Thursday 3 October 2019

T.K.Bhagavathi T.K.பகவதி- பழம்பெரும் குணச்சித்திர நடிகர்.








T.K.Bhagavathi

T.K.பகவதி- பழம்பெரும் குணச்சித்திர நடிகர்.

நாடகத்தாய் பெற்ற கலைஞர்கள் பலருக்கு, வளமும் வாழ்வும் கொடுத்துவரும் வளர்ப்புத் தாயாக விளங்குவது திரைப்படம்.
நாடக நால்வர் எனப் புகழ்பெற்ற ரி.கே.எஸ்.சகோதரர்களில் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் ரி.கே.பகவதிதான்.
1935-இல் “மேனகா” முதல் 1980-இல் “ஆறிலிருந்து அறுபது வரை” மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ரி.கே.பகவதி.

அவருடைய எடுப்பான திஓற்றமும், மிடுக்கான நடையும், கனமான குரலும், ஈடற்ற ராஜபார்ட் நடிகர் என்ற புகழைத்தந்தன. ராஜபர்த்ரு ஹரியாகவும், இராவணனாகவும், ராஜ ராஜ சோழனாகவும், மகேந்திரப் பல்லவச் சக்கரவர்த்தியாகவும், பல்வேறு சமூகப் பாத்திரங்களாகவும் நாடகவுலகில் பவனி வந்தவர். திரையுலகிலும் தனக்கென ஒரு தனியான பாணியில் வெற்றி பெற்றார். அப்பா வேடங்களில் பெரும்புகழ் பெற்ற இருவரில் எஸ்.வி.ரங்காராவ் ஒருவர். அடுத்து ரி.கே.பகவதி. மிடுக்காகவும் கலகலப்பாகவும் அக்கதாபாத்திரங்களில் செயற்கைத் தனமின்றி ஒன்றி விடுவதில் இவ்விருவரும் தன்னிகரல்லாது விளங்கினர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “பணமா பாசமா” படத்தில் மனைவிக்குக் கட்டுப்பட்ட கணவனாக எஸ்.வரலெட்சுமியின் கணவராகவும் சரோஜாதேவி, நாகேஷின் தந்தையாகவும் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டார் என்றார் என்றால் அது மிகையில்லை.

மேனகா, ரத்தபாசம், மனிதன், இன்ஸ்பெக்டர், சபதம், பணமா பாசமா முதலான சமூகப் படங்களில் பகவதியின் திறமை ஒளி வீசிய போதிலும், எம்.ஏவி. பிக்சர்ஸ் உருவாக்கிய சம்பூர்ண ராமாயணத்தில், அவர் இராவணனாகப் பீடு நடைபோட்ட பெருமையை ரசிகர்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
நாடகத்தில் “சோழன்” பகவதியாக விளங்கியவர் திரைப்படங்களில் “இராவணன்” பகவதியாகப் புகழ் பெற்றார்.

நடிப்பின் மூலம் மாமன்னராக செங்கோல் செலுத்திய பகவதி, சொந்த வாழ்க்கையில் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்து சக நடிகர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
கலை வாழ்வில் ரி.கே.சண்முகம், தம்பி பகவதியும் இரட்டையர் போலவே உலா வந்தார்கள். எனவே, ஔவை சண்முகம் 1973-இல் மறைந்தபின், தன் வலிமையில் பாதி மறைந்தது போலவேதான் பகவதி வாழ்ந்து வந்தார்.

1972-இல் தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழன் சிலை திறப்பு விழாவில்தான் ரி.கே.எஸ். சகோதரர்களின் ராஜ ராஜ சோழன் நாடகம் கடைசியாக நடத்தப்பட்டது. அதற்குப்பின் ரி.கே.எஸ். நாடகக்குழு இயங்கவில்லை. வாழ்நாள் முழுவதையும் நாடகக்கலைக்கே காணிக்கையாக்கிய பகவதிக்குத் தங்கள் நாடகக் குழுவைத் தொடர்ந்து இயக்க முடியவில்லையே என்ற கவலை வாட்டிக் கொண்டேயிருந்தது.
எனவே, இறுதி மூச்சுவரை நாடகச் சிந்தனையுடனேயே மறைந்து விட்டார் அந்த முதுபெரும் நடிகர்.

நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்த ரி.கே.எஸ். சகோதரர்களைப் போன்ற தரமான நாடகக் குழு ஒன்று எப்போது தோன்றப்போகிறது?ரி.கே.எஸ். சகோதரர்களின் பூர்வீகம் நாகர்கோவில் நகரத்தில் அமைந்துள்ள “ஒழுகினசேரியாகும்”. இவர்களது வீட்டை அடுத்தத் தெருவில்தான் கலைவாணரின் வீடும் இருக்கிறது. இன்றும் இவ்விரு வீடுகளும் இருக்கிறது. ஆனால் வியாபாரத்தலமாகவும் சீருந்துகளின் பணிமனையாகவும். 1983-ஆம் ஆண்டு ரி.கே.பகவதி மரணமடைந்தார்

தமிழ் நாடகத் துறையின் மானமாக விளங்கி வந்த டி.கே .எஸ் சகோதர்களில் எஞ்சியிருந்த டி.கே.பகவதி அவர்கள்   சமீபத்தில் காலமானார். ஆழ்ந்த துக்கத்தில் பங்கு கொள்ள இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களை அணுகினோம்.

டி.கே.எஸ். பிரதர்ஸ் நால்வராவார்கள். சங்கரன், முத்துசாமி, சண்முகம் மற்றும் பகவதி. இவர்களில் சண்முகம் அண்ணாச்சியும், பகவதியும் என்றும் இணை பிரியாமல் இருப்பார்கள்.சேர்ந்தே போவார்கள். சண்முகம் காலமானத்திற்கு பிறகுதான் இருவரும் பிரிந்தனர். அதிலிருந்து பகவதி அண்ணாச்சி ஒரு மாதிரியாக ஆகிவிட்டார்கள். 

மதுரையில் டி.கே.எஸ் சகோதரர்கள் நாடகம் நடத்திக் கொண்டிருந்த பொழுது நான் வத்தலக்குண்டில் ஏ .எம்.எம்.சி கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்தேன்.   டி.கே .எஸ் பிரதர்ஸ் நாடக குழுவில் சேர்ந்து கொள்ளச் சொல்லி, என் கையில் ஐந்து அணாவும் கொடுத்து மதுரைக்கு அனுப்பி விட்டார் என் ஆசிரியர். சண்முகம் அண்ணாச்சியும் பகவதியும் ஹார்மோனியத்தை எடுத்து வைத்துக் கொண்டு என்னை பாடிக் காட்டச் சொன்னார்கள். பாடிக் காட்டினேன். அருகில் நின்று கொண்டிருந்த டி .வி. நாராயணசாமியிடம் அபிப்ராயம் கேட்டார்கள்.பையன் பர்ஸனாலிட்டியாக     இருக்கிறான். தர்பாரில் போடலாம் என்று சொன்னார். அவர் சொன்னபடி 'சிவலீலா' நாடகத்தில் தொடர்ந்து 108 நாட்கள் தடி தூக்கி  கொண்டுதான் நின்றேன். அவ்வாறு எட்டு வயதில் அரைக்கால் சட்டைபோட்டுக் கொண்டு அந்த குழுவில் சேர்த்தேன்.அரும்பு மீசையுடன்தான் வெளியே வந்தேன்.  

ஆரம்ப காலத்தில் பகவதி பபூன் ஆக்ட் பண்ணிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். பிறகு படிப்படியாக உயர்ந்து வில்லன் வேஷம் போட ஆரம்பித்தார்.ராஜராஜ சோழனாக டி.கே .பகவதி நடித்ததை

பார்த்த பிறகுதான் அதை படமாக தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் உமாபதிக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த வேஷத்தை பகவதி போல யாராலும் நடிக்க முடியாது என்றே எண்ணுகிறேன். அவருடைய உடற்கட்டும் கம்பீரமும் இது போன்ற வேடங்களை செய்ய அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

பொதுவாக சண்முகம் அண்ணாச்சி நாடகம், பாடம், நடிப்பு என்றிருப்பார். அதனால் நாடககக்குழுவின் நிர்வாகம் அனைத்தையும் பகவதிதான் கவனித்துக் கொள்வார். குழுவில் உள்ள பிள்ளைகளை எல்லாம் அத்தனை அக்கறையாக எப்பொழுதும் கவனித்துக் கொள்வார்.

சந்திப்பு: மருதம்




.







No comments:

Post a Comment