஞ்சா நெஞ்சன் என்று எவர் எவரையோ அழைக்கிறார்கள் தான் கொண்ட கருத்துக்களிலும் அதற்கான எதிர்ப்புகள் வன்முறையாக வந்த போதிலும் அச்சமின்றி எதிர் கொண்ட அஞ்சா நெஞ்சன் சோ.


மறுநாள் காலை சோ கொடைக்கானல் செல்வதாக இருந்தது. நாங்கள் துணைக்குக் கூட வருவதாகச் சொன்னதை மறுத்து விட்டார். அவர் தனியாகவே காரில் கொடைக்கானல் சென்றார். திமுக அரசின் போலீஸின் உடந்தையை அனுபவித்த அவர் அரசின் போலியான போலீஸ் பாதுகாப்பை மறுத்து விட்டார். தன் வீட்டுக்கு அளிக்கப் பட்ட காவலையும் திருப்பி எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டார். அதன் பிறகு கடைசி வரை எந்தவிதப் பாதுகாப்பும் இன்றியே செயல் பட்டு வந்தார்..


பின்னர் அவர் டெல்லி சென்று ராஜீவ் மற்றும் சுவாமியின் வற்புறுத்தலுடன் சேர்ந்து எடுத்த முயற்சிகளினால் கருணாநிதி அரசாங்கம் மத்தியில் ஆண்ட ஒரு மைனாரிடி அரசாங்கத்தினால் டிஸ்மிஸ் செய்யப் பட்டது. ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான மைனாரிடி அரசை நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்த ஒரே காரணம் சோவும், சுப்ரமணியம் சுவாமியும் கொடுத்த அழுத்தம் மட்டுமே. அதற்கான காரணங்களை ராஜீவிடம் எடுத்துக் கூறி அவரது ஆதரவுடன் சந்திரசேகரை வைத்து திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார்கள்.


எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி கூடத் தொடத் துணியாத சோ வின் மீது நடந்த ஒரே வன்முறைத் தாக்குதல் அந்த மதுரைத் தாக்குதலே. அதன் பின்பும் முன்பும் சோ மீது கை வைக்க எவரும் துணிந்ததில்லை. அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து தனியாகவே எங்கும் சென்று வந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்.


நன்றி திருமலை...


.