Saturday 30 May 2020

SARANYA TV NEWS READER / TV ACTRESS IN SERIAL BORN 1987 OCTOBER 22



SARANYA TV NEWS READER / TV ACTRESS IN SERIAL BORN 1987 OCTOBER 22


``சினிமா மூலமா கிடைக்கிற புகழையும் பணத்தையும் நினைச்சா பயமா இருக்கு!''- சீரியல் சரண்யா
.

செய்தி வாசிப்பாளர் டு நடிகை பயணத்தின் சுவாரஸ்ய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் சரண்யா.

``லாக் டெளன்லாம் பயங்கரமா போயிட்டிருக்கு. தினமும் ஜாலியா வீட்டுக்குள்ள சாப்ட்டு, தூங்கிட்டு மற்ற வேலைகளை பார்த்துட்டு நேரம் போறதே தெரியலை. இனிமே வேலைக்குப் போலாமா இல்ல இப்படியே வீட்டுலயே இருந்துடலாமான்னு யோசிக்கிறேன். இந்த ஐ.டி மற்ற துறைகளுக்கெல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்துருக்கற மாதிரி வருங்காலத்துல மீடியாவுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும்ல” எனக் கலகலவென சிரித்தபடி ஆரம்பிக்கிறார் சரண்யா.

.
செய்திவாசிப்பாளர் டு நடிகை பயணத்தின் சுவாரஸ்ய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.


உங்க தமிழ் உச்சரிப்புக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்களே?

.
``தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய பேர் என்கிட்ட 'தமிழ் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமா உச்சரிக்கிறீங்க. அதனால உங்களை ரொம்பப் பிடிக்கும்’னு சொல்வாங்க. தாய்மொழி நமக்கு நல்லா தெரியுங்கிறதுல பெருமைப்பட என்ன இருக்கு? தாய்மொழிகூட தெரியலை அப்படின்னாதான் வெட்கப்படணும். தமிழோட சேர்த்து எனக்கு ஒரு நாலு மொழிகள் தெரியும். ஆனாலும், என்னைப் பொறுத்தவரை பேசுறதுக்கும் கேட்கறதுக்கும் இனிமையான அழகான மொழின்னா அது தமிழ்தான். சின்ன வயசுலேருந்து அதிகமா புத்தகங்கள் படிக்கிறதால உச்சரிப்பு நல்லா வருதுன்னு நினைக்கிறேன்.”



ஜல்லிக்கட்டு மாதிரியான முக்கிய பிரச்னைகள் அப்ப அது தொடர்பான நிறைய செய்திகளைத் தொகுத்தீங்க. இப்போ, உலகத்தையே உலுக்கிட்டு இருக்க கொரோனா சமயத்துல செய்தி ஊடகத்துல இல்லையேங்கிற வருத்தம் இருக்கா?

.
``நியூஸ் ஆங்கரிங்ல இருந்து நியூஸ் ரிப்போர்ட்டரா என்னை புரோமோட் பண்ணாங்க. ஒலிம்பிக் நியூஸ் கவர் பண்ணினது, ஜல்லிக்கட்டு சமயத்துல அலங்காநல்லூர்ல லைவ் பண்ணினதுன்னு விடாம வேலை செஞ்சுட்டே இருந்தேன். என்னுடைய கரியர்ல, ஜர்னலிஸ்ட்டா ரொம்ப பெருமைப்படக்கூடிய காலக்கட்டம் அது. இப்போல்லாம் நியூஸ் பார்க்கும்போது, 'ஆபீஸ் பரபரப்பா இருக்கும்ல... மிஸ் பண்றோமே'னு தோணும்.


க்வாரன்டீன்ல என்ன புதுசா கத்துக்கிட்டீங்க?

.
"புதுசா கத்துக்கிட்டேங்கிறதைவிட இவ்வளவு நாள் செய்யாம அப்புறம் அப்புறம்ன்னு தள்ளிப்போட்ட பல வேலைகளை செய்யறதுக்கான ஒரு நேரமா இது இருக்கு. அதுல முக்கியமான ஒண்ணு புத்தகங்கள் வாசிக்கிறது. நியூஸ் மீடியாவைவிட்டு நடிப்புக்கு வந்து கிட்டத்தட்ட மூணு வருஷங்கள் ஆகுது. இந்த சமயத்துல புத்தகங்கள் படிக்கறதையே விட்டுட்டேன். `டேய் உங்களை எல்லாம் மூணு பொங்கலுக்கு முன்னாடி பார்த்ததுடா’ அப்படினு எல்லாத்தையும் தூசு தட்டி படிச்சிட்டு இருக்கேன். இது மட்டுமல்லாம, ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். தோட்டப் பராமரிப்பு ரொம்பப் பிடிக்கும்.


எங்க வீட்டுல சித்தவைத்தியம், ஆயுர்வேதம் இந்த மாதிரியான இயற்கை சார்ந்த விஷயங்கள் மேல அதிக நம்பிக்கை இருக்கு. ஏற்கெனவே சந்தனமல்லி, மூங்கில், மருதாணி, நெல்லி, செம்பருத்தி, கருவேப்பிலை, வாழை, முருங்கை, கொய்யா, தூதுவளை இந்த மாதிரியான செடிகள் நிறைய இருக்கு. என்னதான் எனக்கு உடம்பு சரியில்லாம போனாலும், முதலுதவியா இயற்கை சார்ந்த பொருள்கள்தான் தருவாங்க. வயிற்றுவலி, தலைவலி, அலர்ஜின்னு எதுவா இருந்தாலும் மிளகு, நல்லெண்ணெய், அதிமதுரம் இந்த மாதிரியான பொருள்களை வெச்சே சரி பண்ணிக்கலாம்னு நினைப்பாங்க. இப்போ அம்மா, அப்பா, நானு, எங்க வீட்டு செல்லக்குட்டி மோமோ எல்லாரும் நைட் நேரத்துல மொட்டை மாடிக்கு போய்ருவோம். அப்பா, விசிலடிச்சு பாட்டு பாடுறதுல எக்ஸ்பர்ட். உண்மையைச் சொல்லணும்னா லைஃப் லாக்டெளன்ல ரொம்பவே அழகா இருக்கு.”

நீங்க ரெளடி பேபின்னு கேள்விப்பட்டோம். என்ன பஞ்சாயத்துலாம் பண்ணி மாட்டி இருக்கீங்க?
.

"கொஞ்சம் சேட்டைக்கார பொண்ணுதான். ஆனா, அதெல்லாம் ஸ்கூல், காலேஜ்லயே முடிஞ்சிருச்சு. எங்க காலேஜூம், எங்க டிப்பார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி-யும் பயங்கர ஸ்டிரிக்ட். பொண்ணுங்க ஏதாவது தப்பு பண்ணினா டிசி கொடுத்துடுவாங்க. அந்த மாதிரியான ஒரு சமயத்துல எங்க ஹெச்.ஓ.டி ஒரு நாள் லீவ் போட்டுருந்தாங்க. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து க்ளாஸ் கட் பண்ணிட்டு சினிமாவுக்குப் போனோம். ஆனா பாருங்க, எங்க நேரம் லீவ் போட்ட ஹெச்.ஓ.டி அன்னைக்கு காலேஜ் வந்துட்டாங்க. சினிமாவுக்கு நாங்க போன விஷயம் தெரிஞ்சு டிபார்ட்மென்டுக்கு வரச் சொல்லியிருந்தாங்க. எப்படியும் பிரச்னை ஆகும்னு தெரியும். அதனால அவங்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, ‘இல்ல மேடம் இந்த காலேஜ்லாம் எனக்கு செட் ஆகாது. எனக்கு டிசி கொடுத்துருங்க’ன்னு ரகளை பண்ண ஆரம்பிச்சுட்டேன். இதை
எதிர்ப்பார்க்காத அவங்க, என்னை சமாதானப்படுத்திப் பேசி பிரச்னையை முடிச்சாங்க. சேட்டை பொண்ணுனாலும் சரண்யா நல்ல பொண்ணும்தாங்க. நம்புங்க.”

பரபரப்பான நியூஸ் ஆங்கரா இருந்துட்டு அதை விட்டு நடிப்புக்கு வந்த கதையைச் சொல்லுங்க?

.
”ஜர்னலிசம் லைஃப் நல்லாதான் போயிட்டு இருந்தது. அதை விட்டுட்டு ஏன் நடிப்புக்கு வந்துட்டேன்னு நீங்க ஆதங்கப்படுறது புரியுது. ஆனா, அப்ப லைஃப் ரொம்ப பிஸியா போயிட்டு இருந்தது. 6 மணி நேரம்கூட லைவ் பண்ணியிருக்கேன். திடீர் திடீர்னு ஏதாவது ஊர்களுக்கு கிளம்பிப் போக வேண்டியிருக்கும். அப்ப திடீர்னு ’இந்த வயசுல பிடிச்ச வேலை ஏன் இவ்வளவு சீரியஸா இருக்கு? சரி பிரேக் எடுப்போம்’னு நினைச்சுதான் லீவ் எடுத்திருந்தேன். வேலையை விடலை.

அப்போதான் எனக்கு `நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல்ல நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்தது. எனக்கு அந்தச் சமயத்துல நடிப்பு பத்தி எந்த ஐடியாவும் இல்லை. சீரியல்ஸ்ஸூம் அதுக்கு முன்னாடி பார்த்ததில்லை. கதையும் வழக்கமான சீரியல் கதை மாதிரி இல்லாம, என்னுடைய கேரக்டர் அப்படியே இருந்தது. அதனால, சரி ட்ரை பண்ணுவோம்னு நடிச்சேன். நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. மக்கள்கிட்ட இருந்து கிடைச்ச அன்பு, அந்த அனுபவம் எல்லாமே வித்தியாசமா நல்லா இருந்தது.”

நியூஸ் ஆங்கரிங், சீரியல் அடுத்து சினிமாதானே?

.

"நானும் பிரியா பவானி சங்கரும் ஒரே சமயத்துல மீடியால வேலை பார்த்திருக்கோம். அவங்க அடுத்தடுத்து சீரியல், சினிமான்னு போயிட்டதால, நானும் அப்படித்தான் போவேன்னு நிறைய பேர் எதிர்ப்பார்க்குறாங்க. நிறைய நல்ல கதைகள் வந்தது. ஆனா, எனக்கு ஏனோ சினிமா செட் ஆகாதுன்னு தோணுது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கு, ஆர்வம் இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா சினிமா மூலமா கிடைக்கக்கூடிய புகழும் பணமும் என்னை பயமுறுத்துது. இன்னும் ஓப்பனா சொல்லணும்னா, அடுத்தடுத்த புராஜெக்ட்ல கமிட் ஆகுறது, கதை கேக்குறது, புதுப்புது டீம் கூட வொர்க் பண்றது, பட ரிசல்ட்டுக்காக வெயிட் பண்றது இது எல்லாம் எனக்கு செட் ஆகாது. அதனால, எனக்கு இதுவே போதும்.”

விகடன் பரிந்துரைக்கும் மற்ற 

No comments:

Post a Comment