Tuesday 27 October 2020

ANBU BAALAM -KALYANASUNDARAM -SIVAKUMAR

 

ANBU BAALAM -KALYANASUNDARAM -SIVAKUMAR



'அன்பு பாலம்' கல்யாணசுந்தரம்.....
-----------------------------------
தான் அணிந்திருக்கும் வேட்டி சட்டை தவிர
தன் சொந்தம் என்று எதுவுமே வைத்துக் கொள்ளாத மனிதர்.
தன் உடம்பைக்கூட மருத்துவக் கல்லூரி பரிசோதனைக்கு
எழுதி வைத்துவிட்ட அதிசயப் பிறவி "அன்பு பாலம்"
கல்யாணசுந்தரம் அவர்கள்.
திருநெல்வேலி- நாங்குநேரி- மேலக்கருவேலங்குளம் பிறந்த ஊர்.
பால்வண்ணநாதர் -தாயம்மாளுக்கு 13 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த
இரண்டாவது குழந்தை...
பள்ளிப்படிப்பு முடிந்து சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கிறார் .
1963 -ல் வட எல்லையில் சைனா போர் தொடுத்த நேரம்.
நேருஜி வேண்டுகோளை ஏற்று கழுத்தில் இருந்த
தங்கச் சங்கிலி 8.1/2 பவுனை முதல்வர் காமராஜரிடம் வழங்கிய
இந்தியாவின் முதல் மாணவ நன்கொடையாளர்..
ஊரில் தன் பங்குக்குக் கிடைத்த 50 லட்சம் பெறுமானமுள்ள
சொத்தில், வீட்டை குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு
தானம் செய்தார். நிலத்தை உழுதவர்களுக்கே கொடுத்து விட்டார்.
திருப்பனந்தாள் கல்லூரியில் நூலகராக வேலையில் சேர்ந்தார்.
மாதச் சம்பளமாக பெற்றதை, கடைசிவரை ஏழைக் குழந்தைகளுக்கு
தானமாகக் கொடுத்தார்..
ஓட்டலில் வேலை பார்த்து, சாப்பாட்டுக்கும் தங்கும் இடத்துக்கும்
ஏற்பாடு செய்து கொண்டார்.



ஏழை மக்களின் வறுமையை, வலியை உணர பிச்சை எடுத்துச் சாப்பிட்டு,
ரயில்வே பிளாட்பாரத்தில், பஸ்ஸ்டேண்டில, கடைவீதியில் படுத்து
உறங்கினார்..
1000 ஆண்டுகளில் இவரைப்போல் ஒரு மனிதர் பிறக்கவில்லை
என்று அமெரிக்கா பாராட்டி 35 கோடி நிதி வழங்கியது.
அதை அப்படியே அமெரிக்க குழந்தைகள் நலத்திட்டத்திற்கு
நன்கொடையாக அனுப்பி விட்டார்..
5-வது ஊதியக்குழு பரிந்துரையில் இவருக்கு 10 லட்சம்,
6-வது ஊதியக்குழு பரிந்துரையில் 5 லட்சம் வந்தது.
எல்லாவற்றையும் ஏழைக்குழந்தைகள் நல வாழ்விற்கு உயில்
எழுதி வைத்து விட்டார்...
1998-ல் சிவாஜி கணேசன் அவர்கள் தலைமையில் காமராஜ் அரங்கில்
ரஜினிகாந்த் இவரை தந்தையாக தத்து எடுத்து 101 - சவரன்
தங்க நாணயம் பரிசளித்தார். அரங்கில் இருந்த குழந்தைகளுக்கு
சுண்டல் வழங்குவது போல் ஆளுக்கு ஒரு சவரனை வழங்கிவிட்டார் ..
கர்ணன், துரியோதனன் கொடுத்த கஜானா பணத்தைத்தான்
தானம் செய்தான்..இவர் தன் பூர்விக சொத்துக்கள், மாதச்சம்பளம்,
கோடிக்கணக்கில் தனக்கு கிடைத்த நன்கொடைகள் என்று
தனக்குச் சொந்தமான அனைத்தையும் தானம் செய்தார்.
ஆசையே துன்பத்துக்குக் காரணம் . பற்றற்று வாழுங்கள்
என்றார் புத்தர்.
ஒரு வீட்டில் இன்று பிச்சை எடுத்தால் நாளை அதே வீட்டில்
கையேந்தாதே. இன்று ஒரு மரத்தடியில் தூங்கினால் நாளை
வேறு மரத்தடிக்கு போ என்றார்.
அப்படி, பற்றற்று வாழும் மனிதரை வணங்க ஜூலை 31-ந்தேதி
அவரது 75-ந்தாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டேன்...

No comments:

Post a Comment