Showing posts with label MANI RATNAM. Show all posts
Showing posts with label MANI RATNAM. Show all posts

Tuesday, 2 June 2020

MANI RATNAM , DIRECTOR OF TAMIL CINEMA BORN 1956 JUNE 2


MANI RATNAM , DIRECTOR OF 
TAMIL CINEMA BORN 1956 JUNE 2



.மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது[1] வழங்கி கௌரவித்தது.

காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.


யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.

ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ்[2] என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இளமை
மணிரத்னம், 2 ஜூன் 1956 ல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம், வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன், ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும்  தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி
ஜி.சீனிவாசன்; இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணிரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக[3] இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது.  திரைப்படம் பார்ப்பது,  அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. 'அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த  சிறுவனாக, திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்களைப் பார்த்து, அவரது ரசிகரானார்.

பள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு, மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து, 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார்.

மணவாழ்க்கை

திரைப்பட நடிகை சுஹாசினியை 1988ல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.

இயக்கிய திரைப்படங்கள்
முதன்மைக் கட்டுரை: மணிரத்னம் திரைப்படப் பட்டியல்
இவரது வெற்றித் திரைப்படங்களில் சில:

1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
1984 - உணரு (மலையாளம்)
1985 - இதய கோவில்
1985 - பகல் நிலவு
1986 - மௌன ராகம்
1987 - நாயகன்
1988 - அக்னி நட்சத்திரம்
1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)- தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
1990 - அஞ்சலி
1991 - தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாகக் கருதப்பட்டது).
1992 - ரோஜா (இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது).
1993 - திருடா திருடா

1995 - பம்பாய்
1997 - இருவர்
1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
2000 - அலைபாயுதே
2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும், வெவ்வேறு நடிகர்களை வைத்து, ஒரே நேரத்தில், தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
2010 - ராவணன் திரைக்கதை, இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது.
2013- கடல்
2015 - ஓ காதல் கண்மணி
2017 - காற்று வெளியிடை
2018 - செக்க சிவந்த வானம்
வெளி இணைப்புகள்

பெருமையாக பேசணும் என்றால் அது மணிரத்னம் தான்: இயக்குநர் பாரதிராஜா புகழாரம்
மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில் கூறியிருப்பதாவது:

"பெருமையாக பேசணும் என்றால் அது மணிரத்னம் தான். சினிமாவில் உலகின் மகத்தான கலைஞனை தமிழகம் ஈன்று எடுத்ததிற்காக தமிழுக்கும் பெருமை, தமிழ் மண்ணுக்கும் பெருமை. அந்தக் கலைஞன் இன்னும் உலகளவில் தன்னுடைய திறமையைக் காட்டி, இந்தத் திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையைப் படைக்க இருக்கின்ற ஒரு மனிதன்.

அவருடைய பிறந்த நாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறவேண்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைக் கூறுகிறேன். தமிழுக்கும், தமிழ் கலைகளுக்கும், திரையுலகிற்கும், அவன் தனிமுத்திரை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்"

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தற்போது பலராலும் படமாக்க நினைத்துக் கைவிட்ட 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.


.

Friday, 25 October 2019

PAGAL NILAVU AND MANI RATNAM





PAGAL NILAVU AND MANI RATNAM


மணிரத்னம் இயக்கிய துவக்க காலத் திரைப்படங்களுள் ஒன்று - பகல் நிலவு. 'நாயகன் திரைப்படத்திற்கு முன்னோடி. காட்ஃபாதரை மணி லேசாக சற்று முயன்று பாா்த்தார் என்று கூட சொல்லலாம்.

நான் கவனித்தவரை வில்லன் பாத்திரத்தை இயன்ற அளவில் இயல்பாக சித்தரிக்க முயன்ற முதல் திரைப்படம் என்று 'பகல் நிலவை'த்தான் சொல்லுவேன்.
அதுவரை விநோதமான உடையலங்காரத்தோடும் தலையலங்காரத்தோடும் 'கபாலி, மாயாண்டி' என்ற பெயர்களில் உள்ள கைகட்டிய அடியாட்களோடும், பின்னர் வரும் சண்டைக்காட்சியில் கலைந்து விழப் போகிற அட்டைப்பெட்டிகளும், டிரம்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற குடோன்களில், அல்லது அடர்த்தியான வண்ணங்களுடன் கூடிய அலங்கார மாளிகையில் 'டீல் ஓகே' என்றவுடன் எவனோ பயங்கரமாக சிரிக்க.. 'கச்சத் தீவில் கை வெச்சு பாரு' என்று முக்கல் முனகல் குரலில் பெரும்பாலும் ஜானகியுடன் இரவல் குரலுடன் ஜெயமாலினியோ, அனுராதாவோ சிக்கனமான ஜிகினா உடையில் ஆடிவர, அவர்களை விவகாரமான கோணங்களில் காமிரா கவர..

இப்படியாக அபத்தமாக, கருப்பு -வெள்ளையாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வில்லன் பாத்திரத்தை, அவன் இச்சமூகத்தில் நம்மிடையே கண்ணியமான தோற்றத்தில் வாழ்கிறவன்தான்தான் என்கிற பிம்பத்தை மணிரத்னம் உருவாக்கினார். என் நினைவு சரியாக இருக்குமென்றால் சத்யராஜ் பயபக்தியுடன் சாமி கும்பிடும் காட்சிதான் அவருடைய அறிமுகக் காட்சியே. வில்லன் ஆத்திகவாதியாக இருக்கக்கூடாதா? 
*
ஆனால் நான் குறிப்பிட வந்தது, பகல்நிலவு திரைப்படத்தின் ஒரு பாடலைப் பற்றி. மற்ற பாடல்கள் எல்லாம் போதுமான அளவு புகழ்பெற்றன என்றாலும் அதில் வரும் 'வாராயோ.. வான்மதி' என்கிற பாடலை இன்னமும் எவர் நினைவு வைத்திருக்கப் போகிறார்கள் என வியக்கிறேன். நீண்ட காலமாகவே இந்தப் பாடலை பாடியவர் எவர் என்பதை அறியாமல் இருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக தேடிய போதுதான் இதைப் பாடியவர் 'ரமேஷ்' என்று அறிந்தேன். ஆனால் இதைத் தவிர இவரைப் பற்றி வேறெந்த தகவலும் இல்லை. இது தவிர வேறு பாடல் ஏதேனும் பாடியிருக்கிறாரா என்பதுவும். இதைப் போலவே இதில் வரும் பாடகியும். உஷா சீனிவாசன் என்பவரைப் பற்றியும் எந்த தகவலும் தெரியவில்லை.
ஒரு திறமையான பாடகருக்கேற்ற எந்த குரல் வளமும் ரமேஷூக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்காக முயற்சிப்பவர் குளியலறையில் தீவிரமாக பயிற்சி எடுப்பது போன்ற இயல்புத்தனம் இருக்கிறது. சாதாரணக் குரலாக இருந்தாலும் அதில் ஏதோவொரு வசீகரம் இருக்கிறது. அதனாலேயே இந்தப் பாடலை நான் அடிக்கடி கேட்பதுண்டு.
*
இந்தப் பாடல் என் நினைவில் நீங்காமல் தங்கியிருப்பதற்கு இன்னொரு பிரத்யேகக் காரணமும் உண்டு. +2 கல்வியின் போது பாட்டுப் போட்டியில் என் வகுப்பு மாணவன் ஒருவன் இந்தப் பாடலைப் பாடினான். ஏறத்தாழ அசல் குரலில் இருந்த அந்த உருக்கமும் குழைவும் அப்படியே அவனுடைய பாட்டிலும் எதிரொலித்தது. அதுவரை அவனிடம் அத்தனை பழக்கம் இல்லாமலிருந்தது. பாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு நானாக வலியச் சென்று அவனுடைய நண்பனானேன். பள்ளிப் படிப்பு முடித்து தொடர்பு அறுந்து சில ஆண்டுகள் கழித்த சமயங்களில் இவன் இசை நிகழ்ச்சிகளில் பாடும் பாடகனாயிருப்பானோ என்று நானாக நினைத்துக் கொள்வேன்.
ஆனால் இவனைச் சமீபமாக பார்ததது, சரவணபவன் ஹோட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக. சற்று வருத்தமாக இருந்ததது. அந்தப் பாடல் போட்டியை அவனுக்கு நினைவுப்படுத்தினேன். 'இன்னுமாடா அதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கே" என்றான்.
ஒரிஜினல் பாடலை பாடிய ரமேஷ்ஷை காலம் எங்கோ நிறுத்தியிருக்கிறதோ என்று உள்ளூற நெருடலாயிருக்கிறது.
சுரேஷ் கண்ணன்
Shared publicly