Sunday 16 August 2020

KANNADA PARROT SAROJADEVI BIOGRAPHY



கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி





“கன்னடத்துப் பைங்கிளி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி 1938 –ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழாம் நாள் பெங்களூரில் பிறந்தவர்.
இவரது தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரியாக இருந்தவர். நான்காவது மகளாக பிறந்த இவருக்கு சிறு வயதிலே இசை ஆர்வம் பிறந்தது. புனித தெரசா பள்ளியில் படித்துக்  கொண்டிருந்த போது,  இசைப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'ஏ ஜிந்தகி கே'  என்ற இந்தி பாடலை பாடினார் இவர்.

அந்த நிகழ்ச்சிக்கு கன்னட திரை உலகத்தின் பிரபல பட அதிபரும், நடிகருமான ஹொன்னப்ப பாகவதர் வந்திருந்தார்.  சரோஜா தேவியின் குரல் வளம் நன்றாக இருந்ததை கண்ட அவர், தனது சினிமா படத்தில் சரோஜாதேவியை பின்னணி பாட வைத்தால் என்ன' என்ற எண்ணத்துடன் சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மாவை அணுகினார். 

பாடல் பதிவுக்கான ஒத்திகையின் போது இவரை நடிகையாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே உடனே மேக்கப் டெச்ட் எடுத்துப் பார்த்தார். 


சரோஜாதேவியின் தோற்றம் ஹொன்னப்ப பாகவதருக்கும் படக் குழுவிருக்கும் பிடித்துவிடவே சரோஜாதேவியை தனது 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் அவர். 1955 –ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம், வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி  அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.

தனது அடுத்த படமான 'பஞ்ச ரத்தினம்' என்ற கன்னட படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார், ஹொன்னப்ப பாகவதர். ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டுப் படிக்கப் போய்விடலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு,  வரிசையாக படங்கள் அமைந்து விடவே, நடிப்பு படிப்பாக மாறிப் போனது. 

1958 ஆம் ஆண்டு ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற தமிழ் திரைப்படத்திலும், அதைத் தொடர்ந்து தங்கமலை ரகசியம் படத்திலும் நடித்தார். 


அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் திருடாதே படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சரோஜாதேவி. ஆனால், அதன் எம்.ஜி.ஆருடன் நடித்த ‘நாடோடி மன்னன்’  தான் முதலில் வெளியானது. ‘நாடோடி மன்னன்’  திரைப்படம் சரோஜாதேவிக்கு தமிழில் ஒரு முக்கியமான இடத்தை பெற்று தந்தது.

அதன் பிறகு இவர் நடித்த ‘சபாஷ் மீனா’, ‘பாகப்பிரிவினை’  போன்ற படங்கள் அவரது திறமைக்கு எடுத்துக்காடாக அமைந்த போதிலும் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம்தான், தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. 

இதனைத் தொடர்ந்து, ‘வாழ வைத்த தெய்வம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’,  ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘குல விளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன், தெலுங்கு மொழியில் நாகேஸ்வர ராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் பல வெற்றிப் படங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் மாபெரும் நட்ச்சத்திரமாக உயர்ந்தார். இந்தியிலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் இவர். 

வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர் இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, போன்ற தென்னிந்திய மொழிகளில், சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு என்ஜினியர் ஆன  ஸ்ரீஹர்ஷாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி, இந்திரா என இரு மகள்களும், ராமச்சந்திரன், கவுதம் என இரு மகன்களும் உள்ளனர். நடிகைகள் திருமணம் செய்து கொண்டால், பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்கிற கருத்தைப் போக்கியவர் இவர். திருமணத்துக்கு பிறகு இவர் நடித்தப் பல படங்கள் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.  

1986 ஆம் ஆண்டு அவரது கணவர் ஸ்ரீஹர்ஷா காலமானார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் நடிப்பை தவிர்த்த இவர், அதற்கு பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்டு, பூவுக்குள் பூகம்பம், அடிமை விலங்கு, பரம்பரை, தாய்மேல் ஆணை, பொன்ன்மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம், ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்தார்.


அதிக சபளம் வாங்கிய நடிகை என்கிற பெயரைப் பெற்றவர் இவர்.  உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைதான் அன்றைய மாணவிகள் பின்பற்றினார்கள். 

இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இவர், தமிழக அரசின் ‘எம்.ஜி.ஆர் விருது’,  ஆந்திர அரசின் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டமும்’, 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் ‘தேசிய விருது’, பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் விருது எனப் பல விருதுகளை பெற்று சாதனைப் படைத்தவர் இவர். 

கன்னடத்து பைங்கிளி என்றும், அபிநய சரஸ்வதி என்றும் ரசிகர்களால் இன்றுவரை செல்லமாக அழைக்கப்படும் இவர், கடந்த அறுபது ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்துடன் நிலைத்து நிற்பது சரோஜாதேவியின் தனிப்பாட்ட சாதனை. இனி யாரும் முறியடிக்க முடியாத சாதனையும் கூட!
Posted by G.BALAN at வியாழன், ஜூலை 17, 2014 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக

புதிய இடுகைப




சரோஜா தேவி 77-வது பிறந்த தினம்: ஜனவரி 7

தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி.

இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜாதேவி, பெங்களூரின் செயிண்ட் தெரசா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். எல்லாரும் கன்னடக் கீர்த்தனைகள், கன்னட சினிமா பாடல்கள் என்று பாட, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நமது ஹீரோயின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘ஏ ஜிந்தகி ஹே மேளே' என்ற இந்திப் படப் பாடலைப் பாடிக் கவர்ந்தார்.

நௌஷா இசையில் முகமது ரஃபி பாடிப் பிரபல்யம் அடைந்த அந்தத் தத்துவப் பாடலைத் தனது இனிமையான கீச்சுக் குரலில் இவர் பாடியது சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகரும் தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதருக்குப் பிடித்துவிட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் சரோஜாதேவியை அழைத்த ஹொன்னப்பர், “அப்பா அல்லது அம்மா யாரையாவது அழைத்துக்கொண்டு, என் ஸ்டூடியோவுக்கு வா. உன்னைப் பாடகி ஆக்குகிறேன்” என்றார்.

அம்மாவுடன் கிளம்பிப் போனார். வசதியான குடும்பத்துப் பெண் என்பதால் ஜொலிக்கும் உடை, அம்மா பார்த்துப் பார்த்துச் செய்த மேக்- அப் ஆகியவற்றுடன் வந்து நின்ற சரோஜா தேவியைப் பார்த்த பாகவதருக்கு ஷாக். பள்ளிச் சீருடையில் வந்து பாடிய அந்தச் சின்னப் பெண்ணா இப்படி ஜொலிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார்.

“நீ பாடுவது இருக்கட்டும், கதாநாயகியாக நடிக்கவே செய்யலாமே! நீங்கள் சரியென்றால் உங்கள் மகளை எனது படத்திலேயே கதாநாயகி ஆக்குகிறேன்” என்றார். ஆனால் சரோஜாதேவியின் அப்பா மறுத்துவிட்டார். அவரது அலுவலகத்துக்கே சென்று அவரைச் சந்தித்து, இது காளிதாஸனின் வாழ்க்கை வரலாறு; கவுரவமான வேடம் என்று எடுத்துக்கூறிச் சம்மதிக்க வைத்தார். இந்த ஒரு படத்தில் மட்டுமே என் மகள் நடிப்பாள் என்று கண்டிப்பாகக் கூறினார் பைரவப்பா.

இப்படித்தான் ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. அந்தப் படத்தில் “ பாரொ கிளியே.. மரளி மனகெ..” என்று சி. எஸ். சரோஜினி பாடிய சோகப் பாடலை வீணை வாசித்தபடியே பாடுவதாக அமைந்த சரோஜாதேவியின் அறிமுகக் காட்சியைக் கண்டு ரசிகர்கள் கண்ணீர்விட்டார்ககள்.

படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது. ஒரே படத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு இந்தப் படம் கொண்டுவந்த புகழ், வீட்டின் முன் ரசிகர் கூட்டத்தைக் கூட்டியது. ராசியான ஹீரோயின் என்ற சென்டிமென்டும் சேர்ந்துகொள்ளப் பாகவதர் தனது ‘ஆஷாடபூதி’, 'பஞ்ச ரத்தினம்' ஆகிய படங்களிலும் இவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

தமிழுக்கு வந்தார்

தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. இங்கே பானுமதி, சாவித்திரி, அஞ்சலிதேவி ஆகியோர் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார்கள். இந்த நேரத்தில் ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி.பி. பிள்ளையா இயக்கத்தில் ஜெமினி – அஞ்சலிதேவி நடிப்பில் 1958-ல் வெளியான இந்தப் படத்தில் சரளாதேவி என்ற நாட்டியப் பெண்மணியாகச் சின்ன வேடத்தில் நடித்து யார் இந்தப்பெண் என்று ரசிகர்களைக் கேட்க வைத்தார்.

பரிசாக அமைந்த படம்

அதன் பின்னர் இரண்டாவது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின. அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் முதல்பாதி முழுவதும் பானுமதி கதாநாயகியாகத் தோன்ற, இரண்டாவது பாதியை ‘ரத்னா’வாக வந்து அலங்கரித்தவர் சரோஜாதேவி. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.

எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் காதல் கனிரசம் சொட்டிய, கதையம்சத்தில் குறையாத படங்கள். காதல் காட்சிகளில் கிள்ளையின் குரலில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கிய அவரது நடிப்பைக் கண்ட தமிழகம் அவரை ‘கன்னடத்துப் பைங்கிளியாக’க் கொண்டாட ஆரம்பித்தது. தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.

எம்.ஜி.ஆருடன் ஆரம்பக் கவனம் கிடைத்தாலும் சரோஜாதேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி.

கல்லூரிக்குப் புறப்படும்போது, 'அம்மா போயிட்டு வர்றேன்' என்று, மாடியில் குடியிருக்கும் ஜெமினி கணேசனுக்கு கேட்க வேண்டும் என்று இருமுறை கத்தி சொல்லிவிட்டுப் போவார். குறும்பான இந்தக் காதல் காட்சி உட்படப் படம் முழுவதும் சரோஜாதேவியின் நடிப்பு காந்தமாகக் கல்லூரி மாணவ- மாணவியரைக் கவர்ந்து இழுத்தது.

சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.

அடிக்க மறுத்தார்






சிவாஜியுடன் நடித்த படங்களும் சாதனை வெற்றிகளாக அமையக் கல்யாணப் பரிசு வெளியான அதே 1959-ல் வெளியானது பாகப்பிரிவினை. எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக்கண்ணீருக்குப் பிறகு பெரும் திருப்பு முனையைக் கொடுத்த படம். வில்லனாக நடித்த எம்.ஆர். ராதாவை சரோஜாதேவி துடைப்பத்தால் அடிப்பது போன்ற காட்சி கதையில் முக்கியமானது. ஆனால் “அவரை நான் அடிக்க மாட்டேன்” என்று மறுத்து அழ ஆரம்பித்துவிட்டார் சரோஜாதேவி.

இது நடிப்புதானே என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் ராதா. அப்படியும் அவருக்குத் தைரியம் வரவில்லை..இனி வேலைக்கு ஆகாது என்று முடிவுசெய்த இயக்குநர் ராதாவையும் சரோஜாதேவியும் ஒரு அறையில் இருக்கவைத்து முதலில் அலறியபடி ராதாவை வெளியே ஓடிவரச்செய்து படம்பிடித்தார். பிறகு துடைப்பத்துடன் சரோஜாதேவியை ஆவேசமாக வெளியே ஓடிவரச் செய்து படமாக்கினார்.

கதையம்சம், பாத்திரப்படைப்பு இவற்றில் அபத்தங்கள் தென்பட்டாலும் அவற்றையும் மீறித் தன் நடிப்பில் ஒரு கண்ணியத்தை நேர்த்தியான நளினத்துடன் வெளிப்படுத்தியதில் இவருக்கு இணை இவரென்றே மாறினார். தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டிலும் புகழ்பெற்றார்.

மாயையைத் தகர்த்த மகத்தான நாயகி

படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜாதேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர் இன்றும் நடித்துக்கொண்டிருக்கும் கன்னடத்துப் பைங்கிளிதான்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.






அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
படபடக்கும் அழகிய கண்கள், குறும்பு கொப்பளிக்கும் முகமும், சிரிப்பும், புன்சிரிப்போ கலகலவென்ற சிரிப்போ ஏதானாலும் பார்க்கும் அனைவரையும் கொள்ளை கொண்டு விடுவார். அவர் காலத்து இளைஞர்களை எப்போதும் கனவினில் மிதக்கவும் சஞ்சரிக்கவும் வைத்தவர். அதற்குக் கொஞ்சமும் குறையாமல் இளம் பெண்களையும் அவர் அணிந்து நடித்த உடைகள், அணிமணிகள் வாயிலாகக் கவர்ந்து இழுத்தவர்.

அவர் கொஞ்சிப் பேசும் அழகுக்கே மீண்டும் மீண்டும் அவரது படங்களை தேடிச் சென்று பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அவரது நடை அழகு சொல்லில் வடிக்க இயலாதது. 50களில் நடிக்க ஆரம்பித்து மணி விழா கண்டவர். அவர்தான் அழகு தேவதையாய் வலம் வந்த சரோஜாதேவி.    

கன்னடம் தாய்மொழி என்றாலும், மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தமிழில் பேசி நடித்தவர். ஆரம்ப காலங்களில் இவர் நடித்த படங்களின் உதவி இயக்குநர்கள், வசனகர்த்தா என அனைவரையும் இந்த கொஞ்சு மொழிப் பிரச்சனையால் திண்டாட வைத்தவர். கச்சா பிலிம்களையும் கணக்கில்லாமல் செலவிட வைத்து ஏகப்பட்ட டேக் வாங்கியவர். ஆனால், யாரும் இவர் குறித்துப் பெரிதாகக் குறைகள் சொல்ல இயலாதவாறு தன் நடிப்பால் ஆளுமை செலுத்தியவர்.

இவ்வளவு பேரும் புகழும் பெற்றவர் தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கை நூறினைத் தாண்டவில்லை. இப்போதும் புகழ் மிக்க நட்சத்திரமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறார் சரோஜாதேவி. அப்போதைய புகழ் மிக்க நட்சத்திரங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் என சம காலத்தில் அனைவருடனும் இணைந்து நடித்தவர். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்ததன் மூலமே பெரும் புகழை அறுவடை செய்தார் என்றால் மிகையில்லை.

எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசமும் தமிழ்த் திரையுலகில் அவருக்கிருந்த பிரபலமான பேரும் புகழும் சரோஜா தேவியின் வெற்றிக்கும் வித்தாக அமைந்தன. எம்.ஜி.ஆர். ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக மாறவும் அதுவே அவருக்கு உதவியது. கர்நாடகத்தில் பிறந்து, கன்னடப் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர், தமிழில் நடிக்க வந்த பின்னரே கொண்டாடப்படும் நடிகையாக மாறினார். கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்திருந்தாலும் தமிழில்தான் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார்.

அதற்கடுத்ததாக கன்னடப் படங்கள். அதிலும் குறைவாகத் தெலுங்கு, இறுதியாக இந்தி என அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்குள்தான் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து இவரது பல படங்கள் நூறு நாட்கள் ஓடிக் கடந்தவையாகவும் வெள்ளி விழாப் படங்களாகவும் இருந்ததால் புகழின் உச்சத்திலேயே எப்போதும் இருக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது. 50களில் தொடங்கி 70கள் வரை நல்ல கதையம்சம் கொண்ட பல படங்கள்
இவருக்கு வாய்த்ததும் பெரும் பேறு.

போலீஸ்காரர் மகளாகப் பிறந்தவர்  அன்றைய மைசூர் சமஸ்தானத்தில் (சமஸ்தானங்களின் ஒழிப்புக்குப் பின்னர் இப்போது அது பெங்களூரு என்று மாறி விட்டது). பைரப்பா - ருத்ரம்மா தம்பதியினரின் நான்காவது மகளாக 1938 ஜனவரி 7 ஆம் தேதி பிறந்தவர் ராதா தேவி. ஆம், அதுதான் அவரது அசல் பெயர். தந்தையார் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட காவல்துறையில் போலீஸ்காரராகப் பணியாற்றியவர். அம்மா குடும்ப நிர்வாகம் முழுவதையும் கையில் எடுத்துக்கொண்டு அதில் கவனத்தைச் செலுத்தியவர்.

இவருக்கு முன்னதாக மூன்று பெண் குழந்தைகள் இருந்ததால், ஆண் குழந்தையின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இவர் வேண்டாத குழந்தையாகவே வேண்டாவெறுப்பாக வளர்க்கப்பட்டார். இவருடைய தாத்தா மாயண்ணா கவுடா முற்றிலும் இந்தப் பெண் குழந்தையை வெறுத்து ஒதுக்கியதுடன், யாருக்காவது தத்து கொடுத்து விடச் சொல்லி தன் மகனை வலியுறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்.

ஆனால், தந்தையின் ஆதரவு ராதா தேவிக்கு முழுமையாகக் கிடைத்தது. இவருக்கு மூன்று மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரியும் உண்டு. ஐந்து குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால், அம்மா இவருக்கு தலைமுடியை கிராப் செய்து ஆண் குழந்தை போல் உடை உடுத்தி ஒரு பையனைப் போலவே நடத்துவாராம்.

சிறு வயதில் பாடுவதில் நல்ல ஆர்வம் இருந்ததால், பாட்டு கற்றுக் கொண்டார். சினிமாப் பாடல்கள், அதிலும் இந்திப் பாடல்களைப் பாடுவதில் பெரு விருப்பம் அந்த வயதிலேயே இருந்திருக்கிறது. அதிலும் நடிகை பீனா ராய் நடித்த ‘அனார்கலி’ இந்திப் படத்தின் பாடல்களை எப்போதும் பாடிக் கொண்டிருப்பாராம்.

அப்படித்தான் பள்ளிப் பருவத்தில் விழாக்களில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அனைத்துப் பள்ளிகளின் மாணவிகளுக்கான போட்டியில் பாட, அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் பிரபல கன்னட நடிகர் ஹொன்னப்ப பாகவதர். புனித தெரசா பள்ளி மாணவியான ராதா தேவி பாடிய ‘யே ஜிந்தஹி ஹே’ இந்திப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. தலைமை தாங்கிய ஹொன்னப்ப பாகவதர், ராதா தேவியின் தாயாரிடம், ‘உங்க பொண்ணு நல்லா பாடுறா, சினிமாவில் பாட வைக்கலாம்.

நாளை அழைத்து வாருங்கள்’ என்று சொல்லி விட்டுப் போக அம்மா ருத்ரம்மா ஆனந்தத்தின் எல்லைக்கே போய் விட்டார். மகளை அழைத்துக்கொண்டு போகவே, பள்ளி மாணவியாக சீருடையில் பார்த்த பெண்ணா இது என்று அசந்து போய் விட்டார் பாகவதர். ராதா தேவியின் சௌந்தர்யமான அழகு பாடுவதை விட அவரை நடிக்கவே வைக்கலாம் என்று அவருக்குத் தோன்றி விட்டது. இப்படித்தான் திரையுலக வாய்ப்பு ராதா தேவியை வந்தடைந்தது. ‘மகாகவி காளிதாஸ்’, ‘பஞ்ச ரத்தினம்’, ‘ராம பூஜா’ என அடுத்தடுத்து மூன்று கன்னடப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ராதா தேவி சினிமாவுக்காக சரோஜா தேவி ஆனார்.

மின்னும் தாரகைகளுக்கு மத்தியில் ஓர் ஒளி மிக்க நடன நட்சத்திரம் சரோஜா தேவி நடிக்க வந்த 50களின் காலகட்டத்தில் பெரும் புகழுடன் உச்சத்தில் இருந்த நட்சத்திரங்கள் அஞ்சலி தேவி, பானுமதி, சாவித்திரி, பத்மினி போன்றவர்கள் அசாத்தியமான நடிப்பாற்றல் மிக்கவர்களும் கூட. அவர்களுடன் எம்.என்.ராஜம், விஜயகுமாரி, அவ்வப்போது தமிழிலும் வந்து நடித்து விட்டு செல்லும் வைஜெயந்தி மாலா, ஜமுனா என பல நட்சத்திரங்கள். அந்த நேரத்தில்தான் கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து சேர்கிறார் சரோஜாதேவி.

பிற நடிகைகளைப் போல் முறையாக நடனம் பயின்றவர் இல்லை, நாடகங்களில் நடித்து பண்பட்ட அபாரமான நடிப்புத் திறன், நல்ல பளிச்சிடும் நிறம், உயரம், என எதுவுமே இல்லாமல் தமிழ்த் திரையைத் தன் வசமாக்கியவர். ஆரம்ப காலத்தில் தமிழில் வரிசையாக இரண்டு மூன்று படங்களிலும் நடனம் ஆடும் வாய்ப்புதான் கிட்டியது.

பீம்சிங் இயக்கிய ‘திருமணம்’ படத்தில் ஒரே ஒரு நடனம். நாட்டிய உலகில் பல்வேறு விதமான நடனங்களால் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த கோபி கிருஷ்ணா, பிஞ்சு வயதிலிருந்து பரதத்தில் சிறந்த குமாரி கமலா என இருவரும் அப்படத்தில் நடனமாடியிருக்கிறார்கள். சரோஜா தேவியும் அப்படத்தில் ஒரு நடனத் தாரகை என்றால் நம்ப முடிகிறதா? வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்லாமல், அபாரமான திறமையும் ஒளிந்திருந்ததாலேயே அவரால் துணிச்சலுடன் நடனமாடவும் முடிந்தது. பூலோக ரம்பை, திருமணம் இரு படங்களிலும் நடனம் மட்டுமே அவரது பங்களிப்பு.

தமிழில் நல் வாய்ப்பு நல்கிய நல்ல மனிதர்கள் தமிழ்த் திரையின் முதல் கனவுக்கன்னியாகக் கொண்டாடப்பட்டவர் டி.ஆர்.ராஜகுமாரி. அவரை தன்னுடைய ‘கச்ச தேவயானி’ தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் தமிழ்த்திரையின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான கே.சுப்பிரமணியம். அதே படத்தைக் கன்னடத்தில் எடுப்பதற்காக நாயகியைத் தேடியபோது, கன்னடப் படம் ஒன்றின் மூலம் இயக்குநரின் கண்களில் தென்பட்டவர் சரோஜாதேவி. கருப்பு நிறம் கொண்ட பெண்களையும் நாயகிகளாக்க முடியும் என்று நிரூபித்தவர் அவர்.

சரோஜா தேவியை தன் கன்னடப் படத்துக்கு நாயகியாக்கி விட முடிவு செய்தார். நேரிலும் அவரை சந்தித்து தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். அத்துடன் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் என்றும் திடமாக நம்பினார். அதனால், சென்னை வந்தால் நிறையப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். கே.சுப்பிரமணியம் மீதும் அவருடைய பேச்சின் மீதும் நம்பிக்கை இருந்ததால், சரோஜாதேவியின் தாயார் தன் மகளை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். ‘கச்ச தேவயானி’ கன்னடப் பதிப்பு படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.  

இந்த வேளையில் மூன்றாவது தமிழ்ப்பட வாய்ப்பு சரோஜாதேவிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் காத்திருந்தது. ஆம், நல்வாய்ப்பு என்பது எந்த இடத்திலும் எவர் ரூபத்திலும் வரும் என்பதற்கு இச்சம்பவமே சாட்சி. சின்ன அண்ணாமலை பல்துறை வித்தகர். திரைப்படக் கதாசிரியர், பட
அதிபர், அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. அவர் கடற்கரையில் காற்று வாங்க வந்தவர், அங்கு எதிர்பாராத விதமாக நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தைச் சந்திக்கிறார்.

அவருடன் மற்றொரு இளம் பெண்ணும் இருக்கிறார். அந்தப் பெண்ணின் துறுதுறுப்பான முகமும் அலைபாயும் கண்களும் சின்ன அண்ணாமலையை ஈர்த்தன. அந்தப் பெண் யாரென்று வினவ, ‘அப்பா, எடுக்கும் கன்னடப் படத்தில் இந்தப் பொண்ணு நடிக்கறா, தமிழ்ப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சாலும் நடிப்பா; நீங்க அடுத்து எடுக்கப்போற படத்துல ஏதாவது வாய்ப்புக் குடுங்க’ என்று பத்மாவிடமிருந்து பதில் வருகிறது. அதை மனதுக்குள் இருத்திக்கொண்ட சின்ன அண்ணாமலை, பத்மாவின் தந்தையும் இயக்குநருமான கே.சுப்பிரமணியத்தைத் தொடர்புகொண்டு அந்தப் பெண் பற்றி மேலும் விசாரித்துத் தகவல் அறிகிறார். வாய்ப்புக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையும் அவருக்குள் எழுகிறது.   

அதைத் தொடர்ந்து சின்ன அண்ணாமலையின் அழுத்தமான சிபாரிசு மூலம், ‘பி.ஆர்.பந்துலு தயாரித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனத்துடன் வசனமும் பேசக்கூடிய ஒரு சிறு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அழகு, இளமை இரண்டுக்கும் தேவதைகளான மோகினிகள் இருவர், அழகு பெரிதா, இளமை பெரிதா என ஆடிப் பாடுவதாக அப்பாடல் காட்சி அமைந்தது.

‘அழகினிலே… யௌவனமே’ என்ற அந்தப் பாடலும் பிரபலமானது. சரோஜாதேவிக்கு அது சிறு வேடம்தான் என்றாலும், படத்தின் நாயகனான சிவாஜிக்கும், படத்தின் கதையிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமைந்தது. தாய், தந்தை இருவரும் சுயரூபம் பெற வேண்டி தன் இளமையையும் அழகையும் அந்த தேவதைகளுக்கு தானம் அளிப்பதாகக் கதை நீண்டு செல்லும்.

 கட்டுடல் கொண்ட இளைஞன் கஜேந்திரன், அழகையும் இளமையையும் பறி கொடுத்து வயோதிகனாக, உடல் தளர்ந்து தடுமாறும் நிலை. சிவாஜியும் மிக அற்புதமாக அந்த வேடத்தைச் செய்தார். சரோஜாதேவிக்கும் இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு சின்ன அண்ணாமலை மூலம் அவருக்குக் கிடைத்தது. இதே படம் கன்னடத்திலும் ‘ரத்னகிரி ரஹஸ்யா’ என்ற பெயரில் வெளியானது. அதிலும் சரோஜாதேவியே இந்த வேடத்தைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடனமாடும் வாய்ப்பு மூலம் அவருக்கு 250 ரூபாய் ஊதியம் பெற்றுத் தந்தது.

விஜயா - வாஹினி படப்பிடிப்புத் தளத்தில் ‘கச்ச தேவயானி’ படப்பிடிப்பு தொடங்கியது. உணவு இடைவேளையில் பக்கத்து செட்டில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தவர், இயக்குநர் சுப்பிரமணியத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அங்கு அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சரோஜா தேவியைப் பார்த்துக்கொண்டே போனார்.

கே.சுப்பிரமணியத்திடம் அந்தப் புதுமுக நடிகை பற்றி விசாரித்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்புவதற்கு முன்பாக சரோஜாவிடம் நெருங்கி வந்து, ‘நல்லா இருக்கியாம்மா?’ என்று கன்னடத்தில் குசலம் விசாரித்து விட்டுப் போனார். அவர் வந்தபோது செட்டில் ஒரு புது வெளிச்சம் பரவுவதை நாயகி உணர்ந்தார்.

அங்கிருந்த அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தியதைப் பார்த்துக் கொண்டிருந்த புதுமுகம் சரோஜா, இயக்குநரிடம் ‘அவர் யார் சார்?’ என்று விசாரித்தார். இயக்குநர் சொன்ன பதில் புதுமுக நடிகையைத் தூக்கி வாரிப் போட வைத்தது. ஆம், அங்கு வந்து நடிகையிடம் குசலம் விசாரித்து விட்டுச் சென்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்போது அவருடைய ‘நாடோடி மன்னன்’ படத்தின் படப்பிடிப்புதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1957 தொடங்கி 67 வரை சரோஜா தேவியின் சாம்ராஜ்யம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சுவதற்கு அடித்தளம் இட்டவர் எம்.ஜி.ஆர். என்பது அந்தக் கணத்தில் சரோஜாதேவி மட்டுமல்ல, யாருமே எதிர்பார்க்காத ஒரு ஆச்சர்யகரமான திடீர் திருப்பம். அதன் பின் தமிழில் அவருக்குக் கிடைத்த வாய்ப்பு சரோஜாதேவியின் திரையுலக வாழ்க்கையையே முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அவரைப் புகழேணியில் ஏற்றி வைத்ததுடன் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அடுத்த இதழிலும் அபிநய சரஸ்வதி தொடர்வார்.

சரோஜாதேவி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

திருமணம், தங்கமலை ரகசியம், பூலோக ரம்பை, மனமுள்ள மறுதாரம், நாடோடி மன்னன், சபாஷ் மீனா, செங்கோட்டை சிங்கம், தேடி வந்த செல்வம், இல்லறமே நல்லறம், பாகப்பிரிவினை, கல்யாண பரிசு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஓடி விளையாடு பாப்பா, பிரெசிடெண்ட் பஞ்சாட்சரம், வாழ வைத்த தெய்வம், எல்லோரும் இந்நாட்டு மன்னர், யானைப்பாகன், இரும்புத்திரை, கைராசி, பார்த்திபன் கனவு, விடிவெள்ளி, மணப்பந்தல், பாலும் பழமும், பனித்திரை, திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத்தலைவன், ஆடிப்பெருக்கு, வளர்பிறை, பாசம், பார்த்தால் பசி தீரும், மாடப்புறா, ஆலயமணி, தாயைக் காத்த தனயன், இருவர் உள்ளம், பெரிய இடத்துப் பெண், குலமகள் ராதை, பணத்தோட்டம், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், கல்யாணியின் கணவன், வாழ்க்கை வாழ்வதற்கே, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில், படகோட்டி, தெய்வத்தாய், பாசமும் நேசமும், புதிய பறவை, என் கடமை, ஆசை முகம், எங்க வீட்டுப் பிள்ளை, கலங்கரை விளக்கம், தாயும் மகளும், நான் ஆணையிட்டால், நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை, அன்பே வா, பெற்றால்தான் பிள்ளையா, பெண் என்றால் பெண், அரச கட்டளை, பணமா பாசமா, என் தம்பி, தாமரை நெஞ்சம், அன்பளிப்பு, தங்க மலர், அஞ்சல் பெட்டி 520, ஐந்து லட்சம், குலவிளக்கு, ஓடும் நதி, மாலதி, கண்மலர், சிநேகிதி, உயிர், தேனும் பாலும், அருணோதயம், சக்தி லீலை, பத்து மாத பந்தம், சாமுண்டீஸ்வரி மகிமை, எல்லையம்மன், பூவுக்குள் பூகம்பம், ஒரே தாய் ஒரே குலம், தாய் மேல் ஆணை, தர்ம தேவன், பொன் மனச் செல்வன், பாரம்பரியம், ஒன்ஸ்மோர், ஆதவன்.




கண்டிப்பு நிறைந்த கன்னடக் குடும்பத்தில், கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றிய ‘பைரப்பா’வின் மகளாகப் பிறந்தவர் சரோஜாதேவி.

தமிழ்த் திரையுலகில் ஒரு நடனப் பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கியவர்… சினிமா பாஷையில் சொன்னால் குருப் டான்ஸர்…பரதக்கலையில் மேன்மை, வாய்ப்பாட்டில் புகழ், மேடை நாடக அனுபவம் போன்றக் கூடுதல் முகவரிகள் ஏதும் சரோவுக்குக் கிடையாது.

ஆனாலும் சரோ என்றழைக்கப்பட்ட இந்த செல்லுலாயிட் தேவியின் கதையைச் சொல்லச் சொல்ல இனிக்கும். அத்தனையும் சுவாரஸ்யமான, வியப்பூட்டும் சம்பவங்கள்.எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் என்று மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத் தாரகை! பொற்காலத் தமிழ் சினிமாவின் வசூல் மகாத்மியம்!



மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். படங்களிலும், சரோவின் ஸ்டில் இல்லாவிடின் விநியோகஸ்தர்கள் படப்பெட்டியைத் தூக்க மறுத்துப் பின் வாங்கினார்கள். பொன்மனச் செம்மல் சரோவுக்குக் கொடுத்த நட்சத்திர அந்தஸ்தின் அகல நீளம், மற்ற நாயகிகளுக்கு மலைப்பை உண்டாக்கியது.

இப்படி சாதனைப் படைத்த அபிநய சரஸ்வதியின் மழலை அத்தியாயத்தை சரோவே நெகிழ்ச்சியுடன் சொல்லக் கேட்போமா?.
எங்கள் குடும்பத்தில் நான்காவது மகளாக வேண்டா வெறுப்பாக வரவேற்கப்பட்டவள் நான். முதல் மூன்று பேரும் பெண்ணாகப் பிறந்ததால், அடுத்துப் பெறுவது மகனாக இருக்க வேண்டும் என்று என் தாய் வேண்டாத தெய்வம் கிடையாது.பாட்டனார் பேரன் பிறக்க வேண்டிப் பல கோயில்களுக்கும் யாத்திரை போய் வந்தார்.



நான் சிசுவாக பூமியில் ஜனித்ததும்,யாருக்கு வேண்டும் இந்த சனியன்…! என்று அம்மாவிடம் முணுமுணுக்கத் தொடங்கினார். தவழும் நேரத்தில் பிஞ்சு தேகத்தில் முடக்கு வாதம். தொட்டிலே கதி என்றானது. மீண்டும் அன்னை கண்ணீருடன் மன்றாடினார்.என் கை கால்கள் விளங்கக் கடும் விரதங்கள் அனுஷ்டித்தார்.நீ ஏன் இப்படி ஒழுங்காகச் சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறாய்? இது எதற்கு நமக்கு? செத்தால் சாகட்டுமே. என்ன வேண்டுதல் கிடக்கு. இவன் பையன் ஒன்றுமில்லையே… போனால் போகட்டுமே… ’ என்றெல்லாம் என்னைத் திட்டித் தீர்த்தாராம் பாட்டனார். இப்போது ‘என் செல்லக்கண்ணு’ என்று தட்டிக்கொடுக்கிறார்.அது மட்டுமா ? நான் ஊருக்குப் போய் பணம் தரும் போதெல்லாம்,‘நீ நூறு வயசு இருக்கணும்’ என்று வாழ்த்துவார்.

அம்மா, தனது மனத்திருப்திக்காக ஆண் குழந்தை போல் கிராப் வெட்டி விட்டு, கால்சட்டை- கோட் போட்டு என்னைச் சிங்காரித்து அழகு பார்ப்பார்.பீனாராய் நடித்த அனார்கலி இந்தி சினிமா பெங்களூரு வந்தது. அப்போது நான் பள்ளி மாணவி. எந்நேரமும் அனார்கலி படப் பாடல்கள் என் உதடுகளில் ஒலித்தன.அப்பாவின் அலுவலகத்தில் விழா நடக்க இருந்தது. அதில் எனது சங்கீதக் கச்சேரி நிச்சயம் உண்டு என்றார்.‘என்னப்பா இது வேடிக்கை! ’விளையாட்டு இல்லையம்மா. நிச்சயம் நடக்கப் போகிறது! ’தந்தை உற்சாகமாகச் சொன்னதும், பதற்றம் தொற்றிக் கொண்டது.காவலர் விழா. மேடை ஏறியதும் நடுங்கியது.

முதலில் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினேன். ஆ… ஆ… என்று எங்கோ இழுத்துக் கொண்டு போய் விட்டது. எப்படியோ சமாளித்தேன். அடுத்தடுத்து நான் பாடிய பாட்டுக்கெல்லாம் ஒரே அப்ளாஸ்! ’ சரோஜாதேவி. சரோவுக்கான மற்றொரு சங்கீத சபை விரைவில் கூடியது. விளைவு கன்னடக் கலை உலகில் சரோஜா தேவியின் கால்கோள் விழா!பெங்களூர் மேயோ ஹால். பருவத்தின் பந்தலில் இளமையின் ஜன்னல்கள் தெரிந்தன. வீதிகளில் போகிற வாலிபர்களை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தன.நாற்பதுகளையும்’ சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி, உள்ளே எட்டிப் பார்க்கத் தூண்டியது. ஆடிட்டோரியம் முழுவதும் குமரிகளின் கூடாரமாகி மீசைகளுக்குக் குதூகலமூட்டியது.

அனைத்துப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பாட்டுப் போட்டி. நிகழ்ச்சிக்குத் தலைமை ஹொன்னப்ப பாகவதர். பிரபல கன்னட சினிமா கதாநாயகர் – தயாரிப்பாளர். எம்.கே.தியாகராஜ பாகவதர் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றார். அவர் நடித்திருக்க வேண்டிய ஜூபிடரின் ‘வால்மீகி’ ‘ஸ்ரீமுருகன்’, பர்மாராணி’ உள்ளிட்டத் தமிழ்ப் படங்களில் ஹொன்னப்ப பாகவதர் ஹீரோ இரு கருநாகங்களைத் தோள்களில் இறக்கிய இரட்டை ஜடை. வட்டமிடும் கருவண்டுக் கண்கள். பார்த்த மாத்திரத்தில் மனத்தில் பசுமையூட்டிப் பற்றிக் கொள்ளும் ஆசை முகம்.
துறு துறுவென்றுத் துள்ளியவாறு அவையில் ஏறி, ஏ ஜிந்தகி கே’ என்ற பிரபல இந்தித் திரை கானத்தைப் பாடினார். புனித தெரசா கல்விக் கூடத்தின் மாணவி சரோஜாதேவி. பாகவதருக்கு சரோவின் சாரீரம் பிடித்து விட்டது.

‘உங்க பொண்ணு பாடினது நல்லா இருந்தது. என் படத்துல பாட வைக்கலாம்னு பார்க்குறேன். எதுக்கும் ஒரு வாய்ஸ் டெஸ்ட் எடுத்துடலாம். என்ன சொல்றீங்க? ’ சந்தோஷத்தின் சந்தன மழையில் நனைந்தது சரோவைப் பெற்ற வயிறு! சினிமாவில் பாடக் கூப்பிடுகிறார்கள்…! உடனடியாக ரெகார்டிங் தியேட்டருக்கும் அழைக்கிறார்கள்… ’ எத்தனையோ பேர் ஸ்டுடியோ ஸ்டுடியோவாக அலைந்தும் கிடைக்காத சந்தர்ப்பம். ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சரோவையே உற்று கவனித்த பாகவதர், திடீரென்று மாற்றி யோசித்தார்.அனுமந்தப்பா… சாங் ரிகர்ஸல் முடிஞ்சதும், இந்த பொண்ணுக்கு ஒரு மேக் அப் டெஸ்டும் செஞ்சி எங்கிட்டக் கூட்டிட்டு வா. ’

அப்புறமென்ன?

டெய்லி மேக் அப்- போட்டு ரசிகர்களின் உள்ளங்களையும், ஏகப்பட தயாரிப்பளர்களின் பையையும் நிரப்பி வந்தார் 



சிவாஜியின் ‘பாகப்பிரிவினை’ திரைப்படம் ரிலீசான நாள். இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.
சிவாஜி நடித்த எத்தனையோ படங்கள் நம் மனதில் இன்றைக்கும் இடம்பிடித்திருக்கின்றன. இதில் சிவாஜி, இயக்குநர் ஏ.பீம்சிங் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் தனி ரகம். இதில் ‘பா’ வரிசைப் படங்கள் என்பது மிகப் பிரபலம்.
‘பாசமலர்’, ‘பாலும்பழமும்’, ‘பார்த்தால் பசி தீரும்’ என பல படங்களை இன்றைக்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த வகையில், சிவாஜி, ஏ.பீம்சிங் கூட்டணியில் மிகப் பெரிய வெற்றியைத் தந்த படம் ‘பாகப்பிரிவினை’.
அந்த வருடத்தில், ‘அவள் யார்?’ என்றொரு படத்தில் நடித்தார் சிவாஜி. பத்மினியுடன் ‘தங்கப்பதுமை’ என்ற படத்தில் நடித்தார். படமும் பாடல்களும் பற்றிக் கொண்டது. ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். அதையடுத்து, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், வண்ணப்படமாக வந்தது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. இந்தப் படத்தின் வெற்றியை சாதாரணமாகச் சொல்லமுடியாது.
இதே வருடத்தில், ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.பீம்சிங் இயக்கத்தில், சிவாஜிகணேசனின் நடிப்பில் உருவானது ‘பாகப்பிரிவினை’.
சிவாஜிகணேசன், சரோஜாதேவி, பாலையா, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார் உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களில் இந்தப் படமும் இன்றுவரை இடம்பெற்றிருப்பதுதான், கதையின் மிகப்பெரிய வலிமை.
சிறுவயதில், மின்சாரம் பாய்ந்து, கைகால்கள் ஊனமாகிவிடும் சிறுவன் கன்னையாவிற்கு. பெரியப்பா, அப்பா என கூட்டுக்குடும்பம். ஆனால், பெரியம்மா பாகுபாடு பார்ப்பார். பட்டணம் போய் படித்துவிட்ட தம்பி நம்பியார், பெரியப்பாவின் சொந்தக்கார எம்.ஆ.ராதா என அடுத்தகட்டம்தான் வாழ்க்கைப் பாடம். படத்தில் எம்.ஆர்.ராதாவின் நக்கல் பேச்சுகளும் நையாண்டிக் குறும்புகளும் செம. அதேபோல், சிவாஜி இவரை ‘சிங்கப்பூரான்’ என்று அழைக்கும் இடங்களிலெல்லாம் அப்ளாஸ் அள்ளியது.



இந்தப் படத்தின் வெற்றியில் சரோஜாதேவிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. 1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்த ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ பிரமாண்ட வெற்றியை அடைந்திருந்தது. செப்டம்பர் மாதத்திலும் ஹவுஸ்புல். அக்டோபர் மாதமும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அக்டோபர் மாதம் 31ம் தேதி ‘பாகப்பிரிவினை’ திரைப்படம் வெளியானது. சரோஜாதேவி நடித்த படம் என்று கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். அதேபோல், சரோஜாதேவிக்கு இந்தப் படம் இன்னும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.
இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தார்கள். அற்புதமான இசையையும் பாடல்களையும் வழங்கியிருந்தார்கள். எம்.எஸ்.சோலைமலை கதை, வசனத்தை எழுதியிருந்தார். இயல்பான கதை, அழுத்தமான, பாந்தமான வசனங்கள்.
படத்துக்கு பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் மருதகாசியும் பாடல்களை எழுதியிருந்தார்கள். அப்போது அந்த சமயத்தில் சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் மனஸ்தாபம் என்பார்கள். சிவாஜி படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதவில்லை என்று சொல்லுவார்கள். அந்த சமயத்தில் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், இயக்குநர் பீம்சிங்கிடம், ‘கதையில் இந்த இடத்தில் வருகிற பாடலை கவிஞரைத் தவிர (கண்ணதாசன்) யாருமே எழுதமுடியாது’ என்று சொல்ல... ஒருவழியாக, சமரசமானார்கள் சிவாஜியும் கண்ணதாசனும். அப்படி பட்டுகோட்டை கல்யாணசுந்தரமே கண்ணதாசன் எழுதினாத்தான் சரியாக இருக்கும் என்று சொன்ன அந்தப் பாட்டு... ‘ஏன் பிறந்தாய் மகனே...’ பாட்டு!
இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டு. ‘பிள்ளையாரு கோயிலுக்கு’ என்றொரு பாடல். ‘தேரோடும் எங்க சீரான மதுரையில’ என்றொரு பாடல். ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து...’ என்றொரு பாடல், ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே...’, என்றொரு பாடல். ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்’ என்ற பாடல். ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ...’ என்ற பாடல் என அனைத்துமே நம் மனதில் இன்றைக்கும் உறவாடிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் போட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ்புல். சென்னையில் சித்ரா, கிரெளன், சயானி என மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மூன்றிலும் அரங்கு நிறைந்த காட்சிகள். தமிழகத்தில், மதுரை சிந்தாமணி உள்ளிட்ட பல ஊர்களிலும் 200 நாட்களைக் கடந்து ஓடி, பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்தது ‘பாகப்பிரிவினை’
1959ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியானது ‘பாகப்பிரிவினை’. படம் வெளியாகி, இன்றுடன் 60 ஆண்டுகளாகிறது. இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்களுக்கும் ‘பாகப்பிரிவினை’ படத்துக்குமான பந்தத்தைப் பிரிக்கவே முடியாது.






.ஜனவரி 7. சரோவின் பிறந்த நாள்! அன்றைய கோலிவுட்டின் கோலாகலத் திருவிழா! சரோ வசித்த அடையாறு காந்தி நகர் வீட்டில் கேளிக்கையும் கும்மாளமும் அமர்க்களப்படும் என்று நினைத்தால் அது தவறு.

Advertisement

Powered By PLAYSTREAM
பிறந்த தினத்தில் ஆண்டு தோறும் ‘சத்திய நாராயண பூஜை’ செய்வது சரோவின் வழக்கம். சத்தியநாராயண ஸ்வாமிக்கும் சரோ பிறப்புக்கும் என்ன சம்பந்தம்?

அதற்கானத் தொடர்பை சரோ தெளிவுப்படுத்தியுள்ளார்.

‘ நிறைமாத கர்ப்பிணி அம்மா. அன்று பயங்கர வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்பா வழக்கம் போல் அலுவலகத்தில். பாட்டனாரைத் தவிர, பெரியவர்கள் வேறு யாரும் உதவிக்குக் கிடையாது.

தாய் துடிதுடிப்பதைப் பார்த்துச் சிறுமிகளான சகோதரிகள் பயத்தில் அழுதனர். தாத்தா பேத்திகளை சமாதானம் செய்வாரா... அம்மாவைக் கவனிப்பாரா...?

பக்கத்து வீட்டில் அன்றைக்கு சத்திய நாராயண விரதம்.

ஆராதனையெல்லாம் முடிந்ததும் ஸ்வாமிக்குப் படைத்த நைவேத்யத்தை அம்மாவிடம் கொடுத்து,

‘கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இந்தப் பிரசாதத்தை முதலில் சாப்பிடு ருத்ரம்மா. சத்திய நாராயணன் அருளால் உன் வலி படிப்படியாகக் குறையும். சுகப்பிரசவம் ஆகும்’ என்று ஆறுதல்படுத்தினார்கள்.

அவர்கள் சொன்னது பலித்தது. கொஞ்ச நேரத்தில் வலி மாயமாகி விட்டது. அம்மாவுக்கும் சத்திய நாராயண ஸ்வாமி மீது அபார பக்தி உண்டானது. அதற்கு மறு நாள் நான் பிறந்தேன். அதனாலேயே ஆண்டு தோறும் என் பிறந்த நாளில் சத்திய நாராயண பூஜை கொண்டாடப்படுகிறது. ’- சரோஜாதேவி.



எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா மூவரும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.

சரோவின் இல்லத்துக்குள் நுழையும் போதே,

‘அம்மா... சரோஜா... ’ என்று வாயாரத் தன் ஸ்டைலில் கூப்பிடுவார் எம்.ஆர். ராதா. அடுத்த நொடிகளில் அவர் பாதங்களில் விழுந்து ஆசி பெறுவது சரோவின் அனிச்சையான செயல்.

தன் வீட்டு விசேஷம் போல் சரோ பிறந்த வைபவத்தில்,

‘வாப்பா... ராமச்சந்திரா...! ’ என்று எம்.ஜி.ஆரையும் எதிர் கொண்டு அழைப்பார் நடிகவேள்.

சரோஜாவின் தாயார் ருத்ரம்மாவிடம்,

‘உம் பொண்ணை நல்லா வளர்த்து வெச்சிருக்கே. உடம்பு நிறைய துணி போட்டு வர்ற நடிகை யாருன்னா... அது நம்ம சரோஜாதான்! என்னா அழகு! ரொம்ப சந்தோஷமா இருக்கு.! ’ என்பார்.

எம்.ஆர்.ராதா உளமாற வாழ்த்துகையில் ருத்ரம்மாவின் பெற்ற வயிறு மண் பானைத் தண்ணீராக ஜில்லிட்டுப் போகும்!

தன் மகன்களிடம் ராதா சொன்னது-

‘அடேய், எல்லா நடிகைங்க போட்டோவையும் மறைச்சு மறைச்சு வெச்சுப் பார்க்காதீங்கடா...! சரோஜாதேவி போட்டோவை மட்டும் வெச்சுக்கோங்க. சரோ நல்ல பொண்ணு! ’

தனக்கான ஹீரோவை சிபாரிசு செய்யும் பொறுப்பும் சரோவை நாடி வந்தது.

‘1960ல் முக்தா பிலிம்ஸை ஆரம்பித்தேன். முதன் முதலில் ‘பனித்திரை’ படத்தைத் தயாரித்து நான் டைரக்ட் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அது முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்ட். சரோஜாதேவி நாயகி என்று முடிவானது.

தொடக்கத்தில் சிவாஜி கணேசன் நடிக்க ஒப்புக்கொண்டார். பிஸியான ஷெட்யூலால் அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.

வேறு சில பிரபல ஹீரோக்களும் முதலில் சம்மதித்து, சரோஜாவுக்கு மட்டுமே ஸ்கோப் உள்ள கதை என்பதால் பின்பு மறுத்து விட்டனர்.

சரோஜாதேவி, நடந்தவற்றை ஜெமினி கணேசனிடம் எடுத்துச் சொல்லி, அவரை நடிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். முக்தா பிலிம்ஸில் தொடர்ந்து மூன்று படங்களில் ஜெமினி நாயகனாக நடிக்க, சரோஜாதேவியே முதல் காரணம். ’ - முக்தா சீனிவாசன்.

ஸ்டுடியோ முதலாளிகள் போட்டி போட்டுக் கொண்டு சரோவுக்கு வழங்கிய சலுகைகளும் ஊதியமும் உச்ச நட்சத்திரங்களின் புருவத்தை உயர்த்தின.

‘நான் விதியின் குழந்தை. பிறந்தது மாட்டுத் தொழுவத்தில். வயலும் தோட்டமுமே என் உலகம். வெங்காயம், உருளைக் கிழங்கு ஏற்றுமதியில் ஈடுபட்டேன். நான் முதலில் கட்டடம் கட்டும் போது கோடம்பாக்கத்தில் சாலைகள் கூட இல்லை. ’ எங்க வீட்டுப் பிள்ளையைத் தயாரித்த நாகிரெட்டியின் உழைப்பாளி வாழ்வின் முதல் அத்தியாயத்தின் தொடக்க வரிகள் அவை.

என்.டி. ராமாராவ் - ஜமுனா நடித்த ராமூடு பீமுடு தெலுங்கு கறுப்பு வெள்ளைப் படத்தின் தமிழ் வடிவம் எங்க வீட்டுப் பிள்ளை. நாகிரெட்டியின் தயாரிப்பு.

சாவித்ரியை ஆஸ்தான நாயகியாகக் கொண்டு, தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து வசூலைக் குவித்த படங்களை வழங்கியவர் நாகிரெட்டி. ‘மனிதன் மாறவில்லை’ படத்துக்குப் பிறகு நாகிரெட்டியும் சரோவுக்கு மாறினார்.

தெலுங்கில் என்.டி.ராமாராவ்- சரோ ஜோடியாக நடிக்க, ஜெகதலபிரதாபன் வெற்றிச் சித்திரத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. தமிழிலும் அது டப் செய்யப்பட்டு 1963 தீபாவளிக்கு ரிலிசானது.

‘நாகிரெட்டியின் விஜயா- வாஹினி நிறுவனம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் எடுக்கும் போது நான் ரொம்பவே பிஸியா இருந்தேன். ஆனாலும் அவங்க என்னை வற்புறுத்தினாங்க.

ஒரு நாள் அதிகாலை. நாங்கள் கண் விழித்து எழுந்து வெளியில் வந்த போது வீட்டு வாசலில், ஒரு ஹெரால்டு கார் நின்று கொண்டிருந்தது. காரில் தெரிந்த தயாரிப்பாளர் நாகிரெட்டியைப் பார்த்ததும், எனது அம்மா கடும் அதிர்ச்சி அடைந்து,

‘நீங்கள் இப்படிச் செய்யலாமா...வந்த உடனேயே காலிங் பெல்லை அடித்து இருக்கலாமே...? ’ என்றார் தவிப்புடன்.

பொழுது விடிவதற்குள் சென்றால் மட்டுமே, ஹீரோ -ஹீரோயின்களை வீட்டில் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் மற்ற கம்பெனிளிகளின் படப்பிடிப்பில் சந்திக்க நேரும். அது வேலைக்கு ஆகாது. அதனால் நாகிரெட்டி விடியலுக்கு முன்னரே வந்து காத்திருந்தார்.



‘நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பீர்கள். உங்களைத் தொல்லைப் படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடிக்க சரோஜாவை ஒப்பந்தம் செய்ய வந்திருக்கிறேன்.எவ்வளவு சம்பளம் வேணும்னாலும் தர்றோம். நீ தாம்மா நடிக்கணும்னு மனப்பூர்வமா சொன்னார். அவர் கேட்டுக் கொண்டவாறே குறுகிய காலத்தில் நடித்துக் கொடுத்தேன். ’ சரோஜாதேவி.

நாகிரெட்டியின் கணிப்பு மிகச் சரியே என நிருபித்தது 

‘1965 பொங்கலுக்கு வெளியாகி, சரோவுக்கு ராசியான ஏழாம் எண்ணில் வரும் ஜூலை மாதத்தில், ஏழாம் தேதி ( ஜூலை -7) அன்று தமிழ் நாட்டில் ஏழு தியேட்டர்களில், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம்! ’ என்கிற அழியாப் பெருமையைப் பெற்றது எங்க வீட்டுப் பிள்ளை!

சென்னையில் காசினோ, பிராட்வே, மேகலா என்று மூன்று தியேட்டர்களிலும், மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை என நான்கு நகரங்களிலும் ஆக மொத்தம் ஏழு இடங்களில் ஆறு மாதங்களைக் கடந்து பரபரப்பாக ஓடியது.

1977 ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பதவியேற்ற காலம் வரையில், சிவாஜி கணேசனாலும் முறியடிக்க முடியாத சாதனைச் சரித்திரம் படைத்தது!

எங்க வீட்டுப் பிள்ளை கொண்டாட்டத்தில் சரோவைப் பார்க்க முண்டியடித்தனர் ரசிகர்கள். தள்ளுமுள்ளு நடந்ததில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

எங்க வீட்டுப் பிள்ளை குறித்த பிரமிப்பு பாமரர்களுக்கு மட்டுமல்ல. சரோவுக்குள்ளும் என்றும் நிரந்தரம்.

‘எங்க வீட்டுப் பிள்ளை படத்தை ரொம்பவே பிரம்மாண்டமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். விஜயா ஸ்டுடியோவின் எட்டாவது ஃப்ளோரில் ஷாப்பிங் சென்டர் அமைக்க அப்போதே எட்டு லட்சம் செலவு ஆனதாம்.

நான் காரில் கடை வீதிக்கு வருவேன். இறங்கி சாலையில் நடக்கும் போது என் ஹேண்ட் பேக் கை ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஓடுவான்.

நான் திருடன் திருடன் எனக் கத்த எம்.ஜி.ஆர். ஓடி வந்து உதவுவார்.

படப்பிடிப்புக்காக போடப்பட்ட அரங்கில் ஒரு நாள் இரவு திடீரென தீ பிடித்துக் கொண்டது.

உடனே நாகிரெட்டி அய்யாவுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. அய்யாவோ கொஞ்சம் கூடப் பதற்றம் அடையாமல்,

‘என் தொழிலாளர்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்களே முன் நின்று கவனித்து நெருப்பை அணைத்து விடுவார்கள்’ என்றாராம்.

அய்யாவின் வார்த்தைக்கு எத்தனை வலு என்பதை நேரில் பார்த்த போது புரிந்தது.

ஃப்ளோரின் உச்சியில் சக தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காக்கி யூனிபார்மில் தகிக்கும் அனலுக்கிடையே நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தவர் யார் தெரியுமா...?

நாகிரெட்டியின் மகன் வேணு!

அதற்குள் விஷயம் தெரிந்து ராமாவரம் தோட்டத்தில் இருந்து சின்னவர் கூட வந்திருந்தார்.

வசதி வாய்ப்பிருந்தும் தன்னைத் தானே எளிமைப் படுத்திக் கொண்ட முதலாளிகளால் அன்றைய திரை உலகம் ஆரோக்கியமாக இருந்தது.- சரோஜா தேவி.

‘வேட்டைக்காரன்’ விவகாரத்தில் விளைந்த கருத்து வேறுபாடு பனித்துளி போல் கரைந்தது. தேவர் - சரோ இடையேயான தோழமை எப்போதும் போல் நீடித்தது.



‘எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் பார்த்து விட்டு சரோஜாவைப் புகழ்ந்து பேச நினைத்தேன்.

‘பாவாடை தாவணி போட்டுக் கொள்ளாமல், புடைவை கட்டிக் கொண்டு நடிக்கும் பொழுதுதான் அழகாக இருக்கிறீர்கள். இப்படியே நடிக்கவும்’ என்று சரோஜாவைப் பாராட்ட எண்ணி, அரை குறை ஆங்கிலத்தில் நான் அவரிடம்,

‘ரிமூவ் தி பாவாடை. டேக் தி புடைவை. ஐ லைக் யூ வெரி மச்! ’ என்று சொல்லி விட்டேன்.

நான் அப்படிச் சொன்னதும் சரோஜாதேவி வெட்கப்பட்டுக் கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்து போய் விட்டார்.

அருகில் இருந்தவர் நான் பேசியதில் தொனித்தத் தவறான அர்த்தத்தை, எடுத்துக்கூறி விளக்கியதும் மிகவும் வருந்தினேன். அன்றிலிருந்து சரோஜாவிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.’ -சாண்டோ சின்னப்பா தேவர். பட்சிராஜா ஸ்டுடியோ உரிமையாளர் ஸ்ரீராமுலு நாயுடு தனது ‘கல்யாணியின் கணவன்’ பட டைட்டிலில் ‘அபிமான நட்சத்திரம் சரோஜாதேவி! ’ என்று சில நிமிடங்களுக்குத் தனித்துக் காட்டினார்.

கல்யாணியின் கணவன் சினிமாவில் ஒலித்த டூயட் ‘எனது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்’ அதில் சரோவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை அழகாக உணர்த்தியிருப்பார் கண்ணதாசன்.

‘சிவாஜி கணேசன் - சரோஜாதேவி ஆரம்ப சீன்களில் சரோவின் சேட்டைகள் திருப்திகரத்துக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன.

சரோஜாதேவி சிவாஜியை எம்.ஜி.ஆராகவே பாவித்து, நம் கவலைகளை மறக்க அடிக்கிறார்...! ’என்று குமுதம் விமர்சனம் திரையில் சரோவின் சரஸங்களைக் கொண்டாடி மகிழ்ந்து மலர் மகுடம் சூட்டியது.

அன்பே வா. சரோவின் வாழ்க்கையில் மறக்க முடியாத வண்ணச்சித்திரம். ஏவி.எம்., சிவாஜி பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், நாகிரெட்டியின் விஜயா நிறுவனம், டி.ஆர். ராமண்ணாவின் ஆர்.ஆர். பிக்சர்ஸ் என ஏகப்பட்ட சினிமா கம்பெனிகள் தயாரித்த முதல் கலர் படத்தில் சரோவே கதாநாயகி!

சரோவைத் தவிர வேறு எவரையும் தங்களின் ராசியான ஸ்டாராக நினைத்துப் பார்த்தது இல்லை அன்றைய எஜமானர்கள்.

ஊட்டியில் அன்பே வா அவுட்டோர் ஷுட்டிங். அங்கு நடந்த நிகழ்வு சரோவைப் பட அதிபர்கள் ஏன் கொண்டாடினார்கள் என்பதை விளக்கும்.

பேசும் படம் ஆசிரியர் பதிவு செய்துள்ள சம்பவத்திலிருந்து-

‘ஊட்டிக்கு நானும் ஏவி.எம். குமரனும் போய்ச் சேர்ந்த மறுநாள், எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வந்தார்கள்.

சரோஜாதேவி, ‘ஊட்டியிலே தாசப்பிரகாஷ் ஓட்டல் என்னுடைய பர்மனெண்ட் வீடு மாதிரி ஆயிடுச்சி. வருஷா வருஷம் ஏதாவது ஒரு ஷூட்டிங்குக்கு இங்கே வந்து விடுவேன். என்னைப் பொறுத்த வரையில் இந்தக் குளிர் எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. ’ என்று சொன்னார்.

அதற்கேற்ப அவர் பிரதி தினமும் மாலை சுமார் ஆறு மணிக்கு நடனப் பெண்கள் படை சூழ, கீழே உள்ள கோயிலுக்கு நடந்தே போய் பூஜை செய்து விட்டு வருவார்.

ஒருநாள் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருடன், நான், ஏவி.எம். குமரன், ஏவி.எம். சரவணன் ஆகியோர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம்.தேங்காய் பழத்தட்டு, சாமி பிரசாதத்துடன் எங்கள் அறைக்குள் நுழைந்தார் சரோஜாதேவி. புரட்சி நடிகர், சரோஜாதேவியைப் பார்த்து, ‘தினமும் கோயிலுக்குப் போய் என்ன வேண்டிப்பீங்க...? ’ என்று கேட்டார்.‘நல்லா வெயிலடிக்கணும். தெனமும் ஷூட்டிங் ஒழுங்கா நடக்கணும். சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு நாங்களெல்லாம் பத்திரமா திரும்ப ஊருக்குப் போக அருள் புரியணும்!’னு கடவுள் கிட்டே பிரார்த்தனை செஞ்சிட்டு வரேன்’ என்றார் சரோஜாதேவி. ’

சரோவின் வெற்றிக்கான ரகசியம் தொழில் பக்தியும்- கடுமையான உழைப்பும் தவிர வேறில்லை.சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்ய அனைத்து பிரபல ஸ்டுடியோ அதிபர்களும் முண்டியடித்தனர். ஏனோ சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மாத்திரம் சரோ நடித்தது கிடையாது.சரோவின் காஸ்ட்யூமர் எம்.ஏ. ரெஹ்மான். பத்திரிகை ஒன்றில் அளித்த பேட்டியிலிருந்து,‘ சரோஜாதேவிக்குப் பிடித்தது க்ளோஸ் நெக், போட் நெட் வைத்த இரு மாடல் ப்ளவுஸ்கள். ஸ்லீவ்லெஸ் எனப்படும் கையில்லா ரவிக்கையை அவர் அணிந்ததே கிடையாது.தைக்கப்படும் ஆடைகள் உடலை ஒட்டி அமைய வேண்டும். ஃபிட்டிங் சற்று மிகையான கவர்ச்சியுடன் அமைந்து விட்டால், அதைத் தொட மாட்டார். சினிமாவில் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள் போல் சொந்த உபயோகத்துக்கும் சேர்த்துத் தைக்கச் சொல்லி சில நடிகைகள் கேட்பது உண்டு. சரோஜாதேவி அவ்வாறு செய்ததில்லை.அம்மாவுக்கு நான் தனிப்பட்ட முறையில் தைத்துக் கொடுத்த ரவிக்கைகள் ஆயிரத்தைத் தாண்டும். சரோஜாதேவி வீட்டுக் கண்ணாடி பீரோக்களில் ஆயிரக் கணக்கான வண்ண வண்ணச் சேலைகள் கண்களுக்கு விருந்தளிக்கும். ’1969 கோடையில் உலகச் சுற்றுலா சென்று வந்தார் சரோ. திரும்பி வருகையில் தன்னை என்றும் மறக்க முடியாதபடி, எம்.ஏ. ரெஹ்மானுக்கு ஓர் அபூர்வ பரிசை வழங்கினார்.அது கட்டை விரல் அளவே உள்ள சின்னஞ்சிறு பெட்டி. அதன் உள்ளே இருந்தவை ஒரு சிறிய ஊசி. இரு குண்டூசிகள். மூன்று பித்தளைப் பின்கள். தையற்கலைஞர்கள் விரலில் மாட்டிக் கொள்ளும் அங்குஸ்தான். மூன்று ஜதை வர்ண நூல்களைச் சுற்றி வைக்கக் கூடிய உருளை.




.

.

.


.







.

No comments:

Post a Comment