Saturday 7 April 2018

WORLD HEALTH DAY உலக சுகாதார நாள்



WORLD HEALTH DAY
உலக சுகாதார நாள் 



சுகாதாரம் (Hygiene) அல்லது வழக்குமொழியில் சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். தற்கால மருத்துவ அறிவியலில் வெவ்வேறு நோய்நிலைகளுக்கு குறிப்பிட்ட சுகாதார சீர்தரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் சுகாதாரம் குறித்த வரையறை வெவ்வேறு பண்பாடு, பாலினம் மற்றும் முதுமைக் குழுக்களில் மாறுபடுகின்றது. சில வழமையான சுகாதாரச் செய்கைகள் நல்ல பழக்கங்களாகவும் சுகாதாரம் பேணாமை வெறுப்பை ஊட்டுவதாகவும் மரியாதைக் குறைவாகவும் சிலநேரங்களில் அச்சுறுத்தலாகவும் சமூகத்தால் எடுத்துக்கொள்ளப் படுகிறது.


ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள்
யாருக்குத்தான் வியாதியோடு வாழ பிடிக்கும். வியாதி வரும்போது நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். நம்மால் பள்ளிக்குப் போக முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. வீட்டை சரியாக கவனித்துக் கொள்ள முடியாது. ஒருவேளை, நம்முடைய வருமானம் குறையலாம். அதுமட்டுமல்ல, யாராவது ஒருவர் கூடவே இருந்து நம்மை கவனித்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சிகிச்சைக்கும் மருந்து மாத்திரைக்கும் பணத்தை வாரியிறைக்க வேண்டியிருக்கலாம்.

“வருமுன் காப்போம்” என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த பழமொழி சொல்வதுபோல், சில முயற்சிகளை எடுக்கும்போது நோய் வருவதைக் கட்டுப்படுத்தலாம். அப்படியே வந்தாலும் அதன் பாதிப்புகள் அதிகமாகாதபடி பார்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியமாக வாழ என்ன செய்யலாம்? 5 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

 1 சுத்தமாக இருங்கள்
நம் உடலையும் பற்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்

‘தொற்று நோய் தாக்காமல், ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிறீர்களா? அதற்கு, கைகளைக் கழுவுவது மிகமிக முக்கியம்’ என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் அறிக்கை செய்திருக்கின்றன. கைகளை வைத்துக் கண்ணை கசக்கும்போது மூக்கை தேய்க்கும்போது, கைகளில் உள்ள கிருமிகளால் சளி-காய்ச்சல் போன்றவை எளிதில் தொற்றிவிடும். அதனால் நாம் எப்போதுமே கைகளைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் மோசமான வியாதிகள் பரவுவதைக்கூட குறைக்கலாம். ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்கு கீழுள்ள சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளால் இறந்துபோகிறார்கள். கைகளை கழுவுவதன் மூலம், எபோலா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவுவதைக்கூட குறைக்கலாம்.

நாம் எல்லாருமே ஆரோக்கியமாக இருப்பதற்கு கைகளை கழுவ வேண்டும். அதுவும், ஒருசில சமயங்களில் கைகளை கழுவுவது மிகமிக முக்கியம். எப்போதெல்லாம் நாம் கைகளை கழுவ வேண்டும்:

கழிப்பறையைப் பயன்படுத்திய பின்பு.

குழந்தைகளுக்கு ‘டயாப்பர்’ மாற்றிவிட்ட பின்பு; அவர்கள் கழிப்பறையைப் பயன்படுத்த உதவி செய்த பின்பு.

காயத்திற்கு மருந்து போடுவதற்கு முன்பும் பின்பும்.

நோயாளிகளை பார்ப்பதற்கு முன்பும் பின்பும்.

உணவை சமைப்பதற்கு, பரிமாறுவதற்கு, சாப்பிடுவதற்கு முன்பு.

தும்மிய பின்பு, இருமிய பின்பு, மூக்கை சிந்திய பின்பு.

விலங்குகளை தொட்ட பின்பும் விலங்குகளின் கழிவை அகற்றிய பின்பும்.

குப்பைகளை கொட்டிய பின்பு.

கைகளை சுத்தமாக கழுவுவது ரொம்ப முக்கியம். பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு நிறைய பேர் கை கழுவுவது இல்லை. அப்படியே கழுவினாலும் நன்றாக கழுவுவது இல்லை என்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. கைகளை நன்றாக கழுவுவது எப்படி?

குழாய்களில் வரும் தண்ணீரில் கைகளை நனைக்க வேண்டும். பிறகு சோப்பு போட வேண்டும்.

நுரை வரும்வரை கைகளை நன்றாக தேய்க்க வேண்டும். நகங்கள், கட்டை விரல்கள், விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகள், கைகளின் பின்புறம் ஆகியவற்றையும் நன்றாக தேய்க்க வேண்டும்.

குறைந்தது 20 நொடிகள் கைகளை தேய்க்க வேண்டும்.

குழாயிலிருந்து வரும் சுத்தமான தண்ணீரில் சோப்பு நுரை போகும்வரை கைகளை கழுவ வேண்டும்.

சுத்தமான துணியை வைத்து அல்லது டிஷ்யு பேப்பரை வைத்து கைகளை துடைக்க வேண்டும்.

இந்த சாதாரண விஷயங்களை செய்தாலே நிறைய நோய்கள் வராமல் தடுக்க முடியும். உயிரையும் காப்பாற்ற முடியும்.

 2 சுத்தமான தண்ணீரை பயன்படுத்துங்கள்

சுத்தமான தண்ணீர் இருக்கும் குவளையும் எலுமிச்சம் பழ துண்டுகளும்
சில நாடுகளில் தண்ணீர் கிடைப்பதே திண்டாட்டமாக இருக்கிறது. வேறு சில நாடுகளில் தண்ணீர் வசதி இருந்தாலும், சுத்தமான தண்ணீர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது. எப்படி? உதாரணத்துக்கு புயல், வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படும்போது, தண்ணீர் குழாய்கள் உடையும்போது தண்ணீர் அசுத்தமாகிறது. எந்தவொரு நாட்டில் நாம் வாழ்ந்தாலும் சரி சுத்தமான தண்ணீர் கிடைப்பது ஒரு சவால்தான். நமக்கு கிடைக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை என்றால், அல்லது நாம் தண்ணீரை சரியாக சேமித்து வைக்கவில்லை என்றால் தண்ணீரில் கிருமிகள் பெருகும். இதனால் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு, ஹெப்படைடிஸ் (Hepatitis) போன்ற நோய்களும் வரலாம். அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் ஒரு வருடத்திற்கு சுமார் 170 கோடி பேர் வயிற்றுப்போக்கினால் அவதிப்படுகிறார்கள் என அறிக்கைகள் காட்டுகின்றன.

சில முயற்சிகளை எடுத்தால் வியாதிகள் வருவதைக் கட்டுப்படுத்தலாம். அப்படியே வியாதிகள் வந்தாலும் அதன் பாதிப்புகள் அதிகமாகாதபடி பார்த்துக் கொள்ளலாம்

காலராவால் பாதிக்கப்பட்ட நபருடைய கழிவு, தண்ணீரில் கலக்கும்போது தண்ணீர் மாசடைகிறது. மற்றவர்கள், இந்த தண்ணீரை குடிப்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும்போது அவர்களுக்கும் காலரா வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போதும், பேரழிவுகள் தாக்கும்போதும் நாம் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த முடியுமா? முடியும். சில வழிமுறைகளைப் பாருங்கள்.

குடிநீர் மட்டுமல்லாமல், பல் தேய்ப்பதற்கு, துணி துவைப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு, சமைப்பதற்கு, ஐஸ் கட்டி செய்வதற்கு பயன்படுத்தும் தண்ணீர்கூட சுத்தமாக இருக்க வேண்டும். பொது குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் சரியாக சுத்திகரிக்கப்பட்டு இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள். அது கிடைக்கவில்லை என்றால், தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் சீல் செய்யப்பட்ட பாட்டில்களில் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.

ஒருவேளை பொதுக் குழாய்களிலிருந்து வரும் தண்ணீர் மாசடைந்திருந்தால் தண்ணீரைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்துங்கள். அல்லது ஏதாவது கெமிக்கலைப் பயன்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்துங்கள்.

குளோரின் போன்ற கெமிக்கலைப் பயன்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்தும்போது, தயாரிப்பாளர் கொடுத்திருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

தரமான தண்ணீர் வடிகட்டிகளை (வாட்டர் ஃபில்டர்களை) பயன்படுத்துங்கள்.

சுத்தமான பாத்திரங்களில் தண்ணீரை சேமியுங்கள். அந்த பாத்திரங்களை நன்றாக மூடி வையுங்கள்.

தண்ணீரை மொண்டெடுக்க சுத்தமான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை தொடும்போது, கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்; சேமித்து வைத்திருக்கும் தண்ணீருக்குள் ஒருபோதும் விரல்களை விடாதீர்கள்.

 3 சத்தான உணவை மட்டும் சாப்பிடுங்கள்

சத்தான, விதவிதமான உணவு வகைகள்
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு ஊட்டச்சத்து மிகமிக அவசியம். அதற்கு சத்தான, சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். நம்முடைய உணவில் உப்பு, சர்க்கரை, போன்றவை அளவாக இருக்க வேண்டும், கொழுப்புச்சத்து குறைவாக இருக்க வேண்டும். பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். விதவிதமான உணவு வகைகளை சாப்பிடுங்கள். பாலீஷ் செய்யப்படாத அரிசி வகைகளை மட்டுமே சாப்பிடுங்கள். பிரெட், பாஸ்தா, சீரியல் போன்றவற்றை வாங்கும்போது அவை முழு தானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். முழு தானியங்களில் அதிக ஊட்டச்சத்தும் நார்ச்சத்தும் இருக்கின்றன. கொழுப்பு அதிகம் இல்லாத இறைச்சி, மீன் போன்றவற்றில் புரோட்டீன் அதிகமாக இருக்கிறது. முடிந்தால் வாரத்திற்கு இருமுறை மீன் சாப்பிடுங்கள். சில நாடுகளில் புரோட்டீன் நிறைந்த காய்கறிகள் கிடைக்கின்றன. அவற்றை சாப்பிடுவதும் நல்லது.

சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை கூடும். இதை தவிர்ப்பதற்கு, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை குடிப்பதற்குப் பதிலாக தண்ணீரைக் குடியுங்கள். இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்களை சாப்பிடுங்கள். இறைச்சி, வெண்ணை, கேக், சீஸ், பிஸ்கட், சாஸேஜ் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது, அதனால் அவற்றை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வெண்ணெய், நெய் போன்றவற்றை வைத்து சமைப்பதற்குப் பதிலாக கொழுப்புச்சத்து குறைவாக உள்ள எண்ணெய் வகைகளை பயன்படுத்துங்கள்.

உப்பும் சோடியமும் உணவில் அதிகமாக இருந்தால், இரத்த அழுத்தம் அதிகமாகிவிடும். உங்களுக்கு இந்த பிரச்சினை இருந்தால், சோடியம் குறைவாக உள்ள உணவு பொருட்களை பயன்படுத்துங்கள். அதை தெரிந்துகொள்ள, கவரில் (பாக்கெட்டில்) கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பாருங்கள்.

எதை சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமல்ல, அதை எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். சாப்பிடும்போது வயிறு நிறைந்தது போல் உணர்ந்தால், அதற்குமேல் சாப்பிடாதீர்கள்.

சரியாக சமைக்கப்படாத, பதப்படுத்தப்படாத உணவை சாப்பிடும்போது அந்த உணவே நஞ்சாக மாறிவிடும். இதை ஃபுட் பாய்ஸன் என்று சொல்கிறார்கள். இதுபோன்ற உணவை சாப்பிடுவதால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள் என உலக சுகாதார அமைப்பு (WHO) சொல்கிறது. அதுமட்டுமல்ல, ஃபுட் பாய்ஸனால் சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள். நீங்கள் எப்படி கவனமாக இருக்கலாம்?

காய்கறிகள் பொதுவாக உரம் போட்டுத்தான் வளர்க்கப்படுகின்றன. உரத்தில் உள்ள கிருமிகள், காய்கறிகளின்மேலும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, சமைப்பதற்கு முன்பு காய்கறிகளை நன்றாக கழுவுங்கள்.

உணவை சமைப்பதற்கு முன்பு கைகள், பாத்திரங்கள், காய்கறி வெட்டும் பலகை, உணவு சமைக்கும் மேடை, போன்றவற்றை சோப்பு போட்டு சூடான தண்ணீரில் கழுவுங்கள்.

இறைச்சி அல்லது முட்டை வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் அல்லது இடத்தில் மற்ற உணவுகளை வைக்காதீர்கள். அந்த இடங்களை கழுவிய பிறகே வையுங்கள்.

உணவை நன்றாக வேக வைக்க வேண்டும். அதனால் சரியான வெப்பநிலையில் அதை சமையுங்கள். உணவு கெட்டுப்போகாமல் இருக்க ஃபிரிட்ஜ்-ல் வையுங்கள்.

எளிதில் கெட்டுப்போகும் உணவு வகைகளை 2 மணி நேரத்திற்கு மேல் வெளியே வைக்காதீர்கள். வெப்பம் அதிகமுள்ள இடங்களில் (32° செல்சியஸ்-க்கு மேல்) 1 மணி நேரத்திற்கு மேல் வெளியே வைக்காதீர்கள்.

 4 தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
கால்பந்தும் ஸ்போர்ட்ஸ் ஷூவும்

சிறியவர்கள் பெரியவர்கள் என எல்லாருமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க முடியும். ஆனால், இன்று நிறைய பேர் உடற்பயிற்சி செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ பாருங்கள்:

நன்றாக தூக்கம் வரும்.

சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

எலும்புகளும் தசைகளும் உறுதியாக இருக்கும்.

சரியான உடல் எடையை காத்துக்கொள்ள முடியும்.

மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

நீண்ட நாள் வாழ முடியும்.

நாம் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன பாதிப்புகள் வரும்:

இருதய நோய் வரலாம்

டைப்-2 சர்க்கரை நோய் வரலாம்

இரத்த அழுத்தம் அதிகமாகலாம்

கொலஸ்ட்ரால் அதிகமாகலாம்

பக்கவாதம் ஏற்படலாம்

உங்களுடைய வயதுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஏற்றவாறு நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதனால், உடற்பயிற்சி செய்ய திட்டமிடுவதற்கு முன்பு உங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள். சிறு பிள்ளைகளும் பருவ வயது பிள்ளைகளும் ஒரு நாளில் குறைந்தது 60 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது ஒருவேளை மிதமான அல்லது தீவீரமான உடற்பயிற்சியாக இருக்கலாம். பெரியவர்கள் ஒரு வாரத்தில் 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது 75 நிமிடங்களாவது தீவிரமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

வேகமாக நடப்பது, மெதுவாக ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, படகு ஓட்டுவது, தோட்ட வேலை செய்வது, மரம் வெட்டுவது, போன்ற செயல்களில் ஈடுபடலாம். கூடைப்பந்து, டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். மிதமான உடற்பயிற்சி எது, தீவிரமான உடற்பயிற்சி எது என்று எப்படி தெரிந்து கொள்வது? வியர்வை சிந்தும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் அது மிதமான உடற்பயிற்சி; மூச்சு இரைக்க வைக்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் அது தீவிரமான உடற்பயிற்சி.

 5 நன்றாக தூங்குங்கள்

அமைதியாகவும் தூங்குவதற்கு நிம்மதியாகவும் இருக்கும் படுக்கையறை
ஒரு நபர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது அவருடைய வயதையும் சூழ்நிலையையும் பொறுத்து மாறும். பிறந்த குழந்தைகள் 16-18 மணிநேரமும், 1-3 வயதுள்ள குழந்தைகள் 14 மணிநேரமும், 3-4 வயதுள்ள குழந்தைகள் 11-12 மணிநேரமும் தூங்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் குறைந்தது 10 மணிநேரமாவது தூங்க வேண்டும். பருவ வயது பிள்ளைகள் 9-10 மணிநேரமும், பெரியவர்கள் 7-8 மணிநேரமும் தூங்க வேண்டும்.

‘தூங்குவதற்கு நேரமே இல்லை’ என சொல்லி தூக்கத்தை தியாகம் செய்யக்கூடாது. நன்றாக தூங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? நிபுணர்கள் சொல்வதைக் கவனியுங்கள்:

பிள்ளைகள் நன்றாக வளருவார்கள்.

புதுப்புது தகவல்களைக் கற்றுக்கொள்ள முடியும், ஞாபகத்திலும் வைக்க முடியும்.

ஹார்மோன் அளவு சரியாக இருக்கும். அதனால் உடல் சீராக இயங்கும், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

இருதயம் நன்றாக இயங்கும்.

நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் எடை அதிகமாகலாம். மன அழுத்தம் ஏற்படலாம், இருதய நோய், சர்க்கரை வியாதி வரலாம். மோசமான விபத்துகள் ஏற்படுவதற்குக்கூட காரணமாகிவிடலாம். அதனால் நாம் போதுமான அளவு தூங்குவது ரொம்ப முக்கியம்.

உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்?

• தினமும், இத்தனை மணிக்கு தூங்க வேண்டும், இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என திட்டமிடுங்கள். அதைப் பின்பற்றுங்கள்

உங்கள் படுக்கையறை அமைதியாக, இருட்டாக, நிம்மதியாக தூங்குவதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். ரொம்ப குளிராகவோ சூடாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

படுத்துக்கொண்டே டி.வி பார்ப்பதையோ எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதையோ தவிருங்கள்.

சுகமாக தூங்குவதற்கு ஏற்றவாறு படுக்கை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

தூங்குவதற்கு முன் வயிறு முட்ட சாப்பிடாதீர்கள், காஃபின் (Caffeine) கலந்த பானங்களை அருந்தாதீர்கள், மதுபானம் குடிக்காதீர்கள்.

சிலருக்கு, இன்சோம்னியா (Insomnia) அல்லது தூக்கமின்மை சம்பந்தப்பட்ட மற்ற நோய்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு பகலில் அதிக நேரம் தூங்கலாம் அல்லது தூங்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படலாம். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றிய பின்பும் உங்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால், ஒரு நல்ல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.[50] (g15-E 06)






உணவுச் சுகாதாரம்
உணவுக் கால்வாய் வழியாக உடலுக்குள் நுழையும் நுண்ணுயிரிகளின் நேரடித் தொற்று மற்றும் அவை சுரக்கும் நச்சுப் பதார்த்தங்களின் விளைவாக ஏற்படும் நோய்கள் ‘உணவினால் பரவும் நோய்கள்’ என்று வரையறுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நபருக்குமான உணவினால் வரும் நோய்த்தொற்று அபாயம் அவரின் பொதுச் சுகாதாரப் பழக்க வழக்கங்களில் பிரதானமாகத் தங்கி உள்ளது. உணவினால் பரவும் நோய்கள் ஓர் அதிகரித்துவரும் பாரதூரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகும். இது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை வேறுபாடின்றிப் பாதிக்கும் சுகாதாரச் சவாலாகும்.
முதியோர் சுகாதாரம்
முதியோர் சதவீதம்
உலகத்தின் சனத்தொகை பெரும் அதிகரிப்பினை காட்டுகின்றது. கடந்த 1999ம்ஆண்டு உலக சனத்தொகை ஆறு பில்லியனைத் தாண்டியது. இது 2020ம் ஆண்டளவில் 7.6 பில்லியனை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இலங்கையில் ஒருவரது வாழ்நாட்காலம் சராசரியாக 72 வயதை அண்மித்துக் காணப்படுகின்றது. இதிலும் முக்கியமாக ஒருவர் 65 வயதைக் கடப்பாராயின் அவர் 70 வயதிற்கு மேல் வாழக்கூடிய சூழ்நிலையே தற்போது உள்ளது.

முதியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
நீண்ட ஆயுள் ஒரு வகையில் வரப்பிரசாதமாக அமைந்தாலும் அவ்வாழ்க்கையானது அவர் சுகதேகியாக அநாவசிய அழுத்தங்கள் மற்றும் சமூக பொருளாதார தாக்கங்கள் அற்று வாழும் போது நீண்ட ஆயுள் ஓர் ஆசீர்வாதமாக அமைகின்றது. இவ்வாறான நிலைமை எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஏனேனில் 65 வயதிற்குள் இறப்போரை நோக்கும் போது அவர்கள் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, கொலஸ்டரோல் அதிகரிப்பு போன்ற நோய்களினால் தாக்குண்டு இறப்பவர்களே அதிகமாயுள்ளனர். இத்தகைய கட்டத்தினை தாண்டி 65 வயதிற்கு மேல் வாழ்பவர்கள் இத்தகைய நோய்களின் வேறு தாக்கங்களை எதிர் நோக்குகின்றனர். பாரிசவாதம் இதற்கு நல்ல உதாரணமாகும். மேலும் புற்று நோய் போன்றவையும் ஏனைய நீண்ட நாள் நோய்களான நீரிழிவு, தொய்வு போன்றவற்றாலும் தாக்கமுறுகின்றனர். வைத்தியசாலைகளில் விசேட கிளினிக்குகளில் சிகிச்சை பெற வரும் நோயாளரில் காணப்படும் வயதானேரின் எண்ணிக்கைளை கொண்டே இதனை மதிப்பிடலாம். அத்துடன் உடலின் மூளை நரம்புமண்டலத் தேய்மானங்களால் ஏற்படும் நோய் நிலைகள் (உதாரணம் PARKINSON’S, DEMENTIA) மற்றும் எலும்பு, முட்டு, தேய்மானங்களால் உடல் இயக்கம் குறைவதனால் ஏற்படும் பாதிப்புகள் வயதானோரை தாக்குகின்றன.
இவற்றினை உற்று நோக்குமிடத்து வயதானோரில் சிலர் திடகாத்திடமானவர்களாக இருப்பினும் பெரும்பாலானோர் பாரிசவாதம், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் இயக்கக் குறைவினாலும், உடல் தொகுதிகளின் தேய்மானங்களினாலும் ஏற்படும் தாக்கங்களின் பாதிப்பு போன்றவற்றால் அவதியுறுகின்றனர். மேலும் மலம் மற்றும் சிறுநீர் தங்களை அறியாமலே கழிக்கும் நிலை, பெண்களில் கருப்பை கீழிறக்கம் போன்றன, உணவு உட்கொள்ளலில் மந்த நிலை ஆகியவற்றாலும் பாதிப்படைகின்றனர்.

முதியோர் புனர்வாழ்வு
இத்தகையோருக்கு சிகிச்சைகள் மட்டுமல்லாது, தகுந்த கவனிப்பும் புனர்வாழ்வும் அவசியமாகின்றது. அதாவது புனர்வாழ்வு மற்றும் தகுந்த கவனிப்பினை வழங்க இள வயதினர் தேவைப்படுகின்றனர். இவற்றினை வழங்கத்தக்கதாக தகுந்த வசதிகளுடன் கூடிய இடங்கள் அவசியம். இவற்றினை மேற்கொள்ளுவதற்கு வேண்டியதாக பொருளாதாரம் அவசியமாகின்றது. இத்தகையதொரு பொருளாதார நிலையில் எமது முதியோர்கள் உள்ளனரா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். முதியோர்க்கு தேவையான சிகிச்கைள் வழங்கத்தக்கதான அமைப்புக்கள் எமது வைத்தியசாலைகளில் உள்ளனவா என்றால் இல்லை என்ற பதிலே விடையாகும். எமது முதியோர் இல்லங்கள் இத்தகைய வசதிகளைக் கொண்டுள்ளனவா என்றால் ஒரு சில இல்லங்களைத் தவிர ஏனையவை இத்தகைய நிலையில் இல்லை என்பதே பதிலாகும்.

முதியோராகிய தங்கள் பெற்ரோரை கவனிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பது உண்மையே. ஆனால் பிள்ளைகளுக்கு அவ்வாறாகக் கவனிப்பதற்கு எந்தளவிற்கு வசதி வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் உள்ளது என்பது விவாதத்திற்கு உரியது.

பிள்ளைகள் எனும் போது அவர்களும் 40 வயதிற்கு மேற்பட்டவராகவே உள்ளனர். அவர்களது தொழிற்துறைகள், அவர்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் ஏனைய பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய தேவை போன்றவற்றுடன் தற்போதைய காலகட்டத்தில் உள்ள வாழ்க்கை முறைமையினால் தாங்களே உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், நீரிழிவு மற்றும் ஏனைய நோய்களினால் தாக்கமுற்று வைத்தியம் செய்பவர்களாகவும் உள்ளனர். இத்தகையோர் எந்த அளவிற்கு தங்கள் பெற்றௌரை பராமரிக்க, புனர்வாழ்வு அளிக்க முடியும் என்பது ஏற்கனவே கூறியபடி விவாதற்குரியது. மேலும் தற்போது 40 – 50 வயதிற்கு உட்பட்டோர் இன்னும் 15 வருடங்களில் முதியோராய் விடுவர். தங்கள் பெற்றௌர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்நோக்கவிருப்போரின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் ¼ பங்கினரை எட்டிவிடும்.

தீர்வுகள்
இம் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு என்ன? மேலைநாடுகளில் முதியோர் மருத்துவம் (GERIATRICS) தனியானதொரு துறையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வைத்தியசாலைகளில் வேறாக உள்ளக வார்ட்டுக்கள், வெளி நோயாளர் சாய்சாலை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதியோர் இல்லங்களில் தகுந்த வசதிகள் உள்ளன.

எமது நாட்டிலும் முதியோரின் அதிகரிக்கும் வீதத்தினை கருத்தில் கொண்டு முதியோர் கவனிப்பு திட்டமிடப்படல் வேண்டும். தற்போது உயர் பதவிகளை வகித்துஇ திட்டங்கள் இட்டு அமுல் நடாத்தக்கூடிய அதிகாரங்கொண்டோரும் இன்னும் ஓரிரு சகாப்தங்களில் முதியோராகி விடுவர். ஆகையால் தற்போதே திட்டமிடப்படுவது சிறந்தது. வைத்திய சாலைகளில் முதியோர்க்காக கவனிப்பிற்கு தனியாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும். அத்தோடு முதியோராகும் போது தங்கள் பிள்ளைகள் உட்பட ஏனையோர்க்கு பாரமாக இல்லாமல் இருக்கத்தக்கதாக பொருளாதார பலம் கொண்டிருத்தலும் அவசியமானது. அத்தோடு நடுத்தர வயதிலிருந்தே தகுந்த வாழ்க்கை முறைமையைக் கடைப்பிடித்து உணவுப்பழக்கவழக்கங்களில் கவனம், தேகாப்பியாசம், யோகாசனம், நற்சிந்தனைகளுடன் கூடிய வாழ்க்கை, சமூக சேவைகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தி நோய் தவிர்த்து வாழுதலும் உகந்த விளைவைத் தரும். மேலும் முதியோர் இல்லங்கள் முதியோரைப் பராமரிக்கும் வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்படவும் திட்டமிடப்படல் அவசியமானது.

நாட்டிற்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்து உடல் தளர்ந்து முதியோரானோர் தங்கள் வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் உடல், உள, சமூக நலனுடன் தங்கள் வாழ்நாளின் இறுதிக்காலத்தைக் கழிக்கத்தக்கதான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்றைய நாளில் எமது தலையாய தேவையாகும். எமது வருங்காலத்தை பொறுத்தவரை இவ்விடயம் மிகவும் முக்கியமானது.

வாய்ச் சுகாதாரம்
வாய்ச் சுகாதாரம் என்பது நீடித்த முரசு வலி, வாய்ப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புண்கள் மற்றும் பிளவு உதடு, ஈறு அழற்சி, பற் சிதைவு, பற்சொத்தை, பல் இழப்பு போன்ற பிறப்புக் குறைபாடுகள் இல்லாதிருப்பதாகும்.

வாய்க்குழி நோய்களினை உண்டாக்கும் ஆபத்து காரணிகள் ஆரோக்கியமற்ற உணவு, புகையிலை பயன்பாடு, தீங்கு விளைவிக்கக்கூடிய அளவில் மது அருந்துதல், மற்றும் மோசமான வாய்ச் சுகாதாரம் என்பனவாகும்.
தொழில்சார் சுகநலம்
தொழில்சார் சுகநலம் பணியிடத்தில் சுகநலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுடன் தொழில் சார் ஆபத்துக்களைத் தடுப்பதற்கான முதன்மை முறைகள் பற்றியும் வலுவான கவனம் செலுத்துகிறது. தொழில் தளத்தில் இருக்கும் ஆபத்தினை உண்டுபண்ணும் காரணிகளால் ஏற்படும் புற்றுநோய்கள், விபத்துக்கள், என்பு சார் நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் தொடர்பான விடயங்களும் காது கேளாமை, இரத்த ஓட்ட நோய்கள், மன அழுத்தம் மற்றும் தொற்றுநோய்களும் தொழில்சார் சுகநலத்தின் பிரதான அம்சங்கள் ஆகும்.

வேலைவாய்ப்பு, வேலைத் தளச் சூழல், வேலை நேரம், சம்பளம், மகப்பேறு விடுப்பு பற்றிய பணியிட கொள்கைகள், சுகநலம் ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் முதலியனவும் ’தொழில்சார் சுகநலம்’ என்னும் விடயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment