Showing posts with label EMDEN. Show all posts
Showing posts with label EMDEN. Show all posts

Friday, 22 September 2017

EMDEN, GERMAN CRUISER BOMB AT CHENNAI 1914 SEPTEMBER 22




EMDEN, GERMAN CRUISER BOMB AT CHENNAI 

சென்னையில் உலக போர் கப்பல் 
எம்டன் குண்டு வீச்சு 1914 செப்டம்பர் 22



உலகத்தையே உலுக்கிய முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் நடைபெற்றது. இந்தப் போரானது, நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது.
முதலாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தையும் அமைத்திருந்தனர்

பெரும்பாலான ஆங்கிலேயர்கள் சென்னையில் வாழ்ந்ததால், ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது திரும்பியது. முதலாம் உலகப் போரில் இங்கிலாந்து இடம்பெற்றிருந்த நேச நாடுகளின் கையே ஓங்கியிருந்தாலும், அவர்களின் ஆளுகையில் உள்ள ஒருசில இடங்களையாவது தாக்கிவிட வேண்டும் என்று ஜெர்மனி நினைத்தது.
தாக்குதலை நடத்த அவர்கள் தேர்வு செய்த இடம் சென்னை. அதற்காக, ஜெர்மனியின் கடற்படைக்கு சொந்தமான எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற நவீன போர்க் கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னையை நோக்கி வீரர்கள் விரைந்தனர். அந்த கப்பலில், தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் என்ற வீரரும் இடம்பெற்றிருந்தார்.

ஜெர்மனி நாட்டின் போர் படையில் அவர் இருந்தபோதும், இங்கிலாந்து பிடியில் இருந்து தாய் நாடான இந்தியாவை மீட்க வேண்டும் என்று தீராத வேட்கை கொண்டிருந்தார். சென்னையில் குண்டு மழை பொழிவதற்காக, செப்டம்பர் 22-ந் தேதி இரவு, சென்னையில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் எம்டன் கப்பல் நிலைநிறுத்தப்பட்டு தயாரானது. கடைசி நேரத்தில் இதை அறிந்த ஆங்கிலேயர்கள் உடனடியாக நகரையே இருளில் மூழ்கச் செய்தனர்.
ஆனால், அப்போது கலங்கரை விளக்கமாக செயல்பட்ட சென்னை ஐகோர்ட்டு கோபுரத்தின் மீது இருந்த விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அவசரத்தில் அந்த விளக்கை அணைக்க ஆங்கிலேயர்கள் மறந்துவிட்டனர். அது எம்டன் கப்பலில் இருந்த ஜெர்மனி வீரர்களுக்கு சாதகமாகிவிட்டது.
கலங்கரை விளக்கு வெளிச்சத்தை இலக்காக வைத்து, கப்பலில் இருந்த பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீசினர். இந்த குண்டு வீச்சில் உயிர்சேதம் பெரிய அளவில் ஏற்படவில்லை என்றாலும், சென்னை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. இதில் இருந்து எழும்பிய தீப்பிழம்புகள் புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் வரை சென்று விழுந்தன.
எம்டன் கப்பலில் இருந்து வீசப்பட்ட குண்டு ஒன்று, சென்னை ஐகோர்ட்டு சுற்றுச்சுவர் மீது விழுந்து வெடித்ததில், அந்த சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. மற்றொரு குண்டு வெடிக்காமல் ஐகோர்ட்டு வளாகத்திலேயே கிடந்தது.

குண்டுவீசி பெரிய அளவில் பொருள் சேதத்தை ஏற்படுத்திய எம்டன் கப்பல் கண் இமைக்கும் நேரத்தில் சென்னையை விட்டு ஆழ்கடலுக்கு பயணிக்க தொடங்கியது. ஆங்கிலேய கடற்படை பின்தொடர்ந்தும், எம்டன் கப்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆங்கிலேய படைக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த எம்டன் கப்பல், 1908-ம் ஆண்டு ஜெர்மானிய நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. இதில், சுமார் 20 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் போது, கதாநாயகனாக விளங்கிய எம்டன் போர் கப்பல், எதிரி நாட்டுக்கு சொந்தமான 30 போர் கப்பல்களை அழித்து கடலில் மூழ்கடித்து இருக்கிறது.
அந்த எம்டன் கப்பலும் 1914-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி, ஆஸ்திரேலியா போர் கப்பலால், சிட்னி துறைமுகம் அருகேயுள்ள கொக்கோஸ் தீவுப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டது. ஆனாலும், எம்டன் கப்பலின் முகப்பு பகுதி இன்னும் தண்ணீருக்கு வெளியே தெரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஜெர்மனி நாட்டு கொடியும் கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது.
சென்னையில் எம்டன் கப்பல் குண்டு வீசிய பகுதியான, ஐகோர்ட்டில் நீதிபதிகள் குடியிருப்பு முகப்பு வாயிலில் நினைவு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிக்காமல் கிடந்த குண்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

எம்டன் கப்பலில் வந்து குண்டு வீசிய செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. எம்டன் கப்பல் வீழ்த்தப்பட்டபோது, அதில் இருந்த 133 வீரர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். அவர்களது குடும்பத்தினர் இன்றைக்கும் ‘எம்டன்’ என்ற பெயரை தங்களது பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்கின்றனர். இதற்கான கவுரவத்தை ஜெர்மனி அரசு அந்த குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது. வேறு யாரும் அந்தப் பெயரை பயன்படுத்த முடியாது.
தமிழ்நாட்டிலும் ‘எம்டன்’ என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. ஆனால் இது பெருமைப்படுத்தும் விதமான பெயராக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அதிக கோபம், பிடிவாதம் கொண்டவர்களை, ‘‘இவன் சரியான எம்டன்பா...’’ என்று கூறுவதை அன்றாடம் கேட்கலாம்.
சென்னையில் எம்டன் கப்பல் குண்டு மழை பொழிந்து, நாளையுடன் (திங்கட்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. என்றாலும், எம்டன் என்ற சொல், இன்றளவும் தமிழர்களின் பேச்சில், மூச்சில் கலந்துவிட்ட ஒன்றாகவே மாறிவிட்டது.

100 ஆண்டுகளை கடந்துவிட்டபோதும், சென்னையில் எம்டன் கப்பல் குண்டு வீசியதை நினைவுகூரும் அடையாளங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. சாலையில் உள்ள மைல் கல்லைப்போல, இதற்கான நினைவு கல்வெட்டு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதுகூட தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது.
எனவே, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, எம்டன் கப்பல் குண்டு வீசிய நிகழ்வை அனைவரும் அறியும் வண்ணம் அடையாளம் காட்டி, மறைந்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.