Wednesday 29 July 2020

RAMARAJAN ,TAMIL ACTOR BORN 1960 OCTOBER 18



RAMARAJAN ,TAMIL ACTOR 
BORN 1960 OCTOBER 18



தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட திரைப்பிரபலங்கள் எப்போதும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பர். அப்படிப்பட்ட திரைப்பிரபலங்களின் வரிசையில் இருப்பவர் தான் நடிகர் ராமராஜன். இவர் இருந்த புகழுக்கும், கிடைத்த ரசிகர்களுக்கும் இப்போது எங்கோ சென்றிருக்க வேண்டியவர். ஆனால் தேவையில்லாத பிடிவாதத்தால், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். ஆம், மரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ராமையா என்ற நாடக நடிகரின் மகன் தான் ராமராஜன். பள்ளிக்கல்வியை மேலூர் அரசுப் பள்ளியில் முடித்த இவருக்கு அங்குள்ள திரையரங்கு ஒன்றில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் பணி கிடைத்தது.

சிறிது காலம் சினிமா டிக்கெட் கிழித்துக் கொடுத்த இவர் ஆப்ரேட்டர், கேஷியர் என படிப்படியாக உயரத்தை எட்டினார்.பள்ளிப்பருவம் முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்த இவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களை சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடியவர்.ராமராஜனுக்குள் இருந்த சினிமா மோகத்தை அறிந்த அவரது நண்பர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.எம்.ஜி.ஆரை போல் ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த ராமராஜனுக்கு வந்தவுடனே வாய்ப்பு கிடைக்கவில்லை.முதலில் புரொடர்க்‌ஷன் பாயாக பணியில் சேர்ந்து, தயாரிப்பாளரும், இயக்குநருமான ராமநாராயணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

அவருடன் 25-க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக இருந்தார். அதன் பின் சினிமாவை கரைத்து குடித்த ராமராஜன், சொந்தமாக திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துகொண்டார்.ஒரு சில படங்களை இயக்கிய அவர், நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் மூலம் முதல்முறையாக ஹீரோவாகினார்.ராமராஜனின் கிராமத்து சாயலும், கள்ளம் கபடமற்ற பேச்சும், சினிமாவில் அவருக்கென தனி கூட்டத்தை உருவாக்கியது. கூடவே அவர் அணியும் கலர் கலரான சட்டையும், உடல் மொழியும் எம்.ஜி.ஆரை. பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.அதுமட்டுமின்றி, அவர் படத்தில் இருந்த பாடல்கள் அனைத்தும் செம் ஹிட் அடித்துவிடும், இதற்கு இளையராஜாவையும் முக்கிய காரணமாக சொல்லலாம்.

இதனால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ராமராஜனுக்கு ரசிகர்கள் உருவாகினர். 1989-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளும் ராமராஜனின் கால்ஷீட்கள் நிரம்பி வழிந்தன.வருடத்திற்கு 8 படங்கள் என படு பிஸியாக இருந்தார். அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் 500 நாட்களுக்கு மேல் தமிழகத்தில் ஓடி சாதனை படைத்தது.இப்படி இவர் திரைப்பயணம் சென்று கொண்டிருக்க, எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், திடீரென்று ஜெயலலிதாவுடன் சேர்ந்தார். அதற்காக அவருக்கு 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வைத்து டெல்லிக்கு எம்.பி.யாக ஜெயலலிதா அனுப்பி வைத்தார்.மத்தியில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததால் 13 மாதத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிகொடுத்தார் ராமராஜன்.

அரசியலில் எம்.பியாக உச்சம் தொட்ட ராமராஜன் அடுத்தடுத்து சோகங்கள் துரத்தியது. 2000-ஆம் ஆண்டு தனது காதல் மனைவி நளினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். அதன் பின், தமிழ் சினிமாவின் டிரெண்டிங் மாறத் தொடங்கியதால் ராமராஜனின் புகழ் மெல்ல மங்கத் தொடங்கியது.
ஊரெங்கும் இருந்த அவரது ரசிகர் மன்றமும் மாயமாய் மறைந்து போனது. குணச்சித்திர வேடங்களில் நடிக்குமாறு எத்தனையோ இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தன்னை அணுகியும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என உறுதியாக கூறி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை ஓரங்கட்டினார்.இதனாலே அவர் திரையுலகில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். பிள்ளைகள் வளர்ந்துவிட்டதை அடுத்து மனைவி நளினியுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து விவாகரத்து பெற்ற நிலையிலும் தனது மகன், மகள் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.தற்போது முழு நேர அரசியல்வாதியாக அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக உள்ளார்




No comments:

Post a Comment