Thursday 22 October 2020

TIRUNELVELI RIOTS FIRST REVOLT AGAINST BRITISH INDIA 1908 MARCH 13

 

TIRUNELVELI RIOTS FIRST REVOLT  

 AGAINST BRITISH INDIA 1908 MARCH 13 


இந்திய சுதந்திரப் போரில் 

'திருநெல்வேலி எழுச்சி' போராட்டத்தின் பங்கு!



வீரபாண்டிய கட்டபொம்மன், புலித்தேவர், வ.உ.சி, பாரதியார், வாஞ்சிநாதன் போன்ற வீர மறவர்களின் பெயர்களை உச்சரிக்கும்போதே

இந்திய சுதந்திர போராட்டத்தில் நெல்லை சீமையின் பங்கு மகத்தானது என்பதை நாம் உணரலாம். கட்டபொம்மன், வாஞ்சிதேவன், வ.உ.சி போன்ற தனிநபர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவரவர் பாணியில் விடுதலைப் போராட்டங்களை நடத்திவந்த காலத்திலேயே, ஒட்டுமொத்த நெல்லை சீமையின் மக்களும் பிரிட்டிஷ்கார்களுக்கு எதிராக களமிறங்கிய தரமான சம்பவம் 1908 இல் நிகழ்ந்தது. 'திருநெல்வேலி எழுச்சி' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சம்பவம் குறித்து நினைவு கூர்கிறது இந்த கட்டுரை.


இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான விபின் சந்திரபாலை ஆங்கிலேயர்கள் பல மாதங்கள் சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்து அவர் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இந்த நாளை சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர்.



நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா நடந்தது. தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவை கொண்டாடிவிட்டு திருநெல்வேலிக்கு வந்த பத்மநாப அய்யங்கார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் 1908 மார்ச் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக நெல்லை பகுதியில் கலவரம் மூண்டது.மறுநாள் (மார்ச் 13 ஆம் தேதி) காலை நெல்லை பாலம் என அழைக்கப்பட்ட வீரராகவபுரம் ரயில் நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்துக் கல்லூரிக்குள் நுழைந்தனர். மாணவர்களை தங்ளோடு சேர்த்துக் கொண்டு அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினர்.



நெல்லை நகராட்சி அலுவலக கட்டடச் சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அருகே இருந்த அஞ்சல் நிலையத்துக்கும் தீ வைக்கப்பட்டது. நகராட்சியின் மண்ணெண்ணெய்க் கிடங்கு சேதப்படுத்தப்பட்டது. முன்சீப் கோர்ட், காவல் நிலையம் தாக்கப்பட்டது.


நான்கு பேர் வீரமரணம்


உ.வ.சி. உள்ளிட்ட தலைவர்களின் கைதை கண்டித்து, பொதுமக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கோயில் பூசாரி, இளைஞர் உட்பட நான்கு பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியிலும் கலவரம் வெடித்தது. அடுத்த நாள் தச்சநல்லூரில் தெருவிளக்குகள், குப்பை வண்டிகள் போன்றவற்றை மக்கள் தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை காட்டினர். இதனால் செய்வதறியாமல் திகைத்த ஆங்கிலேய அரசாங்கம், கடுமையான அடக்குமுறையின் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.


பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நெல்லை சம்பவம்

விடுதலை உணர்வுடன் நெல்லைமக்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை சட்டசபையில் இந்த சம்பவம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.அதேசமயம், போராட்டத்தில் நகராட்சிக் கட்டிடம் சேதப்படுத்தப்பட்டதால், அதனை கண்டித்து அப்போதைய நெல்லை நகராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. கலவரத்தில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 37 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


நூற்றாண்டை கடந்து நினைவு கூறப்படும் நிகழ்வு

அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து நெல்லையில் நடத்திய 'திருநெல்வேலி எழுச்சி' போராட்டம் பிற்காலத்தில் தென்மாவட்டங்களில் நடைபெற்ற பல போராட்டங்களுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாது, வரலாற்று சிறப்புமிக்க இந்த எழுச்சி போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்வுகள் கடந்த 2008 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. நூறாண்டையும் தாண்டி, தற்போதும் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதி திருநெல்வேலி எழுச்சி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

.

No comments:

Post a Comment