Tuesday 10 April 2018

MORARJI DESAI -A MAN OF DEGNITY , LIVED IN RENTAL HOUSE TILL HIS REGIME BORN 1896 FEBRUARY 29-1995 APRIL 10





MORARJI DESAI -A MAN OF DEGNITY ,
LIVED IN RENTAL HOUSE TILL HIS REGIME 
BORN 1896 FEBRUARY 29-1995 APRIL 10




வாழ்நாளில் சொந்த வீடு கூட இல்லாத கடைசி இந்திய பிரதமர் இவரே பிரபல முன்னாள் பாரத பிரதமர் மொரார்ஜி தேசாய் 1995 ஏப்ரல் 10 இல் மரணம் அடைந்தார்

பிரிக்கப் படாத பழைய பம்பாய் மாநிலத்தின் முதல்வராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது, அவருடைய அன்பு மகள் இந்து, மருத்துவக் கல்லூரியில் இறுதித்தேர்வு எழுதி முடித்தாள்.

முதல்வகுப்பில் தேர்ச்சிபெறும் தகுதி மிக்க இந்து, தேர்வில் தவறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை மறுத்த சகமாணவிகள் இந்துவை தேர்வுத்தாளின் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், மொரார்ஜி தேசாய் அதை மறுத்துவிட்டார்.

'மறுமதிப்பீடு செய்து, தாளைத்திருத்திய ஆசிரியரின் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, உரியமதிப்பெண்களைப் பெற்று.. உன்தகுதி காரணமாகவே நீ தேர்ச்சியடைந்தாலும், முதல்வராக உள்ள நான் அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியதாக சமூகம் அர்த்தப்படுத்தி பழிதூற்றும்.

இந்தமுயற்சியைக் கைவிட்டு அடுத்துவரும் தேர்வுக்கு உன்னை ஆயத்தம்செய்வது தான் சரியானது என்று மொரார்ஜி தேசாய் சொன்னதும், மனம் உடைந்த இந்து தற்கொலை செய்துகொண்டார்.

கீதையின் பாதையில் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட மொரார்ஜி மகளின் இழப்பை மெளனமாகத் தாங்கிக்கொண்டார். பொதுவாழ்வில் தூய்மை என்பதற்கு தனதுமகளை பலிகொடுத்து முன்னுதாரனததை ஏற்படுத்தியவர் மொரார்ஜிதேசாய். இப்போதைய அரசியல் வாதிகளை சற்றே எண்ணிப்பாருங்கள்.

குஜராத் மாநிலத்தை உள்ளடக்கிய பம்பாய்மாகாணத்தின் முதல்வராகவும், இந்தியாவின் நிதி மந்திரியாகவும், பிரதமராகவும் பணியாற்றிய மொரார்ஜி, தன்நெடிய வாழ்வின் இறுதிநாட்களில் பலர்வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒருவாடகை வீட்டில் வசித்தார். வீட்டின் உரிமையாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தேசாயின் குடும்பம் வெளியேறவேண்டும் என்று தீர்ப்புரைத்தது.

அதிர்ச்சியிலும் அவமானத்திலும் உறைந்துபோன மொரார்ஜியின் மருமகள் மனநிலை பாதிக்கப்பட்டு மாடியிலிருந்து கீழேவிழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்திய பிரதமராக இருந்தவர்க்கு சொந்தவீடில்லை என்பது இதிகாசச்செய்தி அன்று. நம் கண்முன்னே கண்டநிஜம்.

ஆனால், தமிழ்நாட்டு மேடைகளில் 'மொரார்ஜி மில்' தேசாய்க்கு சொந்தம் என்று பொய்யை கடைவிரித்தவர்கள், இன்று ஆலை அதிபர்களாக, சோலைமிராசுகளாக சொர்க்கவாழ்வு வாழ்கின்றனர். 

என்ன நண்பர்களே! அதிர்ச்சியாக இருக்கின்றதா? 
நம்பவே முடியவில்லையா? 
ஆனால் இதுதான் நிஜம்






நேர்மையான அரசியல் தலைவர், முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய் (Morarji Desai) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பம்பாய் மாகாணத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் (தற்போது குஜராத்தில் உள்ளது) 1896-ல் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். கடின உழைப்பையும், நேர்மை தவறாத கண்ணியத்தையும் அவரிடம் கற்றார்.

* சிவில் சர்வீசஸ் தேர்வில் 1918-ல் வெற்றி பெற்று துணை ஆட்சியராக 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1930-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார்.

* மாகாண தேர்தல்களில் 2 முறை வெற்றி பெற்று, வருவாய், உள்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.

* பம்பாய் மாகாண முதல்வராக 1952-ல் பொறுப்பேற்றார். ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று மத்திய அரசில் வணிகம், தொழில் துறை அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். இந்திரா காந்தியின் ஆட்சியில் துணை பிரதமராகப் பணியாற்றினார்.

* காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். 1975-ல் அவசர நிலையை எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு, ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையை ஏற்று ஜனதா கட்சியில் இணைந்தார்.


* நாட்டின் 4-வது பிரதமராக 1977-ல் பொறுப்பேற்றார். ஜனநாயகத்தை நிலைநாட்ட முழு முயற்சி மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு, தனிநபர் சுதந்திரத்தை நிலைநாட்டினார்.

* விவசாயத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நிலவரிக் குறைப்பு, மானியம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்தார். விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வகைசெய்து, நல்ல விலை கிடைக்கச்செய்தார். கட்டாய வேலைவாய்ப்பு மூலம் கிராமங்களில் சாலை போடுதல், பாசன வசதி போன்ற பணிகள் செய்யப்பட்டன. இதில் பணியாற்றிய மக்களுக்கு சம்பளத்துக்கு பதில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

* ‘ஜனதா’ சாப்பாடு திட்டம் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைத்தது. தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதார நிலையை சீரமைத்தார். உள்நாட்டு சிறு தொழில், வணிகத் துறைகளை ஊக்கப்படுத்தினார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை நிலைநாட்டினார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கியது இவரது மாபெரும் சாதனை.

* சில அரசியல் விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால் இரண்டே ஆண்டுகளில் இவரது அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலகினார். தனது சித்தாந்தங்கள், கொள்கைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்.


* இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ இவருக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் இதற்கு இணையாக கருதப்படும் ‘நிஷான் இ பாகிஸ்தானி’ விருதும் பெற்றவர். இந்த 2 விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் இவர் மட்டுமே. பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையுடன் செயல்பட்ட கறைபடாத அரசியல் தலைவரான மொரார்ஜி தேசாய் 99-வது வயதில் (1995) மறைந்தார்.





முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து பலருக்கு
மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

நேர்மையான மனிதர். உண்மையான காந்தீயவாதி.
வெள்ளைக்காரர் காலத்தில்,1930ல் – தனது ஐசிஎஸ்
பதவியை தூக்கி எறிந்துவிட்டு இந்திய சுதந்திர
போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகி
என்று ஒரு பக்கமும் –

பழமைவாதி. பிற்போக்காளர். பிடிவாதக்காரர். 
யாருடனும் ஒத்துப்போக மாட்டார் – என்று மறுபக்கமும்
அவர் குறித்து விமரிசனங்கள் உண்டு.

இந்த இரண்டு வித கருத்துக்களுமே அவருக்குப் பொருந்தும் –
என்பது என் கருத்து.
பிப்ரவரி மாதம் 29ந்தேதி பிறந்ததாலோ என்னவோ –
மிகவும் வித்தியாசமான மனிதர்.

இறுதி வரை சத்தியத்தைக் கடை பிடித்தவர்,
விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் தன் கொள்கைப்படியே
இறுதி வரை நடந்தவர் – தற்கால அரசியலுக்கு சற்றும்
பொருத்தம் இல்லாதவர் என்றும் சொல்லலாம்.

துவக்கத்தில், அவரை எனக்குப் பிடித்ததில்லை.
அவர் conservative ஆக இருந்தார்.
மிகவும் பிடிவாதக்காரராக இருந்தார்.

ஆனால் அவரிடம் நேர்மை இருந்தது.
எளிமை இருந்தது.
சத்தியம் இருந்தது.
தான் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லும்
தைரியம் இருந்தது.

இந்த குணங்களே பிற்காலத்தில் நான் அவர் மீது
பெரும் பற்று கொள்ளக் காரணங்களாக இருந்தன.
இந்த காலத்தில்  அரசியல்வாதிகளிடம் இத்தகைய
குணங்களை எங்கே காண முடிகிறது ?

1966-ல் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி
திடீரென்று காலமானதும், காங்கிரஸ் கட்சி
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில்
இருந்தது. தலைவர் காமராஜ் அவர்கள் தான் அப்போது
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பில்
இருந்தார். இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் இருவருமே
பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். ஒருவேளை காமராஜர்
மொரார்ஜியை ஆதரித்திருந்தால், மொரார்ஜி
பிரதமர் ஆகி இருப்பார். காமராஜரின் வார்த்தைக்கு
அந்த அளவு அப்போது செல்வாக்கு இருந்தது.
உண்மையில், திருமதி இந்திராவை விட அதிகமாகவே
மொரார்ஜி பிரதமர் பதவி வகிக்க தகுதியுள்ளவராக 
இருந்தார்.


ஆனால் –
மொரார்ஜி பிடிவாதக்காரர் – மற்றவர்களை 
அனுசரித்துப்போக மாட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக,
தலைவர் காமராஜர் இந்திராவை ஆதரித்தார்.
இந்திராவும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(பிற்பாடு, காமராஜரே ஒரு சமயத்தில் இதை 
வெளிப்படையாகக் கூறினார் )

இருந்தாலும், கட்சியில் நல்ல செல்வாக்கு உடையவராக
இருந்த மொரார்ஜி தேசாயும் அமைச்சரவையில்
பங்கு பெற வேண்டும் என்கிற கருத்து
நிலவியதால், மொரார்ஜி தேசாய் துணைபிரதமராகவும்,
நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மொரார்ஜி தேசாயை வெளியே தள்ள தகுந்த சந்தர்ப்பத்திற்காக
காத்திருந்த திருமதி இந்திரா காந்தி,14 பெரிய வங்கிகளை
நாட்டுடைமை ஆக்கும் சமயத்தில்,மொரார்ஜியை 
பிற்போக்குவாதி என்று குற்றம் சாட்டி, மொரார்ஜியுடன் 
கலந்து ஆலோசிக்காமலே நிதியமைச்சர் பொறுப்பை 
அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டார். சுயமரியாதையை
காத்துக் கொள்ள மொரார்ஜி தேசாய் தன் பதவியை ராஜினாமா
செய்ய வேண்டியதாயிற்று.

இவர் இனி தன் வாழ்நாளில் மீண்டும் அமைச்சர் ஆகவோ,
பிரதமர் பதவி குறித்தோ கனவு கூட காணவோ இயலாது
என்பது தான் அப்போது பெரும்பாலானவர்களின் கருத்தாக 
இருந்தது.

அதன் பின்னர், 1975-ல் திருமதி இந்திரா காந்தியின்
தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு
அளித்ததும், அதையடுத்து இந்திரா காந்தி எமெர்ஜென்சியை
கொண்டு வந்ததும் பரபரப்பான நிகழ்வுகள்.

26 ஜூன் 1975 அன்று உள்நாட்டு எமெர்ஜென்சி 
அறிவிக்கப்பட்டதும், ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கி,
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் 
அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மொரார்ஜியும் அடக்கம்.

எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட மறுநாள் பெரும்பாலான 
செய்தித்தாள்கள் வெளிவரவில்லை. மக்கள் செய்தி அறிய
துடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தொலைக்காட்சிகளும்
கிடையாது. ஆல் இந்திரா ரேடியோ என்று கூறப்பட்ட 
அகில இந்திய வானொலி தருவது தான் செய்தி …!

நான் அப்போது மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில்
இருந்தேன்.  ஒரு ஓட்டலில் தங்கி இருந்தேன்.
பரபரப்பான சூழ்நிலை – நான் பக்கத்து அறையில் தங்கி
இருந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு
இந்தி பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர் என்று தெரிய 
வந்தது.  முதல் நாள் இரவு மொரார்ஜி தேசாய் கைது
செய்யப்பட்ட காட்சியை அவர் கீழ்க்கண்டவாறு வர்ணித்தார்.

இரவு(அதிகாலை..?) 2 மணிக்கு மொரார்ஜியின்
இல்லத்தை போலீஸ் சூழ்ந்திருக்கிறது. உறக்கத்திலிருந்த 
அவரை எழுப்பி, நாட்டில்  எமெர்ஜென்சி 
பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கைது 
செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.

அவர்களிடம் –அதிகாலை ஆகிவிட்டதால், குளித்து –
பூஜை முடித்துக்கொண்டு வர  அரை மணி நேரம் அவகாசம் 
கேட்டிருக்கிறார் மொரார்ஜி. அவர்கள் ஏற்றுக் கொண்டதும்,
தன் காலைப்பணிகளை முடித்துக் கொண்டு, அவர்களுடன்
சிறைக்கு புறப்படத் தயாராக வெளியே வந்திருக்கிறார்.
அதற்குள்ளாக சில பத்திரிகை நிருபர்கள் எப்படியோ அங்கு
வந்தடைந்து, மொரார்ஜியிடம் நாட்டில் எமெர்ஜென்சி
பிரகடனம் செய்யப்பட்டுள்ளது பற்றி கருத்து கேட்கிறார்கள்.
அதற்கு மொரார்ஜி சொன்ன இரண்டே வார்த்தைகள் –
“விநாச காலே – விபரீத புத்தி”.

இந்த விவரங்களையும், அதைத் தொடர்ந்து நாட்டில்
நிலவிய கடுமையான சூழ்நிலையும் திருமதி இந்திராவின்
மீது கோபமும், எரிச்சலும் உண்டாக்கினாலும், மொரார்ஜி 
தேசாயைப் பொறுத்த வரை அரசியல் எதிர்காலம் 
ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்றே அப்போது தோன்றியது.

ஆனால் – இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எமெர்ஜென்சி 
விலக்கிக் கொள்ளப்பட்டதும், அதன் பின்னர் நடந்த 
தேர்தலில்  மொரார்ஜி தேசாய் பிரதமராக 
தேர்ந்தெடுக்கப்பட்டதும் – மொரார்ஜி தேசாய்க்கு கிடைக்க 
வேண்டிய நியாயம் கிடைத்து விட்டது என்றே தோன்றியது.

என்ன தான் பழமைவாதியானாலும், பிடிவாதக்காரரானாலும் –
அரசியலில் அவரைப் போன்ற  நேர்மையான மனிதர்களைக்

காண்பது மிகவும் அரிது என்றே சொல்ல வேண்டும்



அண்மையில் – துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள் 
ஒரு பேட்டியில், மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறித்த
தன் நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். அதிலிருந்து
குறிப்பிடத்தக்க சில பகுதிகள் –


மொரார்ஜிக்கும், சரண்சிங்கிற்கும் அப்போது கருத்து
வேறுபாடு. அவர் தன்னை மதிக்கவில்லை என்பது
சரண்சிங்கின் மனக்குறை. அவர்கள் இருவருக்கும் இடையில்
சமாதானத்தை உருவாக்க நான் முயற்சித்தேன்.
சரண்சிங்கை சந்தித்துப் பேசினேன். அப்போது மொரார்ஜியைப்
பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சி அளித்தது.

“மொரார்ஜி எனக்கு ஏன் மரியாதை தரவில்லை தெரியுமா ?
அவர் பிராமணர் – நான் பிராமணன் இல்லை. அதுதான்
காரணம்”.

மொரார்ஜி பிராமணராக இருந்தாலும் பூணூல் போடுவதில்லை.
பல சடங்கு, சம்பிரதாயங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

சுதந்திரத்திற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொரார்ஜி
போட்டியிட்டபோது, அவர் பூணூல் அணியாததைக் குறிப்பிட்டு
அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் பிரச்சாரம் செய்தபோது,
மொரார்ஜி மேடை ஏறிப் பேசினார்.

” நான் பூணூல் போடுவதில்லை. அது மட்டுமில்லை.
மற்ற ஜாதியினரை விட பிராமணன் உயர்ந்தவன் என்று
நான் நம்பவில்லை. பூணூலுக்கு தான் ஓட்டு என்றால் –
என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள்.
நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்குப் போடுங்கள் ”

இப்படிப்பட்ட மொரார்ஜியைப் பற்றி சரண்சிங் சொன்னதும்
நான் அவரிடம் சொன்னேன் –

“நீங்கள் என்னிடம் மட்டும் எப்படி மனம் விட்டு பேசுகிறீர்கள் ?
நானும் பிராம்மணன் தான்”

நான் சொன்னதும் என்னுடைய கையைப் பிடித்து இழுத்து
தன் நெஞ்சில் வைத்துக் கொண்டார் சரண்சிங்.

“நீ நல்ல பிராமணன்”

எனக்கு சிரிப்பதா, அழுவதா – என்று தெரியவில்லை !

………

(ஒரு முறை)  நான் டெல்லியில் தங்கி இருந்த ஓட்டலுக்கு
போன் வந்தது. மும்பையிலிருந்து மொரார்ஜி பேசினார்.

“நாளைக்கு காலையில் நான் மெட்ராஸுக்கு போறேன்.
நீ வந்தால் நன்றாக இருக்கும்”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படியோ டெல்லியில்
இருந்த நண்பர் மூலம் விமான டிக்கெட் வாங்கி அன்றிரவே
சென்னைக்கு திரும்பி, மறுநாள் காலை ஏர்போர்ட்டுக்குப்
போய் விட்டேன். அன்றைக்கு மொரார்ஜிக்கு சென்னையில்
ஒரு கூட்டம் இருந்தது. ஜனதா கட்சிக்காக அவர் பேசுவதாக
இருந்தது.  திமுக வுடன் அப்போது ஜனதா கூட்டணி 
வைத்திருந்தது.

ஏர்போர்ட்டில் என்னைத் தவிர வேறு யாருமே அவரை 
வரவேற்க வரவில்லை. ஜனதா கட்சிப் பிரமுகர்கள் 
யாரும் வராதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்ன .. ஜனதா கட்சியிலிருந்து யாரும்
வந்திருக்கிறார்களா” என்ற அவர், நான் “இல்லை”
என்றதும், என்னைப் பார்த்தபடி “எதுக்கு உன்னை 
வரச்சொன்னேன் -புரிகிறதா ” என்றார் சிரித்தபடி …

“நான் உன் வீட்டிலேயே தங்கிக்கறேன். வா போகலாம்”
என்று சொல்லிக்கொண்டே என்னுடைய காரில்
ஏறிக் கொண்டார்.

…..

திமுக வுடன் ஜனதா அப்போது கூட்டணி வைத்திருந்தாலும்,
திமுக வுக்காக தான் பிரச்சாரம் பண்ண மாட்டேன் என்று 
திடமாகச் சொல்லி விட்டார்.

மொரார்ஜி தமிழகத்திற்கு வந்து –
ஒரு ஜனதா கட்சிக் கூட்டத்தில் பேசினால்,
ஒரு திமுக கூட்டத்திலும் பேச வேண்டும்.
இல்லையென்றால் அவர் எங்கும் பேசக்கூடாது என்று 
சொல்லி விட்டார்கள். உடனே தமிழகத்தில் இருந்த 
எல்லா ஜனதா கட்சித்தலைவர்களும் அதை ஆமோதித்து
ஒதுங்கி விட்டார்கள். மொரார்ஜி கலந்து கொள்ள இருந்த
போஸ்டர்கள் கூட கிழிக்கப்பட்டு, அன்று மாலையில்
நடக்கவிருந்த கூட்டத்திற்கான அறிகுறியே தெரியாமல்
பண்ணி விட்டார்கள்.
நெல்லை ஜெபமணியும் மற்றவர்களும் இதை சங்கடத்துடன்
மொரார்ஜியிடம் விளக்கிச் சொன்னார்கள்.
“இது எதிர்பார்த்தது தான். அதனால் தான் சோவை
டெல்லியிலிருந்து இங்கே கிளம்பி வரச் சொன்னேன்”
என்ற மொரார்ஜி என்னிடம் “இன்றைக்கு சாயந்திரமே
பம்பாய்க்கு ப்ளைட் டிக்கெட் வாங்கி விட முடியுமா”
என்று கேட்டார்.

நானும் அவருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஏர்போர்ட்டுக்கு
அவருடன் காரில் போனேன்.

“நான் ப்ரைம் மினிஸ்டராக இருந்தபோது எத்தனை தடவை
என்னைப் பார்க்க வந்திருப்பே ?”

“தெரியாது. பல தடவை வந்திருக்கேன்.”

ஒரு தடவையாவது என்னை பார்க்க வர்றப்போ ஒரு 
பூச்செண்டோ, பொன்னாடையோ கொண்டு வந்திருக்கியா?”

“இல்லை”

“ஏன் கொண்டு வரலை ?”

“அது ஒரு போலித்தனமான மரியாதங்கறது என்னோட
அபிப்பிராயம். அந்த வழக்கம் எனக்கில்லை. அதோடு
அப்படி எல்லாம் நடந்துக்கறது எனக்கு கூச்சமா இருக்கும்”.

“ஏன் இதைக் கேட்டன்னா நீ அன்னைக்கும் அப்படித்தான்
வந்தே. இன்னைக்கும் அப்படித்தான் வந்திருக்கே.
ஆனா இங்கே உள்ள மத்தவங்க எப்போ என்னை பார்க்க
வந்தாலும் பொன்னாடை, பூச்செண்டோட தான் என்னைப் 
பார்க்க வந்திருக்காங்க. அவங்க தான் இன்னைக்கு வரலை.

அவங்க மரியாதை காட்டியது எனக்குக் கிடையாது.
நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு”  – என்று
சொல்லி விட்டு சிரித்தார்.

அவரிடம் எப்போதும் மனதில் உள்ளதை பேசலாம்.
விவாதம் பண்ணலாம். பிரதமர் பதவியில் இருந்தபோதும்,
இல்லாத போதும் ஒரே மனநிலை தான். சொன்னபடியே
வாழ்ந்த உயர்ந்த மனிதர் அவர்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்னால் அவரைப்
பார்தபோது கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார்.

பிரதமர் பதவி வரை பல பொறுப்புகளை வகித்த
மொரார்ஜி கடைசி வரை வாடகை வீட்டிலும்,

அரசு ஒதுக்கித்தந்த வீட்டிலும் தான் வாழ்ந்தார் … !!!

No comments:

Post a Comment