Tuesday 10 April 2018

‘அங்காடித்தெரு’ அவலமும் , முஸ்லீம் நாடுகளின் செருக்கும்




‘அங்காடித்தெரு’ அவலமும் ,
முஸ்லீம் நாடுகளின் செருக்கும்



அங்காடித்தெரு வெளியான பின்னர் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் கணிசமானவை வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் தமிழர்களால் அனுப்பப்பட்டவை. ஒன்றைக்கூட வெளியிட அவர்கள் விரும்பவில்லை. பாதிரியைப்போல நின்று அவற்றை நான் கேட்கவேண்டும் என்று மட்டும் விரும்பினார்கள் என்று பட்டது. அங்காடித்தெரு காட்டும் சுரண்டல் உலகம் வளைகுடாவில் வேலைசெய்யும் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லபப்ட்டிருந்தது.

கடுமையான தண்டனைகள், கீழ்த்தரமான பாலியல் சுரண்டல் [ ஓரினச்சேர்க்கையாளர்கள் அந்த அளவுக்கு மிகுந்த சமூகம் பிறிதில்லை என்று ஒருவர் எழுதியிருந்தார். அவர் சொன்னத அனுபவங்களே முதுகெலும்பை சில்லிட செய்பவை] ஊதியவெட்டுக்கள் இவற்றுடன் அவ்வப்போது வேலையில்லாமல் அரைப்பட்டினியாக கூரை இல்லாமல் கொடும்வெயிலில் அலைய நேரிடும் துயரங்கள் என அந்த அனுபவங்களைக் கேட்க ரத்தம் கொதித்தது. ஒரு இஸ்லாமிய வாசகரின் கடிதத்தை ஏதாவது இஸ்லாமிய இதழுக்கு அனுப்புங்கள் என்று பதில் எழுதினேன். அவர் மீண்டும் எழுதவில்லை.


இந்த விஷயத்தைப்பற்றி எவர் எழுதினாலும் அவரை இந்துத்துவர் என்று சொல்ல ஒரு பெரும் கும்பலே காத்திருக்கிறது. சீனாவிலோ வளைகுடாவிலோ நிகழும் வன்முறைகள், சுரண்டல்கள் எல்லாம் புனித வன்முறைகள் புனிதச் சுரண்டல்கள் என்று நம்புவதே முற்போக்கு. சராசரி அராபியனின் மனநிலையாக வெளியாகும் இனவெறியும் மதவெறியும் இன்றைய நவீன உலகின் ஆகப்பெரிய அபாயங்கள் என்று சொல்பவன் ஏகாதிபத்திய முத்திரையுடன் மிஞ்சிய வாழ்நாளை கழிக்க நேரும்

சீனா பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு வாசகர் காலச்சுவடு இதழில் அதன் ஆசிரியர் எழுதிய இக்கட்டுரையை அனுப்பியிருந்தார். கண்ணன் கூர்மையாகவும் துணிச்சலாகவும் சொல்லியிருக்கிறார்.


என் நண்பர்கள் கூறி கேட்டு இருக்கிறேன்- வளைகுடா நாடு சென்ற வுடன் நம் பாஸ்போர்ட்டை (கடவு சீட்டை) முதலாளிகள் வசம் கொடுக்க வேண்டுமாம். (இப்போது exit பெர்மிட் என்ற நவீன முறை ஏமாற்றம் போல).

எனவே தொழிலார்களின் பிடி முதலாளி வசம். ஊழியர் மீறி போய் எங்கும் புகார் கொடுக்க சென்றால், நிறுவன பணிகளை சரி வர முடிக்க வில்லை, பணம் ஏமாற்றினான் என்று முதலாளி சார்பில் வாதாட ஆயிரம் காரணங்கள் உண்டு.

இதி இருந்து மீது வர என்னதான் தீர்வு.


வறுமை காரணமாக , வெளிநாட்டு வேலை மோகம் மக்களிடம். அடுத்த நாடு ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் பொது அந்த நாட்டு முதலாளிகளுக்கும் ஒரு கடிவாளம் தேவை படுகிறது. இதற்கு என்ன தான் தீர்வு.









எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு


தங்களின் தளத்தில் அங்காடித்தெரு படத்திற்கு பிறகு உங்களுக்கு வந்த மடல்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். வளைகுடா நாட்டின் தொழிலாளர் சமூகம் பற்றிய பல கருத்துகள் வந்ததாக சொல்லியுள்ளீர்கள்.

வந்திருக்கும், அதை இல்லை என மறுக்கும் அயோக்கிய மன நிலை எனக்கில்லை. உழைப்பு சுரண்டல் மிகுந்த நாடுகளில் வளைகுடா நாடுகளும் ஒன்று. இது உண்மை… அப்பட்டமான உண்மை.

ஆனால், அந்த சுரண்டலுக்கான காரணகர்த்தாக்களை, மூலவர்களை அடையாளப்படுத்துவதில் சில சிக்கல் உள்ளதை.. உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் முன்வைக்கும் கருத்தில் அறியமுடிகிறது.

வளைகுடா வாழ்வின் சில அனுபவ பதிவாக என் சமீபத்திய கவிதை (கவிதை நூல் என உங்களைப்போறவர்கள் ஏற்கமாட்டீர்கள்) நூலில் சிலவற்றை சொல்லியுள்ளேன் அவை சொற்பமே. கலைஞர் தொலைக்காட்சியின் சந்தித்தவேளையிலும் பதிவு செய்துள்ளேன், ஆனால் நான் முன்வைக்கும் காரணிகள் வேறு.

அந்த உழைப்பு சுரண்டல்கள் அனைத்தும் முதலாளித்துவ அடிப்படையில் நிகழ்பவை, அவற்றுக்கு துணைப்போகும் இந்திய அல்லது தமிழக தரகுமுதலாளிகளும், இடைத்தரகர்களும் மிக முக்கியமானவர்கள்… இதனையும் ஆய்ந்து கருத்தை வெளிப்படுத்தும் கடமை உங்களுக்கு உண்டு என்பதை மறந்து, தட்டையாக அரபு இசுலாமியர் என்ற எல்லையில் மட்டும் உழைப்புச்சுரண்டல்காரர்களை அடையாளப்படுத்தியுள்ளீர்கள்.

சில.. அல்லது பல அராபியனின் மனநிலையை சராசரியாக அனைவரின் மனநிலையாக வெளிப்படுத்தும் உங்கள் எழுத்து வண்மம் அராபியனுக்கு அப்பால் உள்ள உழைப்பு சுரண்டல் பேர்வழிகளை தப்பிக்கச்செய்ய வழிவகுக்கும் என்பதை உணராதவராகவே உள்ளீர்.

இந்த என் மடலின் நோக்கம் அரபு முதலாளிகள் நல்லவர்கள் என நிறுவுவது அல்ல, தட்டையாக அவர்களை மட்டும் அடையாளம் காட்டுவதால் முழுமையான சுரண்டலை, தொழிலாளர் அவதியை தீர்த்துவிட இயலாது.

இது குறித்து விரிவாக பல செய்திகளை பேசவேண்டும்.. ஆனால் நேரம் சூழல் என்னை இப்போது அனுமதிக்கவில்லை. பிறகொரு சூழலில் விரிவாக பேசலாம்.

இது குறித்த நேர்மையான கருத்தை தெளிவான ஆய்வோடு எழுதுங்கள்..

உண்மையான எழுத்தை எதிர்பார்க்கிறேன்

அன்புடன்

இசாக்

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கடிதம் வழக்கம்போல அவசரமான, தவறான புரிதலில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. அரபுலகில் மட்டுமே சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளது என்றோ, அதற்கு இஸ்லாம் காரணம் என்றோ நான் சொல்லவில்லை. பதறவேண்டாம்.

ஒடுக்குமுறையும் சுரண்டலும் வரலாற்றின் எல்லா காலத்திலும் உண்டு. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில்தான் அது உச்சத்தை அடைந்தது. முதலாளித்துவ காலகட்டத்தில் அந்தச் சுரண்டலுக்கு எதிரான அமைப்புகள் உருவாகி வந்தன. அவ்வமைப்புகள் உருவாக்கிய விழுமியங்களும் உருவாகின.

நிலப்பிரபுத்துவ அமைப்பு தடையில்லாத ஆண்டான்-அடிமை மனநிலையை அடிப்படையாகக் கோண்டிருக்கும். அதற்கான விழுமியங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல் இருக்கும், கூடவே அதற்கு எதிர்விசையாகச் செயல்படும் அமைப்புகளும் இருக்கும். தொழிற்சங்கங்கள், ஜனநாயக அரசின் கட்டுப்பாடுகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் முதலியவை.

ஆகவேதான் முதலாளித்துவ அமைப்பில் ஒரு சுரண்டல் அல்லது அநீது வெளிப்படுத்தப்பட்டாலே போதும் அது முன்னர்போல தொடர முடியாது என்பது இன்றுவரை உண்மையாக உள்ளது. ஏனென்றால் முதலாளித்துவம் பெருமளவுக்கு ஜனநாயகத்தால் கட்டுப்படுத்தபப்டுவது. ஜனங்களின் ஒப்புதல் இல்லாத ஒன்று அங்கே நிகழ முடியாது. சுரண்டல் கூட!


முதலாளித்துவத்தில் அநீதியும் சுரண்டலும் கண்டிப்பாக உண்டு. ஆனால் அது நிலப்பிரபுத்துவத்தில் இருந்து பலமடங்கு வளர்ந்து மேலெ வந்த ஓர் அமைப்பு. அதில் இருந்து இன்னும் மேலே செல்லலாம், அதுதான் இந்த காலகட்டத்தின் தேடல். ஆனால் முதலாளித்துவத்தின் குறைகளை முன்வைத்து நிலப்பிரபுத்துவத்தை நியாயப்படுத்துவது பிழை. நீங்கள் செய்ய முயல்வது அதை. இஸ்லாமியர் பெரும்பாலும் வாதிடுவதும் அதற்காகவே.

அரபு நாடுகளில் உள்ளது முதலாளித்துவம் அல்ல. கெட்டிதட்டிப்போன நிலப்பிரபுத்துவம் மட்டுமே. இன்றும் அங்கே ஊழியர்களை அடிமைகள் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். அவ்வண்ணம் நடத்துகிறார்கள்.முதலாளித்துவம் அளித்துள்ள ஜனநாயக உரிமையையும், சங்க உரிமையையும் பிற எந்த எந்த வசதியையும் அளிக்காத மூடுண்ட நிலப்பிரபுத்துவ சமூகமாக அரபுலகம் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் அராபிய இனவெறி இணைந்துகொள்கிறது. அந்த மன இருளின் விளைவுகளையே நம் மக்கள் அங்கே அனுபவிக்கிறார்கள்.


அராபிய இனவெறிக்கு இந்து இஸ்லாம் என்ற பேதமெல்லாம் கிடையாது. ஆப்ரிக்க நாடுகளில் அராபிய இன வெறியர்களால் கொன்றுகுவிக்கப்பட்ட கறுப்பின மக்கள் இஸ்லாமியர் தானே? உலகமெங்கும் கறுப்பு முஸ்லீம்கள் பட்டினியால் லட்சக்கணக்கில் சாக்கும்போது அராபிய இஸ்லாமியரின் பெட்ரோலியப் பணம் அங்கே உதவிக்குச் செல்லவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை?. கிறித்தவ மனிதாபிமானத்தின் பணம் தானே சென்றது.

அராபியப்பணம் அராபிய இனவெறியின் விளைவான ஓர் உலக இஸ்லாமிய அரசுக்காக ஆயுதங்கள் வாங்கவும் மதவெறியை பரப்பவும் மட்டுமே செலவிடப்படுகிறது. ஆதிக்க முகம் சுரண்டல் முகம் அன்றி வேறு எந்த முகமும் அதற்கில்லை. இன்றைய நவ உலகின் முதன்மையான அச்சுறுத்தல்கள் மேலைநாடுகளில் குவியும் பெருமூலதனத்தின் அதிகாரமும், சீனாவின் ஏகாதிபத்திய நோக்கும், அராபிய இனவெறியும்தான் என நான் நம்புகிறேன்.

அரபு நாடுகளில் உள்ள அராபிய இனவெறியையும் இஸ்லாமையும் நான் ஒன்றாகப் பார்க்கவில்லை. மாறாக எப்போதும் பிரித்தே பார்க்கிறேன். இஸ்லாம் என்ற நெறியை அராபிய இனவெறி தன் முகமூடியாக போட்டிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். ஆனால் அந்த வேறுபாட்டை நீங்கள், பெரும்பாலான இஸ்லாமியர், செய்வதில்லை என்பதே என் மனக்குறை. அப்படி ஒரு பிரிவினையை செய்பவர்களையே நீங்கள் இந்துத்துவர் என்றும் இஸ்லாமிய விரோதி என்றும் வன்மத்துடன் எழுதுவதாகவும்சொல்ல ஆரம்பித்துவிடுகிறீர்கள். இக்கடிதத்திலும் அதற்காகவே முயல்கிறீர்கள்.

அராபிய நாடுகளில் சுரண்டலும் அடிமைத்தனமும் உள்ளது என்பதல்ல பிரச்சினை. அவை வேறு இடங்களிலும் உள்ளனவே என்ற பதில் மூலம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியும் அல்ல அது. மதவெறி மூலம் அந்த இனவெறியும் ஆதிக்கவெறியும் நியாயப்படுத்தப்படுவதைப்பற்றியே நான் சொல்லியிருக்கிறேன்.

வளைகுடா நாடுகளை நோக்கி நம் மக்களை அடிமைகளாக தள்ளிவிடும் கிராமப்புற வறுமை, அதை பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள் அவர்களை சுரண்டும் அரசியல்வாதிகள் எதையும் நான் மறுக்கவில்லை. அவற்றை கண்டிக்க தயங்கவும் இல்லை. என்னுடைய கேள்வியின் மையம் வேறு. இத்தனை மோசமான இன வெறி, மதவெறியை ஒரு இலட்சிய சமூகமாக எப்படி சித்தரிக்க முடிகிறது, அதற்கு எப்படி நம் முற்போக்காளர் துணைபோகிறார்கள், அந்த மனநிலை என்ன — அவ்வளவுதான்.

ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் சுரண்டலை ஒருவர் தான் கிறித்தவர் என்பதற்காக நியாயப்படுத்தினாரென்றால், ஓர் அண்ணாச்சி குத்துவிளக்கு ஏற்றி வைத்து முருகனைக் கும்பிடுவதனால் அவரது சுரண்டலை ஓர் இந்து நியாயப்படுத்தினாரென்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அந்த நியாயத்தை அந்தரங்கமான ஒரு கணத்தில் உங்களுக்குள் பேசிக்கொள்ளும்போதாவது நீங்களும் உணருங்கள். அவ்வளவுதான்

ஜெ












அன்புள்ள ஜெயமோகன்

நேற்றி இரவுக்காட்சியாக ‘அங்காடித்தெரு’ பார்த்தேன். சமீபகாலத்தில்லே நான் பார்த்த மிகச்சிறப்பான சினிமா இது. நேத்து இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. என்னை இந்த அளவுக்கு மனதை உருக்கிய ஒரு சினிமா இப்போது நினைவுக்கே வரவில்லை. மன்னிதர்கள் வாழ்க்கைக்காக உசிரைக்கொடுத்து போராடுவதை பார்க்கும்போது மனம் அப்படியே உருகி போகிறது. வசந்தபாலன் காலைத்தொட்டு கும்பிடவேண்டும் என்று நினைத்தேன். எல்லாரும்தான் சினிமா எடுக்கிறார்கள். பணம்பண்ண வேண்டும் புகழ்பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஒரு மனிதகதையை சொல்லவேண்டும் மனிதர்களின் துக்கத்தை சொல்லவேண்டும் என்று யாருக்கு தோன்றுகிறது. எப்பேர்ப்பட்ட படம். நிபுணர்கள் குறைகளை எல்லாம் சொல்வார்கள். உலகசினிமாவுடன் ஒப்பிட்டால் சில குறைகளை சொல்லவும் முடியும் என்று படுகிறது. ஆனால் நம்முடைய கண்ணுக்கு முன்னால் உள்ள வாழ்க்கையினை நம்மிலே ஒருத்தர் தானே  சொல்ல முடிகிறது. அதுதானே நமக்கு முக்கியம்? படத்தைப் பார்த்துவிட்டு கனத்த மனசுடன் வெளியே வந்தேன்..
ரொம்ப நல்ல படம் என்பதற்கு மேலாக என்ன சொல்ல? சினிமா அப்படித்தான். அது மனசுக்குள்தான் நேரடியாக செல்லுகிறது. மூளை எல்லாம் அப்புறம்தான். படத்திற்கு வசந்தபாலனுடன் சேர்ந்தே நீங்கள் வந்துகொண்டிருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனை எப்படி சினிமாவிலே பயன்படுத்துவது என்று வசந்தபாலன் காட்டியிருக்கிறார். எங்களுக்கு தெரிந்த ஜெயமோகனை இந்தப்படத்திலேதான் பார்க்கிறோம்.

யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழுது

பெண்நாய் ஆண்நாய்க்கு போக்கு காட்டுவது மாதிரி அவனை பின்னாலே சுத்த விடுறே

இந்த ஒரு ஆண்பிள்ளைக்கிட்ட மட்டுமாவது மானரோசத்துடன் இருந்துக்கிறேனே

விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்ச்வன்

மனுஷன நம்பி கடவிரிச்சேன். குறையொன்றுமில்லை

இனிமே இது குள்ளனுக்கு பொறக்கலைண்ணு யாரும் சொல்ல மாட்டாங்கள்ல?

நாயி குட்டிகளை கொண்டாந்து போடுற மாதிரி கொண்டு போயி போட்டுட்டு போறவன் நான். நாயி சென்மம் தம்பி

போன்ற நுட்பமான வசனங்கள்  நீங்கள் எழுதியவை என்று காட்டுகின்றன. ஆனால் சாதாரணமான வசனங்களை துணிந்து போட்டிருக்கும் இடத்திலும் நீங்கள் தெரிகிறீர்கள்.

”இங்க யாருன்னு தங்கச்சி கேட்டுட்டே இருந்தா

நீ என்ன சொன்னே

சிரிச்சேன்”

அதேபோல நக்கல் கிண்டல்களிலும் நீங்கள் தெரிந்துகொண்டே இருக்கிறீர்கள்

”ஏலே  நில்லுலே ராகு காலத்திலே பொறந்தவனே

நீருல்லாவே நேரம் பாத்திருக்கணும்?”

இந்த வசனம் போல எத்தனையோ வசனங்களை நாங்கள் உங்கள் கட்டுரைகளிலே வாசித்திருக்கிறோம்.

கவிஞர் முகத்தை பாத்தியா, அடுத்து பத்தாம் கிளாச் கடவுள் வாழ்த்தை எழுதி வச்சிருக்க போறாரு

என்ற வசனம். அதே மாதிரி அந்த கிழவி.

”ஏலே சிங்கப்பூர்ருக்கா போறா இங்கதானே” என்று கேட்கும் குசும்புக்கிழவியும் நமக்கு தெரிந்தவர்தான்

அற்புதமான படம் ஜெயமோகன். சினிமாவில் நீங்கள் இதுவரை செய்த எல்லா வேலைகலும் ஒன்றுக்கொன்று மேலே சென்று கொண்டுதான் இருக்கிறது.

இயக்குநர் நுட்பங்களை வாரி இறைத்துக்கொன்டே போகிறார்

1 முஸ்லீம் பெண் பர்தாவுக்கு மேலே பட்டுப்புடவையை வைத்து பார்ப்பது

2 வாயிலே இருந்து நிப்பிளை எடுத்ததுமே வையும் குழந்தை

3 மொட்டைகளை பார்த்ததும் ஏடுகொண்டலவாடா சரி என்று மாரி கத்துவது


4 அண்ணன் வேலைசெய்யும் கடையின் பையை தங்கச்சி அப்பா படத்துக்கு சமமாக மாட்டுவது

5 அண்ணாச்சியின் செல்போனில் உள்ள ரிங் டோன்

6 அதேசமயம் சோபியா வைத்திருக்கும் ரிங்டோன்

7 அண்ணாச்சி செய்யும் பூசை அவரை வாழ்த்த வந்திருக்கும் சாமியார்

8 சோற்றுக்கான அத்தனை அடிதடிகளுக்கு நடுவிலேயும் நம்மூராலே என்று கேட்டதும் சௌந்தர பாண்டி முகம் மலர்வது

9 கக்கூஸ் கழுவியே முன்னேற ஆரம்பிக்கும் அந்த ஆசாமி

10 மாமூல் போலீஸ் , குப்பை பொறுக்கும் பாய், குள்ளன், சின்னம்மா, தெருவிலே காலையிலே குவியும் குப்பை. அந்தக்குப்பைக்குள் தூங்கும் மனுஷர்கள்

11 கர்கள் ஓடும் சாலையின் விளிம்புவரை வரும் கைக்குழந்தை. அதை அறியாமல் உறங்கும் அம்மா

12 தங்கச்சிக்காரியின் எஜமானியம்மாவின் கதாபாத்திரம்.

என்று சொல்லிக்கொன்டே போகலாம்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்





அன்புள்ள ஜெ

அங்காடித்தெரு படம் பார்த்தேன். மனசை பிழிந்துவிட்டது. நான் கடவுளை மாதிரியே இதுவும் சொல்லப்படாத வாழ்க்கைஅயிச் சொல்கிறது. ஆனால் இது இன்னமும் நமக்கு தெரிந்த யதார்த்தமாக இருக்கிறது. இந்த ஒரு படத்தில் இயக்குநர் எங்கேயோ போய்விட்டார். இதுமாதிரி படத்தில் அத்தனை விஷயங்கலும் கவனமாகப் பார்த்துச்செய்யப்பட்ட ஒரு படம் மிகவும் குறைவாகவே வருகிறது ஜெயமோகன். நான் நேற்று பகல்காட்சியும் இரண்டாவது ஆட்டமும் தொடர்ந்து பார்த்தேன். இரண்டாம் முறை எங்காவது கவனக்குறைவு தெரிகிறதா என்று பார்த்தேன். நான் சினிமாவிலே உதவி இயக்குநராக இருக்கிறேன். இந்தப்படம் எங்களுக்கெல்லாம் ஒரு பாட புஸ்தகம் மாதிரி.

சினிமா என்றாலே காஸ்டிங் தான் என்பதற்கு காதல், அங்காடித்தெரு இரண்டும்தான் சரியான உதாரணம். எல்லாமே  அசல் உடங்குடி பணகுடி முகங்கள். நானும் இந்தப்பகுதிதான். கோட்டையூர். ஒரு முகம்கூட சோடை போகவில்லை. செல்வராணி முகம் சரியான நெல்லை முகம். சௌந்தர பாண்டி முகமும் அப்படித்தான். எல்லாரையுமே பார்த்துப் போட்டிருக்கிறார். மாரிமுத்துவின் அப்பா, லிங்குவின் குடும்ப முகங்கள் எல்லாமே மிகவும்  சரியாக இருக்கின்றன. ஆளெடுக்கும் நெல்லை முகங்கள் கூட சரியாக இருக்கின்றன. வேலைக்கு வருபவர்கள் வேரு ஆளெடுப்பவர்கள் வேறு ஏரியா என்று தெரிகிறது

அதேபோல நடிப்பு. புதுமுகங்களை இந்த அளவுக்கு சரியாக வேலை வாங்கிய படம் மிகவும் அபூர்வம். எழுதப்படிக்க தெரியாது என்று ஒரு பையன் சொல்லும் இடத்திலே எக்ஸ்பிரஷன் எல்லாம் எத்தனை கச்சிதமாக இருக்கின்றன. அந்த மாமி அப்படியே ஒரு பணக்காரவீட்டு அல்பம் என்பதை சும்மா வந்தாலே தெரிகிறது. காஸ்டிங் சரியாக இருந்து நடிப்பையும் வாங்கிவிட்டால் பாதிப்படம் முடிந்துவிட்டது என்று தெரிகிறது.














‘அங்காடித் தெரு’ அப்படி இல்லை. தெருவணிகப் பிழைப்பில் வருகிற சின்னச்சின்னக் கேரக்டர்கள்தாம் படத்தின் செறிவும் சுவாரஸ்யமும். வணிக வாய்ப்புக்கு மோப்பம் உள்ளவன் அத் தெருவில் தோற்பதற்கு வாய்ப்பில்லை என்பதற்கு அந்தக் கட்டணக் கழிப்பறை நாயகன் காட்டு! அவன் கையில் ஒரு ரூபாய் வரும்படி வந்த அக்கணமே, கதை மோப்பம் பிடிக்கத் தெரிந்த என்னைப் போன்ற நாய்மூளைகளுக்குக் கதைமுடிவின் அறிச்சி தட்டிவிடும் என்றாலும் தமிழ்ப்பட இயக்குநர்களை நம்பமுடியுமா சாமி என்று வேண்டுதலோடுதான் மீதிப் படம் பார்த்தேன்.

தங்கச்சிப் பாப்பா வயசுக்கு வருகிறது; நாயகியை நள்ளிரவில் ஆட்டோக் காரர்கள் வளைக்கிறார்கள்; தங்கச்சி அஸாமுக்கு அனுப்பிவைக்கப் படுகிறாள்; சாலை விபத்து என்று காட்டப் பட்டாலும் அது, நாயகன் நாயகி ப்ளாட்பாரத்தில் கைகோர்த்து நிற்பதை (வில்லனாகப்பட்ட) சூப்பர்வைசர் பார்த்ததற்கு அப்புறமாய் நிகழ்கிறது – தமிழ்ப்படம் பார்த்துப் பார்த்து ஐம்பதுக்கு மேல் வளர்ந்துகெட்ட ஓர் ஆளுக்கு டென்சன் வருமா வராதா? ‘நன்றி ஆண்டவரே’ என்று கடவுளையும் இயக்குநரையும் தொழுதுவிட்டுத்தான் தியேட்டரை விட்டேன்.


குறை என்று ஒன்றாவது சொல்ல வேண்டுமோ? ‘தீட்டு’ என்கிற கான்செப்ட் பாராட்டும் பிராமணாள் ஆத்துக் கிழவிக்கு மாற்றாக, இந்து வழிபாட்டில் இடம் உண்டு என்று காண்பிக்கிற கோவிற் காட்சியில், அந்த அம்மா முகம் – அந்தப் பூசாரி நிறம் – ‘casting’ பொருத்தமில்லை.



வசந்தபாலன் போலவே நல்ல நல்ல இயக்குநர்கள் உங்களுக்கும் ஏனை எழுத்தாளர்களுக்கும் வாய்க்கவேண்டும்; தமிழ்த் திரையுலகம் சிறக்கவேண்டும் என்பது என் ஆசை.



– ராஜசுந்தரராஜன்



அன்புள்ள ராஜ சுந்தரராஜன்

உங்களுக்கு படம் பிடித்திருந்தது அறிந்து மிகுந்த மனநிறைவு. பாராட்டுகளிலேயே சில பாராட்டுகளுக்கு அடிவரி உண்டல்லவா? அங்காடித்தெரு பரவலாக அனைவருக்கும் பிடித்திருக்கிறதென்பது செய்திகளாக வந்துகொண்டே இருக்கிறது. உண்மையான உணர்ச்சிகளை அழுத்தமாகவே காட்டலாம் ,எந்த அளவுக்கு நுட்பமாகச் சொன்னாலும் போய்ச்சேரும் என்பதற்கான உதாரணம் அது. நல்ல இயக்குநர்கள் நல்ல வாய்ப்புகள் அமையவேண்டுமென நானும் விரும்புகிறேன். கவி சொல் பலிக்கட்டும்.[[அது உண்மையான கோயில் உண்மையான பூசாரி ]

 உங்கள் பாராட்டும் வாழ்த்தும் வசந்தபாலனுக்கும் பெரிய  பரிசு . பெரிய பொறுப்பும் கூட

அன்புடன்
ஜெ



அன்புள்ள ஜெயமோகன்…
அங்காடித் தெரு, “உரையாடல் ஜெயமோகன்” என்கிற ஒரு காரணத்தால் முதல் நாளிலேயே பார்த்துவிட்டேன். படம் பற்றி நிறைய சொல்ல நினைத்தாலும், அதுவே ஒரு தனிக் கட்டுரையாகி விடும் என்பதால், கொஞ்சமாய் சுருக்கி, நான் அடைந்த சுகத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

எத்துனை முறை ரெங்கநாதன் தெருவில் சுற்றி அலைந்திருந்தாலும், சத்தியமாய் அங்கே விற்பனை பிரிவில் இருக்கும் இவர்களைப் பற்றி யாருமே சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. வசந்தபாலனுக்கு முதல் சபாஷ். ஆனால் அவர் மட்டுமே இந்தக் கதையை சிந்திருத்திருந்தால் இதன் அழுத்தம் வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும். உரையாடல் மட்டுமே நீங்கள் செய்திருக்க வாய்ப்பில்லை. பலக் காட்சிகளை பார்க்கும்போது அதில் உங்கள் எழுத்தின் வீரியத்தை தான் என்னால் உணர முடிந்தது. இருந்தாலும் படம் நெடுக வசனகர்த்தாவாகிய நான் தெரிய வேண்டும் என்று பாடுபடாமல் கதைக்கேற்றவாறு உரையாடலை மாற்றி கதையோடு ஒன்றிப் போயிருக்கும் உங்களை எப்படிப் பாராட்ட…?

அந்தக் குள்ள மனிதனுக்கு குழந்தை பிறந்ததும் அவன் மனைவி பேசும் வசனங்கள்.. ஜெயமோகன் டச். கனி எனும் கதாபாத்திரம் துடுக்காக பேசும்போது வளைந்து நெளிந்து செல்லும் உரையாடல், அறை சூப்பர்வைசர் என்ன செய்தார் என்பதை விளக்கும்போது நெஞ்சில் தைக்கிறது.

இப்படியே இன்னும் நான் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் அது இந்தப் படைப்பிற்கு தேவையில்லை. உரையாடல் என்றால் இனி ஜெயமோகன் தான் என்று ஆழப்பதிந்து விட்டீர்கள். வாழ்த்துகள் சொல்லமாட்டேன். வணங்குகிறேன்.

படம் பார்த்த இரவு என் நெஞ்சத்தை கணக்க செய்து விட்டது. படத்தை பார்க்கும்போது எனக்குள் நான் செய்துக் கொண்ட சத்தியம் இனி இதுப் போன்ற பெரியக் கடைகளில் பொருட்கள் வாங்குவதில்லை.

குறிப்பு: இருந்தாலும் ஆரம்பக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் யதார்த்தத்தை மீறியதாக இருந்தது. உதாரணமாக அவர்கள் உண்ணும் அறை, மற்றும் முறை.)


மோ. அருண்
அன்புள்ள ஜெயமோகன்…
அங்காடி தெரு மிகச்சிறப்பான படம். அதன் கதையோட்டத்திலே வரக்கூடிய நுட்பங்களை ஏற்கனவே  கடிதங்களிலே பலர் எழுதிவிட்டார்கள். ஒரு நண்பர் பத்து தொழிற்சங்கங்கள் செய்யாத வேலையை செய்த படம் என்று சொன்னார். உண்மைதான். மனசு கனத்துவிட்டது. படம் முடிந்தபின்னாலே எதையுமே பேசாமல் தனிமையிலே நடந்து வருகிறோம். அதுதான் இதன் வெற்றி சார். வசந்தபாலனை தமிழில் இப்போது இருக்கக்கூடிய இயக்குநர்களிலே முதலிடத்துக்குக் கொண்டு போய்விட்டது இந்தப் படம். இதுவரையிலான மிகச்சிறந்த தமிழ் சினிமா இயக்குநர்களின் வரிசையிலேயே முக்கியமான ஒரு இடத்துக்குக் கொண்டுசென்று விட்டது. அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறேன்.

படத்திலே உள்ள மூன்று முக்கியமான விஷயங்கள். லிங்குவும் கனியும் கேரக்டர் வளர்ச்சி அடைவது முதலிலே சொல்ல வேண்டிய விசயம். லிங்கு கனியை கருங்காலி அவமானப்படுத்தியசெய்தி கேட்கும்போது வருத்தம்தான் படுகிறான். ஆனால் கனி மீது காதல் வந்தபிறகு அந்த செய்தியைக் கேட்டதும் மிருகமாகவே மாறிவிடுகிறான்.  அதேமாதிரி கனி லிங்குவை காதலிக்கும் முன்னாடி கருங்காலி செய்வதற்கு சம்மதிக்கிறாள். பிறகு முடியலை என்று சொல்லி கதறி அழுகிறாள். அந்த மாற்றம்தான் கதையே. அந்த காதல் வந்தபிறகு அவர்கள் ரெண்டுபேரும் மெச்சூர் ஆகிவிடுகிறார்கள். எது வந்தாலும் சமாளிக்கலாம் என்ற நிலை வந்துவிடுகிறது. அதன் பின்பு அவர்கள் அடிக்கடி கைகோர்த்துக்கொள்வதை நாம் காண்கிறோம். அந்தக் காட்சிகளுக்கெல்லாம் இயக்குநர் குளோஸப் வச்சிருக்கிறார்.

அதேமாதிரி வயசு வந்தபெண்ணை குப்பை மாதிரி போட்டு வைக்கிறார்கள் ஒரு வீட்டிலே. அது ஒரு சாதி மீது உள்ள விமர்சனமாக சிலர் சொன்னார்கள். அப்படி இல்லை. அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணையே அப்படித்தான் போட்டு வைப்பார்கள். அது ஒரு மனசு அவ்வளவுதான். அதேசமயம் அதே தீட்ட்டன பெண்ணை ஏற்றுக்கொள்கிறது என்பது இன்னொரு ஆசாரம். அங்கே தீட்டான பெண்ணுக்குத்தான் முதல் இடம். சாமியே தீட்டு உள்ள சாமி. சிலர் இந்து மததை கேவலப்படுத்துகிறது என்று சொன்னார்கள். அப்படி இல்லை. இந்துமதத்திலே எதுவுமே விதி என்று இல்லை என்றுதான் சொல்கிறது. அப்படி ஒரு பக்கம் இருந்தால் இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறது இல்லையா? அது இந்துமதத்துக்குப் பெருமைதானே?

அதேமாதிரி கருங்காலியை வில்லன் மாதிரி டெவெலெப் செய்யாமல் ஒரு கதாபாத்திரமாகவே காட்டியிருக்கிறதும் நன்றாய் இருக்கிறது. லிங்கு கனி இருவரையும் இடமாற்றம் செய்ததும் கருங்காலி படத்தில் வராமலாகிவிடுகிறான். ஆனால் இங்கே இன்னொரு ஆள் அதேமாதிரி நடந்துகொள்கிறான். அதாவது கருங்காலி என்பது ஒரு மனுசன் இல்லை. ஒரு பதவிமட்டும்தான். அண்ணாச்சிகூட வில்லன் இல்லை. அவருக்கு வியாபாரம் மட்டும்தான் முக்கியம். அதுக்கு பிரச்சினை வருமென்றால் விட்டுவிடுவார். ஆகவே அந்த நிறுவனம்தான் வில்லன். அதையும் நன்றாக காட்டியிருக்கிறார்

உள்ளத்தை உருக்கும் படம் ஜெ சார். நன்றிகள்

நேரிலே பார்க்கிறேன். நிறைய பேசவேண்டும்.

சண்முகம்


அரபுக்களின் உற்பத்தி முறையும் வளர்ச்சியும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி போன்று காணப்பட்டாலும் அது மத அமைப்பில் கட்டப்பட்ட ஒரு வகை நிலப்பிரபுத்துவ சாயலையே கொண்டிருக்கின்றது. சகிப்புத்தன்மையை மதம் சார்ந்த அறிவு தடுத்துவிடுவதால், நவீன கல்விமுறையால் கிடைக்க வேண்டிய இயல்பான மனித நேயம் கிடைக்காமல் போய்விடுகின்றது. ஐரோப்பாவில் வாழும் அரபுகள் இஸ்லாமிய அடிப்படைவாத வெற்றிக்காகப் போராடுகின்றார்கள். அதேவேளை CNN அமெரிக்க பெண் செய்தியாளரும் தலயில் துண்டு போடா வேண்டும் என் வற்புறுத்துகின்றார்கள். அவர்களது உலகப் பார்வையை கல்வியால் மாற்றப்பட வேண்டும். அது சாத்தியமானாதா
என்பது பல நுற்றாண்டுக்குப் பின்னர் வாழப்போகும் மக்களுக்கு மாத்திரமே சிலவேளை தெரியக்கூடும். இன்ஷா அல்லா.


No comments:

Post a Comment