Wednesday 22 July 2020

PARAMBU MALAI OF PAARI / PRAN MALAI HISTORY



PARAMBU MALAI  OF PAARI /
PRAN MALAI  HISTORY


பறம்பு மலை 10°14'38.44"N சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் [2] எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. "ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் [3] குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.[4]

இருப்பிடம்
பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும்.



பறம்பு மலை வளம்

திருக்கொடுங்குன்றம் என்னும் பிரான்மலை

பறம்புமலை
பறம்புநாடு ‘பெரும்பெயர்ப் பறம்பு’ எனப் பலராலும் போற்றப்பட்டது.[5]
பறம்புநாடு 300 ஊர்களைக் கொண்டது.[6]
பறம்பு நாடானது அறை [7], பொறை [8] முதலானவற்றைக் கொண்டது. இந்த நாட்டிலிருந்த ஒரு குளம் எட்டாம் நாள் பிறைநிலா போல வளைவாக இருந்தது.[9]
பறம்பு மலையில் ஓர் ஊரிலிருந்த ‘பனிச்சுனை’ நீர் மிகவும் சுவையானது.[10][11] இந்தச் சுனைநீர் எப்போதாவது மட்டுமே கிட்டும்.[12]
பறம்பு மலை முற்றுகையின்போது பாரி வளர்த்த பறவைகள் பறந்து சென்று நெற்கதிர்களை அவனுக்குக் கொண்டுவந்து தந்தன.[13]
பறம்பு மலையில் குறத்தியர் மூட்டிய சந்தனப் புகை பக்கத்தில் உள்ள வேங்கைப் பூக்களோடு சேர்ந்து மணக்கும்.[14]
பறம்புமலை மூங்கில்-நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் ஆகிய நான்கும் விளையும் உழவர் உழாத நான்கு வளங்களை உடையது. கபிலர் புறம் 109


பறம்பு நாடு
பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு [15] எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன். அதனுடைய எல்லைகளாக,

தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வையையாற்றங்கரை - பறம்புக்குடி
கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல்
வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் - பறம்பூர்
மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர்
எனக் கொள்வர். பிற்காலத்தில் இப்பறம்பு நாடு பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது.[16]



பாடிய புலவர்கள்
சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா்.

கல்வெட்டுச் சான்றுகள்
இப்பறம்பு மலை தற்காலத்தில் பிரான்மலை என்று வழங்கப் பெறுகிறது. இங்குள்ள விசுவநாதர் கோயில் கருவறை வடக்குப்புற அடிப்படைச் சுவரில்,

...... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில்
பாரிசுரமும் இக்களங்களில்
என்று குறிக்கப் பெற்றுள்ளது.

அதே கோயில் பின்புறம் முகப்பு அடிப்படை முகப்புப் பட்டைத் தொடரில்,

..... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில்
பாரிசுரமும் இவ்ஊர்களில் ....
என்றும் இரு கல்வெட்டுகள் இருக்கின்றன.



இத்தலத்தைப் பற்றியனவாக இருபத்தொரு கல்வெட்டுக்கள் அரசியலாரால் கி.பி. 1903 ஆம் ஆண்டில் படியெடுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் எட்டுக் கல்வெட்டுகள் ஆராய்ந்து முடிவுகட்டப்பெற்றன. ஏனையவை அறியப் பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள் குலசேகர பாண்டியனுடைய ஆட்சி 10, 13 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவற்றை இங்ஙனம் வரையறுத்து எழுதியவர் ஸெவல் பாதிரியார்.

இத்தலத்தில் சுந்தரபாண்டியன் மண்டபம் (இது கருப்பக் கிருகவாயிலில் உள்ளது) ஆறுகால் மண்டபம் (-144 of 1903), லக்ஷ்மி மண்டபம்(-142 of 1903), முதலிய மண்டபங்களும் , விசுவநாதர் கோயில்(-146 of 1903), சுப்பிரமணிய சுவாமி கோயில் (-152 of 1903) முதலியனவும் கோயிலுக்குள் இருக்கின்றன. பிரான்மலைக் கிராமத்தில் ஷ்ரீ சொக்கநாதர் கோயில் உள்ளது(-154 of 1903). இறைவன் மங்கைநாதர்(-138 of 1903) எனவும், கொடுங்குன்றமுடைய நாயனார்(-140 of1903) எனவும், நல்லமங்கைபாகர் எனவும், (-154 of 1903) குன்றாண்ட நாயனார் எனவும்,( -202 of 1924) குறிப்பிடப்பெறுகின்றார்.

பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன் I,சுந்தரபாண்டி யன்II, பராக்ரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் இவர்கள் விளக்குக்காகப் பசுக்களும், பொன்னும், சேவார்த்திகட்கு உணவிற்கும், விளக்குத் தண்டு செய்தற்குமாகப் பொன்னும் நிலமும் அளித்த செய்திகளை அறிவிக்கின்றன; பல கல்வெட்டுக்கள். கி.பி. 1251 – 1264க்குள் ஆண்ட கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி வேளார், பிரபாவபுரந்தரன் ஆகிய இருவரும் நிலம் அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில் பிரான்மலைச்சீமை என்றும், திருமலை நாட்டுப்பகுதியான பிரான்மலை என்றும் குறிக்கப் பெறுகின்றது. திப்பரசரையன் நன்மைக்காகக் கேரளசிங்க வளநாட்டு இப்புலி நாயகர் நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம் இருந்ததாகவும் கல்வெட்டுக் கூறுகிறது(-154 of 1903).



1924 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16. அவற்றுள் ஐந்து, பாண்டியர்கள் காலத்தன. ஏனையவை விசயநகர அரசர்கள் காலத்தன. சடாவர்மன் வீரபாண்டியன் ஆட்சி 9ஆம் ஆண்டில், திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தை எழுந்தருள் வித்துக் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரன் பட்டினத்து அருவியூ ரானான கொடுங்குன்றமுடையான் ஒருவன் பூசைக்கு நிபந்தமும் அளித்தான்(-208 of 1934). குலசேகர பாண்டியன் காலத்தில் கீழ்வேம்புநாட்டு இராசவல்லி புரத்துக் கொன்றைசேர் முடியானும், திருநெல்வேலி யுடையானும் விளக்குக்கு ஆடுகள் அளித்தனர் (-194 of 1924) . கண்ணமங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்; அமோகமங்கலமான முதலி நாயக நல்லூர் உடையான் இருவரும் அர்த்தயாம பூசைக்கு நிலம் அளித் தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வுசெய்யாதான் சந்தியென்று பெயர் (-202 of 1924). காரைக்குடியான் ஒருவன் மங்கைநாயகர் வசந்த உற்சவத்திற்காக வாணராய நல்லூரை இறையிலி செய்து அளித்தான் (-203 of 1924). விஜயநகர அரசர்கள் வேதபாராயணத்திற்காகவும்(-207 of 1924), உற்சவத்திற்காகவும் (-196 of 1924), கானூர் முதலிய இடங்களை அளித்தனர்


பாரி ஆண்ட பறம்பு மலையின் விளிம்பு
தற்காலச் செய்திகள்
பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா். இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

சான்றாதாரம்
கவிஞர் மரு. பரமகுரு எழுதிய பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு என்னும் நூலிலிருந்து தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன


வள்ளல் பாரி ஆண்ட பறம்புமலையினை உடைப்பதா..?
பல்வேறு இயக்கத்தினர் போராட்டம், 65பேர் கைது.
சிவகங்கை மாவட்டம் பிரான்மலை எனும் பறம்புமலை பாரிமன்னர் ஆண்ட தலைநகரமாகும். 2500அடி உயரமுள்ள இந்த மலையின் மீது கோட்டைகட்டி வாழ்ந்ததாலேயே இவர்மீது படையெடுத்து வந்தவர்கள் இவரை வீழ்த்தமுடியாமல் திணறினர். இன்றும் அதன் நினைவாக பாரிவிழா, பாரி வேட்டை போன்ற நிகழ்வுகள் இங்கு நடப்பது வழக்கம். இந்த மலை உச்சியில் முருகர் கோவில், தர்கா மற்றும் வெள்ளையர் காலத்தைய பீரங்கி ஆகியவை உள்ளன. இது ஒரு சுற்றுலாத்தளமாக இருப்பதால் தினம்தோறும் பல சுற்றுலாப்பயணிகளும், கோவில் தர்காவிற்கு ஆன்மீகப்பயணமும் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பறம்பு மலையில் 1500 ஏக்கரினை ஒரு குடும்பத்தினர் தங்களுக்கு பட்டாப்போட்டு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலையின் கடைசிக் குன்றான இந்த மலைகளை தற்போது அவர்கள் கல்லுக்கும ஜல்லிக்கும் மண்ணுக்குமாக இரண்டு குவாரிகள் அமைத்து உடைத்து வருகிறார்கள். 26ஏக்கர் பரப்பளவு மலை முற்றிலுமாக உடைக்கப்பட்டதோடு, தற்போது பெரியகுன்றின் பின்புறம் அதிகமான ஆழத்திற்கு தோண்டி எடுத்துவருகிறார்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மலையினை உடைப்பதை தடுக்கக்கோரி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடி பிரான்மலையில் கூடி போராட்டம் நடத்தினார்கள். இதனால் 65பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று காலையில் காரைக்குடி திருப்பத்தூர் பகுதிகளில் அனைத்து வழிகளையும் காவல்துறையினர் வழிமறித்து போராட்டகுழுக்களை செல்லவிடாமல் தடுத்து ஆங்காங்கே கைது செய்தனர்.

No comments:

Post a Comment