Sunday 31 May 2020






பாடும் நிலா பாலு
ராது

பாலுவிற்கு சினிமா உலகில் நெருக்கடி எப்படி வந்தது தெரியுமா? தெலுங்கில் பிரபலமான நடிகர் கிருஷ்ணாவிற்கு பாலுவின் குரல் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதையும், ஒரு சமயம் பாலுவிற்குத் தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்தபோது, பாலுவை அழைத்து தனக்காக நிரந்தரமாக பாடும் வாய்ப்பை கிருஷ்ணா தந்தார் என்பதையும் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் கிருஷ்ணாவிற்கும், பாலுவிற்கும் இடையில் பிணக்கு ஏற்படக் காரணம் என்ன? கிருஷ்ணாவின் நண்பர் ஒருவர், அவரிடம் "பாலு பாடுவதால் தான் உங்கள் படங்கள் ஓடுவதாகக் கூறுகிறார்" என்ற தவறான தகவலைக் கூற அதைக் கேட்டு கோபத்துடன் கிருஷ்ணா, "இனி நான் நடிக்கும் படங்களில் பாலு பாட வேண்டாம்" என்று தயாரிப்பாளர்களிடம் கிருஷ்ணா கூற, செய்யாத ஒரு தவறுக்கு பாலு பலியானார்.

ஏறத்தாழ இரண்டு வருடங்கள் பொது விழாக்களிலும், சினிமா உலக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும்போது கிருஷ்ணாவும் பாலுவும் பழைய அபிமானத்துடன் பேசிக் கொண்டார்கள். இந்தப் பிரச்சனையில் கூட பாலு சந்தோஷப்படும் விஷயம் ஒன்று இருந்தது. தான் கிருஷ்ணாவிற்குப் பாடாவிட்டாலும், தான் பாடமுடியாமல் போன இடத்தில் புதிதாக ஒரு குரலுக்கு சான்ஸ் கிடைக்கிறதே என்பதே பாலுவிற்கு மகிழ்ச்சியான விஷயமாயிற்று. இதை நான் எழுதும்போது ஏதோ பாலுவைப் புகழ்வதாக வாசகர்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே பாலு அப்பாவி மனம் கொண்டவர் தான். தான் ரெகுலராகப் பாடும் படக் கம்பெனியிலிருந்து தனக்கு ஒரு படத்திற்கு அழைப்பு வராவிட்டாலும், அதைத் தவறாக நினைக்கும் பழக்கம் பாலுவிற்கு இல்லை. கவிதாலயாவின் ஆஸ்தான பாடகராக இருந்து வருபவர் பாலு. இயக்குனர் கே. பாலசந்தரின் சிந்துபைரவி படத்திற்குப் பாட பாலுவிற்கு அழைப்பு வரவில்லை. அப்பொழுது தமிழ் பட உலகத்தைச் சேர்ந்த சிலர் பாலுவிடம் வந்து 'உங்களை சிந்துபைரவி' யில் பாட கூப்பிடவில்லையே" என்று கேட்டார்கள். அதற்கு பாலு அமைதியாக 'நான் பாடக்கூடிய பாட்டு அந்த படத்தில் இல்லை என்பதுதான் காரணம்' என்று பதில் கூறி அனுப்பினார். அந்தப் படத்திற்கு இசைக்காக தேசியவிருது கிடைத்தபோது முதலில் பாராட்டுத் தெரிவித்தவர் எஸ்.பி.பி. தான்.

மீண்டும் கிருஷ்ணா விஷயத்திற்கு வருவோம். பாலு அவருக்குப் பாடாமல் இருந்த 3 ஆண்டு காலத்தில், பல இசையமைப்பாளர்கள், கிருஷ்ணாவிற்காக பாலுவைப் பாட அழைத்தனர். அவர்களிடம் பாலு "முதலில் கிருஷ்ணாவிடம் சம்மதம் கேட்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இசையமைப்பாளர் ஒருவர் 'கிருஷ்ணா' படத்திற்கு இசையமைக்க வந்தபோது, பாலு பாட வேண்டும் என்று வற்புறுத்தி கிருஷ்ணாவையும் பாலுவையும் சந்திக்க வைத்தார்.

கிருஷ்ணாவும் பாலுவும் சந்தித்தனர். மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள். பாலு மீது தவறில்லை என்று அறிந்த கிருஷ்ணா, பாலுவை ஏற்றுக் கொண்டார். பாலு, மறுபடியும் கிருஷ்ணாவிற்குப் பாடத் தொடங்கினார்.

எஸ்.பி.பி. க்கு இரண்டாவது தேசிய விருது 'ஏக் துஜே கேலியே' படத்தில் பாடியதற்காகக் கிடைத்தது. இந்த முறை ஜனாதிபதியிடம் பரிசு வாங்கும்போது, தன் பெற்றோரையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்று பாலு ஆசைப்பட்டார். அவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லிக்கு கிளம்பினார்.

தேசியவிருது பரிசளிப்பு விழாவிற்கு டெல்லிக்கு தன் பெற்றோரை அழைத்துச் சென்றிருந்த பாலு, தன் பெற்றோரை எல்லாவித செளகரியமும் அமையும் மாதிரி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு டெல்லியில் மிக உயர்ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு பெரிய 'சூட்' அறையை ஏற்பாடு செய்தார். விழாவிற்குப் போய்வர விமானத்தில் டிக்கட் ஏற்பாடு செய்தார். விமானப் பயணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போது, விரைவாகச் செல்ல விமானப் பயணம் அவசியம் எனக்கூறி சம்மதிக்க வைத்தார் பாலு. குறிப்பிட்ட நாளன்று பாலு தன் பெற்றோர், மனவை஢யுடன் டெல்லிக்குச் சென்றார். அந்த விமானப் பயணம் பாலுவின் பெற்றோருக்குப் புதுமையாக இருந்தது. டெல்லியில் தங்க, பாலு மிகப் பெரிய அறைகளை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் டெல்லியில் மாருதி காரில் ஹோட்டலுக்குச் செல்லும்போது இரவாகிவிட்டது. தன் தந்தை சாப்பிட வேண்டும் என்று விதவிதமாக உணவுப் பொருட்களை வரவழைத்தார் பாலு. ஆனால் அவர் தந்தை, பாலுவிடம் 'இங்கே ரஸம்' கூட்டு எல்லாம் கிடைக்காதான்னு?' என்று கேட்டு பாலுவைச் சிரிக்க வைத்தார்.

தனித்தனி அறைகளில் தூங்கச் சென்றார்கள். நடுநசியில் பாலுவின் அறைக்கதவு தட்டப்பட்டது. பதறிக்கொண்டு எழுந்து கதவைத் திறந்தார் பாலு. அங்கே அவருடைய தகப்பனார் நின்றிருந்தார். "பாலு! கொஞ்சம் என் அறைக்குள் வாயேன்" என்றுக் கூறி பாலுவை அழைத்துச் சென்று "பாலு இதில் எதைத் திறந்தால் தண்ணீர் வரும்" என்று குழந்தை போல கேட்டார். பாலுவும் அந்தக் குழாய்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தனது தந்தைக்கு விளக்கினார்.

தன் தந்தை மிகச் செளகரியமாக இருக்கவேண்டும், இது வரையிலும் அவர் அனுபவிக்காத சுகங்களைத் தரவேண்டும் என்ற ஆசையில்தான் அந்த ஆடம்பர ஹோட்டலை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நடுநிசியில் பாலுவின் தந்தை பாலுவிடம் "இந்த அறைக்கு என்ன வாடகை" என்று கேட்டார். "ஆறாயிரம் ரூபாய்" என்றார் பாலு.

"ஏம்பா ஆறாயிரம் ரூபாய் கொடுத்து என்னை எதுக்கு தங்க வைத்துள்ளாய்? படுத்துக்க ஒரு கட்டில், குளிக்க ஒரு பாத்ரூம், இதற்கா ஆறாயிரம் ரூபாய்? பாலு! காசு வரும் போது அதை கவனமாச் செலவழிக்கணும். விமானப் பயணத்தால் நேரம் மிச்சமாகும்னு சொன்னே. நான் ஒத்துகிட்டேன். ஆனால், எனக்காக இவ்வளவு பெரிய அறை தேவையா? என்று கேட்டுவிட்டு பாலுவின் தந்தை தரையில் படுத்தார்.

"ஏம்பா தரையிலே படுக்கிறீங்க?" என்றார் பாலு. "எனக்கு அந்த மெத்தை ஒத்துக்கல. தூக்கமே வரலை. எனக்கு இதுதான் செளகரியம்" எனச்சொல்லிக் கட்டிலில் படுக்காமல் தரையில் படுத்து தூங்கிவிட்டார்.

டெல்லியில் பரிசளிப்பு விழாவில் பாலு, தன் பெற்றோர், மனைவியுடன் கலந்து கொண்டார். பாலுவின் தந்தைக்கு தன் மகன் பரிசு வாங்குவதைப் பார்த்ததில் பரம திருப்தி. விழாவில் பரிசளிப்போடு, ரூபாய் பத்தாயிரத்திற்கான காசோலையும் பாலுவிற்கு வழங்கப்பட்டது. பாலு தன் பெற்றோருடன் ஹோட்டலுக்கு திரும்பிய பின்பு, உடனே கிளம்பி ஜனாதிபதி விருந்திற்குச் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டார்கள். பாலுவின் மனைவி அவசர அவசரமாக 'பேக்' செய்து கொண்டு கிளம்பினார்கள். விமானம் பாதி வழியில் வரும்போது பாலு தன் மனைவியிடம், பரிசளிப்புவிழாவில் கொடுக்கப்பட்ட செக்கைக் கேட்க, அப்பொழுதுதான் பாலுவின் மனைவிக்கு அந்த செக் மற்றும் சில பேப்பர்கள் அனைத்தையும் அங்கு விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. பணம் பெரிதில்லை என்றாலும், தேசிய விருதோடு கிடைத்த பணமாயிற்றே, திரும்ப செக் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயத்திலே பாக்கி பயணத்தைத் தொடர்ந்தார். சென்னை வந்து சேர்ந்ததும், உடனே டெல்லியில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்து, தன் செக்கைப் பற்றிய தகவலைத் தெரிவித்தார் பாலு.

நல்லவேளையாக ஹோட்டல் அறையிலிருந்த குப்பையில் பாலுவின் பத்தாயிரம் ரூபாய் டிராப்ட் கிடைத்தது. அதை, அவர்கள் பாலுவிற்கு தபாலில் அனுப்பினார்கள்.

பாலு பாட ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைக்கத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போடு ஆந்திர கிளப் மெல்லிசைப் பேட்டிக்கு "ராகமும் அதன் நாதமும்" என்று தொடங்கும் ஒரு பாடலுக்கு இசையமைத்துப் பரிசும் பெற்றார். அதே பாடலை, பாலு தன் இசைக்குழுவை ஆரம்பிக்கும் போது முதல் பாடலாக வைத்துக் கொண்டார். அந்தப் பாடல் தெலுங்கில் இருந்த போதிலும் தமிழ் நிகழ்ச்சிகளில் முதலில் அந்தப் பாடலைத்தான் பாடி வந்தார். இளையராஜாவும், கங்கை அமரன் அவர்களும் எஸ்.பி.பி. யின் குழுவிற்கு இசைக்கருவிகள் வாசிக்க வந்த பிறகு, அந்த தெலுங்குப் பாடலை கங்கை அமரன் தமிழில் எழுத, அது முதல் அது இறைவணக்கப் பாடலாக மாறியது.

எஸ்.பி.பி. யைத் தொடர்ந்து மலேசியா வாசுதேவன் போன்ற வேறு சில குழுக்கள்கூட இன்று வரை அந்த "ராகமும் அதன் நாதமும்" என்ற பாடலை முதல் பாடலாக வைத்துக் கொண்டிருப்பதில் எஸ்.பி.பி.க்கு ஏகப்பெருமை.

பாட வந்த சில வருடங்களுக்கு நடிகர் தியாகராஜனின் மாமனார், 'பிரசாந்தின் தாத்தா' தெலுங்கு தேசத்தைப் பற்றித் தயாரித்த 'தெலுமுங்கு' என்ற 35 எம்.எம் டாகுமெண்டரிக்கு பாலு இசையமைத்தார். இதுதான் பாலு இசையமைத்த முதல் 35 எம்.எம். படம். அதற்குப் பிறகு தாசரி நாராயணராவ் தயாரித்தபடத்தில் 'கன்னியாகுமரி' என்ற படத்தில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தார் பாலு.

தமிழில் பாலுவிற்கு கிடைத்த முதல் படம் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி கே.ஆர்.ஜி. தயாரித்த 'துடிக்கும் கரங்கள்' ஆகும். இதுவரை 55 படங்களுக்க இசையமைத்திருக்கிறார் பாலு.

'மயூரி' என்ற வெற்றிப் படம் வந்தது தெரிந்திருக்கும். அந்தப்படத்திற்கு இசையமைப்பு எஸ்.பி.பி. அவர்கள்தான். நாட்டியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த அந்தப் படத்தில் இசைக்கு நிறைய வாய்ப்பு இருந்தது. பாலுவும் மிகவும் சிரத்தையுடன் அந்தப் படத்திற்கு இசையமைத்தார். படமும் பெரும் வெற்றியடைந்தது. பாலுவுக்கு மாநில விருதைப் பெற்றுத் தந்தது. அதே படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டது. அப்பொழுது அதன் இசையமைப்பாளராக எஸ்.பி.பி. பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பாலு இசையமைக்கவில்லை. லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் இசையமைத்தார்கள்.

படம் முடிந்த பின், அதன் பின்னணி இசை சென்னையில்தான் சேர்க்கப்பட்டது. அதைச் செய்தது பாலுதான். 'மயூரி' தெலுங்கு படத்தில் ஒரு டைட்டில் பாட்டு உண்டு. அந்தப் பாட்டை இறுதியில் லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் எடுக்கவில்லை. தெலுங்கில் பாடிய ஜானகியை வைத்து, சென்னையில் தெலுங்கு பாட்டின் இசையையே வைத்து 'டிராக்' முறையில் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. ஹிந்தியில் படம் வெளியானது. வெற்றியும் பெற்றது.

சாதாரணமாக, இம்மாதிரி நடக்கும்போது 'டைட்டில் கார்டில்' பின்னணி இசைசேர்ப்பும், டைட்டில் பாட்டும், இசையமைப்பு எஸ்.பி.பி என்று போட்டிருக்க வேண்டும். அப்படி போடவில்லை. அதனால் பின்னால் ஒரு பிரச்சனை எழுந்தது.


பாடும் நிலா பாலு
ராது

SPBSPB அவர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார். எம்.ஜி.ஆரின் பெயர் இன்னும் கொடி கட்டிப் பறப்பதற்குக் காரணம், பலரின் வாழ்வில் இப்படிப்பட்ட சமயங்களில் அவர் பழக முடிந்ததும் ஒரு காரணமாகும்.

பாட்டுப் பாடுவது பாலுவின் ரத்தத்திலே ஊறியது. சிறுவயதில் ஸ்கூலில் ப்ரேயர் பாடும்போது, பாலு உடன்பாடுவது வழக்கம். தனியாக வகுப்புகளில் பாலுவைப் பாடச்சொல்லிக் கேட்பதும் உண்டு. இவ்வளவு கம்பீரமாக இருக்கும் பாலுவின் குரல், மிகவும் மென்மையாயிருந்த காலம் அது. பெண்ணின் சாயல் உள்ள குரலில் பாலுபாடுவது வழக்கம். அந்தக் காலத்தில் P. சுசிலா, S. ஜானகி பாடல்களை பாலு அப்படியே பாடி, எல்லாரையும் மகிழவைப்பார். அதுமட்டுமன்றி, படிப்பிலும் வெகுசுட்டி. தன் பாட்டை மற்றவர்கள் ரசிக்கிறார்கள். அதைப்போல, தான் தன் குரலைக் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம், பாலுவின் மனத்தில் நிறைய இருந்தது. இப்பொழுதுபோல டேப் ரிக்கார்டர்கள் அதிகப் பிரபலமாகாத காலம் அது. பெரிய டேப்ரிக்கார்டர்கள் மட்டுமே உண்டு. அதுவும் மிகவும் காஸ்ட்லியான டேப் ரிக்காடர்கள். சாதாரணமானவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு விலை உயர்ந்தவை.

பாலு படித்த பள்ளியில், ஒரு டேப்ரிக்கார்டர் வாங்கினார்கள். அந்தப் பள்ளியில் பிஸிக்ஸ் வாத்தியாராக இருந்த GRS என்பவர் பாலுவின் குரல் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். ஒரு நாள் பாலுவை அழைத்து, பாலுவைப்பாடச் சொல்லி அதை டேப் செய்யப் போவதாகச் சொன்னவுடன், பாலுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பள்ளிக்கூடம் முடிந்தவுடன் பாலு பயபக்தியோடு டேப் ரிக்கார்டர் முன்பு அமர்ந்து 'அன்னலக்ஷ்மி' என்ற தெலுங்குப் படத்தில் P. சுசிலா, பிரஹலாதன் கதாபாத்திரத்திற்குப் பாடிய பாடலைப் பாடினார். பாலு பாடியதைப் பதிவு செய்து மீண்டும் அவருக்குப் போட்டுக் காட்டினார் GRS. முதன் முதலாக தான் பாடிய பாடலைத் தன் குரலில் டேப்ரிக்கார்டரில் கேட்டபோது, பாலு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்றளவும் அந்தப் பாட்டு பாலுவின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு எவ்வளவோ முறை பாலு தான் பாடிய பாடலை, பல இடங்களில் கேட்டிருந்தபோதும் இன்றளவும் பாலுவின் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நேரம், டேப்ரிக்கார்டரில் தன் குரலைக் கேட்டதுதான் என்று நினைவு கூர்கிறார். டேப்பில் பாடிய பாடலால் பாலு ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டார். அந்தப் பாடலைப் போட்டுக் கேட்டுவிட்டு பள்ளிக்கு ஒரு பிரமுகர் விஜயத்தின்போது தனியாக 'மைக்' முன்னால் நின்று ப்ரேயர் பாடும் பொறுப்பை பாலுவிடம் ஒப்படைத்தார், பள்ளி ஆசிரியர். பள்ளியில் பாடப்படும் ப்ரேயர் மொத்தம் 25 ஸ்லோகங்கள் கொண்டது. அதில் நான்கு அல்லது ஆறு ஸ்லோகங்களை மாற்றி மாற்றிப் பாடுவது வழக்கம். ஒவ்வொரு செட் ஸ்லோகமும், ஒவ்வொரு ராகத்தில் அமைந்தவை. பாலுவிற்கு தன்னை பாடச் சொன்னதில் மிகவும் சந்தோஷம். இரண்டு நாட்கள் விடாமல் வீட்டில் பயிற்சி செய்துவிட்டுப் பள்ளிக்கு வந்தார்.

பள்ளியில் பிரமுகரை வரவேற்க ஏக ஏற்பாடுகள் மேடை ஏறிப் பாடப்போகும் பாலுவிற்கு தனி உபசாரம் பிரமுகரும் வந்தார். மேடையில் அவரும், பள்ளி ஹெட்மாஸ்டாரும் மேடைக்குச் சென்று அமர்ந்தனர். பாலுவுக்கு திடீரென்று ஒரு பயம் வந்தது. தன்னால் சரியாகப் பாட முடியுமோ என்ற அவநம்பிக்கை ஒரே ஒரு கணம்தான் இருந்தது மைக்கில் ப்ரேயர் பாடுபவர் S.P. பாலசுப்பிரமணியன் என்று கூறப்பட்டது, காதில் விழுந்தது இயந்திரத்தனமாக மேடை ஏறி மைக்முன்பு நின்றார் பாலு. தான் பாடப்போகும் பாடல்களில் வரும் கடவுள்கள் அனைவரையும் தன் கண் முன்பு கொண்டு நிறுத்திப் பாட ஆரம்பித்தார். ப்ரேயர் என்பதால் எல்லோரும் நின்றுக் கொண்டிருந்தார்கள் கண்களை மூடியவாறு பாடிக் கொண்டிருந்த பாலுவிற்கு, தன் நண்பர்களும், ஆசிரியர்களும், விழாவிற்கு வருகை தந்த பிரமுகர்களும் நின்று கொண்டிருந்தது தெரியவில்லை. ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ராகம் பேட்டுப் பாடிக் கொண்டேயிருந்தார் பாலு. எல்லாரும் நின்று கொண்டிருந்தார்கள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது, விடாமல் பாலுவும் பாடிக் கொண்டிருந்தார்.

அந்த இறைவணக்க நிகழ்ச்சியையே 35 நிமிடம் அற்புதமாகப் பாடி ஸ்தம்பிக்க வைத்து விட்டார் SPB. ஆம், உலக சாதனைப் புத்தங்களில் இடம் பெறும் அளவிற்கு 35 நிமிடங்கள் இறைவணக்கம் பாடிய ஒரே நபர் பாலுவாகத்தான் இருக்க முடியும். இறைவணக்கம் முடிந்ததும் ஒரு பெரிய கரகோஷம் தன் பாடலுக்குத்தான் கிடைத்தது என்று நினைத்து பெருமிதத்தோடு, தன்னிருக்கைக்குத் திரும்பிய பாலுவிற்கு எல்லாரிடமிருந்தும் திட்டுக் கிடைக்க ஆரம்பித்து விடவே அப்பொழுதுதான், தான் செய்த தவறு புரிந்தது. இன்று யாராவது பாலுவை ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு இறைவணக்கம் பாடச் சொன்னால் அவர் எடுத்துக் கொள்ளும் மொத்த நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவேயிருக்கும்.

இந்தக் கட்டுரை நூலுக்காக, பாலுவைச் சந்திக்கச் சென்று பேசும்போது, அவர்மனத்தில் தன்னுடைய இளம் பிராய நினைவுகள் அலைமோதின. பாலுவின் தந்தை ஒரு கதாகாலட்சேப விற்பன்னர் அவருடைய இசைஞானம் தான் பாலுவின் உடலில் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்தப் பாட்டைக் கேட்டாலும் உடனே பாடக் கூடிய ஓர் அரிய திறமை பாலுவிற்கு சிறுவயது முதல் இருந்து வருகிறது. பாலுவின் வீட்டில் ரேடியோ இல்லை. ரேடியோ வைத்துக் கொள்ளும் அளவிற்கு வசதியும் இல்லை. பக்கத்து வீட்டு ரேடியோ பெட்டிகள் ஒலிபரப்பிடும் பாடல்கள்தான் பாலுவின் வேட்கைக்கு வடிகாலாக இருந்தது. 1961 ஆம் ஆண்டு, பாலுவின் மூத்த சகோதரர் திருமணத்திற்குப் பிறகுதான் முதன்முதலில் ரேடியோ வாங்கியதாக பாலு நினைவு கூர்கிறார்.

சிறுவயதில் அவர் நினைவிற்குத் தெரிந்து பார்த்த முதல் படம் 'லைலாமஜ்னு'. ஆனால் சினிமா பார்ப்பதைப் பற்றி பாலு மறக்காமல் இருக்க இன்னொரு சம்பவம் உண்டு. நெல்லூரில் ஏ. நாகேஸ்வர ராவ் நடித்த 'ஸ்வர்ண சுந்தரி' என்ற படத்திற்கு, பாலு சிறுவனாக இருந்த போது வீட்டோ டு சென்றபோது அந்த படத்தில் ஏ. நாகேஸ்வரராவை வில்லன்கள் அடிக்கும், சீனைக் கண்டு மிரண்டு போய் அழுதிருக்கிறார். அதுமட்டுமன்றி, அந்தத் தியேட்டர் ஏ. நாகேஸ்வரராவை அடிப்பதற்காகவே கட்டப்பட்ட தியேட்டராக நினைத்து அதற்குப் பிறகு பல ஆண்டுகள் அந்தத் தியேட்டருக்கு போவதற்கே தயங்கியிருக்கிறார் பாலு. பாலு சிறுவனாக இருந்து பார்த்து மகிழ்ந்த ஏ. நாகேஸ்வரராவிற்கே பிற்காலத்தில் பல படங்களில் பாலு பாட நேர்ந்ததை, தன் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாகக் கருதுகிறார் பாலு. ஏ. நாகேஸ்வரராவிற்கு பல பிரபலமான பாடல்கள் பாடிய பின்னணியில் ஒரு சுவையான கதையிருக்கிறது. அதை பின்னர் பார்ப்போம்.

சின்ன வயசிலிருந்தே பாலுவிற்கு கூச்சசுபாவம் அதிகம் இருந்ததில்லை. எப்போதும், யார் பாடச் சொன்னாலும், தயங்காமல் பாடத் தொடங்குவது வழக்கம். இது சிறு வயது முதலே அவருக்கு நிறைய நண்பர்களைத் தேடித் தந்தது. அவர் பள்ளியில் நடக்கும் எல்லாப் பாடல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெறுவது என்பது சாதாரணமான ஒன்று. பள்ளி நாடகங்களையும் விட்டு வைக்கவில்லை பாலு.


பாடும் நிலா பாலு
ராது

SPBஒரு சமயம் திருப்பதியில் படிக்கும் போது, ஒரு பள்ளி நாடகத்தில் பெண் வேடம் ஏற்று நாயகியாக அற்புதமாக நடித்துப் பரிசும் வாங்கினார். அந்த நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதை வானொலியில் பதிவு செய்யலாம் என்று, நடித்த நண்பர்களுடனும் வாத்தியாருடனும் சென்னைக்கு வந்தார் பாலு. சென்னை மாநகர விஜயம் என்பது ஒரு பெரிய கனவாக இருந்த காலம் அது. நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஆல் இந்தியா ரேடியோவிற்கு வந்து சேர்ந்த நாடகக்குழு ஆல் இந்தியா ரேடியோவிற்குள் நுழைவது அதுதான் முதல் தடவை. குளிர்சாதனம் செய்யப்பட்ட அந்தக் கட்டடம் ஏதோ தேவலோகத்தில் நுழைந்த உணர்வையே பாலுவிற்குக் கொடுத்தது.

காலை முழுவதும் ஒத்திகை. ரேடியோவிற்கு சரியில்லாத வார்த்தைகள் மாற்றப்பட்டு ஒத்திகை மீண்டும் மீண்டும் நடந்தது. சோர்வுற்றுப்போன நடிகர்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ அலுவலக காண்டீனில் உணவு வழங்கப்பட்டது நாடகத்தைப் பதிவு செய்யும் அதிகாரி வரும் வரை ஜாலியாக இருந்தது. பிரச்சனை அதிகாரி ரூபத்தில் உள்ளே நுழைந்தது. அங்கே அந்த அதிகாரி வந்ததும் நாடகத்தை ஒரு முறை ஒத்திகை பார்த்தார்கள். நாடகம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவருக்கு நாடகத்தில் பிடிக்காத அம்சம் ஒன்று இருந்தது அதுதான் பாலு. பாலு, பள்ளியில் நடித்த அதே பெண் வேடத்தில்தான் நடித்தார். அங்குதான் பிரச்சனை உருவாயிற்று. ரேடியோ நிலைய விதிகள் பிரகாரம், ஆண் ஓர் பெண் வேடத்தைத் தாங்கி நடிக்க இயலாது. அந்த அதிகாரி நாடகத்தை பதிவு செய்ய வேண்டுமானால் பாலு நடிக்கக்கூடாது என்று கூற, நாடகம் போட வந்த குழவிற்கும், அந்த அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்தது. ஆல்இந்தியா ரேடியோவின் இயக்குநர் அங்கு வந்து சேர்ந்தார். ஆல் இந்தியா ரேடியோவில் நடித்த நாடகத்தைப் பற்றி S.P.B. கூறுகிறார்.

"ரேடியோ ஸ்டேஷன் இயக்குநர் கேட்பதற்காக எங்கள் நாடகத்தை ஒருமுறை நடித்துக் காட்டினோம். நாடகத்தை ரிக்கார்டிங்கில் அமர்ந்து கவனமாகக் கேட்டார். அவருக்கு என்னுடைய பெண் குரல் மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றியது. எனக்காக முதன்முதலாக ஆல்இந்தியா ரேடியோவின் விதிகள் மாற்றப்பட்டு அதில் நாடகம் ஒலிப்பதிவாயிற்று." இதை பாலு தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஆல் இந்தியா ரேடியோ நாடக வெற்றியும் ஒன்றே என்று கருதுகிறார்.

நெல்லூரில் வாழ்ந்து கொண்டிருந்தபோது A.I.R. லைட்மியூஸிக் போட்டியில் கலந்து கொள்ள, நண்பர்களின் வற்புறுத்தலால் பெயரைக் கொடுத்தார் பாலு. அவரைப் பாட விஜயவாடா வானொலி நிலையத்தினர் அழைத்தார்கள். அதுவரை மற்றவர்கள் பாடிய சினிமாப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பாலு புதிதாக தானே ஒரு பாடல் எழுதி அந்தப் பாடலுக்கு டியூன் போட்டு இசையமைத்து பாடிக் கொடுத்து விட்டு வந்தார். ஆல் இந்தியா வானொலி நிலையங்கள் நடத்திய அந்தப் போட்டியில் இரண்டாவதாக வந்தார். ஆல் இந்தியா ரேடியோ பரிசு வாங்க டெல்லிக்கு போகலாம் என்று ஆசைப்பட்ட போதுதான், இந்திய சீன யுத்தம் தொடங்கியது. நாடெங்கும், எமர்ஜென்ஸி கொண்டு வரப்பட்டது. அதனால், அந்தப் பரிசை ஆல் இந்தியா ரேடியோ இயக்குநரிடமிருந்து பாலு பெற்றார்.

டெல்லியை பார்க்க முடியாது போனதால் கொஞ்சம் வருத்தம். பிற்காலத்தில் பலமுறை டெல்லி சென்று பல தேசிய விருதுகளும் பெற்றிருக்கிறார் பாலு. ஒரு வேளை பிற்காலத்தில் டெல்லி சென்று தேசிய விருதுகளை வாங்கப் போகிறார் என்பதால்தான் அந்த முறை டெல்லிக்குப் போக முடியாமல் போயிற்றோ என்னவோ?

நகரி - சென்னைக்கும், திருப்பதிக்கும் இடையில் உள்ள ஒரு பெரிய கிராமம். பள்ளி நாட்களில் அங்குதான் வசித்து வந்தார். பாலுவின் குடும்பத்தினர் நகரியில் இருந்தபோது தான் பாலுவிற்கு ஒரு தங்கை பிறந்தார். ராதாபதி என்ற டீச்சர் ஒருவரிடம் பாலு டியூசன் படித்து வந்தார். பாலு 'ஃபோர்த்' பாரம் படிக்கும்போது அந்த டீச்சர் ராதாபதி, நகரியிலிருந்து, மாற்றலாகி காளஹஸ்திக்குச் சென்றுவிட்டார். பாலுவிற்கு அவருடைய பிரிவு மிகவும் வருத்தத்தைத் தந்தது. பாலுவின் தந்தை, பாலுவிற்காக தன் குடியிருப்பை நகரியிலிருந்து காளஹஸ்திக்கு மாற்றிக் கொண்டார். பாலுவின் டியூஷன் ராதாபதி வாத்தியாரிடமே தொடர்ந்தது. எஸ்.எஸ்.எல்.சி. வரை பாலு காளஹஸ்தியில் படித்தார். திருப்பதியிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள காளஹஸ்தி மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ஊர். ஒரு மலையில் அம்மன் கோயிலும் மற்றொரு மலையில் சுப்பிரமணிய கோயிலும், ஊர் நடுவே சிவன் கோயிலும் உண்டு. பாலு சிறுவயதிலே மிகவும் ஒல்லியாகவும், குள்ளமாகவும் இருந்தார். பள்ளிப் படிப்பில் முதலாவது வருவதாலும், தன்னுடைய சங்கீத திறமையாலும் பாலு அப்போதே மாணவர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர். எப்போது நேரம் கிடைத்தாலும் சரி, உடனே கூச்சமில்லாமல் பாடக் கூடிய வழக்கத்தைக் கொண்டவர் பாலு. பள்ளியில் நடக்கும் பாட்டு, பேச்சுப்போட்டிகள் பாலு இல்லாமல் நடக்காது.

பாலுவின் தந்தை ஒரு கதாகாலட்சேப கலைஞர் என்று கூறியிருந்தோம் அல்லவா? காளஹஸ்திக்கு சுற்றி உள்ள ஊர்களில் கதாகாலட்சேபம் செய்யும் போதெல்லாம் அவருக்கு பின்னணியாக கடம் வாசிப்பது பாலுவின் வழக்கம்.

இப்படியே நடக்கக்கூடிய காரியங்களைச் செய்து வந்த போதிலும், சிறுவயதினருக்கேயுரிய விஷமங்கள் பாலுவிடம் நிறைய இருந்தன. முக்கியமானது பிடிவாதக் குணம். பாலு படித்து வந்த பள்ளியின் மாணவர்கள் பம்பாய்க்கு பிக்னிக் போக இருந்தார்கள். பாலு தானும் கலந்து கொள்வதாக பெயரைக் கொடுத்து விட்டார். பம்பாய் சென்று வர அப்போது எவ்வளவு பணம் தெரியுமா? முப்பது ரூபாய். அப்போதிருந்த நிலைமையில் முப்பது ரூபாய் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. பாலுவின் தாயார் பாலுவைக் கடிந்து கொண்டார்கள். பாலு பம்பாய்க்கு போக பிடிவாதமாக இருந்தார். பாலு சாப்பிட மறுத்தார். பாலுவின் தந்தைகோ தன் மகனின் ஆசையை நிறைவேற்ற ஆசை.

சாதாரணமாக யாரிடமும் கடன் வாங்காத பாலுவின் தந்தை, பாலுவிற்காக கொஞ்சம் பணத்தைக் கடன் வாங்கி வந்தார். பாலுவும் நண்பர்களோடு ஜாலியாக பம்பாய்க்கு சென்று வந்தார். இன்னும் தான் முதன் முதலாகப் பார்த்த வட இந்திய நகரம் பம்பாய்தான். கிராமத்திலிருந்து பம்பாய் பட்டணத்துக்குச் சென்று மிகப் பெரிய கட்டடங்களைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருக்கிறார் பாலு. ரெக்கார்டிங்கின் போது பம்பாயில் ஓடிய ஓர் ஆங்கில சண்டைப் படம் பார்த்த நினைவு இருந்தது. அந்தப் படத்தில் சண்டைப் போட்டு விழும் நபர்களின் ரத்தம் ஏன் சிவப்பாக தெரியவில்லை என்று பாலுவிற்கு பெரியதாகக் கவலை. பாலு இரவெல்லாம் தூங்காமல் யோசித்துப் பார்த்தும் விடை தெரியவில்லை. கூட வந்த நண்பர்களிடம் கேட்க, அவர்களுக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பாலு தன் சந்தேகத்தை ராதாபதி டீச்சரிடம் கேட்க, அவர் கறுப்பு வெள்ளை படத்தில் எப்படி கலர் தெரியும் என்று பதில் கேள்வி கேட்டார். அப்போதுதான் தான் பார்த்த படம் கறுப்பு வெள்ளைப் படம் என்பதும், அதில் கலர் தெரியாது என்பதும் பாலுவிற்கு புரிந்தது. பாலு பம்பாய்க்குச் செல்லும் போது கைச்செலவுக்காக பத்து ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார் பாலுவின் தந்தை. தான் ஊருக்குச் செல்வதற்காக தன் தந்தை பட்ட கஷ்டங்கள் பாலுவின் மனத்தை உறுத்தின. அவர் கொடுத்தனுப்பியதில் தனக்கு எதுவும் வாங்கிக் கொள்ளாமல், தன் சகோதரிகளுக்கு இரண்டு கவுன் வாங்கிக் கொண்டு போனார் பாலு. பாலுவின் இந்தச் செய்கை அவருக்கு வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.

காளஹஸ்தியில் இருக்கும் போதுதான் கிரிக்கெட் மீது ஏக ஆர்வம் பிறந்தது பாலுவிற்கு. பாலுவின் வீட்டிற்கு அருகில் இருந்த மலையின் அடுத்த பக்கத்தில் பெரிய வற்றிய ஏரி ஒன்று இருந்தது. தினமும் கிரிக்கெட் விளையாட நண்பர்களுடன் மலையின் மீது ஏறி அந்தப் பக்கம் போய்விடுவார் பாலு. மலை ஏறி இறங்காமல் அந்த மைதானத்துக்குப் போக, சுற்றிக் கொண்டுதான் போக வேண்டும். ஆகையால் தான் இந்த 'ஷார்ட் கட்' . மலையில் தர்ப்பைச் செடி புதராக வளர்ந்து இருக்கும்.

மாலையில் கிரிக்கெட் விளையாடி விட்டு நண்பர்களுடன் மலையில் ஏறி வந்து கொண்டிருந்தபோது, யாரோ ஒரு கிராமத்துவாசி, மலையில் இருந்த சிக்கி முக்கிக் கற்களை வைத்துக்கொண்டு, பீடி பற்ற வைத்துக் கொண்டு போனதை பார்த்தார்கள். பாலுவின் கூட வந்த நண்பன் ஒருவன் பாலுவிடம், "உன்னால் கற்களை வைத்துக்கொண்டு நெருப்பு வரவழைக்க முடியுமா?" என்று கேட்க, பாலுவும் சவாலை ஏற்றார்.

தர்ப்பை புதரிலிருந்து தர்ப்பைகளைப் பிடுங்கி ஒரு கட்டாகக் கட்டி, கற்களைத் தட்டி நெருப்புப் பொறிகளை உண்டாக்கி தர்ப்பைகளைப் பற்ற வைத்தார். நன்கு காய்ந்த தர்ப்பை பற்றிக் கொண்டது. அதே நேரத்தில் காற்று சற்று பலமாக வீச, அந்த தர்ப்பைக் கட்டு பறந்து போய் தர்ப்பைப் புதரில் விழ, மெதுவாக புதரில் பற்றி, அது பெரிய தீயாக மாறி, ஊரின் அடிவாரத்தில் உள்ள குடிசைகளை நோக்கிப் பரவ ஆரம்பித்தது. பாலுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாலுவின் நண்பர்கள் எல்லாரும் பயந்து விட்டனர். பாலுவின் நண்பர்கள் இதற்கு எதிர்புறம் சென்று வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவரைத் தாண்டி கொண்டு ஃபயர் எஞ்சின்கள் நெருப்பை அணைக்க விரைந்தன.

பாலு வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டார். மலையில் பற்றிக் கொண்ட நெருப்பில் ஊரே அல்லல் பட்டுக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வேகமாக வந்த பாலுவின் தகப்பனார், தன் மகன் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிம்மதியானார்.

அவர் தம் மனைவியிடம் பாலுவின் நண்பர்கள்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் மலையிலிருந்து ஓடி வரும்போது அவர்களை பிடித்துக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று கூறியதைக் கேட்டு பாலுவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

பாலு மட்டும் நண்பர்கள் சென்ற வழியில் செல்லாது வேறு வழியில் திரும்பி வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார். நண்பர்களுக்கு எந்த ஆபத்தும் வராமலிருக்க ஆண்டவனை வேண்டிக் கொண்டார். பாலுவின் பிரார்த்தனை பலித்தது. மலையில் தோன்றிய நெருப்பு பெரிய ஆபத்தின்றி அணைக்கப்பட்டதால், பாலுவின் நண்பர்களை எச்சரித்து விடுவித்து விட்டார்கள்.

மறுநாள் கோயிலுக்குச் சென்று பாலு ஆண்டவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, இனி இதுமாதிரி குறும்புகள் செய்யமாட்டேன், என்று சபதம் செய்தார்.


.
http://www.lakshmansruthi.com/profilesmusic/spb05.asp
.

No comments:

Post a Comment