Monday 14 October 2019

SUNDARA RAMASAMY ,WRITER BORN 1931 MAY 30-OCTOBER 14,2005




SUNDARA RAMASAMY ,WRITER 
BORN 1931 MAY  30-OCTOBER 14,2005



சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது


இலக்கியச் செல்வாக்குகள்

இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது.[1]

படைப்புகள்
நாவல்
ஒரு புளியமரத்தின் கதை (1966)
ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)
சிறுகதைகள்
சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
காற்றில் கரைந்த பேரோசை
விரிவும் ஆழமும் தேடி
தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
இறந்த காலம் பெற்ற உயிர்
இதம் தந்த வரிகள் (2002)
இவை என் உரைகள் (2003)
வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
வாழ்க சந்தேகங்கள் (2004)
புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
மூன்று நாடகங்கள் (2006)
வாழும் கணங்கள் (2005)
கவிதை
சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)
மொழிபெயர்ப்பு

செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)
நினைவோடைகள்
க.நா.சுப்ரமண்யம் (2003)
சி.சு. செல்லப்பா (2003)
கிருஷ்ணன் நம்பி (2003)
ஜீவா (2003)
பிரமிள் (2005)
ஜி.நாகராஜன் (2006)
தி.ஜானகிராமன் (2006)
கு.அழகிரிசாமி.


சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்
இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார்.[2]

குமரன் ஆசான் நினைவு விருது
இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.[3]
கதா சூடாமணி விருது (2004)[1]
சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்
தமிழ்க் கணிமைக்கான விருது
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.


சிறுகதைகள் பட்டியல்[தொகு]

சிறுகதைகள்இதழ்வருடம்
1.முதலும் முடிவும்புதுமைப்பித்தன் மலர்1951
2.தண்ணீர்சாந்தி1953
3.அக்கரை சீமையில்சாந்தி1953
4.பொறுக்கி வர்க்கம்சாந்தி1953
5.உணவும் உணர்வும்1955
6.கோவில் காளையும் உழவு மாடும்சாந்தி1955
7.கைக்குழந்தைசரஸ்வதி1957
8.அகம்சரஸ்வதி1957
9.அடைக்கலம்சரஸ்வதி1958
10.செங்கமலமும் ஒரு சோப்பும்சரஸ்வதி1958
11.பிரசாதம்சரஸ்வதி1958
12.சன்னல்சரஸ்வதி1958
13.லவ்வுசரஸ்வதி1958
14.ஸ்டாம்பு ஆல்பம்சரஸ்வதி1958
15.கிடாரிசரஸ்வதி ஆண்டு மலர்1959
16.சீதைமார்க் சீயக்காய்த்தூள்தாமரை பொங்கல் மலர்1959
17.ஒன்றும் புரியவில்லைகல்கி தீபாவளி மலர்1960
18.வாழ்வும் வசந்தமும்நவசக்தி வார இதழ்1960
19.ரயில் தண்டவாளத்தில் ஓடும்கல்கி தீபாவளி மலர்1961
20.மெய்க்காதல்கல்கி1961
21.மெய்+பொய்=மெய்எழுத்து1962
22.எங்கள் டீச்சர்கல்கி தீபாவளி மலர்1962
23.பக்த துளசிஇலக்கிய வட்டம்1964
24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்புஇலக்கிய வட்டம்1964
25.தயக்கம்சுதேசமித்திரன் தீபாவளி மலர்1964
26.லீலைகல்கி1964
27.தற்கொலைகதிர்1965
28.முட்டைக்காரிதீபம்1965
29.திரைகள் ஆயிரம்தீபம் ஆண்டுமலர்1966
30.இல்லாத ஒன்றுகல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர்1966
31.காலிப்பெட்டிஉமா
32.அழைப்புஞானரதம்1973
33.போதைசதங்கை1973
34.பல்லக்குத் தூக்கிகள்ஞானரதம்1973
35.வாசனைஞானரதம்1973
36.அலைகள்கொல்லிப்பாவை1976
37.ரத்னாபாயின் ஆங்கிலம்அக்1976
38.குரங்குகள்யாத்ரா1978
39.ஓவியம்யாத்ரா1979
40.பள்ளம்சுவடு1979
41.கொந்தளிப்புமீட்சி1985
42.ஆத்மாராம் சோயித்ராம்1985
43.மீறல்இனி1986
44.இரண்டு முகங்கள்வீடு1986
45.வழிகொல்லிப்பாவை1986
46.கோலம்கொல்லிப்பாவை1987
47.பக்கத்தில் வந்த அப்பாபுதுயுகம்1987
48.எதிர்கொள்ளல்காலச்சுவடு1988
49.காணாமல் போனதுகாலச்சுவடு1989
50.விகாசம்இந்தியா டுடே1990
51.காகங்கள்காலச்சுவடு ஆண்டுமலர்1991
52.மேல்பார்வைஇந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர்1994-1995
53.பட்டுவாடாகாலச்சுவடு1995
54.நாடார் சார்தினமணி பொங்கல் மலர்1996
55.நெருக்கடிசதங்கை1996
56.இருக்கைகள்காலச்சுவடு1997
57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதைதினமணி தீபாவளி மலர்1999
58.மயில்ஆனந்த விகடன் பவழவிழா மலர்2002
59.பையை வைத்துவிட்டு போன மாமி2003
60.தனுவும் நிஷாவும்காலம்2004
61.களிப்பு2004
62.நண்பர் ஜி.எம்காலச்சுவடு2004
63.ஒரு ஸ்டோரியின் கதைகாலச்சுவடு2004
64.கூடி வந்த கணங்கள்2004
65.கதவுகளும் ஜன்னல்களும்புதியபார்வை2004
66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்2004
67.அந்த ஐந்து நிமிடங்கள்2004
68.ஈசல்கள்2004
69.கிட்னி2004
70.பிள்ளை கெடுத்தாள் விளைகாலச்சுவடு2005
71.கொசு, மூட்டை, பேன்புதியபார்வை2005
72.ஜகதிகாலம்2005

இளம் படைப்பாளர் விருது
சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும்.










சிறப்புக்கட்டுரை: சுந்தர ராமசாமி எனும் ஒரு முக்காலத்து புளியமரம்- அஜயன் பாலா

சுந்தர ராமசாமியை எனக்கு பிடிக்காது அவரைப் பற்றி எழுதும்போது வண்டி வண்டியாகத் திட்டத்தான் காரணம் கொட்டிக்கிடக்கிறது என்றுதான் நண்பர் விஜய் மகேந்திரனிடம் முதலில் இந்த கட்டுரைக்கு மறுத்தேன். பரவாயில்லை விமர்சனம்தானே எழுதிக்கொடுங்க என வற்புறுத்தி கேட்டவுடன் எழுதத் துவங்குகிறேன், நிச்சயம் வம்பு வழக்குகள் வரும்.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தனுக்குப் பிறகு தமிழ்ச்சூழலில் அடுத்து யாரைச் சொல்ல முடியும் என்று பார்த்தால் தவிர்க்கவே முடியாமல் சுந்தர ராமசாமிதான் வந்துவிடுகிறார். தி.ஜானகிராமன், அசோகமித்ரன், பிரமிள் எனத் தனிப்பெரும் சாதனையாளர்கள் இருந்தார்கள் எனினும் இவர்கள் மூவரையும் கடந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என நான்கு துறைகளிலும் தனி முத்திரை பதித்து முழுமையான எழுத்தாளனாக ஒரு உயரத்தை அடைந்தவர் எனும் நோக்கில் சுந்தரராமசாமிக்கென்று தனி பீடம் இருக்கவே செய்கிறது.



இலக்கிய அரசியல்களை கடந்து நோக்கும் போது நாவலில் ஒரு புளிய மரத்தின் கதை ஜே ஜே சிலகுறிப்புகள், சிறுகதையில் பிரசாதம், ,ஜன்னல் சீதை மார்க் சீயக்காய்த்தூள்,,எங்கள் டீச்சர், ,ரத்னாபாயின் ஆங்கிலம் குரங்குகள், பள்ளம், பல்லக்கு தூக்கிகள் போன்ற கதைகளும் கட்டுரைகளில் பல இருந்தாலும் தனித்து சொல்வதென்றால் அகிலனுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை கண்டித்து அவர் எழுதிய கட்டுரையும் கவிதைகளில் அனைவராலும் இன்றும் போற்றப்படும் சவால் கவிதையும் அந்தந்த துறைகளின் தனிபெரும் சாதனை என்றே சொல்லமுடியும் . இப்படியாக இலக்கியத்தின் அனைத்து வாசல்களின் வழியாகவும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொண்ட சுந்தரராமசாமி அவர் காலத்தில் வந்த காலச்சுவடு ( இப்பொது வருவது அல்ல- அவரது காலத்தில் வந்த காலச்சுவடு மிககுறைந்த அளவில் வந்து நின்று போனது –அந்த இதழ்களுக்கு அவரே ஆசிரியர்) இதழ்களின் வழியாகவும், தான் ஒரு சிறந்த சிறுபத்திரிகையாளனாகவும் தமிழ்ச்சூழலுக்கு தன்னை அழுத்தமாக நிறுவியுள்ளார்.



அவர் ஆசிரியராக இருந்த காலச்சுவட்டில் அரசியல் வம்புகளுக்கு இடமில்லை. தேர்ந்த கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளுமே இடம்பெற்றிருந்தன. சிறந்த புகைப்படங்களை தாங்கிய அட்டைப்படங்கள் அவரது தேர்ந்த ரசனைக்கு இப்பவும் சான்று. இன்றைய இலக்கிய உலகின் தீவிர வாசகர்கள் தங்கள் உடம்பில் ஓடுவது இலக்கிய 100% ரத்தமாக இருக்கவேண்டும் என விரும்பினால் முதலில் அக்காலத்திய காலச்சுவடு ,நிறப்பிரிகை, கல்குதிரை , மீட்சி அதற்கு முன்னோடிகளான கசடதபற ஆகியவற்றை தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளரான சுந்தர ராமசாமிக்கு அவர் இறந்து 12 வருடங்களுக்கு பின்பும் அவருக்கான மதிப்பீடு உயர்ந்துள்ளதா அல்லது அவருக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் படைப்பு வரிசை முறையாக தரப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.



காரணம் அவரை இவ்வளவு புகழும் நானே கூட இதுநாள் வரை அவரைபற்றி எதுவும் எழுதவில்லை. ஏன் எழுதவில்லை எது என்னை எழுதவிடாமல் என்னையும் இன்னும் பலரையும் தடுத்துவிட்டது என்றால் அது ஒரு துன்பவியல் நிகழ்வு . தமிழ் சூழலில் இலக்கியம் வெகுஜனத்துக்கு மெல்ல பரவ ஆரம்பித்த காலத்தில் புதிய காலச்சுவடு புத்துருவாக்கம் கண்ட நேரத்தில்; இலக்கிய அரசியல் என்ற பதம் தமிழ்ச்சூழலில் உருவாகும் போது அவர் அதன் மையமாக இருந்தார் . அது அவர் விரும்பியோ விரும்பாமலோ நடந்த ஒரு துன்பியல் நிகழ்வு

அந்த துன்பியல் நிகழ்வின் இறுதிக்காட்சி பிள்ளை கொடுத்தான் விளை சிறுகதை.

அதற்கு முன்பாக சுந்தர்ராமசாமி எனும் ஆளுமைமிக்க எழுத்தாளனது பிம்பம் அக்காலத்தில் எப்படியாக இருந்தது என்பதை நான் முழுமையாக விவரிக்க விரும்புகிறேன் தமிழ் சூழலின் மகத்தான எழுத்தாளர் அவர்.



ஜே ஜே சில குறிப்புகள் வெளிவந்த காலத்தில் இன்று பாகுபலி போல தமிழ் நாடு முழுக்க பிரம்மாண்டமாக பேசப்பட்டவர். 82 முதல் 92 வரையிலான பத்தாண்டு காலத்தில் ஜே ஜெ மிகப்பெரிய பாதிப்பை தமிழ் சூழலில் நிகழ்த்தியிருந்தான். ஜே ஜேவை படித்து விட்டு பலரும் ஜே ஜேவாக தங்களை கற்பனை செய்துகொண்டு பிதற்றிய காலம் அவை. நானே கண்கூடாக பலரை பார்த்திருக்கிறேன். நான் வசித்து வந்த திருக்கழுக்குன்றத்தில் மலையடிவார படிகட்டுகளில் அமர்ந்துகொண்டு 20துக்குமேற்பட்ட இளைஞர்கள் நாங்கள் ஜே ஜேவை பற்றி தினசரி பேசி வந்தோம் தினசரி ஒருவன் ஜேஜே சில குறிப்புகளின் முக்கியமான ஒரு வரியை வாசிப்பான் . பின் அந்த வரியை முன் வைத்து அனைவரும் நீண்ட நேரம் விவாதிப்போம். யாராவது ஒருவனை பாராட்டிவிட்டால் மாட்டுக்கு சொறிந்து கொடு என ஒருவன் உரக்க கத்துவான் . வெற்று மணலில் வேட்டை நாயின் கால்தடங்களைப்போல அனைவரது மனமும் ஒரு கொந்தளிப்பில் திளைக்க விவாதம் செய்வோம் இத்தனைக்கும் யாருக்கும் பெரிய இலக்கிய வாசிப்பு பழக்கம் இருந்ததில்லை.

அப்போது எங்கள் ஊருக்கு புதிதாக தொடங்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு புதிதாக வந்த ஆசிரியர் தினகரன் என்பவர் தான் ஜே ஜேவை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார் . அவர் மூலமாக வாசிக்க துவங்கி குறைந்த காலத்தில் சிந்தனை மையம் என்ற ஒன்றை துவக்கி தினசரி மாலை கூட்டம் நடத்தும் அளவிற்கு ஜே ஜே சில குறிப்புகள் அனைவரையும் பாதித்துவிட்டது.



பிற்பாடு லோர்க்கா கவிதைகள் குறித்தும் எக்ஸிஸ்டென்ஷியலிசம் குறித்தும் எங்கள் அமைப்பு சார்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் அளவுக்கு அந்த நாவல் ஒரு இளைஞர் கூட்டத்தையே உருவாக்கியது.

அக்காலத்தில் எனக்கு சுந்தர ராமசாமி ஒரு கடவுளை போல தோன்றினார். பேசாமல் சுந்தர ராமசாமியை முதல்வராக்கினால் எப்படியிருக்கும் அவர் அமைச்சரவையில் அசோகமித்ரன், ஆதவன் சா.கந்தசாமி என அப்போது எனக்கு தெரிந்த அனைத்து எழுத்தாளர்களையும் கற்பனை செய்து பார்ப்பேன்.

பிற்பாடு சென்னை வந்த பிறகும் அவர் மீதான் பிரேமம் அடங்கவில்லை. ஒருமுறை நண்பர்களுடன் சுற்றுபயணம் தொடர்பாக நாகர்கோவில் சென்ற போது கிடைத்த அவகாசத்தில் அட்ரஸ் தெரியாமல் ஒரு பகல் முழுக்க சுந்தர ராமசாமி வீடு தெரியுமா என கேட்டு அலைந்திருக்கிறேன்.

பிற்பாடு தான் நான் அலைந்து திரிந்த இடத்தில் வெகு அருகில்தான் அவரது துணிக்கடை இருந்திருகிறது என தெரிய வந்தது.

இப்படியாக தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்து கொண்டு தமிழ் இலக்கிய உலகையே தன் நாவல் மூலம் அதிரவைத்தவர் சுந்தர ராமசாமி.

இன்றைய வாசகர்களுக்கு இது மிகையாகத் தெரியலாம் . காரணம் இணையம் இன்று எப்பேர்பட்ட எழுத்தாளனையும் நெருங்கி பார்த்து அவர்களை சுலபத்தில் வெறுத்துவிடும் வாய்ப்பை உண்டாக்கிவிடுகிறது. இது காலத்தின் பெரும் துரதிர்ஷ்டம்.

அன்று எல்லாமே அச்சு எழுத்து மூலமாகத்தான் நிகழ்ந்தது. எழுத்து உண்டாக்கும் பரவசத்தை வேறு எவற்றின் வழியும் அடைந்து விட முடியாது. இப்படி ஒரு வரியை எழுதிய எழுத்தாளன் எப்படி இருப்பான், எப்படி சிந்திப்பான், என்ற சிந்தனையும் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கும். அந்த மனக்கிளர்ச்சியால் அந்த எழுத்தாளனை நேரில் சந்திக்கும் ஆவல் அதிகரிக்கும் .



அப்படிபட்ட ஒரு மனக்கிளர்ச்சியோடு சுந்தரராமசாமியை நேரில் காணும் ஆவல் கொண்டிருந்த எனக்கு சென்னையில் அதற்கான முதல் வாய்ப்பு நண்பர் யூமா வாசுகிமூலம் கிட்டியது.



அக்காலத்தில் யூமாவும் நானும் ஒரே காம்பவுண்டில் பழவந்தாங்கலில் அடுத்தடுத்த அறையில் தங்கியிருந்தோம் . நாளைக்கு சுந்தரராமசாமி உட்லண்ட்ஸ் டிரைவின்னுக்கு வருகிறார், அவரை அங்கு நான் பார்க்க போகிறேன் நீயும் வா என அழைப்பு விடுத்தார்.

மறுநாள் டிரைவின்னில் அவரை நாங்கள் பார்க்க போன போது அவரை சந்திக்க அவர்து பழைய நண்பர்கள் சிலர் ஆர்வத்துடன் வந்திருந்தனர். நெருங்கி பேச முடியாவிட்டாலும் அருகிலிருந்து அவர் பேசுவதை கவனிக்க முடிந்தது. வெறும் அறிமுகத்தோடு இருவரும் திரும்பினோம்.



அடுத்த நாள் நானும் யூமாவாசுகியும் நங்கநல்லூரில் அவர் தன் மகள் வீட்டில் தங்கியிருக்கும் தகவல் அறிந்து அங்கு சந்திக்க சென்றோம்..

அங்கு யூமவாசுகியுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவினார். யூமாவுக்கும் அவருக்குமிடையில் நன்கு பரிச்சயமிருந்ததால் இருவரும் பல விஷயங்கள் குறித்து மனம் விட்டு பேசினர். யூமா என்னை சிறுகதைகள் எழுதி வருபவனாக அறிமுகப்படுத்தினார். அப்போது எனது மூன்று கதைகள் வெளியாகியிருந்தன.

பேச்சு தமிழர்கள் வாழ்க்கை குறித்து திரும்பியது . கேரளாவில் மக்கள் பேணும் சுத்தம் ஒழுங்கு தமிழ் நாட்டில் இல்லை என்பதும் தமிழ் நாட்டில் கண்ட இடங்களில் எச்சில் துப்புகிறார்கள், மலையாளிகள் அப்படி செய்வதில்லை என்று ஆதங்கத்தோடும், வேதனையோடும் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசியது உண்மை என்றாலும் அப்போது என் தமிழுணர்வு சட்டென பொங்கி விட்டது . ஆமாம் சார் அங்கு தட்ப வெட்ப நிலை அப்படி இது வெப்ப மண்டலம் உமிழ்நீர் சுரப்பது தவிர்க்க முடியாதது. கேரளா போல தமிழ் நாட்டிலும் இயற்கை சூழ்ந்த மலைகளின் வசிப்பிடமாக இருந்தால் அவர்களும் சுத்தமாக இருந்திருப்பார்கள் என கூறினேன்.

அவருக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை . அதிகபிரசிங்கித்தனமாக பேசுகிறானே என்பது போல ஒரு முறை பார்த்தார். அவரை பற்றி நான் பலமுறை நண்பர்கள் சொல்ல கேட்டது என்னவென்றால் அவரிடம் பெரியவர் சிறியவர் பாகுபாடு கிடையாது யாரும் அவரிடம் துணிந்து கருத்து கூறலாம் அவரிடம் அதற்கு இடமுண்டு என்பதுதான் . அந்த துணிச்சலில்தான் நான் பதில் சொன்னேன். ஆனால் அவரிடமிருந்து உரையாடல் தொடரும் என எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஒருவேளை அவரிடம் முன்பே நான் அவரது நாவல் படித்துவிட்டு மனபிராந்தியாய் அலைந்தது பற்றியும் அவரை பார்க்க நாகர்கோவிலில் அலைந்தது பற்றியும் கூறியிருந்தால் அவர் என்னோடும் சகஜமாக உரையாடியிருப்பாரோ என்னவோ

அதன்பிறகு அவரை நேராக சந்திக்கவில்லை.

அடுத்த சில நாட்களில் அவர் நூல் ஒன்றின் வெளியீட்டு விழா புக் பாயின்ட் ஹாலில் நடந்த போது சென்னையில் முதல் முறையாக ஒரு இலக்கிய கூட்டத்துக்கு இருநூறுக்கும் அதிகமானபேர் கலந்து கொண்டு ஆச்சர்யபடுத்தினர்

உண்மையை பற்றியும் உள்ளொளி பற்றியும் தீவிர மனத்தூண்டுதலை உண்டாக்கிய ஜே ஜே அந்த கூட்டத்தின் நடுநாயகமாக இருந்த சுந்தரராமசாமியை பார்த்து என்ன சொல்லியிருப்பான் இதுதான் அன்றைய இரவு எனக்கு மிகபெரிய கேள்வியாக இருந்தது

தொடர்ந்து பிள்ளை கொடுத்தான் விளையால் உண்டாக்கிய சர்ச்சை எல்லாம் சேர்ந்து அவரது பிரம்மண்ட பிம்பம் இலக்கிய பரப்பில் அவர் மீதான ஒரு எதிர்ப்பை உண்டாக்கியிருந்தது.



ஒருவேளை அப்படி ஒரு கதை எழுதாமல் விட்டிருந்தால் அவர் மீதான் பிம்பம் இப்போதைக்கு இருப்பதைக்காட்டிலும் கூடுதலாக இருந்திருக்குமோ என்னவோ மொழியில் அவர் கொண்டிருந்த மாளாக்காதல் தமிழுக்கு பெருமை சேர்த்திருப்பது மட்டுமல்லாமல் புதிய தலைமுறைகள் உருவாக காரணமாக இருந்துள்ளது . 90 களில் எழுத துவங்கிய பலர் அவரது எழுத்தின் நிழலில் உருவானவர்களே

அவரது சிறுகதைகள் மொழி பற்றிய பிரக்ஞயில்லாத இக்கால சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டி.

இலக்கியத்தை வெறுமனே ரசனையை கடந்து தத்துவங்களின் வழி மீட்க முயன்ற நாவலாசியர்களில் அவரே முழுமையாக வெற்றிபெற்றவர்

தொடர்ந்து சுந்தரராமசாமி குறித்த மீள்பார்வைகள் வெளிதரப்புகளில்லிருந்து உரையாடலாய் மாற இக்கட்டுரை வழி வகுக்கும் என நம்புகிறேன்

- அஜயன் பாலா




கட்டுரையாளர் குறிப்பு : அஜயன் பாலா எழுத்தாளர். இயக்குநர்.

No comments:

Post a Comment