Tuesday 6 October 2020

SUGUMARI , ACTED 2500 FILMS , GUINNESS RECORD BORN 1940 OCTOBER 6 -2013 MARCH 26

 


SUGUMARI , ACTED 2500 FILMS ,

GUINNESS RECORD  BORN  1940 

OCTOBER 6 -2013 MARCH 26



தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட 2500 படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்ற நடிகை சுகுமாரி 2013-ம் ஆண்டு மார்ச் 26 அன்று மறைந்துபோனார்.

1940-ம் ஆண்டு திருவிதாங்கூரில் பிறந்த சுகுமாரி “ஓர் இரவு” என்ற தமிழ்ப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1951-ல் ஆரம்பித்த சுகுமாரியின் திரைப்பட வாழ்க்கை ஏறத்தாழ 60 ஆண்டுகள் நீடித்தது. அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லலாம். “ஓர் இரவு” படத்துக்குப் பிறகு பொன்னி, கோமதியின் காதலன், ராஜா ராணி, சக்ரவர்த்தி திருமகள் போன்ற படங்களில் நடனக்கலைஞராக நடித்துள்ளார்.அரங்கேற்ற வேளை, அலைபாயுதே, கோபுரவாசலிலே, பம்மல் கே. சம்மந்தம் போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே புகழ் பெற்ற இயக்குநர் ஏ. பீம்சிங்கை 1959-ல் திருமணம் செய்தார். 1978-ல் ஏ. பீம்சிங் மறைந்த போது சுகுமாரிக்கு வயது 38.



அதிகப் படங்களில் நடித்ததற்காக கின்னஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது.இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், பிரேம் நசீர், நாகேஸ்வரராவ், கமல்ஹாசன், ரஜினிகாந்த் மம்முட்டி போன்ற புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.பல விருதுகளைப் பெற்றுள்ள சுகுமாரிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது 2011-ம் ஆண்டிலும், பத்மஸ்ரீ விருது 2003-ம் ஆண்டிலும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.சுகுமாரி மறைந்து நான்கு ஆண்டுகள் ஆனாலும், அவருடைய திரைப்படங்கள் என்றென்றும் அவரை நினைவு கூறும்.



கடந்த வாரம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் விளக்கேற்றும்போது, சுகுமாரியின் புடவையில் தீப்பிடித்தது. இதனால் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சுகுமாரி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்ட சுகுமாரி, திருவிதாங்கூர் நடன சகோதரிகள் என அறியப்பட்ட லலிதா, பத்மினி, ராகினியின் தாயார் சரஸ்வதி அம்மாளின் அண்ணன் மகள் ஆவார். சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்ட அவர், நடனத்தில் நன்கு பயிற்சி பெற்றிருந்தார்.


முன்னாள் முதல்வர் அண்ணாவின் “ஓர் இரவு’ படத்தில்தான் சுகுமாரி முதல்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் “ஏ குரூப்’ நடனக் கலைஞராக


நடனமாடியுள்ளார்.தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இயக்குநர் பீம்சிங்கை காதல் திருமணம் செய்து கொண்டார்.அவரது மரணத்துக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் நடிக்கத் தொடங்கிய சுகுமாரி, “பொன்னர் சங்கர்’, “யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக வேட்டைக்காரன் படத்தில் நடித்திருந்தார்.“நம்ம கிராமம்’ படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். 2003-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.


முதல்வர் ஜெயலலிதா, நடிகை மனோரமா, அண்மையில் காலமான ராஜசுலோசனா ஆகியோர் இவரின் நெருங்கிய தோழிகள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகுமாரியை சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனைக்கே சென்று முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார்.இறுதிச் சடங்கு: சுகுமாரிக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக சுகுமாரியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (மார்ச் 27) நடைபெறுகின்றன.


முதல்வர் இரங்கல்: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட சுகுமாரி, தனது பத்தாவது வயதிலேயே திரைப்படத்தில் காலடி எடுத்து வைத்தவர்.எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான சுகுமாரியின் மறைவு திரைப்படத் துறையினருக்கும், கலைத் துறையினருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.அஞ்சலி: மறைந்த சுகுமாரியின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


நன்றி:-தினமணி


நம்ம கிராமம்’ படத்தில் ஷம்விருதாவின் பாட்டியாக…


நான் கடந்த ஆறு மாத காலமாக, இதுவரையிலும் யாராலும் மேற்கொள்ளப்படாத ஒரு ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆய்வின் தலைப்பு: நடிகை கீர்த்தி சுரேஷை பெண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களும் ஒரே குரலில், ‘எனக்கு கீர்த்தி சுரேஷைப் பிடிக்காது’ என்று கூறி என் மனதைப் புண்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.


இந்த ஆராய்ச்சி விஷயமாக, நான் தினமும் ஏராளமான கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துக் கடும் வெறுப்பிலிருந்த என் மனைவி, “உடனே சுகுமாரியப் பத்தி எழுதுங்க” என்றார்.


உடன் 1989-ல் வெளிவந்த ‘வருஷம் 16” படத்தில் நடித்த சுகுமாரியின் அற்புதமான நடிப்பு நினைவுக்கு வந்து, என்னை இக்கட்டுரையை எழுதவைத்தது. நான் ‘வருஷம் 16’ படத்தை குஷ்புவுக்காகவே பல முறை பார்த்தவன். எனவே, அப்படத்தில் ஒரு காட்சியில் எத்தனை நடிகர்கள் வந்தாலும், எனது கண்களின் கேமரா குஷ்புவின் முகத்தை மட்டும் ஜும் செய்து பார்த்துக்கொண்டிருக்கும். அதையும் மீறி சுகுமாரியின் நடிப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.


பரிபூரண நடிப்பு


‘வருஷம் 16’ படத்தில் கார்த்திக், குஷ்புவுக்கு குளியலறையில் முத்தம் கொடுத்து மாட்டி, குடும்பத்தாரிடம் அவமானப்பட்டு நிற்கும்போது, கார்த்திக்கின் பாட்டியாக வரும் சுகுமாரி கார்த்திக்கிடம், “வருத்தப்படாதய்யா. இங்க என்ன பெருசா நடந்துடுச்சு…. போ” என்று நடந்தது ஒரு சாதாரண விஷயம் போன்ற முகபாவத்துடன் கூறி அனுப்பிவிட்டு, கார்த்திக் சென்றவுடன் சட்டென்று முகபாவம் மாறி, நடந்தவற்றின் தீவிரத்தை உணர்ந்து அவர் கண்ணீர் விடும் காட்சியைப் பார்த்தபோது, பல்லாண்டு காலமாகத் திரைத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும், ஒரு பரிபூரணமான நடிகையால் மட்டுமே இம்மாதிரியாக நடிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டேன்.‘வருஷம் 16’ படத்தில் சுகுமாரி


1940-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி. அத்தையும் நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதி அம்மாளிடம், சென்னையில் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் அவர் நுழைந்துவிட்டார். தனது 11-வது வயதில் ‘ஓரிரவு’ என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த சுகுமாரி தனது 19-வது வயதில் பிரபலத் தமிழ் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார்.


திருமணத்துக்குப் பிறகும் பீம்சிங் சுகுமாரியை நடிக்க அனுமதிக்க…. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஏறத்தாழ 2,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலானவை மலையாளப் படங்கள். தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிகை மனோரமா தூள் கிளப்பியதுபோல், மலையாளத்தில் நடிகை சுகுமாரி பலதரப்பட்ட வேடங்களில் ஏராளமாக நடித்ததால், அவர் ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று அழைக்கப்பட்டார்.


நகைச்சுவையில் தனித் தடம்


மலையாளத்தில் 1974-ல் வெளிவந்த ‘சட்டைக்காரி’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியாக நடித்திருந்த சுகுமாரியின் ஆங்கிலம் கலந்த மலையாளப் பேச்சும் நடிப்பும் அனைவரையும் கவர்ந்து, மலையாளத் திரையுலகில் அவர் ஒரு தனித்துவமான இடத்தை அடைந்தார். 1984-ல் வெளிவந்த இயக்குநர் பிரியதர்ஷனின் ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ என்ற மலையாளப் படத்தில் மேல்தட்டு மாடர்ன் பெண்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி, அலட்டலாக நடித்த சுகுமாரியின் அருமையான நகைச்சுவை நடிப்பு, அவரை முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் மாற்றியது.


இத்துடன் குணச்சித்திர வேடங்களிலும் சுகுமாரி மகா அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சுகுமாரி தன் மகனிடம் ஃபோனில் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறும் காட்சியில் சுகுமாரியின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. அதேபோல் ‘தசரதம்’ மலையாளப் படத்தின் இறுதிக் காட்சியில்; மோகன்லால், அவர் வீட்டு வேலைக்காரியான சுகுமாரியிடம், “என்னை மகனாக ஏற்றுக்கொள்வீர்களா?” என்ற கேட்கும்போது, சட்டென்று அந்த வேலைக்காரி முகபாவத்திலிருந்து விடுபட்டு, தாய்மையின் முகபாவத்துக்கு மாறும் நடிப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் சுகுமாரி அம்மாவாக நடித்தது பற்றி மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி, “சுகுமாரி ஒரு செட்டு முண்டு உடையை பையில எடுத்துகிட்டு வந்து, எல்லா செட்டுக்கும் போய் அம்மா வேடத்தில் நடித்துவிடுவார்” என்று கூறியிருக்கிறார்.


உறுதியான குரல்


‘நூற்றுக்கு நூறு’ படத்தில் ஸ்ரீவித்யாவின் தாயாக


தமிழிலும் எம்.ஜி.ஆர். சிவாஜியிலிருந்து தனுஷ்வரை பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சுகுமாரியைக் கடைசியாக நான், ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் பாட்டியாகப் பார்த்தேன். அப்படத்தின் தொடக்கத்தில், “எங்கேயோ பார்த்த மயக்கம்” பாடலில் வெள்ளைநிற உடையில், மிக அழகாகத் தோன்றிய நயன்தாரா, அப்படியே என் கண்களில் நிரந்தரமாகத் தங்கி, பிற காட்சிகளில் வந்த நயன்தாராகூடக் கண்ணில் தெரியாத அளவுக்கு எனது கண்கள் கடுமையாகச் சேதமடைந்திருந்தன. பிறகு சுகுமாரி தனுஷை அவரது கணீரென்ற வெண்கலக் குரலில் விரட்டியபோதுதான் நான் சுயநினைவுக்கு வந்தேன். சுகுமாரியின் குரல் அவ்வளவு தனித்துவமான, உறுதியான குரல்.


கடந்த 2003-ம் ஆண்டு பத்மஶ்ரீ பட்டம் பெற்ற சுகுமாரி, 2011-ம் ஆண்டு, ‘நம்ம கிராமம்” என்ற தமிழ் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு, சுகுமாரி பூஜை செய்துகொண்டிருந்தபோது, குத்துவிளக்கு சேலையில் பட்டு எரிந்து, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரைக் காணவந்த அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்ததிலிருந்து நடிகை சுகுமாரியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். 4 வார கால போராட்டத்துக்குப் பிறகு, சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரி மாரடைப்பால் காலமானார்.


சுகுமாரியின் கணவர் பீம்சிங் இறந்தபோது, சுகுமாரியின் வயது 30களில்தான் இருந்தது. ஒரு நடுத்தர வயது பெண்ணுக்கு அது என்றும் தீராத்துயரம். ஆனால் கலைஞர்கள் எவ்வளவு பெரிய துயரத்தில் ஆழ்ந்தாலும், அவர்கள் நேசிக்கும் கலை அவர்களை அத்துயரத்திலிருந்து மீட்டெடுக்கும். அதே போல் சுகுமாரியின் கலையே, அவரைக் கணவருடைய இழப்பிலிருந்து மீட்டது. சுகுமாரி போன்ற கலைஞர்களின் வாழ்க்கை, வெறும் மனிதர்களால் மட்டும் முழுமையடைவதல்ல. கலையாலேயே முழுமையடைகிறது. அந்த வகையில் நடிகை சுகுமாரி ஒரு முழுமையான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்

No comments:

Post a Comment