Tuesday 8 May 2018

KAMALHAASAN - AN EVOLUTION




KAMALHAASAN - AN EVOLUTION 



நான் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ரஜினி பில்லா, முரட்டுக்காளை,கழுகு என மிரட்டிக் கொண்டிருந்தார்.
டீகிளாஸ் · @teakkadai

கமலும் குரு, எல்லாம் இன்ப மயம், சவால் என போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்காமல் கமலைப் பிடித்தது எதற்க்காக என்பதற்கு உளவியலாளார்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் கமல் ரசிகனாக தெருவில் பார்ம் ஆகிவிட்டேன்.

அதற்கடுத்த ஆண்டு சகலகலாவல்லவன் எங்கள் ஊருக்கு வந்தபோது எங்கள் தெருவே விழாக் கோலம் பூண்டது. முதல் நாள் இரவு டேப்ரிக்கார்டரில் படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டேயிருந்தார் எதிர் வீட்டு செல்வம் அண்ணன். அவர் வீட்டு வாசலில்தான் அடுத்த நாள் தியேட்டரில் வைக்கப்படப் போகும் தட்டிகள் தயாராகிக் கொண்டிருந்தன. பழைய சைக்கிள் டயர்களின் உள்ளே எக்ஸ் வடிவத்தில் மூங்கில் தப்பைகளை வைத்து அதை உறுதிப்படித்தி, பின்னர் அதன் மீது வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி தட்டிகள் தயாரிக்கப்படும்.


அதில் சகலகலா வல்லவனைக் காண வரும் கண்களுக்கு நன்றி. இவண் காதல் இளவரசன் கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்று எழுதி கீழே மன்ற உறுப்பினர்களது பெயர்களை எழுதுவார்கள். நான் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென செல்வம் அண்ணன், எழுதிக்கொண்டிருந்தவர்களிடம்

“டேய், இவன் பேரையும் எழுதுங்கடா” என்று சொல்லவும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. அடுத்த நாள் தியேட்டருக்குச் சென்று அதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடுநிலைப் பள்ளி நாட்களிலும், பின்னால் மேல்நிலைப் பள்ளி விடுதி வாழ்க்கையிலும் ரஜினி – கமல் சண்டை என்றாலே கமல் அணியின் முக்கிய தளபதி நான் தான். எந்தப் படம் எவ்வளவு நாள் ஓடியது? வசூல் என்ன? போன்ற விபரங்களுடன் சண்டை போடுவேன்.

பின்னர் கல்லூரிக்குள் நுழைந்ததும் மனம் பக்குவப்பட்டது. எல்லாப் படங்களையும் ரசிக்கும் மனநிலை ஏற்பட்டது. கல்லூரி முதலாண்டு தீபாவளிக்கு தளபதியும் குணாவும் ரிலீஸ். நான் ரஜினி,மணிரத்னம்,மம்முட்டி மற்றும் பாடல்களுக்காக தளபதிக்கே ஓப்பன் ஷோ சென்றேன். அங்கு என்னை எதிர்பாராத ”ராஜபந்தா ரஜினிகாந்த்” ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்.


பின்னர் சென்னை வாசம். பல திரைப்பட கலைஞர்கள், நண்பர்கள், சிறு பத்திரிக்கைகள் தற்போது இணையம் என கமலைப் பற்றி கேள்விப்படாத எதிர்மறை செய்திகள் இல்லை.

யாரையும் மதிக்க மாட்டார், கர்வி, துதிபாடிகள் தான் அண்ட முடியும் என அவரைப் பற்றி கேட்காத செய்திகள் இல்லை.

எனக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள பிரியமானது கடலளவு. இந்த இங்க் பில்லர்களால் அதை எவ்வளவு உறிஞ்ச முடியும்?

இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். கமல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். தேநீர் இடைவேளை முடிந்து பங்கேற்பாளர்கள் அரங்கத்துக்கு உள்ளே சென்று கொண்டு இருந்தனர். கமல் வெளியே நின்று கொண்டிருந்த தன்னார்வலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அருகில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


நீல நிற ஜீன்ஸ், பயிற்சிப் பட்டறை சீருடையான சாம்பல் நிற டி சர்ட், சாதாரண லெதர் செருப்பு, கையில் கறுப்பு நிற டயல் மற்றும் வாருடன் கூடிய வாட்ச். உன்னைப் போல் ஒருவனுக்காக ட்ரிம் செய்யப்பட்ட தாடி. 55 வயதில் 30க்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றத்தில் இருந்தார்.

அங்கே இருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். நான் கமலையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பி ஆர் ஓ நிகில் முருகன் வாங்க போட்டோ எடுத்துக்குங்க என்று அழைத்தார். மிக மகிழ்ச்சியுடன் என் ஆதர்சத்தின் அருகில் சென்றேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்ததும், ”உன்னைப் போல் ஒருவன் தீபாவளி ரிலீஸா” என அவரிடம் கேட்டேன்.

”இல்லை, அதற்கு முன்னாலேயே வந்து விடும்” என பதிலளித்தார். அனேகமாக ஆகஸ்ட் 15க்கு வரும் என நான் நினைத்துக் கொண்டேன்.

அங்கு இருந்த செக்யூரிட்டிகள், உணவு கொண்டுவந்த கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் அனைவரும் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர். கேட்டரிங் உதவியாளர் ஓடிச்சென்று வண்டி டிரைவரையும் கிளீனரையும் அழைத்து வந்தார். அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டு போஸ் கொடுத்தார். பின்னர் பட்டறை நடக்கும் அரங்கத்தின் உள்ளே சென்றார்.

நான் வெளியே வரும் போது, அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்கள் பேசிக் கொண்டார்கள். “ கமல் அப்படி இப்படின்னாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுறாரு, ரொம்பத் தன்மையா இருக்காரு” என.


கேட்டரிங்காரர்களும் அதே கருத்தை எதிரொலித்தார்கள். அங்கு இருந்த தன்னார்வலர்களும் டிட்டோ.

இந்த மாதிரி ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஊற்றுவதால் எனக்கும் கமலுக்கும் இடையேயான பாசக் கடலின் நீர் மட்டம் உயர்ந்துவிடுமா என்ன?

டீகிளாஸ் · @teakkadai

No comments:

Post a Comment