Saturday 18 July 2020

ETHIRAJ ,ADVOCATE SCHOLAR , BORN 1890 JULY 18




ETHIRAJ ,ADVOCATE SCHOLAR ,
BORN 1890 JULY 18



பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் மற்றும் எத்திராஜ் கல்லூரி நிறுவனர் 1890 ஜூலை 18 இல் பிறந்தார் -  பாகவதருக்கு வாதாடி 100 பவுன் தங்க தட்டு பெற்றவர்

பெண் கல்விக்கு ஆதரவான குரல்கள் தற்போது அனைத்து தளங்களில் இருந்தும் ஒலித்து வரும் நிலையில், 68 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்விக்கு வித்திட்டவர் வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனரான வி.எல்.எத்திராஜின் 125-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1890-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி வேலூர் தொட்டபாளையத்தில் லட்சுமணசாமி முதலியார்-அம்மாயி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் எத்திராஜ். அவரது தந்தை லட்சுமணசாமி முதலியார் ஆரம்பத்தில் அரக்கோணம் ரயில்வே பணிமனை ஸ்டோர் கீப்பராக இருந்து ரயில்வே கான்ட்ராக்டராகவும், பின்னர் சிவில் என்ஜினியரிங் கான்ட்ராக்டராகவும் உயர்ந்தவர்.


எத்திராஜின் சகோதரர்களான கோவிந்தராஜ், வரதராஜ் ஆகியோர் தந்தையைப் பின்பற்றி கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டனர். ஆனால், எத்திராஜுக்கு தந்தையின் தொழில் ஈர்க்கவில்லை. தனக்கென தனிப்பாதையை ஏற்படுத்த விரும்பினார். தந்தை மறைவுக்குப் பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில், கல்லூரி புதுமுகப் படிப்பில் (பியுசி) சேர்ந்தார். அப்போது அவரது தர்க்கவியல் ஆசிரியராக இருந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆவார்.

முதல் தலைமை வழக்கறிஞர்

பாரிஸ்டர் படிப்புக்காக தனது 18 வயதில் லண்டன் சென்ற எத்திராஜ், அண்ணன் கோவிந்தராஜின் உதவியால் 4 ஆண்டுகளில் சட்டப் படிப்பை முடித்து பாரிஸ்டர் ஆனார். அதேஆண்டு குடும்பத்தினருக்கு தெரியாமல் கேத்லீன் என்ற ஆங்கிலப் பெண்ணை மணம் முடித்ததால் பிரச்சினை எழுந்தது.1913-ம் ஆண்டு சென்னை திரும்பிய எத்திராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை வெற்றிகரமாக தொடங்கி, ஆங்கில வழக்கறிஞர்களுக்கு இணையாக ஜொலிக்கத் தொடங்கினார். எத்திராஜின் அசாத்திய சிறப்பு குணங்கள் இந்திய, ஆங்கில வழக்கறிஞர்கள் மத்தியில் அவருக்கென தனி மதிப்பை ஈட்டித்தந்தது. 1937-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இப்பணிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் கல்லூரி தொடக்கம்

வழக்கறிஞராக 47 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த எத்திராஜ் ஏராளமாக பணம் சம்பாதித்தார். விலையுயர்ந்த உடைகள், கார்கள் மீது பிரியம் கொண்ட எத்திராஜ், ‘பெரிய திட்டம் ஒன்றுக்காக பணத்தை சேமித்து வருவதாக’ நன்கொடை கேட்டு வருவோரிடம் கூறிவந்தார். பெண் கல்வி மீது தீராத அக்கறை கொண்ட எத்திராஜ், பெண்களுக்கென தனியாக கல்லூரியைத் தொடங்க முடிவு செய்தார். அந்த காலகட்டங்களில் பெண்களுக்கான தனி கல்லூரி என்பது நினைத்துப்பார்க்க முடியாத விஷயமாக இருந்தது.எத்திராஜ் கண்ட கனவுப்படி, 1948-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி ராயப்பேட்டை ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக 98 மாணவிகளுடன் எத்திராஜ் மகளிர் கல்லூரி உருவானது. 1951-ல் நிரந்தரமாக தற்போதைய இடத்துக்கு மாறியது. மாணவிகள் படிப்பில் மட்டுமின்றி கல்வி அல்லாத இதர செயல்பாடுகளில் பங்கெடுப்பதையும் ஊக்கு வித்தார். தனக்காக யாரும் காத்திருப்பதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.

தோட்ட வேலையிலும் இயற்கையை ரசிப்பதிலும் எத்திராஜுக்கு அதிக ஆர்வம் உண்டு. கல்லூரி வளாகத்தில் பரந்து, விரிந்து வளர்ந்து நிற்கும் மரங்களே அதற்குச் சாட்சி. தவிர டென்னிஸ் விளையாடுவார். கர்நாடக இசைப்பிரியர். உடல்நலக்குறைவால் 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ல் மரணம் அடைந்தார் எத்திராஜ்.
எத்திராஜின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவரது குடும்ப வழியைச் சேர்ந்தவரும், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தற்போதைய தலைவருமான வி.எம்.முரளிதரன், “தனது திறமையை சின்ன வயதிலேயே எத்திராஜ் உணர்ந்துகொண்டார். சட்டம் படிக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் எப்படியோ உருவாகியிருக்கிறது. காரணம் முன்மாதிரி என்று கருதுவதற்கு அவரது குடும்பத்தில் வழக்கறிஞர் யாரும் கிடையாது. அவர் வழக்கறிஞர் தொழிலில் அதிக பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்தாலும், அவரது மனதில் ஏதோ ஒரு திட்டம் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.

ஆனால், வெளியே யாருக்கும் அது தெரியவில்லை. தனது சொத்துக்களை விற்று மகன்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டு என்பதற்காக மகளிர் கல்லூரியை தொடங்கினார். கார், ஆடம்பர வாழ்க்கை என்று ஒருவகையில் இருந்தாலும் மற்றொரு வகையில் கலை, இசை, இயற்கை மீது ஆர்வம், சமய ஈடுபாடு ஆகிய மென்மையான உணர்வுகளும் அவருக்குள் இருந்துள்ளன” என்றார்.வெறும் 98 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட எத்திராஜ் மகளிர் கல்லூரி தற்போது 8 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவிகளுடன் ஆல்போல் தழைத்து வீறுநடை போட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளில் ஒன்று, எத்திராஜ் கல்லூரி. தினமும், இக்கல்லூரியை இரு முறை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு! அதுவும், மதியம் வகுப்பு ஆரம்பமாகும் சமயமும், கல்லூரி முடியும் நேரமும் கல்லூரியைக் கடந்து செல்ல வேண்டும்.
அப்போது, வித விதமான வண்ண ஆடைகளில், நெட்டையும் குட்டையும், குண்டும் ஒல்லியுமாக நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் சாலையை கடந்தவாறும், சாலையின் ஓரமாகவும், இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தங்களிலும் காணப்படுவர்.
கண்ணை அங்கே, இங்கே திருப்பாமல், கவனத்தை சிதறவிடாமல், கல்லூரியை கடந்து செல்லும் போதெல்லாம், 'யார் இந்த எத்திராஜ்...' என நினைப்பேன். அவர், பிரபல வழக்கறிஞர் என, யாரோ, எப்போதோ சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.
அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிராக்டீஸ் செய்து வரும் வழக்கறிஞர் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.
வழக்கு விஷயம் ஒன்று பற்றி, அவரிடம் பேசியபின், 'எத்திராஜ் என்பவர் வழக்கறிஞராமே... அவர் பெயரில் கல்லூரி ஒன்றும் உள்ளதே... அவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா...' எனக் கேட்டேன்.
'ஏன் தெரியாம... அந்தக் காலத்தில், உயர் நீதி மன்றத்தில், மிகப் பிரபலமான வழக்கறிஞர்; அவரின் வாதத் திறமை பற்றி, ஓகோன்னு சொல்வாங்க. உதாரணத்திற்கு ஒண்ணு, ரெண்டு சொல்றேன், கேள்...' என்றவர், ஆரம்பித்தார்...
ஒரு கொலை கேசில், எட்டு பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கிட்டாங்க. இவ்வழக்கில் ஆஜரான எத்திராஜ், கோர்ட்டில், 10 நிமிடங்கள் தான் வாதாடினார்... 'கொலையுண்டதாக கூறப்பட்ட சடலம் மீட்கப்படவில்லை; அதை யாரும் கண்ணால் பார்க்கவில்லை; சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே, மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது சரியல்ல; குற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை. இந்நிலையில், ஒருவேளை, கொலையுண்டவர், உயிரோடு திரும்பி வந்தால், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு, எதிரிகள் இறந்து போய் விட்டால், நீதிபதிகள் மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா...' என்று கேட்டார். தூக்குத் தண்டனை ரத்தாகி, அனைவருக்கும் விடுதலை கிடைத்தது.
பெரிய பெரிய வழக்குகளில் எல்லாம் கூட, வாதாட, 10 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார் எத்திராஜ். ஆனால், அந்த, 10 நிமிடங்களுக்கு பின்னால், அவரது அசாத்திய உழைப்பு இருக்கும் என்று சொல்வர்.
கர்நாடகாவில், ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தில், சிலர் அத்துமீறி பிரவேசித்ததாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அவர், அப்போதைய, கர்நாடக முதல்வரான அனுமந்தையாவின் சகோதரர்.
அதனால், தன் சகோதரருக்கு ஆதரவாக, தன் செல்வாக்கை, அனுமந்தையா தவறாக பயன்படுத்துவதாக, எதிரிகள் குற்றம் சாட்டினர்.
அதே சமயத்தில், 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில், ஒரு கடிதம் வெளியாகியது. அக்கடிதத்தில், 'தன் செல்வாக்கை, அனுமந்தையா, தவறாக பயன்படுத்தவில்லை...' என்று, எழுதியிருந்தது.
அக்கடிதத்தை, முதல்வர் அனுமந்தையாவே எழுதியதாகவும், அதனால், கோர்ட் நடவடிக்கைகளில் பாதிப்பு இருப்பதால், கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ், அனுமந்தையா மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. கோர்ட்டில், வழக்கு விசாரணைக்கு வந்தது.
அனுமந்தையாவுக்கு ஆஜரான எத்திராஜ், மிகவும் சாமர்த்தியமாக வாதாடினார். ஒரு முதலமைச்சர் பற்றிய வழக்கு என்பதால், அப்போது, இவ்வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் வெளியானதாக சொல்லப்படும் கடிதத்தின் ஒரிஜினலை, கோர்ட்டில் சமர்ப்பித்தால் தான் கேஸ் நிலைக்கும். பத்திரிகைகளில் வெளியானதாகச் சொல்லப்படும், பல தகவல்களை சுட்டிக் காட்டி, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவது, சட்டப்படி செல்லாது என்று, வாதாடினார்.
முதலமைச்சர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரிஜினல் கடிதத்தை, இரண்டு வாரக் காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, எத்திராஜின் வாதத்திற்குப் பின், கோர்ட் உத்தரவிட்டது. ஒரிஜினல் லெட்டர் கிடைக்கவில்லை. அனுமந்தையா பேரில் தொடுத்த அவமதிப்பு வழக்கு, தள்ளுபடியானது. இந்த வழக்கில், மூன்று நிமிடங்களே வாதாடினார் எத்திராஜ்.
முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது, ஒரு கேசுக்காக வாதாட, எத்திராஜை அமர்த்தினார். எத்திராஜ் பப்ளிக் பிராசிகியூட்டர் அல்ல; தனியாக பிராக்டிஸ் செய்து வந்த அட்வகேட்.
ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்திராத காலம் அது. ஆந்திர மாநிலம் சித்தூர் தாண்டி இருந்த நாங்குலி என்ற இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் ஒன்றை, துரத்திக் கொண்டு போனார், சென்னை மாநில சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்.
அப்போது, கள்ளச் சாராயக் கும்பலை நோக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தினார், சப்-இன்ஸ்பெக்டர். சுட்ட இடம், ஆந்திர எல்லையை தாண்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்தது. தன் கடமையை சப்-இன்ஸ்பெக்டர் செய்தாலும், அவரை கைது செய்தது, கர்நாடக போலீஸ்.
சப்-இன்ஸ்பெக்டர், நியாயம் தவறாமல், கடமையை செய்ததை அறிந்து, அவரை ஜாமினில் எடுக்க, எத்திராஜை வழக்கறிஞராக அமர்த்தினார் ராஜாஜி. அன்றைய தேதியில், வி.கே.திருவேங்கடாச்சாரியார் அட்வகேட் ஜெனரல், வி.டி.ரங்கசாமி போன்றோர் பப்ளிக் பிராசிகியூட்டராக இருந்தார். அரசு தரப்பில் இருந்த, இந்த இருவருமே பெரிய வக்கீல்கள். இருந்தாலும், தனிப்பட்ட வக்கீலான, எத்திராஜையே அனுப்பினார் ராஜாஜி.
இரண்டே நிமிடம் பேசி, அந்த சப்-இன்ஸ்பெக்டரை, ஜாமினில் விடுவித்து விட்டார் எத்திராஜ். சப்-இன்ஸ்பெக்டர், தன் கடமையை செய்ய, தற்காப்புக்காக சுட்டதாக வாதாடிய எத்திராஜ், 'தற்காப்புக்காகச் சுட்டது நியாயம்; அது அவசியம் என்று நிரூபிக்க வேண்டியது, எதிரியின் கடமை; அதாவது, குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் பொறுப்பு. அரசு தரப்பு பிராசிக்யூஷனின் வேலை அல்ல அது. ஜாமினில் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே வந்தால், அரசு தரப்பு சாட்சிகளை கலைத்து விடக்கூடும் என்ற நிலைமை இந்த வழக்கில் எழாது. சித்தூர் வெப்பமான இடம்; பெங்களூரூ குளுகுளு! குற்றம் சாட்டப்பட்டவர், பெங்களூரை விட்டு வெளியே போகாமல், கோர்ட் உத்தரவு போடலாம்...' என்று, சிரித்துக் கொண்டே எத்திராஜ் சொன்னபோது, அரசு வக்கீலால், மறுப்பு சொல்ல முடியவில்லை.
நீதிபதியும் சிரித்துக் கொண்டே, சப் - இன்ஸ்பெக்டருக்கு ஓய்வு தேவை என்றும், கர்நாடக போலீசார் மேற்பார்வையில், பெங்களூரிலேயே தங்கலாம் என்று, உத்தரவு போட்டார். சப்-இன்ஸ்பெக்டரை வெளியே கொண்டு வந்ததற்காக, எத்திராஜுக்கு நன்றி தெரிவித்த ராஜாஜி, 'உங்கள் பீஸை கொடுக்க சென்னை அரசாங்கத்திற்கு சக்தி உள்ளது; பில் அனுப்புங்கள்...' என்று கூறினார். பணம் வாங்க மறுத்து விட்ட எத்திராஜ், 'ஒரு போலீஸ் அதிகாரி, தன் கடமையைச் செய்ததற்காக, குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், ஒரு முதலமைச்சரே முன் வந்து, தன்னை நியமித்த நல்லெண்ணமே, தன்னுடைய பீஸ்...' என்று கூறினார்.
- இப்படி கூறி முடித்தார் நண்பர். இனி, அக்கல்லூரியை கடக்கும் போதெல்லாம், மேற்கூறியவை என் நினைவலைகளில் மோதும்!


சென்னையில் மறைந்த வி.எல்.எத்திராஜ் முதலியார், லக்ஷ்மணசாமி முதலியாரின் மகனாவார். அவர் சிறந்த வழக்கறிஞர். பிரசிடென்சி காலேஜிலும், யுனிவர்சிட்டி ஆஃப் டப்ளினிலும் படித்தார். பின்னர் வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இவர் வழக்கறிஞராக மட்டுமில்லாது, சிறந்த கொடையாளராகவும் இருந்தார். இவர் பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து 1948 ஆம் ஆண்டு எத்திராஜ் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார். அவருடைய சேமிப்பில் பெரும் பகுதியை - அந்தக் காலத்தில் ரூ.10 லட்சத்தையும், அவர் பெயரில் இருந்த இரண்டு பங்களாக்களையும் - இந்தக் கல்லூரிக்காக இலவசமாக வழங்கினார். சென்னையின் மிக முக்கியமான பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி வளாகம் அமைந்துள்ளது. நல்ல கவ்விக்கான கட்டமைப்பையும் ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் முதல் தலைமுறை மாணவிகள் படிக்க வேண்டும் என்பதற்காக தங்குமிட வசதியும் கொண்டுள்ள இந்த கல்லூரியில் இன்று 6,700 மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற சிந்தனை சமூகத்தில் புரையோடிப் போயிருந்த காலத்திலேயே பெண்களை பட்டதாரிகளாக மாற்றி சாதனை படைத்தது, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி. சமீபகாலத்தில் சில சர்ச்சைகள். இந்தக் கல்லூரியின் முதல்வர் தேர்வில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்வர் தேர்வை எதிர்த்து, அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கல்லூரி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் நியமனத்தை ரத்து செய்துள்ளது. புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

"முதல்வர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளது!”
எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் பொறுப்புக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்றது. அதை, கல்லூரி நிர்வாகம் நியமித்த தேர்வுக் குழுதான் நடத்தியது. பல ஆண்டுகள் கல்விப் பணியில் தேர்ந்த அனுபவம் பெற்ற பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் புதிய முதல்வர் பொறுப்புக்கான போட்டியில் இருந்தனர். நியூட்ரிஷன் துறைத் தலைவர் பேராசிரியர் கிரிஜா ஷியாம் சுந்தர். இவர் கல்வியிலும் துறை ரீதியான நிர்வாகத்திலும் மிகுந்த அனுபவம் உள்ளவர். வரலாற்றுத் துறை பேராசிரியர் திலகவதி. இவர், மாணவர்களின் பொறுப்புகள் குறித்த ஆய்வுக்கு பொறுப்பேற்றுள்ளவர். இதுவரை நான்கு ஆய்வு மாணவர்களை உருவாக்கி உள்ளார். அதுபோல, 'மாணவர்களின் முதல்வர்’ என்ற பொறுப்பில் உள்ள பேராசிரியர் சித்ரா வெங்கடாச்சலம். இவருடைய ஆய்வு முடிவுகள், பல கல்லூரிகளில் பாடங்களாகவே உள்ளன. கார்ப்பரேட் துறை பேராசிரியர் சாந்தி. 17 ஆய்வு மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் ரேவதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், இவர்கள் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நிர்மலா என்பவர் கல்லூரி முதல்வராக கல்லூரி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டார். இவர், கல்லூரியின் தகுதிகளை யு.ஜி.சியின் பார்வைக்குக் கொண்டு செல்லும் ஒரு நிர்வாகப் பணியாளர் மட்டுமே என்று குற்றம்சாட்டிய சிலர், நீதிமன்றத்தை அணுகினர்.

"முதல்வர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளது!”
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கல்லூரியின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். ''எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக இந்த நியமனத்தில் செயல்பட்டுள்ளது. ஒரு கல்லூரிக்கு முதல்வர் என்பவரை நியமனம் செய்வதற்கு, யு.ஜி.சி என்னென்ன விதிமுறைகளை வகுத்துள்ளதோ அவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன. முதல்வரை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவில் தொடங்கி, நியமனம் இறுதிசெய்யப்பட்டது வரை ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. 'நேர்முகத் தேர்வில் மற்றவர்களைவிட நிர்மலா நன்றாக பதில் சொன்னார். அதனால், அவருக்கு நாங்கள் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கினோம்’ என்று கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் வாதிடப் பட்டுள்ளது. ஆனால், கேள்வி பதில் பகுதிக்கு மொத்தம் 60 மதிப்பெண்கள் வழங்கலாம். அந்த 60 மதிப்பெண்களை எப்படி வழங்க வேண்டும் என்று யு.ஜி.சி தெளிவாக வரையறுத்துள்ளது. தகுதி, அனுபவம், ஆய்வு மாணவர்களை தயார் செய்தது என்று பல படிநிலைகள் அதில் உள்ளன. ஆனால், நிர்மலாவுக்கு அந்த மதிப்பெண்கள் இந்த விதிமுறைகளின்படி வழங்கப்படவில்லை. அவரைவிட சிறப்பான தகுதிகள் கொண்ட திலகவதி, ரேவதி உட்பட மற்ற பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் ஏன் பரிசீலிக்கவில்லை?' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ''கல்லூரியின் முதல்வராக நிர்மலா நியமிக்கப்பட்டது செல்லாது. அந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, விரைவில் வேறொரு தகுதியான நபரை அந்தப் பொறுப்புக்கு நியமனம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் பேராசிரியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசினோம். ''எத்திராஜ் கல்லூரி நிர்வாகத்தின் விதிமுறை மீறல்களுக்கு உயர் நீதிமன்றம் சரியான பாடம் புகட்டி உள்ளது. இந்தத் தீர்ப்பு, பல கல்லூரிகளுக்கு படிப்பினையாக இருக்கும். நீதிமன்ற உத்தரவில், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் வரையில், நிர்மலாவே முதல்வராக நீடிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய நியமனமே செல்லாது என்கிறபோது, முதல்வர் பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பது நிரூபணமாகிவிட்டது. அதன் பிறகு, அந்தப் பதவியில் அவர் எப்படி நீடிக்க முடியும்? எனவே, அதையும் எதிர்த்து ஒரு புதிய மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்' என்றார்.

மாணவர்களுக்கு நீதியை போதிக்க வேண்டிய கல்லூரிகளே, நீதிக்கு எதிராக செயல்படுவது சமூகத்துக்கு நல்லதல்ல!

.

No comments:

Post a Comment