Showing posts with label ONDI VEERAN. Show all posts
Showing posts with label ONDI VEERAN. Show all posts

Wednesday, 12 May 2021

ONDI VEERAN , COMMANDER OF POOLIDEVAN,FREEDOM FIGHTER AGAINST BRITISH

 

ONDI VEERAN , COMMANDER OF POOLIDEVAN,FREEDOM FIGHTER 

AGAINST  BRITISH





வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் 17ஆம் நூற்றாண்டிலேயே ஆயுதப் போராட்டம் நடத்தி சிற்சில வெற்றிகளைப் பெற்றவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள்.


கட்டபொம்மன், பூலித்தேவர் என பல வீர வரலாறுகளை தென் தமிழகம் கொண்டுள்ளது. பூலித்தேவர் படையில் தளபதியாக இருந்து பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தவர் மாவீரன் ஒண்டிவீரன். அவரது 248ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது . பாளையங்கோட்டை, சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் நினைவு மண்டபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த மன்னன் பூலித்தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையைப் போலவே சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளது


இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவரின் முன்னோர்கள், அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள். அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.


அந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவன் இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள், அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.




 

பூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்துள்ளார் ஒண்டிவீரன்.


அந்த காலகட்டத்தில்தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் வரி கேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலித்தேவரோ ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.


இதன் விளைவாக 1755ஆம் ஆண்டு பூலித்தேவருக்கு எதிராக நடைபெற்ற போரில் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். அவரது கோட்டையை தகர்க்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் வெடிகுண்டுகள் இல்லாத நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால் பூலித்தேவரும் அவரது தளபதியான ஒண்டிவீரனும் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு ஆங்கிலேயப் படையை மதுரைக்கு திரும்பிப்போகச் செய்துள்ளனர்.



 

பூலித்தேவரின் மரணத்திற்குப் பின் அவரது மகன்களின் படையில் ஒண்டிவீரன் தளபதியாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவரது மரணம் பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. அருந்ததியர் சமூகத்து மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஒண்டிவீரனின் வரலாறு நாட்டுப்புற பாடல்களாக வலம் வருகின்றன.


”சின்னான் பகடை பெரியான் பகடை


சிவத்தசொக்கன் கருத்தச் சொக்கன்


அண்ணன் தம்பிமார் அழகிரியுடன்


அஞ்சாறு பகடையுடன் ஒண்டியாம்...


இத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்


அத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்


வலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்


வேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”


என நாட்டுப்புற பாடல்கள், நொண்டிச் சிந்து ஆகியவை ஒண்டி வீரன் குறித்த நினைவுகளைத் தாங்கியுள்ளது.




விடுதலைப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் பிறந்த தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள் சிலர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 247-வது பிறந்தநாள், வரும் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேசினார். சுதந்திரத்துக்காகப் போராடிய ஒண்டிவீரன் மற்றும் குயிலி ஆகியோரை கௌரவிக்கும் விதமாக, தபால்தலை மற்றும் உள்ளூர் விடுமுறை விடக் கோரிக்கை வைத்தனர்.


இந்தச் சந்திப்புகுறித்துப் பேசிய மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார், ‘ஒண்டிவீரனுக்குக் கடந்த 2014-ம் ஆண்டு நினைவு மண்டபம் உருவாக்கி, அதில் சிலையை நிறுவி,  அதற்காக 62 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. அதில், 15 சென்ட் நிலத்தில் கட்டடமும் கட்டப்பட்டது. இந்த நினைவு மண்டபத்தை காணொலி மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தற்போது, ஆண்டுதோறும் ஒண்டிவீரனின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. ஒண்டிவீரன் மற்றும் குயிலி ஆகியோரை கௌரவிக்கும் விதமாக தபால் தலை மற்றும் உள்ளூர் விடுமுறையை அறிவிக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். முதல்வரும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்” என்று கூறினார்.




ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் போர் கொடி!


1857ஆம் ஆண்டு நடந்த வேலூர் சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே தமிழ்நாட்டில் ஒப்பில்லா போராளிகள் உருவாகி வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்கள். அதில், மாபெரும் வீரர்களில் ஒருவர் ஒண்டிவீரன்.


1750 விஜயநகரப் பேரரசு நிர்வாக கட்டமைப்பில் இருந்த ஒரு பாளையம் நெல்லை மாவட்டத்தில் இருந்த நெற்கட்டும் செவ்வயல் பாளையம்.  இதனை ஆட்சி செய்து வந்த பூலித்தேவனின் படைத் தளபதி ஒண்டிவீரன்.


பிரித்தானிய கம்பெனியின் வரி சுரண்டலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள் பாளையக்காரர்கள். தங்கள் பாளையத்தை வல்லாதிக்க சக்திகளிடமிருந்து காக்க பீரங்கியும் துப்பாக்கியுடன் வந்த எதிரிகளை தங்கள் போர் திறனால் விரட்டி அடித்தார்கள். கி.பி 1767ல் சூழ்ச்சியால் பூலித்தேவன் கொலை செய்யப்பட்டார்.


அந்நியர் திமிருக்கு அடிபணியாமல் தொடர்ந்து ஒண்டிவீரன் நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தை காவல் காத்தார். வெள்ளை ஏகாதிபத்தியம் வீரத்தமிழனுக்கு சவால் விட்டது. எங்கள் முகாமுக்குள் நுழைந்து பட்டத்து வாளை எடுத்து குதிரையை ஓட்டி கொண்டு அங்கு வைத்திருக்கும் வெங்கல நகராவை ஒலிக்க வைத்தால் பாளையத்தை தந்து விடுவோம் என்பதுதான் அந்த சவால். 


வீரத்தில் மட்டுமல்ல புத்திக் கூர்மையும் சிறந்தவர் ஒண்டிவீரன். கூலியாளைப் போல் முகாமிற்குள் சென்று குதிரையும் வாளும் வெங்கல நகராவும் இருக்கும் இடங்களை கவனித்தார். இருட்டிய பின்னர் முதலில் முகாமில் நிறுத்திவைக்கப்பட்ட பீரங்கிகளை ஆங்கிலேயர்கள் பக்கம் திருப்பினார். பட்டத்து வாளை எடுத்துக்கொண்டு குதிரை மேல் ஏறி கிளப்ப முயன்றபோது குதிரை முரண்டு பிடித்தது, காவலர்கள் ஓடி வந்ததைப் பார்த்ததும் ஒளிந்து கொண்டார். 


ஈட்டி ஒன்றை அடித்து குதிரையை அதில் கட்டி வைத்தனர் காவலர்கள். ஆனால், அந்த ஈட்டி அறையப்பட்டது ஒண்டிவீரன் கையில். தனது கையை வெட்டி ஈட்டியில் இருந்து விடுவித்துக்கொண்டு குதிரையைக் கிளப்பி நகாராவை ஒலித்து கிளம்பினார். எதிரி ஊடுருவி விட்டார் என்று வெள்ளையர்கள் பீரங்கியை இயக்கினார்கள், பீரங்கி நெருப்பை வெள்ளையர்களின் முகாமில் உமிழ்ந்தது. ஆதிக்கத்திற்கு எதிரான போரில் புலித்தேவன் மறைந்தும் நேர்மையாக போராடினார் ஒண்டிவீரன். 


தமிழர்களின் அடிமை விலங்கை அழித்தொழிக்க ஆர்த்தெழுந்த ஒப்பில்லா வீரன் ஒண்டி வீரன் !