Tuesday 6 October 2020

EDISON OF INDIA : G.D.NAIDU

 


EDISON OF INDIA : G.D.NAIDU


கண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்



இந்தியாவின் எடிசன்’ எனக் குறிப்பிடப்படுபவர்; தொழில்நுட்பம் அவ்வளவாக முன்னேற்றம் அடைந்திடாத காலத்திலேயே ரேஸர், பிளேடு, கால்குலேட்டர், டிக்கெட் மெஷின், ஃப்ரூட் ஜூஸ், எக்ஸ்ட்ராக்டர் என எத்தனையோ கருவிகளை வடிவமைத்தவர்; தொழில்துறை, மின்சாரம், விவசாயம், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் எனப் பல துறைகளுக்குத் தன் அசாத்தியமான பங்களிப்பை வழங்கியவர் ஜி.டி.நாயுடு. அவரின் சில கண்டுபிடிப்புகள் குறித்தும் அவற்றுடனான சில நினைவுகளையும் ஜி.டி.நாயுடுவின் புதல்வர் ஜி.டி கோபால் பகிர்ந்துகொள்கிறார்


``அப்பா பல அரிய கருவிகளை வடிவமைச்சிருந்தாலும், அதுக்கான அங்கீகாரம் அரசுத் தரப்புல இருந்து கிடைக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டை விழுந்துக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்கு... அது 1945-ம் வருஷம். அப்போ எங்களுக்குச் சொந்தமா 600 பஸ்கள் ஓடிக்கிட்டு இருந்தன. ஆனா, அதைப் பராமரிக்க, பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் இல்லை. அப்பா யோசிச்சார். அமெரிக்காவுக்குப் போனார். ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களை எல்லாம் பார்வையிட்டார். அவங்க மெக்கானிக்குகளை எப்படி ட்ரெயின் பண்றாங்க, அதுக்கு என்னென்ன பண்றாங்கனு தெரிஞ்சுக்கிட்டார். இங்கே வந்ததும் கோயம்புத்தூர்ல ஒரு பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டை ஆரம்பிச்சார். அதுக்கும் வரி கட்டச் சொன்னது அரசாங்கம். `என்னோட பஸ் தொழிலை லாபகரமா நடத்தணும்னா, அதுக்கு மெக்கானிக்குகள் வேணும். புது மெக்கானிக்குகளை உருவாக்குறதுக்குத்தான் இந்த பாலிடெக்னிக்...’னு எவ்வளவோ போராடிப் பார்த்தார் அப்பா. ஆனா, தொடர்ந்து வரி கட்டச் சொல்லி வற்புறுத்திக்கிட்டே இருந்தது அரசாங்கம். இப்படி அப்பா புதுசா எதைச் செஞ்சாலும் `இன்கம்டாக்ஸ் வெரிஃபிகேஷன் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்’பாங்க. அதுக்கு அரசுக்கு வரி கட்டணும். இந்தப் பிரச்னையிலேயே அப்பா நொந்துபோனார். இந்தக் காரணத்தினால்தான் அப்பா உருவாக்கிய ரேஸர் (Rasant razor), பிளேடு (Super-thin shaving blade) அமெரிக்காவுக்குப் போச்சு. இதை அமெரிக்காவுக்கு இலவசமாகவே கொடுத்துட்டார் அப்பா.



கண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்இப்படி, அப்பா எதைக் கண்டுபிடிச்சாலும், அதுக்கு லைசென்ஸ் கிடைக்கிறது சிக்கலாக இருந்தது. `லைசென்ஸ் தர மாட்டீங்கன்னா, நான் செஞ்ச பொருளை நானே உடைக்கப்போறேன்’னு ஒரு புரட்சியைச் செஞ்சார். சென்னை மூர்மார்க்கெட் பக்கத்துல ஒரு கூட்டம் நடந்தது. அண்ணா, ராஜாஜி, பெரியார் எல்லாம் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தாங்க. ஆயிரக்கணக்கானவங்களுக்கு முன்னால அப்பா, தன்னோட கண்டுபிடிப்புகளை, அவர் வடிவமைச்ச பொருள்களை எல்லாம் ஒவ்வொண்ணா உடைச்சார். கார், எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள்னு அவர் உடைக்க உடைக்க அத்தனை பேரும் வேதனையோட பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பரிசோதனை பண்ணி, அவர் கண்டுபிடிச்ச ஒவ்வொரு முதல் பொருளையும் அவர் உடைச்சார். அதில் முக்கியமான ஒண்ணு, 100 ரூபாய் ரேடியோ. மேடையில் இருந்து பெரியார் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். அண்ணா, `இதையெல்லாம் நாயுடு அவருக்காகச் செய்யலை. நாட்டுக்காகத்தானே செஞ்சார். உடைக்கட்டும். அப்போதான் அந்த வலி மத்தவங்களுக்குப் புரியும்’னு சொல்லிட்டார். இது நடந்தப்போ, நான் சின்னப் பையன். அந்தக் கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன்.


அப்பாவுக்கு ரேடியோன்னா உயிர். காலையில இருந்து ராத்திரி தூங்கப்போகிற வரைக்கும் ரேடியோகூடவேதான் இருப்பார். இயந்திரத்தோட பழகிப் பழகி அதனோட ஒவ்வோர் அசைவும் அவருக்கு அத்துபடி ஆகிடுச்சு. காலையில பஸ்ஸ்டாண்டுக்குப் போவார். ஒவ்வொரு பஸ்ஸும் ஸ்டார்ட் ஆகும்போது அதிலிருந்து வருகிற சத்தத்தைக் கவனிச்சுக் கேட்பார். `இதுல ஃபேன் பெல்ட் போயிடுச்சு. இந்த ட்ரிப் போயிட்டு வந்ததும் மாத்திடுங்க’னு சொல்வார். அவ்வளவு எக்ஸ்பெர்ட்.



விவசாயத் துறையிலும் அப்பாவுக்கு ஆர்வம் அதிகம். செடிகளில் புதுசு புதுசா என்னென்னவோ செஞ்சு பார்த்தார். அப்பவே கலப்பினப் பயிர்களைப் (Hybrid cultivation) பற்றி ஆராய்ச்சி செஞ்சார். பப்பாளி, சோளம், பருத்தி, துவரை எனப் பல பயிர்களை, தாவரங்களை ஆய்வு செஞ்சார். அவரோட ஆராய்ச்சியின் விளைவாகத் துவரை நீளமா வளர்ந்தது. ஒரே ஒரு பருத்திச்செடியிலேயே ஒரு சின்னச் சாக்கு அளவுக்குப் பருத்தி வளர்ற மாதிரி செஞ்சு காண்பிச்சார். ஆனா, பருத்தியில் தரம் இல்லை. அதை இன்னும் டெவலப் பண்ண வேண்டியிருந்தது. மேற்கொண்டு இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து, வளர்த்து எடுங்கனு சொல்லி, அதை விவசாயக் கல்லூரிக்குக் கொடுத்துட்டார். அப்போ விவசாயக் கல்லூரி, மத்திய அரசு வசம் இருந்தது. பிறகு, மாநில அரசிடம் வந்தது. அப்பாவோட கலப்பினப் பயிர் ஆராய்ச்சி அப்படியே நின்னுபோச்சு. அவர் செஞ்சதை வளர்த்தெடுத்திருந்தா, இப்போ வெளிநாட்டிடம் விதைகளுக்காகக் கையேந்தி நிற்கிற நிலைமை நமக்கு வந்திருக்காது. அப்பா தொடர்பான நிறைய விஷயங்கள் கற்பனைனு சொல்றவங்களும் இருக்காங்க. ஆனா, 1945-1950 காலகட்டத்திலேயே `எனர்ஜி கன்சர்வேஷன்’ என்கிற புதுமையை எல்லாம் பரிசோதிச்சுப் பார்த்தவர் அப்பா. அது, பஸ்ஸ்டாண்டில் கேட் மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். வரிசையா ஒவ்வொருத்தரா அந்த வழியாகப் போகும்போது, அதில் மாட்டியிருக்கும் பம்பு சுத்தும். அதில் இருந்து ஆற்றல் (எனர்ஜி) கிடைக்கும். அந்த மெஷின்ல நானே விளையாடியிருக்கேன். அப்பாவைப் பற்றிச் சொல்ல எத்தனையோ இருக்கு. அதுக்காகவே இப்போ இங்கிலீஷ்ல ஒரு புத்தகம் கொண்டுவந்திருக்கோம்.’’



கண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்

Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment