Saturday 27 June 2020

R.D.BURMAN ,MUSIC DIRECTOR BORN 1939 JUNE 27 - 1994 JANUARY 4




    R.D.BURMAN ,MUSIC DIRECTOR  
BORN 1939 JUNE 27 - 1994 JANUARY 4

ராஜேஷ் கன்னா - ஆர் டி பர்மன் - கிஷோர் குமார்... திரையிசையில் அது ஒரு பொற்காலம்!
Posted by: Murugesh.kv

ராஜேஷ் கன்னா - ஆர் டி பர்மன் - கிஷோர் குமார்... எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பத்தாண்டுகள் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த கூட்டணி இது.
ஆராதனாவில் ஆரம்பித்தது இந்தக் கூட்டணி. அந்தப் படத்துக்கு இசை எஸ்டி பர்மன். ஆர்டி பர்மனின் தந்தை. இணையற்ற இசை மேதை. 'நாளெல்லாம் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து கும்பிட வேண்டும்' என்று இளையராஜா போற்றி வணங்கும் அளவுக்கு மாபெரும் இசைமேதை!
அன்றைக்கு புகழின் உச்சியில் இருந்தவர் முகமத் ரஃபி. ஆனால் அவரை ஒரு பாடலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, மற்ற பாடல்களை கிஷோர் குமாருக்குக் கொடுத்தார், தந்தையின் இசைக்கு நடத்துநராகப் பணியாற்றிய ஆர்டி பர்மன்.
அவரது யோசனை பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது. அன்று தொடங்கியது இந்த மும்மூர்த்திகளின் ராஜ்ஜியம்!
33 படங்களில் இந்த மூவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சில்வர் ஜூப்ளி கூட அல்ல... கோல்டன் ஜூப்ளி படங்கள்.
கதி பதங்கில் வரும் 'ப்யார் தீவானா ஹோதா...', 'யே ஷாம் மஸ்தானி...' இன்றும் இளசுகளைக் கிறங்கடிக்கும் இனிமையானவை.
நமக் ஹரம் படத்தில் இடம்பெறும் 'நதியா கே தரியா' ராஜேஷ் கன்னா - கிஷோர் - ஆர்டியின் எவர்கிரீன் ஹிட். அந்தப் பாடலுக்கு குல்சாரின் வரிகளும், ஆர்டியின் துள்ளல் இசையும் கிஷோர் பாடும் விதமும் எப்போது கேட்டாலும் மனசை அள்ளிக் கொள்ளும்!
அந்த ரூப்பு தேரா மஸ்தானா பட பாடல்களை பாலிவுட் உள்ளவரை மறக்க முடியுமா...!
அமர் பிரேமில் இடம்பெற்றுள்ள சிங்காரி கோயி பட்கே..., அஜ்நபியில் கிறங்கடித்த பீகி பீகி ராத் மெய்ன்..., ஹம் தோனோ தோ ப்ரேமி.., ஏக் அஜ்நபி ஹஸீனா ஸே.., குத்ரத்தில் ஹமே தும்ஸே ப்யார் கித்னா... எத்தனையெத்தனை இனிமையான பாடல்கள்.
அப்னா தேஷில் இந்த மூவரும் துள்ளல் இசையில் புதிய சரித்திரமே படைத்திருப்பார்கள். தி ட்ரெயின் மற்றும் அப்னா தேஷில் ராஜேஷ் கன்னாவுக்காக குரல் கொடுத்திருப்பார் ஆர் பர்மன். அதில் துனியா மேய்ன் லோகோ... காலத்தை வென்ற பாடல்!
சினிமாவைத் தாண்டி, தனிப்பட்ட முறையிலும் இந்த மூன்று சிகரங்களும் ஒருவருக்கொருவர் அத்தனை அந்நியோன்னிய நட்பு பாராட்டினர்.
இசையில் கொடிகட்டிப் பறந்த ஆர்டி பர்மனை, எண்பதுகளின் பிற்பகுதியில் பல முக்கிய தயாரிப்பாளர்களும் கைவிட்ட நேரத்திலும், ராஜேஷ் கன்னா மட்டும் தொடர்ந்து அவருடன் பணியாற்றினார். தன் சொந்தத் தயாரிப்புகளுக்கு அவரையே இசையமைப்பாளராக்கினார்.
அதேபோல, ராஜேஷ் கன்னா முதல் முறையாக படம் தயாரித்தபோது, பாடகர்களில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கிஷோர் குமார், பணம் வாங்காமல் அனைத்துப் பாடல்களையும் பாடிக் கொடுத்தார். அந்தப் படத்துக்கு தனக்கும் பணம் வேண்டாம் என்று கூறிவிட்டார் ஆர்டி பர்மன்.
கிஷோர் குமார் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து உதவியவர் ராஜேஷ் கன்னா. கிஷோரின் மகன் அமித் குமார் தயாரிப்பில், கிஷோர் குமார் இயக்கி பாதியில் நின்ற ஒரு படத்தை தன் சொந்த செலவில் முடித்துக் கொடுத்தாராம்.
இந்த மூவரில் முதலில் மறைந்தவர் கிஷோர் குமார் (1987). அடுத்து ஆர் டி பர்மன் (1994). இப்போது (18 / 7 / 2012) ராஜேஷ் கன்னா.
இசையால் மனங்களை என்றும் ஆளும் மும்மூர்த்திகள்!




அதோ வானிலே.. பறந்து கொண்டே பட்டையைக் கிளப்பும் ட்யூன் போட்ட ஆர்.டி. பர்மன்

டெல்லி: ஞானிகளுக்கு எந்த இடமாக இருந்தாலும் கவலை இல்லை.. அவர்களது ஞானம் நூபர கங்கை போல பொங்கிப் பெருக்கெடுக்கும். ஆர்.டி. பர்மன் போன்ற இசை மேதைகளுக்கும் அப்படித்தான். இடம் குறித்துக் கவலை இல்லாமல் இசை மழை பொழிந்தபடி இருக்கும்.
ஆர்.டி.பர்மனின் இசை மழையில் நனையாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இசை மேதையின் இசை மூளையிலிருந்து கொப்பளித்துக் கொட்டிய இசை முத்துக்கள் ஏராளம் ஏராளம்.

அதிலும் தரையை விட வானில் பறந்தபடி அவர் போட்டு அட்டகாசமான மெட்டுக்களைப் பெரிய பட்டியலே போடலாம்.பாம்பே டூ டெல்லி ஒருமுறை பாம்பே டூ டெல்லி இடையே விமானத்தில் பறந்தபோதுதான் 1971ம் ஆண்டு வெளியான கத்தி பதங்க படத்திற்காக அவர் யே ஜோ மொஹபத் ஹை என்ற சூப்பர்ஹிட் பாடலுக்கான மெட்டைப் போட்டார். ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியான ஹிட் படம் அது.
டென்ஷனைக் குறைக்க போட்ட மெட்டு அந்த விமானத்தில் பர்மனுடன், ராஜேஷும் பயணித்தார். அப்போது தான் டென்ஷனாக இருப்பதாகவும், ஏதாவது ட்யூனை ஹம் செய்யுமாறும் அவர் பர்மனிடம் கேட்க அவர் ஹம் செய்த ட்யூன்தான் இது. இது பின்னர் படத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.சொக்கிப் போன பயணிகள் பாடல் கேட்டது என்னவோ கன்னாதான். ஆனால் பாடலைக் கேட்டு சுற்றியி்ருந்த பயணிகள் எல்லாரும் சொக்கிப் போய் விட்டார்களாம். அப்போதே தெரிந்து விட்டது இந்த மெட்டு செம ஹிட்டாகும் என்று.
பாட்டை சேருங்க விமான பயணம் முடிந்துதம் தரையிறங்கிய பின்னர் தயாரிப்பாளர்- இயக்குநர் சக்தி சமந்தாவை அழைத்து கத்தி பதங் படத்தில் இந்தப் பாட்டை சேர்க்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டாராம் கன்னா.கிஷோர் குமார் குரலில் இந்தப் பாடலை கிஷோர் குமார் பாடி பெரும் புகழ் பெற்றது. இதற்காக பிலிம்பேர் சிறந்த பாடகருக்கான விருதுக்கும் கிஷோர் பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும் மன்னா டே தனது ஏ பாய் ஸாரா தேக் கே சல் என்ற பாடலுக்காக விருதைத் தட்டிச் சென்று விட்டார். அது ராஜ் கபூரின் மேரா நாம் ஜோக்கரில் இடம் பெற்ற பாடலாகும்.


இந்தி(ய) இசையுலகின் இசைப் புயல் மெலடி கிங், பல்லாயிரக் கணக்கான இசை ரசிகர்களின் இதய தெய்வம் ஆர் டி பர்மன் பிறந்த நாள் இன்று.
ராகுல் தேவ் பர்மன். பெயர் சொல்லும் போதே அதிர்கிறது. பலப்பல பாடல்கள் மனதில் ஆக்கிரமிக்கின்றன. இதைச் சொல்லலாம், அதைச் சொல்லலாம் என்று வரிசை கட்டி நிற்கின்றன. Pancham போன பிறகு இனிய பாடல்களுக்கு பஞ்சம் இந்தித் திரையுலகினரால் செல்லமாக பன்ச்சம்தா என்று செல்லமாக அழைக்கப் படும் ஆர் டி பி தனது ஒன்பதாவது வயதில் Funtoosh படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து சாதனை செய்தார் என்பது ஆச்சர்யப் பட வைத்த செய்தி.

தனது கடைசிக் காலத்தில் உடல் நலம் ஒத்துழைக்க மறுத்ததால் தந்தை எஸ் டி பர்மன் ஒப்புக் கொண்ட பல படங்களுக்கு ஆர் டி பர்மன் முடித்துக் கொடுத்தார் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஆராதனா, கைட் போன்ற படங்களைச் சொல்லலாம். பூத் பங்களா என்ற படத்தில் மெஹம்மூத்துடன் இணைந்து நடித்திருக்கிறார். அதே மெஹ்மூத்துக்கு லாக்கொமே ஏக் படத்தில் கிஷோர் குரலில் 'சந்தா ஓ சந்தா' என்ற அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்.கிஷோர் குமார் குரல் ஆர் டி பர்மனுக்காகவே படைக்கப் பட்டது போலும் என்பது போல இருவரின் காம்பினேஷனில் பற்பல இணையற்ற பாடல்கள்.அஜ்நபி, ஆந்தி, கேல் கேல் மெய்ன், ஆப் கி கசம், அமர் பிரேம், ஜவானி திவானி, ஆ கலே லக் ஜா, வாரன்ட், எத்தனை படங்களில் எத்தனை பாடல்கள்...ஷோலே படத்தில் ஆர் டி பரமனே பாடிய 'மெஹ்பூபா...மெஹ்பூபா 'பாடலை முதலில் கிஷோரை பாடச் சொல்லி அவர் மறுத்த பின் இவரே பாடியதாகக் கேள்வி.
கேரவான் இன்னொரு அற்புதமான பாடல்களைக் கொண்ட படம்...டிஸ்கோ பைத்தியம் தொடங்கிய எண்பதுகளின் பிற்பகுதியில் ஆர் டி பி மறக்கப் பட்டதும், ஒதுக்கப் பட்டதும் சோகங்கள். அவர் ஒரு பெரிய ஹிட்டுடன் மீண்ட 1942 a love story அவர் கடைசிப் படமானதும் சோகம்.

பரிச்சை படத்தில் குல்சார் எழுதிய பாடல் கிஷோர் குரலில். கேல் கேல் மெய்ன் படத்தில் ஆஷா வுடன் ஆர் டி பர்மன் இணைந்து பாடிய பாடல். தமிழில் இது பின்னர் பிரதிஎடுக்கப் பட்டது! நிறையச் சொல்ல ஆசை... நேரம் கம்மி... இசைக்கு மொழி தேவை இல்லை. பாடல்களை முழுவதும் கேளுங்கள்...


ஆர் டி பர்மன் இசை இனி வருங்காலத்திலும் ஆச்சர்யத்தை நிகழ்த்தும் என்று பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.

பழம்பெரும் இசை அமைப்பாளரான ஆர்.டி. பர்மனின் 22வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு செலுத்திய அஞ்சலியின்போது இதனைக் கூறினார் லதா மங்கேஷ்கர்.


பாலிவுட்டில் கோலோச்சிய இசை மேதை எஸ்டி பர்மனின் மகன்தான் ஆர்டி பர்மன். லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லேவை திருமணம் செய்து கொண்ட பர்மன் தனது இசை பயணத்தில் சகோதரிகள் இருவருடனும் இணைந்து பல பாடல்களை ஒன்றாக பாடியுள்ளார்.

375-க்கும் அதிகமான படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய ஆர் டி பர்மன், கடந்த 1994ம் ஆண்டு ஜனவரி 4ந்தேதி மரணமடைந்தார். அவர் இசையமைத்து அவரது மரணத்துக்குப் பின் வெளியான 1942 எ லவ் ஸ்டோரி படத்தின் பாடல்கள் பெரும் வெற்றிப் பெற்றன.

அவர் மரணமடைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் பாலிவுட்டிலும் சரி, உலகளாவிய இசை ரசிகர்களாலும் சரி... ஆர் டி பர்மன் பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மங்கேஷ்கர் தனது ட்விட்டர் செய்தியில், இன்று ஆர்.டி. பர்மனின் (பஞ்சம்) 22வது நினைவு தினம். அவரது இசை மற்றும் நினைவுகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. வருங்காலத்திலும் அவரது இசை தொடர்ந்து அதிசயத்தை நிகழ்த்தும் என நான் நம்புகிறேன்.
அவருக்கு என உளப்பூர்வ அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன்," என தெரிவித்துள்ளார்.ஆர் டி பர்மன் இசையில் பல நூறு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.


.



.

No comments:

Post a Comment