Wednesday 22 July 2020

KATHALIKKA NERAMILLAI MOVIE









 ‘காதலிக்க நேரமில்லை’.

இன்றுவரை இப்படி ஒரு காதல் நகைச்சுவைப் படம் வந்ததில்லை, இனி வரப்போவதுமில்லை என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றது ‘காதலிக்க நேரமில்லை’. பாலையாவுக்கு ‘ஓஹோ புரடெக்‌ஷன்’ நாகேஷ் இயக்குநராகச் செய்யும் ரகளைகளின் உச்சமாக அமைந்தது, அவர் பாலையாவிடம் கதை கூறும் இடம். ‘ஓஹோ புரடெக்‌ஷன் செல்லப்பா கதாபாத்திரத்தை எங்கிருந்து பிடித்தீர்கள்?’ என்று கோபுவைப் பார்ப்பவர்கள் இன்றும் கூடக் கேட்பார்கள்.

அந்தக் கதாபாத்திரத்துக்கான உந்துதல் ‘புதிய பறவை’ படத்தின் இயக்குநர் தாதா மிராசி என்கிறார் கோபு. தாதா மிராசி சிவாஜியின் நெருங்கிய நண்பர். ஒரு முறை, சிவாஜிகணேசன் அவரை கோபுவிடம் அனுப்பி அவர் கூறும் கதையைக் கேட்டு அபிப்ராயம் கூறும்படி கேட்டார்.
தாதா மிராசி கோபுவிடம் கதை சொன்னபோது அவருக்குக் குரல் எழும்பவேயில்லை. வாயால் சத்தம் செய்து, புருவத்தை உயர்த்தி, கண்களை உருட்டி ஒரு மர்மக்கதை சொன்னார். கதை புரியவில்லையே தவிர, அவரது அங்க சேஷ்டைகள் மிக அற்புதமாக இருந்தன. மிமிக்ரி கலைஞரான கோபு, மிராசியின் கோமாளித்தனம் நிறைந்த உடல்மொழியை அப்படியே உள்வாங்கி நாகேஷுக்கு நடித்துக் காட்ட நாகேஷ் அப்படியே பிடித்துக்கொண்டார். ஆனால், நாகேஷின் கதைசொல்லும் காட்சியில் மிஞ்சிவிட்டது, பாலையா கொடுத்த நொடிக்குநொடி முகபாவங்கள்.

மிரண்ட மெஹ்மூத்!

‘காதலிக்க நேரமில்லை’யின் வெற்றி பம்பாயை எட்டிவிட, பலர் அதன் மறு ஆக்க உரிமைக்காகப் போட்டியிட்டனர். ஆனால், சித்ராலயா நிறுவனமே இந்தியிலும் தெலுங்கிலும் எடுக்கும் என்று அறிவித்துவிட்டது. ரவிச்சந்திரன் கதாபாத்திரத்தில் சசிகபூர், அவருக்கு ஜோடியாகத் தமிழ் படத்தில் நடித்த ராஜஸ்ரீ, முத்துராமன் கதாபாத்திரத்தில் கிஷோர்குமார், காஞ்சனா கதாபாத்திரத்தில் கல்பனா நடிக்க, நாகேஷுக்கு மாற்றாக யாரை ஒப்பந்தம் செய்வது என்று பார்த்தபோது வேறு மாற்று இல்லாமல் இருந்தார் இந்தி நகைச்சுவை நடிகர் மெஹ்மூத். பாலையா கதாபாத்திரத்தை ஓம்பிரகாஷ் செய்தார்.இந்தி கலைஞர்கள் அனைவருக்கும் ‘ காதலிக்க நேரமில்லை’ படத்தைப் போட்டு காட்டி, வசனங்களை விளக்கினார் கோபு.

படத்தில் நாகேஷின் நடிப்பைப் பார்த்த மெஹ்மூத், “நாகேஷ் கொடுத்த நடிப்பில் பாதியையேனும் தன்னால் தர முடியும் என்று தோன்றவில்லை” என்று கோபுவிடம் மிரண்டுபோய்க் கூறினார். தலைசிறந்த நடிகரான ஓம்பிரகாஷ் கோபுவைக் கட்டித் தழுவி, “இம்மாதிரி நகைச்சுவைக் காட்சிகள் இந்திப் பட உலகத்துக்குப் புதிது மட்டுமல்ல, புது ரத்தம் பாய்ச்சக் கூடியவை” என்று பாராட்டினார்.திருவல்லிக்கேணி கலாச்சாரக் கழகம் இந்தப் படத்துக்காக நடத்திய பிரம்மாண்ட பாராட்டுவிழாவில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவருக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டத்தை வழங்கியது. ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குப்பின் சித்ராலயா நிறுவனத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.

இந்த நேரத்தில் தன்னைக் காணவந்த ஸ்ரீதரை, மெரினாவில் காந்தி சிலைக்குப் பின்னால் அழைத்துச் சென்று அடுத்த நகைச்சுவையைக் கதையைக் கோபு கூறத் தொடங்கியபோது இடைமறித்த ஸ்ரீதர் “அடுத்து ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையை எழுதியிருக்கிறேன். முதலில் அதை நீ கேள்” என்றார். அந்தப் படம்தான் ‘கலைக் கோவில்’.



பாலமுரளியின் குரலுக்காக…
ஒரு வீணை வித்வான்தான் கதாநாயகன். வீணையைத் தன் காதலியாக நினைத்துப் பாடும் பாடல். ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. படித்தவர், பாமரர் என அனைவரையும் அன்றாடம் முணுமுணுக்க வைத்து பலரையும் பைத்தியம்போல் ஆக்கியது அந்தப் பாடல், மிகப்பெரிய ஹிட் அடித்தது! அதற்குக் காரணம் எம்.எஸ்.வியின் கர்னாடகச் சங்கீதப் புலமை மிகுந்த இசைக் கற்பனை மட்டுமல்ல; அந்தப் பாடலுக்கு ஜீவன் கொடுத்த சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் கம்பீரமான குரலும்தான். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் கூறியதும் ‘ஆபோகி’ ராகத்தில் அந்தப் பாடலுக்கான மெட்டை மிகக் குறைந்த ஸ்ருதியில் கம்போஸ் செய்திருந்தார் விஸ்வநாதன்.29chrcj_song recording ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடல் பதிவின்போது பாலமுரளி கிருஷ்ணா, கோபு, ஸ்ரீதர் right
மெட்டைக் கேட்டுப் பாராட்டிய ஸ்ரீதர், “பாலமுரளி கிருஷ்ணாவின் கம்பீரமான குரலுக்கு இதே ராகத்தில் இன்னும் கொஞ்சம் தூக்கிக் கொடுங்களேன்” என்றார். ஸ்ரீதர் கூறியதை ஏற்ற எம்.எஸ்.வி. ராகத்தை மாற்றாமல் பாலமுரளியின் குரல், அவரது பாடும் திறனுக்கு ஏற்ப உடனே ஸ்ருதியை மாற்றிக் கொடுத்ததுதான் நாம் தற்போதும் கேட்டுவரும் எவர்கிரீன் கிளாசிக் பாடலாக நீடித்த ஆயுளுடன் காற்றில் வலம் வந்துகொண்டிருக்கும் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’.



இந்தப் படத்துக்குப் பின் பாலமுரளி கிருஷ்ணா எந்த ஊரில் எந்தநாட்டில் கிளாசிக்கல் கச்சேரி நடத்தினாலும் அந்த மேடையில் சினிமா பாடல் என்பதைப் பொருட்படுத்தாமல் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடலைப் பாடினால்தான் ரசிகர்கள் அவரை மங்களம் பாட அனுமதிப்பார்கள் என்ற நிலை நீடித்தது.

செதுக்கிய ஸ்ரீதர்

இசையமைப்புக்கு முன் ஸ்ரீதரிடம் ‘கலைக் கோவில்’ படத்தின் கதையைக் கேட்ட ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. படத்தைத் தாமே தயாரிக்க முன்வந்தார். அவருடன் கங்காவும் இணைந்துகொண்டார். கோபு துணை வசனம் எழுதினார். முத்துராமனுக்காக வீணை இசைத்தவர் வீணை வித்வான் சிட்டிபாபு. இதில் ஸ்ரீதர் எனும் தொழில்நுட்பக் கலைஞன் புதிய சிகரத்தைத் தொட்டார். ஒவ்வொரு காட்சியையும் கலைநயத்துடன் செதுக்கி உருவாக்கியிருந்தார். உதாரணத்துக்கு கச்சேரி ஒன்றில் வித்வானாக எஸ்.வி. சுப்பையா வாசிக்கும் வீணை இசையை, விரல்களுக்கும் வீணைக்குமான பந்தத்தை குளோஸ் அப் காட்சிகளால் படமாக்கித் தொகுத்திருந்தது திரையுலகை வியக்க வைத்தது.

‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குப் பிறகு, நாகேஷ், ஸ்ரீதர் படங்களின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராகிவிட்டார். ‘கலைக் கோவில்’ படத்தில், அவருக்கு சபா காரியதரிசி வேடம். அவருக்கு ஜோடி ஜெயந்தி. நடிக்கும்போது செட்டில் இருக்கும் அனைவரையும் சிரிக்கவைப்பாரே தவிர, அவர் நடிப்பில் மட்டுமே கவனமாக இருப்பார். ஆனால், ‘கலைக் கோவில்’படப்பிடிப்பில் நாகேஷ் தன்னை மறந்து ஒரு வசனத்துக்காகச் சிரித்தார். கதைப்படி ராஜஸ்ரீ ஒரு நாட்டியக் கலைஞர். தனது சபா வளர்ச்சிக்காக அவர் நடனத்தை ஒப்பந்தம் செய்ய நாகேஷ் வருவார். ராஜஸ்ரீயை சந்திப்பார்.அவரிடம் “எங்க சபா வளர்ச்சி நிதிக்காக நீங்க நடனம் ஆடணும்” என்பார். அதற்கு ராஜஸ்ரீ “ஓ..எஸ்! அதுக்கென்ன, ஆடிடலாமே. ஒரு பத்தாயிரம் கொடுத்துடுங்க” என்பார். அதிர்ச்சியடையும் நாகேஷ் “நான் சபா வளர்ச்சி நிதிக்காக ஆடச் சொல்றேன். நீங்க என் சபாவையே அழிச்சுடுவீங்க போல இருக்கே” என்பார். படப்பிடிப்பில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு “ டேய் கோபு...எப்படிடா இந்த மாதிரியெல்லாம் எழுதறே...” என்று நினைத்து நினைத்துச் சிரித்தார்.

ஆனால், படம் ஓடவில்லை. படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ்.விக்கு லாபம் கிடைக்கவில்லை. ஸ்ரீதருக்கும் புகழை ஈட்டித் தரவில்லை. ‘கலைக் கோவில்’ படத்தை பற்றி விமர்சித்த பத்திரிகை ஒன்று, ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்று எழுதியது. ஆனால் ஸ்ரீதர் சோர்ந்துவிடவில்லை ‘காதலிக்க நேரமில்லை’ பட விநியோகஸ்தர்கள் பலர், ‘கலைக் கோவி’லைப் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கியிருந்தனர். அவர்களுக்குப் பலத்த அடி என்பதை உணர்ந்து, கணிசமான தொகையைத் திருப்பி வழங்கினார் ஸ்ரீதர். “அந்தக் காலத்தில் ‘கிவ் அண்ட் டேக் பாலிசி’ இருந்தது. இப்போது அந்த உண்மைத் தன்மை இல்லை” எனும் கோபுவுக்கு சினிமாவில் பிஸியான நேரத்தில் சிவாஜியிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அது சினிமாவுக்காக அல்ல!

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு:tanthehindu@gmail.com
.





ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒவ்வொரு திருப்பம் ஏற்படும். அந்தத் திருப்பம் உயர்த்தியும் விடும், சமயத்தில் கீழே தள்ளியும் விடும். அப்படி ஒரு சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டது. என் தாய் வீடான ஏவி.எம் ஸ்டுடியோவில் எடிட்டிங் அப்ரண்டீஸ் ஆக சேர்ந்து உதவி எடிட்டராகி, உதவி இயக்குநராகி, துணை இயக்குநராகி 16 ஆண்டுகாலம் வேலை பார்த்தேன். என் குடும்பத்தினருடன் இருந்த நேரத்தைவிட ஏவி.எம் ஸ்டுடியோவில்தான் அதிக நேரம் இருந்திருக்கிறேன்.
அப்படி ஒரு காலகட்டத்தில் சித்ராலயா கோபுவின் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தை ஏவி.எம். செட்டியார் அவர்கள் பார்த்தார்கள். சிறப்பான அந்த நாடகத்தை வாங்கி படமாக எடுக்க முயற்சித்தார்கள். நாடகத்துக்கு கதை, வசனம் எழுதிய சித்ராலயா கோபுவை வைத்தே, படத்தையும் இயக்க முடிவெடுக்கப்பட்டு அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
படத்தை எடுக்கும் பொறுப்பை ஏவி.எம். செட்டியார் அவர்கள் தன் மூத்த மகன் முருகன் சாரிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் முருகன் சார் என்னை அழைத்து ‘‘இந்தப் படத்தில் சித்ராலயா கோபுவுக்கு உதவி இயக்குநராக பணி புரியுங்கள்’’ என்று கூறினார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நானும், கோபுவும் சமகாலத்தில் வேலை பார்த்த வர்கள். நான் சீனியர் இயக்குநர்கள் பலரிடமும் உதவியாளராக பணிபுரிந் திருக்கிறேன். ஆனால், கோபு அவர்களுடன் உதவி இயக்குநராக வேலை செய்வது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. முருகன் சார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன். அடுத்த நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தேன். எப்போதும் முழு ஈடுபாட்டு டன் வேலை பார்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருப்பவன். ஆனால், இந்தப் படத்தில் என்னால் அப்படி செய்ய முடியுமா என்ற சந்தேகம் வந்தது.
அடுத்த நாள் திங்கள்கிழமை. ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் பணிவுடன் ஒரு கடிதம் எழுதினேன். அதில் ‘‘இவ்வளவு காலம் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை வைத்திருந் ததற்கு நன்றி. வெளியே சென்று படம் இயக்க அனுமதி கொடுக்க வேண்டும்’’ என்று எழுதியிருந்தேன். அதை செட்டியார் அவர்கள் படித்துவிட்டு, ‘‘அவனுக்கு ரொம்ப நாட்களாக வாய்ப்பு கொடுக்கணும்னு இருந்தோம். அதைக் கொடுக்கலை.
வெளியே படம் பண்ணப் போறேன்னு சொல்கிறான். அவனுக்கு முறையே என்னென்ன செய்ய வேண்டுமோ செய்து முழு திருப்தியோடு அவனை அனுப்புங்கள்’’ என்று மகன்களை அழைத்து சொன்னார். ஸ்டுடியோவில் எல்லோரிடமும் பிரியா விடை பெற்று, கடைசியாக சரவணன் சாரைப் பார்க்கப் போனேன்.
‘நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டால் நான் அப்போ தும், இப்போதும், எப்போதும் சொல்கிற ஒரே வார்த்தை ‘ஏவி.எம்.சரவணன் அவர்களை’ என்பதுதான். அவர்தான் என் வழிகாட்டி. அவரைப் பார்த்துதான் வெள்ளை உடை அணிந்தேன். லைட் பாய் தொடங்கி தொழிலபதிபர் வரைக்கும் யார் வீட்டு விஷேசம் என்றாலும் கண்டிப்பாக வாழ்த்துச் சொல்ல சென்று வர வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொண்டுதான் இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.
பத்திரிகையாளர்களை, ஊடக நண்பர்களை அவர் மதிக்கும் பாங்கை பார்த்து மதித்து நடக்கிறேன். கோபத்தை தவிர்க்கிறேன். அனைவரிடமும் அன்பு காட்டுகிறேன். இப்படி நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருவரும் அன்று சந்திக்கும்போது ஒருவித ‘சோகம்’. இருவர் கண்களிலும் கண்ணீர்.
‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பின்போது, ‘‘ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேமராவில் என்ன லென்ஸ் போடுவது என்பதை கேமரா மூலம் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயம் டைரக்டர் வியூ ஃபைண்டர் வந்தது. இதில் பார்த்தால்போதும் கேமராவில் பார்க்க வேண்டியதில்லை. அதனை வாங்குமாறு இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தர் அவர்கள் சரவணன் சாரிடம் கூறினார்கள். சரவணன் சார் என்னை அந்தக் கடைக்கு அனுப்பினார். கடையில் இரண்டு வியூ ஃபைண்டர் மட்டுமே இருந் தன. சரவணன் சாரிடம் சொன்னேன். ‘‘அந்த இரண்டையுமே வாங்கி வந்து விடுங்கள்’’ என்றார். வாங்கி வந்தேன்.
அந்த இரண்டில் ஒன்றை இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரிடம் சரவணன் சார் கொடுத்தார். இன்னொன்றை அவரே வைத்துக்கொண்டார். ‘‘நீங்கள் என்றைக்காவது ஒருநாள் இயக்குநராக வருவீங்க என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறி எனக்கு அந்த வியூ ஃபைண்டரை பரிசாக அளித்தார். அத்தனை ஆண்டுகாலம் அதை அவர் எனக்காக பாதுகாத்து வைத்திருந்தார் என்று நினைக்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. நான் இயக்கிய எல்லா படங்களுக்கும் அந்த வியூ ஃபைண்டரைப் பயன்படுத்தினேன். என் லெட்டர் பேடு, முகவரி அட்டை அனைத்திலும் அந்த வியூ ஃபைண்டரைத் தான் முத்திரையாக வைத்திருக்கிறேன். அந்த அடையாளங்கள்தான் சரவணன் சாருக்கு நான் தெரிவிக்கும் நன்றி. எனக்கு சரவணன் சார்தான் பலம்!
அந்தச் சூழலில்தான் வி.சி.குகநாதன் அவர்கள் ‘‘நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வைத்திருக்கிறேன். அந்த ஸ்கிரிப்ட்டை நீங்கள் இயக்குங்கள்’’ என்று வாய்ப்பளித்தார். அவர் எனக்குக் காலத்தினாற் செய்த உதவி அது. அந்தப் படம் ‘கனிமுத்து பாப்பா’. இந்தப் படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி, ஜெயா, குழந்தை நட்சத்திரமாக தேவி நடித்தார்கள். இசையமைப்பாள ராக ராஜு. என் முதல் ஐந்து படங் களுக்குப் பாடல்களை பூவை செங்குட்டு வன்தான் எழுதினார்.
நான் பெரிய படங்களை இயக்குவதற்குச் சென்ற காலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அதில் எனக்கு இப்போதும் வருத்தம்தான். அண்ணா சொன்னதுபோல் சூழ்நிலைக் கைதியாக ஆனதால் அவரைத் தொடர்ந்து பாடல் எழுத வைக்க முடியாமல் போனது. ‘கனிமுத்து பாப்பா’ நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு வெற்றிப் படமாகவும் பெயர் பெற்றது.
சுப்ரமணிய ரெட்டியார்தான் ‘கனி முத்து பாப்பா’ படத்துக்கு நிதி உதவி செய்தார். அவரைப் பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். படங்களைத் தயாரிப் பதற்கு முன் படப்பிடிப்பு நடக்கும் சினிமா ஷூட்டிங்களுக்கு சென்று என்னென்ன செலவுகள் எப்படி ஆகிறது என்பதை கற்றுக்கொண்டவர். கிட்டத்தட்ட 6 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களையே சுற்றி சுற்றி வந்து எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சினிமா தொழிலுக்கு வந்தார்.
என் இரண்டாவது படம் ‘பெத்த மனம் பித்து’. அது பெண்கள் படம். திரையரங்கில் காலை 11 மணி காட்சிக்கு 75 சதவீதம் பெண்கள் இருப்பார்கள். பெண்கள் மத்தியில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். நடிகையர் திலகம் சாவித்ரியின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமா? 100 நாட்கள் ஓடி விழா கொண்டாடப்பட்டது.
ஏவி.எம்.செட்டியார் அவர்கள் தலைமையில், கலைஞர் கருணாநிதி விருது வழங்க 100-வது நாள். விழா மேடையில் ஏவி.எம்.செட்டியார் அவர்கள், ‘‘இந்தப் படத்தை இயக்கிய முத்துராமன் எங்க வீட்டுப் பிள்ளை’’ என்று பாராட்டினார். அடுத்து பேசிய கலைஞர் அவர்கள், ‘‘என்னோட தொண்டருக்கும் தொண்டன் அண்ணன் இராம.சுப்பையாவின் பையன் முத்துராமன். அவர் எங்களுக்குத்தான் முதல் சொந்தம்’’ என்றார். அன்றைக்கு இருவரும் என்னை உரிமை கொண்டாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. படம் 100 நாள் ஓடியதால் எங்கள் குழுவுக்குத் திரையுலகில் நல்ல குழு என்ற பெயர் வந்தது. அடுத்த கட்டம் என்ன?
- இன்னும் படம் பார்ப்போம்...








மதராஸ் பாஷைக்கு அப்ளாஸ்!

சகஸ்ரநாமம், விஜயகுமாரி, முத்துராமன், பாலாஜி, சந்திரபாபு, மனோரமா, நாகேஷ் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டம். சொந்த மகனான முத்துராமனையே கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துவரும் காவலராக சகஸ்ரநாமம் நடித்தார். விஜயகுமாரிதான் அந்த நேர்மையான போலீஸ்காரரின் மகள். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும், இளம் தென்றலை கேட்கின்றேன், உட்படப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

கவிஞர் கண்ணதாசன், ‘கண்ணிலே நீர் எதற்கு...காலமெல்லாம் அழுவதற்கு’ என்றப் பாடலை பத்தே நிமிடங்களில் எழுதி முடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் அதற்கு மெட்டமைத்தார், ராமமூர்த்தி அந்தப் பாடலுக்கு இசைக்கோவை அமைத்தார். சந்திரபாபு சென்னைவாசிகளே வியக்கும் வண்ணம் சென்னை வட்டார வழக்கில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தார். அதற்காகவே சந்திரபாபுவுக்கு திரையரங்கில் ஸ்பெஷல் அப்ளாஸ்கள் கிடைத்தன. சந்திரபாபு – மனோரமா ஜோடிக்கான வசனங்கள் அனைத்தையும் சென்னை வட்டார வழக்கில் எழுதியிருந்தார் கோபு.

சந்திரபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருந்த முதல்நாள், நகைச்சுவை காட்சிகளை கோபு படித்துக் காட்டியவுடன் அவரையே வெறித்துப் பார்த்த சந்திரபாபு, “கோபு, ஒங்க வூடு எந்த ஏரியாவாண்டே இருக்கு?'' என்று மெட்ராஸ் பாஷையில் கேட்டார். “திர்லகேணி வாத்தியாரே!'' கோபு மெட்ராஸ் பாஷையிலேயே பதிலடி கொடுக்க, சந்திரபாபு சிரித்துவிட்டார்.'' ஆங்ங்…அதான பார்த்தேன்… பேட்டை பாஷை அப்படியே நொம்பி ஊத்துது.! மதராஸ் பாஷை பிறந்ததே. ஜார்ஜ் டவுன், திர்லகேணி, மைலாப்பூர் ரிக்‌ஷா ஸ்டாண்டுலதான் அது தெரியுமா வாத்தியாரே உனக்கு?'' என்று கேட்டார் சந்திரபாபு.

ஆமோதித்த கோபுவுக்கு மதராஸ் பாஷையில் நாட்டம் பிறந்ததே என்.எஸ்.கிருஷ்ணனால்தான். ”மதராஸ்ல ரிக்‌ஷாகாரங்களுக்குனு தனியா ஒரு பாஷை உண்டு. ஒருத்தன் கேட்பான். “இன்னா நைனா… நேத்து உன்னே காணும்.? என்று. அதற்கு ''உடம்பு பேஜார் பிடிச்சுப் போச்சு வாத்தியாரே! ஜல்பு புடிச்சுகிச்சு.!'' என்பார். அதாவது ஜலதோஷம் பிடித்திருப்பதை ஜல்பு என்று சொல்லுவார்கள்!'' என்று என்.எஸ்.கே தனது கிந்தனார் காலாட்சேபத்தில் நகைச்சுவையாகக் கூறுவார்.



உயரத்தை இழந்த உன்னதக் கலைஞன்

கோபு எதிர்பார்த்தபடியே சந்திரபாபு அருமையாக சென்னை வட்டார வழக்கில் பேசி நடித்தார். ஆனால் நிஜவாழ்வில் பிரிட்டிஷ் உச்சரிப்புடன் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதில் தேர்ந்தவர். மிகச்சிறந்த நடனக்கலைஞர். திரை உலகத்துக்கே உரித்தான ‘அண்ணே’ என்று உறவு கொண்டாடி அழைப்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. பெரிய நடிகர்கள் என்றாலும் பெயர் சொல்லித்தான் அழைப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன், சந்திரபாபு, கோபு ஆகிய மூவரிடையே நெருக்கமான நட்பை உருவாக்கியது அவர்களிடம் இருந்த இசை சார்ந்த திறமையும் ரசனையும்.

‘போலீஸ்காரன் மகளில்’ இடம்பெற்ற ‘பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது’ பாட்டை மிகவும் அற்புதமாக அனுபவித்துப் பாடினார் சந்திரபாபு. நடிப்பின் நடுவே அங்க சேஷ்டைகளை செய்வது போல், பாட்டின் நடுவேயும் குரைப்பது, குழைவது என சந்திரபாபு தனது ‘எக்ஸ்ட்ரா’க்களைக் கொடுக்க எம்.எஸ்.வி அனுமதிப்பார். அவர்கள் இருவரிடையே அப்படி ஒரு நெருக்கம். அவர் நடித்திருந்த சில பாத்திரங்களை வேறு யாராலும் ஏற்று நடித்திருக்கவே முடியாது. அவ்வளவு உன்னதமானக் கலைஞன். இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கை அடுத்த கட்ட உயரத்தைத் தொட அவரை அனுமதிக்கவில்லை.

மன்னிப்புக் கேட்ட சகஸ்ரநாமம்

‘போலீஸ்காரன் மகள்’ படப்பிடிப்பில் சுவையான அனுபவங்கள் உண்டு. சகஸ்ரநாமத்திடம் நடிப்பு சார்ந்து ஒரு பழக்கம். நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். ஒரு குறிப்பிட்ட காட்சியில், மகள் விஜயகுமாரியை பெல்டினால் விளாசுவது போன்று காட்சி. விஜயகுமாரி அற்புதமாக முகபாவங்களைக் கொடுத்து நடித்திருந்தார். ஸ்ரீதர் மிகவும் உற்சாகமாகிவிட்டார்.

“கோபு! விஜயகுமாரி என்னமா ஆக்ட் பண்ணிட்டாங்க! சகஸ்ரநாமத்துகிட்ட பெல்டால் அடிவாங்கற காட்சியில் பிச்சு உதறிட்டாங்க!'' என்றார். “பிச்சு உதறினது விஜயகுமாரி இல்லே ஸ்ரீ… சகஸ்ரநாமம்தான்! அவர் நிஜமாவே விஜயகுமாரியை பெல்டால் அடிச்சுட்டாரு. பாவம், அவங்க பொறுத்துகிட்டு நடிச்சாங்க'' என்று கோபு சொன்னதும்தான் அருகில் நின்றிருந்த சகஸ்ரநாமத்துக்கே தாம் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாகவே அடித்துவிட்டதை உணர்ந்தார். அதற்காக விஜயகுமாரியிடம் மன்னிப்பு கேட்டார் அந்த மகா கலைஞர். ‘போலீஸ்காரன் மகள்’ படமும் ஸ்ரீதருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.



அலறிய ஸ்ரீதர்

‘போலீஸ்காரன் மகள்’ வெற்றிக்குப் பிறகு ஸ்ரீதர் ஒருநாள் திருவல்லிக்கேணியில் இருந்த கோபுவின் வீட்டுக்கு வந்தார். அவரை அழைத்துக்கொண்டு கடற்கரை ஐ.ஜி அலுவலகம் எதிரில் காந்தி பீச்சுக்கு போனார். சிலகாலமாகவே கோபுவின் மனதில் ஒரு ஆசை. அதை ஸ்ரீதரிடம் சொல்வதற்கு அதுவே நல்ல தருணம் என்று ஸ்ரீதரிடம் அதைக் கேட்டார்.

“ஸ்ரீ… நாம் ஏன் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை எடுக்கக்கூடாது.'' என்று கோபு கேட்டதும் ஸ்ரீதர் பதறிப் போனார். '' ஜோக் அடிக்காதே கோபு! ‘கல்யாண பரிசு’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ போல கனமான படங்களைக் கொடுத்துட்டு நான் போய் நகைச்சுவை படம் எடுக்கிறதாவது, நோ சான்ஸ்!'' என்றார்.

“நீதானே என்கிட்டே சொன்னே… வாழ்க்கைன்னா ரிஸ்க் எடுக்கணும்னு! அதை நம்பித்தானே நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இந்த ரிஸ்க்கையும் எடுத்து பாரேன்!'' கோபு சொல்லச் சொல்ல, ஸ்ரீதர் பரிசீலிக்கும் தொனியில் சிந்தனையை ஓடவிட்டவர், “சரி.. முயன்று பாப்போம்” என்ற படி ஸ்ரீதரும் கோபுவும் நகைச்சுவை கதை ஒன்றை அங்கேயே அப்போதே அலைகளுக்கு அருகில் அமர்ந்து விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்களின் விவாதத்தில் முழுநீள நகைச்சுவை திரைப்படம் என்ற வகையில் ஒரு பெரிய திருப்புமுனைக்கு அஸ்திவாரமாக அமைந்த திரைப்படத்துக்கான திரைக்கதை பிறந்தது. அந்தப் படம்தான், இன்றுவரை ரசிகர்களின் மனதை விட்டு அகலாமல் இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’.

சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்


.

No comments:

Post a Comment