Showing posts with label GALIL GIBRAN. Show all posts
Showing posts with label GALIL GIBRAN. Show all posts

Saturday, 6 January 2018

GALIL GIBRAN , POET,PHILOSOPHER BORN 1883 ,JANUARY 5





GALIL GIBRAN , POET,PHILOSOPHER 
BORN 1883 ,JANUARY 5





கலீல் ஜிப்ரான் (Khalil Gibran, xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,[1] அரபு جبران خليل جبران , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் 

வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]

லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். [2] அவரது புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். இதனால் குடும்பத்தின் எதிர்காலம் கருதி தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார் கலீல் ஜிப்ரானின் தாய். பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. 1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக் கல்வியும் பயின்றார்.[3]

1902 இல் மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1904-ல் பாஸ்டனில் நடந்த ஓவியக் கண்காட்சியில், பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை மேரி எலிசபெத் ஹாஸ்கெலைச் சந்தித்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ஹாஸ்கலுடனான அவருக்கு நட்பு ஏற்பட்டது. கலீல் ஜிப்ரானின் ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது. 1905 முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய ‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. [4]

1923 இல் ஜிப்ரான் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்) எனும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இறப்பு[மூலத்தைத் தொகு]
காசநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகளால் 1931 ஏப்ரல் 10 இல் தனது 48 ஆவது வயதில் கலீல் ஜிப்ரான் மரணமடைந்தார்.


ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட கலீல் ஜிப்ரான் பிறந்த தினம் இன்று (ஜனவரி 6). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# லெபனான் நாட்டில் பஷ்ரி என்ற நகரில் பிறந்தவர். இவரது 12-ம் வயதில் குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகள் அறிந்தவர். ஓவியத்தில் இவருக்கு இருந்த திறனை அறிந்த அவரது ஆசிரியர்கள் இவரை பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.


# அப்போது இவர் வரைந்த படங்களை ஒரு வெளியீட்டாளர் தனது புத்தகங்களின் அட்டைகளில் பயன்படுத்திக்கொண்டார். இளம் வயதிலேயே இலக்கிய உலகிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.

# 15 வயதில் பெய்ரூத் சென்று உயர் கல்வி பயின்றார். அங்கே கல்லூரி இலக்கிய பத்திரிகையை நண்பர்களுடன் சேர்ந்து வெளியிட்டார். கல்லூரி-கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிப்ரான் இலக்கிய, அரசியல் புரட்சியாளர் என்று கருதப்பட்டார்.

# 1902-ல் பாஸ்டன் திரும்பினார். இவரது கட்டுரை வடிவிலான கவிதைகள் அடங்கிய ‘தி ப்ராஃபெட்’ வெளிவந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்றார்.

# இதன் பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. இது 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அமெரிக்காவில், 20-ம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாக விற்பனையான புத்தகமாகத் திகழ்ந்தது.

# கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் இவரது புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின. அரேபிய, ஆங்கில, பாரசீக மொழிகளில் கவிதை தொகுப்புகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

# இவரது படைப்புகளை சிரத்தையுடன் தேடிக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்த பெருமை இவரது காரியதரிசி பார்பரா யங்கையே சாரும். ஜிப்ரான் தனது முற்போக்கு சிந்தனைகள் காரணமாக மதகுருமார்கள், அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளானவர். ‘ஒட்டுமொத்த உலகமும் எனக்கு தாய்நாடுதான். அனைவரும் என் சக குடிமகன்கள்’ என்று இவர் கூறுவார்.

# உலகின் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. லெபனானில் ஜிப்ரான் அருங்காட்சியகத்தில் இவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவரது புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகித்துவருகிறது.

# இவரது படைப்புகள் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. வாழ்க்கை சம்பந்தமான தீவிர சிந்தனைகள் கொண்ட இவரது படைப்புகள் உலகம் முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

# உலகின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்தாளர், ஓவியர், தத்துவவாதி, கவிஞர். உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டுவரும் கலீல் ஜிப்ரான் 48-ம் வயதில் மரணமடைந்தார்.


துன்பங்களைப் படைப்பாக்கத் தெரிந்தவர்
விவரங்கள்
எழுத்தாளர்: க.பஞ்சாங்கம்

தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்து முறையாகப் படிக்கிற பெரும்பாலான மாணவர்களுக்கு விசித்திரமான பழக்கமொன்று அவர்கள் அறியாமலேயே ஒட்டிக் கொள்வதைக் கவனித்து வந்திருக்கிறேன். நானே ஒரு தமிழிலக்கிய மாணவன் என்பதோடு ஏறத்தாழ 38 ஆண்டுகள் தமிழிலக்கியம் படிக்கிற மாணவர் பட்டாளத்தோடேயே வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதால் இந்த விசித்திரப் பழக்கத்தைத் தொடர்ந்து கவனித்து உறுதிப்படுத்தி இருக்கிறேன். என்ன அந்தப் பழக்கமென்றால் ‘காதல் கவிதை’ எழுதத் தொடங்குவதுதான். மனமெனும் புரியாப் பொருளைப் பாடாய்ப்படுத்தி அவஸ்தைக்குள் தள்ளி நையப் புடைக்கும் காதலெனும் நெருப்புச் சுவையில் துளியளவு அனுபவமும் இல்லாமல், அது குறித்துக் கவிதை எழுதத் தொடங்கி விடுவதை விசித்திரமானது எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

khalil-gibran
காவி ஆடை வேண்டாம்
கற்றைச் சடை வேண்டாம்
பாவித்தாலே போதும்
பரம நிலை எய்தலாமே!

என்பார் பாரதியார். அதுபோல தமிழிலக்கியம் படிக்கிற மாணவர்கள் தங்களைக் காதலர்களாகப் பாவித்துக் கொள்வது என்பது எளிமையான ஒன்றாக அமைந்து விடுகிறது. காரணம், சங்க இலக்கியம் தொடங்கிப் பாரதிதாசன் வரைக்கும் அது பக்திப் பாடலாக இருந்தாலும் கூட காதல் என்கின்ற ஆட்டிப் படைக்கும் உணர்ச்சியின் மேல் கட்டப்பட்ட கவிதைகளைத்தான் அவர்கள் பாடமாகப் படிக்கிறார்கள். பாடம் நடத்துகிற பேராசிரியர்களும் அதை ஒரு வித்தாரமாக விதந்து ஓதுவார்கள். தமிழர்களுக்குக் காதலும் வீரமும் இரண்டு கண்களெனக் கொண்டாடிக் கூத்தாடுவார்கள். பிறகென்ன? அந்த வாலிப மனசு மிக எளிதாகக் காதலனாகத் தன்னைப் பாவித்துக் கொள்கிற மனப்பான்மைக்கு உள்ளாகிவிடும். விளைவு காதல் கவிதைகள் வெளிப்பாடு. நானும் கூட அப்படித்தான் காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கும் போது இன்று வேடிக்கையாக இருக்கிறது. எனக்குள் தமிழிலக்கியப் பாதிப்போடு காண்டேகர், தாகூர், வால்ட் விட்மன் என்று மொழிபெயர்ப்பில் பிறந்த காதல் எழுத்துக்களோடும் பரிச்சயம் ஏற்பட்டு ஒருவிதமான கற்பனாவாத மனிதனாக என் வாலிபப் பருவத்தில் இருந்திருக்கிறேன். எனவே மிக எளிதாக உணர்ச்சி வசப்பட்டு உணர்ச்சிகரமான வார்த்தைகளுக்குள் என்னை இழந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் மராட்டிய மொழி எழுத்தாளரான காண்டேகர் எழுத்துக்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழிபெயர்ப்பில் ஓடி ஓடிப் படித்திருக்கிறேன். அந்தப் பாதிப்பில் இப்படி ஒரு கவிதை:

ஒரு தடவை கூடக்
காதலிக்காதவன்
பன்றிப்பால் குடித்தே வளர்ந்திருக்க 
வேண்டுமென்று
பம்பாய்க்காரன்
ஒருவன் சொன்னான்;;.

ஐயோ…! 
அந்தப் பால் குடித்தே- நான்
வளர்ந்திருக்கக் கூடாதா?

பாரதி கூறியது போல “பாவித்துக் கொள்வதுதான்” யதார்த்தத்தைவிட ஆற்றலோடு விளங்குகிறது. மனித வாழ்வு வரையும் கோலங்களின் அழகுதான் எத்தனை? எத்தனை?

இவ்வாறு பாவித்துக் கொள்கிற பழக்கத்தை என்னுள் பெரிதும் வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில்தான் கவிஞர் மீரா மூலம் உலகப் புகழ்பெற்ற அராபியக் கவிஞர் கலீல் ஜிப்ரான் (1883-1931) எனக்கு அறிமுகமானார். தமிழ் வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு புதுக்கவிதை மிகச்சிறப்பாக இருந்து விட்டால், அக்கவிதைக்கான மூலத்தை கலீல் ஜிப்ரானிடமும் தாகூரிடமும் காண்டேகரிடமும் தேடிக் கண்டுபிடிக்கும் பழக்கும் தமிழர்களிடையே நிலவியது. அப்படியொரு கட்டுரையை ‘தாமரை’ இதழில் வாசித்த நினைவிருக்கிறது. அந்த அளவிற்கு ஜிப்ரான் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் மீரா மூலம் ஜிப்ரானின் புகழ்பெற்ற “புரோக்கன் விங்க்ஸ்” (Broken Wings) என்ற ஆங்கில நூல் என் வாசிப்பிற்குக் கிடைத்தது. நான் ஆங்கில மொழியில் முழுமையாக வாசித்த முதல் புத்தகமும் அதுதான். அந்நூல் குறித்து எனக்குள் சென்றுவிழும்படிச் சொல்லப்பட்ட மதிப்பீடுகள் என்னைப் பெரிதும் தூண்டிக் கொண்டே இருக்க பக்கத்தில் லிப்கோ அகராதியை வைத்துக் கொண்டு வாசித்து முடித்த அருமையான புத்தகம் அது. 


ஒரு கிராமத்தானுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில மொழி அறிவோடு வாசிக்கும் போதே வசன கவிதை போல அமைந்த அந்த உண்மைக் கதை, கற்பனாவாத மனநிலையில் இருந்த எனக்குள் புகுந்து பலநாள் படாதபாடு படுத்தியது. நானே காதலித்துத் தோற்றது போல ஓர் உணர்வில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டேன். பாதி புரிந்தும் பாதி புரியாமலும் வாசிக்கிற வாசிப்பு அனுபவம் எத்தகைய வீச்சோடு உள்ளே கிடந்து உயிரைக் குடையும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

பின்னால் 1988-இல் முழுமுதலோன் (தி.க.சி அவர்களின் மகன்-கணபதி) மொழிபெயர்ப்பில் “முறிந்த சிறகுகள்” என்று அது வெளிவந்தது; அப்போது வாசிக்கும் போதும் எனக்குள் ஊறிய துக்கத்திற்கு அளவில்லை; அப்போது என் கணக்கில் இரண்டு ஆண் குழந்தைகள் சேர்ந்து விட்டார்கள் என்பதையும் சேர்த்து எண்ணிப் பார்த்தால் ஒரு மொழிவழிப்பட்ட படைப்பின் மூலம் எத்தகைய திருவிளையாடல்களை எல்லாம் நிகழ்த்திக் காட்டமுடியும் என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட வேண்டியதிருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதுவதற்காக இப்போதும் படித்துப் பார்க்கிறேன். இப்போது மூன்று பேரப் பிள்ளைகள். ஆனாலும் அந்தப் படைப்பு இன்றைக்கும் புத்தம் புதிய வார்த்தைகள் போல எனக்குள் மளமளவென்று தங்கு தடையில்லாமல் பாய்ந்து பரவுகின்றது.

கவிஞர், ஓவியர், புனைகதையாளர், சிற்பி, நாடக ஆசிரியர், தத்துவ அறிஞர் என்று பன்முகங் கொண்ட ஜிப்ரானின் மொழி, நமக்கு இரண்டு மொழி தாண்டி வந்து சேர்கிறது. மூலமொழி வாசகர்களுக்கு அது என்னவாகத் தோன்றுகிறதோ தெரியவில்லை; ஆனால் இரண்டு மொழி தாண்டி வரும் போது மூலத்திலிருந்து எவ்வளவோ தூரம் விலகி இருக்கலாம் என்றாலும் இப்படி விலகி வருவதனாலேயே தனியான ஒருவகைப்பட்ட ‘மொழிக் கவர்ச்சி’ வந்து கூடுகிறதோ எனச் சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்றைக்கும்கூட தாய்மொழியில் எழுதப்பட்ட நமது சமகாலக் கவிதைகளை வாசிப்பதற்கும் சமகால மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பதற்கும் இடையில் ஏதோ ஒரு மனநிலை புகுந்து மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்குக் கூடுதலான கவர்ச்சி ஊட்டுவதாக எனக்கு அடிக்கடித் தோன்றுகிறது; பரிச்சயம் ஆகிவிடாத தன்மை, புரியாத் தன்மை மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு இருப்பதால் இப்படி நிகழ்கிறதோ என்னமோ!

“முறிந்த சிறகுகள்” சொந்த சோகக்கதை. அந்தச் சோகம் நடந்த போது ஜிப்ரானுக்கு வயது பதினெட்டு; எனவே அந்த வயதுக்குரிய வேகத்தோடு மொழியும் வேகமாக வந்து விழுகிறது. மொழியைச் சீவி சீவிக் கூர்மையாக்குவது கவிதையாக்கத்தின் முதல்படி; அதுவே முடிவானதும்கூட. ஆங்கில மொழியோடு இந்திய மொழித்தனத்தையும் குறிப்பாக மலையாள மொழித்தனத்தைக் கலந்து பிசையும் போது அருந்ததிராய்க்கு “காட் ஆப் சுமால் திங்க்ஸ்” எழுத ஒரு புதிய மொழி கிடைக்கிறது. கலீல் ஜிப்ரான் எழுத்து அனைத்தும் அப்படியொரு புதிய மொழியைக் கண்டுபிடித்துச் சமைக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.

ஜிப்ரானின் எழுத்தின் ஒவ்வொரு அசையிலும் துக்கம் அதன் கனத்தோடு கசிந்து கொண்டிருக்கும். ‘முறிந்த சிறகுகளில்’ அவரே ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார் காதலி சொல்வது போல:-

ஒரு கவிஞன் தனது துயர எண்ணங்களைக் காதலிப்பது போல
நீங்கள் என்னைக் காதலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

எனவே ஜிப்ரானுக்குள் துக்கம் என்பது ஒரு வரமாக இருந்து வினைபுரிந்துள்ளது. புலம்பெயர்ந்த நியூயார்க் நகரத்தில் 1931-ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தனது 48-வது வயதில் எலும்புருக்கி நோயினால் (அந்தக் காசநோய்க்கு அப்பொழுது மருந்து கண்டுபிடிக்கவில்லை) இறந்து போன ஜிப்ரான் இன்றைக்கு லெபனான் என அறியப்படும் நாட்டில் 1883 ஜனவரி 6-ஆம் தேதி பிறந்தார். தன் தாய் கமிலாவிற்கு 30-வயதாக இருக்கும் போது தாயின் மூன்றாவது கணவனான கலீல் என்பானுக்குப் பிறந்தார். தாத்தா ஒரு பாதிரியார். தனது குடும்பத்தின் ஏழ்மையினால் சிறுவர் பருவத்தில் கல்வியைப் பெறமுடியாமல் போன ஜிப்ரான் தனது வீட்டிற்கு வருகை தரும் பாதிரியாரான தாத்தா மூலம் பைபிளையும், அராபிக், சிரியாக் ஆகிய மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஜிப்ரானுக்கு எட்டு வயது வாக்கில் அவருடைய தந்தை ஊழல் குற்றத்திற்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவருடைய குடும்பச் சொத்துக்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகைய கையறு நிலையில் குடும்பம் 1895-இல் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தது. அமெரிக்காவில் அவருடைய தாய், வீடு வீடாகச் சென்று தைக்கிற தையற்காரியாகவும், நாடா, துணி மணி விற்பவராகவும் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளார்.

அமெரிக்காவில்தான் ஜிப்ரான் 1895-லிருந்து முறையாகப் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியுள்ளார். கூடவே ஒரு கலைப் பள்ளியிலும் சேர்ந்து பயின்றுள்ளார். இந்நிலையில் மேற்குலக அழகியல் பண்பாட்டைவிடத் தன் மண்ணின் பண்பாட்டையும் மரபையும் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கில் அவருடைய தாய் மீண்டும் ஜிப்ரானை லெபனானுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். அப்பொழுது அவருக்கு வயது 15. பல ஆண்டுகள் கழித்து உயர்கல்வியை பெய்ரூட்டில் முடித்த பிறகு 1902-இல் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்பினார். அவர் திரும்புவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்புதான் அவருடைய சகோதரி சுல்தானா காசநோயினால் தனது 14 வயதில் இறந்திருந்தார். ஜிப்ரான் அமெரிக்காவிற்கு வந்த அடுத்த ஆண்டில் அவருடைய சகோதரர் பீட்டர் அதே நோயினால் இறந்தார். தாய் புற்றுநோயினால் இறந்தார். சகோதரி மரியன்னாதான் ஜிப்ரானைக் கவனித்துக் கொண்டார். அவள் ஓர் ஆடை அலங்காரக் கடையில் பணியாற்றினாள். கலை மனம் மிக்க ஜிப்ரானுக்குள் இத்தகைய வாழ்க்கை கொடுத்த துக்கம்தான் அவர் எழுத்துக்களுக்குள் துன்பமாகவும் தத்துவமாகவும் கேலியும் கிண்டலுமாகவும், விளையாட்டாகவும் விரவிக் கிடக்கின்றன. 1923-இல் ஆங்கிலத்தில் எழுதிய தீர்க்கதரிசி (The Prophet) என்ற நூல் அவருக்கு உலகப் புகழ் வாங்கித்தந்தது.

1912-இல் அராபிக் மொழியில் வெளிவந்த “முறிந்த சிறகுகள்” என்ற படைப்பில் காணப்படும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்குள் சோகத்தை மீட்டுவதாக அமைந்துள்ளன. ‘முறிந்த சிறகுகள்’ முன்னுரையை இப்படித்தான் தொடங்குகிறார்:-

காதல் தன் மந்திரக் கதிர்களால் என் கண்களைத் திறந்து என்
ஆன்மாவைத் தன் நெருப்பு விரல்களால் முதல் தடவையாகத் தொட்ட 
போது, எனக்கு வயது பதினெட்டு. 

செல்மா காரமி தன் அழகால் என்
ஆன்மாவை எழுப்பிப் பகல்கள், கனவுகளைப் போலவும் இரவுகள்,
திருமணங்களைப் போலவும் கழிகிற, உயர்ந்த அன்பென்னும் 
தோட்டத்திற்கு இட்டுச் சென்ற முதல் பெண்.
(மொ.பு.முழுமுதலோன்)

காதல் அரும்பிய நெருப்புக்கனல் பறக்கும் அந்தக் காலகட்டத்தில் தன் நிலை எவ்வாறு இருந்தது என்பது இவ்வாறு சித்திரிக்கின்றார்:-

தனிமை துயரத்தின் கூட்டாளி என்பதோடு ஆன்மீக மேம்பாட்டின்
தோழனும் ஆகும். துயரத்தால் தாக்கப்படுகின்ற இளைஞனின் ஆன்மா,
இதழவிக்கின்ற வெள்ளை லில்லியைப் போன்றது. அது தென்றலின் முன்
நடுங்கி, விடியலுக்குத் தன் இதயத்தைத் திறந்து இரவின் நிழல் 
வரும்போது இதழ்களைத் திரும்ப மூடிக்கொள்கிறது. …அவனுடைய
வாழ்க்கை சிலந்தி வலைகளை மட்டுமே காணமுடிகிற பூச்சிகளின்
ஊர்ந்து செல்லும் ஓசைகளை மட்டுமே கேட்க முடிகிற குறுகிய ஒரு
சிறைச்சாலை போன்றதாய் இருக்கும்.

காதலி செல்மா வேறொருவனைக் கைப்பிடித்த நிலையில் காதலன் பேச்சாக வருகிற பகுதிகள், காதலித்தவர்கள் மட்டுமே உணரக்கூடியவைகளாகும்.

காதற் கிண்ணத்திலிருந்து ஒயினை உறிஞ்சிக் குடிக்காதவன் என்ன 
மனிதப் பிறவி? ஆண் பெண் இவர்களின் இதயங்களைத் தரையாகவும்,
இரகசியக் கூடாரமான கனவுகளைக் கூரையாகவும் கொண்ட
கோயிலின் ஒளியூட்டப்பட்ட பீடத்திற்குமுன் பயபக்தியோடு நிற்காத
ஆன்மா என்ன ஆன்மா? ஒருதுளிப் பனியைப் புலர் காலைப் பொழுது
இதழ்களின்மீது ஒரு போதும் தூவாத மலர் என்ன மலர்? கடலுக்குச்
செல்லாமல் தன் போக்கை விட்டுவிட்ட ஓடை என்ன ஓடை?


இப்படி ‘முறிந்த சிறகுகள்’ முழுவதும் காதலும் கண்ணீரும் கலந்து கிடந்து வாசகனைப் படாதபாடு படுத்துகின்றது. கொடுமைக்காரக் கணவனிடம் மாட்டிக் கொண்ட செல்மாவின் குழந்தை இறந்து விடுகிறது; அதை ஜிப்ரான் இவ்வாறு கூறுகிறார்:-

அவன் ஒரு எண்ணத்தைப் போலப் பிறந்தான்; ஒரு பெருமூச்சைப் போல
இறந்தான்; நிழலைப் போல மறைந்தான்.

மகனை இழந்துவிட்ட தாய் சொல்லுகிறாள்:-

என் குழந்தையே! நீ என்னை எடுத்துச் செல்ல வந்திருக்கிறாய்.
கரைக்கு வழிகாட்டும் பாதையை எனக்குக் காட்ட வந்திருக்கிறாய்.
இதோ நானிருக்கிறேன்; என் குழந்தையே! என்னை வழிநடத்து. நாம்
இந்த ‘இருட்குகையை’ விட்டுச் செல்லலாம்.

மறுநாள் ‘ஒரே சவப்பெட்டியில் இரண்டு சடலங்கள்’-

“சவக்குழி தோண்டுபவன் பாப்ளர் மரங்களுக்குப் பின் மறைந்த போது, அதற்கு மேலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. நான் செல்மாவின் கல்லறையின் மேல் விழுந்து அழுதேன்”

என்று ‘முறிந்த சிறகுகள்’ முடியும் போது இதயம் கண்ணீரில் மிதப்பதை எந்த வாசகராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு ஒரு படைபோல ஆயிரம் கரங்களோடு புறப்படும் துன்பங்களைப் படைக்கத் தெரிந்த ஜிப்ரான் அங்கதச் சுவையோடு நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பல குட்டிக் கதைகளையும் எழுதியுள்ளார். நான் சிரித்துச் சிந்தித்த ஒரு கதை, ‘உறக்கத்தில் நடப்பவர்கள்’ என்பதாகும். அந்தக் குட்டிக்கதை இதுதான்:-

நான் பிறந்த அந்த நகரத்தில் ஒரு தாயும் மகளும் வாழ்ந்தார்கள்; அவர்கள் இருவருமே உறக்கத்தில் நடக்கிற ஒருவிதமான நோய்க்கு ஆளானார்கள்.

எங்கும் அமைதி நிலவிய ஒருநாள் இரவு அந்தத் தாயும் மகளும் ஒருவர்பின் ஒருவராக உறக்கத்தில் எழுந்து நடந்தனர்; நடந்து பனி மூடிய ஒரு மலர்த் தோட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

முதலில் தாய் பேசினாள்: இறுதியாய்; இறுதியாய்; கண்டு கொண்டேன்; 
நீதான் என் எதிரி! உன்னால்தான் என் இனிய இளமை 
அழித்தொழிக்கப்பட்டது; எனது அழிவின் மேல்தான் நீ உனது 
வாழ்க்கையை எழுப்பிக் கொண்டாய்; நான் உன்னைக் கொன்றிருக்க
வேண்டும்.

இதைத் தொடர்ந்து மகள் பேசினாள்:-

ஓ! வெறுக்கத் தக்க, சுயநலமிக்க, கிழட்டுச் ஜென்மமே! நீதானே
எனக்கும் எனது சுதந்திர உணர்விற்கும் நடுவில் நின்றாய்! உன்னுடைய
சொந்த பட்டுப்போன வாழ்வின் எதிரொலியைத் தானே எனது வாழ்வாக 
நீ சமைத்தாய்! நீ செத்தொழிய வேண்டியவள்

இப்படி உரையாடல் போய்க் கொண்டிருந்த அந்தக் கணத்தில் ஒரு சேவல் உரக்கக் கூவியது. இரண்டு பெண்களும் விழித்துக் கொண்டனர். உடனே தாய்க்காரி சொன்னாள்:-

அன்புக்குரியவளே! இங்கே நின்று கொண்டிருப்பது என் செல்லமகள்
நீயா?

மகள் பாசம் மிளிர மெதுவாகப் பதில் சொன்னாள்:-

அன்புள்ள அம்மா! ஆமா நானேதான்!
- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8.