Wednesday 19 February 2020

T.R.MAHALINGAM ,A LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21






T.R.MAHALINGAM ,A LEGEND BORN 


1924 JUNE 16 - 1978 APRIL 21





நடிகர் டி. ஆர். மகாலிங்கம் பிறந்த தினம் ஜூன் 16 . 1924 .

தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978)  1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் , பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம் [2] ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழவந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கமும் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில்

ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன் , எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் டி. எம். செளந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.
பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13 ஆவது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் , தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த பாடலைப் பாடியபடியே அறிமுகமானார் மகாலிங்கம்.

கிருஷ்ணரைப் பற்றி தமிழ், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா , சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

நடித்த திரைப்படங்கள்

1. பூலோக ரம்பை (1940)
2. சதி முரளி (1940)
3. தயாளன் (1941)
4. பிரகலாதா (1941)
5. நந்தனார் (1942)
6. மனோன்மணி (1942)
7. ஸ்ரீ வள்ளி (1945)
8. நாம் இருவர் (1947)
9. ஞானசௌந்தரி (1948)
10. வேதாள உலகம் (1948)
11. ஆதித்தன் கனவு (1948)
12. பவளக்கொடி (1949)
13. மாயாவதி (1949)
14. இதய கீதம் (1950)
15. லைலா மஜ்னு ) (1950)
16. மச்சரேகை (1950)
17. மோகனசுந்தரம் (1951)
18. வேலைக்காரன் (1952)
19. சின்னதுரை (1952)
20. விளையாட்டு பொம்மை (1954)
21. மாலையிட்ட மங்கை (1958)
22. அபலை அஞ்சுகம் (1959)
23. மணிமேகலை (1959)
24. அமுதவல்லி (1959
25. ரத்தினபுரி இளவரசி (1960)
26. ஆடவந்த தெய்வம் (1960)
27. கவலை இல்லாத மனிதன் (1960)
28. தந்தைக்குப்பின் தமையன் (1960)
29. ஸ்ரீ வள்ளி (1961)
30. திருவிளையாடல் (1965)
31. திருநீலகண்டர் (1972)
32. அகத்தியர் (1972)
33. ராஜ ராஜ சோழன் (1973)
34. ஸ்ரீ கிருஷ்ணலீலா (1977)
35. தெருப்பாடகன்
36. பண்ணையார் மகள்
37. என்னைப் பார்
38. திருமலை தெய்வம்




‘போங்கடா நீங்களும்... உங்க சினிமாவும், என்று கோபித்துக்கொண்டு சொந்த கிராமத்துக்கே திரும்பிவிட்ட ஒருவர், மீண்டும் திரையுலகில் உச்ச அந்தஸ்தைப் பெற முடியுமா?’ முடியும் என்று 55 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியவர் டி.ஆர்.மகாலிங்கம்.
‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘ஆடை கட்டி வந்த நிலவோ’போன்ற காலத்தை வென்ற பல பாடல்களைப் பாடியவர். பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளரும்கூட. இவரது கலைப் பயணம் தொடங்கியது மதுரையிலிருந்து.
14 வயதில் சினிமா
1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ராமகிருஷ்ண கனபாடிகள்- லட்சுமி தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.
8 வயதில் பள்ளிக்கூடம் போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.
இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன் மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது. 14 வயதே நிரம்பிய மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்துவந்துவிட்டார்.
முதல் வெற்றி
மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’ 1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றன. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பக்த பிரகலாதா, பரசுராமன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை அது பெற்றுக்கொடுத்தது.
‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.எம். செட்டியாருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.
அக்காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.
இசை வாரிசு
ஒலிபெருக்கிக் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், உரத்த குரலில் பாடித்தான் நாடக ரசிகர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி. கிட்டப்பா என்றால் உயிர்.
எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே (1933) துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட, கிட்டப்பாவின் பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.
சினிமாவைத் தூக்கியெறிந்தார்!
புகழின் உச்சியை அடையும்போது, திரைத்துறையினர் பொதுவாகச் செய்யும் அதே தவறுகளை செய்தார் மகாலிங்கம். தன் படத்துக்கு இன்னார்தான் இசையமைக்க வேண்டும், இன்னாரைத்தான் நாயகியாகப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுக்க, தானே தயாரிப்பில் இறங்கினார் மகாலிங்கம்.
மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை என்று அவர் தயாரித்து நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவின.
பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.
மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.
கண்ணதாசனுடன் டி.ஆர். மகாலிங்கம்

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.
அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக அமர்த்தினார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தவர் கண்ணதாசன்தான்.
17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. 1958-ல் வெளியான அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்.
அரசியலில் சிக்காதவர்
டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும் நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில் பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால், இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.
இறுதிக் காலம்

மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில் நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு வந்துவிட்டார்.
நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.
சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.
தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்னமும் வாழ்கிறார் டி.ஆர். மகாலிங்கம்.


இன்றைய உலகம் மிக வேகமானது. நம் தாத்தாவின் பெயர் நமக்குத் தெரியும். நம் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்றால் நிச்சயமாக பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. காரணம் அதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதுமாதிரிதான் திரைப்பட கலைஞர்களும், தமிழில் சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் சினிமாவை வளர்த்த அற்புதமான கலைஞர்களை எத்தனை பேருக்குத் தெரியும். தியாகராஜ பாகவர், பி.யூ.சின்னப்பா போன்றவர்களை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம். அவர் காலத்தில் இருந்த மற்ற கலைஞர்கள் பற்றி யாருக்குத் தெரியும். அப்படி காலம் மறந்த அற்புத கலைஞர்தான் டி.ஆர்.மகாலிங்கம்.
செந்தமிழ் தேன் மொழியாள்...
"செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்...", "ஆடைகட்டி வந்த நிலவோ..." திருவிளையாடல் படத்தில் வரும் "இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை..." பாடல்களை இப்போதும் கேட்டு உருகிவிடுகிறோம். ஆனால் அதை பாடியதும், அந்த பாடலில் நடித்ததும் டி.ஆர்.மகாலிங்கம் என்ற மகா கலைஞன் என்பது பலருக்குத் தெரியாது.
ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தந்த வாய்ப்பு
1924ம் ஆண்டு மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ராமகிருஷ்ணன், லட்சுமி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் மகாலிங்கம். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர்.மகாலிங்கம். பள்ளி படிப்பு படிக்காமல் பாடத்தான் பிடித்தது மகாலிங்கத்திற்கு காரணம் அவரது குடும்பமே கனபாடிகள் குடும்பம்தான். வாய்ப்பாட்டு கற்றுக் கொண்ட மகாலிங்கம், ராஜரத்தினம் பிள்ளையின் பாய்ஸ் நாடக கம்பெனியில் பாடகராக வேலைக்குச் சேர்ந்தார். சில வேடங்களில் நடிக்கவும் செய்தார். ஒரு முறை நாடகத்தில் மகாலிங்கத்தின் நடிப்பை பார்த்த ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "வாப்பா உன்னை சினிமாவில் நடிக்க வைக்கிறேன்" என்று தனது ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
புகழ் தந்த ஸ்ரீவள்ளி
1937ம் ஆண்டு நந்தகுமார் படத்தில் பால்ய வயது கிருஷ்ணராக நடித்தார். அந்த படம் ஹிட்டானதும் அதன் பிறகு கிருஷ்ணர் வேடம் என்றால் மகாலிங்கத்தை தேட ஆரம்பித்தார்கள். பக்தபிரகலாதன், பரசுராமன் உள்பட பல படங்களில் கிருஷ்ணனாகவே நடித்தார். முருகனாக நடித்த ஸ்ரீவள்ளிதான் டி.ஆர்.மகாலிங்கத்தின் புகழுக்கு மகுடம் சூட்டியது. 52 வாரங்கள் ஓடி அந்தப் படம் சாதனை படைத்தது. தியாகராஜ பாகவதருக்கு பிறகு பாடி நடிக்கும் நடிகர்களில் முதன்மையாக திகழ்ந்தது டி.ஆர்.மகாலிங்கம்தான். நடிப்பில் தியாகராஜபாகவதரின் மறு உருவமாகவும், பாடலில் பி.யூ.சின்னப்பாவின் வாரிசாகவும் சினிமாவில் வலம் வந்தார்.
புகழின் உச்சியில் இருக்கும்போது தன் இஷ்டப்படி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அமையாததால் தானே சொந்தப் படம் எடுக்க ஆரம்பித்தார். மோகசுந்தரம், சின்னதுரை, மச்சரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை போன்ற படங்களை தயாரித்தார். அத்தனையும் தோல்வி அடையவே நடித்து சம்பாதித்த அத்தனை செல்வத்தையும் இழந்தார். பிறகு சினிமா மீது வெறுப்பு கொண்டு மீண்டும் நாடகத்திற்கே திரும்பினார். திரைப்படங்களுக்கு நிகராக நாடகங்கள் நடத்தி அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.
கவியரசர் கண்ணாதாசன் தனது மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் ஹீரோவாக நடிக்க வைத்தார். அந்தப் படம் மாபெரும் பெற்றிபெற மீண்டும் சினிமாவில் வெற்றிகரகமாக வலம்வரத் தொடங்கினார். திருவிளையாடல் உள்ளிட்ட பல புராண படங்களில் மீண்டும் நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி மீண்டும் மேடைதோறும் பாடி மக்களை மகிழ்வித்தார். கடைசி வரை மக்களை தன் இனிய குரலால் தாலாட்டிய டி.ஆர்.மகாலிங்கம் 1978ம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் நிரந்தரமாக தூங்கிவிட்டார். சினிமாவை துச்சமென மதித்து நாடகத்தை உயிராக நினைத்து வாழ்ந்த உத்தம கலைஞன் அவர்.



தமிழ்ப்பட உலகின் முதல் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ஆகியோர் ஆவார்கள். அவர்கள் புகழுடன் விளங்கிய காலக்கட்டத்திலேயே மூன்றாவது சூப்பர் ஸ்டார் ஆனவர் டி.ஆர்.மகாலிங்கம்.
டி.ஆர்.மகாலிங்கத்தின் பிறப்பிடம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை. தந்தையார் ராமகிருஷ்ண கனபாடிகள். இவரது மூன்றாவது மனைவியின் இரண்டாவது மகன் தான் மகாலிங்கம். இவர் 1923–ம் ஆண்டு பிறந்தார். பையனின் படிப்பு திண்ணைப்பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புடன் முடிந்தது; ஆனால் தன்னிச்சையாக எழுந்த இசை வளர்ந்தது.
கோவில்களில் தெய்வீக மணம் கமிழும் இசையைப் பாடி பக்த கோடிகளுக்கு பரவசமூட்டினார் மகாலிங்கம். இவரை ஊக்குவித்து பாட்டு சொல்லிக்கொடுத்து ‘குருநாதர்’ என்று பெயர் பெற்றவர் செல்லூர் சேஷ அய்யங்கார். இதனால் தரகர் ராமய்யர், மகாலிங்கத்தை ஜகன்னாத அய்யரின் பாய்ஸ் கம்பெனியான ‘பாலமோகன கானசபா’வில் சேர்த்துவிட்டார்.
தென்னாட்டின் முக்கியமான தேசபக்தர்களில் ஒருவர் காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி. அவர் மாஸ்டர் மகாலிங்கம் நடித்த நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கி, மகாலிங்கத்தின் குரலில் மயங்கி பாராட்டினார். மறுநாள் திடுமென ஒரு கச்சேரியில் மகாலிங்கத்தைப் பாடச்சொன்னார்.
மகாலிங்கத்தின் குரலையும், நடிப்பையும் நாடகத்தில் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து மகாலிங்கத்துக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம் தயாரித்த ‘‘நந்தகுமார்’’ படத்தில் நடிக்க மகாலிங்கம் வாய்ப்பு பெற்றார்.
பேசும் படங்கள் வருவதற்கு முன் நாடக உலகில் புகழ்பெற்ற நடிகராகவும், பாடகராகவும் விளங்கியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவருடைய குரலைப் பெற்றிருந்தார், மகாலிங்கம். இதன் காரணமாக கிட்டப்பா பாடல்களை அப்படியே பாடி, ‘‘கிட்டப்பாவின் எதிரொலி’’ என்று புகழ்பெற்றார்.
ஸ்ரீவள்ளி
பிரகலாதா, மாயஜோதி, வாமன அவதாரம் முதலிய படங்களில் சிறுவேடங்களில் நடித்த மகாலிங்கம், அடுத்து ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரித்த ‘‘ஸ்ரீவள்ளி’’ படத்தில் கதாநாயகனாக (வேலன், வேடன், விருத்தன்) நடித்தார். அப்படத்தில், கிட்டப்பாவின் புகழ்பெற்ற பாடல்களை (‘காயாத கானகத்தே’, ‘எல்லோரையும் போல என்னை எண்ணலாகுமோடி’) கம்பீரமாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
‘‘ஸ்ரீவள்ளி’’ 52 வாரங்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மகாலிங்கத்தின் நடிப்பும், பாட்டும் முக்கியக் காரணம்.
‘‘ஸ்ரீவள்ளி’’ படத்தை சில பங்குதாரர்களுடன் சேர்ந்து, ‘ப்ரகதி பிக்சர்ஸ்’ பேனரில் ஏவி.எம். தயாரித்தார். அடுத்து, ‘ஏவி.எம். புரடெக்ஷன்ஸ்’ நிறுவனத்தை தொடங்கி, முதல் படமாக ‘‘நாம் இருவர்’’ படத்தை 1947–ம் ஆண்டில் தயாரித்தார்.
இப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கமும், டி.ஏ.ஜெயலட்சுமியும் இணைந்து நடித்தனர். ஏவி.எம். டைரக்ட் செய்தார்.
‘‘நாம் இருவர்’’ படம் பெரிய வெற்றி பெற்றது. மகாலிங்கம் நட்சத்திர அந்தஸ்து பெற்று, தமிழ்ப்பட உலகின் மூன்றாவது சூப்பர் ஸ்டார் ஆனார். பல பட அதிபர்கள் மகாலிங்கத்தை ஒப்பந்தம் செய்தனர். சிட்டாடல் ஞானசவுந்தரியில் எம்.வி.ராஜம்மாவுடன் இணைந்து நடித்தார். படம் பெரிய வெற்றிபெற்றது.
1948–ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பாக வந்த ‘‘ஆதித்தன் கனவு’’, 1949–ம் ஆண்டில் ‘‘பவளக்கொடி’’, ‘‘மாயாவதி’’ மற்றும் ‘‘இன்பவல்லி’’ போன்ற படங்கள் மகாலிங்கத்துக்கு எதிர்பார்த்த வெற்றியை தேடித்தரவில்லை.
தவிர மகாலிங்கம் நடித்துக் கொண்டிருந்த சிலபடங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நின்றன. மகாலிங்கமும், பி.பானுமதியும் நடித்த ‘‘புலேந்திரன்’’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு விளம் பரங்கள் வெளியிடப்பட்டு, பின் கைவிடப்பட்டது.
‘‘ஆதித்தன் கனவு’’ திரைப்படத்தில் மகாலிங்கத்தின் ஜோடியாக நடித்தவர் அஞ்சலிதேவி. அவரை மகாலிங்கத்தின் ஜோடியாகக் கொண்டு ‘‘தூக்குத்தூக்கி’’ என்ற படமும் ‘‘மங்கையர்க் கரசி’’ என்ற படமும் தயாரிக்கப்பட்டு பின் தயாரிப்பாளர்களால் கைவிடப்பட்டன.
சொந்தப்படம்
இந்த சூழ்நிலையில்தான் மகாலிங்கத்தின் மனதில் ஒரு துர்பாக்கியமான எண்ணம் தோன்றியது. அது தான் சொந்தத்தில் படம் எடுப்பது.
‘‘நாம் இருவர்’’ திரைப்படத்தில் மகாலிங்கம் ஏற்ற பாத்திரத்தின் பெயர் ‘சுகுமார்’. அதுவே தனக்கு அதிர்ஷ்டம் தந்த பெயர் என்று கருதி மகாலிங்கம் தனது மகனுக்கும் சுகுமார் என்று பெயரிட்டிருந்தார். தனது திரைப்பட நிறுவனத்திற்கும் ‘ஸ்ரீ சுகுமார் புரடெக்ஷன்ஸ்’ என்று பெயரிட்டார்.
இந்நிறுவனத்தின் சார்பாக ‘மச்சரேகை’ என்ற திரைப்படம் 1950–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் மகாலிங்கம் சர்வாதிகாரியாகவும், மச்சராஜனாகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். கதாநாயகி எஸ்.வரலட்சுமி.
சி.ஆர்.சுப்பாராமன் இசையமைக்க பி.புல்லையா இயக்கியிருந்தார். படம் தோல்வியுற்றது.
மகாலிங்கம் நடித்த பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘‘லைலா–மஜ்னு’’ வெளிவந்து தோல்வி எண்ணிக்கையைக் கூட்டியது. எனினும் சிட்டாடலின் ‘‘இதயகீதம்’’ ஓரளவு ஓடி மகாலிங்கத்திற்கு ஆறுதல் தந்தது.
எனினும் தன் சொந்தப்பட முயற்சியை கைவிடாத மகாலிங்கம் 1951–ம் ஆண்டில் ‘‘மோகனசுந்தரம்’’ என்ற படத்தை ஸ்ரீ சுகுமார் புரடெக்ஷன்ஸ் சார்பில் எடுத்து வெளியிட்டார். ‘‘மோகனசுந்தரம்’’ ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய துப்பறியும் நவீனத்தை தழுவியது. மகாலிங்கம், எஸ்.வரலட்சுமி தான் படத்தில் ஜோடி. ஏ.டி.கிருஷ்ண சாமி படத்தை இயக்கியிருந்தார். படம் சுமாராக ஓடியது. டி.ஜி.லிங்கப்பா இசை அமைப்பில் ‘ஓ, ஜெகமதில் இன்பம் தான் வருவதும் எதனாலே’, ‘பாட்டு வேணுமா’ என்று மகாலிங்கம் பாடிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.
மகாலிங்கம் அடுத்து எடுத்த படம் ‘‘சின்னதுரை’’. 1952–ம் ஆண்டில் வெளிவந்தது. இப்படத்தின் கதை வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய ‘‘இருமன மோகினிகள்’’ என்ற கதையைத் தழுவியது.
இப்படத்தை மகாலிங்கமே இயக்கியிருந்தார். ஜோடியாக நடித்தவர் எஸ்.வரலட்சுமி. இப்படத்தின் கதை அமைப்பு, இடியாப்ப சிக்கலாக அமைந்து மகாலிங்கத்திற்கு தோல்வியைக் கொடுத்தது.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஜே.பி.சந்திரபாபு நடித்து ‘‘போடாராஜா பொடி நடையாக’’ என்ற பாடலையும் பாடியிருந்தார். போதாதற்கு அதே ஆண்டில் ஸ்ரீவள்ளி புரடக்ஷன்ஸ் மகாலிங்கம், மாதுரிதேவி மற்றும் வரலட்சுமியைக் கொண்டு பி.வி.கிருஷ்ணன் இயக்கத்தில் ‘‘வேலைக்காரன்’’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டது. இப்படமும் பெரிய வெற்றி பெறவில்லை.
எப்படியும் வெற்றித் தயாரிப்பாளராக வேண்டும் என்ற உணர்வு மகாலிங்கத்துக்கு இருந்து கொண்டேயிருந்தது. 1954–ம் ஆண்டில் ஸ்ரீ சுகுமார் புரடெக்ஷன்ஸ் பேனரில் ‘‘விளையாட்டு பொம்மை’’ என்ற திரைப்படம் தயாரித்தார். இந்த படத்தில் முந்தைய அவரது படங்களின் தயாரிப்பிலிருந்து சில மாறுதல்கள் செய்யப்பட்டன. குறிப்பாக இப்படத்தில் மகாலிங்கத்தின் ஜோடியாக குமாரி கமலா நடித்தார். இயக்கம் டி.ஆர்.ரகுநாத். வழக்கம்போல் படத்தில் மகாலிங்கம் பாடிய, ‘தீர்த்தக் கரையினிலே’, ‘மோகத்தைக் கொன்றுவிடு’, ‘விதிக்கு மனிதன் விளையாட்டு பொம்மை’ போன்ற சிறப்பான பாடல்களை மகாலிங்கம் பாடியிருந்தும் படம் தோல்வியுற்றது.
போட்ட இடத்தில் தானே தேடவேண்டும். இழந்த பொருளை மீட்க படத்தயாரிப்புதான் ஒரே வழி என்று திரும்பவும் அக்கிணற்றிலேயே குதித்தார் மகாலிங்கம். நடிகை கிரிஜா போன்றவர் களுக்கு வாய்ப்பளித்து தானும் நடித்து ‘‘தெருப்பாடகன்’’ என்ற படத்தை தயாரித்தார். படம் முடிக்கமுடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இப்படத்தில் நடித்த ஒரு பெரிய நடிகர் கால்ஷீட் ஒழுங்காக கொடுக்காததால் வெறுப்படைந்த மகாலிங்கம் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கம்பெனியையும் மூடிவிட்டார்.
துரதிஷ்டவசமாக படம் வெளிவரவில்லையென்றாலும் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்து ரசிகர்களை தாலாட்டியது.
மஞ்சள் கடுதாசி
கம்பெனியை மூடிய மகாலிங்கம் தனது மயிலாப்பூர் மாளிகையையும் இழக்க வேண்டிவந்தது. பின் தன் பிறப்பிடமான தென் கரையை புகலிடமாக்கிக் கொண்டார். இப்படி 1950–ம் ஆண்டிலிருந்து 1955–ம் ஆண்டு வரை அவர் தயாரித்த ஐந்து திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர் தலையில் விழுந்த இடியானது. பொன், பொருள், சுகபோக வாழ்வு என்ற எல்லாவற்றையும் இழந்த மகாலிங்கம் ‘இன்சால் வென்சி’ (‘மஞ்சள் கடுதாசி’) அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையிலும் மகாலிங்கத்துடன் பிரியாது இணைந்திருந்தவை அவரது இனிமையான, கம்பீரம் நிறைந்த சாரீரம். அது ஈட்டித்தந்த புகழும் தான்.
ஐந்து படங்கள் தயாரித்து வெளியிட்டு ‘கையை சுட்டுக்கொண்டு’ நான்கு வருடங்கள் தென்கரையில் தங்கியிருந்தார் மகாலிங்கம். காலம் இந்த கலைஞனைக் கட்டிப்போட்டது. இசை ஞானம் அவரை விடுவித்தது. ‘‘மீண்டும் சினிமா’ என்ற வாய்ப்பு மகாலிங்கத்தை இப்போது தேடிவந்தது.
மாலையிட்ட மங்கை
கவிஞர் கண்ணதாசனுக்கும் திரைப்படம் தயாரிப்பதில் நாட்டமிருந்தது. ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். முதல்படமாக சரத்சந்திர சட்டர்ஜியின் ‘‘சந்திரநாத்’’ என்ற கதையைத் தழுவி ‘‘மாலையிட்ட மங்கை’’ என்ற கதையை கவிஞர் உருவாக்கினார். நொடிந்திருந்த மகாலிங்கத்தை, எதிர்ப்புகளிடையே, கதா நாயகனாக நடிக்க வைத்தார். பண்டாரிபாயும், மைனாவதியும் உடன் நடித்தனர்.
படத்தின் டைரக்டர் ஜி.ஆர்.நாதன். தன் ஆசை தீர படத்திற்கு 17 பாடல்களை எழுதித் தீர்த்தார் கவிஞர். பாடல்கள் இனிக்க இசை அமைத்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.
நான்கு பாடல்கள் மகாலிங்கத்துக்கு. படத்தின் தலைவிதி எப்படியோ என்று சிருஷ்டியாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். படம் துவங்கும்போதே தனது கம்பீரக் குரலில் ‘‘எங்கள் திராவிடப் பொன்னாடே’’ என்று மகாலிங்கம் பாடி தியேட்டரையும் மக்களையும் அதிரவைத்தார். அடுத்து ‘‘செந்தமிழ் தேன்மொழியாள்’’. மகாலிங்கம் பாடிய இப்பாடலை ரசித்து பாடாத நாவே இல்லை.
‘‘மாலையிட்ட மங்கை’’ 1958–ம் ஆண்டில் வெளிவந்து, வெற்றி பெற்றது. மகாலிங்கத்தின் 2–வது சினிமா பயணம் தொடங்கியது.
1959–ம் ஆண்டு வெளிவந்த ‘‘அமுதவல்லி’’யில் ‘‘ஆடைகட்டி வந்த நிலவோ’’, ‘‘அபலை அஞ்சுகத்தில்’’, ‘‘வெண்ணிலா குடைபிடிக்க’’ மற்றும் மணிமேகலையில் ‘‘கண்களின் வெண்ணிலவோ’’ போன்ற மகாலிங்கம் பாடிய இனிய பாடல்கள் மக்கள் மனதில் நிரந்தரமான இடம் பிடித்தன.
1959–ம் ஆண்டில் நியூ ஏஞ்சல் புரடெக்ஷன்ஸ் மகாலிங்கம், ராகினியைக் கொண்டு ‘‘பண்ணையார் மகன்’’ என்ற படம் எடுத்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இப்படத்தில் மகாலிங்கம் ‘‘கலைவாணி கல்யாணி’’ என்ற பாடலை மிக இனிமையாகப் பாடியிருந்தார். ஆனால் படமோ வெளிவந்ததாகத் தகவலில்லை.
1960–ம் ஆண்டில் கண்ணதாசன் மறுபடியும் மகாலிங்கத்தைக் கொண்டு ‘‘கவலை இல்லாத மனிதன்’’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். படம் தோல்வியைத் தழுவியது. அதிலும் மகாலிங்கத்தின் ‘‘நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா’’ என்ற பாடல் ஆக்ரோஷமாக ஒலித்தது.
1961–ம் ஆண்டில் மகாலிங்கத்துக்கு இரண்டு படங்கள் பழனியப்பா புரடெக்ஷன்ஸ் ‘என்னைப் பார்’ மற்றும் சிவாஜி முருகனாக நடித்த ‘‘ஸ்ரீவள்ளி’’. என்னைப் பார் படத்தில் மகாலிங்கம் பாடிய ‘‘காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்’’ என்ற பாடல் ரசிகர்களை ‘‘என்னைப் பார்’’ என்று அழைத்தது. ஸ்ரீவள்ளியிலோ மகாலிங்கத்துக்கு கொடுக்கப்பட்டது நாரதர் வேடம். இந்த வேடத்தில் முருகனின் பெருமையை ‘‘கற்பகச் சோலையிலே’’ மற்றும் ‘‘பழமே ஞானபழமே’’ என்ற இரண்டு பாடல்களை கம்பீரமாக பாடியிருந்தார்.
1965–ம் ஆண்டில் வெளிவந்த ‘‘திருவிளையாடல்’’ படத்தில் பாணபத்திரர் என்ற பாத்திரத்தில் தோன்றி ‘‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’’ என்று சிவனை துதித்துப் பாடி தன் இசைத் திறனை, குரல் வளத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டினார்.
பிறகு மகாலிங்கம் திரையுலகில் மூன்றாவது சுற்று வலம்வந்தார். 1972–ம் ஆண்டில் ‘‘அகத்தியர்’’, அதிலும் நாரதர் வேடமே. மகாலிங்கத்தை மீண்டும் கதாநாயகனாக உயர்த்திய படம் 1972–ம் ஆண்டில் வெளிவந்த ‘‘திருநீலகண்டர்’’. இதில் மகாலிங்கம் திருநீலகண்டராக பாடி நடித்தும் பயனில்லை. 1939–ம் ஆண்டில் எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘‘திருநீலகண்டராக’’ அற்புதமாக பாடி நடித்த காட்சி, மக்கள் நெஞ்சை விட்டு அகலாதிருந்ததே அடிப்படை காரணம். இரண்டையும் ரசிகர்கள் ஒப்பு நோக்கிப் பார்த்து மகாலிங்கத்தின் ‘‘திருநீலகண்டரை’’ கைவிட்டனர்.
இதன்பின் 1973–ம் ஆண்டில் சாந்தி கம்பைன்ஸ் தயாரிப்பான ‘‘திருமலை தெய்வம்’’ படத்தில் நடித்தார். இதில் மகாலிங்கம் பாடிய ஒரே பாட்டு ‘‘திருவருள் தரும் தெய்வம் திருமலைத் தெய்வம்’’ என்பதே.
மகாலிங்கம் கடைசியாக நடித்தபடம் 1973–ம் ஆண்டே வெளிவந்த மற்றொரு திரைப்படமான ‘‘ராஜராஜசோழன்’’. இதில் ‘‘தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே’’ என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.வரலட்சுமி ஆகியோருடன் இணைந்தும் ‘‘தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்’’ பாட்டை சிவாஜியுடன் இணைந்து பாடினார். குரல் உச்சஸ்தாயில் ஒலித்தது.
1938–ம் ஆண்டில் நந்தகுமாரில் தொடங்கிய மகாலிங்கத்தின் திரையுலக வாழ்க்கை 1973–ம் ஆண்டில் வெளிவந்த ‘‘ராஜராஜசோழன்’’ வரை 35 ஆண்டுகள் நீடித்தது. சுமார் 40 படங்களுக்கு மேல் மகாலிங்கம் நடித்துள்ளார்.
எந்த நிலையிலும் யாருக்காகவும் மகாலிங்கம் பின்னணி பாடாமல் இறைவன் அவருக்கு அருளிய இசையின் தனித்துவத்தை இறுதிவரையில் கட்டிக்காத்தவர்.
சொந்தப் படங்கள் எடுத்ததால் சோதனையில் சிக்கிய மகாலிங்கம் 21–4–1978 அன்று தனது 55–வது வயதில் காலமானார்.

No comments:

Post a Comment