Tuesday 30 June 2020

DHANUSKODI -GHOST TOWN OF SOUTH INDIA ,TOURIST SPOT






DHANUSKODI -GHOST TOWN OF 
  SOUTH INDIA ,TOURIST SPOT


டிசம்பர் 22, 1964... 
post office now

தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது.கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.
post office

புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது.ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது.இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.
CHURCH

தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை.டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார்.அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்.
INTERIOR CHURCH
ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர்.ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது.

ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும்.'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.
தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின,''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன.

நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள்.அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள்.இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.

அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும்.இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.
ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது .ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது. ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது.தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது.எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது.இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை.அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி..விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார்.
இந்திய அரசின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது.இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.

அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று.மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர்.இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்.பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார்.

தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது.விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது.

நிலமை இப்படி இருக்க தமிழகமோ புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது.டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.'அன்றைய இரவுப் பொழுது தனுஷ்கோடியில் இருக்க வேண்டும்' என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை.சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :

"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுட்டே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது. சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."
"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது. அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்.சாவித்திரி மனம் பதைத்தார் .மக்களுக்கு தேவையானதை வாங்கி தந்தார் .கொண்டு போன ஆயிரம் ரூபாயை ஒரு சல்லி காசு கூட மிச்சம் வைக்காமல் மக்களுக்கு செலவழித்தார் . மறுநாள் இவர்களுக்கு ஊர் திரும்ப பணமோ ,உணவோ இல்லை .பின்னர் எப்படியோ சென்னையில் இருந்து கார் மூலம் வந்து சேர்ந்தார் .வள்ளல் தன்மையில் என் எஸ் கிருஷ்ணனின் பெண் பால் தான் சாவித்திரி  


அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம்.அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது.தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது.மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது.இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன."ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர்.சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம்.சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள்.மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், 'மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை!





கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது.

அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர்.

அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே எடுத்துச் சொல்கின்றன.

வரலாற்றுக் காலத்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் நள்ளிரவு 12.30.க்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆயிரக்கணக்கானோர் உயிரை பறித்தது. மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அழித்தது.சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயிலில் ஆடல்பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் சிக்கி உருத்தெரியாமல் அழிந்தனர். கடலோரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடிசைகளும் அழிந்து போயின.

கோயில்களிலும், கட்டடங்களிலும், ரயில்நிலையத்திலும், எஞ்சியவர்கள் நாட்டுப் படகில் மண்டபம் முகாமுக்கு தப்பிச் சென்றனர். தற்போது இடிந்து போன, சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலின் எச்சங்களாய் தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டி வருகின்றன.1964 க்கு பிறகு இது ஆளரவமற்ற தீவாக காட்சியளித்தது. மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக இதனை அறிவித்தது அரசு. இருபது வருடங்களுக்குப் பிறகு அகதிகள் வருகை, பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு என பதற்றமான பிரதேசமாக தனுஷ்கோடி மாறியது.

புயலின் அச்சுறுத்தல் இருப்பினும் பல நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போதும் தனுஷ்கோடியில்தான் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிதைந்த கட்டடங்களையும், அடிப்படை வசதியின்றி அல்லல்படும் அப்பாவி மீனவர்களின் வாழ்க்கைத் துயரத்தையும் மனதில் சுமந்து கொண்டுதான் செல்கின்றனர்.தனுஷ்கோடிக்கு ரூ.55 கோடி செலவில் புதிதாக முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை மத்திய அரசு சாலை போட்டு அது, 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் 27 ந் தேதி இராமேஸ்வரம் வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதில் இருந்து அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அரிச்சல் முனை வரை செல்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் தற்போது புயலின் சிதைவுகளை பார்த்துச் செல்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க மத்திய அரசு தற்போது ஆசிய வங்கி உதவியுடன் ரூ 24,000 கோடியில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவெடித்துள்ளது. இந்த பணி தொடங்குமானால் மீண்டும் 1964-க்கு முன் போல் தனுஷ்கோடிக்கு குடியிருப்புகள் அரசு அலுவலகங்கள் ஆகியவை வரும்.

தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது போதிய வசதி இல்லை. குடும்பத்துடன் வரும் பயணிகள் கடலில் விளையாடும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்ற போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. கழிவறை வசதிகள்கூட இங்கு இல்லை.

சிதிலமடைந்த கட்டடங்களை நினைவுச் சின்னங்களாக, உள்ளது உள்ளபடி பராமரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுகின்றன.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நாகராஜ் "நான் சிறு வயதில் இருந்து தனுஷ்கோடி பகுதியை பார்த்து வருகிறேன். 1964 புயலில் சேதமடைந்த பல கட்டடங்கள், ஒவ்வோர் ஆண்டும் மேலும் மேலும் சிதிலமடைந்து வருகின்றன.

குறிப்பாக கடந்த ஆண்டு புயலால் பாதிப்படைந்த தேவலாயம் இந்த ஆண்டு மேலும் சேதமடைந்துள்ளது. இதனை அரசு கண்டு கொள்ளவே இல்லை இந்த நிலை தொடருமானால் வரும் எதிர்கால சந்ததியினருக்கு தனுஷ்கோடி குறித்த வரலாறு தெரியாமலே போய்விடும் என்று தெரிவித்தார்.1964 ஆம் ஆண்டு புயலை நேரில் பார்த்த செல்லதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில் "19964 டிசம்பர் மாதம் 23ல் வங்கடலில் புயல் வீசியது. பகல் நேரத்தில் சூறைகாற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது. அப்போது  ஜெமினி கணேசனும் சாவித்திரியும் யும் தனுஷ்கோடி வந்திருந்தனர். அவர்களிடம் நாங்கள் "கடல் சீற்றமாக உள்ளது. உடனே இராமேஸ்வரம் திரும்பி செல்லுங்கள்" என்று கூறியதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். இல்லையெனில் அந்தப் புயலில் இருவரும் சிக்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
"அப்போது எனக்கு ஆறு வயது. புயல் வரும் என்றார்கள். ஆனால் இவ்வளவு பெரிய புயல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. 24ம் தேதி அதிகாலை 3 மணியளவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பேய்க் காற்று அடித்ததில் எங்களது குடிசைகள் அனைத்தும் சேதமடைந்து கடல் நீர் வீடுகளில் புகுந்தது. பின்னர் அதே வேகத்தில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூறாவளி வீசியதில், எங்கள் கண் முன்னே தனுஷ்கோடி முற்றிலும் அழிந்துபோனது" என தனது அனுபத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் மஹாலிங்கம்.

தனுஷ்கோடி புயலில் இருந்து தப்பிய அம்பிகாபதி பிபிசி தமிழிடம் பேசுகையில் "சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயிலில் ஆடல்பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்ளிட்டப் பயணிகள் அனைவரும் புயலில் சிக்கி உருத்தெரியாமல் அழிந்தனர். ரயில் புயலில் சிக்கியது மக்களுக்குத் தெரியவில்லை. இரண்டு தினங்களுக்கு பின் ரயிலில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் கடற்கரையோரம் ஒதுங்கிய பிறகே இது பற்றித் தெரியவந்தது" என்றார்.



.“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு!” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi

“அன்னைக்கு சாயந்திரத்திலிருந்தே காத்து வழக்கத்து மாறா வீசிட்டிருந்துச்சு. ராத்திரி ஏழோ, எட்டோ இருக்கும். திடீர்னு காத்து வேகம் இன்னும் அதிகமாச்சு. இங்கே காத்து அடிக்கிறது சகஜமா இருந்தாலும், ஏன் இம்புட்டு வேகமா அடிக்குன்னு யோசிச்சு சனங்கள் சுதாரிக்குறதுக்குள்ளே தடதடன்னு கடல் தண்ணி குடிசைகள்ல ஏற ஆரம்பிச்சது. சிமிலு வௌக்கை தூக்கிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக செதறி ஓடினோம். ரெண்டு பக்கமும் கடலு. ராத்திரி நேரம். எங்கிட்டு ஓடுறதுனு யாருக்குமே தெரியலப்பு. ஊருக்குள்ளே இருந்த பெருசுங்க, 'எளவட்டங்க எப்படியாச்சும் தப்பிச்சு ஓடிப்புடுங்கடே'னு கத்துனாங்க. அதுக்குள்ள எம்புட்டோ நடந்து முடிஞ்சிருச்சு. பொறந்து ஆத்தா மடியில் கெடந்ததைவிட கடல் மடியில் தவழ்ந்ததுதான் அதிகம். ஆனா, எங்க சனத்துவ மேல என்ன கோபமோ தெரியல, கடலம்மாவே எங்க வாழ்க்கைய, ஒட்டுமொத்த ஊர அழிச்சிப்புட்டா” என்கிற பூமயிலு பாட்டியின் கண்களில் தெரியும் மிரட்சி, தனுஷ்கோடி என்ற மாபெரும் வணிக நகரத்தை கடல்கொண்டுபோன வரலாற்றை உயிர்ப்போடு எடுத்துக்காட்டுகிறது. 

ராமேஸ்வரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனுஷ்கோடி, 1964 டிசம்பர் 23-ம் தேதி, கோரப்புயலில் சிக்கி, சின்னாபின்னமானது. அதன் மிச்சங்களாக நின்றுகொண்டிருக்கும் சில நினைவுச் சின்னங்களோடு உயிர்ப்போடு நிற்கிறார் பூமயிலு. 

“இருவத்தி ரெண்டாந்தேதி திங்கள் கெழமைய்யா. எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு. அப்போதான் ஜெமினி கணேசனும் சாவித்ரியும் இங்கே வந்திருந்தாங்க. நான் வயசுக்கு வந்து, பாவாடை சட்டையோடு சுத்திட்டிருந்தேன். சினிமா நடிகருங்க வந்திருக்கிறதை கேள்விப்பட்டு, மத்தியானம்போல அக்கம் பக்கத்துல உள்ளவங்களோடு சேர்ந்து பார்த்துட்டு வந்தேன். ஊரு முழுக்க சூறக் காத்து இருந்தப்பவும் சனங்க சாவித்ரி பத்தி பேசிட்டு இருந்துச்சுங்க. ‘பட்டணத்திலிருந்து வந்திருக்காங்க. காத்து அசுரத்தனமா வீசுது. எப்படி    பத்திரமா போய் சேரப்போறாங்களோ'னு கவலைப்பட்டாங்க. அந்த நேரத்துல சிலோன்ல மாட்டிக்கிட்ட என் அண்ணனையும் அப்பாவையும் நெனச்சு நான் வருத்தத்துல கெடந்தேன்.

ராவு இருட்ட இருட்ட கடல் தண்ணி மேல ஏற ஆரம்பிச்சது. கூரையெல்லாம் பிச்சுட்டுப் போகுது. என் அம்மாவுக்கு ரொம்ப பயம். ஊரு சனங்க மேடான எடத்தைப் பார்த்து ஓடினாங்க. ஆனா, என் அம்மா அவங்க பின்னாடி போகலை. உடுத்தியிருந்த பாவாடை சட்டையோடு தம்பியையும் தங்கச்சிகளையும் கையில் புடிச்சுட்டு தண்ணிக்குள்ளே நடந்துபோக ஆரம்பிச்சோம். கரையில நிக்கும்போது காத்து தள்ளிக்கிட்டே இருந்துச்சு. தண்ணிக்குள்ளே எந்தத் திசையில போறோம்னு வௌங்கலை. வலது பக்கமும் எடது பக்கமும் கடலு. எங்க அம்மா ஏதோ ஒரு அனுமானத்துலதான் கூட்டிக்கிட்டு நடந்துச்சு. கொஞ்சம் பாதை மாறியிருந்தாலும் கடலுக்குள்ளே போயிருப்போம். சொந்தம் பந்தம் யாரு வந்துட்டிருக்கா, தோழிங்க யாரு தப்புனாங்கன்னு எதுவுமே தெரியலே. ராமேஸ்வரத்திலிருந்து அடிக்கடி நடந்தே தனுஷ்கோடிக்குப் போயிருக்கிறதால இடுப்பு அளவு தண்ணியில் தட்டுத் தடுமாறி ராமேஸ்வரம் போயிட்டோம். அங்க ரயில்வே ஸ்டேசன், சத்திரம் சாவடின்னு தங்கினோம். சாப்பாடு இல்லாம, உடுத்தத் துணி இல்லாம கோயில்ல வாங்கி சாப்பிட்டுக்கிட்டு திரிஞ்சதை நெனைச்சா இப்பவும் உசுரு ரணமா வலிக்குதுய்யா” என்கிறார் வேதனை நீங்காத குரலில்.

தனுஷ்கோடியில் புயல் வந்து ஊர் அழிந்த வரலாறு தெரியும். அந்தப்புயலில் தப்பி, அகதிபோல சுற்றித் திரிந்து, மீண்டும் தனுஷ்கோடிக்கே பிழைக்க வந்திருக்கும் பூமயிலு பாட்டி ஆச்சர்யத்தின் உச்சம். “புயலு நின்னதுக்கு அப்புறம் கொஞ்ச நாளு கழிச்சு, என் அம்மா எங்கள கூட்டிக்கிட்டு திரும்பவும் தனுஷ்கோடிக்கே போயிடுச்சு. தப்பிப் பொழைச்ச ஒருத்தர், ரெண்டு பேரும் எங்களோடு வந்தாங்க. அரசாங்க அதிகாரிங்க வந்து, 'இனிமே நீங்க இங்கே இருக்கக் கூடாது. உங்களுக்கு நடராசபுரத்துல எடம் ஒதுக்கி இருக்கோம்'னு சொன்னாங்க. எங்க பொழப்பே பொறந்து வளர்ந்த இந்த மண்ணுலதானே கெடக்கு. இங்கேயே மீன் புடிச்சுக்கிட்டு, சிப்பி பொறுக்கிட்டு, கௌரவமா வாழ்ந்துப்போம். இந்தக் கடலுல காத்து அதிகமா அடிச்சா, அந்தக் கடலுல மீனு புடிப்போம். எனக்கு இப்போ என்ன வயசு ஆகுதுனுகூட தெரியலே. எல்லாரும் 'கெழவி கெழவி'னு கூப்புடுதுங்க. ஆனாலும், நான் இன்னும் கொமரி மாதிரிதான் சுத்திட்டிருக்கேன். என் வீட்டாலுக்கு சொவமில்லே. நடக்க முடியாது. மூணு ஆம்பளப் பசங்களும், ரெண்டு பொம்பளைப் புள்ளங்களும் இருக்காங்க. ஆனாலும், இதுவரை யார்கிட்டேயும் ஒரு பைசாவுக்கு கை நீட்டினதில்லே. நானே சிப்பி பொறுக்கி அவரைக் காப்பாத்தறேன்.

வெயிலு, மழ, புயலு, சூறாவளி எது வந்தாலும் இந்த ஊரை விட்டுப் போகாம கெடக்குறோம். அரசாங்கம் கொடுக்கும் சலுகை முறையா கிடைக்குறது இல்லே. ஆனாலும், ஒரு வாய் கஞ்சி நிம்மதியா குடிக்க முடியுதுன்னா, அதுக்கு இந்த மண்ணும் எங்க கடலம்மாவும்தான்யா காரணம். வெளியிலிருந்து வர்றவங்களுக்கு வேணும்ன்னா இது மனுசங்க வாழத் தகுதி இல்லாத ஊரா இருக்கலாம். எனக்கும் எங்க சனத்துக்கும் இதுதாம்யா ஒலகம்”.



.

No comments:

Post a Comment