Thursday 15 October 2020

KUSHPOO ,THE EVER GREEN LEGEND

 


KUSHPOO ,THE EVER GREEN LEGEND

`அரசியல் கேள்விகள் மட்டும் இப்போ வேண்டாமே' என்ற வேண்டுகோளுடன் பேசினார் குஷ்பு.



நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் குஷ்புவுக்கு, `அண்ணாத்த' 200-வது படம். `பா.ஜ.க-வில் இணையப்போகிறார்' என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. இந்த நிலையில், உத்தரபிரதேசம் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பி.ஜே.பிக்கு எதிராக ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இரண்டு தலைமுறைகள் கடந்தும்கூட எவர்கிரீன் நாயகியாக இருக்கும் குஷ்புவிடம் எப்போது பேட்டிக்கு அணுகினாலும் சுவாரஸ்யமான பதில்களுக்குப் பஞ்சமிருக்காது.

'அண்ணாத்த' படக்குழுவினருடன் குஷ்பு

'அண்ணாத்த' படக்குழுவினருடன் குஷ்பு

தற்போது டெல்லியில் இருப்பவரிடம் பேசினோம். `அரசியல் கேள்விகள் மட்டும் இப்போ வேண்டாமே' என்ற வேண்டுகோளுடன் பேசினார்.



``நான் நடிச்ச படங்கள் பத்தி எப்போதும் கணக்கு வெச்சிருக்கிறதில்லை. `அண்ணாத்த' என்னோட 200-வது படம்னு நீங்க சொல்லியிருக்கும் தகவல் எனக்கு இன்ப அதிர்ச்சி. அதுவும், ரஜினி சாருடன் பெரிய பேனர்ல நடிக்கிற இந்தப் படம் என் கரியர்ல முக்கியமான அடையாளத்தைக் கொடுத்திருக்குனு நினைக்கிறப்போ பெருமையா இருக்கு. அப்பா இல்லாத குடும்பம். 16 வயசுல குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை. வைராக்கியத்துடன் நடிச்சேன்.


குஷ்பு


குஷ்பு

பெண் குழந்தைகளுக்குத் தாயின் அரவணைப்பு ரொம்ப முக்கியம். கணவர் சினிமாவுல வேலை செய்றதால, மகள்களுடன் முழுமையா நேரம் செலவிட நினைச்சேன். அதனாலதான், `பெரியார்' படத்துக்குப் பிறகு சினிமாவுல இருந்து ஒதுங்கியிருந்தேன். என்னோட விருப்பத்துக்கு ஏற்ப சின்னத்திரையில் மட்டும் அவ்வப்போது வேலை செஞ்சேன். ஆனாலும், மக்கள் என்மேல காட்டும் அன்பு குறையாதது எனக்கே ஆச்சர்யம்தான். இதை நான் இழக்க விரும்பலை. படம் பண்ணாம இருந்தாலும்கூட பரவாயில்லை. எனக்கு முக்கியத்துவம் இல்லாத ரோல்கள்ல நடிக்கக்கூடாதுனு உறுதியா இருக்கேன். `அண்ணாத்த' படத்தில் என் நடிப்பு பெரிசா பேசப்படும்" என்றவர், தனது நாஸ்டாலஜி சினிமா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.



- `` `தர்மத்தின் தலைவன்' ரிலீஸ் டைம் அண்ணாசாலையில பெரிய பேனர் வெச்சிருந்தாங்க. அதை ஒருநாள் பார்க்கிறப்போ, ரஜினி, பிரபு, சுஹாசினி மூவரின் போட்டோதான் பிரதானமா இருந்துச்சு. `அய்யய்யோ! இந்தப் படத்துல நாம நடிச்சதே தெரியாமப் போச்சே. தெலுங்கு, கன்னடத்தில் நம்ம படங்கள் வெள்ளி விழா கொண்டாடுது. இனி தமிழில் பேசப்படக்கூடிய ரோல்லதான் நடிக்கணும்'னு அந்த இடத்துல முடிவு பண்ணினேன். நிறைய ஹிட்ஸ் கிடைச்சது.


குடும்பத்தினருடன் குஷ்பு


குடும்பத்தினருடன் குஷ்பு

- நான் எங்க போனாலும் பெரிய ஹீரோவுக்கு இணையான கூட்டம் கூடும். ஒருசமயம், `குஷ்புவுக்குக் கோயில் கட்டியிருக்காங்க'னு வைரலா நியூஸ் பரவுச்சு. நடிப்புக்காக ஓடின வேகத்துல அதைப் பெரிசா எடுத்துக்கலை. மூணு வருஷத்துக்குப் பிறகுதான், அந்த விஷயத்தை உணர்ந்தேன். ஆனா, எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியலை. `மக்கள் ஏன் நம்ம மேல இவ்வளவு அன்பு காட்டுறாங்க?'னு எனக்குள் கேள்வி எழுந்துச்சு. மக்களின் அன்புக்கு உண்மையா இருக்கணும்னு தமிழில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.


- அதற்காக, மற்ற மொழிகளில் மிகச் சிறந்த வெற்றிப்பட வாய்ப்புகளையும் மறுத்தேன். கன்னடம் மற்றும் தெலுங்கிலும் `சின்னதம்பி' படம் ரீமேக் செய்யப்பட, முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்துச்சு. அப்போ `அண்ணாமலை' மற்றும் `சிங்காரவேலன்'னு முக்கியமான ரெண்டு வாய்ப்புகள் வரவே, அவற்றையே தேர்வுசெஞ்சேன்.


- `நாட்டாமை' படத்தின் `கொட்டாப்பாக்கு' பாடல் ஷூட்டிங் ஊட்டியில் நடந்துச்சு. அப்போ மழை வரவே, மொத்த யூனிட்டும் கிளம்பிட்டாங்க. சரத்குமார் சாரின் புது சஃபாரி வண்டியில் அவருடன் நானும் கே.எஸ்.ரவிக்குமார் சாரும் கொட்டும் மழையில் உலா வந்தோம். ஒரே குடையின் கீழ், ஒரே தட்டில் மூணு பேரும் சாப்பிட்டோம். அதில், அன்பு நிறைந்திருந்துச்சு. `காதலன்' பட `பேட்ட ராப்' பாடலுக்கு மூணு பேரும் மழையில் டான்ஸ் ஆடினோம்.



கமலுடன் குஷ்பு

கமலுடன் குஷ்பு

-`ஜாதி மல்லி' ஷூட்டிங் தருணம். கே.பாலச்சந்தர் சாரும் நானும் ஒரே ஜீப்ல ஊரை வலம்வந்ததுடன், கார்ட்ஸ் விளையாடியதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். `கேப்டன் மகள்' ஷூட்டிங் ஸ்பாட். பாரதிராஜா சாருக்கு பாம்புன்னா ரொம்பவே பயம்; எனக்கு பயமில்லை. ஒருமுறை, ஷூட்டிங்குக்காக கொண்டுவரப்பட்ட ரெண்டு பாம்புகளை என் ரெண்டு கையிலயும் பிடிச்சுகிட்டு, அவரைத் துரத்தி பயமுறுத்தினேன். `நான் ஹார்ட் அட்டாக்ல செத்துப்போயிட்டா, அதுக்கு நீதான் காரணம்'னு சொல்லிச் கத்திகிட்டே யூனிட்டை வலம் வந்தார்.



- பி.வாசு சார் படங்கள்ல அதிகம் நடிச்சேன். கொடைக்கானல்ல `நடிகன்' பட ஷூட்டிங் நடக்குது. லேக்ல காலைநேரம் படர்ந்திருக்கும் பனி, ஆறு மணிக்குச் சூரிய ஒளி பட்டதும் மறைஞ்சுடும். லொக்கேஷனுக்கு பத்து நிமிஷம் தாமதமா போயிட்டேன். மொத்த யூனிட் முன்னாடியும், வாசு சார் என்னைக் கண்டபடி திட்டினார். அவமானத்துல ரொம்ப அழுதேன். அவர் மேல எனக்குக் கோபம் போகச் சிலநாள் ஆச்சு. ஒருநாள் அவர் வருவதைப் பார்த்து முகத்தைக் கோபமா வெச்சுகிட்டு, புக் படிச்சுகிட்டு இருந்தேன். பக்கத்துல வந்தவர், தலைகீழா இருந்த புக்கை திருப்பி வெச்சு, `இப்போ படி. நல்லா புரியும்'னு சொன்னார்.



'பெரியார்' படத்தில் குஷ்பு

'பெரியார்' படத்தில் குஷ்பு

- ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் மாதிரியே, ஒரு துணியை வாயில கடிச்சுகிட்டு, மத்தவங்ககிட்ட அவர்போலவே பேசி இமிடேட் பண்ணினேன். எல்லோருக்கும் ஆச்சர்யம். திரும்பிப் பார்த்தா, வாசு சார் நிற்கிறார். நான் ஷாக் ஆக, அவர் சிரிச்சுட்டார்.


- எனக்கு முட்டை மஞ்சள் கரு ரொம்பப் பிடிக்கும். அதனால விஜயகாந்த் சார் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டுட்டு, மஞ்சள் கருவை எனக்குக் கொடுப்பார்.


- `குஷ்புவுக்குக் காரமா சாப்பிட்டா அழுகை வந்திடும். காரமில்லாத சாப்பாட்டைக் கொடுங்க'னு எனக்காக சத்யராஜ் சார் மெனக்கெடுவார்.

.



- ராஜீவ் காந்தி மரணமடைந்த நேரம், `கிழக்குக்கரை' ஷூட்டிங் நடக்குது. டிராவல், சாப்பாடுனு எந்த வசதியும் இல்லாம ஷூட்டிங் கெஸ்ட் அவுஸ்ல இருந்தோம். அந்த நாலு நாளுமே, வெறும் பிரெட், முட்டைதான் சாப்பாடு. இப்படி நூற்றுக்கணக்கான நினைவுகளைச் சொல்லலாம். அந்த மாதிரியெல்லாம் இன்றைய சினிமா சூழலில் நடக்குமா? எங்க காலத்தில் இருந்த ஒற்றுமை, இந்தக் காலத்துல நடிகர்களிடம் இருக்குமான்னு தெரியலை. எங்க காலத்தை சினிமா உலகின் பொற்காலம்னு சொல்வேன்." - உற்சாகம் குறையாமல் பேசுபவருக்கு, நிறைவேறாத சினிமா ஆசை ஒன்றும் இருக்கிறதாம்.


மணிரத்னத்துடன் குஷ்பு


மணிரத்னத்துடன் குஷ்பு

-``நான் 1987-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். ரஜினி சார், கமல் சார்கூட ஜோடியா நடிக்கணும்ங்கிறது அப்போதைய நடிகைகளின் சினிமா ஆசைகளாக இருக்கும். அந்த ஆசை எனக்கு விரைவாகவே நிறைவேறுச்சு. பிறகு, அப்போதைய முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்கள்லயும் நடிச்சேன். மணிரத்னம் சாரின் `அலைபாயுதே' படத்தில் நடிச்ச திருப்தி கிடைச்சிருக்கு. ஆனா, அவர் படத்தில் ஹீரோயினா நடிக்காதது எனக்கு இதுவரை நிறைவேறாத சினிமா ஆசை.



லாக்டெளன் எனக்கு சிறப்பா போச்சு. வீட்டில் பல மாதமா வேலைக்காரங்க இல்லை. எல்லா வேலைகளையும் நானேதான் செஞ்சேன். சாப்பிடுறது, விளையாடுறது, டிவி பார்க்கிறதுனு மொத்தக் குடும்பமும் ஒண்ணாவே நேரம் செலவிட்டோம். இப்படியான சூழல் லாக்டெளனால்தான் சாத்தியமாச்சு.

போன வாரம்தான் என்னுடைய 50-வது பிறந்தநாளை எளிமையா கொண்டாடினேன். அன்னைக்கு இரவு 12 மணிக்குக் குடும்பத்தினர், ஹிப்ஹாப் ஆதி உட்பட பலர் சர்ப்ரைஸ் வாழ்த்துச் சொல்லி கேக் கட் பண்ண ஏற்பாடு செய்தாங்க. பிறந்தநாள் வரும்போதுதான் வயசு கூடிட்டே போற ஞாபகமே வருது" என்று புன்னகைக்கிறார் குஷ்பு!


குஷ்பு நடித்திருக்கும் படங்களில் உங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் / எது? ஒரு ரசிகராக குஷ்பு என்றதும் நினைவுக்கு வருவது என்ன? ஏன்? கீழே கமென்ட் செய்யுங்கள்.

விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்...


No comments:

Post a Comment