Friday 22 May 2020

SURULI FALLS - A SHORT STORY



SURULI FALLS - A SHORT STORY



சுருளி அருவி ஆர்ப்பரித்தபடி நீரைக் கொட்டிக் கொண்டிருந்தது. பெரிய பாறைகளும் சிரிய கற்களுமாய் இருக்கும் ஓடையின் கரையில் அமர்ந்து நானும் எனது நண்பனும் ஓடும் நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஓடைக்கரையின் மறுபுறம் கையில் ஒரு பார்சலும் கையுமாய் அழுக்கு லுங்கியுடன் வந்த ஒருவன் கல்லின் மீது உட்கார்ந்தான். இடுப்பில் சொருகியிருந்த ஒரு குவார்ட்டர் பாட்டிலை எடுத்து கல்லின் மீது வைத்தவன்; இப்போது கொண்டு வந்த பார்சலை பிரித்தான் , அஞ்சாறு சமோசா... இருந்தது. அவன் அமர்ந்திருந்த கல்லைச் சுற்றிலும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. மேலே இருந்த நூறாண்டு கடந்த மரங்களில் இருந்த வெளவ்வால்களும் , பறவைகளும் சத்தமிட்டபடியே இருந்தன.
எங்களை வேடிக்கை பார்த்தபடி குவர்ட்டர் பாட்டிலின் தலையை திருகினான். பாட்டில் சரக்கின் கொஞ்சத்தை கொண்டு வந்த பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றினான். இப்போது டம்ளர் சரக்கில் தண்ணீரை சேர்க்க வேண்டும். ஓடைத் தண்ணீரோ ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது. டம்ளரை எடுத்து ஓடும் நீரில் அமிழ்த்தி மொள்ள முயற்சித்தான். "சரக்கு தண்ணி " அருவி தண்ணியோடு போய் விடுமோ என்ற பயம் அவனுக்கு.


வேடிக்கை பார்த்த எங்களை பார்த்தான். எங்கள் கையில் கடையில் வாங்கிய ஒரு பிளாஸ்டிக் தண்ணீ பாட்டில் கொஞ்சமாய் தண்ணீரோடிருந்தது. பாட்டிலை இரவல் தருமாறு கேட்டான். நாங்கள் தர மறுத்துவிட்டோம். இந்த இடைவெளியில் அவனுக்கு பின்னால் வந்த குரங்கு கூட்டத்தின் குரங்கொன்று ஒரு சமோசாவை லபக்கி விட்டு ஓடியது. டம்ளர் சரக்கு சிந்திவிடாமல் குரங்கு கூட்டத்தை விரட்டியடித்தான்.
சமோசாவையும் மீதமிருந்த சரக்கு பாட்டிலையும் பாதுகாப்பான தனது கஸ்ட்டடியில் வைத்தபடி இப்போது மீண்டும் ஓடும் நீரில் மிக்ஸிங் செய்ய துணிந்தான். இமைப் பொழுதில் டம்ளரை ஓடும் நீரில் மொண்டு தூக்கினான். கொஞ்சம் "தண்ணீ" தண்ணியோடு போய்விட்டது. எங்களை முறைத்தபடி கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டு டம்ளரை வாயில் கவிழ்த்தான். மீண்டும் நெருங்கிய குரங்குகளை துரத்திவிட்டு ஒரு சமோசாவை எடுத்து கடித்தான். நாங்கள் அமைதியாய் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்க....
ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் , ஏதோ யோசித்தவனாய் , இப்போது... மீண்டும் டம்ளரை எடுத்தான் ; டம்ளர் நிறைய ஓடை தண்ணியை மொண்டெடுத்தான். கொஞ்சம் தண்ணீரை கீழே கொட்டி விட்டு சரக்கு பாட்டிலில் இருந்த "தண்ணியை" கலந்தான்.

எங்களை நோக்கி ஒரு கேலி சிரிப்பை வீசி விட்டு ; டம்ளர் சரக்கை குடித்தவன்... சமோசவை இரண்டை எடுத்து குரங்குகளுக்கு வீசினான்.
வைகை சுரேஷ்.

No comments:

Post a Comment