Monday 17 August 2020

MGR GOD FATHER





MGR  GOD FATHER


சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்‌ஷாகாரர்.
ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே…

”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக்ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க”

“யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்‌ஷா ஓனர் இல்ல…!

“அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க”
“எந்த ஊருக்கு?”
அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு”

“95 ரூபாய் ஆகுது”
“இந்தா எடுத்துக்க..
அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும் 17 ரூபாய் வேண்டும்.
“மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறார், 10 பைசா கூட இல்லை.
அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள், ரிக் ஷாக்காரரைப் பார்த்து...

“அண்ணாத்தே, காசு இல்லன்னா எடத்தை காலி பண்ணு, நாங்க தந்தி கொடுக்கணும்.”
“நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரர், சார் கொஞ்சம் பொறுத்திரு, நாலு சவாரியில நீ கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன், நீ வூட்டுக்கு போயிடாத, ஆபீஸ எப்ப மூடுவ?!

“எப்பவும் மூட மாட்டோம், இந்த கவுண்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்”
“அது போதும் இன்னும் அரை அவர்ல வந்துட்றேன்... நேரத்தை வீணாக்காமல் வெளியேறுகிறார்...

“நீங்க எந்த ஊருக்குமா தந்தி கொடுக்கணும்..?”
காலிப் பூக்கூடையுடன் க்யூவில் நின்ற பூக்காரப் பெண்மணியிடம் கேட்கிறார். தந்தி அலுவலர்.

”ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு”...

ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்திய காசை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு தலைவனின் உயிருக்காக தன்னை வருத்தி தவம் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, கொஞ்சம் கேலித்தனத்துடன், பார்க்கிறார் தந்தி அலுவலர்.
அரை மணி நேரத்திற்குள் வருவதாக சென்ற ரிக்ஷாகாரர், ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.

“இந்தா சார் நீ கேட்ட 17 ரூபாய்’ என்று
நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்...
பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்…

ஏம்பா நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ தந்தி கொடுக்கறதுனால என்ன பிரயோஜனம், தலைவர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரி தொண்டர்கள் எல்லாம் மூடத்தனமா ஏன் இப்படி செயல்படுறீங்க?
அவுங்க உங்களுக்கு ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களா?

வேறு நேரமாயிருந்தால், ரிக்ஷாக்காரர் தாறுமாறாக செயல்பட்டிருப்பார், ஆனால் நல்லவேளை அந்த நேரத்தில் மட்டும் ரிக்ஷாக்காரர் பொறுமையாக செயல்பட்டார்...

“சார் இது வரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க, மத்த தலைவர்களைப் பத்தி எனக்குத் தெரியாது.

"ஆனா என் தலைவன் அப்படி இல்லை, எங்களை மாதிரி ஏழை ஜனங்களுக்கு என் தலைவன் என்ன வேணும்னாலும் செய்வான் உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் மூனு வேளை சோறு துண்றதே என் தலைவனால தான்."

“என்னப்பா சொல்ற..?

“ ஆமா சார்..!
இந்த ரிக்ஷா என் தலைவன் வாங்கிக் கொடுத்தது அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒருநாள் பட்டினி கிடந்தா, செத்தா போயிடுவோம்..

அதிகம் பேச வரவில்லை……
பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரிக்ஷாக்காரர் விருட்டென்று கிளம்பி விட்டார்.

படித்த நமக்கே, படிக்காத ரிக்‌ஷாக்காரர் பாடம் கற்பித்துச் சென்றுவிட்டாரே என்று தந்தி அலுவலர் கலங்கித் தான் போனார்...

யாரை நினைத்து நெகிழ்வது ... இப்பேர்ப்பட்ட தலைவனையா...? அல்லது பக்தனையா ...?
.






..கார்வார்... கர்நாடக மாநிலத்தில் தீவு போலத் தோற்றமளிக்கும் மலைப்பிரதேசம்...

"ஆயிரத்தில் ஒருவன்" படப்பிடிப்பில் கலந்து கொள்ள எம்ஜிஆரும் அவரது உதவியாளரும் காரில் அந்தப் பகுதியில் விரைந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எம்ஜிஆர், "விஞ்ஞானத்தின் விலாசமிழந்த, நவநாகரிகத்தின் வெளிச்சம் படாத இந்த மலைப்பகுதியில் என்னை யாருக்கு அடையாளம் தெரியப்போகுது..." அப்படின்னு சொல்ல...
அதற்கு உதவியாளரோ..."உலகின் எந்தப்புள்ளிக்கு நீங்கள் சென்றாலும், உங்கள் பொன்நிறத்தைக் காணக் காத்து நிற்கும் மக்கள் கூட்டமுண்டு..." அப்படீன்னு சொல்ல, மக்கள்திலகம், "மாநிலம் கடந்து வாழும், அதிலும் இந்த மலையக மக்கள் என்னை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை" இப்படியே பேச்சு தொடர...

வழியில் ஒரு வயதானவர் தலையில் விறகுக்கட்டை சோர்வுடன் சுமந்து செல்வதைப் பார்த்துக் காரை நிறுத்தச்சொல்கிறார். உதவியாளரைப் பார்த்து, 'எங்கே போனாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டுப்பாங்கன்னு சொன்னியே...இந்தப் பெரியவருக்கு என்னைத் தெரியுதான்னு பார்ப்போம்னு சொல்லி, அவரைக் காரில் ஏற்றுகிறார்.

பெரியவரிடம் பேச்சுக்கொடுக்கிறார் பொன்மனச்செம்மல். ஆனால் எம்ஜிஆரை பார்த்ததுக்கான எவ்வித உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் 'கேஷுவலாகப்' பேசியதைப் பார்த்த எம்ஜிஆர் தன் உதவியாளரிடம் 'நா சொன்னது போல நடந்துச்சு பார்த்தியா ' என்று சைகையிலும், பார்வையிலும் கூறுகிறார்...

ஊருக்கு கொஞ்சம் வெளியே இறங்கிய அப்பெரியவரிடம், தனது கர்ச்சீப்பில் கொஞ்சம் பணத்தைக் கொடுக்க, அப்பெரியவர் மறுக்க, பலவந்தமாக கையில் திணிக்க, அப்பெரியவர், "நீங்க கொடுத்ததை நான் வாங்கிக்கொண்டேன்.நான் உங்களுக்கு ஏதேனும் கொடுக்க நினைக்கிறேன்...என்னிடம் கொடுக்க ஏதுமில்லாததால் உங்களுக்கு குடிக்க ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துவருகிறேன்...சற்று பொறுங்க..." ன்னு சொல்லிட்டு விறுவிறுவென்று தலையில் விறகுக்கட்டுடன் நடந்து ஊருக்குள் செல்கிறார்...

அடுத்த சில நிமிடங்களில் 'கிராம மக்கள் புடை சூழ' அப்பெரியவர் காரை நோக்கிவர எம்ஜிஆருக்கும், உதவியாளருக்கும் புரியவில்லை.

காரருகே வந்த பெரியவர், "சாமீ..ஒரு நிமிஷம் வெளிய வந்து எங்க ஜனங்களுக்கு உங்க முகத்தைக் காட்டுங்க..."என சொல்ல திகைத்துப் போய் காரிலிருந்து இறங்குகுறார் எம்ஜிஆர்...

அவ்வளவு தான் கூட்டத்தில், "ஹைய்யா வாத்தியார்" என்றும், "ஹைய்யா எம்ஜிஆர்" என்றும், "நிசமாவே எம்ஜிஆர் தான்டா" என்றும் அந்த கிராம மக்கள் கொண்டாடுகின்றனர்...

இப்ப அந்தப் பெரியவர் பேச ஆரம்பிக்கிறார்..."இவ்வளவு நேரம் நீங்க யாருன்னு தெரிஞ்சும் ஏன் வெளிக்காட்டாம சும்மா இருந்தேன்னு நெனச்சீங்களா! இப்ப அந்த இடத்துலயே நீங்க யாருங்கிறதை தெரிஞ்சிட்டு நா மட்டும் சந்தோஷப்பட்டிருந்தேன்னா, உங்கள நா வழியில பார்த்ததாகவோ, உங்க கார்ல வந்ததாகவோ, நீங்க எனக்கு பணம் தந்ததாகவோ எங்க ஜனங்ககிட்ட சொன்னா, "போடா பைத்தியக்காரா, இதையெல்லாம் எங்கள நம்பச்சொல்றீயா! ன்னு என்னைக் கேலி பண்ணுவாங்க...அதனால தான் ஊர் ஜனங்க எல்லோரையும் கூட்டி வந்து, 'உங்களைத் தரிசிக்க வெச்சுட்டேன்..'

"எங்க ஊர்ல பால் குடிக்கிற புள்ளைக்குக்கூட உங்க முகம் தெரியறப்ப...இந்தப் பாழும் கிழத்துக்கு உங்க முகம் தெரியாமலா இருக்கும் சாமீ..." அப்படீன்னு பெரியவர் உணர்ச்சிப்பிழம்பாய்ப் பேச, அதைக் கேட்ட பொன்மனச்செம்மல் நெகிழ்ந்து உருகிப் போகிறார். அங்கிருந்து விடைபெறுகிறார்...

உதவியாளரிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.


.

No comments:

Post a Comment