Wednesday 9 October 2019

பிள்ளைக்கனியமுது






பிள்ளைக்கனியமுது 

வில்லன் வீரப்பாவிற்கு வெல்லமாக பாட்டு!

தயாரிப்பாளர்களைப் பழைய, வசதியுள்ள நபர்களா, புதிதாகப் படம் எடுக்க வருபவர்களா என்றெல்லாம் இனம் பிரித்துப் பார்க்காமல், தன்னுடைய இசை தேவைப்படுகிற பலருக்கும் இடைவிடாமல் பணியாற்றுவதை மகாதேவன் ஒரு மூலமந்திரமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார். அது அவருக்கு மட்டுமல்ல, அவரை நம்பி எண்ணிக்கையில் பெருகிக் கொண்டிருந்த அவருடைய இசைக்குழுவினருக்கும் அத்தியாவசியமாக இருந்தது. ‘ராத்திரிக்கு பூவாவுக்கே லாட்டரி’ என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எத்தனையோ வாத்தியக் கலைஞர்களுக்கு மகாதேவனின் குடைநிழல் அடைக்கலம் தந்த வண்ணம் இருந்தது.

ஐம்பதுகளில் பிரபல வில்லனாக இருந்த பி.எஸ். வீரப்பா, பின்னாளில் தயாரிப்பாளராவும் பிரகாசித்தார். எம்.ஜி.ஆர்., நடித்த ‘ஆனந்த ஜோதி’, சிவாஜி நடித்த ‘ஆலயமணி’, ‘ஆலயமணி’யின் இந்தி தயாரிப்பான ‘ஆத்மி’ என்று பல படங்களைத் தயாரித்தார். அவருடைய தயாரிப்பு நிறுவனமான பி.எஸ்.வி. பிக்சர்ஸ்  நீண்ட ஆயுள்கொண்ட ஸ்தாபனமாக விளங்கியது. வீரப்பாவின் முதல் படமான ‘பிள்ளைக்கனியமுது’ மகாதேவனின் இசையமைப்பில் வந்தது. மகாதேவன் ராசிக்காரர் என்பதற்கு இன்னொரு சான்றாக அமைந்தது வீரப்பாவின் தயாரிப்பு நிறுவனம்!

‘இந்தக் காலத்தில நாடகமானாலும் சினிமாவானாலும் டைட்டில் வால்யூ முக்கியம்’ என்ற வசனத்துடன்  வந்தது, ‘பிள்ளைக்கனியமுது’.  அருமையான தலைப்பைப் பெற்றிருந்தாலும், படம் ஒரு வினோதமான கலவை. மசாலாத்தனத்தின் சிகரம்!

எஸ்.எஸ். ராஜேந்திரன் வயலில் ஏர் உழுகிறார், சிறுத்தையுடன் சண்டையிடுகிறார், ஒரு பெண்ணைக் காதலித்துவிட்டு (ஈ.வி. சரோஜா) இன்னொரு பெண்ணை விரும்பி மணக்கிறார் (எம்.என். ராஜம்), கண்ணை இழந்து   ‘ரத்தக்கண்ணீர்’ ராதாவைப் போல் கதறுகிறார், ஒரு விபத்தில் பறிபோகும் பார்வை இன்னொரு விபத்தில் திரும்புவதன் காரணமாக, வில்லன் பி. எஸ். வீரப்பாவின் காரைத் தன்னுடைய ரேக்ளா வண்டியில் துரத்தி மோதலில் ஈடுபடுகிறார்!

இவையெல்லாம் போதாதென்று, எஸ்.எஸ். ஆருக்காக, அப்பட்டமான அரசியல் வாடை வீசும் வசனங்களும்  சேர்க்கப்பட்டிருந்தன. தனக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்க வேண்டும் என்று யோசிக்கும் போது, அறிஞரின் அறிவு, நாவன்மை, கவிஞரின் கற்பனை, கலைஞரின் திறமை ஆகியவை இருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை என்கிறார்! ‘‘கடமை– கண்ணியம்– கட்டுப்பாடு ஆகியவற்றை மறப்பவர்கள் யாராக இருந்தாலும், என் நிலைமையைக் கண்டாவது திருந்தட்டும்’’, என்று வில்லன் வீரப்பாவும் கடைசியில் ஒரு போடு போடுகிறார்!


இப்படியெல்லாம் இருந்தாலும், வெற்றிப்பாடல்கள் தந்துகொண்டே இருக்கவேண்டும் என்று மகாதேவன் கங்கணம்கட்டிக்கொண்டு செயல்பட்டார். ‘பிள்ளைக்கனியமுது’விற்கும் ஜீவகளை சிந்தும் பாடல்களை வழங்கினார். ‘மக்களைப் பெற்ற மகராசி’யில் ஒலித்த ‘பொன்னு விளையிற பூமியடா’விற்கு ஒன்றும் சளைத்ததில்லை, ‘பிள்ளைக்கனி யமுது’வில் ஒலிக்கும் ‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே’ என்ற பாடல். தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்த மகாதேவன் தந்த உற்சாகத்தால், மனம் திறந்து உணர்ச்சிப் பொங்க பாடலைப் பாடினார் சவுந்தரராஜன்! கவித்துவம் பொங்கும் மருதகாசியின் இந்த வேளாண்மைப் பாட்டிற்குள், கதிர்மணிகளுடன் கதிரவனையும் காற்றையும் நிரப்பிவைத்திருக்கிறார்கள் மகாதேவனும் டி.எம்.எஸ்ஸும்!

‘பிள்ளைக்கனியமுது ஒன்று பிறந்திட வேண்டும்’ என்று வசியம் செய்யும் வர்ண மெட்டுடைய பாடல்,  படத்தில் மூன்று முறை ஒலிக்கிறது என்பதிலிருந்தே அதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தெரிகிறது.  ஐம்பதுகளின் பிற்பகுதியில் மகாதேவன் பக்குவப்படுத்தி வைத்திருந்த ஒரு இந்துஸ்தானி கலந்த மெல்லிசை ஜாலத்திற்கு சான்றாக உள்ளது, பி.சுசீலாவும் சீர்காழி கோவிந்தராஜனும் பாடும் இந்தப் பாடல்.

‘ஓடுகிற தண்ணியிலே  ஒறசி விட்டேன் சந்தனத்தை’  என்ற நாட்டுப்பாடல், அதற்குப் பொருத்தமான மெட்டமைப்பில் இரு குரலிசையாக மிளிர்கிறது (பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்).  ஆறு, காதலியையும் காதலனையும் பிரிக்கிறது...அவள் சந்தனத்தை உரசிவிட்டு பாலம் அமைக்கப்பார்க்கிறாள்... அதற்குப் பொருத்தமாக  சந்தனப்பொட்டு வச்சு வந்திருக்கிறேன் என்கிறான் மச்சான். அழகான பாடல்.

இந்தப் பாடலின் எதிரொலி, பழமையை மதித்த வி.எஸ். நரசிம்மனின் இசையில் ‘அச்சமில்லை அச்சமில்லை’யில் வந்தது (1984). மகாதேவனின் வாத்தியக் கோஷ்டியில் வயலின் கலைஞரராகப் பணியாற்றியிருந்த வி.எஸ்.நரசிம்மன், மாமா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததாக என்னிடம் தெரிவித்தார். அவருடைய மெல்லிசை ஜாலத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில்தான், தானும் அதற்கு இசையமைத்தார். படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரே ஒரு பாடல் எழுதினார். அது காக்காய் கல்யாணத்தை சித்தரித்த, கிராமிய மணம் கமழும் பாடல். பாடலின் இரண்டாவது கட்டத்தில், பொய்க்கால் குதிரை ஆட்டமும் இணைகிறது. கவிஞரின் வரிகளில் கடந்து போன  காலத்தில் இசை நாடகங்கள் மீது மக்களுக்கு இருந்த நாட்டம் வெளிப்படுகிறது.

‘‘ஆடுதுறை தங்கமணி அல்லி வேஷம் போடுறாளாம், நாடகம் பாக்கப் போறேன், வாறீயா பெண்ணே’’ என்று காதலன் அழைக்கிறான். நாடகம் இரவெல்லாம் நடக்கும் என்பதாலோ, ‘நாளைக்குத் திரும்பிடலாம் ஜாலியா’ என்கிறான்.

பட்டுக்கோட்டையாருக்கு இடையே கொஞ்சம் கிண்டலை சொறுகிவிட ஆசை போலும். நாடக நடிகைக்கு ‘பத்துக்குரல்’ என்ற அடைமொழி கொடுக்கிறார். இரவெல்லாம் நாடக மேடையில் கத்தினால் பத்துக்குரல் என்ன, பதினோரு குரல் கூட வருமே!

‘‘பத்துக்குரல் முத்துக்கண்ணு பாடுறாளாம் பவளக்கொடி   வேஷத்திலே ஆடுறாளாம் சீனுகளாம் ஜிமிக்கிகளாம், நீ சிரிக்கிற மாதிரி வெளிச்சங்களாம், பெண்ணே!’’

பாடலிலே கிண்டல் பொதிந்திருக்கிறது என்பதற்கு இன்னொரு அத்தாட்சி. பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் போது, ‘முத்துக்கண்ணு’ என்று வரும்போது எஸ்.எஸ்.ஆர். மாறுகண்ணைக் காட்டுகிறார்.

தன்னுடைய வில்லன் வேடத்திற்குக் கூடுதல் ‘வெயிட்’ கொடுத்து, தனது தயாரிப்பாக ‘பிள்ளைக்கனியமுது’ திரைப்படத்தைப் பி.எஸ். வீரப்பா வெளியிட்டார். ஆனால், இயக்குநர் எம்.ஏ. திருமுகம் தொடங்கி,  வசனம் எழுதிய ‘அய்யாப்பிள்ளை’ வரை, தேவர் பிலிம்ஸின் தொழில்நுட்பக் குழுவால்தான் படம் உருவாக்கப்பட்டது. இந்த வகையிலும் மகாதேவன் இனிமையான பாடல்களை குறைவில்லாமல் வழங்கினார்!

No comments:

Post a Comment