Friday 19 June 2020

WEAPONS USED TO KILL INDIAN SOLDIERS BY CHINA




                    WEAPONS USED TO KILL 
                INDIAN SOLDIERS BY CHINA



இந்திய – சீன எல்லை மோதலில்  
         பயன்பட்டதாக கூறப்படும் 
ஆயுதங்களின் படம் வெளியானது

லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்திய - சீனப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களின் படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் இருப்பவை ஆணிகள் பொருத்தப்பட்ட வலுவான இரும்புக் கம்பிகள்.

ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.

இந்நிலையில் இந்த தாக்குதலில் சீனர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் படங்கள் என்று கூறி, இந்திய சீன எல்லையில் பணியாற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு படத்தை பிபிசிக்கு அனுப்பியிருந்தார். அந்தப் படம்தான் இங்கே பகிரப்படுகிறது.

இரும்புக் கம்பியில் ஆணி பொருத்திய ஆயுதங்களைக் காட்டும் இந்தப் படத்தை இந்தியாவைச் சேர்ந்த ராணுவ விவகார வல்லுநர் அஜய் சுக்லா டிவிட்டரில் முதல் முதலில் பகிர்ந்திருந்தார். இந்தப் படத்தில் இருக்கும் ஆயுதங்களை சம்பவ இடத்தில் இருந்து இந்திய சிப்பாய்கள் கைப்பற்றியதாகவும், இவற்றைக் கொண்டே ரோந்து சென்ற இந்தியப் படையினரை சீனப் படையினர் தாக்கியதாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இது காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவேண்டும். இது பொறுக்கினத்தனம், சிப்பாய்த்தனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1996ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, சர்ச்சைக்குரிய பகுதியில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காக இரு தரப்பிலும் ஆயுதம் ஏதும் எடுத்துச்செல்லக்கூடாது.

ஆனால், குறிப்பிட்ட சம்பவ நேரத்தில் ரோந்து சென்ற இந்தியப் படையினரிடம் ஆயுதம் இருந்ததாகவும், பழைய ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது நீண்டகால நடைமுறை என்பதால் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் எல்லையில் உள்ள படையினர் எப்போதும் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆணிகள் பொருத்திய இரும்புக் கம்பிகளைக் காட்டும் இந்தப் படம், இந்தியாவில், டிவிட்டரிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்படுகிறது. ஆனால், இந்திய ராணுவமோ, சீன ராணுவமோ இந்தப் படம் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.எட்டுவதற்கு கடினமான பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் கடும் பனிச் சூழலில் இந்தக் கைகலப்பு நடந்ததாகவும் இந்த மோதலில் பல சிப்பாய்கள் கல்வான் ஆற்றில் விழுந்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.1996-ம் ஆண்டு இந்தியா சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் பதற்றம் உண்டாவதை தடுக்க இரு தர்ப்பிலும் எந்த ஆயுதமும் பயன்படுத்தக்கூடாது என்பது விதி."நிராயுதபாணியான நமது சிப்பாய்களைக் கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு துணிச்சல்? நமது சிப்பாய்கள் ஏன் ஆயுதமில்லாமல் உயிர்த்தியாகம் செய்யும்படி அனுப்பப்பட்டார்கள்?" என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

இதற்கு ட்விட்டரிலேயே பதில் சொல்லியிருக்கிறார் ஜெய்சங்கர்."எல்லைப் பணியில் உள்ள எல்லாப் படையினரும் ஆயுதம் வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக சாவடியை விட்டு வெளியே செல்லும்போது அவர்களிடம் ஆயுதம் இருக்கும். ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கிலும் அவர்கள் அப்படியே செய்தார்கள். இது போன்ற மோதல்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது நீண்ட கால நடைமுறை என்கிறார் அவர்.திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
களத்தில் உள்ள இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர். இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய எல்லைக்குள்ளேயே உள்ளன. சீனாவும் அவ்வாறே செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் வியாழன் மாலை நடந்த செய்தியாளர் வெளியுறவுத் துறையின் வாராந்திர சந்திப்பில் அவர் தெரிவித்தார்.சீனா தன்னிச்சையாக செயல்படாமல் இருநாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், பிரதமர் கூறியதைப் போல இந்திய இறையாண்மையைக் காக்கவும் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எனினும், படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

No comments:

Post a Comment